ஊர் வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊர் வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஜனவரி, 2017

‘நல்லாண்பிள்ளை பெற்றாள் வரலாற்றுக் கட்டுரை’ – நூல் அறிமுகமும் அலசலும்!.



 நல்லாண்பிள்ளை பெற்றாள் வரலாற்றுக் கட்டுரை நூல் அறிமுகமும் அலசலும்!.
 --------------------------------------------------------------
                      
               ஒரு நாட்டின் வரலாறு, அந்நாட்டின் மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அங்கு வாழும் மக்களுக்கு வரலாறு தெரியாவிட்டால், அவர்களின் மூதாதையர் பற்றிய அறிதல் இல்லாவிட்டால், அம்மக்கள் எந்த அடையாளமும் இல்லாதவர்களாவர்.
     பிற்காலத்தில் வலிமை மிக்க மக்களினத்தோடு வாழ நேர்கையிலும், வல்லதிகாரம் செலுத்தும் ஆட்சியின் கீழ் வாழவேண்டி நிலையிலும் தாம் வந்த குடிமரபுக்குரிய பழக்க வழக்கங்கள் பண்பாடு நாகரிகமெல்லாம் இழக்க நேரிடும். தம் தாய்மொழியை இலக்கியச் சிறப்புகளை எல்லாம் இழக்க நேரிடும். தம் மூதாதையரின் அன்பு, அறிவு, புகழ், வீரம், காதல், கொடை போன்ற பல சிறப்புமிக்க நிலைகளையும் தம் உண்மையான அடையாளத்தையும் அறிய முடியாமற் போகும். தம் தனித்தன்மை இழந்து, முழுவதும் பிற மக்களின் பழக்க வழக்கங்கள் பண்பாடு நாகரிகத்திற்கு மாறிப்போக வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எந்த ஒரு நாட்டின் வரலாறும் ஆவணப்படுத்தப் படவேண்டியது இன்றியமையாத பணியாகும்.

     அவ்வாறே, ஒவ்வொரு ஊரின் வரலாறும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதைப் பிற்கால மக்கள் அறிய வேண்டும். அதன்வழி நல்லது கெட்டது அறிந்து, நல்லவற்றை எண்ணிப் பெருமை கொண்டு அதன்வழி தொடரவும், மேலும் நல்லவற்றை நாடி செயற்படவும், தீயது ஏதேனும் இருப்பின் தவிர்க்கவும் பிற்கால மக்களுக்கு இயலும். எப்படியெல்லாம் நம் முன்னோர் இந்த ஊரை உருவாக்கி வளர்த்தெடுத்து முன்னேற்றி இருக்கிறார்கள் என்பதை அறிந்து மேலும் நாம் ஊரின் முன்னேற்றத்திற்கு எதை எதை எவ்வெவ்வாறு செய்யலாமென்ற ஊக்கம் பெற முடியம்.
     ஊரின் வரலாற்றை ஆவணப்படுத்துவதும், அதைப் படித்து உணர்ந்து மகிழ்வதும், மேலும் ஊர்நலத்திற்கென்று  ஈடுபட்டுப் பணியாற்றுவதும் பெருமைமிக்க செயல்களாகும். 
    
     எழுத்தாளராக எவ்வகை முன்பட்டறிவும் அறவே இல்லாத ஒரு கால்நடை ஆய்வாளர், இதற்குமுன் எவ்வகைப் பதிவும் இல்லாத  தம் ஊரின் வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற பேரவாவினால் முயன்று முனைந்து 180 பக்கத்தில் எழுதிய நூல்தான் செஞ்சி தாலுக்கா நல்லாண்பிள்ளை பெற்றாள் வரலாற்றுக் கட்டுரை என்பதாகும். எண்பத்தொரு அகவையாளரான நூலாசிரியர் பெயர் ம.ஆ.கிருட்டினமூர்த்தி என்பதாகும். நூல் எந்த ஆண்டு எழுதப்பட்டதென்ற குறிப்பு நூலில் காணப்பெறவில்லை.
    
     நூலாசிரியர் தம் முன்னுரையில், தாம் அந்த ஊரில் பிறந்தது தொடங்கித் தம் வரலாற்றைக் கூறுகிறார். தாம் தம் ஊரின் வரலாற்றை எழுத ஆர்வமேற்பட்டதையும் அதற்காக மேற்கொண்ட முயற்சிகளையும் கூறுகிறார். ஊரின் முன்னேற்றத்திற்கு உதவியவர்களைப் பற்றிக் கூறுகிறார். நாலைத் தம் தாய்தந்தையர்க்கு படையலிடுகிறார்.
    
     இவ்வூரைச் சேர்ந்த புதுச்சேரிப் பல்கலைக்கழக மாந்தவியல் துறைத் தலைவர் முனைவர் ஆ.செல்லபெருமாள் நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். அதில், இவ்வூர் மக்களின் உறவுமுறை கால்வழி அமைப்புபற்றி முனைவர் சுசாதா திலக் என்பார் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தம் முனைவர்பட்ட மாந்தவியல் ஆய்வில் ஒருதனி இயலில் விவரித்துள்ளார் என்று குறிப்பிடுகிறார். ஊருக்குச் சிறப்புசேர்த்தோர் பலர் பெயர்களைக் குறிப்பிடுகிறார்.
    
     நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ள ஊரின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர், திருவமை திருப்பாவை நாதமுனி நூலாசிரியர்பற்றியும் நூலைப்பற்றியும் சிறப்பித்து வாழ்த்தியுள்ளார்.
    
     நூல் 25 தலைப்புகளில் செய்திகளைப் பதிந்துள்ளது. ஊர்ப் பெயர்க்காரணம் பற்றி முதலில் கூறுகிறார். மலையடிவாரத்தில் வாழநேர்ந்த சாளப்புத்தூர் மக்களில் ஒரு இணையருக்கு நீண்ட நாட்களுக்குப்பின் பிறந்த ஒரு ஆண்குழந்தை ஊரின் மேற்கே ஒரு சிறு கோவிலை ஒட்டிய சப்பாத்திக் காட்டை அழித்து ஊர் உண்டாக்கிக் குடியேற உதவியதால் அவனைப்பெற்ற தாயைப் போற்றும் வகையில், நல்லாண்பிள்ளை பெற்றாள் என்ற பெயரிடப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். திருவண்ணாமலை மாவட்டத்திலும் செங்கல்பட்டு மாவட்டத்திலும் இதே பெயரில் ஊர் உள்ளதையும் குறிப்பிடுகிறார்.
    
     காடு திருத்தி ஊராக்கிக் குடியேறிய பல்வேறு வீட்டினரைப்பற்றிக் குறிப்பிடுகிறார். ஊர்த்தலைவர்(Headman), கணக்கர் முதலிய சிற்றூர் அதிகாரப் பணியினர் அமர்த்தம் பற்றியும் அவர்கள்பணிகளையும் கூறுகிறார். தாழ்த்தப்பட்டோர் பழைய புதுக்குடியிருப்பு, அருந்ததியர் குடியிருப்பு பற்றியும், கல், பாறைத் தொழிலர் பற்றிக் குறிப்பிடுகிறார்.
    
     அரசு உதவியுடன் பொதுமக்களால் உருவாக்கப்பட்ட நல்லாண்பிள்ளை பெற்றாள் ஏரி, சிறிய குளங்கள் பற்றியும் சுற்றிலுமுள்ள 13 ஊர்கள் பற்றிய சிறு விளக்கமும் தருகிறார். தலைக்கோட்டைப்போர் பற்றியும், அதன்பின்பும் ஊரில் நடந்த மாற்றங்கள் பற்றியும் கூறுகிறார்.
    
     ஊரிலுள்ளோர் நாயக்கர் என அழைக்கப்படுவது பதவி என்றும் கிருட்டினதேவராயர் காலத்தில் அரசரால் அமர்த்தம் பெற்றவர்களே நாயக்கர் என்றும் அது பின்பு பரம்பரைப் பட்டப்பெயர் ஆனதையும் விளக்குகிறார். கிருட்டினதேவராயர் காலத்தில் அடிமைமுறை இருந்ததாக இவர் கூறுவது ஆய்வுக்குரியதாகும்.
    
     கிழக்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த நல்லாண்பிள்ளை பெற்றாள் மலைத்தொடர், அம் மலைவாழ் விலங்குகள், மரங்கள், தேனடை அழிப்பு, மலைகளை இணைத்துக்கட்டிய நீர்த்தேக்கம் பற்றியும் குறிப்பிடுகிறார். காட்டுச் சிறுத்தைப் பிடித்தல், நெருப்புக்கடைதல் பற்றியும் கூறுகிறார்.
     திருவண்ணாமலை துரிஞ்சலாற்றிலிருந்து பனைமலைப் பேட்டைக்கு அமைத்த நந்தன் கால்வாய் வரலாற்றைக் கூறுகிறார்.    
    
     நல்லாண்பிள்ளை பெற்றாள் ஊருக்குக் கிழக்கே 400 ஆண்டுகளுக்கு முன் இருந்த சாளப்புத்தூர் என்ற ஊரைப்பற்றியும், (மறைந்த அந்த ஊரிலிருந்தவர்களில் ஒருபகுதியினர் நல்லாண்பிள்ளை பெற்றாள் ஊரை உருவாக்கிக் குடியேறியவராவர்) அங்கிருந்த வீட்டமைப்பு, மக்களின் உணவையும் கூறுகிறார். பயிரிட்டவை பற்றியும் வீடுகளில் இருந்த கருவிகள் கலன்கள் பற்றியும் பயன்படுத்திய இரும்பு செம்பு முதலிய மாழைகள் பற்றியும், குடும்பம், பிள்ளைகள் விளையாட்டு, கருவி, பாடிய பாடல்கள், ஆடை, படிப்பு பற்றியும் கூறுகிறார்.
    
     நல்லாண்பிள்ளை பெற்றாள் குடிவாழ்க்கை என்ற தலைப்பில், வீடுகள் திண்ணை நடுவீடு தாழ்வாரம் வாசல், சேர்கொட்டடி முதலியவற்றுடன் அமைந்ததை அழகாக விளக்குகிறார். வீட்டிலிருந்த பொருள்களைக் கூறுகிறார். பல்வேறு குடும்ப உறவுகள் குறித்து நாம் அறிந்தவற்றை இவர் கூறினாலும், பல நுட்ப செய்திகளையும் இவர் கூற்றில் தெரிந்துகொள்கிறோம்.
    
     நல்லாண்பிள்ளை பெற்றாள் ஊரை இணைக்கும் சாலைகள் பற்றியும், ஊரிலுள்ள பல்வேறு கோயில்கள், நடக்கும் திருவிழாக்கள் பற்றியும் விளக்குகிறார். சமயந் தொடர்பான செய்திகளில், வைணவ வடகலை தென்கலைப் பிரிவுகளின் வேறுபாடுகளை இவர் பட்டியலிட்டு விளக்கியிருப்பது அருமை.
    
     குறியறிதல் (சகுனம்), பல்வேறு நம்பிக்கைகள், விளக்கம் பெற வேண்டிய இயற்கை இகந்த நிகழ்வுகளையும் கூறுகிறார். 
பதின்மூன்று வகை விளையாட்டுகளைப் பட்டியலிட்டு விளக்கியிருப்பது அருமை! பெண்கள் விளையாட்டுகளாகப் பதினெட்டுக்கும் மேல் கூறி விளக்குகிறார். ஊரில் நடக்கும் நிகழ்வுகளாக்க் குடுகுடுப்பைக்காரன் கூற்று, பாம்பாட்டி, குரங்காட்டி, கரடிவித்தை, கழைக்கூத்தாட்டம், கண்கட்டுக் கலை, பூம்பூம் மாடு, குருவிக்காரன் ஆட்டம், ஊரில் நடக்கும் கூத்து பற்றியெல்லாம் சுவைபடக் கூறுகிறார். இக்காலப்பிள்ளைகள் அறியாத பல செய்திகள் இப்பகுதியில் உள்ளன.
    
     ஊருக்குத் தொடக்கப் பள்ளிக்கூடம் வந்தது தொடங்கி மேல்நிலைப்பள்ளி வந்தது வரையான வரலாற்றைக் கூறுகிறார்.
     ஊரில்கொண்டாடும் பலபண்டிகைகளைச் சுவைபட விளக்குகிறார்.
அரசுசார்ந்த ஊர் அலுவலகம், நூலகம் பற்றிக் கூறுகிறார்.

     திருமணம் நடைபெறும் முறைகள், பல்வேறு நற்சடங்குகள், துயர நிகழ்வுச் சடங்குகள் பற்றியெல்லாம் இவர் பதிவு செய்துள்ள அருமை பாராட்டிற்குரியவை என்பதில் ஐயமில்லை.
    
     ம.ஆ.கிருட்டினமூர்த்தி எழுதியுள்ள இந்நூல் முறையாக எழுதப்பட்ட வரலாற்று நூலாக அமையாததென்று எவராலும் புறக்கணிக்க முடியாத வகையில், பல வரலாற்று நிகழ்வுகளையும் வாழ்க்கை முறைகளையும் பணபாடு, நாகரிக,பழக்க வழக்கங்கனையும் தொகுத்தளித்துள்ள அரிய தொரு கருவூலம் என்றே கூறவேண்டும். மாந்தவியல் ஆய்வாளர்க்கும் வரலாற்றாசிரியர்க்கும் அருந்துணையாக விளங்கும் நூலாக இது விளங்குகிறது எனில் மிகையே இல்லை!
--------------------------------------------------------------