பாவேந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவேந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 டிசம்பர், 2016

‘செந்தமிழ்ப் பாடினி’ பாவலர் திருவமை மணிமேகலை குப்புசாமி எழுதிய ‘செந்நெற் பயன்மழை’ நூல்

‘செந்தமிழ்ப் பாடினி’ பாவலர் திருவமை மணிமேகலை குப்புசாமி எழுதிய ‘செந்நெற் பயன்மழை’ நூல்.
---------------------------------------------------------------------------------------------------------------
பாவேந்தர் பாரதிதாசன், 23-8-1960 நாளிட்ட குயில் இதழில் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்  பற்றி எழுதிய பன்னிரண்டு வெணபாக்களுள் ஒன்றில், எந்தமிழ் மேலென்று உணமை எடுத்துரைப்போன்; செந்தமிழன்! செந்நெற் பயன்மழை... என்று எழுதியிருப்பார்.
செந்நெல்லைப் பயனாக்ககும் மழையாக அவர் பாவாணரைப் புகழ்ந்திருப்பார். அதே,செந்நெற் பயன்மழை என்னும் தொடரை நூலாசிரியர் மணிமேகலை அவர்கள் பாவேந்தர் பாவாணர் இருவரையும் குறிக்கப் பயன்படுத்தி நூலின் தலைப்பாக்கி உள்ளார்.
நூலாசிரியர் மணிமேகலை, பாவேந்தரின் மகள் வயிற்றுப் பெயர்த்தி ஆவார். தேர்ந்த பாவலராகத் திகழ்பவர். பல பாடல் நூல்களை ஆக்கி அளித்தவர். அவருடைய முதல் உரைநடை நூலாக செந்நெற் பயன்மழை வந்துள்ளது.   

நூல், ஐந்து பகுதிகளாகத் தரப்பட்டுள்ளது. பாவேந்தர், பாவாணர், பாவேந்தர் போற்றிய பாவாணர், பாவாணர் போற்றிய பாவேந்தர், பாவேந்தரும் பாவாணரும் ஆகியவை அந்த ஐந்து பகுதிகளாகும்.

பாவேந்தர் என்னும் பகுதியில், சுருக்கமாக அவர் வாழ்க்கைக் குறிப்புகளாகப் பிறப்பு, குடும்பம், கல்வி, தோற்றம், திருமணம், ஆசிரியப்பணி, பணிநிறைவு, இதழ்ப்பணி, படைத்த நூல்களைப்பற்றிய செய்திகளைத் தந்துள்ளார். பாவேந்தர் படைத்த நூல்கள் 92-ஐயும் பட்டியலிட்டுள்ளார்.
சிலநிகழ்வுகள் என்னும் தலைப்பிலும், மறைவுக்குப் பின் என்ற தலைப்பிலும் இவர் தரும் பல செய்திகள் இதுவரை பலரும் அறியாதவை; வரலாற்றுச் சிறப்புடையனவாகும். மக்கள் பாவலர்
பட்டுக்கோட்டையார் பாரதிதாசன் வாழ்க! என்று எழுதிவிட்டுத்தான் எழுதத் தொடங்குவார், பெங்களூரில் இசைநிகழ்ச்சி நடத்திய எம்.எசு.சுப்புலட்சுமியைப் பாடவிடாமல் கலகம் செய்த கன்னடர்களைக் கண்டித்துக் குயில் இதழில், கன்னடம் பணியவேண்டும் என்றதலைப்பிட்டுக் கடுமையாகப் பாடல் எழுதியது போன்ற பல செய்திகளைக் காணலாம்.

பாவாணர் என்ற தலைப்பிலும், பாவாணரின் சுருக்க வரலாறு, பணி, படைத்த நூல்களின் பட்டியல், சில நிகழ்வுகள், மறைவுக்குப்பின் ஆகிய செய்திகளைத் தருகிறார். மொழி ஆராய்ச்சி என்ற பாவாணரின் முதற்கட்டுரை 1931 சூன்-சூலை செந்தமிழ்ச்செல்வி இதழில் வந்தது போன்ற பல செய்திகளைத் தந்திருக்கின்றார்.

பாவேந்தர் போற்றிய பாவாணர் என்னும் பகுதியில், பாவாணருக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நேர்ந்த ஒத்துழைப்பின்மையும் மதிப்புக்குறைவும் வேலைநீக்கமும் பற்றிய செய்திகளையும், பாவேந்தர் முழுமையாகப் பாவாணரைத் தாங்கி அவருக்குத் துணையாக வலிவாக எழுதிய பல செய்திகளையும் தந்திருக்கிறார்.

பாவாணர் போற்றிய பாவேந்தர் என்ற பகுதியில் பாவாணர், பாவேந்தரின் கொள்கைப்பற்றையும், அன்பையும் போற்றிய பல செய்திகளைத் தந்துள்ளார்.

பாவாணரும் பாவேந்தரும் என்னும் பகுதியில் இருவரின் செயல்பாடுகளில் காணும் கொள்கை ஒற்றுமையையும் விளக்கிக் கூறுகின்றார்.

பாவேந்தரைப் பற்றியும் பாவாணரைப் பற்றியும் அறிந்தவர்களும் தெரிந்திராத பல செய்திகள் நூலில் உள்ளன. இந்நூல்,
தமிழன்பர்களும், ஆய்வாளர்களும் பயன்கொள்ளத் தக்கதாம்.

இந்த நூல்லைப் பதிப்பித்தோர் முகவரி:         
விளாதிமிர் பதிப்பகம்,
44, நான்காம் குறுக்குத் தெரு,
குறிஞ்சி நகர்,
புதுச்சேரி 605 008.
தொலைப்பேசி: 0413 2255693
கைப்பேசி: 94421 86802.
-------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பாவேந்தே, நின் நினைவில்...!



பாவேந்தே, நின் நினைவில்...!


ஏக்கழுத்தும், பீடுநடையும்
அரிமா நோக்கும், அஞ்சா நெஞ்சமும்
நினக்கே உரியவை!

இருளற்றம் பார்க்கும் விளக்கே போல்
தமிழ்ப் பகையை இல்லாமல் ஓட்டியது
நின் பார்வை யன்றோ?

உவரி ஒலியிட்ட எலிப்பகை கெட்டவகை
தமிழ்ப் பகை கெட்டழிந்தது
நின் மூச்சால், உயிர்ப்பால் அன்றோ?

ஈராயிர மாண்டு வீழ்ச்சியிற் கிடந்தவரை
விடுதலைப்பா முரசறைந்து
எழுச்சிக்குத் தொடக்கமிட்ட
இரண்டாவது வள்ளுவனே!

நல்லுயிர் உடம்பு செந்தமிழ்
மூன்றும் நீ, நீ, நீயேயன்றோ?

இன்றிந் நாட்டில் இழிஞர் ஆட்சியால்
மண்ணையும் மாசில்லா மொழியையும்
மற்றெல்லாத் தமிழ நலன்களையும்
தோற்று நிற்கிறோம்!

தமிழால் உயர்ந்தோர் தமிழை வீழ்த்தினர்!
அமிழ்ந்த உணர்வால் அயலர் அரியணையில்!
அவலம்! அனைத்திலும் தமிழர்க்கு அவலம்!

இற்றைக்கும் பாவலர்கள் இங்குண்டு! என்சொல்ல!
தூய்தமிழ் போற்றுவர் தெளிதமிழ் இதழில்!
பரிசுக்குப் பல்லிளித்துப் பார்ப்பன இதழ்களில்
அயற்சொல் கலந்தெழுதி அருந்தமிழ் கொல்லுவர்!

ஐயா, புரட்சிப் பாவேந்தே!
வாராது வந்த தமிழ் எழுச்சி நெருப்பே!
எந்த நற்செய்தியும் இலையுனக்குச் சொல்ல!

இழிவில் உறையும் இந்நிலை மாற்றிட
என்றெழு வோமோ? இலையழி வோமோ!
நீயிலா நிலையில் நெஞ்சங் கலங்கி
ஓய்ந்துநின் நினைவில் தோய்ந் தெழுதினனே!

--------------------------------------------

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

யாருங் காண்கிலேன் எழிற்பா வேந்தே!



யாருங் காண்கிலேன் எழிற்பா வேந்தே!

நீயே,
செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை!
ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை!
வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில்
செம்மை சேருயர் செ்ழுந்தமிழ் காத்தனை!

உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம்
இறவா மொழியால் எழுந்திடப் பாடினை!
ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி
முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில்
தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை!

கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை!
புதுவை பொரித்த புரட்சிக் குயிலே!
எதுவும் யாரும் இணையுனக் கில்லை!
முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர்
வினைசா வெனின்அச் சாநாள் திருநாள்

புலவர்க்குக் கைவேல் பூந்தமிழ்என்றனை!
நலங்கெடுப் பார்எலாம் நடுங்கிட இயங்கினை!
சிறுத்தையே, புலியே, சீயமே, சிம்புளே!
திருப்பு முகத்தை! திறந்திடு விழியை!
மொழிப்பற் றுற்றே விழிப்புற் றெழுக!

அழிப்புறுந் தமிழை பழிப்பறக் காப்பாய்!
எனத்தமி ழிளைஞரை ஏவினை! இக்கால்
இழிதுன் பில்தமிழ்! இடிக்குரல் ஆர்த்தே
பழியறக் காத்திட, பகைவே ரறுத்திட
யாருங் காண்கிலேன், எழிற்பா வேந்தே!

தீருமோ இத்துயர் தெரியேன்
நீயிலா நிலையில் நெஞ்சங் கலங்கியே!
---------------------------------------------
(விழுப்புரம் பாவேந்தர் பேரவையின் பொறுப்பாண்மையர் உயர்திரு. உலகதுரை, பாவேந்தர் சிலை திறப்பின்பொழுது வெளியிடவிருக்கும் மலருக்காகப் பாடல் எழுதித் தருமாறு ஏறத்தாழ ஈராண்டிற்கு முன்னர் கேட்டபோது எழுதித்தந்த பாடல்)

செவ்வாய், 5 மே, 2009

பாவேந்தர் இன்றிருந்தால்...!

(29-4-2009 அன்று பாவேந்தர் பேரவை நடத்திய பாவேந்தர் பிறந்தநாள் விழாவில் "பாவேந்தர் இன்றிருந்தால்" என்ற தலைப்பில் பாடிய மண்டிலப் பாக்கள்)


பெரியோரே! அறிஞர்களே! பெற்றெடுத்த தாய்க்குலமே!
     பீடு சான்ற
அரிமாவின் குருளைகளே! அறிவார்ந்த பிள்ளைகளே!
     அனைவ ருக்கும்
பரிவார்ந்த வணக்கங்கள்! பாவேந்தர் விழாவினிலும்
     பதைப்பு நெஞ்சில்!
சொரிகின்ற குண்டுமழை சுட்டழிக்கும் ஈழத்தில்
     சொந்தம் மாய்க்கும்!

பாவேந்தர்:

நோவேற்றித் தாய்த்தமிழை நொய்வித்தார் நொட்டுரையை
     நொறுக்கி வீழ்த்தி
தாவாற்றி தலைநிமிர்த்தி தமிழ்த்தாயின் தளையறுத்து
     தழைக்கச் செய்யப்
பாவாற்ற லாற்றமிழின் பகைஒடுக்கிப் படர்நீக்கப்
     பாடு பட்ட
பாவேந்தை அறியாரைப் பலகற்றும் தமிழரெனப் 
     பகர லாமோ?

தன்னலத்தார்:

ஆர்த்தெழுந்த இளைஞர்களை அறிவார்ந்த காளைகளை
     அணையச் சேர்த்தே
நேர்த்தியுறு போர்த்திறத்தில் நேரொழுங்கில் பயிற்றியவர்
     நெடுமீ கத்தால்
கூர்த்தவினை முடித்தீழக் கொடியேற்றி ஆண்டாரைக்
     குலைத்த ழித்துத் 
தீர்த்தவழி தன்குடும்பம் திளைக்கவளம் தீக்கரவில்
     தேர்ந்தார் அந்தோ!

பாவேந்தர் இன்றிருந்தால்...

அமுதூட்டல் போல்நஞ்சை அகமகிழ ஊட்டுந்தாய்
     ஆனார் என்னே!
உமிழ்வாரே பாவேந்தர் உறுபழியர் முகத்திழித்தே
     உலறிச் சீறி!
இமிழுலகில் தமிழர்க்கே இன்துணையாய் இருவென்றே 
     இருத்தி வைத்தால்
தமிழீழ இனமழிக்கத் தகவிலர்க்குத் துணைபோனாய்!
     தாழ்ந்தாய் என்பார்!

பொங்குதமி ழர்க்ககின்னல் புரிவார்க்கே அழிவுறுதி
     புரியு மாறே
சங்குமுழக் கோடுலகில் சாற்றியதை மறப்போமா?
     சற்றுக் கூட
தங்குதயக் கின்றியந்தத் தகையறியாக் கொலைவெறியர்
     தருக்குஞ் சொல்லார்
சிங்களவர் வீழ்ச்சிக்கே சீறிஅறம் பாடிடுவார்
     சினத்தால் தீய்ப்பார்!

வேகுந்தீக் கிரையாகி வீணிலுயிர் இழப்பாரை
     விளித்த ழைத்துச்
சாகின்ற தமிழாநீ சாகச்செய் வார்சாகச்
     செய்வாய் என்பார்!
மாகுன்றத் தோளனுயர் மறத்திற்குப் பொருளானான்
     மண்ணிற் காணா
வாகறிவுப் பெருவீரன் வரிப்புலிக்குத் துணையிருப்பாய்
     வாழந்தே என்பார்!

உரஞ்செறிந்த எழுச்சியுடன் உலகிலுள்ள தமிழரெலாம்
     ஒன்றாய் நிற்பீர்!
நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி
     நண்ணி யந்தக்
கரம்புமன இனக்கொலையர் கடுமொடுக்கு முறையெதிர்த்தே 
     கனல்க என்பார்!
வரம்பறியாக் கொடுமையற வாழ,தமிழ் மண்மீட்க
     வாழ்த்துச் சொல்வார்!

இரண்டகரை இனங்காண்பீர்! இழித்தொதுக்கி வைத்திடுவீர்!
     ஈழம் சாய்த்த
வறண்டமனத் தில்லியரை வலிமையுடன் எதிர்த்தினத்தை
     வாழ வைப்பீர்!
இரண்டுநிலை இந்தியனுந் தமிழனுமாய் இருக்காதீர்!
     இனிஎ ழுந்தே
திரண்டிடுவீர் தமிழரென! தேர்ந்திடுவீர் அடையாளம் 
     தெளிவாய் என்பார்!