புதன், 29 மார்ச், 2017

ஆட்சியாளரின் நேர்மை, ஒழுங்கு, நாணயக் கேடு!



ஆட்சியாளரின் நேர்மை, ஒழுங்கு, நாணயக் கேடு!
--------------------------------------------------------------------------------------------------------------

இந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய இயலாதவர்கள், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் அவற்றை டெபாசிட் செய்து கொள்ளலாம். அப்போது அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய காரணந்நைக் குறிப்பிட்டு, அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்
     -(தலைமைஅமைச்சர் மோடி அறிவிப்பு குறித்து) தினமணி       9-11-2016 காலை 04-32 பதிப்பில் வந்த செய்தி.
 
இந்தியர்கள் திசம்பர் 16-க்குப் பிறகு ரூ500, 1000 தாள்களை மாற்ற முடியாது. அயல்நாடுவாழ் இந்தியர் மட்டுமே 31 மார்ச்சு 2017 வரை மாற்றலாம்!
    - இந்திய ஏம வைப்பகம் (Reserve Bank pf India) செய்தி. 

பழைய ரூ500, 1000 தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம்.
    - இந்திய நடுவண் அரசுச் செய்தி.


மக்கள் விரும்பாத, மக்களுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் நடுவண் அரசு செயல்படுத்தாது!  - நெடுவாசல் போராளிகளுக்கு பொன்.இராதா.    உறுதி



ஒப்பந்தம் கையெழுத்தான திட்டத்தை நிறுத்த முடியாது. ஊர் மக்களுக்கு விளக்கம்  கூறிவிட்டு திட்டம் நிறைவேற்றப்படும்.
                         - இந்திய அரசு அமைச்சர்.
-------------------------------------------------------------------------

வெள்ளி, 24 மார்ச், 2017

நம் மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி!



நம் மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி!
---------------------------------------

தனித்தமிழ் அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார், தூயதமிழ் இலக்கியத் திங்களிதழாகிய தென்மொழி இதழின் நிறுவுநர்; ஆசிரியர் ஆவார்.


பாவலரேறுவின் தென்மொழி தமிழ் காக்கும் கேடயமாகவும், தமிழ்ப் பகைவர் அஞ்சும் படைக்கலனாகவும் திகழ்ந்தது.
அவ்விதழின் ஆசிரியவுரை (தலையங்கம்) பெரும்பாலும் முதல் பக்கத்தில் இடம் பெறும். ஆசிரியவுரைக்கும் முன்னால் மேல் முகப்புப் பகுதியில் கீழ்க்காணும் பாடல் ஒவ்வொரு இதழிலும் இடம்பெறும்.

கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!

தென்மொழி சுவடி: 12; ஓலை: 1., தி.பி.2005, துலை (ஐப்பசி) (அக்.-நவ.-1974) இதழ் முதல் ஒவ்வொரு மாத இதழிலும் மேற்குறித்த பாடலின் கீழ், ஆசிரியவுரைக்கும் முன்னர் கீழ்க்காணும் செய்தி ஒரு நீள் சதுரக் கட்டத்திற்குள் தவறாது இடம் பெற்றது. அவருக்குப் பின்னரும் இப்பொழுதும் இடம் பெற்று வருகிறது.

     நம் மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி!

இந்தியா ஒன்றாக இருக்கும்வரை இந்து மதம் இருக்கும். இந்து மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களைவிட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களைவிட்டு விலகாதவரை, ஆரியப்பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது.. அத்தகைய பார்ப்பனீயப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை, தமிழ்மொழி தூய்மையுறாது; தமிழினம் தலை தூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே, இந்து மதத்தினின்றும், மதப் பூசல்களினின்றும், ஆரியப் பார்ப்பனீயத்தினின்றும் விடுபட வேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே, தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.
************************************************************************       .

புதன், 22 மார்ச், 2017

நல்லவர்போல் நயன்மையர்போல் முகமூடியணிந்தோர்!




நல்லவர்போல் நயன்மையர்போல் முகமூடியணிந்தோர்!
-----------------------------------------------------------------------------------------------------------

ஒழியா ஒடுக்குமுறைக் கொடுமையிலிருந்து விடுபட முயன்றோரை ஒழித்துக்கட்ட உலகிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று சேர்ந்தன!

மாந்த உணர்வே அற்ற மாந்த உருவின னொருவனின் வெறிபிடித்த தலைமையின் கீழ் இயங்கிய வெறிப்படை ஏறத்தாழ ஒன்றரை இலக்கம் தமிழர்களைக் கொன்று குவித்தது!


 

                                 உயிர்மட்டும் எஞ்சிய தமிழர் எண்ணற்றோர் உறுப்பிழந்தும், உறவிழந்தும், வாழ்விழந்தும் வதங்கி உழல்கின்றனர்!

இக் கொடுங் கொடிய கொடுமைகள் நிகழ்ந்து பத்தாண்டுகள் முடிய இருக்கின்றன!

நடுவு நிலையாளர் நல்லுளத்தர் சிலர் நடந்த கொடுமைகளை உசாவி (விசாரித்து) உலகுக் கறிவித்து இனி எங்கும் அத்தகு கொடுமைகள் நிகழாது தடுக்கவும் கொடுமைக் குள்ளானோர் வாழ்க்கைக்கு உறுதி தரவும் பெருமுயற்சி எடுத்தனர்!

தன்னல நோக்கே தம் நோக்காகக் கொண்ட மாந்த நேயமற்ற வளர்ந்த வளராத வல்லாளுமை அரசைக் கொண்ட நாடுகள், கொடியவர்க்கே வெட்கமின்றி நாணமின்றி உதவும் போக்கினராயுள்ளனர்!

கொடுமைகள் நடந்தேறிப் பத்தாண்டுகள் முடியும் நிலையிலும் கொடுமை புரிந்தோர், காரணமானோர், துணை போனோர் பற்றியும், கொடுமைக் காளானோர், காணாமல் ஆக்கப்பட்டோர், சிறைக்கொடுமையில் இன்னும்கூட சொல்லொணாத் துன்புறுவோர் பற்றியும் சிங்கள இனவெறி அரசுகள் எந்த முடிவையும் எடுக்க முன்வரவில்லை!

இன்னும் இரண்டாண்டு காலம் வேண்டுமாம்! ஏய்க்க! அதற்கு ஏதுங்கெட்ட இந்தியா உள்ளிட்ட நாணமற்ற வெட்கமற்ற நாடுகள் ஆமாம் போடுமாம்!

உலகத்து ஒன்றிய நாடுகள் அவை, உரிமைக்குழு உசாவல் முடிவு வேறு எப்படி இருக்கும்? மாந்தநேயமற்ற, தன்னலமே நோக்காயுள்ள நாடுகளே பெரும்பான்மை உறுப்பாண்மை பெற்றிருக்கையில்!

தூ! அறங்கொல்லத் துணைபோகும் இந்த அமைப்புகளின் கீழ்மை, என்னே! என்னே!

நல்லவர்போல், நயன்மையர்போல் முகமூடியணிந்து நல்லறம் தீய்க்கும் தீயர் திருந்தும் நாள் வரவே வராதா?
----------------------------------------------------------------------


புதன், 15 மார்ச், 2017

மாலனின் மனக்கோணல் கக்கும் நச்சுக் கருத்துக்கள்!



மாலனின் மனக்கோணல் கக்கும் நச்சுக் கருத்துக்கள்!
-------------------------------------------------------------- 
13-3-2017 தினமணி நாளிதழ் நடுப்பக்கத்தில் உத்திரப்பிரதேசம் சொல்லும் செய்தி கேட்கிறதா? என்ற தலைப்பில் மாலன் என்ற பெயரில் இடம்பெற்றுள்ள கட்டுரை தமிழ், தமிழினத்துக் கெதிராக மறைமுகமாக நச்சுக்கருத்துக்களை உமிழ்ந்துள்ளது எனில் சற்றும் மிகையில்லை!



உத்திரப்பிரதேசத்தில் பா.ச.க. 403 இடங்களில் 312இல் வெற்றி பெற்றுவிட்டதாம்!

இதை வைத்து இவர் கூறுகிறார்...

அமெரிக்க வெள்ளை இனத்தவர், சிங்கப்பூரில் சீனர், இலங்கையில் சிங்களர், மலேசியாவில் மலேயாக்காரர் பெரும்பான்மையினர் நிறத்தாலோ மொழியாலோ பண்பாட்டாலோ தனியாக பொது அடையாளம் சூட்டப்பட்டு அதை விரும்பி ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம்.



அதாவது, தனித்தனி மொழி, இனம், வரலாறு, பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம் போன்றவற்றைக் கைவிட்டுவிட்டுப் பெரும்பான்மையினரின் மொழி, இனம், பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கத்தை விரும்பி ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம்! 

தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? உலகோடு ஒட்ட ஒழுகுமா? ஒதுங்கித் தனித்துப்போகுமா? என்று கவலைப்பட்டுக் கொள்கிறார்!



இந்து மதவெறிக் கூட்டத்திற்கு, அக்கூட்டத்தின் பலவகைப்பட்ட வெளிப்படையான, முக்காடுபோட்ட, ஒப்பனை செய்யப்பட்ட முகங்களுக்கும் உள்ளங்களுக்கும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றாலே பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு வசதியின்மையின் எரிச்சல் பாடாய்ப் படுத்துபகிறது!



இந்து மதவெறியை எதிர்க்கிறார்கள்!

சமற்கிருதத் திணிப்பை எதிர்க்கிறார்கள்!

இந்ந்தித் திணிப்பை எதிர்க்கிறார்கள்!



தங்கள் பண்பாட்டு அடையாளங்களை விட்டுக்கொடுக்காமல் போராடுகிறார்கள்!



கீதையைப் போற்றமாடேன் எனகிறார்கள்! திருக்குறளை தலைமேல் வைத்துக்கொண்டாடுகிறார்கள்!



தமிழ்நாட்டின் வளத்தைச் சுரண்டவும், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான பகுதிகளைப் பாலையாக்கிப் பாழாக்கிச் சுடுகாடாக்கத் தியாகம் செய்ய மறுக்கிறார்கள்!  



மருத்துவமனை அமைக்கத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதற்கும் அணுஉலைகளை அடுக்கடுக்காய் அமைப்பதையும் கூட எதிர்க்கிறார்கள்!



வரலாற்றில் பலகாலமாக உரிமையோடிருந்த பல்வேறு ஆற்றுநீர் உரிமைகளை விடமாட்டேன் எனகிறார்கள்!



இன்னும் இதைப்போன்றே பெரும்பான்மையானவற்றில் வடவரின் விருப்பங்களுக்கு எதிராக இருக்கின்றார்கள்!  



எனவே, இவர்களை அடையாளம் தெரியாமல் அழித்தொழித்துவிட வேண்டும்!

மொழி, இனம், வரலாறு, பண்பாடு, நாகரிகம் என்ற கூறுகளையெல்லாம் அழித்துவிட்டு வடநாட்டாராக்கி அடியோடு தமிழர்கள் என்ற அடையாளமே இல்லாதாக்கிவிடவேண்டும் - என்று மிகமிக முனைப்பில் இருக்கிறார்கள் என்ற நிலையின் வெளிப்பாடே இந்தத் தினமணி கட்டுரையின் நச்சுக் கருத்தாகும்!



உ.பி.யில் 2014-இல் 42.6% ஒப்போலை பெற்ற கட்சி, 2017 ச.ம தேர்தலில் 39.6% ஒப்போலை பெற்றுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இந்த நிலையிலேயே தலைகால் தெரியாது ஆடுகிறார்ர்கள்!



இவர்கள் உலக நிலையைப்பற்றிக் கூறும் கருத்துக்களில் உண்மையின் விழுக்காட்டு அளவும் இரங்கத்தக்கதே!



இக்கால், விழிப்புற்றிருக்கும் தமிழ் இளையோர் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்!

இந்தத் தமிழினம் பெரு நெருக்கடியில் உள்ள நிலையைப் புரிந்து அறிவாற்றலோடு செயலாற்றவேண்டும்!

---------------------------------------------------------------------



 

வெள்ளி, 3 மார்ச், 2017

'நெடுவாசல் போராட்டம்' - பாட்டரங்கப் பாட்டு!



நீரியக்கரியம் (Hydrocarbon) எடுக்கும் திட்டத்திற்காக வேளாண் நிலங்கள் அழிக்கப்படுவதை எதிர்த்து, நெடுவாசல் உழவர்களின் போராட்டத்திற்குத் துணைதரும் வகையில், விழுப்புரம் தமிழ் இலக்கிய அமைப்புகள் திருவள்ளுவர் சிலையருகில் 3-3-2017 வெள்ளி மாலை 5-00 மணியளவில் நடத்திய பாட்டரங்கில் தநத பாட்டு:
--------------------------------------------------------------------------

அன்பார்ந்த பெரியோரே, அறிவார்ந்த இளையோரே அன்பின் ஊற்றாய்
நின்றுதிகழ் தாய்மாரே, நெஞ்சார்ந்த நல்வணக்கம்! நெருங்கி வாரீர்!
இன்றிங்கு எடுத்துரைக்கும் இந்தியத்தை ஆள்வோர்செய் இழிவைக் கேட்பீர்!
என்றென்றும் தமிழர்க்கே எதிராக இயங்குகின்ற இயல்பைச் சொல்வோம்!

இந்திமொழி திணித்திடுவார்! இறந்தசமற் கிருத்த்தை எழுப்பு தற்கே
முந்திவந்து பலகோடி முக்காலும் செலவிடுவார், முழுதும் தோற்பார்!
நந்தமிழர் நலங்கெடுக்க நாளெல்லாம் எண்ணிடுவார்! நமைய ழிக்க
வந்திடுமிங் கணுவுலைகள் வாழ்வழிக்கும் ஆய்வுகளும்! வழக்கம் ஈதே!

ஈரவளி மீத்தேனை எடுப்பதைநாம் எதிர்த்திட்டோம் என்ப தாலே
ஊரறியா வேறுபெயர் உரைத்துவளம் உறிஞ்சிடவே ஒளிந்தே வந்தார்!
பேரதுவும் வேறெனினும் பெருங்கேடாய் நெடுவாசல் பிழைப்ப ழித்தும்
சீரழித்தும் வேளாண்மை செய்யவொணா நிலைக்காக்கிச் செல்ல வந்தார்!

பாரிலுள பிறநாட்டார் பாலைநிலம் கடலடியில் பார்க்கும் வேலை!
ஆரப்பல் லாயிரமாம் அடியாழம் வேதிகளை அனுப்பி வைப்பார்!
வேரான வளத்தையெலாம் விரைந்துறிஞ்சி நிலங்கெடுத்து விட்டே போவார்!         
நீரெல்லாம் அற்றுப்போம்! நிலஞ்சரியும்! சூழலெலாம் நிலைகெட் டுப்போம்!

இந்தத்தீச் செயலெதிர்க்கும் எம்மவரைத் தியாகஞ்செய் என்னும் சொல்லும்
எந்தவகை யும்பொருந்தா தெமக்குரைக்கும் தேசப்பற் றென்னும் சொல்லும்
இந்தியவாட் சியர்நம்மை ஏமாற்றி முதலாளிக் கேற்றம் செய்யத்
தந்திரமாய்க் கூறுகின்ற தகுதிகெட்ட சொல்லென்றே தகைமை தேர்வோம்!

எங்கள்கச் சத்தீவை யாமறியா தெடுத்தளிப்பீர் இலங்கை யர்க்கே!
எங்கள்பண் பாடுகலைக் கெதிராகச் செயற்படுவீர்1 இப்போ திங்கே
எங்கள்மண் வளங்கெடுக்க ஏதோபேர் மாற்றிகுழாய் இறக்கு கின்றீர்!
எங்கள்வாழ் வழிப்பதற்கோ இந்தியத்தில் இணைத்தீர்கள்! ஏய்க்கின் றீர்கள்!

எம்மினத்தைக் கொன்றழிக்க எதிரிக்கே துணைநின்றீர்! இன்றோ எங்கள்
செம்மைசேர் வளநிலத்தை செய்தொழிலை அழித்தொழிக்கச் சிந்தை கொண்டீர்!
அம்மவோ! வல்லாண்மை அரசினரே! அழிப்புவினை அடங்கா தென்றால்
உம்முறவை அறுத்தெறிவோம்! உரிமைதமிழ் நாடமைக்க உறுதி கொள்வோம்!

இருநிலைகள் கொண்டியங்கும் இந்தியமே இந்நிலையே இனிதொ டர்ந்தால்    
வெருவந்த செய்தொழுகும் வெங்கோலர் ஆட்சியினை வீழ்த்தி யிங்கே
தெருவெல்லாம் ஊரெல்லாம் தெளிவாக அறிவிப்போம், தீந்த மிழ்நா(டு)
ஒருதனிநா டாகுமென ஓங்குமுழக் கெழுப்பிடுவோம்! உழைப்போம் என்றே!

வாய்ப்புக்கு நன்றி!                        
  ----------------------------------------------------------------------------------------------------------