வியாழன், 26 ஜூன், 2008

மாயமாய்ச் சூலுற்ற தூயமாது!


(ஆங்கிலமூலம்: ஆபிரகாம் தொ.கோவூர்   தமிழாக்கம் : தமிழநம்பி) 


            திருவாளர் ஓர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். முகன்மையான துறையொன்றில் உதவி ஆணையராகப் பணியாற்றியவர். குமுக நிலையிலும் அரசியலிலும் பெயர் பெற்ற ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1967ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அவருடைய இளம் மனைவியுடன் என்னைக் காண வந்தார். அவர் மனைவியை வரவேற்பு அறையிலேயே அமர்த்திவிட்டு, அவரை மாடியிலுள்ள அலுவல் அறைக்கு அழைத்துச் சென்றேன். ஒரு நீண்ட கதையைக் கூறினார்.
            செரீன் என் இரண்டாம் மனைவி. முன்னாள் அரசத் தூதுவர் ஒருவரின் உடன் பிறந்தாளாகிய என் முதல் மனைவி, ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு இறந்து விட்டாள். அக்குழந்தையும் பின்னர் இறந்துபோய் விட்டது.
            செரீன் மதாராவைச் சேர்ந்தவள். நான் பணிஓய்வு பெற்ற பிறகு செரீனை மணந்து கொண்டேன். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
            இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு மழைநாளில், வேறு வேலை இல்லாத நிலையில், நாங்களிருவரும் குவளைக் கணியம்பார்ப்பதில் ஈடுபட்டோம். இதற்கு முன்பு ஒருமுறையும் இதில் ஈடுபட்டதுண்டு.
            வில் தொடங்கி நெடுங்கணக்கின் எல்லா எழுத்துக்களும் உணாமிசை (Dining table)மேல் வட்டமாக எழுதப்பட்டிருக்கும். நடுவில் ஒரு குவளை தலைகீழாக வைக்கப்பட்டிருக்கும். நானும் செரீனும் ஆள்காட்டி விரலை அக்குவளைமேல் வைத்துக் கொண்டு ஆவியை அழைப்போம். சில நிமையங்கள் ஆவலோடு காத்திருந்த பிறகு, அக்குவளை தானாகவே மெதுவாக நகரத் தொடங்கும். கொஞ்சநேரத்திற்குப் பின், வேகம் வேகமாக நகர்ந்து எழுத்துக்களைத் தொடும். இதுவே குவளைக் கணியம்என்னும் குவளை உரை’(Tumbler-talk) ஆகும். படித்துத்தெரிந்துகொள்ள வசதியாக, குவளை தொட்ட அந்த எழுத்துக்களை வரிசைப்படி எழுதினோம்.
            முதலில் குவளையை நகர்த்திய ஆவி, காலஞ்சென்ற தலைமை அமைச்சர் திரு.பண்டார நாயகாவினுடையது ஆகும். பண்டார நாயகா எங்கள் நண்பராகையால் நாங்கள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டுச் சரியான விடைகளையும் பெற்றோம்.
            இரண்டாவதாகக் குவளையை நகர்த்திய ஆவி நாங்கள் அறிந்திராத தாமசு சில்வா என்பவருடையது. மூன்றாவதாக வந்தது பூண்பாட்டம்மை யாரின் ஆவி! அந்த அம்மையார் அவர் கணவரால் சுட்டுக் கொல்லப் பட்டதைக் கூறியது.
            நான்காவதாக வந்தது மேதானந்தா என்பவருடைய ஆவி. அவர் இறக்கும் முன், நானும் அவரும் ஒரு மத நிறுவன உறுப்பினர்களாயிருந்து இணைந்து பணியாற்றினோம். அந்த ஆவி பயனுடைய பல செய்திகளை எனக்குக் கூறியது.
            அடுத்து வந்த ஆவி திரு.தி.யு.தி.சில்வாவினுடையது. நான் சார்ந்து இருந்த அரசியல் கட்சியின் முன்னணி உறுப்பினர் அவர். அவரோடு நான் நெருங்கிய நட்போடிருந்தேன்.
            ஆறாவது ஆவி, குடும்ப நண்பரான திரு.செயசுந்தராவினுடையது. என்னுடைய உடல் நலனில் தனிக்கவனத்தோடு இருக்குமாறு அவர் செரீனாவிடம் சொன்னார்.
            பகலுணவு உண்டு, சிறிது துயின்ற பிறகு, குவளைக் கணியத்தைத் தொடர்ந்தோம். முதலில் வந்தவர் திருமால். அடுத்து வந்தவர் கதிர்காமக் கடவுள். இரண்டு மாதங்களுக் குள்ளாக கதிர்காமச் செலவு (மதப் பயணம்) மேற்கொள்ளுமாறு அவர் கூறினார்.
            கடைசியாக வந்த ஆவி, துறவி சூடுஎன்பவருடையது. அவர் சார்பில், செரீனுக்கு ஒரு தங்க மோதிரம் அன்பளிப்பாகத் தரும்படி அவர் என்னைக் கேட்டுக் கொண்டார். ஆன் துறவி திருச்சவையில் இருக்கும் அவருடைய உருவச் சிலைக்கு அடியில் செரீனுக்காக அவர் இன்னொரு மோதிரம் வைத்திருப்பதாகவும் கூறினார்! செரீன் அங்கே சென்று சிலைக்கு முன்னால் மெழுகுத்திரி ஏற்றி வைத்து அம்மோதிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற அவருடைய விருப்பத்தையும் தெரிவித்தார்.
            மறுநாள் நாங்களிருவரும் ஆன்துறவி திருச்சவைக்குச் சென்றோம். துறவி சூடின் சிலைக்கு முன்னால் மெழுகுத்திரிகள் ஏற்றி வைத்தோம். ஆனால், அங்கு எவ்விடத்திலும் மோதிரம் காணப்படவில்லை.
            முற்றிலும் ஏமாற்றமடைந்து, செரீன் நிலை குலைந்திருந்தாள். திரும்பும் போது, இனிமேல் ஆவிகளை அழைக்கும் குவளை-உரை விளையாட்டுகளில் நாம் ஈடுபடக் கூடாது என்று அவளிடம் கூறினேன்.
            அன்றிரவு, எனக்குத் தெரியாமல் செரீன் குவளைக் கணியம் பார்த்திருக்கின்றாள். சூடு துறவியின் ஆவி மீண்டும் வந்து, மோதிரத்தைச் சிலையினடியில் வைக்காததற்கு மிகவும் வருந்துவதாகக் கூறியதாகத் தெரிகின்றது. நானும் அவளோடு அங்கு சென்றதால்தான் மோதிரத்தை வைக்கவில்லை என்றும், என்னைத் தவிர்த்து விட்டு அடுத்தநாள் அங்கே செல்லும்படியும் கேட்டுக்கொண் டிருக்கின்றது.
            அடுத்தநாள், செரீன் அவளுடைய நோயாளி அண்ணனுடன் அங்குச் சென்று, அச்சிலை முன் மெழுகுத்திரி ஏற்றி வணங்கியும் அம்மோதிரம் காணப்படவில்லை. நீண்ட நேரம் அங்கே தங்கியிருந்து கண்கள் நீர் சொரிய அழுதாள். இரண்டாம் முறையும் அவளுக்கு ஏமாற்றமே! மோதிரத்தைப் பெறாமல் அத்திருச்சவையை விட்டு வருவதற்கே மறுத்தாள். கடாசியில், அவள் அண்ணனும் உந்து ஓட்டுநரும் அவளை வலிந்து மகிழ்வுந்தில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.
            வீட்டிற்குத் திரும்பிய நேரத்திலிருந்தே பித்தியம் பிடித்தவள் போல நடந்து கொண்டாள். எப்போதும் சூடு திறவியைப் பற்றியே பேசிக்கொண் டிருந்தாள்!
            சென்ற மூன்று கிழமைகளாகத் தனக்குக் குழந்தை பிறக்கப் போவதாகக் கூறி அழுதுகொண்டிருக்கிறாள். தான் ஒன்பது மாதப் பிள்ளைத் தாய்ச்சி என்று அவள் கூறினாலும் அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. மேலும் இரண்டாம் குழந்தை பிறந்ததி லிருந்தே நாங்கள் துய்ப்புறவு கொண்டதில்லை. இப்பொழுது நான் தெய்வச் சிந்தனையில் ஆழ்ந்து விடுவதால் பாலியல் ஈடுபாட்டிலிருந்து விலகி யிருக்கின்றேன்.
            கடந்த இரண்டு மாதங்களாகப் பித்தியம் தெளிவிப்பதற்காகப் பல இடங்களுக்கும் கூட்டிச் சென்று, பலவகையான மந்திர மாயங்கள் செய்து பார்த்தோம். கோழிக்கோட்டிலுள்ள ஒரு பேர்பெற்ற உரோமன் கத்தோலிக்கத் திருச்சவைக்கு அழைத்துச்சென்றோம். எனினும், முன்னினும் மோசமான நிலையிலேயே திரும்பி வந்தாள்.
      சில நண்பர்களின் கருத்துரையின்படி அவளை நயகாக்கண்டே -விலுள்ள மற்றொரு திருச்சவைக்கும் அழைத்துச் சென்றோம். இதுவரை எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. அடுத்து, தெமாத்தகோடா-விலுள்ள குறி கூறுவாரை அணுகிக் கேட்டோம். அவர் செரீனின் துன்பங்களுக்குக் காரணம் கலுக்குமரியா என்னும் ஒரு பெண்பேயின் ஆட்டுவிப்பு என்றார். அதற்குத் தீர்வாக ஒரு கட்டணத் தொகையைப் பெற்றுக் கொண்டு சில பூசைகள் நடத்தினார். இருந்த போதிலும், செரீனாவின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
      பின்னர், பாமன்காடாவைச் சேர்ந்த ஒருவர் அளித்த மந்திர எண்ணெய்யும் மந்திர நூலும்கூட பயன் தரவில்லை. அதன்பின், செரீனாவை மிரிகானாவிலுள்ள ஒரு புகழ் பெற்ற குறி சொல்லும் பெண்டிடம் அழைத்துச் சென்றோம். செரீனாவிற்கு எங்கள் எதிரிகளால் கடும் நஞ்சு கொடுக்கப்பட் டிருப்பதாக அவள் கூறினாள். அந்த நஞ்சை செரீன் கக்கி வெளியேற்றும்படி தன்னால் செய்யமுடியும் என்று அவள் சொன்னாள். நாங்கள் அதற்கு ஒப்புக் கொண்டு அவளுக்குப் பெருந்தொகை தந்தோம். குடிப்பதற்காகச் செரீனிடம் ஏதோ கொடுக்கப் பட்டது. அதன் பிறகு, செரீன் வாந்தி எடுத்தாள். ஆனாலும் அதன்பின்னரும் துன்பம் தொடர்ந்தது!
      பிறகு செரீனை வாட்டாலாவிலுள்ள ஒரு உரோமன் கத்தோலிக்க மதகுருவிடம் அழைத்துச் சென்றேன். அவர் இது பேயிறையின் (சாத்தான்) வேலைஎன்றார். கொஞ்சம் துய்ய நீரை செரீன் மீது தெளித்து அவள் நெற்றியில் விரலால் குறுக்கை(சிலுவை)க் குறியிட்டு வழிபாடு செய்தார். செரீன் குணமாக வில்லை.
      குவளைக் கணியத்தில் அறிவுறுத்தியவாறு அவளைக் கதிர்காமம் கோயிலுக்கு அழைத்துச் சென்றோம். அங்குப் பூசை நடந்த போது அவள் மயக்க முற்றாள். திரும்பி வந்த பிறகு, அவள் இயல்பாக இருப்பது போல் தோன்றியது. ஆனால், ஒருநாளைக்குப் பின், தொல்லை தொடர்ந்தது.       கடைசியாக மூன்று நாளைக்கு முன்பு, மெத்தேல் மந்திரக்காரக் குழுவினரால் இரவு முழுவதும் பேயோட்டல்நடந்தது. செரீன் மந்திரக் காரர்களுடன் நடனமாடினாள்! அம்மந்திரக் காரர்களின் கேள்விக்கு விடையாக, அது என்னுடைய முதல் மனைவி என்றும், செரீனின் உடலினின்றும் நீங்கிவிடுவதாகவும், ஒரு சேவலின் உடலில் நுழைந்து வடுவதாகவும் உறுதியளித்தது. அந்தச் சேவல் பின்னர்க் கொல்லப் பட்டது.
      செரீன் மயங்கி விழுந்தாள். அதே நிலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாகக் கிடந்தாள். காலையில் செரீன் முழுவதும் இயல்பானவளாகக் காணப்பட்டாள். அம்மந்திரக் காரர்களுக்கு ஒப்புக்கொண்ட கட்டணத் தொகையைக் கொடுத்தேன். அவரகள் திரும்பிச் செல்லுகின்ற நேரத்தில், அக்குழுவில் இருந்த ஓர் இளைஞன், இனியும் குணமாகாவிட்டால் உங்களை (அறிஞர் கோவூரை) அணுகுமாறு வலியுறுத்திச் சென்றான். நேற்று, மறுபடியும் செரீன் அழத் தொடங்கிவிட்டதோடு அவள் கருவுற் றிருப்பதாகவும் முறையிட்டாள்.
      இவற்றைக் கேட்டபின், ‘வைக் கீழே செல்லுமாறும் அவர் மனைவி செரீனை மேலே அனுப்பும்படியும் கூறினேன். என் துணைவியார், செரீனை அழைத்து வந்து துயிலிருக்கையில்(couch) ஓய்வு கொள்ளச்செய்தார். மேலே வரும்போது காதில் கேட்காத நிலையில் அவள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. செரீன் விலை உயர்ந்த புடைவையை மிக நாகரிகமாக உடுத்தியிருந்தாள். நாறபத்து நான்கு அகவையானாலும் இளமையாகத் தெரிந்தாள். அழகுவாய்ந்த வலமையான(healthy) இளம்பெண்ணின் தோற்றத்தோடு பழுத்த கோலிக்குட்டுவாழைப்பழ நிற உடலுடன் இருந்தாள். நாகரிகத் தோற்ற முடையவள் என்றாலும் மாற்றுக் குறையாத மரபில் வளர்ந்ததற்கு அடையாளமாக அடக்கத்தோடும் பணிவோடும் இருந்தாள்.
      அறிதுயிலில்(hypnosis) ஆழ்த்தியபோது, செரீன் கூறியவை: என் வீடு மதாராவில் இருக்கிறது. மதாரா ஆங்கிலப் பள்ளியில் கல்வி பயின்றேன். கத்தோலிக்க ரல்லாதார் மதஅறிவுரை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயமில்லை யென்றாலுங் கூட, நான் என் பள்ளியிலிருந்த கிறித்தவத் தோழிகளுடன் அவ்வகுப்புகளுக்கும் அவர்களுடைய வழிபாட்டுக்கும் கூடச் செல்வது வழக்கம். நானும் என் கணவரும் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் திருமணம் என் கணவருக்கு இரண்டாம் திருமண மென்றாலும் எனக்கு முதலாவதாகும். நாங்கள் ஒருவர்பாலொருவர் மதிப்பன்புடைய இனிய இணையாக இருக்கின்றோம். எனக்கு இரண்டாம் குழந்தை பிறந்ததும், இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை யென்று தீர்மானித்தோம். ஏனென்றால், என கணவருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னால் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தர இயலாது. என் கணவர் வழிபாட்டு அறைக்கு அருகிலுள்ள அறையில் தூங்குவார். நான் வேறொரு அறையில் குழந்தைகளோடு தூங்குகிறேன்.
      வழிபாட்டு அறையில் புத்தக் கடவுளின் உருவச்சிலை உள்ளது. திருமால் சிலையும் கதிர்காமக் கடவுளின் சிலையும் இரண்டு பக்கங்களிலும் உள்ளன. சிலைகளின் முன்னால் ஒரு எண்ணெய் விளக்கு இரவு பகலாக எரிந்துகொண் டிருக்கின்றது. நாள்தோறும் மலர்கள் படைக்கப் படுகின்றன.     பொருள் நிலையில் நாங்கள் வளமானவர்கள். என் கணவர் பத்தி(பக்தி)மான்; மதம் விரும்பி. நாங்கள் மற்ற மதங்களையும் மதிக்கிறோம். விழா நாட்களில் நாங்கள் தவறாது கோவிலுக்குப் போவோம்.
      நான் தனியாகக் குவளைக் கணியம் பார்த்த போது, சூடு துறவி என்னிடம் நிறைய செய்திகளைக் கூறினார். அவற்றை என் கணவரிடம் சொல்ல வேண்டா மெனவும் கேட்டுக் கொண்டார். என்னை அவர் காதலிப்பதாகவும், முன் பிறப்பில் நான் அவர் மனைவியாக இருந்தேன் என்றும் கூறினார். முன் பிறப்பில் என் பெயர் உரோசு என்றும் அவர் பெயர் உரோலிதிரெமசு என்றும் சொன்னார். அடுத்த பிறப்பிலும் எனக்கு அவர் கணவராக இருக்க விரும்புவதாகவும் கூறினார்!
      அந்தக் குவளைக் கணிய நிழ்ச்சிக்குப் பிறகு, துறவி சூடு இரவு நேரங்களில் அடிக்கடி வந்து என்னுடன் உறங்குவது வழக்கம். என் கணவர் வீட்டிலில்லாத சில நேரங்களில், சமையலறைக்கு வந்து என்னைக் குளியலறைக்கு இழுத்துச் செல்வார். அங்கே என்னை ஆரத்தழுவி என்பால் அன்பு செலுத்துவது வழக்கம்.
      சில நேரங்களில் என்னுடைய உடைகளைக் களைந்து என் உடலில் குறுக்கை(சிலுவை)க் குறி வரைவார். அவ்வப்போது மிகுந்த வலியேற்படாமல் அவர் என்னைக் கடிப்பார்.
       இந்தக் கட்டத்தில், எவ்வகைத் தயக்கமுமின்றி அவளுடைய கச்சுடை(blouse)யைத் திறந்து, அவளுடைய மார்பில் குறுக்கை வடிவிலிருந்த ஒரு கீறற் குறியையும், வலக்கையில் கடித்த அடையாள மொன்றையும் எங்களுக்குக் காட்டினாள்.
      செரீன் தொடர்ந்தாள்: அவர் என்னிடம் நேயத்துடனிருப்பதால், எனக்கு மிகவும் பிடித்தமானவரே. அவர் மிகவும் அழகானவர். சிலையில் நாம் பார்ப்பதைவிட முற்றிலும் வேறுபட்ட வடிவினர். முழுவதும் மழுங்க மழித்த முகத்துட னிருக்கிறார்.
      ஒருநாள், இச்செய்திகளையெல்லாம் என கணவரிடம் சொன்னால் என் கழுத்தை நெரித்துவிடுவதாக ஒரு தாளில் எழுதினார். மற்றொரு சமையம்,என் காதணிகளையும் மணமோதிரத்தையும் கழற்றி விட்டார்! மூன்று முறை தலையணைக்கடியில் பணம் உருபா 1000, 16000, 800 வைத்துச் சென்றார்.  இவற்றைக் கூறிய பிறகு செரீன் கடுமையாக அழத் தொடங்கினாள். ஏன் அழுகிறாய்?’ என நான் கேட்ட போது, “எனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது; இது எனக்கு ஒன்பதாம் மாதம்; அடுத்த மாதம் குழந்தை பிறந்ததும் எல்லாருக்கும் அக் குழந்தைக்குத் தந்தை என்கணவரல்லர் என்பது தெரிந்துவிடும்! நெறியற்ற முறையால் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதை விட இறந்து விடுவதே மேல்என்றாள் அவள்.
      இந்தக் கட்டத்தில் அவளை அறிதுயிலினின்றும் எழுப்பினேன். என் துணைவியார் அவளைக் கீழே அழைத்துச் சென்றார். திரு. வை மேலே அழைத்தேன்.
      வந்து அமர்ந்ததும் அவரிடம் 1964 சனவரி 12ஆம் நாள் சிலோன் அப்சர்வர்ஞாயிற்றுப் பதிப்புப் படியொன்றைத் தந்தேன். அதில் படுக்காவில் நான் ஆய்ந்த இதே போன்ற ஓர் உளநோயாளியின் செய்தி இருந்தது. அச்செய்தி, இறந்துபோன காதலனின் ஆவியெனக் கூறப்பட்டது இரவு நேரங்களில் வந்து அன்பு செலுத்தியதாகக் கூறிய பள்ளி மாணவி இலதாவின் இல்பொருள்காண் திரித்துணர்வு (hallucinatory experience) பற்றியதாகும்.     அச்செய்தியைக் படித்து முடித்ததும் அவருடைய மனைவி செரீனின் நிலையும் அவர் படித்த செய்தியைப்போன்றதே என்றும் அந்நிலைக்கு அவரே பொறுப்பு என்றும் கூறினேன். அவரைக் குற்றம் சாற்றிக் கூறியதைக் கேட்டதும் திடுக்கிட்டு அதிர்ச்சி அடைந்தார்.
      நான் தொடர்ந்து கூறினேன்: உங்கள் இருவரின் உள்ளங்களும் அளவில்லாத மடமையான மூடநம்பிக்கைகளால் ஏமாற்றப் பட்டுள்ளன. ஆவிகள் உள்ளதாக நம்புவதும், குவளையின் உதவியுடன் கேள்விகளுக்கு விடை சொல்ல ஆவிகளை அழைப்பதென்பதும் மடமையும் இழிவுமாகும். உங்கள் மனைவி செரீனின் உள்ளம் குவளை-உரையால் நிலைகுலைந் திருக்கின்றது. மிகுந்த நுண்ணுணர்வு கொண்ட அவளின் மனம், உங்கள் மனத்தைப் போலவே ஆவிகள் பேய்கள் மந்திரங்கள் பூசனைகள் பேயோட்டங்கள் முதலிய மூடத்தனத்தால், குழந்தைப்பருவம் முதலே தவறான கொள்கைகளால் குழப்பப் பட்டுள்ளது.
      நீங்கள் இருவரும் குவளையின் மேல் விரல்களை வைத்திருந்த போது, செரீனுடைய கையின் உளத்தியல்ஓட்டத் தசையியக்கம் அக்குவளையை நகரச் செய்தது. அதனால்தான் இரவில் அவள் தனியாகக் குவளைக் கணியம் பார்த்தபோது, குவளை மறுபடியும் நகர்ந்தது.
      திரு.பண்டாரநாயகா, பூன்வாட்டம்மையார் மற்றும் பிறரின் ஆவிகளின் வரவும், கேள்விகளுக்கு விடையளித்ததாகக் கூறப்பட்டதும் உண்மைகளல்ல. செரீனே, குவளையின் நகர்வாலும், கிடைத்த விடைகளாலும் குழப்ப மடைந்திருக்கிறாள். இவை அனைத்தும் அவளுடைய உணர்வுநிலையற்ற மனத்தினால் தன்னுணர்வற்ற அறிவுநிலையில் நடந்தவை. இத்தகைய புதுமை நிகழ்ச்சிகளின் விளைவாக அவளுடைய மென்மையான உள்ளம் தாக்கமுற்றது. குவளைக்கணியத்தின் போது வந்ததாகக்கூறப்பட்ட ஆவிகள், பேய்கள் எனப்பட்ட தீய ஆற்றல்கள் பற்றி அவள் கொண்டிருந்த இனம்புரியாத அச்சம் அவளுக்கு நரம்பு இயக்க வீழ்ச்சியை உண்டாக்கி விட்டது. கற்பனைத் துறவி சூடுடனான அவளுடைய சிற்றினபச் செயலீடுபாடுகள் அனைத்தும் பாலுணர்வுச் சுரப்பிகள் உச்சத்திறனி லிருக்கும், பாலுறவு வறுமையுற்ற ஓர் இளம்பெண்ணின் விருப்ப நிறைவேற்றங்களாகும். குவளைக் கணியம் பார்த்த நாளிலிருந்தே அவளுக்கு நரம்புக் கோளாறு ஏற்பட்டு விட்டது. இப்படியிருந்த காலத்தில் அவளுடைய இல்பொருள் காணுந் திரித்துணர்வுகள் அனைத்தும் மெய்யானவை யில்லை என்றாலும் அவளைப் பொறுத்தவரை உண்மை நிகழ்வுகளே!
      காதற் றலைவனாக துறவி சூடின் வருகைகளும், அவருடைய காதல் உருவாக்கமும், அவள் கருவுறலும், தலையணைக்கு அடியில் பணந் தோன்றியதும், மோதிரம் பற்றிய உறுதியுரையும், அடுத்தபிறவித் திருமணம் பற்றிய உறுதி மொழியும் முற்றிலும் அவளுக்கு விருப்பமான வெறும் திரித்துணர்வு நிகழ்ச்சிகளாகும்.
      அவற்றைப் போன்றே, அவளுடைய காதணி மோதிரம் மறைந்ததும், அவளுடைய உடலில் குறுக்கைக் குறியும், கடித்த அடையாளங்களும் இன்னபிறவும் வேறொருவராக இருந்து அவளே செய்து கொண்ட சொந்தச் செயல்களே! 

      உங்களைப்போன்ற கல்வியறிவு மிக்க ஒருவர், உளத்தியல் மருத்துவரிடம் கலந்தாய்வு செய்யாமல், ஏமாளி மக்களிடம் பணத்தைக் கொள்ளை யடிக்கும் போலி மருத்துவர்களின் உதவியை நாடியது இரக்கத்திற் குரியதாகும். நாட்டின் ஆட்சி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்குக் கூட, இத்தகையவர்களைச் சில மிகப் பெரியவர்கள் நாடிப் போவதைப் பார்த்து, நீங்களும் இப்படி நடக்கத் துணிந்தீர்கள் போலும்!
      செரீனுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் மனக் கோளாற்றினால் ஏற்பட்டதே! ஆவிகளாலோ, நஞ்சினாலோ, பிறவற்றாலோ ஏற்பட்டதன்று! நீங்கள் ஒத்துழைப்புத் தந்தீர்களானால் இன்றைக்கே இத்துன்பங்க ளனைத்தையும் நான் நீக்கி விடுவேன். இன்றிலிருந்து உங்கள் ஊழ்கத்தை(meditation) நிறுத்துங்கள்! ஒரு கணவனின் இயல்பான பணியைச் செய்யுங்கள்!
      உயிரியியல் தேவையான ஒன்றிலிருந்து விலகியிருப்பது, அதிலும் குறிப்பாக உங்கள் மனைவி வாழ்க்கையின் இளமைக் காலத்தில் இருக்கும் போது விலகியிருப்பது, முட்டாள்தனமாகும். உங்கள் இரண்டாம் மனைவியாக ஒரு முதிய பெணமணியைத் தேர்ந்தெடுத் திருந்தீர்க ளானால் இத்தகைய துன்பங்கள் நேர்ந்தே இருக்காது.
      மேற்கொண்டு குழந்தைகள் பிறப்பதைத் தவிர்க்க விரும்பினால் ஊழ்கத்தை விடக் குடும்பக் கட்டுப்பாட்டு நிலையத்தின் உதவியை நாடுவதே அறிவார்ந்த செயலாகும். ஓர் இளம்பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு பிறகு ஊழ்கத்தை நாடிச் செல்வது உங்களின் தன்னலமாகும்.
      மாற்றுக் குறையாத ஒழுக்க மரபிலே வளர்ந்திருக்கா விட்டால், செரீன் தன் உயிரியியல் உந்துதலைக் கமுக்கமான முறைகளில் நிறைவு செய்து கொண்டிருக்க முடியும். மாறாக, அவளுக்கு மிகத் தேவையா யிருந்த பாலியல் நிறைவை இல்பொருள்காண் திரித்துணர்வுகளின் வழி பெற்றிருக்கின்றாள்!
       ‘என்னுடைய அறிவுரைகளை ஏற்று நடப்பதாக உறுதி மொழிந்தார். பிறகு, கீழே சென்று அவருடைய மனைவியை மேலே அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன்.
      என் துணைவியார் செரீனைத் துயிலிருக்கையில் படுத்து ஓய்வு கொள்ளச் செய்தார். பின்னர், அவளை ஆழ்ந்த அறிதுயிலில் இருத்தி, கீழக் காண்பவற்றைக் கூறினேன்: துறவி சூடு இப்போது உன் முன்னால் இருக்கிறார். இதுவே அவர் உன்னிடம் வரும் கடைசி முறையாகும். உன்னிடம் விடைபெற்றுச் செல்லவே அவர் வந்திருக்கிறார்.
      இதைக்கேட்டதும் செரீனின் முகத்தில் தெரிந்த உணர்வுகளைப் பதிவுசெய்ய என்னிடம் ஒரு திரைப்படப்பிடிப்புக் கருவி இல்லாமல் போய்விட்டதே என வருந்தினேன்! மேலும் கூறினேன்: துறவி சூடு தன் குழந்தையை உன் கருப்பையிலிருந்து எடுத்துக்கொண்டு செல்கிறார். அவர் இனி ஒருபோதும் உன்னிடம் வரமாட்டார். இனி, உன் கணவர் உன்னிடம் மிக அன்புடன் இருப்பார்! நீயும் அவரிடம் பேரன்புடன் இருப்பாய்! நீங்கள் இருவரும் உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்!
      அறிதுயிலினின்றும் செரீன் எழுப்பப் பட்ட சில நிமையங்களுக்குப் பிறகு, ‘புன்னகை தவழும் தன் இனிய மனைவியுடன் விடைபெற்றுச் சென்றார்.
      ஒரு மாதத்திற்குப் பின் திரு.வும் அவருடைய துணைவியாரும் நன்றி தெரிவிப்பதற்காகப் பரிசுப் பொருள்களுடன் எங்கள் இல்லத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, இக்கதையைப் பிரான்சு, இசுப்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் வெளியிடுவதால் பல நன்மைகள் விளையக் கூடுமெனக் கூறி, அதற்கான அவர்களின் இசைவைப் பெற்றேன்!

------------------------------------------------------------------------

வியாழன், 19 ஜூன், 2008

மூடநம்பிக்கைகள் இங்கும் அங்கும்!


                   ( ஆங்கிலமூலம் : ஆபிரகாம் தொ.கோவூர்   தமிழாக்கம் : தமிழநம்பி ) 


            1953ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில், கொழும்பில், ஓர் அமெரிக்கக் கணவன் மனைவி இணையை உணவுவிடுதி யொன்றில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவில் ஒருமாதச் சுற்றுச் செலவிற்குப் பின் அவர்கள் சிரீலங்காவிற்கு வந்திருந்தனர்.
            நான் அவர்களிடம் இந்தியாவைப் பற்றிய அவர்களின் கருத்தைக் கேட்டேன். அந்த அம்மையார், ‘நல்ல நாடு; ஆணால், மக்கள் மூடநம்பிக்கை முட்டாள்களின் கூட்டம்என்று கூறினார்.
            அப்பெண்மணி அலகாபாத் பிரயாகையில் அந்த ஆண்டு கும்பமேளாவின் போது அவர்கள் பார்த்த கொடுமையான காட்சியை விளக்கிக் கூறினார்:            கங்கை, யமுனை மற்றும் வானத்திலிருந்து கண்ணுக்குத் தெரியாமல் கீழே ஓடிவருவதாக ஏமாளி மக்கள் நம்பும் கற்பனை ஆறான சரசுவதி ஆகிய மூன்றும் கூடுமிடத்தில் ஏறத்தாழ 60 இலக்கம் மக்கள் சேர்ந்திருந்தனர்.
            அந்த ஆறுகள் கூடுமிடத்தில் கும்பமேளாவின் நன்னிமித்த நேரத்தில் நீரில் மூழ்கி அவர்களுடைய பாவங்கள் அனைத்தையும் போக்கிக் கொள்ளவே அங்கேக் கூடியிருந்தனர்.
            சங்கு ஊதியும் கோயில் மணிகளை ஒலித்தும் நன்னிமித்த நேரம் தெரிவிக்கப் படுகின்றது. இலக்கக் கணக்கான ஆண்களும் பெண்களும் அந்நேரத்தைத் தவறவிடக் கூடாது என்ற பேரார்வத்துடன், அதிகம் வழுக்கும் மண்ணில் விழுந்து விட்டவர்களைத் தூக்கிவிடுவதில் நேரத்தை வீணாக்காமல்(?) ஆற்றில் முழுக்குப்போட விரைகின்றனர்.
            அந்தத் தூயகுளிப்பு முடிந்தபோது, ஆயிரக் கணக்கான சேறுபூசிய பிணங்களை அவ்வாற்றங் கரைகளில் எடுத்துச் சேரக்கின்றார்கள். இவ்வகையில், பேரெண்ணிக்கையி லான மாந்தரின் சாவுகள் எவரையும் கவலைக் குள்ளாக்கினவாகத் தெரியவில்லை.
            அந்த ஏமாளிகளுக்கு அத்தகைய சாவு விரும்பத்தக்கதா யிருக்கின்றது. ஏனென்றால், அங்கு இறந்தவர்கள் துறக்கம் (சொர்க்கம்) செல்வார்கள் என்று - அல்லது மேலும் சிறப்பான நிலையில் மீண்டும் பிறப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள். ஆனால் அமெரிக்கர்களுக்கோ, அஃது ஓர் கொடிய காட்சியாக இருந்தது.
            தன்னுடைய பாவங்களைக் கழுவப் பிரயாகைக்கு வந்திருந்த இந்தியக் குடியரசு தலைவர் பர்.இராசேந்திர பிரசாத்தும் கூட அந்த ஏமாளி மடயர்களில் ஒருவராயிருந்த இழிவைக் குறிப்பிட்ட திருவாட்டி இராபர்ட்டு, ‘உங்கள் மக்களின் பேரளவிலான மூட நம்பிக்கைகளைப் பற்றி நீங்கள் எப்போதாவது ஆழ்ந்து சிந்தித் திருக்கின்றீர்களா?’ என்று என்னிடம் கேட்டார்.
            ‘ஆம், எங்கள் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பற்றியும் உங்கள் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பற்றியும் மிக ஆழமாகச் சிந்தித் திருக்கின்றேன்என்றேன் நான்.
            எங்கள் மக்களும் கூட மூட நம்பிக்கைக்காரர்கள் என்று எண்ணுகிறீர்களா என்ன?’ என்றார் அவர்.
            ஆம், எங்கள் மத நூல்களும், குருமார்களும் கங்கையின் தூயநீரில் மூழ்குவதால் பாவங்களைக் கழுவி விடலாம் என்று கூறுவதை எங்கள் மக்கள் குருட்டுத்தனமாக நம்பி அப்படியே செய்கின்றனர். உங்கள் மதநூல்களும் உங்கள் குருமார்களும் மெய்யறிவுக் குளிப்பு’ (Baptism) என்ற புறக்கழுவல், அல்லது தெய்வ விருந்து’ (Holy communion) என்ற அகக்கழுவல் மூலம் பாவங்களைக் கழுவி விடலாம் என்று கூறுவதை நீங்கள் குருட்டுத்தனமாக ஒப்புக் கொள்கிறீர்கள்.
            ‘ மெய்யறிவுக் குளிப்புக்காகவோ தெய்வ விருந்திற்காகவோ நன்னிமித்த நேரம் என்று எதுவும் இல்லாத நல்வாய்ப்பு உங்களுக்கு இருப்பதால் கூட்ட நெருக்கடிக் குழப்பங்களும் அதனால் ஏற்படும் சாவுகளும் இல்லாமல் இருக்கின்றன! என்று விடை கூறினேன்.
            எங்கள் உரையாடலை முழுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த திரு.இராபர்ட்டிடம் ஐயா, எங்கள் சிந்தனைக்கு நிறைவான தீனி அளித்தீர்கள்என்று கூறினேன்.
            ஒருமுறை சிலோன் பெந்தகொசுதலியரின் தலைமை நிலையத்தினர் என்னை விருந்துக்கு அழைத்திருந்தனர். என் துணைவியாருடன் நான் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகே என்னை அழைத்ததன் முகன்மையான நோக்கத்தை அறிந்தேன். அய்ரோப்பிய பெந்தகொசுதலியர் உள்பட கிறித்துவ மதத்தில் பதவிகளிலுள்ள எல்லாத் தலைவர்களும் என்னுடன் தருக்கம் செய்ய அங்கே கூடியிருந்தனர்!
            நாக்கொடை’ (Glossolalia) என்ற நரம்புக் கோளாற்று நிலை பற்றி அறிவியல் சான்றுகளுடன் நான் விளக்கியும் கூட, ‘தூய ஆவியின் துணையால் ஏற்படும் திறமையென நம்பும் அவர்களை, அக்குருட்டு நம்பிக்கையினின்றும் மாற்ற முடியவில்லை.
            உணாமிசை (Dining table) க்குச் சென்றதும், திருத்தந்தை ஆல்வின்சு பக்கத்தில் எனக்கு இருக்கை அளித்தனர். விருந்தின் போதும் கலந்துரையாடல் தொடர்ந்தது. பெந்தகொசுதலியர், நோயுற்றாலும் மருந்துண்ணாமை பற்றிப் பேச்சு நடந்தது.
            ஒருவர் செய்த பாவத்திற்குத் தண்டனையாகவே அவருக்குக் கடவுள் நோயை உண்டாக்குகின்றார். நாம் கடவுளிடம் நோயைத் தீர்க்கும்படி முறையிடுகின்றோம். கடவுளின் கருத்தை வீழ்த்தும் வகையில் மாந்தன் மருந்துகளை ஏற்பது தவறாகும்என்றார் திருத்தந்தை ஆல்வின்சு.
            மாந்தன் மருத்துவ அறிவினால் கடவுளை, அவருடைய கருத்தை வீழ்த்த முடியுமென்றால், கடவுளைவிட மாந்தன் மிகுந்த ஆற்றல் உடையவன் என்று ஆகாதா? நீங்கள் மருந்தை ஏற்றுக் கொள்வதில்லை யென்றால், உணவை மட்டும் ஏற்றுக்கொள்வது ஏன்?’ என்றேன் நான்.
            உணவு மருந்தன்று; ஏசுவே உணவை உட்கொண்டிருக்கின்றார்என்றார் திருத்தந்தை ஆல்வின்சு.
            நீங்கள் சொல்வது தவறு! பசி என்ற நோய்க்கு உணவு ஒரு மருந்தாகும். விடாய் என்ற நோய்க்கு நீர் ஒரு மருந்தாகும்என்று கூறி முடித்தேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதன், 11 ஜூன், 2008

குளியலறையில் பேய்!

(ஆங்கிலமூலம் : ஆபிரகாம் தொ. கோவூர் - தமிழாக்கம் : தமிழநம்பி            நானியா நல்ல அழகி. பன்னிரண்டு அகவையினள். நல்ல உடலும் அறிவுக் கூரமையும் கொண்டவள். கலகலப்பாகப் பழகும் மனஇயல்பும், மற்றக் குழந்தைகளுடன் விளையாட்டு, நடனம், பாடல்களில் தயக்கமின்றிக் கலந்துகொள்ளும் திறமையும் பெற்றவள். அதனால் அவளைப் பள்ளிக் கூடத்திலும் விளையாடுமிடத்திலும் பலரும் அறிந்திருந்தனர்.
            அவள் படிப்பிலும் கெட்டிக்காரி. ஆண்டு இறுதித் தேர்வில், 35 மாணவிகள் உள்ள வகுப்பில் ஐந்தாவது மாணவியாக அவள் தேர்வு பெற்றாள். கணக்குப் பாடத்திலும் பேச்சுப் போட்டியிலும் வகுப்பில் அவளே முதல் மாணவி.
            கொழும்பு 'செய்தித் தூதர் தெரு'விலுள்ளது நானியாவின் வீடு. 1964 சூலை31ஆம் நாள்வரை இன்பம் தவழும் இல்லமாகவே இருந்தது அவ்வீடு. மறுநாளிலிருந்து நானியாவிடம் காணப்பட்ட திடீர் மாறுதல், குடும்பத்தினர் அனைவரையும் மிகவும் கண்கலங்கச் செய்து விட்டது.
            நானியா, முற்றிலும் மாறுபட்ட ஒருத்தியைப் போல ஆகிவிட்டாள். மகிழ்ச்சியும் கலகலப்பும் அவளைவிட்டு நீங்கிவிட்டன. அவளுடைய விழிகள் வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரிந்தன; முன்பிதுக்கமாகவும் கசிவுற்ற வண்ணமும் காணப்பட்டன.
            ஒவ்வொரு நாளும் இரவு வந்ததும், கடுமையாக உடலை முறுக்கிக் கொண்டு உரக்கக் கூச்சலிடத் தொடங்கினாள். அவளுடைய தாயும் தந்தையும் அவளைக் கட்டுப் படுத்துவதற்குப் பெரும்பாடு பட்டனர். பலமுறை வீட்டைவிட்டு ஓடிப்போக அவள் முயற்சி செய்தாள். எதைச் சொல்லியும் அவளை அமைதிப் படுத்தவே முடியவில்லை.
            அவளுடைய அலறலுக்குக் காரணத்தைக் கேட்டபோது, யாரோ அவள் மென்னியை நெறித்துக் கொல்வதாகக் கூறினாள். அச்சம் மிகுந்த நிலையில் தொடர்பில்லாது பேசிக் கொண்டிருந்தாள்.
            சில நேரங்களில் தன் நினைவிழந்திருக்கும்போது, சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோன தன் அத்தைமகள் சாரினாவைப் போலப் பேசத் தொடங்கினாள். களைத்துப்போய் சோர்வுற்ற பின்பே தன்னிலைக்குத் திரும்பினாள்.
            நானியாவின் நடத்தை குடும்பத்தாரை மிகவும் நிலை குலையச் செய்த்து. நெருங்கிய உறவினர் சிலர் இரக்கத்தோடும் இன்னும் சிலர் ஒருவகை ஆவலோடும் அடிக்கடி வந்து பார்த்துச் சென்றனர். அவர்களனைவரும் நானியா குணமடைய அவரவருக்குத் தோன்றிய 'சிறந்த வழி'யை தயக்கமின்றிக் கூறிச் சென்றனர். பேரளவுக்கு மந்திரக்காரர் பேயோட்டிகளின் பெயர்க ளெல்லாம் அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன.
            இப்படிப் பட்டக் கொடிய துன்பச் சூழலில் மக்கள் அறிவுநுட்ப முடையவர்களா யிருந்தாலுங் கூட மந்திரக்காரர்களிடத்தும் பேயோட்டிகளிடத்தும் ஏமாந்து போவது புதுமையில்லை அல்லவா?
            முதலமுதலாகப் பேயோட்ட வந்தவர் 'வெள்ளைக் குருவி' என்ற பகடிப் பெயரால் அழைக்கப்பட்டு வந்த ஒரு நாட்டுமருத்துவர் ஆவார். நெடுநேரம் மந்திரம் ஓதியபின் நானியாவின் தலைமயிரில் ஐந்து முடிச்சுகளைப் போட்டுவிட்டு, வலக்கைத் தோள் தசையில் ஒரு காவி வண்ணக் கயிற்றைக் கட்டிவிட்டார். இனி எந்தத் தொல்லையும் இருக்காது என்று கூறிவிட்டுத் தன் கூலியைப் பெற்றுக் கொண்டு 'வெள்ளைக் குருவி' பறந்து சென்றது. ஆனால், அடுத்தநாள் காலையிலேயே அப்பெண் வழக்கம் போலக் கூச்சலிடத் தொடங்கினாள்.
            இரண்டு நாட்களுக்குப் பின்னர்ப் பக்கத்து வீட்டுக்காரரின் பரிந்துரையின்படி மலாயா மந்திரக்காரர் ஒருவர் அழைத்துவரப்பட்டார். இவர், ஒரு துண்டுத்தாளில் சில குரான் வரிகளை அரபியில் எழுதினார். அத்தாளை உருளையாகச் சுருட்டிக் கருப்பு நூலினால் கட்டினார். பிறகு, நீரில் நனைந்து விடாதிருக்க அதை உருக்கிய மெழுகில் மூழ்க்கி எடுத்தார். இருபத்தொரு முடிச்சுகள் போடப்பட்ட கருப்புக் கயிற்றில் அதைக் கட்டினார். அக்கயிற்றை நானியாவின் கழுத்தில் கட்டிவிட்டுத் தன் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தார்! அப்பெண்ணின் அவலக் கூச்சல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது!
            மூன்றாவதாக அழைத்து வரப்பட்டவர் கொழும்பு 'ஒன்றியநகரை'ச் சேரந்த முதிய முசுலிம் மந்திரக்காரர். இவர், புகைபோட்டு எலிகள் பாம்புகளை வளையிலிருந்து வெளியேற்றுவதைப் போன்று கெட்ட ஆவியையும் விரட்டி ஓட்டுகிறவராம்! ஒருகலத்தில் உலர்ந்த கழுதைச் சாணத்தைப் போட்டு அதில் நெருப்பு வைத்தார். அச்சாணத்திலிருந்து அடர்ந்த புகை எழுந்ததும், அரபியில் மந்திரங்களை ஓதிக்கொண்டே நானியாவின் உடலைச் சுற்றிலும் பலமுறை அப்புகையைச் செலுத்தினார். அவரும் தன் கூலியை வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார்! ஆனால் பயன் ஏதும் ஏற்பட்ட பாடில்லை!
            நானியா, சமையலறைக்கு அருகிலுள்ள குளிப்பறைக்குச் செல்லும் போதெல்லாம் அவளுடைய அச்சமும் கூச்சலும் அதிகமாயின. சில குடும்ப நண்பர்கள் அவளை வேறிடத்தில் சிலநாட்கள் வைத்திருப்பது நல்லதெனக் கூறினர். அவ்வாறே, நானியா அவளுடைய அத்தையின் வீட்டிற்கு அனுப்பப் பட்டாள். அங்கு தங்கிய சில நாட்களில், அவள் நிலையில் முன்னேற்றம் இருந்தது. நானியா வீட்டிற்குத் திரும்ப விரும்பினாள்.
            வீட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டதும், மறுபடியும் அதே தொல்லை முன்பைவிடக் கடுமையாக நிகழத் தொடங்கியது. இறந்துபோன அத்தை மகளின் பேய், அதனுடன் வருமாறு தன்னை அழைத்துக் கொண்டிருப்பதாக நானியா கூறினாள்.
            பேயைப் பற்றிக் கூறியதால் பெற்றோர் மிகவும் அச்சமுற்றனர். ஆற்றல் மிகுந்த பெரிய மந்திரக் காரர்களின் துணையைப் பெறுவதென அவர்கள் முடிவு செய்தனர்.
            நான்காவதாக அழைத்து வரப்பட்ட பேயோட்டி, கொழும்பு சிரிபினா சந்திலிருந்த மற்றொரு முதிய முசுலிம் மந்திரக்காரர். முன்பு வந்தவர்களைப போலவே, இவரும் சில மந்திரக் கயிறுகளை அப்பெண்ணின் மணிக்கட்டிலும் கழுத்திலும் கட்டினார். கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றார். ஆனால், பயனேதும் விளையவில்லை!
            அடுத்து வந்த ஆள், கொழும்பு மஞ்சிகர் தெருவிலிருந்த குருனான்சி என்ற சிங்கள மந்திரக்காரன். குடும்ப எதிரிகளால் வைக்கப்பட்ட 'வைப்பு'தான் நானியாவின் துன்பத்திற்குக் காரணமென்றான். எலுமிச்சை வெட்டுஞ் சடங்கு செய்து அந்த 'வைப்பை' எடுத்தால்தான் துன்பங்கள் தொலையும் என்று கூறினான். அவ்வாறே, பெருஞ்செலவு செய்து அச்சடங்கு நடத்தப்பட்டது. நானியாவின் கழுத்தில் ஒரு சுருட்டகடு (தாயத்து) கட்டப் பட்டது.
            எலுமிச்சை வெட்டுஞ் சடங்கும் பயனளிக்காமற் போன பின்னால், மாசுகேலியாவிலிருந்து ஒரு பெயர் பெற்ற மலையாள முசுலிம் மதகுருவை அழைத்து வந்தனர். அந்த ஆள் இரண்டு நாள் மந்திரம் ஓதி இறை வழிபாடு செய்து, கடைசியில் ஒரு சுருட்டகடை நானியாவின் தந்தையிடம் கொடுத்து, அதனை அவள் தூங்கும்போது அவளுக்குத் தெரியாமல் தலையணைக்குள் வைக்க வேண்டுமெனக் கூறிச் சென்றான். இதுவுங்கூட எந்த நன்மையுந் தந்திடவில்லை!
            ஆறு பேயோட்டிகளை அழைத்து வந்தும் பெரும் பொருளைச் செலவழித்தும் ஏமாறிப் போனபிறகு, அப்பெண்ணின் மன நோய்க்குப் பேயோட்டிகளின் உதவியை நாடியதைத் தொடக்கத்திலிருந்தேக் கண்டித்து வந்த கற்ற்றிந்த நண்பர் ஒருவரின் கருத்தைக் கேட்க இசைந்தனர்.
            1964 ஆகத்து 20ஆம் நாள் நானியாவின் தந்தை அகமதும் மாமன் அமீதும் என்னிடம் வந்தனர். ஆங்கிலச்செய்தித்தாள் ஒன்றின் துணை யாசிரியரான திரு. தவ்பீக் தந்திருந்த அறிமுகக் கடிதத்தைக் கொடுத்தனர். அவர்கள் வீட்டில் நடந்தவை எல்லாவற்றையும் தெளிவாகக் கூறினர். முழுவதும் கேட்டபிறகு அப்பெண்ணை ஆகத்து 24ஆம் நாள் பகல் 2-30 மணிக்கு அழைத்து வருமாறு அவர்களிடம் கூறினேன்.
            குறித்த நாளில், நான்கு ஆண்கள் மூன்று பெண்கள் இரண்டு பையன்கள் அடங்கிய கூட்டம் நானியாவுடன் வந்தது. நானியா நினைவு இழந்தவளைப் போலக் காணப் பட்டாள். இரு பெண்கள் அவளைத் தாங்கியவாறு அழைத்து வர வேண்டியிருந்தது.
            அக்கூட்டத்தை வரவேற்பறையிலேயே இருக்கச் சொல்விட்டு, நானியாவை மட்டும் மாடியிலிருந்த என் தீராய்வு அறைக்கு வருமாறு அழைத்தார் என் மனைவி. நானியா மேலே வர விரும்பவில்லை. கொஞ்ச நேரம் அவளிடம் அன்போடும் இனிமையோடும் பேசி ஒப்புக்கொள்ள வைத்து தன்னுடன் அழைத்து வந்தார்.
            நானியாவின் உடலெங்கும் மந்திரக் கயிறுகளும் சுருட்டகடுகளுமாகக் காணப்பட்டன! முதலில் கத்தரிக்கோலை எடுத்து அவற்றையெல்லாம் வெட்டி எறிந்தேன். அவளை ஒரு மென் படுக்கையில் படுக்கச்செய்து ஓய்வு கொள்ளுமாறு கூறினேன்.
            அறிதுயில் (hypnosis) முறையில் உள் மனத்தைத் திறக்கச் செய்ததும், நானியா தடையின்றி பேசத் தொடங்கினாள். அவளிடமிருந்த நான் தெரிந்து கொண்ட செய்தியைக் கீழே தருகிறேன்.
            நானியா அவள் அத்தைமகள் சாரினாவிடம் மிக அதிகமான அன்பு கொண்டிருந்தாள். 1964 மே 14ஆம்நாள் முழுவதும் நானியா வீட்டில் அவளோடு சாரினா இருந்தாள். அவர்கள் இருவரும் பகல் முழுவதையும் விளையாட்டிலும் மகிழ்ச்சியான பேச்சுகளிலுமாகக் கழித்தனர். மாலையில் சாரினா கடுமையாகத் தலைவலிப்பதாகக் கூறினாள்.
            மறுநாள் சாரினாவைக் குடும்ப மருத்துவரிடம் காட்டினர். அவர் மூளை வல்லுநர்களிடம் காட்டவேண்டுமெனக் கூறினார். இலங்கையின் புகழ்பெற்ற நரம்பு மருத்துவர்கள் இருவர் சாரினாவை ஆய்வு செய்து, அவளுடைய மூளையில் கட்டி இருப்பதாகவும் உடனே அறுவை செய்யப்பட வேண்டு மெனவும் கூறினர். அறுவையின் பயன் மருத்துவர்கள் மகிழும்படியாக அமையவில்லை. சாரினா இரண்டு நாள்கள் நினைவிழந்தவாறே இருந்தபின் மே 18ஆம் நாள் இறந்து போனாள்.
            சாரினாவின் சாவு அவளுடைய உறவினர்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்த்து. குறிப்பாக அவளுடைய அணுக்கத்தோழி நானியா கடுமையான அதிர்ச்சி அடைந்தாள்!
            சாரினாவின் உடல் மருத்துவமனையி லிருந்து வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டு, மறுநாள் அடக்கம் செய்யப் பட்டது. குழந்தைகள் அப்பிணத்தைப் பார்க்கா வகையில் தடுக்கப்பட்டனர். நானியா தன் அன்புத் தோழியைக் கடைசியாகப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் பெரியவர்களின் கால் இடைவெளி வழியே நுழைந்து எட்டிப் பார்த்தாள். முகத்தைத் தவிர உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடி வைக்கப் பட்டிருந்தது.
            நாள்கள் செல்லச் செல்ல குடும்பப் பெரியவர்கள் மனத்திலிருந்து சாரினாவின் சாவு மறைந்து போயிற்று. ஆனால் குழந்தைகளின் இளம் நெஞ்சங்களிலிருந்து அவ்வளவு எளிதில் மறையவில்லை. நானியாவும் அவள் தம்பிகளும் சாரினாவுடன் விளையாடி மகிழ்ந்த இன்ப நாள்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
            1964 சூலை 15ஆம் நாள் இரவு எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நானியாவின் சிறிய தம்பி படுக்கையிலிருந்து எழுந்துத் தாயிடம் ஓடிப்போய் அறையின் மூலையில் சாரினாவின் பேயுருவைப் பார்த்ததாகக் கூறினான். திடுக்கிட்ட அம்மா விளக்கைப் போட்டுவிட்டு, அவன் காட்டிய மூலையைப் பார்த்தாள். அங்கே ஒரு பாவாடை கொடியில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் பாவாடையையே பேயாக நினைத்து விட்டதைப் புரிந்து கொண்டாள்.
            மறுநாள் அம்மாவும் அவனும் அந்நிகழ்ச்சியை எல்லாரிடமும் கூறிச் சிரித்துக் கொண்டனர். அனைவருக்கும் நகைக்கத் தக்கதாக இருந்த அந்த நிகழ்ச்சி, நுட்பம் மிகுந்த நானியாவை அன்றிலிருந்து மிகவும் மனச்சோர்வு கொள்ளச் செய்த்து.
            1964 சூலை 31ஆம் நாள் நானியா சமையலறையில் இருந்து இருண்ட இடைவெளி வழியே குளியலறைக்குச் சென்ன்றாள். இருள் மிகுந்த குளியலறையில் உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடப் பட்டிருந்த சாரினாவின் பேய்முகத்தைப் பார்த்தாள்! பெரும் அலறலுடன் வெளியே ஓடி வந்துவிட்டாள். அன்றிரவு தனியே படுக்க அஞ்சித் தாயுடன் உறங்கினாள். தூங்கிக் கொண்டிருக்கும் போதே பெருங் கூச்சலுடன் எழுந்து விட்டாள்.
            சாரினாவின் பேய் நானியாவைத் தன்னுடன் வருமாறு அழைத்த தாகவும் அவள் வரமாட்டேன் என்றதும், அப்பேய் அவளுடைய கழுத்தை நெறிக்க முயற்சி செய்த்தாகவும் கூறினாள். அதற்குப் பிறகு, நானியா, வீட்டின் இருண்ட மூலைகளைப் பார்க்கும் போதெல்லாம் பல தடவைகள் சாரினாவின் முகத்தைப் பார்த்தாள்!
            நீண்ட நேர அறிதுயில் அறிவுரைகளால், இல்லாத சாரினாப் பேயை நானியாவின் உள் மனத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். செயற்கையாக உருவாக்கப் பட்ட பேயைப்பற்றிய அச்சங்கள் அறிதுயில் அறிவுரைகளால் நானியாவின் உள்ளத்திலிருந்தும் நீக்கப்பட்டதும், அவள் தன் இயல்பான நிலைக்கு மீண்டு வந்தாள்.
            அறிதுயில் உறக்கத்திலிருந்து மகிழ்ச்சிப் புன்னகையுடன் விழித் தெழுந்தாள் நானியா. களிப்போடு படிக்கட்டுகளில் இறங்கி ஓடினாள், தம் உறவினர்களைக் காண்பதற்காக!
            கடந்த 24 நாள்களாக நானியாவிடம் காணப்பாத புன்னகையைக் கண்டதும் பெற்றோரும் மற்ற உறவினரும் மகிழ்ச்சியில் பூரித்து மயிர்சிலிர்த்துப் போனார்கள். மிகுந்த மனத்துன்பத் தோடும் கனத்த நெஞ்சோடும் வந்த அக்கூட்டத்தினர் பெரு மகிழ்ச்சியோடு எனக்கும் என் மனைவிக்கும் நன்றி கூறிச் சென்றனர். நானியா போகும்போது தன் வீட்டிற்கு வரவேண்டுமென எங்களுக்கு அழைப்பு விடுத்துச் சென்றாள்.
            ஒரு மாதம் கழிந்தபின் நானியாவின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். பள்ளிக்குச் சென்றிருந்த நானியாவுக்குச் செய்தி தெரிவிக்கப் பட்டதும் பத்தே நிமையத்தில் பறந்தோடி வந்தாள், கலகலப்பும் மகிழ்ச்சியும் மிக்கவளாக!
            அரைமணி நேரம் அக்குடும்பத்துடன் இருந்துவிட்டுக் கிளம்பினோம்! வரும்போது, பெற்றோரின் மூட நம்பிக்கையால் ஓர் அறிவு மிகுந்த பெண் தீராத நரம்புக் கோளாற்றுக்கு ஆளாகி விடாமல் காப்பாற்றிய மகிழ்ச்சி எங்கள் நெஞ்சை நிறைத்திருந்தது.
குறிப்பு : அறிவியல் ஆய்வறிஞரான ஆபிரகாம் தொ. கோவூர் அவர்கள் தம்முடைய நிகழ்வாய்வு(case study)களைக் கொண்டு எழுதிய 'கடவுளர், பேய்கள், ஆவிகள்' (Gods Demons and Spirits) என்ற நூலில் இந்த உண்மைக் கதை உள்ளது.