தமிழர் விழிப்புற லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் விழிப்புற லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 பிப்ரவரி, 2009

இன்னநிலை புரிந்தெழுவோம்!



      (நான்குகாய் +மா + தேமா)


மூண்டெழுந்த கொந்தளிப்பை முகம்மாற்றித் தணித்துவிடும்
     முடிவைக் கொண்டு
தூண்டலினால் காவலரும் துடிப்புவழக் குரைஞருடன்
     துலக்க மின்றி
வேண்டாராய்ப் பகையுணர்வில் வெறுப்புற்று மோதிடவும்
     விளைவாய்ப் பல்லோர்
ஆண்டடிதாக் குதல்களுக்கே ஆளானார் அவற்றோடே
     அவர்கள் ஊர்தி

காவலரின் கைத்தடிகள் கடுந்தாக்கில் நொறுங்கிவிழ
     கலங்கா நின்ற
நாவலராம் வழக்குரைஞர் நனிமிகவே தாக்கமுற
     நடுங்கா நெஞ்சின்
கோவமிகக் காவலர்குண் டாந்தடிகள் கட்டடத்தைக்
     குறியாய்த் தாக்க
வேவலுற எரிந்ததுகாண் விளைவிலொரு காவலகம்
     வெறுப்பி னாலே!

இன்னவகை மோதலினால் எவருக்கே இன்பயனென்(று)
     எண்ணிப் பாரீர்!
முன்னணியில் நின்றிருந்து முனைந்தீழப் போர்நிறுத்த
     முழக்கம் செய்தோர்
வன்குரலை ஒடுக்கிடவே வலிந்தங்குக் காவலரை
     வரச்செய் தாரே!
இன்னநிலை புரிந்தெழுவோம்! ஈழஉற வைக்காக்க
     எழுவோம் மீண்டும்!

----------------------------------------------------

புதன், 21 ஜனவரி, 2009

மானங் கெட்டவர்கள்! ஏமாற்றுக்காரர்கள்!



(அ)  நடுவண் அரசில் அமைச்சர் இருக்கையை உடும்புப் பிடியாய்ப் பற்றிக் கொண்டு, ஈழத்தமிழரைக் காக்க நடுவணரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றுக் குரலெழுப்பிக் கூப்பாடு போட்டு நீலிக் கண்ணீர் வடித்து நடித்துக் கொண்டு இருப்பவர்கள்! 

(ஆ)  திருவாட்டி இந்திரா காந்தியைக் கொன்றவரின் இனத்தைச் சார்ந்தவரே இந்தியாவின் தலைமை அமைச்சராக இருக்கிறார். அண்ணல் காந்தியைக் கொன்றவர் சார்ந்த இயக்கத்தின் வழி வந்தோர் இந்தியநாட்டை ஆட்சி செய்தனர் மீண்டும் ஆள அங்காந்து இருக்கின்றனர். இவற்றை எல்லாம் மிக வசதியாகக் கண்டு கொள்ளாமல், -
 இராசிவ்காந்தி இறப்பைப் பற்றியே பேசி, ஈழத்தமிழினமே அழித் தொழிக்கப்படத் துணை போகும் நயன்மையும் மாந்த நேயமும் அறவே அற்றவர்கள்! 

(இ)  ஈழத்தமிழர் அம்மண்ணின் மைந்தர் என்பதையும், ஈழ மண்ணை வழிவழி ஆண்ட தொல்பழங்குடியினர் என்பதையும் ஏற்க மறுத்து -
அமண்ணில் நடைபெற்றுவரும் ஒடுக்குமுறையை எதிர்க்கும் போராட்ட வரலாற்றையும் அங்கு நிலவும் கள நிலைமைகளையும் அம்மக்களின் கவலைகளையும் அவர்கள் விரும்பும் தீர்வுகளையும் பற்றிக் கொஞ்சமும் கண்டுகொள்ளாதவர்கள்.
     இலங்கையின் இறையாண்மைக்காகச் சிங்களரையும் விட அதிகமாக அக்கறை கொண்டு, அல்லற்பட்டு ஆற்றாது அனைத்தையும் இழந்தும் போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழரிடம் ஆராய்ந்து பாராமல் வலிந்து இலங்கை இறையாண்மையைத் திணிக்கும் -
பார்ப்பனியப் பொதுவடைமையர் மற்றும் அவர்பின்னே கண்மறைப்புக் கட்டப் பட்டவர்களாக நடுவுநிலைச் சிந்திப்பே அற்றுச் சென்று கொ்ண்டிருப்போர்!

(ஈ)  ஈழத்தமிழர் போரில் அழிவதே சரி என்று கூறும் பார்ப்பனியத் தலைமை மற்றும் அத் தலைமையின் காலடியில் தன்மான உணர்வே அற்று வீழ்ந்து கிடக்கும் தமிழ இழிவுப் பிறவிகள்!

(உ)  சிங்களன் வீசி எறியும் பணத்திற்கும் பட்டங்களுக்குமாக அங்காந்து திரிந்து தமிழர் நலன்களுக்கு எதிராக எழுதுவதையும் பேசுவதையுமே தொழிலாகக் கொண்டுள்ள செய்தித்தாள்கள், தொலைக்காட்சி இணைய ஊடகங்கள்!

தமிழர்கள் விழிப்புக் கொள்க!