தமிழாக்கம் - உண்மைக் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழாக்கம் - உண்மைக் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 அக்டோபர், 2008

வள்ளியா வந்தாள்?




 (ஆங்கிலமூலம்: ஆபிரகாம் தொ.கோவூர் ***  தமிழாக்கம் : தமிழநம்பி)  
            பத்தாண்டுகளுக்கு முன், அனுராதபுரத்திற்கு அருகிலுள்ள ஆலங்குளாமாவைச் சேர்ந்த பதின்பருவப் பெண்ணான சிவி, நோய்களைக் குணப்படுத்துவது, வருவதுரைப்பது ஆகிய 'தெய்விய' ஆற்றல்களைத் திடீரென்று பெற்றாள். 'வள்ளி' என்ற பெண்கடவுள், அவள் மூலமாக வியத்தகு நிகழ்ச்சிகளைச் செய்து வந்தது. 

           
சிவி-யின் புகழ் நாடெங்கிலும் பரவியது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் தோறும் சிவியின் தோட்டத்திலுள்ள சிறு கோவிலில், நெடுந் தொலைவி லிருந்தும் ஆண்களும் பெண்களும் கூட்டமாகச் சேரத் தொடங்கினர். இந்நாட்களில், இரவு முழுமையும் உடுக்கையொலி பாட்டுகளுடன் பூசைகள் நடந்தன. பூசையின் போது, சிவி மருள் வந்து - மெய்ம்மறந்த நிலைக் குள்ளாகி -நோய்களைக் குணப்படுத்துவதும், வருவது உரைப்பதுமான வியத்தகு நிகழ்ச்சிகளைச் செய்தாள். 

           
மருத்துவர்களால் குணமாக்க முடியாதவர்கள் என்று கைவிடப்பட்ட நோயாளிகளை அவர்களின் உறவினர்கள் சிவியிடம் அழைத்து வந்தனர். சிவி என்ன செய்தாள்? அவளுடைய 'தெய்விய'க் கைகளை அந் நோயாளிகளின் தலையில் வெறுமனே வைத்து அவர்கள் நெற்றியில் ஒரு 'துய்ய' நெய்யைத் தடவுவாள். இவை அனைத்தும் எளிய கையுறையான 'பதினான்கு வெற்றிலையில் மடித்து வைக்கப் பட்ட இரண்டு உருவா'வுக்குத்தான்! இச் சிறு காணிக்கையும் தர இயலாதார்க்கு இலவய மருத்துவம் அளிக்கப்பட்டது.

           
நோயைக் குணப்படுத்துகிறவள் என்பதைவிட, குறி சொல்கிறவள் என்றே சிவியை நாடெங்கிலும் தெரிந்திருந்தது. இப் புகழே, தொலைவான இடங்களிலிருந்தும் கூட்டத்தை அவள் வீட்டுக்கு அழைத்து வந்தது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிவியி்ன் கோயிலுக்குச் செல்லும் சந்துக்கு எதிரிலிருந்த தலைச்சாலையில் வரிசையாக மகிழுந்துகள் நிறுத்தப் பட்டிருக்கக் காணலாம். வரையறுக்கப் பட்ட கட்டணம் இரண்டு உருவாவாக இருந்த போதிலும், கொழும்பிலிருந்து வந்த பணக்காரப் புரவலர்கள் மிக அதிகம் செலுத்தினர். பலருக்கு, அத்தொகை கட்டணமாக இல்லாமல், பெண்கடவுள் வள்ளிக்குச் செலுத்தும் காணிக்கையாகவே பட்டது.

           
சிவியிடம் கணி கேட்ட பலர், அவர்களைக் கொள்ளை யடித்தவர்களைப் பற்றிய செய்தியைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் வந்தவர்கள். தாம் துணிந்து இறங்கிய புதிய முயற்சியின் வெற்றி தோல்வி பற்றி அறிய வந்தவர்கள் சிலர். தன் பத்தர்களின் கேள்விகளுக்கு விடையளிப்பதில் சிவி ஒருபோதும் தவறியதில்லை. சிவியின் தந்தை அவர்களின் காணிக்கையைத் தண்டுவதில் ஒருபோதும் தவறுவதில்லை!

           
சிவியிடம் கணி கேட்டவர்கள், அவள் வருவது உரைத்ததைப் பற்றியோ, அல்லது குணப் படுத்தியதைப் பற்றியோ குற்றங் குறை கூறி இரண்டாம் முறை ஒருபோதும் வந்தது இல்லை. மாற்றாக, அவர்கள் இன்னும் திறமையாகக் குறி சொல்லும் மற்றவர்களிடம் சென்றனர். 

           
தேர்தல் நேரங்களில், சிவியின் தோட்டம் எதிர்பார்க்கக் கூடிய அரசியல் வேட்பாளர்களின் கூட்டத்தால் நிரம்பியிருக்கும். வெற்றி வாய்ப்புள்ளவர்கள், இல்லாதவர்கள் ஆகிய இருநிலை வேட்பாளர்களும் வெற்றி பெறுதற்குச் சிவியின் வாழ்த்துக்களைப் பெற்றுச் சென்றனர்! தேர்தல்கள் முடிந்தபின், வெற்றிபெற்ற வேட்பாளர்கள், தம் 'தொண்டர்களு'டன் நன்றிக் காணிக்கைச் செலுத்தற்குச் சிவியிடம் மறுபடி வந்தனர். தோல்வியுற்றவர்களோ, அடுத்த தேர்தலுக்கு முன், இன்னும் நன்றாகக் குறி சொல்லுகிறவர்களை நாடிச் சென்றனர்.

           
சிவியின் தெய்விய ஊடகத்தொடர்பு, சிவியின் பெற்றோருக்குக் குருட்டடி நற்பேறாக அமைந்தது. பத்தாண்டுகளுக்கு முன், அவள் தெய்விய ஊடகமாக ஆன நாளிலிருந்து குடும்பத்தின் பொருளியல் நிலை மிகப்பெரிய அளவில் முன்னேறத் தொடங்கியது. பொருளியல் மூலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதும் கோயிலின் நிலையும் மேம்படத் தொடங்கியது. பல தலைகளையும் பல கைகால்களையு முடைய கடவுளர் படங்கள், மாந்த உடலும் விலங்கின் தலையுமுடைய சில படங்கள் எனப் பல்வேறு வகைப்பட்ட படங்கள் மேலும் மேலும் கோயிலின் சுவர்களை அணிசெய்யத் தொடங்கின.

           
இரவு முழுவதும் ஒளியூட்டுவதற்காக மங்களை (பித்தளை) விளக்குகளின் எண்ணிக்கை அதிகமாக்கப் பட்டது. வள்ளிக்காக ஒரு சிறப்பு இருக்கை கட்டியமைக்கப்பட்டது. பூசையின் போது சிவி அணிவத்ற்காக, பலநிற சிறப்பாடை ஒன்று உருவாக்கப் பட்டது. உடுக்கை அடிப்பவர்களும், பாடகர்களும் அதிகமாக வாடகைக்கு அமர்த்தப் பட்டனர். பூசையின் போது ஒலிப்பதற்காகக் கோன்மணியும் ஊது சங்குகளும் வாங்கப்பட்டன. 

           
சூடம் கொளுத்த ஒரு தனி பலிமேடை கட்டியமைக்கப்பட்டது. கோயிலின் முன்பாகச் சூறைத் தேங்காய் உடைப்பதற்கெனப் பலகைக்கல் ஒன்று நடப்பட்டது. கடவுளர் படங்கள் மல்லிகை மலர் மாலைகள் அணிவிக்கப் பட்டன. நோயரின் தலையில் தடவுதற்காக ஒருவகை 'துய்ய' நெய் உருவாக்கப் பட்டது. பரந்தகன்ற சட்டமிடப்பட்ட வள்ளியின் படம் சிவியின் இருக்கைக்கு எதிரே வைக்கப் பட்டது. அளவுக்கதிகமாக மாலைகள் இடப்பட்ட இப் படத்தின் இருபுறங்களிலும் இரண்டு குத்துவிளக்குகள் எரிந்தன. பத்தர்கள் இப்படத்தின் முன்பாகப் பூச் சொரிந்தனர். 

            '
சா-எலா'வைச் சேர்ந்த இலங்கைப் பகுத்தறிவாளர் அமைப்பின் உறுப்பினரான திரு. ஈ.சி.எசு. பெர்னான்டோ சிவியின் பெற்றோர்களை அறிந்தவர். சிவியை 'மருள்' வந்தவளைப் போலும் நடந்து கொள்ளச் செய்தது வள்ளியோ அல்லது வேறு ஆவியோ இல்லை, ஒருவகை மனநோயே என்று சிவியும் அக் குடும்ப உறுப்பினர்களும் புரிந்துகொண்டு ஏற்கும்படி செய்வதில் அவர் வெற்றி கண்டார். 

           
சிவியின் பெற்றோரும் எண்ணற்ற பத்தர்களும் ஏமாற்றமடைய, 1964 ஏப்பிரல் 10 முதல், சிவி வள்ளியின் வேடமேற்க மறுத்துவிட்டாள். அவளுடைய பெற்றோரும் உடுக்கை அடிப்போரும் பாடுவோரும் ஒன்றிணைந்து திரும்பத் திரும்பக் கூறியும் சிவி பூசையில் கலந்து கொள்ள மறுத்து விட்டாள். தான் பிற பெண்களைப் போல் இருக்க விரும்புவதாகக் கூறி மறுத்தாள். 

நேர்காணல் 

           
1964 செப்டம்பர் 21 அன்று, இலங்கைப் பகுத்தறிவாளர் அமைப்பின் முன்னாள் செயலரான திரு. பெர்னான்டோ, தேர்வுகள் துறையில் பணிபுரியும் அவருடைய நண்பர் திரு. சோமதிலகேவுடன் உளத்தியல் மருத்துவத்திற் காகச் சிவியை என்னிடம் அழைத்து வருதற்கு நாள் உறுதி செய்ய வந்தார். 1964 செப்டம்பர் 26, காலை 9.30 மணிக்கு நேர்காணல் என்று முடிவு செய்யப்பட்டது. 

     திருவாளர்கள் பெர்னானடோவும் சோமதிலகேவும், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான சோமதிலகேயின் தாயாரும், ஆங்கிலப்பள்ளி ஆசிரியையான செல்வி கொடிக்காராவும், சிவியும், அவளுடைய தந்தைவழிப் பாட்டியும் கொண்ட குழு குறிப்பிட்ட நாளில் வந்து சேர்ந்தது. அக்குழுவினருடன் வருவார்களென்று எதிர்பார்க்கப்பட்ட சிவியின் பெற்றோர் அனுராதபுரத்தில் இருந்து குறித்த நேரத்தில் வந்து சேரத் தவறினர். 

     என்னுடைய புலனாய்வைச் சிவியின் பாட்டியிடம் தனிமையில் கேட்டுத் தெரிந்து கொள்வதின் வழித் தொடங்கினேன். செல்வி கொடிக்காரா மொழிபெயர்ப்பாளராக இருந்தார். அந்தப் பாட்டியிடமிருந்து கீழ்க்காணும் செய்திகளை என்னால் திரட்ட முடிந்தது.

     சிவியின் இப்போதைய அகவை இருபது. அவள் பத்தாண்டினளாக இருந்த போது ஒருநாள் பள்ளிக்கூடத்தில் நினைவிழந்தாள். பள்ளிக்கூடப் பொறுப்பாளர்கள் அவள் பெற்றோர்க்குச் சொல்லி யனுப்பினார்கள். அனுராதபுரத்தில் உள்ள அரசு மருத்துவரிடம் சிவி அழைத்துச் செல்லப்பட்டாள். அடிப்படையாக அவளிடம் எந்தப் பிழைபாடும் இல்லை எனவும், செரிமானமின்மையாலோ, வயிற்றின் மிகுநிறைவு காரணமாகவோ மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அம்மருத்துவர் கருதினார். 

     இரண்டு மாதங்களுக்குப் பின்னர், வயலில் இருந்தபோது, சிவி இரண்டாம் முறையாக மயக்கமுற்றாள். மறுபடியும் அவள் அம் மருத்துவரிடம் கொண்டு செல்லப் பட்டாள். இம்முறை, அவர் சிவியை வியன்னாக்காரரான நரப்பு-உளத்தியல் மருத்துவர் கிரில்மேயரிடம் காட்டும்படி அறிவுறுத்தினார். 

     கொழும்பு மருத்துவமனையில், மருத்துவர் கிரில்மேயர், சிவியின் மூளை அலைகளை மின்துகளிய மூளைவரைவி-யில் பதிவு செய்தார். அமைதிப்படுத்தும் மருந்துகள் சிலவற்றைக் குறித்துக் கொடுத்தார். அதன் பிறகு ஏதும் தொல்லை இல்லாதிருந்ததால் சிவி பள்ளிக்குச் செல்வதைத் தொடர்ந்தாள். 

சூழியம்
     சில மாதங்களுக்குப் பின், சிவி மறுபடியும் உணர்விழப்பு - மயக்கம் - அடைந்தாள். இம்முறை பெற்றோரும் நெருங்கிய உறவினர்களும் தீய ஆவிகளே சிவிக்கு ஏற்பட்ட தாக்கத்திற்குக் காரணம் என்று முடிவு செய்தனர். மருத்துவர்களிடம் காட்டிக் "காலத்தை வீண்டிப்பதை"விடத் திறமையான மந்திரக்காரரிடம் காட்டுவதற்கு இதுவே நேரம் என்று அவர்களனைவரும் கருதினர். இப்படியாகச் சிவி ஒரு மந்திரக்காரனிடம் அழைத்துச் செல்லப் பட்டாள். 

     அம் மந்திரக்காரன், சிவியின் கடுந் துனபத்திற்குக் காரணம் ஒரு தீயஆவி என்று உறுதியாகக் கூறிப், பேயோட்டச் சடங்குச் செய்ய வேண்டு மெனக் கூறினான். அச் சடங்கின்போது, அப் பேயோட்டி, சிவியின் தோளில் ஒரு மந்திரித்த கயிற்றைக் கட்டினான். கழுத்தில் ஒரு பட்டுத் துணியைச் சுற்றினான். அந் நாளிலிருந்து, சிவி மயக்க மடைந்ததோடு, தொடர்பற்ற சொற்களை அவ்வப்போது முணுமுணுக்கத் தொடங்கினாள். சிவியின் பெற்றோர் அவளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினர். 

     அவளுடைய நிலை மேலும் மோசமடைந்தததால், சில நல்லெண்ணக் காரர்களின் அறிவுறுத்தலின்படி, புத்தாலம் மாவட்டம் பகலகாமாவில் கடவுளச்சி வள்ளிக்குக் காணிக்கை யாக்கப்பட்ட புகழ்மிக்கக் கோயிலுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். இந்தக் கோயிலின் பூசாரி முழுக் கதையும் கேட்டான். ஆரவாரமான மந்திரிப்பிற்குப் பிறகு, சிவியின் பெற்றோரிடம், அவளைப் பிடித்திருக்கும் பேயை ஓட்ட, அடுத்தடுத்த மூன்று நாட்களில் மூன்று சிறப்புப் பூசைகள் நடத்த வேண்டுமென்றான். 

     அவர்கள் வீட்டிற்குச் செல்லலா மென்றும், ஒரு குறிப்பிட்ட நாளில் முதல் பூசையை நடத்த வர வேண்டுமென்றும் சொல்லப் பட்டனர். அந்தப் பூசாரி, அம்மூன்று பூசைகளையும் நடத்துவதற்காகக் கொண்டு வரவேண்டிய பொருள்களின் பட்டியலை முழுமையாகத் தந்தான். அவனால் குறித்துக் கொடுக்கப்பட்ட பொருள்களில் சிவியின் உயரத்தில் தூய தங்கத்தில் செய்யப்பட்ட தொடரி (chain)யும் ஒன்று. 

பூசைகள் 

     4அடி 10 விரற்கிடை நீளமுள்ள தங்கத் தொடரி உள்பட பல்வேறு பொருள்களைத் திரட்டுவதற்கே அடுத்த சில நாள்கள் சரியாயிருந்தன. ஒப்புக்கொண்ட பொருள்கள் அனைத்தையும் பெறுவதில் ஆன பெருஞ்செலவு அல்லாது, அப் பூசாரிக்கு மூன்று நாள்களும் உருவா 137, 147, 157எனப் பூசைக் கட்டணம் கொடுக்கப்பட வேண்டும். மூன்று நாட்களும் பூசையின் போது, சிவி மெய்ம்மறந்த நிலைக்கு ஆளாக்கப் பட்டு, அப் பூசாரியுடன் கூத்தாடினாள். 

     மூன்றாம் நாள் பெருங்களிப்புக் கூத்து நிலையில், சிவி, தன்னை வள்ளி என்று கூறிக் கூச்ச லிட்டாள். அந்தக் கோயில் முறையாக நல்ல நிலையில் பேணப் படாததால் வள்ளி இனிமேல் அங்கு வரமாட்டாள் என்றும், ஈடாக சிவியி்ன் வீட்டிற்கு வருவாள் என்றும் கூறினாள். பூசாரியின் எதிர்காலத் தொழிலுக்கு இது ஒரு பேரடி யாகியது. மூன்றாம் நாளுக்குப் பிறகு அக்கூட்டத்தினர் ஆலங்குளாமாவிற்குத் திரும்பி வந்தனர். 

     இப்போது சிவி அவளுடைய கழுத்திலும் கைகளிலும் நிறைய மந்திரிக்கப்பட்ட கயிற்றைக் கட்டியிருந்தாள். அந்தப் பூசாரி சிவிக்கு எந்தத் தொல்லையும் வராது என்று உறு்தி அளித்திருந்த போதிலும், அடுத்த நாள் சிவி ஆழ்ந்த நினைவிழந்த நிலைக் குள்ளானாள். அம் மெய்ம்மறந்த நிலையின் போது அவள் பூசை நடத்துவதற்காகத் தோட்டத்தில் ஒரு கோயில் வேண்டுமெனக் கேட்டாள். 

     இதனைக் கடவுளச்சி வள்ளியின் கட்டளையாக எண்ணிக் கொண்டு தந்தையார் பெருந் தொகையைச் செலவிட்டு, அவருடைய தோட்டத்தில் ஒரு கோயில் அமைத்தார். வாடகைக்கு உடுக்கை அடிப்போர் மற்றும் மந்திரக்காரர் உதவியுடன் நாள்தோறும் பூசைகள் புதிய கோயிலில் நடந்தன. 

     ஒவ்வொரு நாளும் உடுக்கை அடித்ததும் சிவி மெய்ம்மறந்த நிலைக்குள்ளானாள். பூசையின் போது கோயிலில் கூடிய அக்கம் பக்கத்தார் கடவுளச்சி வள்ளியே சிவியின் வழியாகப் பேசுவதாக உறுதி செய்து அவளை வழிபடத் தொடங்கினர். 

     இரவு பூசைகள் இரண்டு கிழமைகள் நடந்தன. ஒவ்வொருநாளும் 'மருள்' வந்து ஆடுவது சிவியைக் கடுஞ் சோர்வுக் குள்ளாக்குவதை அறிந்து, இரவு பூசைகள் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே வைத்துக் கொள்ளத் தந்தையார் முடிவு செய்தார். 

     கடவுளச்சி வள்ளி சிவியின் உடலில் தோன்றுவதைப் பற்றிய செய்தி நாட்டி்ல் பரவத் தொடங்கியது. எண்ணற்ற மக்கள் வள்ளியின் அருளைப் பெறவும் அவர்களுடைய சிக்கல்கள் தீர்க்கப் பெறவும் அந்தப் புதிய கோயிலுக்கு வரத் தொடங்கினர். சிவியின் பெற்றோர் அவர்களுடைய மகளைப் பற்றிய கவலையை விட்டனர். 

     கடவுளச்சி வள்ளி சிவியி்ன் உடலில் வருவதை, அவள் சிவிக்கு அருளிச் செய்வதாகப் பெற்றோர் கருதினர். கடவுளரின் அருள் வாழ்த்தே அது என அவர்கள் கருதிக் கொண்டனர். பொருள் நிலையிலும் கூட அவர்கள் வளம் பெற்றனர். குடும்பத்திற்குப் பொருள் வரும்படியையும் எளிதில் நம்புகின்ற ஆயிரக்கணக்கான முட்டாள்களுக்குக் கற்பனை நலனையும் தந்த இந்த வளமான காலப்பகுதி பத்தாண்டுகளுக்குத் தொடர்ந்தது. 

     சிவியின் வேண்டுகோளின்படி, 1964 ஏப்பிரல் 10-இல் பூசைகள் நிறுத்தப் பட்டதால், அந்தக் கோயில் தகர்த் தழிக்கப்பட்டது. உடுக்கை அடிப்போரும் பாடகரும் அனுப்பிவிடப் பட்டனர். சிவி மருள் வரும் நிலையினின்றும் விடுதலையானாள். பூசைகள் நிறுத்தப் பட்டபின், நான்குமாத காலத்தில், சிவி இரண்டு முறை நினைவிழந்த நிலையுற்றாள். ஆனால், ஒருபோதும் வள்ளிபோல் நடந்து கொள்ளவோ பேசவோ இல்லை. 

     இந்தக் கட்டத்தில், சிவியின் பாட்டி கீழே அனுப்பப் பட்டாள். உசாவுதற்காக சிவி மேலே அழைக்கப் பட்டாள். செல்வி கொடிக்காரா மொழிபெயர்ப் பாளராக இருந்தார். சிவியின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் நெருங்கிய உறவு பற்றியும் அவளுடைய உள்மன உணர்வுகளைப் பற்றியும் பேரளவிலான செய்திகளை என்னால் திரட்ட முடிந்தது. 

     சிவியை அறிதுயிலில் (hypnosis) இருத்தி, வள்ளி என்று எவருமே இருக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாத வள்ளியை அவளுடலில் மருளாகப் பெற முடியாது என்றும் அவள் புரிந்து கொள்ளும்படிச் செய்யப்பட்டாள். 

     சிவிக்குச் சிங்கள மொழியில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரியும். அவள் படிப்பைத் தொடர வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தாள். மணம் செய்து கொண்டு வாழ்வதை அவள் மனம் விழைந்தது. இனி எப்போதும் வள்ளி அவளுடலில் மருளாக வரமாட்டாள் என்று அவள் மனம் ஏற்கும்படி உரைத்ததும், அவள் முகம் மலர்ந்து ஒளிர்ந்தது. 

     அவர்கள் இருக்கும் இடமான நிகோம்போவிற்குச் சென்றதும் , முதல் வேலையாக ஆலங்குளாமாவில் உள்ள அவளுடைய தாய்க்கு, எல்லாத் தொல்லைகளி லிருந்தும் அவள் விடுதலை பெற்றதை எழுதப் போவதாக என்னிடம் கூறினாள். 

     என்னுடனும் என் துணைவியாருடனும் சிவியை திரு.சோமதிலகே ஒளிப்படங்கள் எடுத்த பிறகு, அக் குழுவினர் சென்றனர். 

பகுப்பாய்வு 

     முதலில், சிவி இசிப்பு நோயின் மென்மையான தாக்குதலுக் குள்ளானாள். மருத்துவர் கிரில் மேயரின் மருத்துவத்தைத் தொடர்ந் திருந்தால் விரைவிலேயே அவள் இயல்பு நிலை பெற்றிருக்கக்கூடும். அவளுடைய பெற்றோர் செய்த முதல் தவறு மந்திரக்காரனிடம் அறிவுரை கேட்டதே! தொடக்கநிலை மாந்தர் உடல் நோய்களுக்கும் மன நோய்களுக்கும் தீய ஆவிகளே காரணம் என்று நம்பினர். தொடக்க கால மாந்தனுக்கு எல்லா நோய்களுக்கும் மருந்து, சூழியக்கலை(witchcraft)யே! 

     மருத்துவ அறிவியலின் வேகமான வளர்ச்சியால், நாகரிக நாடுகளில் சூழியக்கலை மறைந்து மருத்துவ மனைகளும் தகுதி வாய்ந்த மருத்துவர்களும் இடம் பெற்றனர். அவப்பாடாக - போகூழாக - சூழியக் கலையானது, மாயமருத்துவம், வருவதுரைத்தல் முதலிய வடிவங்களில் இருப்பதால், இன்னுங்கூட பிற்பட்ட நாடுகளிலுள்ள அறியா மக்கள் நாடுவதாக உள்ளது. 

     சிவியின் துன்பம் தீய ஆவி பிடித்துக் கொண்டதின் காரணமாகவே என்று மந்திரக்காரன் கூறிய போது, அவளுடைய வலிவற்ற, கருத்துத் தூண்டுதலுக்கு உட்பட்ட அவளுடைய மனம் அவளைப் பேய்பிடித்தவள் போலப் பேசவும் நடந்து கொள்ளவும் செய்தது. 

     கோயிலிலும் கூட, கருத்துத் தூண்டுதலுக்கு உட்பட்ட தன்மையிலேயே, அவள் வள்ளியாகப் பேசி நடந்து கொண்டாள். பின்னர், வள்ளி பிடித்திருப்பதை மறுத்துத் திரு. பெர்னான்டோ பகுத்தறிவுக்கொப்ப எடுத்துரைத்ததைக் கேட்டதும், அவளுடைய உள்மனம் வள்ளியின் நினைவுகளில் இருந்து விடுதலை பெற்றது. திரு.பெர்னான்டோவின் விளக்கத்தின் விளைவே, அவள் ஏப்பிரல் 10-இலிருந்து பூசையில் பங்குபெற மறுத்தது. 

     என் அறிதுயில் கருத்துரைகள், அவள் மனத்தின் எண்ணத்தில் இருந்த வள்ளியை முழுமையாக அடியோடு அழிக்க உதவியது. இன்று, அவள் இயல்பாக வாழ்கிறாள். அவளுக்குத் திருமணம் நடைபெற விருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.


 ---------------------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 26 ஜூன், 2008

மாயமாய்ச் சூலுற்ற தூயமாது!


(ஆங்கிலமூலம்: ஆபிரகாம் தொ.கோவூர்   தமிழாக்கம் : தமிழநம்பி) 


            திருவாளர் ஓர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். முகன்மையான துறையொன்றில் உதவி ஆணையராகப் பணியாற்றியவர். குமுக நிலையிலும் அரசியலிலும் பெயர் பெற்ற ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1967ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அவருடைய இளம் மனைவியுடன் என்னைக் காண வந்தார். அவர் மனைவியை வரவேற்பு அறையிலேயே அமர்த்திவிட்டு, அவரை மாடியிலுள்ள அலுவல் அறைக்கு அழைத்துச் சென்றேன். ஒரு நீண்ட கதையைக் கூறினார்.
            செரீன் என் இரண்டாம் மனைவி. முன்னாள் அரசத் தூதுவர் ஒருவரின் உடன் பிறந்தாளாகிய என் முதல் மனைவி, ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு இறந்து விட்டாள். அக்குழந்தையும் பின்னர் இறந்துபோய் விட்டது.
            செரீன் மதாராவைச் சேர்ந்தவள். நான் பணிஓய்வு பெற்ற பிறகு செரீனை மணந்து கொண்டேன். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
            இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு மழைநாளில், வேறு வேலை இல்லாத நிலையில், நாங்களிருவரும் குவளைக் கணியம்பார்ப்பதில் ஈடுபட்டோம். இதற்கு முன்பு ஒருமுறையும் இதில் ஈடுபட்டதுண்டு.
            வில் தொடங்கி நெடுங்கணக்கின் எல்லா எழுத்துக்களும் உணாமிசை (Dining table)மேல் வட்டமாக எழுதப்பட்டிருக்கும். நடுவில் ஒரு குவளை தலைகீழாக வைக்கப்பட்டிருக்கும். நானும் செரீனும் ஆள்காட்டி விரலை அக்குவளைமேல் வைத்துக் கொண்டு ஆவியை அழைப்போம். சில நிமையங்கள் ஆவலோடு காத்திருந்த பிறகு, அக்குவளை தானாகவே மெதுவாக நகரத் தொடங்கும். கொஞ்சநேரத்திற்குப் பின், வேகம் வேகமாக நகர்ந்து எழுத்துக்களைத் தொடும். இதுவே குவளைக் கணியம்என்னும் குவளை உரை’(Tumbler-talk) ஆகும். படித்துத்தெரிந்துகொள்ள வசதியாக, குவளை தொட்ட அந்த எழுத்துக்களை வரிசைப்படி எழுதினோம்.
            முதலில் குவளையை நகர்த்திய ஆவி, காலஞ்சென்ற தலைமை அமைச்சர் திரு.பண்டார நாயகாவினுடையது ஆகும். பண்டார நாயகா எங்கள் நண்பராகையால் நாங்கள் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டுச் சரியான விடைகளையும் பெற்றோம்.
            இரண்டாவதாகக் குவளையை நகர்த்திய ஆவி நாங்கள் அறிந்திராத தாமசு சில்வா என்பவருடையது. மூன்றாவதாக வந்தது பூண்பாட்டம்மை யாரின் ஆவி! அந்த அம்மையார் அவர் கணவரால் சுட்டுக் கொல்லப் பட்டதைக் கூறியது.
            நான்காவதாக வந்தது மேதானந்தா என்பவருடைய ஆவி. அவர் இறக்கும் முன், நானும் அவரும் ஒரு மத நிறுவன உறுப்பினர்களாயிருந்து இணைந்து பணியாற்றினோம். அந்த ஆவி பயனுடைய பல செய்திகளை எனக்குக் கூறியது.
            அடுத்து வந்த ஆவி திரு.தி.யு.தி.சில்வாவினுடையது. நான் சார்ந்து இருந்த அரசியல் கட்சியின் முன்னணி உறுப்பினர் அவர். அவரோடு நான் நெருங்கிய நட்போடிருந்தேன்.
            ஆறாவது ஆவி, குடும்ப நண்பரான திரு.செயசுந்தராவினுடையது. என்னுடைய உடல் நலனில் தனிக்கவனத்தோடு இருக்குமாறு அவர் செரீனாவிடம் சொன்னார்.
            பகலுணவு உண்டு, சிறிது துயின்ற பிறகு, குவளைக் கணியத்தைத் தொடர்ந்தோம். முதலில் வந்தவர் திருமால். அடுத்து வந்தவர் கதிர்காமக் கடவுள். இரண்டு மாதங்களுக் குள்ளாக கதிர்காமச் செலவு (மதப் பயணம்) மேற்கொள்ளுமாறு அவர் கூறினார்.
            கடைசியாக வந்த ஆவி, துறவி சூடுஎன்பவருடையது. அவர் சார்பில், செரீனுக்கு ஒரு தங்க மோதிரம் அன்பளிப்பாகத் தரும்படி அவர் என்னைக் கேட்டுக் கொண்டார். ஆன் துறவி திருச்சவையில் இருக்கும் அவருடைய உருவச் சிலைக்கு அடியில் செரீனுக்காக அவர் இன்னொரு மோதிரம் வைத்திருப்பதாகவும் கூறினார்! செரீன் அங்கே சென்று சிலைக்கு முன்னால் மெழுகுத்திரி ஏற்றி வைத்து அம்மோதிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற அவருடைய விருப்பத்தையும் தெரிவித்தார்.
            மறுநாள் நாங்களிருவரும் ஆன்துறவி திருச்சவைக்குச் சென்றோம். துறவி சூடின் சிலைக்கு முன்னால் மெழுகுத்திரிகள் ஏற்றி வைத்தோம். ஆனால், அங்கு எவ்விடத்திலும் மோதிரம் காணப்படவில்லை.
            முற்றிலும் ஏமாற்றமடைந்து, செரீன் நிலை குலைந்திருந்தாள். திரும்பும் போது, இனிமேல் ஆவிகளை அழைக்கும் குவளை-உரை விளையாட்டுகளில் நாம் ஈடுபடக் கூடாது என்று அவளிடம் கூறினேன்.
            அன்றிரவு, எனக்குத் தெரியாமல் செரீன் குவளைக் கணியம் பார்த்திருக்கின்றாள். சூடு துறவியின் ஆவி மீண்டும் வந்து, மோதிரத்தைச் சிலையினடியில் வைக்காததற்கு மிகவும் வருந்துவதாகக் கூறியதாகத் தெரிகின்றது. நானும் அவளோடு அங்கு சென்றதால்தான் மோதிரத்தை வைக்கவில்லை என்றும், என்னைத் தவிர்த்து விட்டு அடுத்தநாள் அங்கே செல்லும்படியும் கேட்டுக்கொண் டிருக்கின்றது.
            அடுத்தநாள், செரீன் அவளுடைய நோயாளி அண்ணனுடன் அங்குச் சென்று, அச்சிலை முன் மெழுகுத்திரி ஏற்றி வணங்கியும் அம்மோதிரம் காணப்படவில்லை. நீண்ட நேரம் அங்கே தங்கியிருந்து கண்கள் நீர் சொரிய அழுதாள். இரண்டாம் முறையும் அவளுக்கு ஏமாற்றமே! மோதிரத்தைப் பெறாமல் அத்திருச்சவையை விட்டு வருவதற்கே மறுத்தாள். கடாசியில், அவள் அண்ணனும் உந்து ஓட்டுநரும் அவளை வலிந்து மகிழ்வுந்தில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.
            வீட்டிற்குத் திரும்பிய நேரத்திலிருந்தே பித்தியம் பிடித்தவள் போல நடந்து கொண்டாள். எப்போதும் சூடு திறவியைப் பற்றியே பேசிக்கொண் டிருந்தாள்!
            சென்ற மூன்று கிழமைகளாகத் தனக்குக் குழந்தை பிறக்கப் போவதாகக் கூறி அழுதுகொண்டிருக்கிறாள். தான் ஒன்பது மாதப் பிள்ளைத் தாய்ச்சி என்று அவள் கூறினாலும் அதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. மேலும் இரண்டாம் குழந்தை பிறந்ததி லிருந்தே நாங்கள் துய்ப்புறவு கொண்டதில்லை. இப்பொழுது நான் தெய்வச் சிந்தனையில் ஆழ்ந்து விடுவதால் பாலியல் ஈடுபாட்டிலிருந்து விலகி யிருக்கின்றேன்.
            கடந்த இரண்டு மாதங்களாகப் பித்தியம் தெளிவிப்பதற்காகப் பல இடங்களுக்கும் கூட்டிச் சென்று, பலவகையான மந்திர மாயங்கள் செய்து பார்த்தோம். கோழிக்கோட்டிலுள்ள ஒரு பேர்பெற்ற உரோமன் கத்தோலிக்கத் திருச்சவைக்கு அழைத்துச்சென்றோம். எனினும், முன்னினும் மோசமான நிலையிலேயே திரும்பி வந்தாள்.
      சில நண்பர்களின் கருத்துரையின்படி அவளை நயகாக்கண்டே -விலுள்ள மற்றொரு திருச்சவைக்கும் அழைத்துச் சென்றோம். இதுவரை எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. அடுத்து, தெமாத்தகோடா-விலுள்ள குறி கூறுவாரை அணுகிக் கேட்டோம். அவர் செரீனின் துன்பங்களுக்குக் காரணம் கலுக்குமரியா என்னும் ஒரு பெண்பேயின் ஆட்டுவிப்பு என்றார். அதற்குத் தீர்வாக ஒரு கட்டணத் தொகையைப் பெற்றுக் கொண்டு சில பூசைகள் நடத்தினார். இருந்த போதிலும், செரீனாவின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
      பின்னர், பாமன்காடாவைச் சேர்ந்த ஒருவர் அளித்த மந்திர எண்ணெய்யும் மந்திர நூலும்கூட பயன் தரவில்லை. அதன்பின், செரீனாவை மிரிகானாவிலுள்ள ஒரு புகழ் பெற்ற குறி சொல்லும் பெண்டிடம் அழைத்துச் சென்றோம். செரீனாவிற்கு எங்கள் எதிரிகளால் கடும் நஞ்சு கொடுக்கப்பட் டிருப்பதாக அவள் கூறினாள். அந்த நஞ்சை செரீன் கக்கி வெளியேற்றும்படி தன்னால் செய்யமுடியும் என்று அவள் சொன்னாள். நாங்கள் அதற்கு ஒப்புக் கொண்டு அவளுக்குப் பெருந்தொகை தந்தோம். குடிப்பதற்காகச் செரீனிடம் ஏதோ கொடுக்கப் பட்டது. அதன் பிறகு, செரீன் வாந்தி எடுத்தாள். ஆனாலும் அதன்பின்னரும் துன்பம் தொடர்ந்தது!
      பிறகு செரீனை வாட்டாலாவிலுள்ள ஒரு உரோமன் கத்தோலிக்க மதகுருவிடம் அழைத்துச் சென்றேன். அவர் இது பேயிறையின் (சாத்தான்) வேலைஎன்றார். கொஞ்சம் துய்ய நீரை செரீன் மீது தெளித்து அவள் நெற்றியில் விரலால் குறுக்கை(சிலுவை)க் குறியிட்டு வழிபாடு செய்தார். செரீன் குணமாக வில்லை.
      குவளைக் கணியத்தில் அறிவுறுத்தியவாறு அவளைக் கதிர்காமம் கோயிலுக்கு அழைத்துச் சென்றோம். அங்குப் பூசை நடந்த போது அவள் மயக்க முற்றாள். திரும்பி வந்த பிறகு, அவள் இயல்பாக இருப்பது போல் தோன்றியது. ஆனால், ஒருநாளைக்குப் பின், தொல்லை தொடர்ந்தது.       கடைசியாக மூன்று நாளைக்கு முன்பு, மெத்தேல் மந்திரக்காரக் குழுவினரால் இரவு முழுவதும் பேயோட்டல்நடந்தது. செரீன் மந்திரக் காரர்களுடன் நடனமாடினாள்! அம்மந்திரக் காரர்களின் கேள்விக்கு விடையாக, அது என்னுடைய முதல் மனைவி என்றும், செரீனின் உடலினின்றும் நீங்கிவிடுவதாகவும், ஒரு சேவலின் உடலில் நுழைந்து வடுவதாகவும் உறுதியளித்தது. அந்தச் சேவல் பின்னர்க் கொல்லப் பட்டது.
      செரீன் மயங்கி விழுந்தாள். அதே நிலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாகக் கிடந்தாள். காலையில் செரீன் முழுவதும் இயல்பானவளாகக் காணப்பட்டாள். அம்மந்திரக் காரர்களுக்கு ஒப்புக்கொண்ட கட்டணத் தொகையைக் கொடுத்தேன். அவரகள் திரும்பிச் செல்லுகின்ற நேரத்தில், அக்குழுவில் இருந்த ஓர் இளைஞன், இனியும் குணமாகாவிட்டால் உங்களை (அறிஞர் கோவூரை) அணுகுமாறு வலியுறுத்திச் சென்றான். நேற்று, மறுபடியும் செரீன் அழத் தொடங்கிவிட்டதோடு அவள் கருவுற் றிருப்பதாகவும் முறையிட்டாள்.
      இவற்றைக் கேட்டபின், ‘வைக் கீழே செல்லுமாறும் அவர் மனைவி செரீனை மேலே அனுப்பும்படியும் கூறினேன். என் துணைவியார், செரீனை அழைத்து வந்து துயிலிருக்கையில்(couch) ஓய்வு கொள்ளச்செய்தார். மேலே வரும்போது காதில் கேட்காத நிலையில் அவள் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது. செரீன் விலை உயர்ந்த புடைவையை மிக நாகரிகமாக உடுத்தியிருந்தாள். நாறபத்து நான்கு அகவையானாலும் இளமையாகத் தெரிந்தாள். அழகுவாய்ந்த வலமையான(healthy) இளம்பெண்ணின் தோற்றத்தோடு பழுத்த கோலிக்குட்டுவாழைப்பழ நிற உடலுடன் இருந்தாள். நாகரிகத் தோற்ற முடையவள் என்றாலும் மாற்றுக் குறையாத மரபில் வளர்ந்ததற்கு அடையாளமாக அடக்கத்தோடும் பணிவோடும் இருந்தாள்.
      அறிதுயிலில்(hypnosis) ஆழ்த்தியபோது, செரீன் கூறியவை: என் வீடு மதாராவில் இருக்கிறது. மதாரா ஆங்கிலப் பள்ளியில் கல்வி பயின்றேன். கத்தோலிக்க ரல்லாதார் மதஅறிவுரை வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயமில்லை யென்றாலுங் கூட, நான் என் பள்ளியிலிருந்த கிறித்தவத் தோழிகளுடன் அவ்வகுப்புகளுக்கும் அவர்களுடைய வழிபாட்டுக்கும் கூடச் செல்வது வழக்கம். நானும் என் கணவரும் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் திருமணம் என் கணவருக்கு இரண்டாம் திருமண மென்றாலும் எனக்கு முதலாவதாகும். நாங்கள் ஒருவர்பாலொருவர் மதிப்பன்புடைய இனிய இணையாக இருக்கின்றோம். எனக்கு இரண்டாம் குழந்தை பிறந்ததும், இனிமேல் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை யென்று தீர்மானித்தோம். ஏனென்றால், என கணவருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னால் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தர இயலாது. என் கணவர் வழிபாட்டு அறைக்கு அருகிலுள்ள அறையில் தூங்குவார். நான் வேறொரு அறையில் குழந்தைகளோடு தூங்குகிறேன்.
      வழிபாட்டு அறையில் புத்தக் கடவுளின் உருவச்சிலை உள்ளது. திருமால் சிலையும் கதிர்காமக் கடவுளின் சிலையும் இரண்டு பக்கங்களிலும் உள்ளன. சிலைகளின் முன்னால் ஒரு எண்ணெய் விளக்கு இரவு பகலாக எரிந்துகொண் டிருக்கின்றது. நாள்தோறும் மலர்கள் படைக்கப் படுகின்றன.     பொருள் நிலையில் நாங்கள் வளமானவர்கள். என் கணவர் பத்தி(பக்தி)மான்; மதம் விரும்பி. நாங்கள் மற்ற மதங்களையும் மதிக்கிறோம். விழா நாட்களில் நாங்கள் தவறாது கோவிலுக்குப் போவோம்.
      நான் தனியாகக் குவளைக் கணியம் பார்த்த போது, சூடு துறவி என்னிடம் நிறைய செய்திகளைக் கூறினார். அவற்றை என் கணவரிடம் சொல்ல வேண்டா மெனவும் கேட்டுக் கொண்டார். என்னை அவர் காதலிப்பதாகவும், முன் பிறப்பில் நான் அவர் மனைவியாக இருந்தேன் என்றும் கூறினார். முன் பிறப்பில் என் பெயர் உரோசு என்றும் அவர் பெயர் உரோலிதிரெமசு என்றும் சொன்னார். அடுத்த பிறப்பிலும் எனக்கு அவர் கணவராக இருக்க விரும்புவதாகவும் கூறினார்!
      அந்தக் குவளைக் கணிய நிழ்ச்சிக்குப் பிறகு, துறவி சூடு இரவு நேரங்களில் அடிக்கடி வந்து என்னுடன் உறங்குவது வழக்கம். என் கணவர் வீட்டிலில்லாத சில நேரங்களில், சமையலறைக்கு வந்து என்னைக் குளியலறைக்கு இழுத்துச் செல்வார். அங்கே என்னை ஆரத்தழுவி என்பால் அன்பு செலுத்துவது வழக்கம்.
      சில நேரங்களில் என்னுடைய உடைகளைக் களைந்து என் உடலில் குறுக்கை(சிலுவை)க் குறி வரைவார். அவ்வப்போது மிகுந்த வலியேற்படாமல் அவர் என்னைக் கடிப்பார்.
       இந்தக் கட்டத்தில், எவ்வகைத் தயக்கமுமின்றி அவளுடைய கச்சுடை(blouse)யைத் திறந்து, அவளுடைய மார்பில் குறுக்கை வடிவிலிருந்த ஒரு கீறற் குறியையும், வலக்கையில் கடித்த அடையாள மொன்றையும் எங்களுக்குக் காட்டினாள்.
      செரீன் தொடர்ந்தாள்: அவர் என்னிடம் நேயத்துடனிருப்பதால், எனக்கு மிகவும் பிடித்தமானவரே. அவர் மிகவும் அழகானவர். சிலையில் நாம் பார்ப்பதைவிட முற்றிலும் வேறுபட்ட வடிவினர். முழுவதும் மழுங்க மழித்த முகத்துட னிருக்கிறார்.
      ஒருநாள், இச்செய்திகளையெல்லாம் என கணவரிடம் சொன்னால் என் கழுத்தை நெரித்துவிடுவதாக ஒரு தாளில் எழுதினார். மற்றொரு சமையம்,என் காதணிகளையும் மணமோதிரத்தையும் கழற்றி விட்டார்! மூன்று முறை தலையணைக்கடியில் பணம் உருபா 1000, 16000, 800 வைத்துச் சென்றார்.  இவற்றைக் கூறிய பிறகு செரீன் கடுமையாக அழத் தொடங்கினாள். ஏன் அழுகிறாய்?’ என நான் கேட்ட போது, “எனக்குக் குழந்தை பிறக்கப் போகிறது; இது எனக்கு ஒன்பதாம் மாதம்; அடுத்த மாதம் குழந்தை பிறந்ததும் எல்லாருக்கும் அக் குழந்தைக்குத் தந்தை என்கணவரல்லர் என்பது தெரிந்துவிடும்! நெறியற்ற முறையால் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதை விட இறந்து விடுவதே மேல்என்றாள் அவள்.
      இந்தக் கட்டத்தில் அவளை அறிதுயிலினின்றும் எழுப்பினேன். என் துணைவியார் அவளைக் கீழே அழைத்துச் சென்றார். திரு. வை மேலே அழைத்தேன்.
      வந்து அமர்ந்ததும் அவரிடம் 1964 சனவரி 12ஆம் நாள் சிலோன் அப்சர்வர்ஞாயிற்றுப் பதிப்புப் படியொன்றைத் தந்தேன். அதில் படுக்காவில் நான் ஆய்ந்த இதே போன்ற ஓர் உளநோயாளியின் செய்தி இருந்தது. அச்செய்தி, இறந்துபோன காதலனின் ஆவியெனக் கூறப்பட்டது இரவு நேரங்களில் வந்து அன்பு செலுத்தியதாகக் கூறிய பள்ளி மாணவி இலதாவின் இல்பொருள்காண் திரித்துணர்வு (hallucinatory experience) பற்றியதாகும்.     அச்செய்தியைக் படித்து முடித்ததும் அவருடைய மனைவி செரீனின் நிலையும் அவர் படித்த செய்தியைப்போன்றதே என்றும் அந்நிலைக்கு அவரே பொறுப்பு என்றும் கூறினேன். அவரைக் குற்றம் சாற்றிக் கூறியதைக் கேட்டதும் திடுக்கிட்டு அதிர்ச்சி அடைந்தார்.
      நான் தொடர்ந்து கூறினேன்: உங்கள் இருவரின் உள்ளங்களும் அளவில்லாத மடமையான மூடநம்பிக்கைகளால் ஏமாற்றப் பட்டுள்ளன. ஆவிகள் உள்ளதாக நம்புவதும், குவளையின் உதவியுடன் கேள்விகளுக்கு விடை சொல்ல ஆவிகளை அழைப்பதென்பதும் மடமையும் இழிவுமாகும். உங்கள் மனைவி செரீனின் உள்ளம் குவளை-உரையால் நிலைகுலைந் திருக்கின்றது. மிகுந்த நுண்ணுணர்வு கொண்ட அவளின் மனம், உங்கள் மனத்தைப் போலவே ஆவிகள் பேய்கள் மந்திரங்கள் பூசனைகள் பேயோட்டங்கள் முதலிய மூடத்தனத்தால், குழந்தைப்பருவம் முதலே தவறான கொள்கைகளால் குழப்பப் பட்டுள்ளது.
      நீங்கள் இருவரும் குவளையின் மேல் விரல்களை வைத்திருந்த போது, செரீனுடைய கையின் உளத்தியல்ஓட்டத் தசையியக்கம் அக்குவளையை நகரச் செய்தது. அதனால்தான் இரவில் அவள் தனியாகக் குவளைக் கணியம் பார்த்தபோது, குவளை மறுபடியும் நகர்ந்தது.
      திரு.பண்டாரநாயகா, பூன்வாட்டம்மையார் மற்றும் பிறரின் ஆவிகளின் வரவும், கேள்விகளுக்கு விடையளித்ததாகக் கூறப்பட்டதும் உண்மைகளல்ல. செரீனே, குவளையின் நகர்வாலும், கிடைத்த விடைகளாலும் குழப்ப மடைந்திருக்கிறாள். இவை அனைத்தும் அவளுடைய உணர்வுநிலையற்ற மனத்தினால் தன்னுணர்வற்ற அறிவுநிலையில் நடந்தவை. இத்தகைய புதுமை நிகழ்ச்சிகளின் விளைவாக அவளுடைய மென்மையான உள்ளம் தாக்கமுற்றது. குவளைக்கணியத்தின் போது வந்ததாகக்கூறப்பட்ட ஆவிகள், பேய்கள் எனப்பட்ட தீய ஆற்றல்கள் பற்றி அவள் கொண்டிருந்த இனம்புரியாத அச்சம் அவளுக்கு நரம்பு இயக்க வீழ்ச்சியை உண்டாக்கி விட்டது. கற்பனைத் துறவி சூடுடனான அவளுடைய சிற்றினபச் செயலீடுபாடுகள் அனைத்தும் பாலுணர்வுச் சுரப்பிகள் உச்சத்திறனி லிருக்கும், பாலுறவு வறுமையுற்ற ஓர் இளம்பெண்ணின் விருப்ப நிறைவேற்றங்களாகும். குவளைக் கணியம் பார்த்த நாளிலிருந்தே அவளுக்கு நரம்புக் கோளாறு ஏற்பட்டு விட்டது. இப்படியிருந்த காலத்தில் அவளுடைய இல்பொருள் காணுந் திரித்துணர்வுகள் அனைத்தும் மெய்யானவை யில்லை என்றாலும் அவளைப் பொறுத்தவரை உண்மை நிகழ்வுகளே!
      காதற் றலைவனாக துறவி சூடின் வருகைகளும், அவருடைய காதல் உருவாக்கமும், அவள் கருவுறலும், தலையணைக்கு அடியில் பணந் தோன்றியதும், மோதிரம் பற்றிய உறுதியுரையும், அடுத்தபிறவித் திருமணம் பற்றிய உறுதி மொழியும் முற்றிலும் அவளுக்கு விருப்பமான வெறும் திரித்துணர்வு நிகழ்ச்சிகளாகும்.
      அவற்றைப் போன்றே, அவளுடைய காதணி மோதிரம் மறைந்ததும், அவளுடைய உடலில் குறுக்கைக் குறியும், கடித்த அடையாளங்களும் இன்னபிறவும் வேறொருவராக இருந்து அவளே செய்து கொண்ட சொந்தச் செயல்களே! 

      உங்களைப்போன்ற கல்வியறிவு மிக்க ஒருவர், உளத்தியல் மருத்துவரிடம் கலந்தாய்வு செய்யாமல், ஏமாளி மக்களிடம் பணத்தைக் கொள்ளை யடிக்கும் போலி மருத்துவர்களின் உதவியை நாடியது இரக்கத்திற் குரியதாகும். நாட்டின் ஆட்சி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்குக் கூட, இத்தகையவர்களைச் சில மிகப் பெரியவர்கள் நாடிப் போவதைப் பார்த்து, நீங்களும் இப்படி நடக்கத் துணிந்தீர்கள் போலும்!
      செரீனுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் மனக் கோளாற்றினால் ஏற்பட்டதே! ஆவிகளாலோ, நஞ்சினாலோ, பிறவற்றாலோ ஏற்பட்டதன்று! நீங்கள் ஒத்துழைப்புத் தந்தீர்களானால் இன்றைக்கே இத்துன்பங்க ளனைத்தையும் நான் நீக்கி விடுவேன். இன்றிலிருந்து உங்கள் ஊழ்கத்தை(meditation) நிறுத்துங்கள்! ஒரு கணவனின் இயல்பான பணியைச் செய்யுங்கள்!
      உயிரியியல் தேவையான ஒன்றிலிருந்து விலகியிருப்பது, அதிலும் குறிப்பாக உங்கள் மனைவி வாழ்க்கையின் இளமைக் காலத்தில் இருக்கும் போது விலகியிருப்பது, முட்டாள்தனமாகும். உங்கள் இரண்டாம் மனைவியாக ஒரு முதிய பெணமணியைத் தேர்ந்தெடுத் திருந்தீர்க ளானால் இத்தகைய துன்பங்கள் நேர்ந்தே இருக்காது.
      மேற்கொண்டு குழந்தைகள் பிறப்பதைத் தவிர்க்க விரும்பினால் ஊழ்கத்தை விடக் குடும்பக் கட்டுப்பாட்டு நிலையத்தின் உதவியை நாடுவதே அறிவார்ந்த செயலாகும். ஓர் இளம்பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு பிறகு ஊழ்கத்தை நாடிச் செல்வது உங்களின் தன்னலமாகும்.
      மாற்றுக் குறையாத ஒழுக்க மரபிலே வளர்ந்திருக்கா விட்டால், செரீன் தன் உயிரியியல் உந்துதலைக் கமுக்கமான முறைகளில் நிறைவு செய்து கொண்டிருக்க முடியும். மாறாக, அவளுக்கு மிகத் தேவையா யிருந்த பாலியல் நிறைவை இல்பொருள்காண் திரித்துணர்வுகளின் வழி பெற்றிருக்கின்றாள்!
       ‘என்னுடைய அறிவுரைகளை ஏற்று நடப்பதாக உறுதி மொழிந்தார். பிறகு, கீழே சென்று அவருடைய மனைவியை மேலே அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன்.
      என் துணைவியார் செரீனைத் துயிலிருக்கையில் படுத்து ஓய்வு கொள்ளச் செய்தார். பின்னர், அவளை ஆழ்ந்த அறிதுயிலில் இருத்தி, கீழக் காண்பவற்றைக் கூறினேன்: துறவி சூடு இப்போது உன் முன்னால் இருக்கிறார். இதுவே அவர் உன்னிடம் வரும் கடைசி முறையாகும். உன்னிடம் விடைபெற்றுச் செல்லவே அவர் வந்திருக்கிறார்.
      இதைக்கேட்டதும் செரீனின் முகத்தில் தெரிந்த உணர்வுகளைப் பதிவுசெய்ய என்னிடம் ஒரு திரைப்படப்பிடிப்புக் கருவி இல்லாமல் போய்விட்டதே என வருந்தினேன்! மேலும் கூறினேன்: துறவி சூடு தன் குழந்தையை உன் கருப்பையிலிருந்து எடுத்துக்கொண்டு செல்கிறார். அவர் இனி ஒருபோதும் உன்னிடம் வரமாட்டார். இனி, உன் கணவர் உன்னிடம் மிக அன்புடன் இருப்பார்! நீயும் அவரிடம் பேரன்புடன் இருப்பாய்! நீங்கள் இருவரும் உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்!
      அறிதுயிலினின்றும் செரீன் எழுப்பப் பட்ட சில நிமையங்களுக்குப் பிறகு, ‘புன்னகை தவழும் தன் இனிய மனைவியுடன் விடைபெற்றுச் சென்றார்.
      ஒரு மாதத்திற்குப் பின் திரு.வும் அவருடைய துணைவியாரும் நன்றி தெரிவிப்பதற்காகப் பரிசுப் பொருள்களுடன் எங்கள் இல்லத்திற்கு வந்திருந்தனர். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, இக்கதையைப் பிரான்சு, இசுப்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் வெளியிடுவதால் பல நன்மைகள் விளையக் கூடுமெனக் கூறி, அதற்கான அவர்களின் இசைவைப் பெற்றேன்!

------------------------------------------------------------------------