அண்ணாவின் பெருமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அண்ணாவின் பெருமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 அக்டோபர், 2009

அண்ணா நூற்றாண்டு நினைவேந்தல்


பாவலர் நெஞ்சில் பேரறிஞர்

அருந்தமிழ்ப்  பாவரங்  கணிசெயுந்  தலைவ !
இருந்தமிழ்ப்  பாவலீர் !  பொருந்தவை  யமர்ந்த
அறிஞரீர் !  பெரியீர் ! அன்புறு  தாய்க்குலச்
செந்தமிழ்  உணர்வீர் !  செயல்வல்  இளமையீர் !
தோழமை  சான்ற  தூயநல்  லுளத்தீர் !
ஆழன்  பார்ந்தே  அனைவரை  வணங்கினேன் !
அண்ணா  நூற்றாண்  டணிதிகழ்  நிறைவில்
எண்ணிப்  பாவரங்  கெளிமையில் அமைத்தனர் !
பாவலர்  நெஞ்சில்  பேரறி  ஞர் என
மேவுறு  தலைப்பில்  பாவளி  என்றனர்!                           -10

அண்ணா !  அட,ஓ !  எண்ணம்  இனிக்கும்
வண்ணத்  திருப்பெயர் !  ஈரா  யிரமாண்(டு)
இழிதளைப்  பட்டஎம்  இனத்தினைக்  காக்க
எழுச்சியோ  டிளைஞரை  ஈர்த்தவர்  பெயரிது !
ஆரையும்  விடவும்  ஆரிய  அராவை
நேருறத்  தாக்கி  நிலைகெடக்  கிடத்திய
ஒருதனிப்  பெரும்பணிப்  பெரியார்  தேர்ந்தசெந்
தெருள்தெளி  மாணவர்  தீந்தமிழ்ப்  பெயரிது !
மூடுற்ற  தமிழினப்  பீடு  விளக்கிய
ஈடிலா  அறிஞரின்  சூடெழும்  பெயரிது !                          -20

தாய்நிலந்  தன்னைத்  தமிழ்நா  டென்றே
வாய்மகிழ்ந்  தழைக்க  வைத்தவர்  பெயரிது !
ஆட்சியில்  கல்வியில்  காட்சியில்  இசையில்
நீட்சி  தமிழின  வீழ்ச்சியென்  றுணர்த்தி
நலங்களைச்  சிதைத்தோர்  கலக்குற  துலக்கமாய்ச்
சொலல்வல்  திறத்தரின்  சுருக்கப்  பெயரிது !
செத்ததை  விலக்கிய  செந்தமிழ்த்  திருமணம்
ஒத்தொப்  பிடவோர்  சட்டஞ்  சமைத்தவர் !
பிறப்பிற்  பிரிவினை  இறக்கங்  கூறிய                                 
சிறப்பிலா  ஆரிய  மாயை செகுத்தவர் !                      -30

தமிழர்  உணர்வுத்  தழல்தீப்  பரவவும்
இழிவொழித்  திவ்வினம்  ஏற்றமுற்  றிடவும்
அயரா  துழைத்த  வயவரி  யாரவர் !
பெயராப்  பெரும்புகழ்ப் பேற்றில்  நிலைத்தவர் !
இராசாசி  சூழ்ச்சியில்  நேரு  தட்சிண
இராச்சியம்  கொணர  இங்கதற்  கெதிராய் 
மொழிவழி  அரசுகள்  வழிவழி  அமைய
கழிபெரு  மாற்றலாய்க்  கடுங்குர  லார்த்தவர்! 
இந்திய  தேசிய  மெதிர்த்தா  ராயினும்
நந்தமி  ழினநல  நாட்டமிக்  கிருந்தும்                       -40

தெரிந்தே  திராவிடத் தேசியம்  பேசி
அருந்தமிழ்த்  தேசியம்  பொருந்திடா  தெதிர்த்தமை
ஒப்போலை  அரசியல்  தப்பதே!  சறுக்கலே ! 
இப்பிழை  யிவர்புகழ்  இறக்கிட  வில்லை !
செந்தமிழ்ச் சீருரை  தந்திடும்  வெற்றியால் 
எந்த  நிலையையும்  சந்தித்த  திவர்நா !
அடுக்கு  மொழியுடன்  அண்ணா  தமிழை
ஒடுக்கம்  உடைத்தே  உலாவரச் செய்தார் !
இருமொழி  போதும்  இந்திவேண்  டாவென
மருட்டலாய்த்  திட்டம்  மறுத்துக்  கொணர்ந்தார் !            -50


அறிஞர்  இவரென  பெர்னாட்  சாவென                     
அறிவித்  தேத்தினார்  அண்ணாவைக்  கல்கி
ஆங்கிலந்  தனிலிவர்  பாங்குற  ஆற்றிய
ஓங்குரை  நேருவின்  உளங்கவர்ந்  தீர்த்தது !
ஈழத்  தமிழர்  இன்னலைத்  தீர்க்க
ஆழவு  ணர்ந்தே  அன்றவர்  முயன்றார் !                   
ஓர்வோம்  அண்ணா  உயிர்த்திருந்  தாரேல்
ஓரிலக்  கம்பேர்  சூருற  மடிவரோ ?
இன்றுமூ  விலக்கம்  இழிவினி  லின்னலில்
குன்றி  யங்கவர்  நின்றிட  விடுவரோ ?                          -60
 
தன்னலந்  தன்னுடை இன்குடும் புறுப்பினர்
நன்னலங்  கருதா  செந்நலத்  தொண்டர் !
ஒருமுறை அண்ணா  உரோமிற்குப்  போனார்
திருவுறை  போப்பிடம்  தேர்ந்திவர்  கேட்டதோ
விடுதலை  மறவர்  இரானடே விடுதலை
வடுவறுந்  தொடுப்பில்  எடுப்புற  அடுக்கி
அண்ணா  கேட்டதா  லவர்விடு  பட்டார் !                   
எண்ணிய  வெல்லாம்  நன்மாந்த  நேயம் !
பெரிதுபெரி  தண்ணா  பெரும்புகழ்  விரிக்க!
உரிமைபெற்  றிங்குநாம்  உயர்வுறற்  கெனவே                     -70

ஆர்த்தார்;  உழைத்தார்;  அதன்வழி
சீர்த்திசால்  தமிழினங்  காத்தனர்  அவரே!
----------------------------------------------------------------------------------------------------------

    








.

புதன், 26 நவம்பர், 2008

அண்ணாவின் பெருமை!

       
பெருமையெனல் உயர்ச்சிசிறப் பெனஒருவர் குணநலன்கள்
பெரிதாய்ப் போற்றும்
ஒருதகைமை! செயற்கரிய உண்மையிலே செய்ததினால்
உற்ற பேறே!
எருவெனவே உயிருடம்பை இத்தமிழ மண்ணுக்கே
ஈந்த பெம்மான்
திருமைமிகு அண்ணாவின் பெருமையினைச் சிறிதிங்கே
தெரிந்து கொள்வோம்!



அறிஞருளும் அறிஞரவர் அரசியல்சீர் கற்றறிந்தார்
அவரின் பேச்சைப்
பொறிமடுத்தார் வயப்படுவர்; புரிந்தபிறர் வேட்டிருப்பர்;
புரியார் தம்மை
நெறிப்படுத்தும் குமுகாய நிலைதிருத்தும் பெரும்பணியர்
நெஞ்சக் கூட்டில்
வெறியன்பால் தமிழ்மக்கள் விருப்பத்தோ டடைத்துவைத்த
வெல்லுஞ் சொல்லார்!



உலகினிலே முதன்முதலாய் உயர்ந்திருந்த ஓரினத்தை
ஒப்பே இல்லா
இலகுதமிழ் முதன்மொழியை ஏய்ப்பினிலே வீழ்த்திய
ரியத்தின் மாயை
துலக்கமுற விளக்கியவர் தோல்வியிலா எழுத்தாற்றல்
துணையி னாலே
இலங்குகதை கட்டுரைகள் ஏற்றமிகு மேடைதிரை
எல்லாம் வென்றார்!



பொருநரென மேடையிலும் புத்தெழுத்து நடையினிலும்
பொலிவு சேர
அருந்தமிழ்க்கு அணிசேர்த்தார்! அயற்சொற்கள் தவிர்த்தெழுத
ஆவல் கொண்டார்!
இருந்தமிழ்க்கு மறுமலர்ச்சி இவராலே வந்ததெனில்,
இதுவே உண்மை!
பெருஞ்சிறப்பில் செந்தமிழ்க்கே பீடுறவே எடுத்தாரோர்
பெருமா நாடே!



எழுத்தாளர் கல்கிமகிழ்ந் திவர்அறிஞர், தென்னாட்டின்
பெர்னாட் சாஎன்(று)
அழுத்தமுறப் புகழ்ந்துரைத்தார்! ஆங்கிலத்தில் அண்ணாவின்
ஆற்றல் பேச்சு
இழுத்ததந்த வாச்பேயி நேருவுட னெல்லாரின்
இனிய சிந்தை!
வழுத்திதமிழ் மக்களெல்லாம் வாய்மகிழ அண்ணனென
வழங்கி னாரே!



இருபத்து மூன்றுதிங்கள் இவர்முதல்வ ராயிருந்தார்
இதற்குள் ளேயே
இருமொழியே போதுமென இந்திமறுத் தோர்சட்டம்
இயற்றித் தந்தார்!
பெருமகிழ்வில் தமிழ்நாடாய்ப் பெயர்மாற்றம் செய்திட்டார்!
பின்தன் மானத்
திருமணங்கள் செல்லுமெனுந் திருத்தத்தால் தமிழ்மானம்
திரும்ப மீட்டார்!



இனக்கொலைகள் அன்றைக்கும் ஈழத்தில் ஐம்பத்தோ(டு)
இரண்டாண் டின்முன்
கனக்குமனத் தோடண்ணா கனிவற்ற தில்லியினைக்
கடிந்து ரைத்தார்!
மனக்குமுற லோ(டு)ஐநா மன்றிற்கும் எழுதிநிலை
மாற்றக் கேட்டார்!
இனக்காவல் மறவனவர் இருந்திருந்தால் இன்றிருக்கும்
ஈழ நாடே!



அண்ணாவின் உரோம்செலவில் ஆற்றலுடை ஒருமறவர்
அடைப்பின் நீக்க
பண்ணவராம் போப்பவரும் அண்ணாவின் வேண்டுகைக்குப்
பரிந்தி சைந்தே
திண்ணமிகு இரானடேயை விடுவிக்கச் சிறைக்கதவும்
திறந்த தன்று!
எண்ணமெலாம் நன்னேயம் இயக்கமெலாம் நன்னெறியன்(று)
இலங்கி னாரே!



பெரிதுபெரி தண்ணாவின் பெரும்பெருமை முடிந்திடுமோ
பேசு தற்கே!
அரியதமிழ் மீட்பிற்கு அண்ணாவே முன்னணியர்
அறியார் யாரே!
விரிந்ததவர் சிந்தனைகள் தளையறுத்துத் தமிழருயர்
விடிவைத் தேடி!
அரிதவரின் பெருமைசொலல் அவரவரும் தம்முணர்வால்
அறிந்து கொள்வீர்!

 -------------------------------------------------------------