புதன், 26 நவம்பர், 2008

அண்ணாவின் பெருமை!

       
பெருமையெனல் உயர்ச்சிசிறப் பெனஒருவர் குணநலன்கள்
பெரிதாய்ப் போற்றும்
ஒருதகைமை! செயற்கரிய உண்மையிலே செய்ததினால்
உற்ற பேறே!
எருவெனவே உயிருடம்பை இத்தமிழ மண்ணுக்கே
ஈந்த பெம்மான்
திருமைமிகு அண்ணாவின் பெருமையினைச் சிறிதிங்கே
தெரிந்து கொள்வோம்!



அறிஞருளும் அறிஞரவர் அரசியல்சீர் கற்றறிந்தார்
அவரின் பேச்சைப்
பொறிமடுத்தார் வயப்படுவர்; புரிந்தபிறர் வேட்டிருப்பர்;
புரியார் தம்மை
நெறிப்படுத்தும் குமுகாய நிலைதிருத்தும் பெரும்பணியர்
நெஞ்சக் கூட்டில்
வெறியன்பால் தமிழ்மக்கள் விருப்பத்தோ டடைத்துவைத்த
வெல்லுஞ் சொல்லார்!



உலகினிலே முதன்முதலாய் உயர்ந்திருந்த ஓரினத்தை
ஒப்பே இல்லா
இலகுதமிழ் முதன்மொழியை ஏய்ப்பினிலே வீழ்த்திய
ரியத்தின் மாயை
துலக்கமுற விளக்கியவர் தோல்வியிலா எழுத்தாற்றல்
துணையி னாலே
இலங்குகதை கட்டுரைகள் ஏற்றமிகு மேடைதிரை
எல்லாம் வென்றார்!



பொருநரென மேடையிலும் புத்தெழுத்து நடையினிலும்
பொலிவு சேர
அருந்தமிழ்க்கு அணிசேர்த்தார்! அயற்சொற்கள் தவிர்த்தெழுத
ஆவல் கொண்டார்!
இருந்தமிழ்க்கு மறுமலர்ச்சி இவராலே வந்ததெனில்,
இதுவே உண்மை!
பெருஞ்சிறப்பில் செந்தமிழ்க்கே பீடுறவே எடுத்தாரோர்
பெருமா நாடே!



எழுத்தாளர் கல்கிமகிழ்ந் திவர்அறிஞர், தென்னாட்டின்
பெர்னாட் சாஎன்(று)
அழுத்தமுறப் புகழ்ந்துரைத்தார்! ஆங்கிலத்தில் அண்ணாவின்
ஆற்றல் பேச்சு
இழுத்ததந்த வாச்பேயி நேருவுட னெல்லாரின்
இனிய சிந்தை!
வழுத்திதமிழ் மக்களெல்லாம் வாய்மகிழ அண்ணனென
வழங்கி னாரே!



இருபத்து மூன்றுதிங்கள் இவர்முதல்வ ராயிருந்தார்
இதற்குள் ளேயே
இருமொழியே போதுமென இந்திமறுத் தோர்சட்டம்
இயற்றித் தந்தார்!
பெருமகிழ்வில் தமிழ்நாடாய்ப் பெயர்மாற்றம் செய்திட்டார்!
பின்தன் மானத்
திருமணங்கள் செல்லுமெனுந் திருத்தத்தால் தமிழ்மானம்
திரும்ப மீட்டார்!



இனக்கொலைகள் அன்றைக்கும் ஈழத்தில் ஐம்பத்தோ(டு)
இரண்டாண் டின்முன்
கனக்குமனத் தோடண்ணா கனிவற்ற தில்லியினைக்
கடிந்து ரைத்தார்!
மனக்குமுற லோ(டு)ஐநா மன்றிற்கும் எழுதிநிலை
மாற்றக் கேட்டார்!
இனக்காவல் மறவனவர் இருந்திருந்தால் இன்றிருக்கும்
ஈழ நாடே!



அண்ணாவின் உரோம்செலவில் ஆற்றலுடை ஒருமறவர்
அடைப்பின் நீக்க
பண்ணவராம் போப்பவரும் அண்ணாவின் வேண்டுகைக்குப்
பரிந்தி சைந்தே
திண்ணமிகு இரானடேயை விடுவிக்கச் சிறைக்கதவும்
திறந்த தன்று!
எண்ணமெலாம் நன்னேயம் இயக்கமெலாம் நன்னெறியன்(று)
இலங்கி னாரே!



பெரிதுபெரி தண்ணாவின் பெரும்பெருமை முடிந்திடுமோ
பேசு தற்கே!
அரியதமிழ் மீட்பிற்கு அண்ணாவே முன்னணியர்
அறியார் யாரே!
விரிந்ததவர் சிந்தனைகள் தளையறுத்துத் தமிழருயர்
விடிவைத் தேடி!
அரிதவரின் பெருமைசொலல் அவரவரும் தம்முணர்வால்
அறிந்து கொள்வீர்!

 -------------------------------------------------------------
        

   
   

முனைவர் கோவூர் பகுத்தறிவூட்டிய இலங்கையில் மூடநம்பிக்கை ஆட்சியாளர்கள்!

 
            உலகப்புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மாந்தநேய மன மருத்துவருமாகிய முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர் இந்தியாவிலுள்ள கேரளமாநிலத்தில் 1898இல் பிறந்தவர். கேரளாவில் பள்ளிப்படிப்பை முடித்தபின், கல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்தார். அதன்பின் கோட்டயம் கல்லூரியில் இரண்டாண்டுகள் உதவி விரிவுரையாளராகப் பணிபுரிந்தபின், 1928இல் அருள்திரு பி.டி. கேசு அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்குச்சென்றார். 
           
     1928இல் யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். 1943இல் இக் கல்லூரியினின்றும் விலகி கல்லியிலுள்ள இரிச்மான்டு கல்லூரியிலும் பின்னர் மவுண்டு வினியாவிலுள்ள தூய தாமசு கல்லூரியிலும் பணியாற்றினார். அதன்புறகு, கொழும்பு தர்சுட்டன் கல்லூரியில் அறிவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி 1959இல் பணி நிறைவு செய்தார். 
    
     கல்லூரிப் பணி முடித்த பின்னர்,  ஆவிகள் ஆதன்களின் தொடர்பான விந்தை நிகழ்வுகள் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்டு எழுதியும் பேசியும் வெளிப்படுத்தித் தெளிவுறுத்தி வந்தார். எஞ்சிய வாழ்நாள் மழுவதும், பகுத்தறிவூட்டும் பணிகளிலும் மாந்தநேய மன மருத்துவப்பணிகளிலும் ஈடுபட்டார்.
    
     இயல்பிகந்த(வியக்கத்தக்க) ஆற்றல் உடையவராகக் கூறிக் கொள்பவர்கள் ஏமாற்றுக் காரர்களாகவோ மன நோயர்களாகவோ இருப்பர் எனபதை, அறியாமையில் உழலும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கோவூர் விரும்பினார்.
     
     அதற்காகவே, இயற்கையிகந்த வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலக்க உருவா பரிசளிக்க அவர் அணியமாய் இருக்கிறார் என்ற அறிவிப்பை வெல்விளி(challenge) யாகக் கூறினார்.  தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். 
     
     ஏறத்தாழ 50ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து மூடநம்பிக்கையை ஒழிக்கப் பாடுபட்டார்.  இறுதியில்,  1978 செப்டம்பர் 18ஆம் நாள் தம் 80ஆவது அகவையில், கொழும்பில் காலமானார்.
     
     முனைவர் கோவூர், மக்களுக்குத் தெளிவூட்டி, மூடநம்பிக்கைகளை எதிர்த்து நின்று, இலங்கை மண்ணில் இருந்து அயராது போரிட்டார். அந்த "இலங்கையை இன்று ஆளுகின்றவரும் இதற்குமுன்பு ஆட்சி செய்தவரும் போட்டி போட்டுக் கொண்டு இன்று பகுத்தறிவு சார்ந்த ஈனாயான புத்த மதத்தைப் புறக்கணித்து விட்டு, கணியர்களிடம் கருத்தறிந்து நடப்பதை இயல்பான வழக்க மாக்கிக் கொண்டிருக் கிறார்கள்.
       
     மலையாளத் தந்திரிகளான கணியர்களிடம் நம்பிக்கை தரும் சொற்களைக் கேட்டுப் பகற்கனா காண்பதையும், கழுவாய் தேட கோயில்களுக்கும் கடவுளராகக் கூறப்படுவாரின் இருப்பிடங்களுக்கும் துய்தச்செலவு மேற்கொள்வதையும் இவர்கள் இப்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் எம்.கே.நாராயணனையும் சந்திப்பதைப் போலவே இதையும் இவர்கள் செய்து வருகிறார்கள். தமிழர்களுக்கு எதிரானப் போரில் வெற்றி அடைவதற்கான எந்த ஒரு வழியையும் விட்டுவைக்கவில்லை"-என்று கருத்துரை (Opinion) இதழின் எழுத்தாளர் அம்பலம் எழுதுகிறார். 
     
     இந்த வகையில்,  இப்போது,  இலங்கை அரசுத் தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது.  இரனில் விக்கிரமசிங்கே கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலின் நெடுநாளைய ஆர்வம் மிகுந்த பத்தராம்!அரசுத் தலைவர் தேர்தலில் இரனிலை எதிர்த்து வெற்றி பெற்ற பின், மகிந்தா இராசபக்சே 2006 சனவரியில் குருவாயூர் வந்து நெய்யளித்துத் 'துலாபாரம்' சடங்கு நடத்துவதை ஒரு நேர்த்திக்கடனாகவே செய்தார்.

      அண்மையில் இந்தியாவந்த இரனில்,  தில்லியில் அரசியற் காரர்களையும் அதிகாரிகளையும் பார்த்துப் பேசிய பிறகு, காரி(சனி)யி்னால் (!) ஏற்படும் இடர்களிலிருந்து விடுபடத் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில் தொலைவிலுள்ள இடமான திருக்கோலிக்காட்டில் உள்ள கோயிலுக்கு துய்தச்செலவு மேற்கொண்டார்.
� � g a ` �3 :p> 
                          
கவனிக்கப்படாதிருந்த அந்தக் கோயிலும், அதிலுள்ள காரி(சனிபகவான்) திருமுன்னும் புதியதாக தொன்ம(புராண) காரணங்கள் கண்டுகாட்டிப் பலரும் அறியுமாறு செய்யப்பட்டிருந்தன. யாரோ கணியம் பார்ப்பவரின் (சோசியர்) அறிவுறுத்தலின் பேரில் இரனில் இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். இரனிலின் வருகை தமிழ்நாட்டுக் காவல், உளவுத்துறையினரால் மிகக் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தபோதிலும், ஊர் மக்களுக்கு எப்படியோ செய்தி தெரிந்து, அவர்கள் ஏழு இடங்களில் அவரை வழிமறித்துக் கொந்தளிப்பான கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
  
            
            கொரடாச்சேரி என்னுமிடத்தில் வண்டி மாடுகளைச் சாலையின் குறுக்கே நிறுத்திக் கிளர்ச்சி செய்தார்கள். இரனில் கோயிலை அடைந்த போது, அவர் ஐந்நூறுபேர் கொண்ட கும்பலை நேர்கொள்ள வேண்டியிருந்தது; அவர்களில் பெண்கள் பேரெண்ணிக்கையினராய் இருந்தனர். கும்பலைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் போதவில்லை.
           
     கோயிலிலிருந்து திரும்புகையில், தமிழர்கள் உரிமைபெற உதவுவதாகக் கூறிக்கொண்டே பதற்றத்துடன் தப்பிச்செல்ல வேண்டியதாயிற்று.

            அரசியல்காரர்களை எல்லாநேரங்களிலும் ஏமாளிகள் ஆக்குவது கணியர்கள் மட்டுமே, அல்லர். மக்கள் ஏமாளிகளாக இருப்பதால்,  உளவுத் துறையினரும் கொளகையற்ற அரசியல் காரரரும் கணியர்களைப் பயன்படுத்தித் தம்முடைய அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, கணியத்தின் வழி உளத்தியல் தாக்கம் உண்டாக்கு கின்றனர். 

            தேர்தல் நேரங்களில் எழுதப்படும் கணியப் பலன்கள் அரசியல் நோக்கம் உடையவையே.

                                                            ------------------
நன்றியுரைப்பு:
Tamilnet.com  இணைய தளத்திற்கு!
      
  
****************************************************************
 **

ஞாயிறு, 23 நவம்பர், 2008

பாவலர் பாரதியார் நினைவேந்தி...!

(எண்சீர் மண்டிலம்: காய் – காய் – காய் – மா )


பாரதிக்குத் தனிச்சிறப்பு பழந்தமிழச் சித்தர்
            பாப்போல எளிதாகப் பாடிஎளி யோரும்
தேரஉணர்ந் தெழுச்சிகொளத் தேசப்பற் றூட்டித்
            தீக்கனலாய்ப் பரப்பியமை தெரியாதார் இல்லை!
வீரவர லாற்றுடனே வெவ்வேறு செய்தி
            விளக்கியநல் எழுத்தாளர்! வீறிழந்து மக்கள்
சீரழிந்தே அடிமையுற்ற சிறுமைநிலை போக்கச்
            சீறிஎழச் செய்தஇத ழாசிரியர் இவரே!
.
தொன்மையுடன் புதுப்புதுமை தோய்ந்தகருத் தெல்லாம்
            துளித்தயக்கு மில்லாது துணிவுடனே சொன்னார்!
முன்மையுறத் தாய்மொழியில் முறையாகக் கற்பீர்;
            முந்திடும்ஆங் கிலவழியோ முழுபேடிக் கல்வி!
வன்மையுடன் அதைத்தவிர்ப்போம்; வண்டமிழின் வழியே
            வழங்கிடுவோம் கல்வியென வழிவகையும் சொன்னார்!
மென்மையொடும் அன்போடும் மிகப்பரிந்து சொன்னார்
            மேனமையுறத் தாய்மொழியே மிக்கதுணை என்றே!
.
ஒருபக்கப் பாரதியே உருவாக்கிக் காட்டும்
            உதவாத போக்கிங்கே உள்ளதிது நன்றோ!
ஒருவிடுக அயற்சொல்லை ஒல்லும்வா யெல்லாம்
            ஓங்குகலை சேர்த்துதமிழ் உயர்த்திடுக என்றார்!
தெருளுறவே அவருரைத்த தேர்ந்தகருத் திதனைத்
            தெரிந்திருந்தும் பிறசொல்லைத் தீந்தமிழில் கலக்கும்
அருவருப்பை மாற்றிடுவோம் அறிவியலும் கலையும்
            அருந்தமிழில் வளர்த்திடுவோம்! அன்புணர்வில் வாழ்வோம்!
------------------------------------------------------------------------------------------------


புதன், 29 அக்டோபர், 2008

வியத்தகு நிகழ்ச்சிகளின் வரலாறு!


(ஆங்கில மூலம்: ஆபிரகாம் தொ.கோவூர். *** தமிழாக்கம்: தமிழநம்பி)


     மிகுதியாக விற்பனையாகின்ற பம்பாயிலிருந்து வெளிவரும் ஒரு கிழமை இதழ், விளங்காத ஆராய்ச்சிக்குரிய விந்தைகளை உண்மையானவை என்று நிலைநாட்டுவதற்காக, எல்லா வகையான கற்பனைக் கதைகளையும் வெளியிட்டுப் படிப்பவர்களின் உள்ளங்களையும் சிந்தனைகளையும் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறது.

     அந்த இதழில், வழை (பீங்கான்)ப் பொம்மை ஒன்றைப் பற்றிய கதை வந்தது. நெடுங்காலத்திற்கு முன்பு இறந்துபோன ஒரு சப்பானியச் சிறுமிக்குச் சொந்தமா யிருந்த அப் பொம்மையில், அவளுடைய ஆவி குடிகொண்டிருப்பதாக அந்தக் கதையில் கூறப்பட்டிருந்தது.

     செத்துப்போன சிறுமியின் சாம்பல் இருந்த ஏனம் அபொம்மையின் பக்கத்தில் வைக்கப்பட்ட போதிலிருந்து அதன் தலையில் மாந்த மயிர் வளரத் தொடங்கிய தாகக் கூறப் பட்டிருந்தது. இந்த விந்தையான நிகழ்ச்சி, அப் பொம்மையில் இறந்து போன சிறுமியின் ஆவி குடி கொண்டிருப்பதை மெய்ப்பிப்பதாகக் கதையை எழுதியவர் கூறியுள்ளார்.

     அக் கதையை, நம்பத் தகுந்ததாக்கப், பல 'அறிவியலர்', அந்தத் தலைமயிரை ஆய்வு செய்து, அது மாந்தத் தலைமயிரென்று உறுதிப்படுத்தி உள்ளார்கள் என்றும் அந்த எழுத்தாளர் கூறியுள்ளார். பொது அறிவுடைய யாரும் அதை ஒரு கற்பனைக் கதை என்றே கருதுவார்கள் என்றாலும், பெரும்பாலான ஏமாளிகள், 'அறிவியலர்' சிலர் உறுதிப் படுத்தியதால் அதை உண்மை என்றே ஒப்புக்கொள்ள அணியமாக இருப்பர்.

     பொம்மையின் தலையிலிருந்து எடுத்த மயிர், மாந்தத் தலைமயிரெனக் கண்டுபிடித்த தாலேயே, உயிரற்ற அப்பொம்மையின் தலையில் மாந்த மயிர் வளருவதாக எந்த ஒரு உண்மையான 'அறிவியலறிஞ'ரும் முடிவு செய்ய மாட்டார். அவ்வாறு முடிவு செய்வது, ஒரு கம்பளப் போர்வையிலிருந்து எடுத்த மயிர் உண்மையான ஆட்டுமயிராக இருப்பதால், போர்வையில் ஆட்டுமயிர் வளருகின்றதென்று கூறும் மடமையான கூற்றைப் போன்றதாகும்.

     பொம்மையின் தலையில் முடி வளரவேண்டுமென்றால், அத்தலைக்கு அரத்த ஓட்டம் இருந்தாக வேண்டும். ஒரு மாந்தன் அல்லது விலங்கின் உடலில் முடி வளருவதற்குத் தேவையான பொருள், அரத்தத்தாலேயே அவ்வுடலின் தோலுக்குக் கிடைக்க வேண்டும். உண்மையான அறிவியலர் அந்தப் பொம்மையை ஆய்வு செய்திருந்தால், பொம்மையின் தலையிலிருந்து உண்மையிலேயே மயிர் வளருகிறதாஅல்லது மற்றெல்லாப் பொம்மைகளிலும் இருப்பதைப் போல ஒட்டப்பட்டு இருக்கிறதா? எனபதை ஆய்ந்து அறிந்திருப்பார்கள்.

     இந்தத் தாளிகை (பத்திரிகை)யி்ன் கதையின்படி, அப்படிப்பட்ட ஆய்வுகள் நடத்தப்படவில்லை. தலையில் மயிர் வளருவதற்கு இயலும்படி, அப் பொம்மையின் உடலில் அரத்தம் இருக்குமானால், உணவூட்டம், மூச்சுயிர்ப்பு, அரத்த ஓட்டம், மலங்கழிப்பு போன்ற உடலியக்க வினைகளையும் அந்தப் பொம்மை பெற்றிருக்க வேண்டும்.

     இந்த மிக முகன்மையான கூறுகள், இக் கற்பனைக் கதையை எழுதியவரின் மண்டையிலோ, இதனைப் பதிப்பித்த ஆசி்ரியரின் மண்டையிலோ நுழைந்திருக்கக் காணோம்! இறந்தவர்களின் உடலைவிட்டு நீங்கிவிட்டதாகக் கூறப்படும் ஆவியானது உடலும், தலையும், தலையில் மயிரும் பெற்றிருக்கும் எனபதை நம்புவதற்கு அணியமாக இருக்கும் ஆயிரக்கணக்கான ஏமாளிகள் ஒருபோதும் பகுத்தறிவைப் பயன்படுத்தியதே இல்லை!

     அண்ணாத்துரை இறந்துபோன பிறகு இருமுறை சொற்பொழிவுகள் செய்தார் என்பதை உறுதிப்படுத்திக் கூறுவதற்கு மதுரை மடத்தலைவர் சோமசுந்தர தேசிகர் இருக்கிறார்! 'பறக்கும் தட்டு' ஒன்றிற்குள் சென்று விண்வெளி மாந்தருடன் பேசியதாக அடித்துக் கூறுவதற்கு ஆடம் சுமித் இருக்கிறார்! அவர்கள் எந்த மொழியில் பேசினார்கள் என்று வியப்படைகிறீர்களா? இப்படிப்பட்ட நம்பமுடியாத கதைகளை எழுதும் எழுத்தாளர்கள், "அறிவியலர்" சிலரின் சான்றுறுதிகளை மேற்கோள் காட்டி, அக் கதைகளுக்கு நம்பகப் புனைவு தருவது வழக்கமாகக் கையாளும் நுட்பமாகும்.

     இசுரேலிய மந்திரக்காரர் யூரிகெல்லர் , 130 இலக்கம் ஒளியாண்டுத் தொலைவில் விண்வெளியில் உள்ள கணிப்பொறியியக்க மனங்களிடமிருந்து மன ஆற்றலைப் பெறுகின்ற திறமையினால் வியக்கத் தக்க நிகழ்ச்சிகளை நடத்திக் காட்ட வல்லவர் என்பதை நிலைநாட்ட நியூயார்க்கைச் சேரந்த முனைவர் அந்திரிசா புகாரிச்சு இருந்தார். புட்டபர்த்தி எத்தர் சாயிபாபா கடவுளின் தோற்றரவு (அவதாரம்) ஆக இருப்பதால், தெய்விய ஆற்றலுடன் "வியத்தகு செயல்களை" நிகழ்த்துகிறார் எனபதை வலியுறுத்த இந்தியாவில் முனைவர் எசு.பகவந்தம் இருக்கிறார்!

     சில 'அருள்பெற்ற' ஆள்களும் வர்சீனியாவைச் சேர்ந்த திருவாட்டி போன்டாவிற்குச் சொந்தமான ஓர் அருள் பெற்ற குதிரையும், தொலைவிலுணர் திறமும், புலன்மீறிய காட்சித்திறமும், உளத்தியல் தாக்கத் திறமும், முன்ன்றி திறமும் பெற்றிருந்ததாகத் தம் 'ஆராய்ச்சிக'ளின் வழி நிலைநாட்ட வட கரோலினாவி லுள்ள தியூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் சே.பி.இரைன் இருந்தார்!

     சாகர்த்தாவில் ஒரு முசுலிம் பெண்ணின் கருப்பையில் இருந்த முதிர்கரு குரான் வரிகளை ஒப்பிக்கும் திறமை பெற்றிருந்ததாக உறுதிசெய்ய இந்தோனேசியாவி்ல் சில மருத்துவர்கள் இருந்தார்கள்! பாண்டவபுரம் சாய்கிருட்டினா, அருள்திரு.கிருட்டினனின் தோற்றரவாக இருப்பதால் "வியத்தகு நிகழ்ச்சிகளை"ச் செய்யும் ஆற்றல் பெற்றிருக்கிறார் என்று உறுதிப்படுத்திக் கூற பெங்களூர் முனைவர் சி.வெங்கட்டராவ் இருந்தார்!

     இத்தகைய புனைகதைகளை உண்மை என்று நிலைநிறுத்த அறிவியலறிவே இல்லாத 'அறிவியலர்' மலிந்திருந்தாலும், அவர்களை வீழ்த்த உண்மையான அறிவியலறிஞர்களும் இருந்துகொண் டிருக்கிறார்கள். சேம்சு ரேன்டி நடத்திய புலனாய்வுகள், யூரிகெல்லரின் மோசடியை வெளிப்படுத்தின!

     பேராசிரியர் சான் சுகார்னி, சே.பி.இரைனின் ஆவியாற்றல் குதிரையின் தொலைவிலுணர் திறம், புலன் மீறிய காட்சித் திறம் ஆகியவற்றின் பின்னுள்ள நுண்ணுத்தி (தந்திரம்), அக் குதிரையின் சொந்தக்காரி போன்டாவின் மறைவான சைகைகளே என்பதை வெளிப்படுத்தினார்! பெங்களூர் பல்கலைக் கழகத்தின் உண்மையான அறிவியலறிஞர்கள் சாயி கிருட்டினாவின் "வியத்தகு நிகழ்ச்சிகள்" எனக் கூறப் பட்டவைகளின் பின்னே இருந்த மோசடிகளை வெளிப்படுத்தினர்.

     இந்தோனேசிய அறிவியலர் ஒருவர், முசுலிம் பெண்ணின் கருப்பையிலிருந்த குரான் ஒப்பிக்கும் முதிர்கரு என்று கூறப்பட்டது, அவளுடைய மேலாடைக்குக் கீழே வயிற்றில் பொதிந்திருந்த தலையணைக்கடியில் மறைக்கப்பட்டிருந்த ஒரு நுண்ணளவு நாடாப்பதிவான் என்ற உண்மையை வெளிப்படுத்தினார்! இவ்வாறே, இந்தியாவிலுள்ள உண்மையான அறிவியலறிஞர்களின் புலனாய்வுகள் 'சத்திய சாயிபாபா'வின் மோசடிகளை ஒருநாள் வெளிப்படுத்தும்!

     புதிதாகத் திருத்தப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின்படி, 'தோற்றர'வான சாய்பாபாவின் சாயத்தை வெளுக்க நாள்கள் குறிக்கப்பட்டு விட்டன! அடிப்படைக் கடமைகள் ஆகிய பத்துப் பிரிவுகளுள் ஒன்று, "அறிவியல் மனநிலையை வளர்த்துக்கொள்வதும், மாந்த நேயமும், தீர உசாவி (விசாரித்து) அறிவதும், சீர்திருத்துவதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும் என்று கூறுகிறது!

     அரசியல் சட்டத்தின் இப்பிரிவு, சாயிபாபாவும் பிற திருடர்களும் நிகழ்த்தும் வியப்பூட்டும் வினைகள் என்று கூறப்படுபவை பற்றி இந்தியப் பகுத்தறிவாளர்கள் அறிவியல் நோக்கில் உசாவல்கள் நடத்துவதன் மூலம் அவர்களுடைய "அடிப்படைக் கடமைக"ளைச் செய்வதை எளிதாக்கும்!

     ஒரு குடிமகனை, அவனுடைய கடமையைச் செய்யும்படிக் கட்டாயப் படுத்தச் சட்டம் இடந்தரவில்லை யென்றாலும், குடிமக்கள் அடிப்படைக் கடமைகளைச் செய்வதை எதிர்க்கும் போலி அறிஞர்களின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்!

     ஏமாற்றுக்காரர்களின் மோசடிகளை வெளிப்படுத்துவதின் மூலம் அவர்களின் சுரண்டல்களிலிருந்து இலக்கக் கணக்கான என் மாந்தத் தோழர்கள் என்னுடைய சாவிற்கு முன்பு காப்பாற்றப் படுவார்களானால் - மக்களினத்தின் பால் அன்புள்ள ஒருவனாக, மகிழ்ச்சியோடு நான் செத்துப் போவேன்!
------------------------------------------------------------------

வியாழன், 23 அக்டோபர், 2008

தீராப்பழி ஏற்கத் துணிவதோ?


(10-03-2008-இல் எழுதிய இப்பதிவு, தேவை கருதி மிண்டும் இடப்படுகின்றது.) 

இலங்கையில் இப்போது கொடுமையான போர் நடந்து கொண்டிருக்கின்றது இலங்கை அரசின் முப்படைகளும் குழந்தைகள்முதியோர்பொதுமக்கள்போராளிகள் என்று எந்த வேறுபாடுமின்றி ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. ஒரு நாட்டின் அரசே தன் குடிமக்களைக் கண்டமேனிக்குக் குண்டுகள் வீசிக் கொன்று குவிக்கின்றஉலகில் வேறெங்கும் காண முடியாத கொடுமைஅங்கு நடந்து கொண்டிருக்கின்றது.
நார்வேஅமெரிக்காசப்பான் ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் நடுவர்களாக இருந்து உருவாக்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்புடைய யாருக்கும் தெரிவிக்காமல் இலங்கை அரசு தன்விருப்பமாகவும் தடாலடியாகவும் திடீரென முறித்துக் கொண்டதுஇந்நிலையை உலக நாடுகள் ஏற்கவில்லை என்றாலும் எந்த நாடும் இதுவரை இலங்கை அரசைத் தட்டிக்கேட்க முன்வரவில்லை.
கடல்கொண்ட குமரிக்கண்டத்தின் எஞ்சிய நிலப்பகுதியாக இலங்கையை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் அந்நாட்டின் ஆதிக்குடிகள்ஈழத்தின் மண்ணின் மைந்தர்கள்இலங்கையின் வடக்குகிழக்கு முதலிய பகுதிகளில் கி.பி.1832 வரைத் தம்மைத்தாமே ஆட்சி செய்து கொண்டு வாழ்ந்த மக்களின் பிறங்கடைகள்இவ்வுண்மையைத் தமிழகத் தமிழர்களில் பெரும்பாலரும் தெரிந்திருக்கவில்லை. இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ளவர்களில் இவ்வுணமையைத் தெரிந்தோர் மிகமிகக் குறைவானவரே!
இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லாருமே தமிழகத்திலிருந்து சென்றவர்கள் என்றே பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். கி.மு.150-இல் வரையப்பட்ட இலங்கையின் நாட்டுப்படத்தில் வடக்குகிழக்குவடமேற்குப்பகுதிகளும்தெற்கில் சில பகுதிகளும் தமிழ்மன்னர் ஆட்சிப் பகுதிகள் எனத் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளனகி.மு.543இல் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்று சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று அவர்களின் 'மகாவம்சம்என்ற சிங்கள நூல் குறிப்பிடுகிறதுவேறு சான்றுகளையும் ஆய்வாளர்கள் தருகின்றனர்.
சிறுபாணாற்றுப்படை(117-20),  புறநானூறு (176:6-7), பட்டினப்பாலை (191) போன்ற கழக (சங்கஇலக்கியங்கள்  பதியெழ லறியாப் பழங்குடியான தமிழ்க்குடியே இலங்கையின் சொந்தக்குடி என்பதற்குச் சான்று சொல்கின்றன அகநானூறு (88, 231, 307) குறுந்தொகையில் (189, 343, 360) மும்மூன்று பாடல்களும் நற்றிணையில் (366) ஒருபாடலும் எழுதிய ஈழத்துப் பூதன் தேவனார்தம் பாடல்களில் ஈழத் தமிழகத்தின் அகவாழ்வுச் சான்றுகளைக் காட்டியுள்ளார்.
1619இல் போர்த்துக்கீசியர் இலங்கையின் வடபகுதியையும், 1638இல் ஒல்லாந்தர் (டச்சுக்காரர்இலங்கையின் கிழக்குப் பகுதியையும், 1795இலும், 1815இலும் ஆங்கிலேயர் இலங்கையின் பல பகுதிகளையும் கைப்பற்றி ஆண்டனர்ஆங்கிலேயரே 1833இல் இலங்கை முழுவதையும ஓர் அரசின் கீழ் இணைத்தனர். இலங்கையை ஆங்கிலேயர் ஆண்டபோதுதமிழகப் பகுதிகளும் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தனதஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேயரே இலங்கைக்கும் ஆட்சியராக இருந்தார்.
ஏறத்தாழ ஐந்து ஆறு தலைமுறைகளுக்கு முன்னர்ஆசைகாட்டி ஆங்கிலேயரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மதுரை, முகவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களாவர்அவர்களே இந்தியாவினின்றும் இலங்கைக்குச் சென்ற குடிகள்.
ஆங்கிலேயர் ஆட்சியினின்றும் இலங்கை 04-02-1948இல் விடுதலை அடைந்ததுவிடுதலை பெற்ற கையோடு சிங்கள ஆட்சியாளர் இலங்கையின் தோட்டத் தொழிலாளர் பத்து இலக்கம் பேரின் குடியுரிமைஒப்போலை உரிமையைப் பறித்தனர்.(இலங்கையின் தோட்டத் தொழிலாளர் பட்ட துன்ப துயரங்களை 1980ஆம் ஆண்டில் தொலைக்காட்சி வழி பார்த்த இங்கிலாந்து மக்கள்இனிஇலங்கைத் தேயிலையை வாங்குவதில்லை என முடிவெடுத்து அறிவித்த செய்தி உலகம் முழுவதற்கும் இலங்கைத் தோட்டத் தொழிலாளரின் இரங்கத்தக்க நிலையை எடுத்துரைத்தது)
தமிழீழ மக்களால் "தந்தைஎனப் பெருமதிப்போடும் பேரன்போடும் அழைக்கப்பட்ட சட்ட அறிஞர் தலைவர் செல்வநாயகம் அவர்கள் பல்லாற்றானும் துன்புற் றுழலும் தமிழீழ மக்களின் இன்னலை நீக்கி வாழ்வுரிமையை உறுதிசெய்ய 1949இல் 'தமிழரசுக் கட்சி'யைத் தோற்றுவித்தார்பல அறப் போராட்டங்களைத் தமிழர்கள் அமைதியாக நடத்தினர்சிங்கள இனவெறி ஆட்சியாளர் அவற்றைப் பொருட்படுத்தவே யில்லை. 1956இல் தமிழுக்கு இடமளித்துச் சட்டம் வந்ததுஆனால்அச்சட்டம் கிடப்பில் போடப்பட்டதுஊர்திகளில் சிங்கள எழுத்து 'சிறீயைக் கட்டாயம் எழுத வேண்டுமென்ற ஆணையை எதிர்த்த தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
05-06-1956இல் இயற்றப்பட்ட இலங்கை அரசமைப்புச்சட்டம் தமிழரின் மொழி உரிமைசமய உரிமைகல்வி உரிமைகளைப் பறித்ததுகொந்தளிப்பான சூழலில்நிலைமை மோசமாகிவிடாமல் தடுக்கபண்டாரநாயகா 26-07-1957இல் தந்தை செல்வாவுடன் கலந்து பேசி ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்
ஆனால்அந்த ஒப்பந்தத்தின்படி சிங்கள அரசு நடந்து கொள்ளவில்லைபெரும் போராட்டங்களுக்குப் பிறகு, 1958இல் தமிழில் நுழைவுத் தேர்வுகளை எழுதலாம் என்றும் வடக்கு-கிழக்கு மாநிலங்களில் தமிழைப் பயன்படுத்தலாம் என்றும் ஒரு சட்டம் வந்ததுஆனால்,அதுவும் செயற்பாட்டுக்கு வரவில்லை
1965 தேர்தலில் சிங்களரின் பெரிய கட்சிகள் இரண்டிற்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. 14தொகுதிகளை வென்ற தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியின் துணைதரவைக் கேட்டுப் பெற்று ஆட்சிக் கட்டிலேறிய தட்லி சேனநாயகா  25-03-1965இல் தந்தை செல்வாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்ஆனால் அவரும் அவ்வொப்பந்தத்தை நிறைவேற்ற வில்லை.
தமிழர்களைப் புறக்கணித்து  22-05-1972இல் சிங்களர் கொண்டுவந்த அரசமைப்புச் சட்டமும் தமிழரின் மொழியுரிமை, மதவுரிமைகல்வியரிமைகளை மறுத்துசிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்றதுபுத்தமதம் அரசமதம் என்றதுதமிழின மாணவர் உயர்கல்வி தொழிற்கல்வியில் சேர, சிங்கள மாணவரைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டு மென்றதுகூட்டாட்சி அமைப்பை மறுத்துச் சிங்கள ஒற்றையாட்சியையே உறுதி செய்தது. இச் சட்டத்தை  25-05-1972இல் தமிழரசுக் கட்சியினர் செல்வாவின் தலைமையில் கூடித் தீயிட்டு எரித்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். பயனேதும் ஏற்படவில்லை.
இவ்வாறுஉரிமை பறிப்புகளும்ஒப்பந்த மீறல்களும், ஒடுக்குமுறைத் தாக்குதல்களும் தொலையாத் தொடர்கதையாகிப் போன பின்னர்தான்நிலையான தீர்வுக்குச் சிந்திக்கத் தொடங்கி, இலங்கை ஒற்றையாட்சியிலிருந்து தமிழர் தாயகம் தனியே பிரிந்து போக வேண்டும் எனத் தமிழீழத் தலைவர்கள் முடிவெடுத்தனர். இம்முடிவே  14-05-1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாகப் பின்னர் நிறைவேற்றப்பட்டது.
தந்தை செல்வா, 'தமிழர்களுக்கான விடுதலை பெற்ற நாடு வேண்டும்என்பது தமிழீழ மக்களின் தீர்மானமே என்பதை விளக்கமாக வெளிப்படுத்த விரும்பினார்அதற்காகவேதம்முடைய 'காங்கேசன் துறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினின்றும்  03-10-1972இல் விலகினார் பிறகு அத்தொகுதிக்கு 05-02-1975இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர்களின் தமிழீழப் பிரிவினைத் தீர்மானத்தை முன்வைத்துப் போட்டியிட்டார்மக்கள் அவரைப் பெருவெற்றிபெறச் செய்து தமிழீழ விடுதலையே தமக்கு விடிவு தரும் என்ற தங்களின் முடிவினைத் தெளிவாக அறிவித்தனர் நாடாளுமன்றம் சென்று தமிழீழ விடுதலை பெற்றே தீருவோமெனச் செல்வா முழங்கினார்.
இதற்கிடையே, 1974 சனவரியில் யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. 10-01-1974 பிற்பகலில் மாநாட்டின் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு இருக்கும்போது வந்த நாற்பது காவலர்கள்மாநாட்டில் கலந்து கொண்டோரைக் கலைந்து செல்லும்படி அறிவித்துக்கொண்டே, அங்குக் கூடியிருந்த ஐம்பதினாயிரம் தமிழ் மக்களையும் அல்லோலகல்லோலப் படுத்தினர்ஆண்பெண்களின் உடைகளை உருவி அலறியோட அடித்தனர்!  துமுக்கியாலும் சுட்டனர்! மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பலர் மின்தாக்குதலுக் குள்ளயினர்இக்கொடிய வன்தாக்குதலில் 11பேர் உயிரிழந்தனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று உயிருக்குப் போராடினர்!
உரிமை பறிப்புகளும் ஒப்பந்த மீறல்களும் உருவாக்கிய நம்பிக்கையின்மையாலும்,  1956, 1958, 1961, 1974ஆம் ஆண்டுகளில் இலங்கையில்  தொடர்ந்து நடந்த சிங்களக் கொலை வெறியாட்டத்தாலும்இனஅழிப்புத் தாக்குதல்களாலும் தமிழர்கள் செய்வதறியாது கலங்கி நின்றனர்
இந்நிலையில்யாழ்ப்பாணத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த கொடுங்கொடிய தாக்குதலில் குழந்தைகளும் பெண்களும் முதியோரு மடங்கிய தமிழ்மக்கள் பட்ட சொல்லொணா அல்லல் அவலங்கள் ஈழத்தமிழ் இளைஞரைச் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக எழுச்சி கொள்ளச்செய்தன. 05-05-1976இல் ஈழத்தமிழ் இளைஞர்கள் புதிய இயக்கத்தை உருவாக்கினர்.
காவற்படையும்போர்ப்படையும் கொண்டு சிங்கள அரசு தமிழினத்தை அடக்கி ஒடுக்கி அழிக்கும் போக்கு தொடர்ந்ததால் இலங்கையில் தமிழினம் வாழ்வுரிமையை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில்கொடுமைகளை எதிர்த்து நிற்கவும்தங்களைக் காத்துக் கொள்ளவும் ஆய்தம் தாங்கிய ஒரு படையை உருவாக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்கு ஈழத்தமிழர் தள்ளப்பட்டனர்
அவ்வாறு,படையை உருவாக்கிக் கருவியேந்திப் போராடித் தம் தாயகத்தை நிறுவிய நாடுகள் பல உள்ளனஅந்நாடுகள் அ.நா. அவையின் (U.N.O) அனைத்துலகச் சட்டங்களின்படி ஒத்தேற்கப் பட்டுள்ளன (U.N.O. Declaration 1970, Universal Declaration of Human Rights, Section 15) என்பது அறியத்தக்க செய்தியாகும்.
ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்கும் பெருமுயற்சிக்கே தம்வளங்களையும் வாழ்நாட்களையும் செலவிட்ட ஈகச்செம்மல் தந்தை செல்வா  27-04-1977இல் மறைவுற்றார்.  1977 ஆகத்து மாதத்தில் யாழ்ப்பாணத்திலும் திருக்கோணமலையிலும் சிங்களரால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதுபலர் கொல்லப்பட்டனர்.
1977ஆம் ஆண்டில் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியார் தலைமையில் நடந்ததுதமிழகத் தலைவர்கள் பலரும் அறிக்கை வழி கண்டனம் தெரிவித்தனர்சிங்கள அரசின் ஒடுக்குமுறை ஓயாது தொடர்ந்தது.
11-07-1979இல் செயவர்த்தனா நிறைவேற்றிய அச்சுறுத்த வன்முறைத் தடுப்புச் சட்டம் தமிழர்களைக் கொடுங்கொடிய முறையில் வேட்டையாடியது. 1981ஆம் ஆண்டில் தமிழர்க்கெதிராகத் தீயிட்டழிப்புகொள்ளைகொலைகற்பழிப்பு நடந்ததை நாடாளுமன்றில் அமைச்சரே ஒப்புக் கொண்டார்.
1983இல் சிங்கள அரசு மேற்கொண்ட அரச அச்சுறுத்த வன்முறைகளும்சிங்களக் காடையரின் கொள்ளை கொலைக் கொடுமைகளும், தமிழ்ப்பெண்கள் பலவகைக் கொடுமைகளுக் காளாக்கப்பட்டுச் சீரழிக்கப்பட்டமையும்சிறையிலிருந்த தமிழர்களைக் கொடுந் தாக்குதலால் படுகொலை செய்தமையும் தமிழ்நாட்டு மக்களைப்பேரெழுச்சி கொள்ளச் செய்தனஈழத் தமிழர்க்காகப் பரிந்து எழுந்த தமிழகத் தமிழர்களின் பேரெழுச்சிஇந்தியாவை அதிர்ந்து குலுங்க வைத்ததோடு அனைத்து உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது.
இலங்கையில் இன்றுவரை  70,000 தமிழர்களுக்குமேல் கொல்லப் பட்டிருக்கிறார்கள்ஏறத்தாழ ஏழு இலக்கம் பேர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து அல்லலுக் குள்ளாகி யுள்ளனர். உள்நாட்டில்  ஐந்து இலக்கம் பேர் இடம்பெயர்ந்து இன்னற் படுகின்றனர்.
இனவெறிச் சிங்கள அரசு இந்தியா பாக்கித்தான், இசுரேல், அமெரிக்கா முதலான நாடுகளிடமிருந்து ஆய்தங்களையும், வானூர்திகளையும்போர்ப் பயிற்சிகளையும்உளவு அறியும் உதவிகளையும் தடையின்றிப் பெற்றுத் தமிழர்களை ஒடுக்கி யும் அழித்தும் வருகிறதுசொந்த நாட்டு மக்களையேதமிழர்கள் என்ற காரணத்தால் முப்படைகளையும் கொண்டு  கண்டமேனிக்குக் குண்டு வீசிக் கொன்று குவிக்கின்றது.
குழந்தைகள்பள்ளிச்சிறார்,முதியோர் என்றும், கோயில், பள்ளிவாயில், திருச்சவை என்றும் எந்த வேறுபாடும் கருதாமல் குண்டுமழை பொழிந்து கொல்கின்றது. 22-02-2002இல் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை நார்வே முதலிய நாடுகளுக்கும் தெரிவிக்காமல் தன்விருப்பமாக முறித்துக் கொண்டு, இலங்கை மண்ணில் தமிழர்களே இல்லையெனும்படியான நிலையை உருவாக்கும் நோக்கில்கொடுமையாகக் கொலைவெறித் தாக்குதல் செய்து வருகிறது.
ஈழத்தமிழருக்கும் தமிழ்ஈழ விடுதலைக்கும் துணைநிற்கும் பேரெழுச்சியான நிலைமை  1983முதல் தமிழகத் தமிழரிடம் காணப்பட்டதுஆனால், 1991இல் நடந்த இராசீவ் காந்தி கொலைக்குப் பின்னர்அவ்வெழுச்சி குறைந்து போனதுஅதே போழ்தில், தமிழ் ஈழத்தைப் பற்றியும் ஈழப் போராளிகளைப் பற்றியும் பேசஎழுதவும் தயங்குகின்ற நிலை அடக்குமுறை அச்சுறுத்தலால் உருவாக்கப் பட்டதுஇன்னும்தமிழ்தமிழர் என்றாலே தடை, தளைப்படுத்தம், சிறைப்படுத்தம் என்ற நிலை ஏற்பட்டது. என்றாலும்துணிவும் உணர்வும் மிக்க சிலரால் இந்த இறுக்கமான நிலையில் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வேற்பட்டு வருகிறது.
இந்த மண்ணில்ஈழப் போராளிகளால் எவ்வகை வன்முறை நிகழ்வதையும் தமிழகத்தில் உள்ள எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்அதே போழ்தில்தமிழகத் தமிழரின் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்கள் அவர்கள் கண்முன்னேயே அல்லற் படுவதையும் அழிவதையும் எங்ஙனம் பொறுமையோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள்?
ஆகத்து 2002 முதல்-9 என்னும் பெயரிய யாழ்ப்பாண நெடுஞ்சாலையை மூடியதால்யாழ்ப்பாணத்திலுள்ள இலக்கக் கணக்கான தமிழ்மக்கள் இன்றியமையா உணவுப் பொருள்களான அரிசி முதலானவும்மருந்துதுணி முதலானவும் கிடைக்காமல் பட்டினியாலும் நோயாலும் சாகின்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தம் அரத்த உறவான யாழ்ப்பாண மக்களுக்கென அளித்த உணவுமருந்துப் பொருள்களைச் செங்குறுக்கைக் கழகத்தின் வழியாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்புதற்கும் இந்திய அரசு இசைவு தரவில்லைபலரும் பலவாறு வேண்டுகோள்கள் விடுத்தும் தமிழ்நாட்டரசும் கண்டுகொள்ளவில்லை!
இனஅழிப்பிற் காளாகி அழியும் ஈழத் தமிழர் நிலையில்இந்திய அரசிலும் தமிழ்நாட்டரசிலும் ஆட்சியாளர் மாறியதால் எவ்வகைப் புதிய விளைவும் ஏற்படவில்லைஇராசீவ் காந்தி கொலையுண்ட நிகழ்ச்சியுடன் 40 இலக்கம் ஈழத்தமிழரின் நிகழ்கால எதிர்கால வாழ்வை முடிச்சுப் போடக்கூடாது என்று  'தினமணி' (20-04-2002) ஆசிரியருரையும், 'தமிழ் ஓசை' (13-02-2008ஆசிரியருரையும் மற்றும் பல்வேறு  நடுநிலை அறிஞர்களின் கூற்றும் வலியுறுத்தியதை ஆட்சியாளர் கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை.
நடுவண் அரசிலும் தமிழ்நாட்டு அரசிலும் அமர்ந்துள்ள தமிழர்களாகிய அமைச்சர்களும்நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களும்தமிழ்மண்ணில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களாக வலம் வந்துகொண் டிருப்போரும்தமிழராக உள்ள ஒவ்வொருவரும் நெஞ்சில் கைவைத்து எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமிதுஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் தமிழினத்தின் போராட்டமாகும்.அப்போராட்டம் தக்க தீர்வினை எட்டாமல்எக்காரணங் கொண்டும் வீழ்ச்சி அடையக்கூடாதுஈழத்தமிழர் வீழ்ந்தால் அதுதமிழினத்தின் வீழ்ச்சியாகவே அமையும்!
இந்த இக்கட்டான சூழலைப் புரிந்து கொள்ளாமல் பொருள் சுரண்டும் அரசியலிலும்நாற்காலிக் கனவு நாட்டத்திலும், தன்னலவெறிப் போக்கிலுமே தமிழகத் தலைவர்கள் சென்று கொண்டிருப்பா ராயின்தீராப்பழி வந்து சேரும்! தமிழர் வரலாற்றில் இழிவு சேர்க்கும் பக்கங்களுக்குக் காரணமாகிப் போவோம்! எள்ளி நகைக்க இலக்காகிப் போவோம்!  இவ்வுண்மையை மறந்துவிடக் கூடாது!
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை ஓராயிரம் முறைக்கும் மேல் கடுந் தாக்குதல் நடத்தியிருக்கின்றதுதமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளையும்அவர்கள் பிடித்த மீன்களையும்படகுகளையும் கொள்ளையடித்துக் கொடுங் கூத்தாடி அவர்களைச் சுட்டுக் கொன்று வருகின்றது. 250க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சிங்களவெறித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்பல நூறு மீனவர்கள் படுகாயப் படுத்தப் பட்டுள்ளனர்.
பலமுறை தமிழ்நாட்டு மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே சிங்களக் கடற்படை யினரால் தாக்கப்பட்டு ள்ளனர்இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம் இந்தியக் கடற்படையும் கடலோரக் காவற்படையும் எங்கே போயிருந்தார்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியாதுஒரு முறையும் கூட இவர்கள் தமிழக மீனவர்களை சிங்களர் தாக்குதலினின்றும் தடுத்துக் காத்ததாகச் செய்தி வந்ததில்லைஓரிரு இலக்கம் உருவாக்களை இழந்த உயிர்களுக்கு இழப்பீடாகத் தந்துவிட்டுக் கடமையை முடித்துக் கொள்ளும் அரசாக தமிழ்நாட்டரசு இருந்துவருகிறது.
இந்நிலையில் இந்திய அரசுசிங்கள இனவெறி அரசுக்குக் கதுவீ (RADAR) உள்ளிட்ட உளவுக் கருவிகளும்ஆய்தங்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து கொடுத்து வருகின்றதுபூனாத் தேசியப் பாதுகாப்புக் கழகத்திலும் பிற இடங்களிலும் வழக்கமாகப் பிற நாட்டினர்க்கு விளக்கப்படாதவை பற்றியெல்லாம் இலங்கைப் படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு விளக்கிக் கூறிப் பயிற்சி தரப்படுகின்றதுஇந்தியப் படையின் உளவுப்பிரிவு அதிகாரிகள் குழு கொழும்பு சென்றுஅங்குப் போர்ப்படை உளவுப் பயிற்சிப் பள்ளி அமைப்பதற்கு ஆவன செய்து தருகின்றது (தமிழ் ஓசை-11-02-2008என்ற செய்தியும் வருகின்றது.
இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களின் குருதிவழிச் சொந்தங்களைக் கொன்றழிக்கவும் இன்னும் தமிழ்நாட்டு மீனவர்களையே தாக்கிக் கொல்லவும்இந்தியா இலங்கை அரசுக்குச் செய்யும் பல்வேறு உதவிகளும் சிங்களர்க்குப் பயன்படுகின்றன.  இவ்வகையில்தமிழர்களின் வரிப்பணமே தமிழர்களைத் தாக்கவும் அழிக்கவும் பயன்படுத்தப் படுகிறது எனில், மிகையன்று.
தமிழ்நாட்டரசு இவற்றைத் தக்கவாறு எதிர்த்துத் தடுக்க வேண்டுமல்லவா இந்தியஅரசை முறையாகச் செயற்படச் செய்து ஈழத்தமிழரையும் தமிழக மீனவரையும் காக்க வேண்டாவா? பதவிக்காகவோ வேறு அரசியல் பயன்களுக்காகவோஇந்திய அரசை வற்புறுத்தித் தமிழர்களைக் காத்திடும்படிச் செயற்படச் செய்யாமல்வாய்மூடி இருப்பதை விட இல்லாமற் போவதே மேலல்லவா!
இந்த அரசுகளை வற்புறுத்தி ஈழத் தமிழினத்தைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழினம் உள்ளதுதமிழிளைஞர்கள இம்முயற்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும்இக்கடமையில் தவறினால்ஈழத்தமிழர் நசுக்கி அழிக்கப்பட்டு விடுவார்கள். நெருக்கடியான இக்காலக் கட்டத்தில் விழிப்புற் றெழுந்து இதைக் கட்டாயம் செய்தாக வேண்டும். இல்லையேல்தீராப்பழி ஏற்று இழிவைச் சுமக்க வேண்டியவர்களாகிப் போவோம்!
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்என்று கூறும் புறநானூற்று வரிகள் வெறும் எழுத்துகள் அல்லவே!

-----------------------------------------------------------------------