சனி, 30 ஜனவரி, 2010

விழுப்புரத்தில் வீரவணக்கப் பொதுக்கூட்டம்




            விழுப்புரத்தில் முத்துக்குமாருக்கு வீரவணக்கப் பொதுக்கூட்டம் 30-01-2010 காரி(சனி)க்கிழமை மாலை 06-30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
           
            விழுப்புரம் அஞ்சலகத்திற்கு அருகில் பெரியார் சிலைப் பக்கத்தில் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு திரு. சோதி நரசிம்மன் தலைமை ஏற்றார்.
*
            தொடக்கத்தில், வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கும், ஈழமக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வற்புறுத்தித் தீக்குளித்து உயிர்நீத்த மற்ற ஈகிகளுக்கும் ஈகச்சுடர் ஏற்றிப் பெண்கள் வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து பலரும் மெழுகுத்திரி ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
*
            அதன்பின், சோதிநரசிம்மனும் இன்னொரு தோழரும் உரையாடல் வழியாகத் தமிழ் மொழி அழிப்பு, தமிழர் நிலம் பறிப்பு ஈழத்தமிழர் படுகொலைகள், தமிழக மீனவர் சிங்களக் கடற்படையிரால் தாக்கப்பட்டுக் கொல்லப்படுதல் ஆகியவற்றை விளக்கினர். இடையிடையே இசைக்குழுவினர் விளக்கம் தரும் பாடல்களைப் பாடினர்.
*
            சொற்பொழிவாளர்கள் எழில். இளங்கோவும் திருச்சி வேலுச்சாமியும் ஈழத்தமிழருக்குத் துணையிருக்க வேண்டுமெனவும் இந்திய அரசும் தமிழக அரசும் ஈழத்தமிழருக்கு எதிரான போக்கைக் கைவிட வேண்டுமெனவும் விளக்கிப் பேசினர்.
*
            பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இரவு பத்துமணி அளவில் திரு. கொ.ப.சிவராமன் நன்றியுரையுடன் கூட்டம் முடிவுற்றது.

------------------------------------------------------------------------------------------------------------

*

செவ்வாய், 26 ஜனவரி, 2010

இழிவொடு யாமுறைகின்றோம்!

*                    (எழுசீர் மண்டிலம்) * 

மக்களின் நெஞ்சில் நிலைத்தனை நீயே!
          மாநிலம் பாடுமுன் புகழே! 
குக்கலை இங்கே ஆட்சியில் அமர்த்திக் 
          குறுகினம் இரண்டகம் கண்டே! 
அக்கரைப் பேயித் தாலியை விட்டே 
          அழிவினைக் கிங்குவந் ததுவே! 
இக்கண முயிரோ டுள்ளையோ யிலையோ 
          இழிவொடு யாமுறை கின்றோம்! 

--------------------------------------------------------------------------
\

புதன், 13 ஜனவரி, 2010

ஈராயிர மாண்டில் வாராது வந்தவனே!

(எழுசீர் ம(எழுசீர் மண்டிலம்) 

செந்தமி ழினமீ ராயிர மாண்டில்  
    செறிந்தெழ வந்தவெந் தலைவா!
இந்தநாள் ஈடில் மறவநீ உளதும்  
    இலாததும் அறிந்திட ஒல்லேம்!
உந்திடு முணர்வில் ஒடுக்கலை எதிர்ப்போம்; - 
    உறுபகை இரண்டகம் சாய்ப்போம்!
சொந்தமே! உயிரில் தோய்ந்தநல் லுறவே!  
    சூளென உரைத்தனம் ஐயா! 

---------------------------------------------------------------------------------