செவ்வாய், 6 ஜனவரி, 2026

தமிழ்காக்க நடவடிக்கை எடுப்பீர்!

 

தமிழ்காக்க நடவடிக்கை எடுப்பீர்!

முதுகலைப்பட்டந்தாங்கி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கணிப்பயிற்றுநர்கள் போன்ற பணிகளுக்குத் தேர்வுபெறத் தமிழ்மொழித் தேர்வில் வெற்றிபெறுவது கட்டாயத் தேவை என்று 2022-இல் தமிழ்நாட்டு அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கான 1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காகப் போட்டித்தேர்வை தமிழ்நாட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் 12.10.2025 அன்று நடத்தியது.

இதில் தேர்ச்சி பெற, தமிழ்மொழித் தேர்வில் 40% மதிப்பெண்கள் பெற்வேண்டியது கட்டாயமாகும். 40% தகுதி மதிப்பெண் பெறாதவர்கள், முதன்மைப் பாடத் தேர்வு எழுதினாலும் அந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யாமல் புறக்கணிக்கப்படும்.

இத் தமிழ்த் தகுதித் தேர்வை 2,20,412 பேர் எழுதியிருந்தார்கள். எழுதியவர்களில் ஏறத்தாழ 85,000 பேர் தேர்ச்சி பெறவில்லை என்று சிலரும், ஏறத்தாழ 84,000 பேர் தோல்வியுற்றதாக வேறுசிலரும் கூறுகின்றனர். துல்லியமான எண்ணிக்கை அதிகார அடிப்படையில் அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த முடிவு தமிழர் அனைவர்க்கும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது உண்மையாகும். முடிவாக, ஏறத்தாழ  36 விழுக்காட்டுத் (% ) தேர்வர்கள் தோல்வி அடைந்ததாகக் கூறுகின்றனர்.

                தமிழகத்தில் தாய்மொழியான தமிழ் பயிற்றுவிப்போர் -பயில்வோரின் தகுதிநிலையை மேற்குறித்த தேர்வுமுடிவுகள் கூறுகின்றன. இந்த இரங்கத்தக்க நிலைக்கு யார் காரணம்? ஓர் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் மிகவும் மனம் வருந்தி, “ஏழாம் வகுப்பில் பயிலும் ஒரு மாணவர்க்குத் தமிழ் நெடுங்கணக்குஅதாவது அ, , , ,………ஒள, ,   க், ங், ச், ஞ்,……..ற், ன் - சொல்லவும் எழுதவும் தெரியாத நிலையாகவே பள்ளிக்கல்வி நிலை இருக்கிறதுஎன்று கூறியதைக் கேட்கநேர்ந்தது. இது சற்றும் மிகையின்றிக் கூறப்படும் உண்மை நிலையாகும். அரசுப்பள்ளிகளின் நிலைமை இவ்வாறே உள்ளது. இதைப் பள்ளி ஆசிரியர் பலரும் ஒப்புக்கொள்வர்.

                இந்தநிலை, பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாதா? என்ன ஆக்க அடிப்படையிலான நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்? இந்தத் தமிழ்த் தகுதித்தேர்வு முடிவுகள் அவர்களுக்கும் தெரிந்துதானே இருக்கும்? ஆசிரியர்களின் நிலையே இரங்கத்தக்கதாய் இருக்கிறதே! இதுவரை பள்ளிக்கல்வித் துறை இவ்விழிநிலை போக்க ஏதாவது செய்திருக்கின்றதா?

                தமிழ் வாழ்க!’ என்று அரசுக் கட்டடங்களில் எழுதிவைத்தாலே தமிழ் வாழ்ந்துவிடுமா? மக்களை மயக்கி ஒப்போலை பெறும் வழியாகவன்றோ தெரிகிறது! இனியேனும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் அதிகாரிகளும் விழிப்புற வேண்டும்! தமிழைக் காக்கும் உண்மையான முயற்சியாக மாணவர்க்கு முறையாகவும் சரியாகவும் தமிழைப் பயிற்றுவிக்கத் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்! முதலமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நெஞ்சை அழுத்தும் கவலையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.


இது தகுமா? இது முறையா? இது அறம்தானா?

 

இது தகுமா? இது முறையா? இது அறம்தானா?


            சிந்துவெளி நாகரிகத்தைச் ‘சிந்து சரசுவதி நாகரிகம் ' என வரலாற்றைத் திரிக்கும் கருத்தரங்கம் ஒன்று கோவையில் நடக்க இருக்கிறது. “தேசியத் தற்பணி அமைப்’பின்” (RSS) கிளை அமைப்பான ‘தென்னிந்திய ஆய்வு நடுவம்’ (Centre for South Indian Studies) என்னும் கரவான மதவெறி அமைப்பு, தமிழ்நாட்டரசின் நிதியில் இயங்கும் அரசு உதவிபெறும் கல்லூரியுடன் இணைந்து இந்தக்கருத்தரங்கை நடத்துகிறது.

            தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளுக்குள் கருத்தரங்கப் புனைவில் புகுந்து ஆள் பிடித்து மாணவரிடையே பிளவுண்டாக்கி சாதி மத வெறி பிடிக்கவைக்கும் வேலையை நுட்பமாகச் செய்வதே இந்த அமைப்பின் வேலை. இந்த மதவெறி அமைப்புடன் சேர்ந்துகொண்டு அத்துடன் வெளிப்படையாக ஒத்துழைத்து கெடுவினை செய்ய முன்வந்திருக்கிறது கோவைக் ‘கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி’.

            தமிழ்நாட்டரசின் நிதியில் இயங்கும் அரசு உதவிபெறும் கல்லூரியான இதற்கு வெளிப்படையாக மதவெறி அமைப்போடு கைகோத்துச் செயல்படும் துணிச்சல் எப்படி வந்தது? உயர்கல்வித் துறை இக்கல்லூரி மீதும், நச்சுவிதை தூவும் தொடர்புடைய ஆசிரியர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? இளைய தலைமுறையை மதவெறிப் பிடிக்குள் சிக்காமல் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை அன்றோ! அறிவாளர் கடமை அன்றோ!

            கருத்தரங்கம் நடத்துவது தமிழ்த்துறை! கட்டுரையைத் தமிழில் மட்டுமல்ல இந்தியிலும் சங்கதத்திலும் கூட எழுதலாம் என்கிறது அறிக்கை! இவர்களைப் புரிந்துகொள்ள இந்த ஒருவரி போதாதா?

            சிந்துசமவெளி நாகரிகத்தைச் 'சிந்து சரசுவதி நாகரிகம்' என வரலாற்றைத் திரிக்கும் மோசடிக்குப் பெயர் ஆய்வுக்கருத்தரங்கா? அதற்குத் துணைபோவது பிழை என்பதை அறியாதவர்களா ஆசிரியர்கள்? தமிழ்நாட்டரசின் உயர்கல்வித்துறை உறங்குகிறதா? உயர்கல்வித்துறை அமைச்சருக்குத் தெரிந்தே இக்கொடுமை நடக்கிறதா?

            கல்லூரிகளை மதவெறியர் பிடிக்குள் கொண்டுசெல்லும் இதுபோன்ற அழிவு முயற்சிகளை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டாமா? கல்வித்துறையைக் காவிவயமாக்கக் கைகொடுப்போரை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டாமா?

            இக் கருத்தரங்கில் கலந்து கொள்ள தங்கள் பெயரை இந்த அறிக்கையில் போட ஒப்பியவர்கள் எந்த நெருக்கடியால் இப்படிச் செய்தார்கள் என்பதை அரசு கண்டறிய வேண்டாமா?

            மாந்த நேயம் காப்பாற்றப்பட மதவெறி முயற்சிகளைக் களையெடுப்பது மிக முகன்மைப் பணியன்றோ? மதவெறியை மறைமுகமாகத் தூண்டும் அமைப்புகள், கல்லூரிகளுக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டாமா?

            நஞ்சுக்கு இனிப்புத் தடவி நீர்வளப் பாதுகாப்பு போன்ற முகமூடிகளோடு வருவது அவர்களின் வழக்கம். முகமூடியைக் கிழித்துக் காட்டி மதவெறிக் கொடுமுகத்தை அடையாளம் காட்டும் கடமை, அறிவு வளர்ச்சியை விரும்பும் அனைவரின் கடமை.எனினும் அரசு விழிப்படைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

            கோவைக் கல்லூரியில் திசம்பர் 12, 13-ஆம் நாள்களில் நிகழவுள்ள இந்தக் அழிவுச்செயலை நிகழாமல் தடுப்பது உடனடித் தேவையன்றோ? இக்கருத்தரங்க ஆய்வுக் கருப்பொருள்களில் ஒன்றாகத் ‘திராவிட சித்தாந்தங்களின் சிதைவுகள்’ என்பதுவும் இருப்பதை அறிந்துணர வேண்டாமா?

            எனவே, இக்கருத்தரங்கு நடத்த இசைவளித்த தமிழ்நாட்டரசைக் கேட்கின்றோம் –இது தகுமா? இது முறையா? இது அறம்தானா?

            (முகநூலில் செய்தி அறிவித்த அன்பும் மதிப்புமார்ந்த செந்தலை கவுதமன் ஐயாவிற்கு நன்றி!)


(இந்நிகழ்வு திசம்பர் 12, 13ஆம் நாள்களில் நடக்கவில்லை. நிகழ்வை நிறுத்திவைத்திருப்பதாகச் செய்திகள் கூறின. ஆனால், அதே ‘கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி’யில் இருநாள் மாநாட்டில் தமிழ்நாட்டு ஆளுநர் 19-12-2025 வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு பேசியிருப்பதாக 20-12-2025 ‘தைம்சு ஆப்பு இந்தியா’ நாளிதழில் ஆறாம்பக்கத்தில் சிறிய அளவில் வந்த செய்தி கூறுகிறது)


தமிழுக்கு அரசுகள் ஆற்றவேண்டிய அரும்பணிகள்

 

தமிழுக்கு அரசுகள் ஆற்றவேண்டிய அரும்பணிகள்




            தாய்மொழியாம் தமிழுக்குத் தமிழக அரசுகளான புதுச்சேரி, தமிழ்நாட்டு அரசுகள் ஆற்றவேண்டிய இன்றியமையா அரும்பணிகளை, ஆசிரியவுரையிலும் பிறவற்றிலும் ‘நற்றமிழ்’ தொடர்ந்து அவ்வப்போது குறிப்பிட்டு வந்திருக்கின்றது. ஆள்வோரின் கவனத்தை அவை பெற்றதோ - பெறவில்லையோ, செயற் படுத்தப்படாமலே உள்ள நிலையை அறிகிறோம்; இருந்தபோதிலும் ‘நற்றமிழ்’ தொடர்ந்து தமிழ்க்கு ஆற்றவேண்டிய காப்புப் பணிகளையும், ஆக்கப் பணிகளையும் செயற்படுத்தத் தமிழ்நாட்டு அரசையும், புதுவை அரசையும் சலிப்பின்றி வலியுறுத்தலைத் தன் கடமையாகக் கருதுகின்றது.

            நகராட்சி, மாநகராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களில் ‘தமிழ் வாழ்க’ என ஒளிரும்எழுத்துகளில் எழுதிவைக்க ஏற்பாடு செய்தது பாராட்டவேண்டிய செயலே. இன்னும் தமிழறிந்தார்க்குப் பலர் பெயரில் பரிசில்கள் வழங்கப்படுவதும் சரியே. இச் சிறுசிறு செயல்களே தமிழுக்கு ஆக்கம் தந்துவிடும் செயல்களாக மனநிறைவு கொள்ள இயலாது. தமிழுக்கு உண்மையான நெடிதாக்கம் தருகின்ற நிலையான பயன் விளையும் ஆக்கங்களை எண்ணிச் செய்யவேண்டும்.

            எனவே, புதுச்சேரிஅரசும், தமிழ்நாட்டரசும் தமிழ்மொழியைப் பொறுத்தவரை கீழ்க்காணும் தமிழ்க்காப்புப் பணிகளை உடனடி கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டுமென ‘நற்றமிழ்’ வலியுறுத்துகின்றது.

1. முழுமையான ஆட்சிமொழியாகத் தமிழைச் செயற்படுத்தல்:

1968-ஆம் ஆண்டு, முதலமைச்சராக இருந்த பேரன்புக்கும் பெருமதிப்பிற்குமுரிய அண்ணா, தமிழ்நாடு என்று பெயர்மாற்றும் தீர்மானத்தைத் தமிழ்நாட்டுச் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நிலையில், ஆட்சிமொழிச் சட்டம் பற்றிக் குறிப்பிட்டுப் பேசும்போது, ஐந்து ஆண்டுகளுக்குள் அரசின் எல்லாத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்த, விரைவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். தமிழ்நாட்டின் பல்வேறு அரசுத் துறைகள், நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், நயன் மன்றங்கள் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழை முழுமையாக ஆட்சிமொழியாகச் செயற்படுத்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால், செயற்பாட்டில் இல்லை. தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்; செயற்பாட்டை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும்.

2. தமிழ்வழிக்கல்வி நடைமுறைப்படுத்தல்:

முன்பு நினைவூட்டியதைப் போல், அண்ணா தமிழ்நாடு எனப் பெயர்மாற்றும் தீர்மானத்தைச் சட்டமாக நிறைவேற்றிய போது நிகழ்த்திய புகழ்மிக்க உரையில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழ் பயிற்றுமொழி ஆக்கப்படுமென 1968-இல் உறுதியளித்தார். அதன்படி 1973ஆம் ஆண்டிலேயே கல்விநிலையங்கள் அனைத்திலும் தமிழ் பயிற்றுமொழி ஆக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழின் மேன்மை, தமிழர் பண்பாடு, நாகரிகக் காப்பு, தமிழரின் அடையாளத்தைப் போற்றிக் காத்தல், தமிழரின் உரிமையைப் பேணிக் காத்தல் முதலியவற்றிற்குத் தமிழைப் பயிற்றுமொழி ஆக்கவேண்டியது இன்றியமையாத் தேவையாகும்.

அண்ணா உயிருடன் இருந்திருந்தால் அவர் கூறியபடி தமிழைப் பயிற்றுமொழி ஆக்கியிருப்பார். தமிழ், பயிற்றுமொழி ஆக்கப்படுவதே தமிழரின் அனைத்துநிலை உயர்வுக்குமான வழியமைப்பு ஆகும் என்பதால் இக்கால் அரசாள்வோரும் அவர்கட்குத் துணையிருக்கும் அதிகாரிகளும் தெரிந்து தெளிந்து செயற்படுதல் வேண்டும். அனைத்துத் துறைகளிலும் தமிழை வளர்ச்சியடையச் செய்தபின் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவரலாம் என்னும் சிலரின் கூற்று, நீச்சல் பழகிய பிறகு நீரில் கால்வைத்து இறங்கலாம் என்னும் கூற்றுக்கு ஒப்பாகும் என்க. ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் படிக்க வழிவகை செய்துதரலாம்.

3. தமிழ்வழி படித்தோர்க்கே தமிழ்நாட்டில் அனைத்து வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை தரப்படுவதை உறுதிசெய்தல்:

தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்று உருவாக்கப்பட்டுள்ள அச்சத்தை மக்களிடமிருந்து போக்க வேண்டும். முதலில், தமிழ்நாட்டரசு எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழின் பயன்பாட்டை நூற்றுக்கு நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்தின், தமிழ்வழி படித்த தமிழர்க்கு வேலைவாய்ப்புகள் பெருகக் கிடைக்கும் என்பது உண்மை. மண்ணின் மைந்தர்க்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதைத் தக்கவாறு சட்ட நுணுக்கங்கள் அறிந்து, தேவையான புதிய சட்டங்கள் இயற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் தமிழரின் வேலைவாய்ப்புரிமையைக் காப்பாற்றி உறுதிப்படுத்தவேண்டும்.

மேலே குறிப்பிட்ட மூவகைச் செயற்பாடும் ஒன்றோடு ஒன்று தவிர்க்க இயலாத் தொடர்புடையனவாகும். தமிழரின் எதிர்கால முன்னேற்றத்திற்கு இவை மூன்றும் இன்றியமையாத செயற்பாடுகள் ஆகும்.

4. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, கல்வி மாநில அதிகாரப் பட்டியலில் இருந்தது. 1976-இல் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42-ஆவது திருத்தத்தின் மூலம், இந்திரா காந்தி ஒன்றிய தலைமைஅமைச்சராக இருந்த நெருக்கடிநிலைக் காலத்தில் கல்வி மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றிக் கொள்ளப்பட்டது. இது, இக்கால் ஆட்சியிலிருக்கும் ‘தேசிய தற்பணி அமைப்’பின் (RSS) வழிவந்தவர்களும், அந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றவர்களுமான ஆட்சியாளர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.

இதனால் மாநில மக்களின் தாய்மொழி பல்வேறு வகையில் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. இந்நிலை, மொழிநிலையில் தென்னாட்டவர், மேற்கு வங்காளத்தினர், மராத்தியர் முதலியோரை மொழிஅடிமையராக்கி இந்தி, சங்கதத் திணிப்புக்கு வசதிசெய்து தருகிறது. எனவே, முழு ஆற்றலுடன் போராடிக் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும்.

5. உருசியா, சீனா, பிரான்சு, சப்பான், கொரியா முதலிய நாடுகளில் மக்கள் அனைத்து அறிவியலையும் நுண்கலைகளையும் கூடத் தம் தாய்மொழி வழியே படித்து முன்னேறி உலகின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகின்றனர். நோபல்பரிசு பெற்ற பல அறிஞர்களுக்கு அவர்கள் தாய்மொழியைத் தவிரப் பிறமொழி தெரியாது என்பது உண்மையாகும். மேற்கூறிய நாடுகளில், உலகின் எந்த மூலையில் எந்த மொழியில் புதிய அறிவியல் செய்தியோ பிறதுறைச் செய்தியோ வந்தாலும் உடனுக்குடன் அவர்கள் தாய்மொழியில் அச்செய்தி பெயர்த்தளிக்கப்படுகின்றது. நூல்களும் அவ்வாறே பெயர்க்கப் படுகின்றன.

புதிய சொற்களை, குறியீடுகளை உடனே பெயர்ப்பதில் சிக்கல் இருந்தால் மூலநூல் சொற்களையும் குறியீடுகளையும் அப்படியே பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், முறையாக அவற்றிற்கான தமது மொழியின் பெயர்ப்புச் சொற்களையும் குறியீடுகளையும் கண்டுபிடித்துப் பிறகு மொழிபெயர்த்த நூலில், செய்தியில் திருத்தம் செய்கின்றனர். இவ்வாறாகத் தமிழில் பெயர்த்துத்தரும் ஏற்பாடு இன்றியமையாத் தேவையாகும்.

6. தமிழில் படித்தால் எளிதில் வேலை கிடைக்கும் என்கின்ற நிலை ஏற்பட்டால், ஆங்கிலவழியில் பயிலச்செல்வதில் ஆர்வம் குறையும். தனியார் பள்ளிகள் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். இதனால் தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்விக்கான செயற்கைத்தடை நீங்கும்; கல்வியின் பெயரால் நடைபெற்று வரும் கொள்ளைகள் தடுக்கப்படும்.

7. எல்லாப் பள்ளிகளிலும் தமிழை ஒன்றாம் வகுப்பு முதல் உயர்நிலைப் பள்ளி வகுப்புவரை கட்டாயப் பாடமாக்க வேண்டும். எந்தமொழி பேசினும் அவர்கள் தமிழகத்தில் இருப்பதால் தமிழகக் கல்விமுறையை ஏற்றுப் பயிலவேண்டும். தமிழே படிக்காமல் உயர்கல்வி, முனைவர் பட்டம் வரை பயிலும் நிலை தொடரக்கூடாது.

8. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கல்வி நிலையங்களில் போதுமான ஆசிரியர்கள் குறைவின்றி அமர்த்தப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகள் மேம்பட்ட கட்டமைப்புகள் கொண்டவையாக ஏற்பாடு செய்யவேண்டும். பாடநூல்கள், கற்பித்தல் கருவிகள் தடையின்றித் தரவேண்டும்.

ஆசிரியர்களுக்குப் பணிக்காலத்திலும் தேவைப்படும் பயிற்சி அளிக்க வேண்டும். கடமை தவறி நடக்கும் ஆசிரியர்கள் மீது தவறாது நடவடிக்கை எடுக்கத்தக்க சட்டத்திருத்தங்கள் செய்யப்படவேண்டும்.

9. தமிழகக் கல்விநிலையங்களில், கல்லூரிகளில் தமிழுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட அமைப்பாரும், தமிழ் வெறுப்பாளரும், மதம் சாதி சார்ந்த அமைப்பாரும் நிகழ்ச்சிகள் நடத்த இசைவளிக்கக் கூடாது. மீறி நடத்துவார் மீதும் இசைவளிப்பார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு நடைமுறையில் சட்டங்களும் நெறிமுறைகளும் இல்லாமலிருந்தால், உடனடியாக இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.

10. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கடைகள், வணிகநிறுவனங்கள், தொழிலகங்கள், அரசுக் கட்டடங்கள், பணிமனைகள், அலுவலகங்கள், முதலிய எல்லா இடங்களிலும் பெயர்ப்பலகைகளில் முதன்மையாகத் தமிழ் இடம் பெறவேண்டும். விளம்பரப் பதாகைகளும் தமிழில், இருக்க வேண்டும். இவற்றிற்குக் கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும்; இவற்றைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

11. ஒளிஊடகங்கள் முதலியவற்றில் தமிழைச் சரியாகப் பலுக்க(உச்சரிக்க)த் தவறுவோர்க்கும், வலிந்து ஆங்கிலம் முதலிய அயற்சொற்களைப் பயன்படுத்துவார்க்கும், தமிழைத் தப்பும் தவறுமாகப் பேசுவார்க்கும் தண்டனை தரும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தமிழ் அழிக்கும் செயல்கள் செய்தித்தாள்கள், இதழ்களில் காணப்பட்டாலும் தொடர்புடைய யாரும் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது.

12. இந்தி, சங்கத மொழிகளுக்கு ஒதுக்கப்படும் தொகைக்குச் சமமாகச் செம்மொழி தமிழுக்குத் தொகையை ஒதுக்க வலியுறுத்தவேண்டும்.

13. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் உள்ள ஒன்றியஅரசின் பல்வேறு அலுவலகப்பணிகளில் தமிழ் படித்த தமிழர்களையே அமர்த்தவேண்டும் அல்லது மிகுதியான பணியாளர்கள் தமிழ்படித்த தமிழர்களாக இருக்க வேண்டும்.

14. எவ்வளவு எதிர்த்தாலும் இந்தித்திணிப்பு நாளொரு சொல்லும் பொழுதொரு தொடருமாகத் திணிக்கப்படுவது நின்றபாடில்லை. இந்த நிலையில், திணிக்கப்படும் இந்திய ஒன்றிய அரசின் திட்டங்களின் இந்திப் பெயர்களைத் தமிழில் ஒலிமாற்றம் செய்து எழுதாமல், தமிழக அரசுகள் தமிழர்க்குப் புரியும்படி அவற்றைத் தமிழில் பெயர்த்து எழுத வேண்டும்; சொல்ல வேண்டும்.

15. தமிழகத்தில், தமிழைப் புறக்கணித்து, ‘வந்தே பாரத்’, ‘கேலோ இந்தியா’ போன்ற இந்திப் பெயர்களை முன்னிறுத்தி நடக்கும் நிகழ்வுகளில் இந்திய ஒன்றிய அமைச்சன்மாருடன் தமிழகஅமைச்சர்கள் கலந்துகொள்ளக் கூடாது. தமிழகத்தில் அப் பெயர்களைத் தமிழில் பெயர்த்து வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழக அரசுகளும் அவற்றைத் தமிழில் பெயர்த்தே சொல்லவேண்டும்; எழுத வேண்டும்.

16. தமிழ்நாட்டிலும் புதுவையிலும் உள்ள பல்வேறு அலுவலகப் பணியாளரும் தவறாது தமிழில் கையொப்பமிடவேண்டும். அதற்கான நெறிமுறைகள் வகுத்துக் கடுமையாகப் பின்பற்றச்செய்து, கண்காணிக்க வேண்டும்.

17. தமிழ்க்கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய உண்மையான தக்க ஏற்பாடு வேண்டும்.

18. அனைத்து நயன்மன்றங்களிலும் தமிழில் வழக்குரைத்து உறழாட ஏற்பாடு செய்ய வேண்டும்; இதற்குத் தக்க ஏற்பாட்டிற்கு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.

19. தமிழ்நாட்டில், புதுவையில் வானூர்தி நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழில் உரையாட வசதி வேண்டும்; ஒன்றிய அரசை வலியுறுத்தி ஏற்பாடு செய்ய வேண்டும்.

20. தமிழ்நாட்டில், புதுவையில் தமிழ்பேசும் தமிழர்தம் இயல்பான உடையான வேட்டி, சட்டை, மேல்துண்டு உடுத்திச் சென்றால் எந்த அலுவலகத்திலும் - எந்த நிகழ்ச்சியிலும், தடை செய்வாரைத் தண்டிக்கும் சட்டம் இயற்றவேண்டும்.

21. இந்திய ஒன்றியஅரசின் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் அனைத்தும் தமிழில் இருக்கும்படி வலியுறுத்தவேண்டும். வேற்று மொழியிலிருந்தால், தமிழ்மொழிபெயர்ப்பும் உடன்இருக்க வலியுறுத்தி ஏற்பாடு செய்ய வேண்டும்.

22. அகழ்வாய்வு செய்த அறிஞர்களின் முறையான அறிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிட வற்புறுத்த வேண்டும். அகழ்வாய்வுகளின் வழியாக வரையறுத்த தமிழ்மொழியின் காலம் வரலாற்று நூல்களிலும் பள்ளிப் பாடநூல்களிலும் கட்டாயமாக இடம்பெறச்செய்ய வேண்டும்.

23. செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சித் துறை முதலியவற்றின் செயற்பாடுகளைச் செம்மைப்படுத்திப் புத்துணர்வூட்டித் தமிழின் பல்துறை வளர்ச்சிக்கும் குறிப்பாக அறிவியல்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும்.

24. வெளிமாநிலங்களில் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் முதலியவற்றில் தமிழ் கற்பிக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும். இதன் தொடர்பாக அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும்.

25. வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழ்ப்பாடநூல்கள் தந்து தக்க தமிழாசிரியர்களால் தமிழ் கற்பிக்க எல்லாவகை ஏற்பாடுகளும் செய்யவேண்டும்.

26. அலுவலகக் குறிப்புகள், கடிதங்கள், அரசாணைகள் ஆகியவற்றைத் தமிழில் பிழையின்றி எழுதவும் பயன்படுத்தவும் அனைத்து அரசு ஊழியர்க்கும், அலுவலர்க்கும், அதிகாரிகளுக்கும் கட்டாயப் பயிற்சி அளிக்கவேண்டும். பொதுமக்கள் அரசுக்கு விடுக்கும் முறையீட்டு மடல்களுக்குத் தமிழிலேயே விடை தருவதை உறுதிசெய்தல் வேண்டும்.

27. மருத்துவம், பொறியியல், கணிஅறிவியல் போன்ற உயர்கல்வித் துறைகளில் புத்தாக்கப் பாடத்திட்டங்களைத் தமிழில் உருவாக்கித் தகுதியான பாடநூல்களை உருவாக்கித் தரவேண்டும்.

28. கணிப்பொறி, கைப்பேசி முதலியவற்றின் இணையப் பயன்பாட்டிற்குத் தேவையான எழுத்துருக்கள் , உள்ளீட்டுக் கருவிகள், பிழைதிருத்திகள் முதலியவற்றை உருவாக்கி ஒருபோகாகப் பயன்படுத்தும் வகையில் தகைப்படுத்தவேண்டும்.

29. குமுக ஊடகங்களில் தக்கவாறு தமிழின் பயன்பாட்டை வலியுறுத்தி ஊக்குவிக்க வேண்டும்.

30. அரசின் அனைத்து இணையதளங்கள், இணையவழி மக்கள் பணிகள் முதலியவை முழுவதையும் தமிழிலேயே அணுகக்கூடிய வகையில் புத்தாக்கத் தொழில்நுட்பத்துடன் தமிழ்மொழியை இணைக்க வேண்டும். செய்நுண்ணறிவு, எந்திரக் கற்றல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் தமிழ்மொழி ஆய்வுகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். தமிழில் மென்பொருள், செயலி முதலிய எண்ம உருவாக்கங்களை ஊக்குவிக்கவேண்டும்.

31. தமிழில் எழுதப்படும் தகுதியான இணைய இதழ்கள், அறிவியல் இலக்கியம், குழந்தை இலக்கியம் போன்றவற்றிற்குப் பரிசளித்துப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.

32. திரைப்படம், தொலைக்காட்சி, ஒளிஊடகங்கள், பல்வகை இதழ்களில் தமிழ்மொழிக்கு ஆக்கமளிப்பவர்களைத் தேர்வு செய்து விருதுகள், பரிசுகள் அளிக்க வேண்டும்.

33. தமிழகத்தில் கல்வெட்டுகள், குகை, பாறை ஓவியங்கள் முதலியவற்றைப் பாதுகாக்க வேண்டும். அரியநூல்களையும் அனைத்து ஓலைச்சுவடிகளையும் எண்ம முறையில் சேமித்துப் பாதுகாக்க வேண்டும்.

34. மறைந்துவரும் தமிழ் வட்டார வழக்குகளை, கரிசல் பகுதியார், கொங்குநாட்டார், நகரத்தார், சேலத்தார், நடுநாட்டார் முதலானோர் பேச்சு வழக்குகளைப் பதிவு செய்து காப்பாற்ற வேண்டும்.

35. தமிழ்நாட்டிலும், புதுவையிலும் ஒன்றிய அரசால் நடத்தப்பெறும் ‘கேந்திரிய வித்யாலயா’ போன்ற பள்ளிகளில் தமிழ் ஒரு கட்டாயப் பாடமாக இருக்கும்படிச் செய்யவேண்டும்.

இந்த நீண்ட பட்டியலில் முதலில் குறிப்பிட்டுள்ள 1 முதல் 5-ஐ நிறைவேற்றினாலே பின்னால் குறிப்பிட்டுள்ளவற்றை எளிதில் நிறைவேற்றிவிடமுடியும். ஆனால், மேலே குறித்த 35-உம் தமிழின் காப்பிற்கும் ஆக்கவளர்ச்சிக்கும் இன்றியமையாதன ஆகும்.

அரசுகள் இவற்றை நிறைவேற்றித், தமிழை உலக மொழிகளுக்கு இணையாக உயர்நிலைஎய்த உண்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென ‘நற்றமிழ்’ வேண்டிக் கேட்டுக்கொள்கின்றது.

எந்தமிழ் காக்க முன்நிற்பீர் -அதற்

கேற்ற பணிகளைச் செய்குவீர் இன்றே !

- பாவலரேறு பெருஞ்சித்திரனார். (1959)

கடன்என்று தமிழ்த்தொண்டில் அமிழ்வாய் — ஒரு

கடல்போன்ற புகழ்கொண்டு கமழ்வாய் ! - பாவேந்தர்

                                                                                                            - த.ந.

புதன், 26 நவம்பர், 2025

காலணி வீசும் ‘சனாதன’க் காப்பு!

 

காலணி வீசும் சனாதனக் காப்பு!

               

       மகாராட்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்த பூ.இரா.கவாய் என்னும் பூசன் இராமகிருட்டின கவாய் இந்திய உச்சநயன் மன்றத்தின் நயனராக 2019 மே 24-அன்று அமர்த்தம் பெற்றார்; 2025 மே 14-அன்று உச்சநயன் மன்றத்தின் 52-ஆம் தலைமை நயனராக அமர்த்தம் பெற்றுக் கடமையாற்றி வருகிறார்.


    கடந்த ஆறு ஆண்டுகளில், அரசியலமைப்புச் சட்டம், மேலாண்மைச் சட்டம், குடிமையியல் சட்டம், குற்றவியல் சட்டம், மின்சாரச் சட்டம், நடுவர் சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், கல்வித் தொடர்பானவை, வாணிக வழக்குகள் உள்ளிட்ட பல்வேறுநிலைச் சட்டங்களைக் கையாளுகின்ற ஏறத்தாழ 700 அமர்வுகளில் இடம்பெற்றிருந்தார். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல், குடிமக்களின் அடிப்படைஉரிமைகள் உள்ளிட்ட மாந்த உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள், அரசியலமைப்பு அமர்வு தீர்ப்புகள் உட்பட சற்றேறக்குறைய 300 தீர்ப்புகளை எழுதியுள்ளார். 2025 நவம்பர் 23 - அன்று பணிநிறைவு செய்ய உள்ளார்.

    உலான்பாதர் (மங்கோலியா), நியூயார்க்கு (அமெரிக்கா), கார்டிப்பு (பிரிட்டன்), நைரோபி (கென்னியா) ஆகிய இடங்களில் பல்வேறு அனைத்து நாட்டு மாநாடுகளில் கலந்துகொண்டிருக்கின்றார். கொலம்பியா பல்கலைக் கழகம், ஆர்வர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக் கழகங்களிலும், அமைப்புகளிலும் பல்வேறுபட்ட அரசியலமைப்பு, சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கின்றார்.

    2025 அக்டோபர் 6 அன்று, இந்தியாவின் உயர் நயன் மன்றத்தின் நயன்மன்றம் -1 என்ற அறையில், தலைமை நயனர் கவாய் அவர்களின் மன்றத்தில், காலை 11.35 மணியளவில், வழக்காளர்களின் முன்னிலையில், வழக்குரைஞர் ஒருவர் தலைமை நயனர் மீது காலணி ஒன்றை வீச முயன்றார். அப்போது அவர் “சனாதனத்தை அவமானப் படுத்துவதைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” (“சனாதன் கா ஆப்மான் நகி சகேங்கே”) என்று ஒலி எழுப்பினார். அந்த வழக்குரைஞரை உடனடியாகப் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியே கொண்டுசென்றனர்.

    தலைமை நயனர் கவாய் அவர்கள் எவ்வகை அச்சமோ கோவமோ பரபரப்போ, பதற்றமோ இல்லாமல் அமைதியாகக், ”கவனத்தைச் சிதறவிடாதீர்கள், இது எனக்குத் தாக்கம் ஏற்படுத்தாது” என்று கூறிவிட்டுத் தாம் கவனித்த வழக்கைத் தொடர்ந்தார். இதனை இந்தியச் சட்ட வட்டாரங்கள் “எடுத்துக்காட்டான நயன்துறை மனப்பாங்கு” (model judicial temperament) என்று பாராட்டின. ‘நடந்து விட்ட செயல்’ குறித்து உடன் இருந்தோர் சற்று நேரம் கழித்து நினைவூட்டிய வேளையில், தலைமை நயனர், ‘அதை அப்போதே மறந்து விட்டேன்’ என்று இயல்பாகச் சொல்லிவிட்டு நயன்மன்றப் பணியில் மூழ்கி விட்டார். அவர் நயன்மன்றப் பதிவாளரிடம், காலணி வீசியவர் மீது வழக்குத் தொடர வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

    நம் நாட்டு மக்களை மட்டுமல்லாமல், உலக மக்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வேளையில், சிறிதளவும் பொறுமையை இழக்காமலும், பதற்றமடையாமலும் தனது பணியினைத் தொடர்ந்த நிலை, தலைமை நயனரின் முதிர்ச்சி பெற்ற பேருள்ளத்தை வெளிப்படுத்தியது. பிற நயனர்கள், மூத்த வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் எனப் பலரும் அவரின் இந்த நடத்தை குறித்துப் பாராட்டினார்கள். உ. ந. மன்ற வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர், “அந்த நெருக்கடியான நேரத்தில் நயன் மன்றத்தின் பெருமிதத்தைக் காக்கும் வகையில் அவர் அமைதியாக நடந்துகொண்டார்” என்று கூறினார்.

        தலைமை நயனர் மீது காலணியை வீச முயன்ற ஆள் தன்னறிவை இழந்துவிட்ட பித்துப்பிடித்த ஆளோ, தெருத்திரி மாந்தனோ, முதிர்ச்சியற்ற இளைஞனோ இல்லை. 71 அகவை நிரம்பிய உச்ச நயன் மன்றத்தின் மூத்த வழக்குரைஞர் என்பது வியப்பளிக்கும் உண்மையாகும்!

அரசமைப்புச் சட்டத்தின்படிப் பணியாற்றிய தலைமை நயனரை, அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான, பிறப்பிலேயே வேறுபாடு கற்பிக்கின்ற ‘சனாதன’க் கோட்பாட்டின் வெறியுணர்வுடைய ஒருவர் தாக்கிட முயன்றுள்ளார். இது ஒரு தனியாள் செயல் இல்லை. இந்தச் செயலைப் புரிந்தவருக்குப் பின்னால் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான கொள்கையும், நம்பிக்கையும் உள்ளோர் உள்ளதை உணர இயலும் என்று நடுவுநிலையாளர் கருத்துரைக்கின்றனர்.

    வழக்கறிஞர் அமைப்புகள், இந்த நிகழ்வு, “நயன் மன்றத்தின் மீதான நேரடித் தாக்குதல்” என்று கண்டித்துள்ளன. உ.ந.மன்ற வழக்கறிஞர் மன்றம் காலணி வீச முயன்ற வழக்குரைஞர் இராக்கேசு கிசோரின் உறுப்பினர் உரிமையை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

    தலைமை அமைச்சர் நரேந்திரமோடி, இத் தாக்குல் முயற்சி குறித்து எஃசு (X) தளத்தில் எழுதிய செய்தியில், “இந்தியத் தலைமை நயனர் பூ.இரா.கவாய் அவர்களுடன் பேசியுள்ளேன். இன்று காலை உச்சநயன் மன்ற வளாகத்தில் அவர்மீது நடந்த தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோவமடையச் செய்துள்ளது. இப்படிப்பட்டக் கீழ்மையான செயல்களுக்கு நம் குமுகத்தில் இடமில்லை. இது முழுமையாகக் கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழ்நிலையிலும் நயனர் கவாய் காட்டிய அமைதியை நான் பாராட்டுகிறேன். அது, நயன்மையின் விழுமியங்களிலும் நம்முடைய அரசியலமைப்பை வலுப்படுத்தும் உணர்விலும் அவருடைய உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

    இந்திய ஒன்றிய அமைச்சர் இராமதாசு அத்துவாலே போன்றவர்கள், இது ஒடுக்கப்பட்ட குமுகத்தைச் சேர்ந்த நயனர் உயர்பதவிக்கு வந்ததை உயர்சாதியினர் ஏற்றுக்கொள்ளாததன் விளைவு என்றும், அதனால், பட்டியலினத்தவர், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    பதிவு செய்த உ.ந.மன்ற வழக்கறிஞர்கள் மன்றம் (SCAORA), பேராயக் கட்சி, தமிழக முதலமைச்சர் மு.க.இசுதாலின், கருநாடக முதல்வர் சித்தராமையா முதலியோரும் காலணி வீசிய நிகழ்ச்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியே கொண்டுசெல்லப்பட்ட அந்த வழக்குரைஞரை தில்லி காவல்துறை உசாவிய போது, 71 அகவையுடைய உச்ச நயன்மன்ற வழக்குரைஞராகிய அவர் பெயர் இராக்கேசு கிசோர் என்று கூறியிருக்கின்றார். 16-9-2025 அன்று உ. ந. மன்றத்தில் ‘மத்தியப் பிரதேச’ மாநிலம் காசுரகா கோயில் விட்டுணு சிலை புதுப்பிப்பு பற்றிய வழக்கில், தலைமை நயனர், ‘கடவுளை அவமதித்துப் பேசிவிட்டார்’ என்றும், ‘சனாதன’த்தைப் பற்றுடன் கடைப்பிடித்துவரும் அவரால் தலைமை நயனர் சொன்னதைப் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்றும் கூறியுள்ளார். காலணியை வீசிடும் முயற்சி செய்தது, அவருடைய செயல் இல்லை என்றும் கடவுள் செய்யுமாறு ஏவியபடி, காலணியைக் கழற்றி வீச முயன்றதாகவும் கூறியுள்ளார். மூன்று மணி நேர உசாவலுக்குப் பிறகு, அவரைக் காவல் துறையினர் போக விட்டிருக்கின்றனர்.

    நடுவுநிலை அறிஞர்கள், இந் நிகழ்ச்சியை ஒரு தனிப்பட்ட தாக்குதலாக மட்டுமன்றி நயன் துறையின் மாண்பைக் குலைக்கின்ற, அவமதிக்கின்ற, செயலாகப் பார்க்கின்றனர். நயன்துறையின் உரிமைக்கும் நாட்டின் அரசியலமைப்பிற்கும் அச்சுறுத்தலாகவும் பார்க்கின்றனர். இத்தகைய வெறுப்புச் செயல்களுக்குத் தெளிவான விடையளிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றனர்.

    இன்னும் சிலர், சாதி சார்ந்த இழிவுபடுத்தலாகவும், ஓர் ஒடுக்கப்பட்ட பிரிவைச்சேர்ந்த தலைமை நயனர் மீதான தாக்குதலாகவும் பார்க்கின்றனர். தலைமை நயனர் பூ.இரா.கவாய் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த இரண்டாம் தலைமை நயனர் என்பதை நினைவூட்டுகின்றனர்.

    காலணி வீசுவது என்பது இழிவுபடுத்தலின் உச்சமாகக் கருதப் படுவதால், இந் நிகழ்வு குறிவைத்து நடத்தப்பட்ட சாதி அடிப்படையிலான அவமதிப்பு என்று கருதப்படுகிறது. இச் செயல் பட்டியல் சாதிகள், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1989-இன் கீழ் வரும் ஒரு செயலாகும் என்றும், இது பொது இடத்தில் ஒடுக்கப்பட்ட குமுகத்தைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்த முனையும் நோக்குடன் செய்யப்பட்டது என்றும் வலியுறுத்துகின்றனர்.

    வேறு சிலர், இந் நிகழ்வை நயன் துறையிலும் ‘சனாதன’க் கோட்பாடுகளைப் புகுத்த முயலும் பார்ப்பனிய மதவெறி ஆற்றல்களின் நேரடித் தாக்குதலாகப் பார்க்கின்றனர். நயன்துறையின் தனி உரிமையைக் குலைக்கும் முயற்சி என்பது மட்டுமின்றிச் சமன்மை, குமுக நயன்மை ஆகியவற்றிற்கு எதிரான ஒரு செயலாகவும் பார்க்கின்றனர்.

     காசுரகா கோயில் சிலைகள் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. சிதைவடைந்த விட்டுணு சிலையைப் புதுப்பித்து கோயிலுக்குள் வைப்பதற்கு நயன்மன்றம் உத்தரவிட முடியாது. இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் பதிவு செய்த வழக்கு என்று தலைமை நயனர் குறிப்பிட்டார். தொல்லியல் துறையினரை அணுகுங்கள் என்று கூறித் தனது அமர்விற்கு வந்த வழக்கினைத் தள்ளுபடி செய்தார். திரும்பதிரும்ப முறையீட்டாளர் சிலையைப் புதுப்பிப்பதற்கு உத்தரவிடக் கோரிய நிலையில், நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள விட்டுணுவிடமே கேட்டுப் பெறுங்கள் என்று சொல்ல நேர்ந்தது.

    கோயிலில் உள்ள அந்தச் சிலை சிதைந்து விட்டது, புதியசிலை வைக்க வேண்டும் அல்லது சிதைந்த சிலையைப் புதுப்பிக்கவேண்டும் என்று அவர் கோயில் மேலாண்மையிடமோ, தொல்லியல் துறையிடமோ முறையிட வேண்டும், இல்லையேல், மாவட்டஆட்சியர் மூலம் முயற்சி செய்யலாம். நயன்துறையை நாட முடிவு செய்தாலும், உயர் நயன்மன்றம் சென்று தீர்ப்பு பெறலாம். அங்கும் ஞாயம் கிடைக்க வில்லை என்றால் தான் உச்ச நயன் மன்றத்தை அணுகி இருக்க வேண்டும். ஆனால், இவர் நேராக உச்ச நயன் மன்றம் சென்றது சரியில்லை. தொல்லியல் துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒன்றிய அரசாட்சியில் இருப்பது ‘சனாதன’த்தைப் போற்றும், காக்கத் துடிக்கும் ஆட்சியாளர்கள் தாமே! ஏன் இவர் அதை நாடவில்லை? காரணம், இவர் நோக்கம் விட்டுணு சிலை சீரமைப்பு இல்லை! கவாய் தான்! ஒடுக்கப்பட்டோரிலிருந்து இரண்டாம் முறை ஒருவர் உயர் பதவிக்கு வந்ததைப் பொறுக்க முடியவில்லை என்ற விளக்கமும் தரப்படுகின்றது.

    “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப் படுத்தக்கூடிய இடத்தில், ஒருசாராரின் மத நம்பிக்கைகள், மத வழக்கங்கள், மூட நம்பிக்கைகள் அடிப்படையில் மட்டுமே இனி உச்ச நயன் மன்ற வளாகங்கள் செயல்பட வேண்டுமென்றும், அவற்றின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்றும், அவற்றிற்கு மாறாக இந்தியக் குற்றத் தண்டனை நெறித் தொகுப்புச் சட்டத்தின்படி ஞாயமான தீர்ப்புகளோ கருத்துகளோ எடுத்துரைப்புகளோ கூறுகின்றவர் உச்ச நயன் மன்றத் தலைமை நயனராக இருந்தாலும் சரியே, நாங்கள் அவர்மீது காலணி வீசிடத் தயங்க மாட்டோம்!” - என்பதற்கு அடையாளமாகவே இந்தச் செயலைத் திட்டமிட்டு அரங்கேற்றி இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது.

    பழ.நெடுமாறன் ஐயா, “தலைமை நயனர் அவர்கள் மிக்க பெருந்தன்மையுடன் கிசோரை மன்னித்திருந்தாலும், அவர் மீது வழக்குத் தொடுத்து உரிய தண்டனை பெற்றுத் தராமல் விடுவித்திருப்பது எதிர்காலத்தில் இதைப்போன்ற அடாத செயல்களில் பலர் ஈடுபடுவதற்கு ஊக்கமளிக்கும். உச்ச நயன்மன்றத்தின் வரலாற்றில் தலைமை நயனர் மீது செருப்பு எறிந்து அவரை அவமானப்படுத்த நடைபெற்ற முயற்சி இதுவரை நடந்திராத ஒன்றாகும். இந்த அடாத செயல், நமது நயன்துறையின் கண்ணியம், சட்டத்தின் ஆட்சி மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும். மிக எளிய பின்னணியைக் கொண்ட ஒருவர் தனது அறிவினாலும், கடும் உழைப்பினாலும் நமது தேசத்தின் நயன்துறையின் மிக உயர்ந்த தலைமைப் பதவியை அடைந்துள்ளார். இத்தகைய சட்ட மாமேதை ஒருவரை மிரட்டி அவமானப்படுத்தும் முயற்சி மிகவும் கண்டிக்கத் தக்கதாகும். இவ்வாறு செய்த மிக இழிவான ஒருவனைத் தண்டிக்காமல் விடுவது எதிர்காலத்தில் இதுபோன்ற பல்வேறு வேண்டாத நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஊக்கமளிப்பதாகும்”.… “இதைப்போன்று நயன்துறைக்கு எதிரான தகாத செயல்கள் நடைபெறுவது தடுக்கப்படவேண்டும். முளையிலேயே இத்தகைய நிகழ்ச்சிகள் கிள்ளியெறியப்படவேண்டும். உச்ச நயன்மன்றத் தலைமை நயனரை நயன்மன்றத்திலேயே அவமானப்படுத்தத் துணிந்த ஒருவன் அதுவும் மூத்த வழக்கறிஞராக உள்ளவன் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்” என்று கூறுகின்றார்.

    மேலும், “தொடர்ந்து பல காலமாக நயன்துறைக்கு எதிரான வெறுப்பு நஞ்சினை உயர்பதவியில் இருப்பவர்கள் தொடர்ந்து உமிழ்ந்து கொண்டே வருகிறார்கள். குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியிலிருந்த தன்கர், ஆளுநர்களின் முற்றதிகாரப் போக்கிற்கு எதிராக உச்ச நயன்மன்றம் தீர்ப்பளித்தபோது, அதை மிகக் கடுமையாகத் திறனாய்வு செய்தார். பா.ச.க., ஒன்றிய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே கண்டித்தார்கள். தலைமை அமைச்சரின் பொருளியல் கலந்துரைஞர்களில் ஒருவரான சஞ்சீவ் சன்யால் என்பவர், “முன்னேறிய பாரதமாக நமது நாடு மாறுவதற்குப் பெரும் முட்டுக்கட்டையாக விளங்குவது நமது நாட்டின் நயன் மன்றங்களேயாகும். நயன்மை அமைப்பும் சட்டங்களும் நமது முன்னேற்றத்திற்குப் பெரும் தடைகளாக விளங்குகின்றன. நயனர்கள் குறைந்த நேரமே வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு விடுமுறைகளும் அதிகம். இந்தியாவின் நயன்மை அமைப்பு முறை சீர்கேடான நிலையில் உள்ளது. இந்திய மக்களாட்சியின் (சனநாயகத்தின்) வளர்ச்சிக்குப் பெரும் தடையாக உள்ளது என்றெல்லாம் நயன்துறையைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்” - என்றும் நெடுமாறன் ஐயா எடுத்துக்காட்டுகிறார்.

    உ.ந.மன்ற வழக்கறிஞர் மன்றம் வழக்குரைஞர் இராக்கேசு கிசோர் தொழில்முறை நடத்தை நெறிகளை மீறியதாகக் கூறிக் கண்டித்து, அவர் மீது நயன்மன்ற அவமதிப்புக் குற்ற வழக்குப் பதிவு செய்தது. இதற்கு இந்திய ஒன்றிய அரசுத் தலைமை வழக்கறிஞர் துசார்மேத்தாவும் ஒப்புதல் அளித்து வழக்கிற்குத் துணைநின்றார். இந்த வழக்கு 27-10-2025 - அன்று நயனர்கள் சூரியகாந்து, சாய்மாலியா பாக்குசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு உசாவலுக்கு வந்தது. எனினும், இந்த நிகழ்வு மீண்டும் கவனத்திற்கு வருவதைத் தவிர்ப்பதற்காக, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வதில் அமர்வு தயக்கம் காட்டியது. வழக்குத் தொடர்வது தேவையற்ற விளம்பரத்தைத்தான் பெற்றுத்தரும் என்று நயன்மன்றம் குறிப்பிட்டது. தலைமை நயனர் பூ.இரா.கவாய் இந்நிகழ்வு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ள நிலையில், இதை அப்படியே விட்டுவிடுவது அறிவார்ந்ததாகும் என்று அமர்வு கூறியது.

    ஆனால், இந்த நிகழ்ச்சி நிறுவனத்தின் பெருமிதத்துடன் தொடர்பு உடையது என்று மூத்த வழக்கறிஞர் விகாசு சிங் வலியுறுத்தினார். தாக்குதல் நடத்தியவர் தனது செயலை ஞாயப்படுத்தி ஊடக அறிக்கைகள் வெளியிட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். தலைமை நயனர் மீதான தாக்குதலை குமுக வலைத்தளங்களில் சிலர் பெருமைப்படுத்துவது பற்றியும் அவர் கவலை தெரிவித்தார். நயன்மன்றத்தின் மீதான தாக்குதல்களை இணையத்தில் ”போற்றிப் புகழ்வதை”த் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கப் போவதாக உச்ச நயன் மன்றம் அறிவித்தது.

    இராக்கேசு கிசோர் காலணி வீசிய செய்தி, உயர்சாதியின் சாதிவெறித் தாக்குதல் என்று குமுக ஊடகங்களில் பரவியது. இவ்வாறு ஆங்கில இதழ்களிலும் செய்தி வந்தது. தலைமை நயனர் ஒடுக்கப்பட்ட பிரிவினர் என்பதால், இராக்கேசு கிசோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை முன்பே குறிப்பிட்டோம். இத்தகைய நிலையில் கிசோர், முதலில் ”என் பெயர் முனைவர் இராக்கேசு கிசோர். என் சாதியை யாராவது சொல்ல முடியுமா? ஒருவேளை நானும் தலித்தாக இருக்கலாம்” என்று கூறியதாக இந்தியன் எக்சுபிரசு, தெக்கான் எரால்டு, இந்துத்தான் தைம்சு முதலிய செய்தி நிறுவனங்கள் கூறின. மறுநாள் அவரே, ”நான் பாண்டே, திவாரி, குப்தா இல்லை, நான் ‘தலித்’ என் சாதிச் சான்றிதழைக் காட்ட அணியமாக (தயாராக) இருக்கிறேன்.” என்று கூறியதாகச் செய்திகள் வந்தன. ஆனால், அவர் ”அணியம்” என்று சொன்னாலும், பின்னர் எந்தச் சாதிச் சான்றிதழும் காட்டவில்லை. இது ஐயத்தை ஏற்படுத்துகிறது.

    “கேட்டினும் உண்டோர் உறுதி” என்பார் வள்ளுவப் பெருந்தகை. உ.ந.மன்றத்தில் நிகழ்ந்த இந்தக் காலணி வீச்சு நிகழ்வு, ஒன்றை நமக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றது. ‘சனாதனக் காப்பு’ எந்த எல்லைக்கும் போகும் என்பதை இந்திய மக்களுக்கும் குறிப்பாகச் ‘சனாதன’ எதிர்ப்புக் குரலெழுப்பும் தமிழருக்கும் உணர்த்தியிருப்பதே அதுவாகும். தமிழர், குறிப்பாகத் தமிழ் இளையோர் விழிப்புற வேண்டும்!

                கூறுகின்ற சமயமெலாம் மதங்களெலாம் பிடித்துக்

                கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டறியார் வீணே

                நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்

                நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ!...        

                                                                                - வள்ளலார்

                மக்களைத் தாழ்த்தும் மதம் உயர்ந்ததுவா?

                மதத்தைத் தவிர்க்கும் மக்கள் உயர்ந் தவரா?

                மக்களுள் பலரைத் தாழ்ந்தவர் என்னும்

                மாமதங் கொண்ட மதமும் பெரிதா?

                மதத்தைத் தவிர்த்தால் கொதித்திடும் நெஞ்சம்

                மலத்தைத் தலையில் சுமந்திட வருமா?    

                                                                - பாவலரேறு  பெருஞ்சித்திரனார்.

                                                                                                                -  த.ந.

(புதுவை 'நற்றமிழ்' - நவம்பர் 2025 இதழில் வந்தது)

புதன், 19 நவம்பர், 2025

தணிப்பரிதாம் துன்பமிது! தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தானில்லை!

 

தணிப்பரிதாம் துன்பமிது!

தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தானில்லை!

                

            பாவேந்தர் ஒருமுறை மதுரை சென்றிருந்தபோது கடைத்தெருக்களிலும் பிறஇடங்களிலும் பெயர்ப்பலகைகளில், வாணிக விளம்பரங்களில், தமிழ் இல்லா நிலையறிந்து மனம் வருந்தி, தமிழ் இளையோர்க்கு எழுச்சியூட்டும் வண்ணம், ஒரே இரவில் ‘தமிழியக்கம்’ என்கின்ற நூலை எழுதினார். அத் ‘தமிழியக்கம்’ நூலின் ஒரு பாடலின் ஓர்அடிதான் இத் தலைப்பாகும்.

            இந்நூலின் முதற்பதிப்பு 1945-இல் வந்தது. பாவேந்தர் ‘நல்வினை’ என்ற தலைப்பில் எழுதிய சிறு முன்னுரையில், “இதை நான் எழுதிய நோக்கம் என்னவெனில், தமிழார்வம் மிக்க இளைஞர்கள், இத்தகைய துறைகளில், தமிழ் முன்னேற்றம் கருதி இயன்றவாறு கிளர்ச்சி செய்ய வேண்டும் என்பதுதான். ஒரு கூட்டம் கோயிலில் பிறமொழிக் கூச்சலைத் தடுக்க ஏன் முயலலாகாது? ஒரு குழுவினர் தெருத்தோறும் சென்று பிறமொழி விளம்பரப்பலகையை மாற்றி அமைக்கச் சொல்லி ஏன் வற்புறுத்தலாகாது? மற்றும் பலவகையினும் கிளர்ச்சி செய்யின், தமிழ் விடுபடும், தமிழ்நாடு விடுபடும். எவ்வினையினும் இஃதன்றோ இந்நாள் இன்றியமையாத வினை?” என்று குறிப்பிட்டுள்ளார். அந் நூலின் விளைவாக, அப்போது, ஓரளவு எழுச்சி ஏற்பட்டது.

            தமிழ்நாட்டரசு இதன் தொடர்பாக, 1948-இல் இருந்து 75 ஆண்டுகட்கும் மேலான காலத்தில் கீழ்க்காணும் வகையெல்லாம் சட்டம் / அரசாணைகள் இயற்றி இருக்கின்றது:

            1947-இல் இயற்றிய தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டத்தில், 1948-இல் உருவாக்கப்பட்ட நெறி-15 (Rule 15)-இன்படி நிறுவனங்கள் தங்கள் பெயர்களைப் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற பொதுவான அறிவுறுத்தல் இருந்தது. ஆனால், அந்தப் பெயர்ப்பலகைகள் தமிழில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் அப்போது இடம்பெறவில்லை.

            தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 என்பதன் கீழ் 1959-இல் நடைமுறை நெறிகள் வெளியிடப்பட்டன., 1959 நெறி 42ஆ –வின்படி, உணவுவிடுதிகள், தேநீர்க்கடைகள் போன்ற அனைத்து உணவு நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளும் தமிழ்மொழியைப் பயன்படுத்துவது கட்டாயம் ஆக்கப்பட்டது. தமிழ் எழுத்துகள் மற்ற மொழிகளின் எழுத்துகளைவிடப் பெரியதாகவும், முதன்மையாகத் தெரியும்படியும் இருக்கவேண்டும். மற்ற மொழிகள் பயன்படுத்தப்பட்டால், ஆங்கிலம் இரண்டாவது இடத்திலும், அதைத் தொடர்ந்து மற்ற மொழிகளும் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

            1977-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை அரசாணை எண்: 575, நாள்: 08.08.1977 - என்பது தமிழ்நாட்டில் உள்ள வாணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ்மொழியைக் கட்டாயமாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணையாகும். இந்த அரசாணையே, பெயர்ப்பலகை தொடர்பான தமிழ் வளர்ச்சி முயற்சிகளின் முதல் சட்டஅடிப்படை நடவடிக்கை ஆகும். இது, பெயர்ப்பலகைகளில் தமிழ்ப்பெயர் முதலில் (மேலே) இருக்கவேண்டும், அதன் கீழ் ஆங்கிலப் பெயர், பின்னர் மற்ற மொழிகள் இருக்கலாம். எழுத்துரு அளவுகள் 5 : 3 : 2 என்ற தகவீட்டில் (விகிதத்தில்) தமிழ், ஆங்கிலம், மற்ற மொழி இருக்கவேண்டும் என்று கூறியது.

            1982-இல் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அரசாணை 1541 நாள் 29-7-1982 - தமிழ்மொழிக்கு முதன்மைநிலை அளிக்கவும், தமிழில் சரியான எழுத்துருவை ஊக்குவிக்கவும், வாணிக / நிறுவனப் பெயர்ப்பலகைகளில் மொழிச் சமநிலையை நிறுவவும் கூறியது

            1983-இல் அரசாணை எண் 3312 தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை, நாள்: 29.12.1983, நெறி 24-அ திருத்தத்தின் வழி கடைகள், வாணிகநிறுவனங்கள், உணவுவிடுதிகளின் பெயர்ப்பலகைகளில் தமிழ்எழுத்துகளின் அளவை மற்ற மொழிகளின் எழுத்துகளைவிடப் பெரிதாக வைக்கவேண்டும் என்பதைச் சட்ட அடிப்படையில் மாற்றியமைத்தது. பிற மொழியில் எழுத வேண்டுமானால், அந்த மொழி தமிழுக்குப் பிறகு இரண்டாம் இடத்தில் வரவேண்டும். தமிழ் எழுத்துகள் முதன்மையாகவும் தெளிவாகவும் “திருத்தப்பட்ட எழுத்து” வடிவில் (Reformed Script) இருக்கவேண்டும் என்று கூறியது.

            1984-ல் புதிய திருத்தங்களும் அதனை நிலைநாட்டும் கூடுதல் அரசு ஆணையும் வெளியிடப்பட்டன. இதில் தமிழில் 50%, ஆங்கிலத்தில் 30%, பிற மொழியில் 20% என்ற எழுத்துரு அளவீடு குறிப்பிடப்பட்டது.

            அரசாணை. எண் 349, தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத் துறை, நாள்: 14.10.1987 - அரசுஅலுவலகப் பெயர்ப்பலகைகளில் தமிழ்எழுத்துகளின் அளவு பிறமொழி எழுத்துகளைவிட எவ்வளவு பெரிதாக இருக்கவேண்டும் என்பதைக் குறித்த வழிகாட்டுதலை வழங்கியது.

            தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுத் துறை அரசாணை. 291, நாள்: 19.12.1990 -இன் படி சரியான தமிழ்ச்சொல்லே பெயர்ப்பலகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று சொல்கிறது. (எ.கா: Book Depot என்பதை நூலகம் / புத்தக நிலையம் என மாற்றுவது; Bakery என்பதை அடுமனை என மாற்றுவது).

            தமிழ்நாட்டை ஆண்ட / ஆளுகின்ற இரண்டு திராவிடக்கட்சியினரின் ஆட்சிகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள், கடைகள், வாணிகநிறுவனங்களின் பெயர்கள் தமிழ்மொழியில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றுகூடக் கட்டாயப்படுத்தவில்லை; தமிழ்எழுத்துகள் பெரிதாகவும், பிறமொழி எழுத்துகள் சிறிய அளவிலும் இருக்கவேண்டும் என்றுதான் அவை குறிப்பிடுகின்றன.

            இவற்றை வாணிகர்கள் பின்பற்றுவதில்லை என்பது ஒருபுறமிருக்க, இந்த அரசாணைகளைச் செயற்படுத்த வேண்டும் என்ற அழுத்தமான கருத்து எந்தக் கட்சி ஆட்சியாளர்க்கும் இல்லை என்பதே நடைமுறை உண்மையாகும். சட்டம் போட்டதோடு, அரசாணை வெளியிட்டதோடு அவர்தம் கடமை முடிந்துவிட்டதாகவே கருதிக்கொண்டு நிறைவடைந்து விடுகிறார்கள். நிலைமை முன்னைப் போலவே என்றும்போல் மாறாமல் நீடிக்கிறது. மேடைகளில் சட்டம் போட்டு விட்டதாகவும் அரசாணை வெளியிட்டு விட்டதாகவும் முழக்குகிறார்கள். ஆனால், அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று கவனித்து, கடுமையான நடவடிக்கை எடுப்பதே இல்லை.

            கோரிக்கைகளின் மூலமாக மட்டும் கடைகள், நிறுவனங்கள், பெயர்ப்பலகைகளில், வாணிக விளம்பரங்களில் தமிழை இடம்பெறச் செய்யமுடியாது என்று உறுதியாகத் தெரிவதால், அவ்வப்போது, தமிழ்ப்பற்று மிக்க சிறுசிறு அமைப்புகளும், சிறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபடுகின்றன. ஆனாலும் அவர்களும் அவ்வப்போது ஆட்சியாளரின் உறுதிமொழிகளை ஏற்று அமைதியாகிவிடுகின்றனர். இந்த நிலைமையே 75 ஆண்டுகளுக்கும் மேலாகத்தொடர்ந்து வருகின்றது.

            நகர்ப்புறங்களில் மட்டுமன்று; சிற்றூர்ப்புறங்களிலும்கூட பெயர்ப்பலகையை ஆங்கிலத்தில் எழுதுவது போலிநாகரிகமாகி விட்டது. மேலும், தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் செய்யப்படும் பெரும்பாலான விளம்பரங்களும் ஆங்கிலமொழியில்தான் அமைந்துள்ளன.

            இத்தகைய நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.            பஞ்சாப்பு, கருநாடகம் போன்ற மாநிலங்களின் பெயர்ப்பலகைகளில் அவர்தம் தாய்மொழி முதலில் நிற்கிறது. இந்தி பேசும் மாநிலங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எண்கள்கூட இந்தியில் எழுதப்படுகின்றன. கருநாடகத்திலும் எண்களையும் கன்னடத்தில் எழுதிடும் அளவுக்கு அங்கே முனைப்புக் காட்டப்படுகிறது. ஆனால், தமிழகத்திலோ நமது குறைந்த அளவு கோரிக்கையான “தமிழில் பெயர்ப் பலகைகள்” என்பதே இன்றைய நாள்வரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.

            இதற்காக நடத்தப்படும் போராட்டங்கள் தமிழ்நாட்டு அரசிற்கு எதிராகவோ, வாணிகர்களுக்கு எதிராகவோ, சட்டம் – ஒழுங்கு நிலையை மீறுவதற்காகவோ நடத்தப்படுவதில்லை; தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் நடத்தப்படுகின்றன. போராட்டங்கள் நடத்தப்பட்டவுடன் மிகச்சில கடைகளில், வாணிகநிறுவனங்களில் பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாறும்; பெரிய அளவில் மாற்றம் நடைபெறுவதில்லை. எனவே, ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிப் பெயர்ப்பலகைகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாய நிலை உள்ளது.

            கடைகள், வாணிகநிறுவனங்களில் வைக்கப்படும் பெயர்ப் பலகைகள் அந்த நிறுவனங்களுக்கான முகவரி மட்டுமில்லை. அந்த நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்திற்கே அவைதான் முகவரி ஆகும். ஒரு நகரத்தின் சாலைகளில் வெளிநாட்டவரோ, வெளிமாநிலத்தவரோ செல்லும்போது, அங்குள்ள கடைகள் மற்றும் வாணிகநிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் எந்த மொழியில் உள்ளனவோ, அவற்றைக் கருத்தில் கொண்டே, அந்த மொழி பேசும் பகுதிக்குள் செல்லுகின்றோம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

            மொழி என்பது ஒரு நாட்டினுடைய, இனத்தினுடைய அடையாளம் ஆகும். நம்மொழியில் எழுத நாமே பல்லாண்டுக் காலமாக வலியுறுத்திப் போராடி வருவது மிகவும் இரங்கத்தக்க நிலையாகும். பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்றி, எளிய மக்களும் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அனைத்து ஊர்களிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை பதவியில் உள்ள அனைவரும் பேசுகிறார்கள். இந்தக் கோரிக்கை இன்றோ, நேற்றோ எழுந்ததில்லை. இந்தியா விடுதலை அடைந்த காலத்திலிருந்தே இக்கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அதன் பயனாகத்தான் மேலே குறிப்பிட்ட சட்டங்களும் அரசாணைகளும் இயற்றப்பட்டன.

            2023 – ஆம் ஆண்டு தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அறிவிப்பில் தமிழில் பெயர்ப்பலகை இல்லாத கடைகளுக்குத் தண்டத்தொகை உருவா 50-திலிருந்து உருவா 2000-மாக உயர்த்தப்பட்டது. தமிழில் பெயர்ப்பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நயன்மன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நயன்மன்ற மதுரைக்கிளையில் கடந்த ஆண்டு தொடரப்பட்ட வழக்கின் போதும் வாணிகநிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் உருவா 2000 தண்டம் செலுத்த வேண்டும் என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

            2024-இல், தமிழ்நாடு உயர்நயன்மன்றம் இந்த நெறியை நடைமுறைப்படுத்துவதற்குத் துணைதரவாக உத்தரவுகளை வழங்கியது. தமிழ்ப் பெயர்ப்பலகைகளைப் பயன்படுத்துவது மொழி உரிமையின் ஒரு பகுதி என்று நயன்மன்றம் கருத்துரைத்தது. தமிழகத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், வாணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், இணையவழி வாணிகர், சாலையோரக் கடைகள், உணவகங்கள், மக்களுக்கு உணவு வழங்கும் தொழில் செய்யும் ‘சுவிக்கி’, ‘சொமாட்டோ’ உள்ளிட்ட பலரும் தமிழை முதன்மைமொழியாகப் பயன்படுத்துவது இல்லை. இந்தியநாடு முழுவதிலும் பல கிளைகள் கொண்ட ‘இலென்சு கார்ட்டு’, ‘தோனியும் கையும்’ ‘இரிலையன்சு டிரண்ட்சு’ உள்ளிட்ட கடைகளிலும் தமிழைச் சிறிய அளவாகவும், ஒலிபெயர்ப்பு செய்தும் மட்டுமே எழுதுகின்றனர்.

‘ஒயின் சாப்பு’, ‘தாசுமாக்கு’ என்று ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதிப் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் இருந்து வந்து தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள நிறுவனத்தில்கூட ஆங்கிலத்திலும், சீனத்திலும் மட்டுமே நிறுவனத்தின் பெயர்கள் காணப்படுகின்றன.

            தமிழ்நாட்டு முதலமைச்சர், 2023ஆம் ஆண்டிலும், அண்மையில் வாணிகர் நல வாரியக் கூட்டத்தில் பேசும்போதும் தமிழ்மொழியின் பயன்பாட்டை மேம்படுத்த, அனைத்துக் கடைகள், தனியார் நிறுவனங்கள், வாணிக நிறுவனங்கள், பெயர்ப் பலகைகளில் தமிழை முதன்மையாகவும், பெரிய எழுத்துகளிலும் எழுதவேண்டும் என்று வலியுறுத்தினார். சென்னை, மதுரை, தருமபுரி, திருவள்ளூர், திருப்பூர், விருதுநகர், விழுப்புரம் முதலிய பல மாவட்டங்களின் ஆட்சியாளர்களும் இதை வலியுறுத்திப் பேசினர்.

            ஆனால், ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களே ‘திராவிட ‘மாடல்’, ‘சுகூல் பவுண்டேசன், ‘ஏப்பி சிரீட்டு’, ‘சன் சயின்’, ‘சன் தி.வி’, ‘சன் நெட்டு ஒர்க்கு’, ‘இரெட்டு சயன்டு’, ‘சி இசுகொயர்’, ‘கிளவுடு நயின்’, ‘சன்ரைசர்சு’ எனப் பெயரிட்டு வழங்குவதாலும், ‘வந்தே பாரத்து’, ‘கேலோ இந்தியா’ என்ற நிகழ்வுகளில் தமிழ்நாட்டு அமைச்சன்மார் ஒன்றிய அமைச்சருடன் தடையின்றிக் கலந்துகொண்டு மகிழ்வதாலும், இவற்றைப் பார்க்கும் வாணிகர்க்கும் பிறர்க்கும் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது குறித்த ஆணை ஒரு பொருட்படுத்தப்பட வேண்டிய முகன்மையான ஆணையாகக் கருத மனம் வருவதில்லை என்றால் சற்றும் மிகையுரை இல்லை.

            இப் போக்கைத் தடுக்கத் தமிழில் பெயர்ப்பலகை வைத்தால் தான் நிறுவனம், கடைகள் நடத்துவதற்கு உரிமம் வழங்கப்படும் என்பது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் தமிழில் பெயர்ப்பலகையைக் காணமுடியும். தூயதமிழில் பெயர்ப்பலகை இருக்கவேண்டும் என்பதைத் திராவிட ‘மாதிரி’ அரசு கட்டாயச்சட்டமாக்கி நிறைவேற்ற வேண்டுமெனத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

            புதுச்சேரியில், கடைகள், நிறுவனங்கள் சட்டப்பிரிவு, 1964. நெறி 24-அ, பெயர்ப் பலகைகள் பார்வைக்கு வைத்தல் - என்பது புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒவ்வொரு நிறுவனத்தின் பெயர்ப்பலகையும் தமிழில் இருக்கவேண்டும். பிறமொழிகளையும் பயன்படுத்தும் இடங்களில் அம்மொழிகளின் வடிவம் தமிழுக்குக் கீழே இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இதற்குப் பின் மூன்று நான்கு முறை இதன் தொடர்பாகப் புதுச்சேரி அரசின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுடன், கடந்த 18-03-2025 அன்று புதுச்சேரி முதல்வர் சட்டமன்றத்தில் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டியது குறித்துக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். ஆனால், குறிப்பிடும்படியான மாற்றம் நிகழவில்லை.

            பல்வேறு காலங்களில், புதுச்சேரித் தமிழ்அமைப்புகளான தமிழ்க் காவற்குழு, தனித்தமிழ்க் கழகம், தமிழினத் தொண்டியக்கம் முதலியவை தமிழில் பெயர்ப்பலகை வைக்கவேண்டுமென வலியுறுத்திப் பல போராட்டங்களை மேற்கொண்டபோதிலும், அவ்வப்போது சிலர் மட்டும் தமிழில் எழுதுவதும் பிறகு கொஞ்ச காலத்தில் மாற்றிப் பிறமொழிகளில் பெயர்ப்பலகை வைப்பதும் வழக்கமாகி விட்டது.

            அண்மையில், புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கத்தின் போராட்டத்தின் போது பிறமொழியில் எழுதப்பட்டிருந்த ஓரிரு கடைகளின் பெயர்ப் பலகைகள் நொறுக்கப்பட்டன. (பின்னர், அவை தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டன.) இந்த வகைச் செயற்பாட்டை யாரும் விரும்புவதில்லை என்பதே உண்மை. எனவே, அந்த நிலைக்குத் தமிழர்களைத் தள்ளாமல் தமிழ்நாட்டரசும், புதுச்சேரி அரசும் தமிழ்மண்ணில் தமிழர்களுக்குப் புரியும்வண்ணம் தமிழில் பெயர்ப்பலகைகளையும் விளம்பரப்பலகைகளையும் அமைக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென நற்றமிழ் வலியுறுத்துகின்றது.

மொழியென்றால் உயிரின் நரம்பு – நம்

முத்தமிழ் மொழியோ தமிழர் வரம்பு!


உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்கு

நேர்ந்ததென உரைக்கக் கேட்டால்

நரம்பெல்லாம் இரும்பாகி, நனவெல்லாம்

உணர்வாகி நண்ணி டாரோ!
- பாவேந்தர்

                                                                                                                                    - த.ந.

 

கூட்டாட்சியும் தமிழ்நாட்டு உரிமைகள் பறிப்பும்!



கூட்டாட்சியும் தமிழ்நாட்டு உரிமைகள் பறிப்பும்!

            தமிழ்நாட்டைக் கழக(சங்க) காலத்தில் சேர சோழ பாண்டிய அரசர்களும் குறுநில மன்னர்களும் ஆண்டனர். அதன்பின் களப்பிரர், பல்லவர், பிற்காலச்சோழர்கள், மறுமலர்ச்சிப் பாண்டியர்கள், விசய நகரத்தார், நாயக்கர், தில்லி முகமதியர், மராத்தியர், மைசூரர் (ஐதர்அலி, திப்புசுல்தான்), பின் ஆங்கிலேயர் ஆண்டனர். இவர்களுள் ஆங்கிலேயர் தவிர்த்து அயலர் எவரும் தமிழ்நாடு முழுவதையும் ஆண்டதில்லை. சிற்சில பகுதிகளிலேயே தம் ஆட்சியைச் செலுத்தினர்.

           ஆங்கிலேயரே தமிழ்நாடு முழுமையையும் தம் ஆட்சிப் பொறுப்பில் வைத்திருந்தனர். தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய நாட்டையும் உருவாக்கினர். இந்தியநாடு 1947-இல் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதென்றாலும் தென்னாட்டார் சிலர்க்கு அமைச்சுப்பதவி அளித்தனர் என்றாலும் வடவரின் வல்லாண்மையுடனே இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி நடந்துவருகின்றது.

            இந்தியநாடு பல்வேறு மொழி, இனம், பண்பாடு, சமயம், உணவுப் பழக்கம், உடை முதலியவற்றுடன் பன்முகத்தன்மை கொண்டதாகவும், கூட்டாட்சி நெறிமுறைகளைக் கொண்டதாகவும், மாநிலங்களின் ஒன்றியமாகவும் உருவாக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் இப்போது, மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டதோடு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே ஒன்றியஅரசிடம் போராடிப் பெறவேண்டிய நிலையே உள்ளது.

            மாநில உரிமைகள் (அதிகாரங்கள்), ஒன்றியஅரசின் உரிமைகள், பொதுப்பட்டியல் உரிமைகள் என இந்தியாவில், முப்பிரிவுகளாக அரசியல்சட்டப்படி உரிமைகள் பிரிக்கப்பட்டிருந்தும் இந்திய ஒன்றிய அரசு, பொதுப்பட்டியலில் உள்ள அதிகார உரிமைளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றிக்கொண்டு வருகின்றதோடு மாநில உரிமைகளையும் தந்திரமாகப் பறித்துவருகின்றது.

            இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா கூட்டாட்சி நாடாகும். பல நாடுகளின் (மாநிலங்களின்) ஒன்றியம் (Union of States) தான் இந்தியா. ஆனால், அதற்கு மாறாக இந்தியாவை ஒற்றை நாடாக தில்லி ஒன்றிய ஆட்சியாளர் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

            மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றனவென்றால் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றனவென்றே பொருள். கூட்டாட்சிக் கொள்கை மக்களாட்சியோடு ஒன்றிணைந்ததாகும். மக்களுடைய உரிமைகளும் மாநிலங்களின் உரிமைகளும் சேர்ந்ததே உண்மையான மக்களாட்சியாகும். உலகின் மக்கள்தொகையில் 40 விழுக்காட்டிற்கு மேல் உள்ள மக்கள் வாழும் வெவ்வேறு நாடுகளில், கூட்டாட்சி முறைதான் பின்பற்றப்படுகின்றது.

            உலகின் பலநாடுகளிலும் அரசியல், குமுக, பொருளியல், இன, மொழி, பண்பாட்டு வேறுபாடுகளையும், நிதித் தொடர்பான அமைப்புகளையும் அடிப்படையாகக் கொண்டே கூட்டாட்சி முறையின் சிறப்பு அமைகிறது.

            செவ்வைக் கூட்டாட்சியியலைப் (classic federalism) பின்பற்றுகின்ற அமெரிக்கா, ஆத்திரேலியா, சுவிட்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் மாநிலங்களின் உரிமைகள்தான் அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமாக அமைகின்றன. சில முதன்மையான காரணங்களுக்காக அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கூறிய கூட்டாட்சி நாடுகளில் மேற்கொள்ளநேரிட்டாலும், ஒருமுறை கூட மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கின்ற அரசமைப்புச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதே இல்லை.

            இந்தியாவில் மாநில உரிமைகள் தொடர்ந்து 78 ஆண்டுகளாகச் சிதைக்கப்படுகின்றன. இத்தகைய தன்மைகள் பொருந்திய இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் முழுவதுமாக ஒற்றையாட்சிச் சட்டமாக மாறி வருகிறது. இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் நினைத்தால் மாநிலங்களை நினைத்த நேரத்தில் கலைத்துவிட முடியும்; கவிழ்த்துவிட முடியும் என்னும் நிலையே உள்ளது.

            ஒன்றிய அரசு முழு முற்றதிகார (சர்வாதிகார) அரசாக மாறியதற்குப் பேராயக்கட்சியும், பா.ச.க.வும் செய்த, செய்து வருகின்ற மக்களாட்சிக்கு எதிரான, கூட்டாட்சிஇயலுக்கு எதிரான தொடர் சட்டத்திருத்தங்களும், பின்பற்றுகின்ற மேலாண்மை நடவடிக்கைகளும் காரணங்களாக உள்ளன. இந்தியா ஒரு நாடன்று; இது ஒரு துணைக்கண்டம். மேற்குறிப்பிட்ட செவ்வைக் கூட்டாட்சி நாடுகளில் காணமுடியாத வேற்றுமைக்கூறுகள் இத் துணைக் கண்டத்தில்தான் பெருமளவில் உள்ளன என்பது வெள்ளிடைமலையாகும்.

            பல்வேறு மத, மொழி, இனமக்கள் மாநிலங்களில் இருப்பதனாலும், பல மாநிலக் கட்சிகள் மாநிலங்களில் ஆட்சியமைப்பதனாலும் ஒன்றியஅரசில் தேசியக்கட்சிகள் தனித்து ஆட்சியமைக்கும் முழுப்பெரும்பான்மையினை இழந்து வருகின்ற நிலையிருப்பினும் நடைமுறையில் இந்திய அரசமைப்புச் சட்டம் ஒற்றையாட்சிச் சட்டமாகவே மாற்றப்பட்டு விட்டது.

            தேசவிடுதலைப் போராட்டங்களில் மக்கள் பங்கேற்பும், மொழிவழி மாநிலங்களுக்காகவும், மொழி, இனம், பண்பாடு பாதுகாக்கப் படுவதற்காகவும் பல்வேறு தேசியஇனங்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டங்களும், கூட்டாட்சிக் கோட்பாடு அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றதற்கு முகன்மையான காரணங்கள் ஆகும்.

            2014க்குப் பிறகு ஒன்றியத்தில் பா.ச.க. அரசு அமைந்தவுடன் திட்டமிட்டு மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. முற்றதிகார (சர்வாதிகார) அரசியலை முன்னிலைப்படுத்துகிற இந்து தேசம் (ராஷ்டிரம்) என்ற தேசியத் தற்பணியர் அமைப்பின் (RSS). செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பா.ச.க. ஆட்சி முயன்று வருகின்றது. இதன் அடிப்படையில்தான் அரசமைப்புச் சட்டம் வழங்கிய தன்னாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் வெட்டப்படுகின்றன.

            அரசியல் அமைப்புச் சட்டப்படி தனியதிகாரத்துடன் செயற்படவேண்டிய இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முழு அளவிற்குப் பா.ச.கட்சியின் செயல்பாடுகளாகவே நடக்கின்றன. தேர்தல் ஆணையரைத் தலைமை அமைச்சர், எதிர்க்கட்சிகளின் தலைவர், உச்சநயன்மன்ற நயனகர் ஆகிய மூவர் குழு தேர்ந்தெடுத்துக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று, 2023-இல் உச்சநயன்மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்திய ஒன்றிய அரசார், தலைமைஅமைச்சர், எதிர்க்கட்சிகளின் தலைவர், அமைச்சரவையிலுள்ள அமைச்சரொருவர் ஆகிய மூவர் அடங்கிய குழு தேர்ந்தெடுத்துப் பரிந்துரைக்கும் என்று சட்டம் இயற்றிக்கொண்டார்கள்.

            இனி, எவ்வாறெல்லாம் தமிழ்நாட்டு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்று சில நிலைகளில் சிறிது பார்ப்போம்:
1. நிலப்பகுதி உரிமை இழப்பு; மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழர்பகுதிகள் ஆந்திரா, கருநாடகா, கேரளாவுடன் இணைக்கப்பட்டுவிட்டன. அவையாவன:

அ) ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட பகுதிகள்: சித்தூர் மாவட்டத்தின் பகுதிகள், திருப்பதி அதைச்சுற்றியுள்ள சில பகுதிகள், நெல்லூர் மாவட்டத்தின் சில பகுதிகள் முதலியன தமிழ்நாட்டிடமிருந்து பறிக்கப்பட்டன.

ஆ) கருநாடகத்துக்குச் சென்ற பகுதிகள்: கோலார் தங்கவயல் பகுதிகள், ஆனேகல் மாவட்டம் உள்ளிட்ட பெங்களூரு நகரத்தின் சில பகுதிகள், மண்டியாவுக்கும் பெலகாவிக்கும் அருகிலுள்ள பகுதிகள் முதலியன.

இ) கேரளாவுக்குப் போன பகுதிகள்: செங்கோட்டையின் சில பகுதிகள், தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு, இடுக்கி மாவட்டத்தின் சில பகுதிகள் முதலியன.

ஈ) கச்சத்தீவு தமிழர்களின் இசைவின்றியும் நாடாளுமன்றத்தின் இசைவின்றியும் இனவெறிச் சிங்கள அரசிற்குத் தாரைவார்க்கப்பட்டது.

2. ஆற்றுநீர் உரிமைகள் பறிப்பு: காவிரி, முல்லைப்பேரியாறு, தென்பெண்ணை முதலிய ஆற்று நீர் உரிமை நீண்ட காலமாகச் சிக்கலுக்குள்ளாகி உள்ளது. அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரிநீர் ஒழுங்காற்று வாரியம் ஆகியவற்றின் அதிகாரத்தை நீராற்றல் (சல்சக்தி) துறைக்குள் முடக்கி விட்டனர். குறைக்கப்பட்ட அளவிலான நீரைப் பெறவே நடைமுறையில் தமிழ்நாடு அடிக்கடி உச்சநயன் மன்றத்தை நாடவேண்டியிருக்கிறது.

            முல்லைப்பேரியாறு அணை உறுதியாக உள்ளது என்பதை நடுவண் நீர்வளக் குழுவும், உச்சநயன்மன்றம் அமைத்த குழுக்களும் பலமுறை ஆய்வுசெய்து உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், உச்சநயன்மன்றம் அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணை பாதுகாப்பாக உள்ளது என்றும் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், கேரள அரசு அந்தத் தீர்ப்புகளை ஏற்க மறுத்து, தொடர்ந்து அணையைப் பேணுதற்குத் தேவையற்ற தொல்லை தருகிறது; சட்டப் போராட்டங்களை நடத்துகிறது.

            தென்பெண்ணை ஆற்றின் துணைஆறான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கருநாடக அரசு பங்கரப்பேட்டைப் பகுதியில் ஒரு புதிய அணையைத் தமிழ்நாட்டின் இசைவின்றிக் கட்டியுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீரின் அளவைக் குறைத்து, ஐந்து மாவட்டங்களின் பாசனத்தையும், குடிநீர்ப் பயன்பாட்டையும் தடுக்கிறது. உச்சநயன்மன்றம், ஒன்றியஅரசை இதற்குத் தீர்ப்பாயம் அமைக்கக் கூறியும், இதுவரை ஒன்றியஅரசு அமைக்கவில்லை. பெங்களூரின் தூய்மையாக்கப்படாத கழிவுநீர் நேரடியாகத் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால், ஆறு பெருமளவு மாசுபடுகிறது.

            பாலாற்றிலும் சிறுவாணியிலும் தடுப்பணைகள் கட்டித் தமிழ்நாட்டின் நீர் உரிமையைப் பறிக்கின்றனர்.

3. பறிக்கப்படும் மொழி உரிமை: பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும், நாளொரு சொல்லும் பொழுதொரு தொடருமாகத் தொடர்ந்து இந்தியும் சங்கதமும் (சமற்கிருதம்) திணிக்கப்படுகின்றன. தமிழ்ச்சொற்களை வழக்கு வீழ்த்தி அழிக்கும் முயற்சி நடக்கிறது. இந்தி, சங்கதத் திணிப்பு, சங்கத வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவது, அனைத்து இந்தியத் தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம் இரண்டை மட்டும் பயன்படுத்துவது, தொடர்வண்டித் துறை உள்ளகத் தொடர்புக்குத் தமிழைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடுவது போன்ற நடவடிக்கைகள் பா.ச.க. ஆட்சியில் அடிக்கடி நடக்கின்றன.

            இந்தி, இந்தியாவின் ஒரே அதிகார அடிப்படை மொழி என்னும் போக்கு, தமிழைத் தாழ்த்தி தனக்குரிய இடத்தை இழக்கச் செய்கின்றது. ஒன்றிய அரசின் தேர்வுகளிலும், படைத்துறை, தொடர்வண்டித்துறை முதலிய துறைகளிலும் தமிழ் அறவே புறக்கணிக்கப்படுகின்றது.

4. பண்பாட்டு உரிமைகள் பறிப்பு: தமிழர் பண்பாட்டு உரிமைகள் மறுக்கப்படுவதோடு வடநாட்டுப் பண்பாடுகள் வலிந்து திணிக்கப்படுகின்றன. ஏறுதழுவல் (சல்லிக்கட்டு) தடையை நீக்கப் பெரும்போராட்டம் நடத்த வேண்டியிருந்ததையும், வடவரின் ‘கோலி’ப்பண்டிகை தமிழகத்தில் வலிந்து புகுத்தப்படுவதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.

            தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுகள், கோவில்கள், மரபுவழிக் கலைகள் முதலியவை வணிகவயமாக்கப்பட்டு, அவற்றின் உண்மையான மதிப்பு உள்ளூர் மக்களுக்குப் பயன்படாமல், வெளிமாநில, வெளிநாட்டுச் சுற்றுலாச் செலவர்க்கும் ஒன்றிய அரசுக்கும் மட்டுமே உதவுகிறது.

5. நிதி உரிமைகள்பறிப்பு: தமிழகம் நிதித்துறையில் வஞ்சிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து ஒன்றியஅரசுக்குச் செல்லும் வரி வருவாய்க்கு இணையாகத் தமிழ்நாட்டிற்கு நிதிஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை. நாம் பங்களிக்கக்கூடிய ஓர் உருவா வரியில் 29 காசு மட்டுமே நமக்கு நிதிப்பகிர்வாகத் தரப்படுகின்றது. உ.பி., பீகார் போன்ற மாநிலங்களுக்குப் பலமடங்கு ஒதுக்கப்படுகின்றது. ஒன்றியஅரசு, நிதிப்பகிர்வு செய்ய வேண்டாத வரிவிதிப்புகளை அதிகமாக்கி வருவாய் பெருக்கிக் கொள்கிறது.

            இயற்கைச் சீற்றங்களினால் தமிழ்நாடு தாக்கப்பட்டபோதெல்லாம் கூட, தகுந்த ஆய்வின்வழி அளவீடுகள் செய்த பின்னரும், பல முறை வலியுறுத்தியும், உரிய இழப்பீடுகள் வழங்கப்படவேஇல்லை. ஆனால், குசராத்து போன்ற மாநிலங்களுக்கு அளவீடுகளுக்கு முன்னரும் பின்னரும் கூட நிறைய வாரி வழங்கப்படுகின்றது. ‘சரக்குகள், பணிகள் வரி’ (GST) என்ற பெயரில் மாநிலங்களின் வரிதிரட்டும் உரிமைகளையே ஒன்றிய பா.ச.க. அரசு பறித்துவிட்டது.

            ஒன்றிய அரசுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆளுங்கட்சி ஆளும் மாநிலங்களுக்குப் பெருமளவில் வாரி வழங்கப்படுகின்றது. தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகின்றது.

6. கல்வி உரிமை பறிப்பு: மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால் கல்வியில் தமிழ்நாட்டின் தன்னுரிமை பறிக்கப்பட்டுவிட்டது. இந்தி, சங்கதம், ஆங்கிலத் திணிப்புத் தொடர்ந்து நடக்கிறது. இதனால் தமிழில் சொற்கள் வழக்கிழந்து தமிழின் அழிவுக்கு அடிகோலுகிறது.

            ‘தேசியத் தகுதி நுழைவுத்தேர்வு’ (NEET) முறையால் மருத்துவக் கல்விச் சேர்க்கையில் தமிழ்நாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டின் சிற்றூர்ப்புற நடுத்தகை, ஏழை மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. பயிற்சி நடுவங்களின் கொள்ளைக்கு வழிதிறந்து விடப்பட்டிருக்கின்றது. மேலும், இத் தேர்வுகள், முழுவதும் நேர்மையாக நடந்ததாக வரலாறில்லை.

            தேசியக் கல்விக் கொள்கை வழி மும்மொழி என்ற பெயரில் இந்தி, சங்கதத் திணிப்புக்குத் தந்திரமாக வழிசெய்யப்படுகின்றது. தமிழ்வழிக் கல்விக்கு வழியில்லை. மறைமுகமாகக் குலக்கல்வித்திட்டம் புகுத்தப்படுகிறது. பாடத்திட்டத்தில் தமிழ், தமிழர், தமிழக வரலாறு, கழக இலக்கியம், விடுதலைப் போரில் தமிழர் பங்களிப்பு முதலியவை பெரிதும் புறக்கணிக்கப்படுகின்றன. இது, தமிழர் அடையாள உரிமை பறிப்பும் ஆகும்.

            தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் ‘ஒருங்கிணைந்த கல்வி இயக்கம்’ (Samagra Shiksha Abhiyan) மூலம் தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய உருவா 2,500 கோடியை விடுவிக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது.

7. வளங்களின் உரிமைகள் பறிப்பு: வரலாற்று அடிப்படையில், ஒரு நிலப்பரப்பின் வளங்கள் அதன் முற்காலக் குடிமக்களுக்கே உரியவை என்பது பொதுவான கோட்பாடு. அவ்வகையில், தமிழ்நாட்டின் நீர், நிலம், கனிமங்கள், காடுகள் போன்ற இயற்கைவளங்கள் தமிழர்களின் மரபுவழிச் சொத்தாகக் கருதப் படுகின்றன. இந்த வளங்கள் மாநிலத்தின் பொருளியல் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைக்கும் அடிப்படை. தமிழ்நாட்டில் உள்ள வளங்கள், தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் தமிழர்களின் நலனுக்காகவும் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பரவலாக ஒப்புதலுள்ள கருத்து. இந்தியாவில் இது பின்பற்றப்படுவதில்லை.

அ) இயற்கை வளங்கள், கனிமங்கள் சுரண்டல்: தமிழ்நாட்டின் முகன்மை இயற்கை வளங்கள், கடுங்கரி (Graphite), சுண்ணாம்புக்கல் (Limestone), கருங்கல், படிகக்கல் (Quartz), வெளிமடம் என்னும் வெள்ளைக்கல் (Magnesite), அளமியக்கனிமம் (Bauxite), பழுப்பு நிலக்கரி, கனிமமணல், இரும்புக்கனிமம், நீர்வளம் (ஆறுகள், ஏரிகள்), நிலவளம் முதலியவை ஆகும். இவை தமிழர்களின் வாழ்வடிப்படைக்கு இன்றியமையாதன. ஆனால், சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைப்பதன் பெயரில் இவை சுரண்டப் படுகின்றன.

            குமரிமாவட்டத்தில் மலைகள் உடைத்துக் கடத்தப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு, நிலச்சரிவு ஏற்படுவதுடன் உள்ளூர் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கருங்கல், பிற கனிமங்களின் அகழ்வு, உள்ளூர் மக்களுக்குப் பயனளிக்காமல், தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் ஊதியம் தருவதாக உள்ளது.

            ஒன்றிய அரசு, ‘மாவட்டக் கனிமக் கட்டமைப்பு அறக்கட்டளை நிதி’ முழுவதையும், தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்கிறது. இது, மாநில அரசின் உரிமை பறிப்பாக உள்ளது.

ஆ) சுரங்கங்களால் பறிக்கப்படும் உரிமைகள்: சங்கரன்கோவில் குறிஞ்சாகுளத்தில் கடுங்கரி (Graphite) சுரங்கத்திற்காக 600 குறுக்கம் (Acre) பயிரிடு நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இது உழவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. திருவட்டாறு அருகில் செறுகோல் மலைக்குன்றை உடைத்து 56,000 கனமாத்திரி (cubicmetre) மண் எடுக்க ஒரு நிறுவனம் செயல்படுகிறது, இது நிலச்சரிவு மற்றும் நலவாழ்வுச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு கனிமவளத் துறை (Department of Geology and Mining) அறிக்கைகள் இந்தச் சுரண்டலை உறுதிப்படுத்துகின்றன. வடதமிழ்நாட்டில் (திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்) இயற்கை வளங்கள் சீரழிவு ஏற்பட்டுள்ளதாகப் பிரித்திசு ஒலிபரப்பு வாரிய (BBC) செய்திஅறிக்கை கூறுகிறது.

இ) காடுகள் உரிமை பறிப்பு: தமிழ்நாட்டில் காடுகள் 17.59% பரப்பளவில் உள்ளன. தமிழ்நாட்டில் வெப்பமண்டலப் பசுமைமாறாக் காடுகள், இலையுதிர் காடுகள், சதுப்புநிலக் காடுகள் (பிச்சாவரம் மற்றும் திருமரைக்காடு) போன்ற பல்வேறு வகையான காடுகள் உள்ளன. காட்டுப் பாதுகாப்புச் சட்டங்களும் அதற்குத் திருத்தங்களும் (எடுத்துக்காட்டாக, 2023 கான் பாதுகாப்புத் திருத்த சட்டமுன்வரைவு) ஒன்றிய அரசால் கொண்டுவரப்படுகின்றன. இவை, காடுகளைப் பயன்படுத்துவது, பாதுகாப்பது போன்றவற்றில் மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கின்றது.

ஈ) சுற்றுச்சூழல் உரிமை பறிப்பு: நீரகக்கரிமத்திற்கான (hydrocarbon) அகழ்வு, சதுப்புவளிக்கான (methane) அகழ்வு, நுண்ணொதுமி (neutrino) ஆய்வகழ்வு, தங்குசுத்தன் (tungsten) அகழ்வு என்னும் பெயர்களால் சுற்றுச்சூழலையும், மண்வளத்தையும், நிலத்தடிநீரையும் மாசுபடுத்திக் கெடுத்திடும் செயல்களுக்கு ஒன்றியஅரசு தமிழக இடங்களைத் தேர்ந்தெடுத்து மக்களின் கவலையை மிகுத்து, மனஅமைதியைக் கெடுக்கிறது. ஒவ்வொன்றையும் தடுத்து நிறுத்தப் பெரும் போராட்டங்களை நடத்தி உயிர் ஈகமும் செய்ய வேண்டியுள்ளது. தூத்துக்குடிச் செப்புருக்குத் தொழிற்சாலை (Sterilite Factory) வரலாற்றை எண்ணிப் பாருங்கள்!

உ) வேளாண் நிலங்கள், நீர் நிலைகள் உரிமை பறிப்பு: பரந்தூர் வானூர்தி நிலையத்திற்காகத் தனியாரிடம் 3774 குறுக்கம் பயிரிடு நிலங்கள் பறிக்கப்படுகின்றன. முன்பு செப்புருக்குத் தொழிற்சாலைக்கு (Sterilite Factory) ஆயிரம் குறுக்கம் நிலம் பறிக்கப்பட்டது. இங்குள்ள நீர்நிலைகளும் அழிக்கப்படுகின்றன. இவற்றால், உள்ளூர்த் தமிழர்களின் வாழ்வடிப்படை பறிக்கப்படுகின்றது. மேலும், தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் மாசுபாடு இந்த நிலையை மேலும் மோசமாக்குகிறது.

8. மீனவர் உரிமைகள் பறிப்பு: கச்சத்தீவு தமிழர் இசைவின்றியும் நாடாளுமன்ற ஒப்புதலின்றியும் இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டு மீனவர்களின் மரபுவழி மீன் பிடி உரிமைகள் (குறிப்பாகக் கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடலில்) பறிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாகத், தமிழக மீனவர்கள் காலங்காலமாக மரபுவழி மீன்பிடித்த பகுதியிலேயே மீன் பிடித்தும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இன்றுவரை இலங்கைக் கடற்படையால் 800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; பல்லாயிரவர் தாக்கப்பட்டுள்ளனர்; தளைப்படுத்தப்பட்டோர் ஆயிரக் கணக்கானவராவார். பன்னூற்றுக் கணக்கான படகுகளும் இலங்கையரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

            ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்ட கடல்சார் மீன்வள சட்டமுன் வரைவு 2021 (Marine Fisheries Bill 2021) போன்றவை மீனவர்களின் உரிமைகளை மேலும் பறிக்கும் எனப் பல மீனவர் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மீன்வளம் என்பது மாநிலப் பட்டியலில் இருந்தும், அந்த உரிமையை ஒன்றிய அரசு பறிக்கிறது.

9. மக்களின் நல்லிணக்கம், அமைதி பறிப்பு: தன்னல நோக்கத்திற்காக மக்களிடையே மத, சாதி உணர்வுகளைத் தூண்டி அவர்களிடையே நல்லிணக்கமும், அமைதியும் கெடுக்கப்படுகின்றது; பறிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் பலவகையான துன்ப துயரங்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள்.

10. மின்துறையில் உரிமை பறிப்பு: அரசமைப்புச் சட்டத்தில் மின்சாரம் பொதுப்பட்டியலில் உள்ளது. மின்சாரத் திருத்தச் சட்டத்தின் மூலம் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (State Electricity Regulatory Commission) தலைவரையும் உறுப்பினர்களையும் அமர்த்தும் அதிகாரத்தை ஒன்றியஅரசு எடுத்துக்கொள்கிறது. இது மாநிலஅரசின் உரிமை பறிப்பாகிறது.

            மின்சார சட்டத்திருத்தம்-2022 மூலம் மாநிலங்களில் மின்சார வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை ஆணையங்களின் அதிகாரங்களை ஒன்றியத்திலுள்ள ஒழுங்குமுறை ஆணையம் முழுவதும் பறித்துக்கொள்கிறது.

            மின்சார ஒப்பந்தங்களைச் செயற்படுத்துவதற்காக அமைக்கப்படும் ‘மின் ஒப்பந்த செயற்படுத்த ஆணையம்’ (Electricity Contract Enforcement Authority) ஒன்றியஅரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதில் மாநிலங்களுக்கு உறுப்பாண்மை இல்லை. இதுவும் மாநில உரிமைகளை மீறும் ஒரு செயலாகும்.

            தமிழ்நாட்டின் மின் தேவையையும் வழங்கலையும் மேலாண்மை செய்வதில் தமிழ்நாடு மின் உருவாக்க, பகிர்மான நிறுவனம் (TANGEDCO) முகன்மையாகவுள்ளது. ஆனால், மாநிலத்தின் மின்வலையிணைப்பும் (Grid), முகன்மைக் கடத்தற் கம்பிகளின் மீதான கட்டுப்பாடும் மின்தொகுப்பின் (POWERGRID) கைகளில் உள்ளன. இது மாநிலத்தின் முழுமையான கட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் உள்ள உரிமை பறிப்பாகும்.

11. கூட்டுறவுத்துறை உரிமை பறிப்பு: கூட்டுறவு மாநிலப் பட்டியலில் இருக்கிறது. அதை ஒன்றியஅரசுப் பட்டியலுக்குக் கொண்டுசெல்லும் வகையில், அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவர ஒன்றியஅரசு முனைப்புக் காட்டுகிறது. கூட்டுறவு அமைப்புகள், அந்தந்த ஊரில் உள்ள மக்களால் அங்கேயே அமைக்கப்படுவனவாகும். இது மாநில அரசுப்பட்டியலில் இருந்தால்தான் மக்களுக்கும் பயனளிக்கும், மாநில அரசும் நேரடியாக கண்காணிக்க முடியும்.

12. ஒன்றிய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதால் உரிமை பறிப்பு: ஒன்றியஅரசின் வழிகாட்டுதல்படி தமிழ்நாட்டில் பிறப்புத் தகவு (விகிதம்) கட்டுப்படுத்தப்பட்டது. இந் நிலையில், அதற்குத் தண்டனை என்னும் வகையில், மக்கள்தொகை அடிப்படையை வைத்து நிதிப்பகிர்வு செய்யப்படுகின்றது. மேலும், 2026-இல் நடைமுறைப்படுத்தக் கருதியிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுமானால், தமிழ்நாட்டின் உறுப்பாண்மை மிகவும் குறைக்கப்படக் கூடிய கெடுதல் நேரவிருக்கின்றது.

13. ஆளுநர் பதவியால் உரிமை பறிப்பு: உலக அளவில் கூட்டாட்சி அமைப்பை வைத்திருக்கும் முதன்மை நாடுகள் எவற்றிலும் ஒன்றியஅரசு ஆளுநரை அமர்த்தம் செய்யும் முறை இல்லை.

            மாநிலஅரசு எந்தச் சட்டம் இயற்றினாலும் ஆளுநர் கையெழுத்திட்டு ஏற்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டரசு இயற்றிய பல சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலவரம்பின்றிக் கிடப்பில் போட்டு வைத்ததையும் இதன் தொடர்பாக உச்சநயன்மன்ற வழக்குகள் உள்ளதையும் பார்த்து வருகின்றோம். அமர்த்தப் பதவியான ஆளுநர் பதவியிலிருப்பவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சட்டமன்றம் இயற்றும் சட்டங்களை நிறுத்திவைத்து மக்களின் உரிமையையே செல்லாததாக்கிவிடுகிறார். இப்படி ஆளுநர் பதவி மக்களின் உரிமையைப் பறிக்கும் நிலையைப் பார்க்கின்றோம்.

14. காவல்துறை உரிமை பறிப்பு: காவல்துறை மாநிலப் பட்டியலில் உள்ளது. அதையும் மீறி ஒன்றியஅரசு ‘ஒன்றிய சேமக் காவல் படை’யை (Reserve police) வைத்திருக்கிறது. மாநிலங்களின் இசைவு பெறாமலேயே, அப் படையை மாநிலங்களுக்குள் அணுப்பலாம்; செயற்படச் செய்யலாம். இதுவும் உரிமை பறிப்பே.

            இவ்வாறு பல துறைகளிலும் பறிக்கப்படும் உரிமைகளை எடுத்துச் சொல்லலாம். எனினும், விரிவுறல் எண்ணி இத்துடன் நிறுத்திக்கொள்கின்றோம். இப்படிப்பட்ட உரிமை பறிப்பு ஆளுமையைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தவிர்க்க வேண்டுமானால், செவ்வைக் கூட்டாட்சி நாடுகளில் உள்ளதைப் போல் மாநிலங்கள் பல துறைகளிலும் முழு அதிகாரங்கள் உள்ளனவாக இருக்கவேண்டும். அதிகாரப் பறிப்பிற்கு வழியிருக்கக் கூடாது.

இவற்றையெல்லாம் தமிழ் இளையோர் எண்ணிப் பார்க்கவேண்டும்; தீர்வு காண முயலவேண்டும்.

                 நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

            இல்லாண்மை ஆக்கிக் கொளல். - கு.1026.

                                                                                                                                            - ..