திங்கள், 11 மே, 2009

இனங்கொல்லும் இரண்டகம்!



  
2002-ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை, அவ் வொப்பந்தம் உருவாக்கக் காரணமாயிருந்த நாடுகளுக்கும் தெரிவிக்காமல், இராசபக்சே அரசு தன்விருப்பமாகவும் தடாலடியாகவும் திடீரென 2008 சனவரியில் முறித்துக்கொண்டது.

இனவெறித் தாக்குதலில், இலங்கை அரசின் முப்படைகளும் தமிழர்களை எவ்வகை வேறுபாடுங் கருதாது கொன்று குவித்து வருகின்றன. தங்கள் கொப்பூழ்க் கொடி உறவுகளின் இன்னல்களையும் உயிர் இழப்புகளையும் கண்டு, தமிழ்நாட்டின் எல்லாப்பிரிவு மக்களும் மனங் கலங்குகின்றனர். 

இக்கால் வன்னியில் தமிழ்மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது! நாள்தோறும் நூற்றுக்கணக்கில் ஏதுமறியாத் தமிழர்கள் கொல்லப் படுகின்றனர். இம் மாதம் 9, 10 ஆகிய இருநாட்களில் மட்டும் 3000 பேர் குண்டு வீச்சால் கொன்று குவிக்கப் பட்டுள்ளனர்.

கை கால் உறுப்பிழந்தும் நோயுற்றும் பசிக் கொடுமையிலும் நீரின்றியும் அவர்கள் படுந்துனபங்கள் விளக்க வியலாதன. வன்னிப் பகுதியினின்றும் வெளிவந்தோர் சிங்களக் கொடியோரால் படுந்துனபம் கேட்டாலே நடுங்கச் செய்வதாக உள்ளது.

இக் கொடுமைக்கு எதிராகப் பேரெழுச்சி கொண்டு தமிழ்நாட்டு மக்கள் கண்டனப் பேரணி, உண்ணாநோன்பு, மறியல், வேலைநிறுத்தம், கடைஅடைப்பு, உருவ எரிப்பு, முற்றுகை போன்ற அனைத்துவகைப் போராட்டங்களையும் ஊர்தோறும் நடத்தி, ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசையும், தில்லி நடுவண் அரசையும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காகவே, தமிழகத்தில் முத்துக்குமார் முதலாகப் பதின்மூன்று பேர் தீக்குளித்து இறந்தன ரென்பதையும் அறிவோம். இந்திய அரசோ, இலங்கை அரசின் இனஅழிப்புப் போரைத் தடுத்து நிறுத்தாமல், அச் சிங்கள இனவெறி அரசுக்குப் பல வழிகளிலும் உதவி செய்து வரும் போக்கே தொடர்கிறது.

இந்திய ஆளுங்கட்சியின் தலைமை, ஓர் உயிரின் இழப்பிற்குப் பழிவாங்க, ஓரினத்தையே அழித்தொழிக்கும் எண்ணத்தில், சிங்களரின் முயற்சிக்குத் துணை போகின்றதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. தொகை, பயிற்சி, கருவிகள், தொழினுட்பம், உளவு, ஆட்கள் முதலியவற்றை அளித்துப் பல்வேறு வகைகளிலும் சிங்கள இனவெறி அரசுக்கு உதவி வருகின்றது. தமிழர்களின் உணர்வுகளையும் மதிக்கவில்லை; போராட்டத்தையும் பொருட்படுத்தவில்லை.

தமிழக முதல்வர் கருணாநிதி, ஈழத் தமிழரின் இன்னலைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், நேரத்திற் கொன்றைப் பேசிக் குழப்பி வருவதையும், போலியான போராட்டங்களை அறிவித்து மக்களின் எழுச்சியை மழுங்கடிக்க முயல்வதையும் காண்கின்றோம்!

இச் சிக்கலில், இராசிவ்காந்திக்கு முன், பின் என்று பார்க்க வேண்டுமென்றார்; புலிகளின் 'உடன்பிறப்பா ருடனான போர், முற்றதிகாரப் போக்கு’ (சகோதர யுத்தம், சர்வாதிகாரம்) பற்றிப் பேசினார்; இந்திய அரசின் கொள்கையே தம் கொள்கை என்றார்; தில்லிக்குத் தொலைவரி தரும் போராட்டம் என்றார்; நாடாளுமன்ற உறுப்பினர் பதவிவிலகுவர் என்றார்; மாந்தத் தொடரிப் போராட்டம் என்றார்; ஓரளவுக்குத்தான் அந்நாட்டைக் கேட்டுக் கொள்ள முடியும் என்றார்; வேலைநிறுத்தம் என்றார்; மூன்றுமணி நேர உண்ணா நோன்பிருந்தார்; போர் நின்றுவிட்டது என்றார்; புலிகள் போரை நிறுத்த வேண்டுமென்றார்; பிரபாகரன் என் நண்பர் என்றார்; மறுநாளே மறுத்தார்; விடுதலையை நோக்கமாகக் கொண்டதே விடுதலைப் புலிகள் இயக்கம் என்றார்; பேராயக்கட்சி எதிர்த்துக் கருத்துரைத்ததும் அமைதியானார்.

அ.தி.மு.க.வின் தலைவி செயலலிதா, நாடாளு மன்றத் தேர்தல் பரப்புரையில், ஈழச் சிக்கலுக்குத் தீர்வு தனித்தமிழ் ஈழமே என்றும், தம் கூட்டணி வலிவாக வெற்றி பெற்றால், இந்திரா காந்தி வங்கதேச விடுதலைக்கு வழி செய்ததைப் போல், தானும், தன் கூட்டணியின் உதவியுடன் அமைய இருக்கும் புதிய இந்திய அரசு மூலம், ஈழம் விடுதலை அடையச் செய்வேன் என்றும் தமிழ்நாடெங்கும் தான் பேசிய பரப்புரைக் கூட்டங்களில் அறிவிப்புச் (பிரகடனம்) செய்தார்.

தமிழ்நாட்டு மக்கள் ஈழச் சிக்கலில் தம்பால் நம்பிக்கை இழந்து விட்ட நிலை தெளிவாகத் தெரிந்த பின்னர் முதல்வர் கருணாநிதி, திடுமெனத் தமிழ் ஈழம் அமையத் தானும் உதவுவதாகக் கூறினா ரென்றாலும், பேராயக்கட்சி அதை எதிர்த்துக் கருத்துக் கூறிய பின்னர் அமைதியானார். சென்னையில் பேராயக் கட்சித் தலைவி சோனியா காந்தியுடன் கலந்து கொண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அதைப்பற்றி வாயே திறக்க வில்லை.

தன் குடும்பத்தாரின் நலன்களையே முதன்மையாகக் கருதிப் பதவி, பொருள், அதிகாரங்களை அவற்றிற்காக மட்டுமே பயன்ப டுத்தும் கருணாநிதி, தமிழ்நாட்டு நலன்களையும் தமிழ்இன நலன்களையும் புறக்கணித்து வருவததோடு அதனை ஞாயப்படுத்தும் முயற்சியில் பல்வேறு வகையாக மாறிமாறிப் பேசி மக்களை ஏமாற்றிக் குழப்புகிறார் என்ற உண்மையைத் தமிழர்கள் உணர்ந்து கொண்டதை இக்கால் அறிய முடிகிறது.

-----------------------------------------------------------------