எண்சீர் மண்டிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்சீர் மண்டிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 பிப்ரவரி, 2010

கூட்டாகப் பொய்யுரைப்போர்!

* கூட்டாகப் பொய்யுரைப்போர்!


எக்கேடு வந்திடுமோ எந்தத் தீங்கு
     எந்தமிழ இனமுறுமோ என்றே தோன்றும்
இக்காலிச் சிவசங்கர் இங்கே ஆளும்
     இரண்டகரோ டுரையாடி இருப்ப தாலே!
அக்காலம் மேனனொடு அமுக்க மான
     அழிசூழ்ச்சி நாராயன் வந்து போனால்
மிக்கதாக் கீழத்தே நடக்கும்! ஒன்னார்
     மீமுயல்வால் பணிந்தார்கள் என்றே பொய்ப்பர்!

சென்னைக்கு வந்தவர்கள் செய்தி சொல்வார்
     சிங்களவர் போர்நிறுத்தம் செய்த தாக!
முன்னைவிட மேலதிக ஆய்தம் மற்றும்
     முனைந்துளவுச் செய்தியெலாம் அவர்க்க ளிப்பர்!
பின்னையுமே போர்நுட்ப ஆள னுப்பி
     பெருங்கப்பல் அவர்க்கீந்து துணையி ருப்பர்!     
தொன்னையிலே நெருப்பெடுத்து வந்த தாகத்
     துணிந்திங்கே கூட்டாகப் பொய்யு ரைப்பர்!

எனவேதான் இக்காலும் எத்தர் கூடி
     எந்தமிழர் அழிவிற்கே சூழ்ந்தார் என்றே
இனநலனை எண்ணிடுவோர் கவலு கின்றார்!
     ஏமாற்றுக் காரணங்கள் உண்மை யில்லை!
மனங்கனல நடப்பதெலாம் பார்த்தி ருக்கும்
     மறஞ்சான்ற இளந்தமிழர் மறக்க மாட்டார்!
சினமடக்கி வைத்தவர்கள் சீறும் நாளில்
     சீர்கெட்ட இவர்தப்ப வழியு முண்டோ?

--------------------------------------------------

திங்கள், 7 டிசம்பர், 2009

தூயருமிழ் வாழ்வுனதே!

*     தூயருமிழ் வாழ்வுனதே!


ஊருலகம் உன்நடிப்பை உணர்ந்த பின்னும்
     உளறுகிறாய் நாள்தோறும் உண்மை கொன்றே!
ஒரிலக்கம் தமிழர்களின் உயிர்ப றித்தான்
     உனக்கவனே தம்பியென உரைத்தாய் என்னே!
பேருக்குக் குழுவெனவே பிணைத்துப் பத்துப்
     பேரனுப்பி ஏமாற்ற முனைந்த தெல்லாம்
யாருக்கும் தெரியாதென் றெண்ணும் உன்னின்
     இழிவறியா உலத்தார் இல்லை இன்றே!


ஈகிகளைக் குறைகூறி இழிவு செய்தாய்!
     இரண்டகத்தால் இனமழிக்கத் துணையும் போனாய்!
சாகின்ற தமிழரைக்காத் திடுக வென்றே
     தமிழுலகே கதறியதே! தன்ன லத்தால்
வாகெனவே வந்ததிந்த வாய்ப்பென் றெண்ணி
     வஞ்சகமாய் உன்பதவி நிலைத்தி டற்கும்
பாகமென உன்குடும்பம் பதவி ஏற
     பழிக்கஞ்சா ரோடேஒப் பந்தம் போட்டாய்! 


இனங்கொல்லத் துணைநின்றாய்! இங்குள் ளோரை
     ஏய்த்துநடித் தேமாற்றி இருக்கை யுற்றாய்!
மனச்சான்றைக் கொன்றாயே! மக்க ளெல்லாம்
     மாவெழுச்சிக் கிளர்ச்சியொடு திரண்டெ ழுந்து
சினமுற்றே ஈழப்போர் நிறுத்து கென்றே
     சீறியகால் தன்னலத்தால் சிறிது கூட
மனங்கொள்ளா துளத்தியலால் மக்கள் நெஞ்சை
     மயக்குதற்குப் பலபொய்கள் மலியச் சொன்னாய்!



இலங்கையிலே கொடுங்கோலன் இராச பச்சே
     இளிக்கின்ற படத்தோடே எதற்கு மஞ்சா
இலங்கலறு பொய்ம்முகத்தின் இத்தா லிப்பேய்
     இருக்கின்ற படத்திலும்நீ இடம்பெற் றாயாம்!
புலங்கெட்ட உருவனென பொலிவி ழந்த
     பொய்யனுன்றன் படமுமதில் பொருத்தம் தானே!
துலங்கலறப் பழியுற்றாய்! தொலைத்தாய் மானம்!
     தூயருமிழ் வினையோனே! தூ!ஏன் வாழ்வோ?

----------------------------------------------------   

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இன்முகத்தோடு உள்ளனராம்!

   இன்முகத்தோடு உள்ளனராம்!

இனக்கொலையர் வெங்கொடுமை எல்லை மீற
      இனியுமிதைப் பொறுப்பதுவோ என்றெ ழுந்த
மனக்கனலர் திரண்டறிவு ஆற்றல் வீரம்
      மாசற்ற ஈகத்தால் மண்ணை மீட்டே 
இனக்கொடியை ஈழத்தில் ஏற்றி ஆண்டார்!
      எல்லாரும் நல்லாட்சி இதுவென் றாரே!
தனக்கெனவே வாழ்ந்திடுவார் தில்லி யோடு
      தன்மானம் கெட்டுஓர்ஒப் பந்தம் போட்டார்!


சிங்களனை ஆளாக்கித் தில்லி யங்கே
      செந்தமிழ இனந்தன்னைச் சிதைத்த ழிக்க
இங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை மாற்ற
      ஏய்த்துநடித்(து) ஏமாற்றி எல்லாம் செய்தார்!
எங்குமிலாக் கொடுங்குண்டு வீசி அங்கே
      எண்ணற்ற தமிழர்களைக் கொன்றார் இங்குப்
பொங்குணர்வில் பதின்மூவர் பொசுங்கிச் செத்த
      போதுமதைப் பொருட்படுத்தாக் கொடுமை என்னே!


உயிரிருந்த மூன்றிலக்கம் பேரை அங்கே
      ஒருசேர முள்வேலி அடைப்புக் குள்ளே
செயிர்உருவர் சிறைவைத்துச் சிதைக்கின் றாரே
      சிந்தைமிக நொந்தவரும் சிறுகச் சாக!
அயிறற்கு உணவில்லை அருந்த நீரும்
      அழற்காயம் நோய்கட்கு` மருந்து மில்லை!
எயிலிருக்கும் கோட்டையிருந்(து) இரண்ட கத்தில்
      இவருரைத்தார் இன்முகத்தோ(டு) இருப்ப தாக!


அடைத்துவைத்த கூடாரம் மிதந்த தங்கே
      அடைமழையின் வெள்ளத்தில் அவர்ந னைந்தே
முடைநாற்ற நீரினிலே நின்ற வாறே
      முன்னறியாத் துனபத்தில் மூழ்கிப் போனார்!
கடைகெட்ட தொலைக்காட்சி காட்டு மிங்கே
      களிப்போடு பேசியமர்ந் திருப்ப தாக!
விடைசொல்லும் நாளொன்று வந்தே தீரும்!
      விழிப்புவரும்! விடிவுவரும்! வீழ்வார் வஞ்சர்! 
 ----------------------------------------------------------------------------------------------------------
     
  

புதன், 3 ஜூன், 2009

ஐயா திருமுருகனார் மறைவுக்கு இரங்கல்!

. .                                                                                                                 
 
ஏற்கெனவே எம்முள்ளம் எரியத் தீய்க்கும் . 
          ஈழத்துச் செய்தியின்பின் இந்தச் செய்தி ! 
தேற்றமுற விடையளிக்க யாரைத் தேர்வம்?  . 
          தீந்தமிழின் இலக்கணத்தில் ஐயம் தோன்றின்!
ஏற்றமுற விளக்குதற்கே எவரிங் குள்ளார் . 
          இசைத்தமிழின் நுணுக்கங்கள் எடுத்துச் சொல்லி ! 
ஆற்றலுறத் தமிழறிந்த ஐயா எங்கள் . 
          அருந்திரு முருகனாரே ! அழுகின் றோமே !

திங்கள், 25 மே, 2009

இரண்டகர் இரண்டுபேர்!




ஓரிலக்கம் பேர்கொன்றான் ஈழ மண்ணில்!
    உடனிக்கால் மூன்றிலக்கம் மெல்லக் கொன்றே 
ஓரினத்தை உருத்தெரியா தழிக்கின் றானே 
    உரிமைநிலத் தடயமெலாம் ஒக்க நீக்கி!
பூரியனின் கொடுமைகட்குத் துணையாய் நிற்போர்
    பொய்ம்முகத்தி னித்தாலிப் பொல்லாப் பேயும் 
சீரியநல் லார்காறித் தூ !தூ ! வென்றே 
    சினந்துமிழும் தன்னலப்பேய்க் கலைஞன் தானும்!

            ----------------------------

திங்கள், 12 ஜனவரி, 2009

கொடுமையிதே! அறக்கொலையே!

(எண்சீர் மண்டிலம்: காய் - காய் - மா - தேமா)


இகழ்சேர்க்கும் எனஅஞ்சீர்! அறமுங் கொல்வீர்!
     இந்தியத்தை ஆளுகின்ற அரசே! இங்கே
புகலருங்கே டினத்திற்கே புரிந்தும் கண்ணைப்
     பொத்திக்கொண் டறியார்போல் நடித்துக் கொண்டு
அகலலிலா தந்திரத்தில் ஆளு கின்ற
     அருட்செல்வர் தலைமையுள அரசே! நீங்கள்
மிகக்கரவாய் தமிழினத்தின் அழிவிற் கென்றே
     மேன்மேலும் இரண்டகங்கள் செய்கின் றீரே!

தினைத்துணையும் அறவுணர்வே அற்றுப் போனீர்!
     தெரிந்திருந்தும் சிங்களர்க்கே உதவி செய்வீர்!
அனைத்துவகை ஆய்தங்கள் அள்ளித் தந்தீர்!
     அரியஉள வுந்தொகையும் அவர்க்கே ஈவீர்!
முனைத்தெழுந்து பாக்கித்தான் சீனத் தோடு
     மும்முரமாய்ப் படைநடத்தத் துணையும் செய்வீர்!
எனைத்தென்ற அளவின்றி உதவு கின்றீர்!
     இனக்கொலையில் எந்தமிழர் அழிந்து போக!

தூசாகக் கருதுகின்றீர் தமிழர் தம்மை!
     துளிக்கூட எம்முணர்வை மதிக்க வில்லை!
காசாவைத் தாக்குவதைக் கண்டிக் கின்றீர்!
     கனிவுடனே ஆப்கான்மற் றெவர்க்கும் உங்கள்
ஊசலிலாத் துணைதரவு உண்டே! ஆனால்
     உரிமைமறுத் தினமழிக்கும் சிங்க ளர்க்கும்
கூசாமல் உதவுகின்றீர்! கொள்கை அற்றீர்!
     கொடுமையிதே! அறக்கொலையே! கொதித்துச் சொன்னேன்!