எச்சரிக்கை வேண்டுகோள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எச்சரிக்கை வேண்டுகோள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 மார்ச், 2009

வேண்டுகோள்!


வேண்டுகோள்!

[congress.jpg] 

'காங்கிரசு'க் கட்சி என்று அழைக்கப் படுகின்ற -
இந்தியத் தேசியப் பேராயக் கட்சி
(Indian national congress party) -

*
கொடிய இனவெறியரான சிங்களரின் ஈழத் தமிழின அழிப்பு வினைக்கு முழுத் துணையாகவும் முதன்மைக் கலந்துரைஞராகவும் உள்ளது.

*
குழந்தைகள், சிறுவர்கள் உள்பட பல்லாயிரக் கணக்கான ஏதுமறியாத் தமிழர் கொல்லப்படவும் காயமுறவும் உடலுறுப்புகளை இழந்து சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாகவும் முதன்மைப் பொறுப்பாளராக உள்ளது.

*
நானூறுக்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களைச் சிங்கள இனவெறிக் கடற் படையினர் கொன்றுள்ளனர்; தமிழக மீனவரின் படகுகளையும் வலைகளையும் நாசப் படுத்தி யுள்ளனர். அவர்களின் மீன்களையும் பிறவற்றையும் கொள்ளையடித் துள்ளனர். இதுவரை ஒருமுறை கூடப் பேராயக் கட்சியின் தலைமையிலான இந்திய அரசு, சிங்கள அரசுக்குச் சிறு கண்டனம் தெரிவிக்க வில்லை.

*
தமிழகமே கொதித் தெழுந்து ஈழத் தமிழரையும் தமிழக மீனவரையும் காப்பாற்றக் கோரிப் பல்வேறு வகையிலும் போராட்டங்கள் நடத்தியும், தமிழர்கள் 11 பேர் இதற்காகத் தங்கள் உடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டு உயிர் ஈகம் செய்தும், தமிழ்நாட்டுச் சட்டமன்றமே ஒருங்கிணைந் தெழுந்து ஈழப்போரைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்திய அரசும் 'காங்கிரசு'க் கட்சியும் கொஞ்சம் கூடப் பொருட் படுத்தவில்லை.

*
எனவே, 'காங்கிரசு'க்கு யாரும் ஒப்போலை (வாக்கு) அளிக்காதீர்கள்!
மாந்தநேயம் அறவே இல்லாதவர்கள் பதவியில் அமர வாய்ப்பு அளிக்காதீர்கள்!

'
காங்கிரசை'த் தோற்றோடச் செய்யங்கள்!

 

வியாழன், 12 மார்ச், 2009

எச்சரிக்கை வேண்டுகோள்!




     இலங்கையின் முல்லைத்தீவில் முழுப் பேரழிவில் இரண்டரை இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களைக் கொன்றழிக்க சூழ்ச்சி நடைபெறுகின்றது. சிங்களக் கொலைவெறிப் படையின் கொடுங்கொடிய தாக்குதலுக்கு அஞ்சித் தம் சொந்த வீடு வாசல் நிலபுலங்களைத் துறந்திழந்து சென்ற வடக்கிலங்கைத் தமிழர்கள் இரண்டரை இலக்கத்திற்கும் மேற்பட்டோர், பலமுறை இடம் பெயர்ந்து இப்போது முல்லைத்தீவில் அடைக்கலமாகி உள்ளனர்.
    
     ஆனால், இலங்கையின் சிங்கள அரசும் இந்திய அரசும் முல்லைத்தீவில் அடைக்கலம் புகுந்துள்ள ஏதுமறியாத் தமிழர்களின் எண்ணிக்கையை எழுபதாயிரம் என்றும், எண்பதாயிரம் என்றும், அறுபத்தையாயிரம் மட்டுமே என்றும் இக்கால் மாற்றி மாற்றிக் கூறி வருகின்றனர், இந்த எண்ணிக்கை மோசடியின் பின்னே உலகே அதிர்ச்சி அடையக்கூடிய ஒரு கொடும் பேரழிவிற்கு அடிகோலும் சூழ்ச்சி இருப்பதாக மாந்த உரிமை ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

     இலங்கை அரசு ஏதுமறியாத் தமிழர்களை வந்துவிடும்படி வற்புறுத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் பெண்கள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப்படுகின்ற நிலைமையும் ஆண்களில் இளைஞகள் தனியே பிரிக்கப்பட்டுக் கொண்டுசென்ற பின், அவர்களின் பிணங்கள் கடலில் மிதக்கும் நிலைமையுமே நிலவுவதாலும் முல்லைத்தீவில் இப்போது குவிந்துள்ள தமிழர்கள் பாதுகாப்பு வளையங்களுக்குள் வர அஞ்சுகிறார்கள்.

     இந்நிலையில், பாதுகாப்பு வளையத்திற்குள் வராதவர்களை,  அவ்வாறு வராததையே காரணமாக்கி அவர்களைப் 'போரிடுவோர்' (combatant) எனக்கூறிவிட்டு குண்டுமழை பொழிந்து அந்த இலக்கக்கணக்கான தமிழ்மக்களைக் கொன்று குவித்துப் பெரும் பேரழிவு நடத்த சூழ்ச்சி நடைபெறுகிறது.

     நெஞ்சப் பதைப்புடன் எச்சரிக்கின்றோம்! தமிழக அரசே! தமிழர்களே! நடுவண் அரசில் மாந்த நேயமும் நயன்மையுணர்வும் அற்றுப்போகாதவர்களே! இந்தக் கடைசி நேரத்திலாவது உடனடியாகச் செயல்படுங்கள்! முழுப்பேரழிவு நடக்காமல் தடுத்து நிறுத்துங்கள்! சிங்கள இனவெறியாளரிடமிருந்து அத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!

(மக்கள் தொலைக்காட்சியின் 'சங்கப் பலகை'ச் (8-3-2009)செய்தியைக் கேட்டு மனங்கசிந்து வேண்டிய வேண்டுகோள்!)