உரைவேந்தர் ஒளவை.துரைசாமியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உரைவேந்தர் ஒளவை.துரைசாமியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 14 மார்ச், 2016

வடமொழியாளர் தமிழுக்கும் தமிழர்க்கும் இழைத்த கெடும்புகள்!                                                                                                 - உரைவேந்தர் ஒளவை.துரைசாமியார் விளக்குகிறார்!


     வடமொழியாளர், தமிழர் ஊர்ப்பெயர், மக்கட்பெயரை வடமொழியில் மொழிபெயர்த்து அவர்களுடையதாகத் தோன்றுமாறு செய்து கொள்ளும் தீச்செயலையே  பல நூற்றாண்டுகளாகச்செய்து வந்தமையின், பிற்காலத்தே வாழ்வில் அமைதி தோன்றியதும் மக்கள் தங்கள் நூல்களை எழுதத் தொடங்கியபோது வடமொழியிலிருந்து பெறவேண்டிய நிலைமை தோன்றியது. அப்போது தமிழ்நாட்டுத் தமிழர் ஊர்க்குரிய வரலாற்றை வேறு எவரோ எந்த நாட்டிலோ கூறியதாக வரலாறுகள் வேறுபடலாயின.
    
            இசையும், கூத்தும், சமயக்கருத்தும் பிறவும் பழம்பெயர் மறந்து போக, வடமொழிப் பெயரால் வெளிவரலாயின. பின் வந்தோர், உண்மை உணரமாட்டாமல் எல்லாம் வடமொழியிலே உள்ளன; தமிழ்மொழியே வடமொழியிலிருந்து தோன்றியதுதான் என்று கூறலுற்றனர்.
    
            வேள்வி செயதோர்க்கும் செய்வித்தோர்க்கும் பண்டை நாளில் வேந்தரும் செல்வரும் காமக்காணி என்று சிறப்புப் பெயர் நல்குவது வழக்கம். இடைக்கால கல்வெட்டுக்கள் மிகப்பல இதனைக் கூறுகின்றன. இவ்வாறு சிறப்புப்பெயர் பெற்ற சான்றோர் ஒருவர் சங்க இலக்கியத்தில் வருகிறார். அவர் பெயரை ஏட்டில் எழுதினோர் காமக்கணி என்று எழுதிவிட்டனர்.
            அதைக் கண்ட இக்கால அறிஞர், அது காமாட்சி என்பதன் மொழிபெயர்ப்பு என்று எழுதி யொழிந்தார். காஞ்சிபுரத்திலுள்ள காமக்கோட்டத்துக் காமாட்சிக்கு அப்பெயர் மிகவும் பிற்காலத்தே உண்டானது என்பது வரலாறு கூறும் உண்மை.
    
            இவ்வண்ணமே, கோயில்களில் இறைவன்முன் சொல்லப்படும் அருச்சனைகள் பல திருமுறைகளிலும் பிரபந்தங்களிலும் காணப்படும் சிறப்புப் பெயர்களின் மொழி பெயர்ப்பாகவே உள்ளன.
    
            இதனால் விளைந்த பயன் என்னை யெனில், சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கப பகுதியிலும் இருந்து பள்ளி மாணவர் பாட நூல்களுக்கு உரை எழுதினோரும் பிறரும் பின்விளைவு கருதாமல், தமிழில் வழங்கும் மணி, நீர், முத்து, சேரி, மீன், பழம் முதலிய யாவும் வடமொழித் திரிபுகள் என்றே எழுதினார்கள்.
    
            உலகில் அறவாழ்விற் சிறந்த சான்றோர்களைத் தமிழர் கடவுளர் என்பர். அப்பெயரைத் தெய்வமாகவும் ரிசிகளாகவும் மொழிபெயர்த்து அவர்கள் வரலாற்றுள் பலவற்றைத் தெயவச் செயல்களாக உரைக்கத்தொடங்கினர்.
    
            சாதி சமுதாய வேற்றுமைகள் நிலைபெறுதற் கேற்ப்ப் புராணங்கள்  பல வடமொழி வாயிலாகத் தோன்றின. தமிழ் மொழியிற் காணப்படும் பொருளுரைகளும் யாவும் வட நூல்களிலிருந்தே தோன்றின என்னும் கருத்து நாட்டவர் தெரியவும் மேனாட்டவரும் பிறரும் தமிழர்க்கெனத் தனித்த அறிவோ, பண்பாடோ, சமய ஒழுக்கமோ இல்லையென உணரவும் உரைத்தனர்; நூல்வடிவில் எழுதியும் வந்தனர்.
    
            ஆங்கில அறிவும் அதன் வாயிலாக வடநூல் கருத்துக்களும் வரலாற்றுண்மைகளும் தமிழ் மக்கன்குத் தெரியவந்தன. அதனால் தமிழர்கட்கு வடமொழிபால் வெறுப்பு உண்டாயிற்று.இவ்வெறுப்பு வளர்தற்கேற்ப, மேனாட்டவரும் தமிழரல்லாத பிறரும் இரு மொழியும் பயின்று பெற்ற அறிவால், வடமொழியில் உள்ள வரலாறு பலவும் புளுகுக் குப்பைகள் (‘A farrago of  legendary nonsense’ – W.Logan’s Malabar) என்று திட்டவட்டமாகக் கூறுவாராயினர்.
     இதற்கிடையே நல்லகாலமாக மொழிநூல் நெறி (PHILOLOGY) பொய்யான கருத்துக்களை மறுத்துவிட்டது உண்மை ஒளிவிட்டுத் திகழ்வதாயிற்று.                                               


- ‘தமிழ்ப்பொழில்’ 32ஆம் துணர், மார்ச்சு 1957.
நன்றி! உரைவேந்தர் தமிழ்த்தொகை 23, பக்கம் 172, 173. 
-------------------------------------------------------