புதன், 28 அக்டோபர், 2015

புதுவை நல்லன்பர் ‘திருநாவு’ என்னும் திருநாவுக்கரசு ஐயா

புதுவை நல்லன்பர் திருநாவு என்னும் திருநாவுக்கரசு ஐயா நினைவுநாள் அக்தோபர் 27ஆம் நாள் ஆகும். அவர் மறைவின் போது  நடைபெற்ற இரங்கல் நிகழ்வில் படித்த பா இது:
          -----------------
     
கேட்டா ரதிரக் கிளையர் செயலறக்
கோட்டியாய் மற்றவர் குழுமிக் குமுற
தனித்தமிழ்க் கழகத் தனிச்சிறப் பாளர்
நனிநற் பண்பின் இனிய ரொப்பிலா
திருநா விறந்த செய்தி வந்ததே!
உருகினர் ஏங்கினர் உற்றார் தவித்தனர்!
ஆற்றல் சான்றவர் அருளுள் ளத்தர்
ஆற்றிடு அருவினை அறிவியா துதவுநர்!
இன்னோர்க் கென்னாது எல்லார்க்கு முதவிய
செந்நோக் கினரச் சிறப்புறு செம்மல்!
இன்னின் னார்க்கே இன்னலென் றறிந்தே
இன்முகத் தோடவர் எழுவா ருதவ!
எந்நே ரத்திலும் எவர்க்கும் உதவ
முந்தி முனையும் முனைப்பினர் உண்மை!
நட்பினர் குடும்ப நல்லது கெட்டதில்
நுட்பமாய் அறிந்தே ஒட்பத் துதவுநர்! 
எதிர்பா ராத இடுக்கண் எழுகையில்
மதிநுட் போடிவர் மாற்றிய கதைபல!
எவருரைப் பாரோ, இவரறிந் திடுவார்
கவலறுத் திடவே கடியவந் திடுவார்!
செந்தமிழ் நிகழ்வில் முந்தி நின்றிவர்
வந்து கனிந்து வருகவென் றழைக்கும்
ஒப்பருங் காட்சி உளத்தில் நிலைக்கும்!
செப்பருஞ் சிறப்பின் சீருக் குரியவர்!
ஆசாகு அய்யா தேசிகன் உயிரை
கூசாது நேர்ச்சி கொள்ளை கொண்டதே!
இழப்பு, இழப்பு, இழப்புபே ரிழப்பே!
உழப்புற லகற்றியவ் வுயர்ந்தோர்
சிறப்புறு செயல்கள் சிந்தையில் கொள்வமே!


----------------------------------------------