சொல்லும் வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல்லும் வகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

சொல்லும் சொல்லலும்!

          சொல்லும் சொல்லலும்!

      
     உலகப் பொதுமறையான திருக்குறளில், ஆசிரியர்  திருவள்ளுவர் சொல்லைப் பற்றியும் சொல்லுவதைப் பற்றியும் ஒரு குறளில் விளக்குகிறார். நாம் சொல்ல வந்த செய்தியைச் சொல்லும் போது, நாம் பயன்படுத்தும் சொறகள் தேர்ந்தெடுத்த வையாக இருக்க வேண்டுமாம். எப்படித் தேர்ந்தவை தெரியுமா? நாம் தேர்ந்த சொல்லை நீக்கிவிட்டு வேறு சொல்லை அந்த இடத்தில் பயன்படுத்தினால் முன்னைவிட சிறப்பாக அமைய இயலாதபடியாகத் தேர்ந்தெடுத்தவையாம்!
    
இவ்வாறு சொல் ஆட்சி பற்றி விளக்கியுள்ள ஆசான் திருவள்ளுவர், சொல் என்ற சொல்லைத் திருக்குறளில் 125 இடங்களில் பயன்படுத்தி உள்ளார். இவற்றில் சொல் என்ற வடிவிலேயே 50 இடங்களிலும் பின்னொட்டுகள் சேர்ந்து 75 இடங்களிலும் ஆண்டிருக்கின்றார்.   

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், சொல்லும் வகைகளாக
எடுத்துச் சொல்லியுள்ள சொற்களை அறியும் போது, தமிழின் சொல்வளம் நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது. அச்சொற்களை அவற்றின் பொருளுடன் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. அசைத்தல் : அசை பிரித்துச் சொல்லுதல்.
2. அறைதல் : உரக்கச்சொல்லுதல்.
3. இசைத்தல் : கோவைபடச் சொல்லுதல்  
4. இயம்புதல் : இயவொலியுடன் (இசையோடு) சொல்லுதல்.
5. உரைத்தல் : செய்யுட்கு உரை சொல்லுதல்.
6. உளறுதல் : அச்சத்தினால் ஒன்றிற்கின்னொன்றைச்
              சொல்லுதல்.                                     
7. என்னுதல் : ஒரு செய்தியைச் சொல்லுதல்.
8. ஓதுதல் : காதில் மெல்லச் சொல்லுதல்.
9. கரைதல் : அழுது சொல்லுதல்.
10. கழறுதல் : கடிந்து சொல்லுதல்.
11. கிளத்தல் : ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல்.
12. குயிற்றுதல் : கியிற் குரலுல் சொல்லுதல்.
13. குழறுதல் : நாத் தடுமாறிச் சொல்லுதல்.
14. கூறுதல் : கூறுபடுத்துச் சொல்லுதல்.
15. கொஞ்சுதல் : செல்லப் பிள்ளைபோற் சொல்லுதல்.
16. சாற்றுதல் : அரசன் ஆணையைக் குடிகளுக்கு அறிவித்தல்.
17. செப்புதல் : வினாவிற்கு விடை சொல்லுதல்.
18. சொல்லுதல் : இயல்பாக ஒன்றைச் சொல்லுதல்.
19. நவிலுதல் : பலகால் ஒன்றைச் சொல்லிப் பயிலுதல்.
20. நுதலுதல் : ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.
21. நுவலுதல் : நூலைக் கற்பித்தல்.
22. நொடித்தல் : கதை சொல்லுதல்.
23. பகர்தல் : பகிர்ந்து விலை கூறுதல்.
24. பலுக்குதல் : உச்சரித்தல்.
25. பறைதல் : ஒன்றைத் தெரிவித்தல்.
26. பன்னுதல் : நுட்பமாய் விரித்துச் சொல்லுதல்.
27. பிதற்றுதல் : பித்தனைப் போலப் பேசுதல்.
28. புகலுதல் : ஒன்றை விரும்பிச் சொல்லுதல்.
29. புலம்புதல் : தனிமையாய்ப் பேசுதல்.
30. பேசுதல் : உரையாடுதல் அல்லது மொழியைக் கையாளுதல்.
31. மாறுதல் : மாறிச் சொல்லுதல்.
32. மிழற்றுதல் : கிளிக்குரலில் சொல்லுதல்.
33. மொழிதல் : சொல் திருத்தமாகப் பேசுதல்.
34. வலத்தல் : கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்.
35. வலித்தல் : வற்புறுத்திச் சொல்லுதல்.
36. விடுதல் : மெல்ல வெளியிடுதல்.
37. விதத்தல் : சிறப்பாய் எடுத்துச்சொல்லுதல்.
38. விள்ளுதல் : வெளிவிட்டுச் சொல்லுதல்.
39. விளத்துதல் : விரித்துச் சொல்லுதல்.
40. விளம்புதல் : பலர்க்கு அறிவித்தல்.
41. நொடுத்தல் : விலை கூறுதல்.
42. பாராட்டல் : போற்றி உரைத்தல்.
43. பொழிதல் : இடைவிடாது சொல்லுதல்.
44. பனுவுதல் : செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல்.
45. கத்துதல் : குரலெழுப்பிச் சொல்லுதல்.

     தமிழ் இயற்கை மொழி என்றும் முதல் தாய் மொழி என்றும் உலக முதன் மொழி என்றும் பாவாணர் முதலான மொழியியல் அறிஞர்களால் பாராட்டப் படுகின்றது. இப்படிப்பட தகுதிகள் கொண்டதாகத் தமிழ் இருப்பதால்தான் தமிழ் சொல்வளம் மிக்க மொழியாக உள்ளது என்பது பாவாணர் கருத்தாகும்.
    
     சொல்லும்வகைச் சொற்கள் போன்ற வினைச்சொற்களுக்கு மட்டுமின்றி பல்வேறு பெயர்ச் சொற்களுக்கும் மற்ற வகைச் சொற்களுக்குமான பட்டியலை சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்ற நூலிலும் அவருடைய பிற நூல்களிலும் கட்டுரைகளிலும் எடுத்துரைப்பதைக் காணலாம். 

--------------------------------------------------------------    


திருக்குறள் அரிய வாழ்வியல் நூல். மொழி, நாடு, இனம் கடந்த நிலையில், உலகின் மக்கள் அனைவர்க்கும் பொதுவான வாழ்வியல் கூறுகளை அறங்களை ஆட்சிமுறைகளை அக வாழ்க்கை அன்புறவுத் துய்ப்புகளைக் கூறும் நூல். உலகப் பொதுமறை என்று போற்றப்படும் நூல்.
     எல்லாப் பொருளும் இதன்பாலுள, இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை என்பார் மதுரைத் தமிழ்நாகனார். இத்தகைய ஒப்பற்ற உயர்ந்த சிறப்புக்குரிய அறிவார்ந்த நூல் தமிழ்மொழியில்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பேரறிவார்ந்த தமிழ மூதாதையால் எழதப்பட்டுள்ளது என்று தமிழர் பெருமை கொள்ள உரிமையுண்டு. ஆனால், அந்த ஈடிணையற்ற நூல் கூறுகின்றவாறு வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற கடமையைத் தமிழர் மறந்து விடுவதுதான் வருத்தம் தரும் செய்தியாகும்.                              

-----------------------------------------------------------------------------------------------------------