'தாழி' ஆய்வு நடுவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
'தாழி' ஆய்வு நடுவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 பிப்ரவரி, 2017

‘தாழி ஆய்வு நடுவ’த்தின் தனிச்சிறப்பார்ந்த நாட்குறிப்புச் சுவடி



தாழி ஆய்வு நடுவத்தின் தனிச்சிறப்பார்ந்த நாட்குறிப்புச் சுவடி

 


           
சென்ற ஆங்கில ஆண்டிற்கான (2016) நாட்குறிப்பேட்டைத் தனிச் சிறப்போடும் அழகோடும் அரிய செய்திகளோடும் செப்பமாகத் தாழி ஆய்வு நடுவம்வெளியிட்டிருந்தது குறித்த பதிவை அன்பர்கள் படித்திருக்கலாம்.

தாழி ஆய்வு நடுவத்தின் 2017-ஆம் ஆண்டு நாட்குறிப்பேடு, புதுச்சேரி அன்னை அருள் கட்டளை வெளியீடாகப் புதுவை அன்னை அருள் மறுதோன்றி அச்சகத்தில் உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது.

அளவில் பெரியதாக, அட்டையுடன் 28 நூ.மா. நீளம், 221/2 நூ.மா. அகலம் (நூ.மா.- நூற்றுமாத்திரி அல்லது நூற்றிலொரு மாத்திரி- centimeter – c.m.) உள்ளது.

இதில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகள் வரை நாட்குறிப்பு எழுதலாம். அத்துடன், ஒவ்வொரு பக்கத்திலும் மேல் பகுதியில் 51/2 நூ.மா. அளவிற்கு அறிவியல் செய்திகள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன; கீழே 31/2 நூ.மா. அளவில் உள்ள இடத்தில், மேல்பகுதியில் இடம்பெற்ற அறிவியல் தொடர்பான தமிழ்க் கலைச்சொற்களின் ஆங்கிலவடிவமும், அன்றைய நாள் உலகளவில் சிறப்பாக என்ன நாள் என்றும், எந்தெந்த அறிஞர்தம் நினைவுநாள் என்னும் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.

இந் நாட்குறிப்பின் முன் அட்டையின் நடுப்பகுதியில், நாம் வாழும் உலகின் கோளத்தோற்றப் படம் உள்ளது; மேலே. புடவியின் உலகு... என்று நாட்குறிப்பின் பெயரும், கீழே நாள்-குறிப்பு 2017 என்ற குறிப்பும் உள்ளது.

இது, நாட்குறிப்பு எழுதும் சுவடியாக மட்டும் இல்லாமல்,  பூதியல் நிலவரைவியல் (Physical basis of Geography) செய்திகளை அழகுற எளிமையாகத் தூயதமிழில் தரும் அறிவியல் அருஞ்செய்திக் களஞ்சியமாகவும்  உள்ளதெனில் மிகையில்லை.
நாட்குறிப்புச் சுவடியின் முன்அட்டை ஒட்டுத்தாள் உட்புறப் பக்கத்தில், இந்த இந்திய ஒன்றியத்தில் தக்கவாறு நினைவுகூறப் படாத ஒப்பற்ற ஈகி வ.உ.சி. அவர்கள், சிறையிலிருந்து தம் தந்தையார் உலகநாதனார்க்கு எழுதிய அகவற்பா மடலும் இரு வெண்பாக்களும், அவர் இழுத்த செக்கின் படமும் இடம்பெற்றுள்ளன; பினனட்டை ஒட்டுத்தாள் உட்புறத்தில் வ.உ.சி.யார் பொன்.பாண்டித்துரையார்க்கு எழுதியதோர் அகவற்பா நன்றிமடல் பாண்டித்துரையார் படத்துடனும் தமிழ்ச்சங்கக் கட்டடப் பின்னணியோடும் காணப்படுகிறது.            

பின்னட்டைப பகுதியில், நால்வகை நிலங்கள் குறித்த தொல்காப்பிய நூற்பாவும், மழையின் சிறப்புரைக்கும் பதின்மூன்றாம் திருக்குறள் உரையோடும், ஒரு விதை முளைத்தெழுந்து செடியாகும் காட்சியின் மூன்று படங்களும், வாடிய பயிரை... எனத்தொடங்கும் வள்ளலார் பாடலும் உள்ளன.

இந்த முயற்சி மிகவும் பாராட்டிற்குரியதாகும். நூலில் எழுதப் படுவதைப் போல இந்நாட்குறிப்பிலும் பாயிரம் உள்ளது. ஆயிரம் முகத்தான் அகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே (நன்னூல்-54) அல்லவா!. பாயிரம் பகுதியில், நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள அறிவியல் செய்திகள் பற்றிய குறிப்பும், தமிழரின் மீட்புக்கருவியாக உள்ளது தமிழ்மொழியே என்னும் குறிப்பும் காண்கிறோம்.

இதனைத் தொடர்ந்து நாட்குறிப்பு உரிமையாளர் தற்குறிப்பு விளத்தங்களை எழுதிவைக்கும் பல பகுதிகள் உள்ளன. தொடர்ந்து, புடவி (Universe) எனுந் தலைப்பில், கதிரவ மண்டில விளக்கமும் அதன் தொடர்பான அடிப்படை உண்மைகளும் கோள்களைப்பற்றிய செய்திகளும் பிறவும் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு தலைப்பு குறித்து  வழவழப்புத்தாள் படத்துடன் அரிய பல செய்திகள் திரட்டித் தரப்பட்டுள்ளன.

சனவரி மாதத் தொடக்கத்தில் உலகம் என்னுந தலைப்பில் உலகத் தோற்றம், வடிவம், அளவு, சுழற்சி பற்றிய செய்திகள் விரிவாகத் தூய எளிய தமிழில் உள்ளன. மாத இறுதிப் பக்கத்தில் உலகக்கோளின் வெட்டுப்படத்தின் வழி அமைப்புகள் விளக்கப்பட்டுள்ளன. வேறு மூன்று படங்களில் அகலாங்கு (Lattitude), நெட்டாங்கு (longitude), நண்ணிலக்கோடு (Equator) முதலிய புனைவுக் கோடுகள் பலவும் வரைந்து காட்டப்பட்டுள்ளன.

இவ்வாறே,  ஒவ்வொரு மாதத்திற்கும் பெருங்கடல், கண்டம்,  தீவு, மலை, எரிமலை, நிலநடுக்கம், ஆறு, அருவி, ஏரி, பாலை, மழை என்ற தலைப்புகளில் படங்களும் தலைப்பைச் சார்ந்த பல்வேறு அரிய செய்திகளும் திரட்டித் தரப்பட்டுள்ளன. அவற்றை விரித்துரைக்கின் பெருகும்.

முன்னரே கூறியவாறு, ஆண்டு முழுவதற்குமான 365 பக்கங்களிலும் அருமையாகத் தூயதமிழ்க் கலைச்சொற்களைப்  பயன்படுத்தி எளிதில் புரியுமாறு அறிவியல் செய்திகள் தரப்பட்டுள்ளன.

இந்த முயற்சி மிகவும் பாராட்டிற்குரியதாகும். நாட்குறிப்பின் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளதற் கொப்ப, தமிழ்மொழியே. தமிழர்க்கு மீட்புக் கருவியாகும். அதை விளக்கும் எடுத்துக்காட்டைப் போன்று இந் நாட்குறிப்புச்சுவடி அமைந்துள்ளதெனில் மிகையன்று.

நாம் பொங்கல் திருநாளை 2017 சனவரி 14இல் சுறவத் திங்கள் முதல் நாளில் கொண்டாடினோம். நாட்குறிப்பில் 2017 சனவரி 15 அன்று தைப்பொங்கல் நாள் என்று குறிக்கப்பட்டுள்ளது ஒன்றே வேறுபாடாகத் தெரிந்தது.

மிகச் சிறப்பாக அச்சிட்டு கட்டம் செய்து அரிய செய்திகளோடு உள்ள இந்நாட்குறிப்புச் சுவடியை வெளியிட்டோர்:
அன்னை அருள் அறக்கட்டளை, 169, ஈசுவரன் கோயில் நெரு, புதுச்சேரி 605001. தொலைப்பேசி எண்: 0413 2336205.  

இந்த உயர்ந்த ஒப்பற்ற நாட்குறிப்பைத் தந்த அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்!  
------------------------------------------------------------------------

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

‘தாழி’யின் அழகிய அரியதொரு நாள்காட்டி.


 தாழியின் அழகிய அரியதொரு நாள்காட்டி.

     'அன்னை அருள்' வெளியீடான தாழி ஆய்வு நடுவத் திட்டத்தின் நாள்காட்டி கிடைக்கப் பெற்றேன். அதைப்பற்றி எழுத விரும்பியிருந்தும் பல காரணங்களால் காலந்தாழ்ந்தது. அந் நாட்காட்டியைப் பற்றிக் காலந்தாழ்ந்தாலும் எழுதவேண்டும் என்ற அழுத்தமான எண்ணம் இருந்தது.
     நாள்காட்டி 17 அகலமும் 24.5 அகலமுமாகப் பெரிய அளவில் எடுப்பாகத் தோன்றுகிறது. நாள்காட்டியின் முதல் தாளின் முதற் பக்கத்தில் ஆரியர் நாவலந்தீவு வருகையையும் பரவலையும் காட்டும் நாட்டுப்படம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், மொழியறிஞர் கிலபர்ட்டு சிலேட்டரின் தமிழ், தமிழர் தொடர்பான கருத்துக்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.
     கீழே, சிந்துசமவெளி பற்றியும் கடவுள் நம்பிக்கை பற்றியுமான செய்திகள் தரப்பட்டுள்ளன. மேலும், தமிழக ஊர்ப்பெயர்கள் சமற்கிருதம் ஆக்கப்பட்டதைக் குறிப்பிடுவதோடு, தமிழர் தம் அடையாளங்களைக் காக்க வேண்டுமென்ற வலியுறுத்தம் இடம்பெறுகின்றது. தெய்வம் குறித்த சித்தர் சிவ்வாக்கியர், பாரதியார், பாவேந்தர், திருமூலர் பாடல் வரிகள் தரப்பட்டுள்ளன.
     முதல் தாளின் இரண்டாம் பக்கத்தில், தென்னக வடவகக் கோயில்களின் அமைப்புகள் வரைபடத்துடனும் கலைச் சொற்களுடனும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. தஞ்சைப் பெருவுடையார் கோயில் அமைப்பும் கலைச்சொற்களுடன் காட்டப்பட்டுள்ளது. நாட்காட்டியின் பெயரே கோயில்களின் தாய்நிலம் என்று குறிக்கப்பட்டுள்ளது. செய்திகள் தூய தமிழில் எழுதப்பட்டுள்ளன.
     அடுத்து, நாள்காட்டியின் 12 மாதங்களிலும் 12 அழகிய தமிழகக் கோயில்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. அவை, தஞ்சைப் பெருவுடையார் கோயில், மதுரைக் கூடலழகர் கோயில், காஞ்சி ஓராடையுடையார் கோயில், திருச்சி அரங்கநம்பி கோயில், தில்லை நடவரசர் கோயில், திருவைகுண்டம் திருமாற்பெருமாள் கோயில், மாமல்லை கடற்கரைக் கோயில், உத்திரமேரூர் திருவழகுடை வரந்தருபெருமாள் கோயில், நெல்லை காந்திமதி-நெல்லையப்பர் கோயில், திருவில்லிப்புத்தூர் ஆண்டாள்-அழகர் கோயில், மதுரை அங்கயற்கண்ணி-அழகுடையார் கோயில், காஞ்சி வரந்தருங் கோப்பெருமாள் கோயில் ஆகியனவாகும்.
     ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் சுருக்கக் குறிப்பும், சிறப்பும் தரப்பட்டுள்ளன. கோயிற் படங்கள் மிக அழகாக அருமையாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நாள்காட்டியில், தமிழ் பிரெஞ்சு ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மாத கிழமைப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
     அன்னை அருள் மறுதோன்றி அச்சகமும் தாழி ஆய்வு நடுவமும் மிகவும் சிறந்த நாள்காட்டியைத் தந்துள்ளனர். அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.