கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருணாநிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 ஜூலை, 2009

ஈழம்: தமிழ்நாட்டு ஆட்சியாளர் நடிப்பும் நாடகமும்!

.  

     சென்னையில், ‘அனைத்து நாட்டுத் தமிழ்நடுவம்என்ற அமைப்பு ஒரு மாநாட்டை 08-06-2009 அன்று ஏற்பாடு செய்திருந்தது.  இந்த மாநாட்டில், வன்னிப்போர் நடந்தபோது, இந்தியத் தேசியப் பாதுகாப்பு அறிவுரைக் குழுவின் உறுப்பினராக இருந்த பேராசிரியர் வி.சூர்யநாராயண் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “ நம் (இந்தியாவின்) கைகள் இரத்தக் கறையால் களங்கப் பட்டுள்ளனஎன்று அவர் ஒப்புக்கொண்டதோடு, ஈழச் சிக்கலில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு அரசைக் கலந்து கொள்ளாது புதுதில்லி எதையும் செய்ததில்லை என்று கூறி, கருணாநிதி முதல்வராயுள்ள தமிழ்நாட்டரசு, இந்திய அரசின் அனைத்துச் செயல்களுக்கும் உள்கையாக இருந்ததை வெளிப்படுத்தி விட்டார்!

தமிழ்நாட்டு ஆட்சி
     தமிழ்நாட்டில் இப்போது கருணாநிதி முதலமைச்சராக உள்ள தி.மு..வின் சிறுபான்மை ஆட்சி, பேராயக் கட்சியின் துணைதரவோடு தான் நடந்து வருகிறது. ஆட்சியைப் பேராயக்கட்சி கவிழ்த்து விடாமல் எந்த நிலையிலும் எப்படியாவது காப்பாற்றிக கொள்ள வேண்டும் என்பதில் பதவி அதிகாரப் பேராசையை விடமுடியாத தி.மு.. தீர்மானமாக இருக்கிறது. அதனாற்றான், எக்காரணங் கொண்டும் தலைமை அமைச்சர் மன்மோகனும் பேராயக்கட்சித் தலைமையும் மனங் கோணாதவாறு தி.மு..வும் அதன் தலைவரான முதலமைச்சர் கருணாநிதியும் நடந்து கொள்கின்றனர்.

குடும்பம், அதிகாரம்
     தி.மு..வின் தலைவர் கருணாநிதி, தன் குடும்பத்தினர் பலருக்கும் அமைச்சுப் பதவி முதலானவற்றின் வழி நலன்களைச் சேர்த்துக் கொள்ளவும் காத்துக் கொள்ளவும் முதன்மை அளிப்பதை அவருடைய செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.
     நடுவண் அமைச்சரவையில் விரும்பிக் கேட்ட துறைகளோடு கேட்ட எண்ணிக்கையில் கருணாநிதி விரும்பிக் கூறும் ஆட்கள் அமைச்சர்களாகத் தொடர்ந்து இருந்து கொண்டிருக்க வேண்டும் என்றும் அதன்வழி பதவி அதிகாரப் பயன் துய்க்க வேண்டும் என்றும் தி.மு.. கருதுவது தெளிவாகத் தெரிகிறது.

கைக்கூலி
     இவ்வாறான காரணங்களால்தான், தி.மு.. இந்திய அரசின் கைக்கூலி அமைப்பாகவும், சோனியா காந்தியின் தலைமையிலான பேராயக் கட்சியின் கையாள் அமைப்பாகவும் செயல்படத் தயங்கவோ கூச்சப்படவோ இல்லை.

ஒரே கொள்கை
     இம்முறை தமிழ்நாட்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததுமே, முதலமைச்சர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு விடையளிக்கையில், ஈழச்சிக்கலில் நடுவண் அரசின் கொள்கையே தம் கொள்கை என்று கூறினார். அக்கூற்று முற்றிலும் உண்மை என்பதை இன்று வரை கருணாநிதியின் செயற்பாடுகள் மெய்ப்பித்து வருகின்றன!

உணர்வெழுச்சி
     சென்ற ஆண்டு (2008) செப்தம்பர் மாதத்திலேயே, இனவெறிச்சிங்கள அரசு ஈழத்தமிழரைக் கடுமையாகத் தாக்கிக் கொன்று கொண்டிருந்தது. அக்தோபர் மாதம், தமிழ்நாட்டில் தா.பாண்டியன் தலைவராக உள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி நடுவண் அரசையும் தமிழக அரசையும் வற்புறுத்தித் தமிழ் உணர்வாளர்களோடு ஒருநாள் உண்ணா நோன்பை நடத்தியது.
     தமிழக மக்கள், கொடுமையான இனஅழிப்புத் தாக்குதல்களால் அல்லலுற்று அழிந்து கொண்டிருக்கும் தம் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்குத் தம் துணைதரவை வெளிப்படுத்தும் வகையில் உணர்வு கொண்டெழுந்தனர்.

நடிப்பும் ஊடகப் பரப்புதலும்
     இந்த எழுச்சியை மிக நன்றாகப் புரிந்துகொண்ட கருணாநிதி, தேர்ந்த திறமையோடும், மிகமிகத் தந்திரக் கரவோடும் தம் இன உணர்வு நடிப்பை வெளிப்படுத்தத் தொடங்கினார். அவருக்குச் சார்பாகவும் துணையாகவும் தமிழக மின் ஊடகங்களும் செய்தித் தாள்களும் செயற்பட்டன. இவ் ஊடகங்கள் கருணாநிதியின் குடும்பத்தினர்க்குச் சொந்தமானவையும் அரசு தரும் விளம்பரத்தின் வழி கிடைக்கும் வருமானத்திற்காகவும் பிறவற்றிற் காகவும் அரசிற்குச் சார்பாகவே இயங்குவனவாகும்.
     ஈழத்தமிழர் துன்பத்தைக் கண்டு முதலமைச்சர் ஆறாத் துயருற்றதாகப் பலவாறு செய்திகளைப் பரப்பின. ஈழத்திலிருந்து வந்த குறுவட்டின் வழி, சிங்களர் இழைக்கும் கொடுமைகளைக் கண்டு அதிர்ச்சியும் கொதிப்பும் அடைந்து, அவர் வீறுகொண்டு எழுந்துள்ளதாகவும், தில்லியைப் பணிய வைத்து உடனே போரை நிறுத்தப் போகிறார் எனவும் பலவாறான செய்திகளைப் பரவலாகப் பரப்பின. அதற்கேற்ப அவரும் தம் தேர்ந்த போலித்தனமான செயற் பாட்டைத் தொடர்ந்தார்.

எழுச்சியைத் தணிக்க
     தமிழ்நாட்டு மக்களின் எழுச்சியுற்ற போராட்ட உணர்வைப் புரிந்து கொண்ட அவர், தாமும் போராடுவதாக நடித்து மக்களின் எழுச்சியைத் தணிவித்து மழுங்கடிக்க முழுமுனைப்பாகக் கரவுத்தனத்துடன் ஈடுபட்டார் என்பதைப் பின்னரே தெரிந்து கொள்ள முடிந்தது.
     இராசிவ் காந்திக்கு முன் பின் என்று ஈழச்சிக்கலைப் பார்க்க வேண்டும் என்றும் புலிகள் தலைமை முற்றதிகாரப் போக்குடையது என்றும் புலிகளைக் குறைகூறிப் பேசி வந்த கருணாநிதி, ஒரு நேர்காணலில் பிரபாகரன் தன் நண்பர் என்று கூறினார். மறுநாள், பேராயக்கட்சியின் எதிர்ப்பைக் கண்டு மிரண்டு, தான் கூறியதையே மழுப்பலாக மறுத்தார். தமிழ்ஈழம் அமையத் தாமும் உதவுவதாகத் திடுமென அறிவித்தவர், வழக்கம்போல் பேராயக் கட்சியின் சலசலப்பிற்குப் பின் வாய் மூடிக் கொண்டார்.

நடிப்பும் நாடகமும்
     நடுவண் அரசு முயற்சி எடுத்து ஈழத்தில் போரை நிறுத்தாவிட்டால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்றார். பின் மற்ற கட்சிக் காரர்களைக் காரணம் காட்டி, பதவிவிலகப் போவதில்லை என்று அறிவித்தார்.
     இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்குப் போட்டியாக, போலியாக ஒரு அமைப்பு தமிழ்நாட்டு அரசால் உருவாக்கப்பட்டது. ..பா. இயக்கம் மாந்தத் தொடரிப் போராட்டம் என்றால், தி.மு..வும் மாந்தத் தொடரிப் போராட்டம் என்றது. ..பா.. கடை அடைப்புப் போராட்டம் என்றால் தி.மு..வும் அவ்வாறே அறிவித்தது. இவ்வாறு, போலித்தனமான போட்டிப் போராட்டங்களை அறிவித்து மக்களின் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கப் பெரும்பாடு பட்டனர்.
     மாமறவன் முத்துக்குமாரின் ஈகச் சாவும் அதன்பின் 12 பேர் தீக்குளித்த நிகழ்ச்சிகளும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தின. ஊடகங்கள் உண்மையான ஈழச்செய்திகளை வெளியிடாது புறக்கணிப்புச் செய்ய மறைமுகமாக வலியுறுத்தி அதன்வழி மக்களின் எழுச்சியைத் தணிக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. எவ்வெவ் வாறோ முயற்சி செய்தும் மக்களின் எழுச்சியை அடக்கும் முனைப்பில் அரசு தோல்வியையே கண்டது!

எழுச்சியும் ஒடுக்கும் முயற்சியும்
     கண்டனப் பேரணி, உண்ணா நோன்பு, மறியல், வேலை நிறுத்தம், கடைஅடைப்பு, உருவ எரிப்பு, முற்றுகை, தீக்குளிப்பு உயிர் ஈகம் போன்ற பல்வேறு வகைப் போராட்டங்கள் பல்லாயிரக் கணக்கில் சிற்றூர் முதல் பெருநகர் ஈறாக பல இலக்கக் கணக்கான மக்களின் பங்கெடுப்போடு நடைபெற்றன. ஆனால், நடுவண் அரசும் தமிழ்நாட்டு அரசும் இவற்றை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
     போராட்டம் நடத்தியவர்கள் தளைப் படுத்தப்பட்டாலும், மிகச்சிலர் தவிர மற்ற அனைவரும் அன்றே மாலையில் விடப்பட்டனர். திரைப்பட இயக்குநர் சீமான் போன்று மக்களைக் கிளர்ச்சிக் கெழச்செய்த சொற்பொழிவாளர்களை இ.பா.சட்டத்தின் கீழ் சிறைவைத்து ஒடுக்க முனைந்தனர். மக்களின் போராட்டங்கள் அனைத்தும் ஆட்சியாளர்களால் பொருட்படுத்தப் படவில்லை; ஆறரைக் கோடி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் கொஞ்சங்கூட மதிக்கப் படவில்லை.

உளத்தியல் முயற்சிகள்
     தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் எழுச்சியையும் மழுங்கச் செய்ய உளத்தியல் அடிப்படையில் முயற்சிகள் தந்திரமாக மேற்கொள்ளப் பட்டன. பிரபாகரன் தளை செய்யப்பட்டால் அலெகசாந்தர் போரசு மன்னனை நடத்தியதைப் போல் மதிப்புடன் நடத்த வேண்டும்’, ‘பிரபாகரன் கொல்லப் பட்டால் வருத்தப்படுவேன்போன்ற கூற்றுகளை வெளிப்படுத்தியதை இவற்றிற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
     ஆனால், இக் கூற்றுகள், முதல்வரின் ஆழ் மனத்தில் போரை நிறுத்த வேண்டுமென்ற முனைப்பு இல்லை எனபதை மக்கள் புரிந்துகொள்ள வழி செய்தன.

இணையற்ற நடிப்பு
     நடுவணரசின் தூதுவர்களாகக் கொழும்பு சென்ற அதிகாரிகள், அங்குச் சிங்கள ஆட்சியாளர்களிடம் போர்த் தாக்குதலை விரைவு படுத்தவும், அதற்கு அவர்களுக்குத் தேவை என்ன என்பதை அறிந்து வரவும், ஏதுமறியாத் தமிழர் பெரும் பேரளவில் கொல்லப்படுவதற்கு எந்த உலக நாடாவது எதிர்ப்பு தெரிவித்தால் இந்தியா இலங்கைக்குத் துணையாக இருக்கும் என்று உறுதி கூறவும் பிரபாகரன் இறந்துவிட்டதாகச் சிங்கள ஆட்சியாளரிடம் சான்றிதழ் பெற்று வரவுமே சென்றனர் என்று இப்போது செயதிகள் வெளிவந்து விட்டன.
     அந்தத் தூதுவர்கள் ஒவ்வொரு முறை இலங்கைக்குச் சென்று திரும்பியதும், தமிழ்நாட்டு முதலமைச்சரை வந்துச் சந்தித்துச் சென்றனர். அப்போதெல்லாம், அத் தூதுவர்கள் போரை நிறுத்தச் சிங்கள அரசை வலியுறுத்திவிட்டுத் திரும்பி வந்திருக்கிறார்கள் என்று செய்தியாளருக்குத் தெரிவித்தனர். இந்த நாடகத்தில் யாருடைய நடிப்பு இணையற்றதெனக் கண்டுபிடிப்பது திறமைமிக்க மானாட்ட மயிலாட்டக் கிழட்டு நடுவருக்கும் மண்டையைக் குழப்பக் கூடியதே!

மூன்றுமணி நாடகம்
     சென்னைக் கடற்கரையில் முதலமைச்சர் மேற்கொண்ட மூன்றுமணி நேர உண்ணாநோன்பு முயற்சி ஒரு அப்பட்டமான நாடகம் என்று மக்கள் அனைவரும் கூறுகின்ற வகையில் அமைந்து விட்டது. போர்நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று கூறி, உண்ணா நோன்பை முதலமைச்சர் முடித்த அன்றே, சிங்கள இனவெறி அரசு ஏதுமறியா ஈழத்தமிழர் 272 பேரைக் கொன்றது. அடுத்தநாள் 172 பேர் கொல்லப்பட்டனர். அதற்கடுத்த நாள் ஆயிரம் பேர் சாகடிக்கப் பட்டனர். ஆம்,  இனக்கொலை தொடர்ந்து பேரெண்ணிக்கையில் நடந்தது. ஆனால், இதற்கு அமைதி கூறும் வகையில் மழை விட்டுத் தூவானம் போல் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கிறது எனத் தயங்காது பொய் கூறினர்.

கருத்துச் செலுத்தவே இல்லை
     இதுவரை, ஈழ விடுதலைப் போரில் ஓரிலக்கம் தமிழர் உயிர் இழந்துள்ளனர். போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததற்கு முன்னராகக் கடைசி இரண்டு மூன்று நாட்களில் ஈழத்தமிழர் 53000 பேர் கொல்லப் பட்டிருந்தனர்; 13000 பேர் காணாமற் போயிருந்தனர்! தமிழ்நாட்டு அரசோ, தமிழக முதல்வரோ இச்செய்தி குறித்து வாய் திறக்கவே இல்லை. இரங்கலுரையோ ஆறுதல் சொற்களோ இவர்களால் கூறப்படவில்லை!
     போருக்குப் பின், ஏதுமறியாத் தமிழர் மூன்றிலக்கம் பேர், 41 இடங்களில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட முட்கம்பி வேலிகளால் சூழப்பட்ட கடுங்காவற் கூடாரங்களில் மந்தைகளைப்போல் அடைக்கப் பட்டனர். காயங்களாலும் நோய்களாலும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு, உணவு, உடை, மருந்து, நீர் கிடைக்கவில்லை எனச் செய்திகள் கூறுகின்றன. அங்கிருந்து இழுத்துச் செல்லப்படும் பெண்கள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப் படுகிறார்கள் என்றும், இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாது என்றும் செய்திகள் கூறுகின்றன.     அவர்களின் சொல்லொணாத் துயர் நீக்கும் முயற்சியில் இன்னமும் தமிழ்நாட்டரசு கொஞ்சமும் கருத்துச் செலுத்தவில்லை என்பதே உண்மை நிலையாக உள்ளது.

சிங்களர்க்குப் பரிந்து
     இப்படிப்பட்ட நிலையில், பணத்தை வாரி இறைத்தும் வேறுவகை மோசடி செய்தும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓரளவு வெற்றி பெற்றபின் தமிழ்நாட்டு முதல்வர் தில்லி சென்றார். நடுவண் அரசு அமைச்சரவையில் கேட்ட எண்ணிக்கை அளவில் தாம் விரும்புகின்றவர்களுக்கு அமைச்சர் பதவி பெறுவதற்காகத் தில்லியில் நாட்கணக்கில் தங்கிப் பேசி அவர் பெருமுயற்சி மேற்கொண்
டிருந்ததைக் கண்டோம்! கேட்டவற்றைப் பெற்றுக் கொண்டதன் பின்னும்கூட ஈழத்தமிழர் நலன்காக்கத் தில்லியை வற்புறுத்தாத நிலையே தொடர்ந்து வருவதைப் பார்க்கின்றோம்!
     அண்மையில், சட்டமன்றத்தில் சிங்களர் சினமுறாத வகையில் ஈழத்தமிழர் நடந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் கூறிய கூற்று, ஈழத்தமிழர்க்குச் சம உரிமையோடு வாழ வழி கூறுகிறதா இல்லை அவர்களைச் சிங்களரின் அடிமைகளாகவே இருக்க வலியுறுத்துகிறதா என்று மக்களை ஐயுறச் செய்துள்ளது.

வரலாறு அம்பலப்படுத்தும்
     பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் குடும்பத்தினர் நலன்களை முன்னுரிமை தந்து பேணுவதற்காகவும் ஈன்ற இனத்திற்கே எதிராக நடந்துகொண்டு, அதை மறைக்க எத்தனை நடிப்பும் நாடகமும் நடத்தினாலும், உண்மையை நெடுங்காலத்திற்கு மறைக்க இயலாது! வரலாறு ஈகிகளையும் நல்லவர்களையும் தன்னலக்காரர்களையும் இரண்டகர்களையும் அம்பலப்படுத்துவதை யாராலும் மூடி மறைத்துவிட இயலாது.

தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.        குறள்.114.
           
--------------------------------------------------------------