தெய்வங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெய்வங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஜூலை, 2009

தெய்வங்கள் தந்த விடை!




          ‘இரட்டைப் புலவர்கள்என்று அழைக்கப் பட்டவர்கள் இரண்டு அறிவார்ந்த பாவலர்களாவர். அவர்களில் ஒருவர் கால் முடமானவர்; இன்னொருவர் கண் பார்வை இல்லாதவர். கண்பார்வை இல்லாதவர் முடமானவரைத் தோளில் சுமந்து செல்வாராம். முடமானவர், பார்வையற்றவரின் தோளில் அமர்ந்தபடியே வழிசொல்லிச் செல்வாராம்!

          இந்த இரு பாவலர்களும் சரியான நகைச்சுவைக் குறும்பர்கள்! இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தே பாடலைப் பாடுவார்கள் இயற்றுவார்கள்! இவர்கள் பாடல் வெணபாவாக இருக்கும். இவர்களின் வெண்பா மிக எளிமையாக அமைந்திருக்கும். பாடல் எளிதில் விளங்கும். அகராதியின் துணை தேடவேண்டிய தேவையே இருக்காது.

          (வெண்பா நான்கடிப்பாடல் என்பது பலரும் அறிந்ததே. முதல் மூன்றடிகள் நான்கு சீர்களும் நான்காம்அடி மூன்று சீர்களும் உடையதாக இருக்கும். நேரிசை வெண்பா என்றால் இரண்டாம் அடியின் மூன்றாம் சீருக்கும் நான்காம் சீருக்கும் இடையில் சிறு கோடு இருக்கும்; அவ்வாறு வரும் அந்த நான்காம் சீரைத் தனிச்சீர் என்பார்கள்.)

          இரட்டைப் புலவர்கள், ஏதாவது ஒரு செய்தியைப் பற்றியோ, ஆளைப் பற்றியோ, காட்சியைப் பற்றியோ, நிகழ்ச்சியைப் பற்றியோ அவர்களுக்கே உரிய குறும்புத் தனத்துடன் பாடுவார்கள். இருவருள் ஒருவர் முதலில், வெண்பாவின் (முதல் ஏழுசீர் அல்லது எட்டுச்சீர் கொண்ட) முதல் இரண்டடிகளைப் பாடுவார். பெரும்பாலும் அந்த இரண்டடிகளும் கேள்வி கேட்பது போலவோ, ஐயமாக வினவுவது போலவோ இருக்கும்.

          தொடர்ந்து இரண்டாமவர், அடுத்த (எட்டு அல்லது ஏழுசீர் கொண்ட) எஞ்சிய இரண்டடிகளைப் பாடுவார். இரண்டாவதாகப் பாடுகின்றவர், முதலில் பாடியவரின் கேள்விக்கு விடையளிக்கும் வகையிலோ அல்லது அவர் எழுப்பிய ஐயத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையிலோ கருத்தமைத்துப் பாடுவார்.

          இவ்வாறு அவர்களால் பாடப்படும் வெண்பா, மிக நகைச்சுவை யோடும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் அமைந்து கேட்போரைச் சுவைத்து மகிழவும் ஆழச் சிந்திக்கவும் வைக்கும்.

          ஒருமுறை, நம் இரட்டைப் புலவர்கள், ஈழத்தில் நிகழ்ந்தது போன்ற ஏதோ பெரும் பேரழிவையோ, அறங்கொன்ற கொடுங் கொடுமையையோ அறிந்திருக்கிறார்கள். மனம் ஆறாத நிலையில், அவர்கள் அப்போதிருந்த உணர்வுநிலையில், தெய்வங்களை நோக்கிக் கேள்வி கேட்பது போலவும்,  அதற்குத் தெய்வங்கள் விடையளிப்பது போலவும் பாடிய ஒரு சுவைமிக்க பாடலை இப்போது பார்ப்போம்.

          முதலில் ஒருவர் பாடிய இரண்டடிகள்: 
கேட்ட வரமளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள்
கூட்டோடே எங்கே குடிபோனீர் ?”
           இந்த இரண்டடிகளின் பொருள் நமக்கு எளிதில் புரிகிறது. கீர்த்தி என்றால் மிகுந்த புகழ். மிகுந்த புகழை உடைய, கேட்ட வரத்தை அளிக்கும் ஆற்றல் மிக்க தெய்வங்களே! இங்கிருந்து நீங்கி, எல்லோருமாக எங்கே போய்க் குடியேறி விட்டீர்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார். 

          இதற்கு விடையளிக்கும் வகையில் இரட்டைப் புலவர்களில் இரண்டாமவர் பாடிய பகுதி இதுதான்: . .
__________________________           _- பாட்டாய்க்கேள்! செல்கால மெல்லாம் செலுத்தினோம் அல்காலம்
கல்லானோம் செம்பானோம் காண். 

    இந்த அடிகளின் பொருளைப்புரிந்து கொள்வதும் எளிதே! பாடுகின்றவனே! உன் கேள்விக்கு விடை கூறுகிறேன் கேட்டுக்கொள்! எங்கள் ஆற்றல் செல்லுபடியாகின்ற காலமெல்லாம் ஆளுமையை, அதிகாரத்தைச் செலுத்தினாம்! இப்போது இருளான கெட்டகாலம்; எங்கள் ஆற்றலெல்லாம் இழந்து, கல்லாலும் செம்பாலும் செய்த சிலைகளாகி விட்டதைப் பார்த்திடுக!” - என்று தெய்வங்கள் முதலில் பாடிய பாவலருக்கு விடையளிப்பதாகக் கருத்தமைத்து, இரண்டாமவர் பாடிவிட்டார்.

    முழுப் பாடலையும் இப்போது பார்ப்போம்:
கேட்ட வரமளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள்
கூட்டோடே எங்கே குடிபோனீர்? - பாட்டாய்க்கேள்!
செல்கால மெல்லாம் செலுத்தினோம் அல்காலம்
கல்லானோம் செம்பானோம் காண். 
   
    இரட்டைப் புலவர்களின் பாடல் எப்படி உள்ளது? ஈழக் கொடுமைகளை அடிப்படையாகக் கொண்டுத் தெயவங்களை நோக்கி வினா எழுப்பி, விடை கூறியவாறு இக்காலத்தில் தோன்றுகிறது அல்லவா?

---------------------------------------------------------