பாவலர் ம. இலெ. தங்கப்பா அவர்களின்
எட்டாம் ஆண்டு நினைவேந்தல்
வாழ்க்கையின் நோக்கம் அன்பு, அன்பு, அன்பு செலுத்தலே என வலியுறுத்திய அன்பே!
இயற்கையோடியைந்த வாழ்க்கையே வாழ்க்கை என விளக்கிய எங்கள் ஆசானே!
சுற்றுச்சூழல் தூய்மையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த சிற்றூர் வரப்பு வாய்க்கால் மரநிழல் விரும்பியே!
இயற்கையைத் துய்க்க - எழில் உணர்ந்து மகிழ்ந்திட - எண்ணற்ற மாணவரை ஆற்றுப்படுத்திய ஏந்தலே!
தனித்தமிழைத் தாங்கி நின்று தாய்மொழியைக் காத்துயர்த்தத் தளராது பாடாற்றிய அறிஞனே!
செந்தலையார் குறிப்பிட்டது போன்று, தமிழின் அடையாளமாகத் திகழ்ந்த செவ்வியரே!
தமிழ்காத்த கேடயமே! தமிழ்ப்பகை அஞ்சி ஒடுங்க வைத்த வாளே!
கழகக்காலப் பாவலரை ஒத்த பாவலரே!
ஒருதனிச் சிறப்புமிக்க மொழிபெயர்ப்பாளரே!
தன்னேரில் கட்டுரைகளால், தெள்ளிய தெளிதமிழ் ஆசிரிய உரைகளால் தமிழ்ப்பகை அரசைச் சம்மட்டி அடியாய்த் தாக்கி இடித்துரைத்த எழுத்தாண்மையரே!
தமிழ்காக்கத் தாவி நின்ற கால்களே!
தமிழ்ப் பகைக் கெதிராய்ப் புடைத்தெழும் தோள்களே!
எழுத்து பேச்சோடு நில்லாமல் களத்தில் முகத்து நின்ற போராளியே!
இந்திய இலக்கிய அமைப்பு இருமுறை தந்த பரிசெல்லாம் உங்களைச் சரியாக மதிப்பிட்டுவிடவில்லை!
இதோ, உங்களை அறிந்த எங்கள் உள்ளம் கலங்கித் தவித்துக் கண்ணீர் விடுகிறதே அங்கேதான் உள்ளது உங்கள் மதிப்பு!
எல்லா நிலைகளிலும் தமிழும் தமிழரும் தமிழ்நிலமும் தாக்குதலுக் குள்ளாகியுள்ள நிலையில், ஏன் ஐயா பிரிந்து சென்றீர்கள்?
உங்களை நினைவில் நிறுத்தி, நீங்கள் பாராட்டிப் போற்றிய பாவலரேறுவை நினைவில் நிறுத்தி, தமிழ் இளைஞர் போராடுவர்!
தமிழ் மீட்க, தமிழர் நலன் மீட்க, தமிழ் நிலத்தை மீட்க எத்தகைய ஈகத்துக்கும் அணியமாகித் தமிழிளைஞர் போராடுவர்!
வெற்றி காண்பர்! போய்வாருங்கள் ஐயா!
நன்றி! அன்பன், தமிழநம்பி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக