கூட்டாட்சியும் தமிழ்நாட்டு உரிமைகள் பறிப்பும்!
தமிழ்நாட்டைக் கழக(சங்க) காலத்தில் சேர சோழ பாண்டிய அரசர்களும் குறுநில மன்னர்களும் ஆண்டனர். அதன்பின் களப்பிரர், பல்லவர், பிற்காலச்சோழர்கள், மறுமலர்ச்சிப் பாண்டியர்கள், விசய நகரத்தார், நாயக்கர், தில்லி முகமதியர், மராத்தியர், மைசூரர் (ஐதர்அலி, திப்புசுல்தான்), பின் ஆங்கிலேயர் ஆண்டனர். இவர்களுள் ஆங்கிலேயர் தவிர்த்து அயலர் எவரும் தமிழ்நாடு முழுவதையும் ஆண்டதில்லை. சிற்சில பகுதிகளிலேயே தம் ஆட்சியைச் செலுத்தினர்.
ஆங்கிலேயரே தமிழ்நாடு முழுமையையும் தம் ஆட்சிப் பொறுப்பில் வைத்திருந்தனர். தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய நாட்டையும் உருவாக்கினர். இந்தியநாடு 1947-இல் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதென்றாலும் தென்னாட்டார் சிலர்க்கு அமைச்சுப்பதவி அளித்தனர் என்றாலும் வடவரின் வல்லாண்மையுடனே இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி நடந்துவருகின்றது.
இந்தியநாடு பல்வேறு மொழி, இனம், பண்பாடு, சமயம், உணவுப் பழக்கம், உடை முதலியவற்றுடன் பன்முகத்தன்மை கொண்டதாகவும், கூட்டாட்சி நெறிமுறைகளைக் கொண்டதாகவும், மாநிலங்களின் ஒன்றியமாகவும் உருவாக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் இப்போது, மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டதோடு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே ஒன்றியஅரசிடம் போராடிப் பெறவேண்டிய நிலையே உள்ளது.
மாநில உரிமைகள் (அதிகாரங்கள்), ஒன்றியஅரசின் உரிமைகள், பொதுப்பட்டியல் உரிமைகள் என இந்தியாவில், முப்பிரிவுகளாக அரசியல்சட்டப்படி உரிமைகள் பிரிக்கப்பட்டிருந்தும் இந்திய ஒன்றிய அரசு, பொதுப்பட்டியலில் உள்ள அதிகார உரிமைளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றிக்கொண்டு வருகின்றதோடு மாநில உரிமைகளையும் தந்திரமாகப் பறித்துவருகின்றது.
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா கூட்டாட்சி நாடாகும். பல நாடுகளின் (மாநிலங்களின்) ஒன்றியம் (Union of States) தான் இந்தியா. ஆனால், அதற்கு மாறாக இந்தியாவை ஒற்றை நாடாக தில்லி ஒன்றிய ஆட்சியாளர் மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றனவென்றால் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றனவென்றே பொருள். கூட்டாட்சிக் கொள்கை மக்களாட்சியோடு ஒன்றிணைந்ததாகும். மக்களுடைய உரிமைகளும் மாநிலங்களின் உரிமைகளும் சேர்ந்ததே உண்மையான மக்களாட்சியாகும். உலகின் மக்கள்தொகையில் 40 விழுக்காட்டிற்கு மேல் உள்ள மக்கள் வாழும் வெவ்வேறு நாடுகளில், கூட்டாட்சி முறைதான் பின்பற்றப்படுகின்றது.
உலகின் பலநாடுகளிலும் அரசியல், குமுக, பொருளியல், இன, மொழி, பண்பாட்டு வேறுபாடுகளையும், நிதித் தொடர்பான அமைப்புகளையும் அடிப்படையாகக் கொண்டே கூட்டாட்சி முறையின் சிறப்பு அமைகிறது.
செவ்வைக் கூட்டாட்சியியலைப் (classic federalism) பின்பற்றுகின்ற அமெரிக்கா, ஆத்திரேலியா, சுவிட்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் மாநிலங்களின் உரிமைகள்தான் அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளமாக அமைகின்றன. சில முதன்மையான காரணங்களுக்காக அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை மேற்கூறிய கூட்டாட்சி நாடுகளில் மேற்கொள்ளநேரிட்டாலும், ஒருமுறை கூட மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கின்ற அரசமைப்புச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதே இல்லை.
இந்தியாவில் மாநில உரிமைகள் தொடர்ந்து 78 ஆண்டுகளாகச் சிதைக்கப்படுகின்றன. இத்தகைய தன்மைகள் பொருந்திய இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் முழுவதுமாக ஒற்றையாட்சிச் சட்டமாக மாறி வருகிறது. இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் நினைத்தால் மாநிலங்களை நினைத்த நேரத்தில் கலைத்துவிட முடியும்; கவிழ்த்துவிட முடியும் என்னும் நிலையே உள்ளது.
ஒன்றிய அரசு முழு முற்றதிகார (சர்வாதிகார) அரசாக மாறியதற்குப் பேராயக்கட்சியும், பா.ச.க.வும் செய்த, செய்து வருகின்ற மக்களாட்சிக்கு எதிரான, கூட்டாட்சிஇயலுக்கு எதிரான தொடர் சட்டத்திருத்தங்களும், பின்பற்றுகின்ற மேலாண்மை நடவடிக்கைகளும் காரணங்களாக உள்ளன. இந்தியா ஒரு நாடன்று; இது ஒரு துணைக்கண்டம். மேற்குறிப்பிட்ட செவ்வைக் கூட்டாட்சி நாடுகளில் காணமுடியாத வேற்றுமைக்கூறுகள் இத் துணைக் கண்டத்தில்தான் பெருமளவில் உள்ளன என்பது வெள்ளிடைமலையாகும்.
பல்வேறு மத, மொழி, இனமக்கள் மாநிலங்களில் இருப்பதனாலும், பல மாநிலக் கட்சிகள் மாநிலங்களில் ஆட்சியமைப்பதனாலும் ஒன்றியஅரசில் தேசியக்கட்சிகள் தனித்து ஆட்சியமைக்கும் முழுப்பெரும்பான்மையினை இழந்து வருகின்ற நிலையிருப்பினும் நடைமுறையில் இந்திய அரசமைப்புச் சட்டம் ஒற்றையாட்சிச் சட்டமாகவே மாற்றப்பட்டு விட்டது.
தேசவிடுதலைப் போராட்டங்களில் மக்கள் பங்கேற்பும், மொழிவழி மாநிலங்களுக்காகவும், மொழி, இனம், பண்பாடு பாதுகாக்கப் படுவதற்காகவும் பல்வேறு தேசியஇனங்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டங்களும், கூட்டாட்சிக் கோட்பாடு அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றதற்கு முகன்மையான காரணங்கள் ஆகும்.
2014க்குப் பிறகு ஒன்றியத்தில் பா.ச.க. அரசு அமைந்தவுடன் திட்டமிட்டு மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. முற்றதிகார (சர்வாதிகார) அரசியலை முன்னிலைப்படுத்துகிற இந்து தேசம் (ராஷ்டிரம்) என்ற தேசியத் தற்பணியர் அமைப்பின் (RSS). செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பா.ச.க. ஆட்சி முயன்று வருகின்றது. இதன் அடிப்படையில்தான் அரசமைப்புச் சட்டம் வழங்கிய தன்னாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் வெட்டப்படுகின்றன.
அரசியல் அமைப்புச் சட்டப்படி தனியதிகாரத்துடன் செயற்படவேண்டிய இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முழு அளவிற்குப் பா.ச.கட்சியின் செயல்பாடுகளாகவே நடக்கின்றன. தேர்தல் ஆணையரைத் தலைமை அமைச்சர், எதிர்க்கட்சிகளின் தலைவர், உச்சநயன்மன்ற நயனகர் ஆகிய மூவர் குழு தேர்ந்தெடுத்துக் குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று, 2023-இல் உச்சநயன்மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்திய ஒன்றிய அரசார், தலைமைஅமைச்சர், எதிர்க்கட்சிகளின் தலைவர், அமைச்சரவையிலுள்ள அமைச்சரொருவர் ஆகிய மூவர் அடங்கிய குழு தேர்ந்தெடுத்துப் பரிந்துரைக்கும் என்று சட்டம் இயற்றிக்கொண்டார்கள்.
இனி, எவ்வாறெல்லாம் தமிழ்நாட்டு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்று சில நிலைகளில் சிறிது பார்ப்போம்:
1. நிலப்பகுதி உரிமை இழப்பு; மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழர்பகுதிகள் ஆந்திரா, கருநாடகா, கேரளாவுடன் இணைக்கப்பட்டுவிட்டன. அவையாவன:
அ) ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட பகுதிகள்: சித்தூர் மாவட்டத்தின் பகுதிகள், திருப்பதி அதைச்சுற்றியுள்ள சில பகுதிகள், நெல்லூர் மாவட்டத்தின் சில பகுதிகள் முதலியன தமிழ்நாட்டிடமிருந்து பறிக்கப்பட்டன.
ஆ) கருநாடகத்துக்குச் சென்ற பகுதிகள்: கோலார் தங்கவயல் பகுதிகள், ஆனேகல் மாவட்டம் உள்ளிட்ட பெங்களூரு நகரத்தின் சில பகுதிகள், மண்டியாவுக்கும் பெலகாவிக்கும் அருகிலுள்ள பகுதிகள் முதலியன.
இ) கேரளாவுக்குப் போன பகுதிகள்: செங்கோட்டையின் சில பகுதிகள், தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு, இடுக்கி மாவட்டத்தின் சில பகுதிகள் முதலியன.
ஈ) கச்சத்தீவு தமிழர்களின் இசைவின்றியும் நாடாளுமன்றத்தின் இசைவின்றியும் இனவெறிச் சிங்கள அரசிற்குத் தாரைவார்க்கப்பட்டது.
2. ஆற்றுநீர் உரிமைகள் பறிப்பு: காவிரி, முல்லைப்பேரியாறு, தென்பெண்ணை முதலிய ஆற்று நீர் உரிமை நீண்ட காலமாகச் சிக்கலுக்குள்ளாகி உள்ளது. அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரிநீர் ஒழுங்காற்று வாரியம் ஆகியவற்றின் அதிகாரத்தை நீராற்றல் (சல்சக்தி) துறைக்குள் முடக்கி விட்டனர். குறைக்கப்பட்ட அளவிலான நீரைப் பெறவே நடைமுறையில் தமிழ்நாடு அடிக்கடி உச்சநயன் மன்றத்தை நாடவேண்டியிருக்கிறது.
முல்லைப்பேரியாறு அணை உறுதியாக உள்ளது என்பதை நடுவண் நீர்வளக் குழுவும், உச்சநயன்மன்றம் அமைத்த குழுக்களும் பலமுறை ஆய்வுசெய்து உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், உச்சநயன்மன்றம் அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணை பாதுகாப்பாக உள்ளது என்றும் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், கேரள அரசு அந்தத் தீர்ப்புகளை ஏற்க மறுத்து, தொடர்ந்து அணையைப் பேணுதற்குத் தேவையற்ற தொல்லை தருகிறது; சட்டப் போராட்டங்களை நடத்துகிறது.
தென்பெண்ணை ஆற்றின் துணைஆறான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே கருநாடக அரசு பங்கரப்பேட்டைப் பகுதியில் ஒரு புதிய அணையைத் தமிழ்நாட்டின் இசைவின்றிக் கட்டியுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீரின் அளவைக் குறைத்து, ஐந்து மாவட்டங்களின் பாசனத்தையும், குடிநீர்ப் பயன்பாட்டையும் தடுக்கிறது. உச்சநயன்மன்றம், ஒன்றியஅரசை இதற்குத் தீர்ப்பாயம் அமைக்கக் கூறியும், இதுவரை ஒன்றியஅரசு அமைக்கவில்லை. பெங்களூரின் தூய்மையாக்கப்படாத கழிவுநீர் நேரடியாகத் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால், ஆறு பெருமளவு மாசுபடுகிறது.
பாலாற்றிலும் சிறுவாணியிலும் தடுப்பணைகள் கட்டித் தமிழ்நாட்டின் நீர் உரிமையைப் பறிக்கின்றனர்.
3. பறிக்கப்படும் மொழி உரிமை: பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும், நாளொரு சொல்லும் பொழுதொரு தொடருமாகத் தொடர்ந்து இந்தியும் சங்கதமும் (சமற்கிருதம்) திணிக்கப்படுகின்றன. தமிழ்ச்சொற்களை வழக்கு வீழ்த்தி அழிக்கும் முயற்சி நடக்கிறது. இந்தி, சங்கதத் திணிப்பு, சங்கத வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவது, அனைத்து இந்தியத் தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம் இரண்டை மட்டும் பயன்படுத்துவது, தொடர்வண்டித் துறை உள்ளகத் தொடர்புக்குத் தமிழைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடுவது போன்ற நடவடிக்கைகள் பா.ச.க. ஆட்சியில் அடிக்கடி நடக்கின்றன.
இந்தி, இந்தியாவின் ஒரே அதிகார அடிப்படை மொழி என்னும் போக்கு, தமிழைத் தாழ்த்தி தனக்குரிய இடத்தை இழக்கச் செய்கின்றது. ஒன்றிய அரசின் தேர்வுகளிலும், படைத்துறை, தொடர்வண்டித்துறை முதலிய துறைகளிலும் தமிழ் அறவே புறக்கணிக்கப்படுகின்றது.
4. பண்பாட்டு உரிமைகள் பறிப்பு: தமிழர் பண்பாட்டு உரிமைகள் மறுக்கப்படுவதோடு வடநாட்டுப் பண்பாடுகள் வலிந்து திணிக்கப்படுகின்றன. ஏறுதழுவல் (சல்லிக்கட்டு) தடையை நீக்கப் பெரும்போராட்டம் நடத்த வேண்டியிருந்ததையும், வடவரின் ‘கோலி’ப்பண்டிகை தமிழகத்தில் வலிந்து புகுத்தப்படுவதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.
தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுகள், கோவில்கள், மரபுவழிக் கலைகள் முதலியவை வணிகவயமாக்கப்பட்டு, அவற்றின் உண்மையான மதிப்பு உள்ளூர் மக்களுக்குப் பயன்படாமல், வெளிமாநில, வெளிநாட்டுச் சுற்றுலாச் செலவர்க்கும் ஒன்றிய அரசுக்கும் மட்டுமே உதவுகிறது.
5. நிதி உரிமைகள்பறிப்பு: தமிழகம் நிதித்துறையில் வஞ்சிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து ஒன்றியஅரசுக்குச் செல்லும் வரி வருவாய்க்கு இணையாகத் தமிழ்நாட்டிற்கு நிதிஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை. நாம் பங்களிக்கக்கூடிய ஓர் உருவா வரியில் 29 காசு மட்டுமே நமக்கு நிதிப்பகிர்வாகத் தரப்படுகின்றது. உ.பி., பீகார் போன்ற மாநிலங்களுக்குப் பலமடங்கு ஒதுக்கப்படுகின்றது. ஒன்றியஅரசு, நிதிப்பகிர்வு செய்ய வேண்டாத வரிவிதிப்புகளை அதிகமாக்கி வருவாய் பெருக்கிக் கொள்கிறது.
இயற்கைச் சீற்றங்களினால் தமிழ்நாடு தாக்கப்பட்டபோதெல்லாம் கூட, தகுந்த ஆய்வின்வழி அளவீடுகள் செய்த பின்னரும், பல முறை வலியுறுத்தியும், உரிய இழப்பீடுகள் வழங்கப்படவேஇல்லை. ஆனால், குசராத்து போன்ற மாநிலங்களுக்கு அளவீடுகளுக்கு முன்னரும் பின்னரும் கூட நிறைய வாரி வழங்கப்படுகின்றது. ‘சரக்குகள், பணிகள் வரி’ (GST) என்ற பெயரில் மாநிலங்களின் வரிதிரட்டும் உரிமைகளையே ஒன்றிய பா.ச.க. அரசு பறித்துவிட்டது.
ஒன்றிய அரசுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஆளுங்கட்சி ஆளும் மாநிலங்களுக்குப் பெருமளவில் வாரி வழங்கப்படுகின்றது. தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகின்றது.
6. கல்வி உரிமை பறிப்பு: மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டு விட்டது. இதனால் கல்வியில் தமிழ்நாட்டின் தன்னுரிமை பறிக்கப்பட்டுவிட்டது. இந்தி, சங்கதம், ஆங்கிலத் திணிப்புத் தொடர்ந்து நடக்கிறது. இதனால் தமிழில் சொற்கள் வழக்கிழந்து தமிழின் அழிவுக்கு அடிகோலுகிறது.
‘தேசியத் தகுதி நுழைவுத்தேர்வு’ (NEET) முறையால் மருத்துவக் கல்விச் சேர்க்கையில் தமிழ்நாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டின் சிற்றூர்ப்புற நடுத்தகை, ஏழை மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. பயிற்சி நடுவங்களின் கொள்ளைக்கு வழிதிறந்து விடப்பட்டிருக்கின்றது. மேலும், இத் தேர்வுகள், முழுவதும் நேர்மையாக நடந்ததாக வரலாறில்லை.
தேசியக் கல்விக் கொள்கை வழி மும்மொழி என்ற பெயரில் இந்தி, சங்கதத் திணிப்புக்குத் தந்திரமாக வழிசெய்யப்படுகின்றது. தமிழ்வழிக் கல்விக்கு வழியில்லை. மறைமுகமாகக் குலக்கல்வித்திட்டம் புகுத்தப்படுகிறது. பாடத்திட்டத்தில் தமிழ், தமிழர், தமிழக வரலாறு, கழக இலக்கியம், விடுதலைப் போரில் தமிழர் பங்களிப்பு முதலியவை பெரிதும் புறக்கணிக்கப்படுகின்றன. இது, தமிழர் அடையாள உரிமை பறிப்பும் ஆகும்.
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் ‘ஒருங்கிணைந்த கல்வி இயக்கம்’ (Samagra Shiksha Abhiyan) மூலம் தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய உருவா 2,500 கோடியை விடுவிக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது.
7. வளங்களின் உரிமைகள் பறிப்பு: வரலாற்று அடிப்படையில், ஒரு நிலப்பரப்பின் வளங்கள் அதன் முற்காலக் குடிமக்களுக்கே உரியவை என்பது பொதுவான கோட்பாடு. அவ்வகையில், தமிழ்நாட்டின் நீர், நிலம், கனிமங்கள், காடுகள் போன்ற இயற்கைவளங்கள் தமிழர்களின் மரபுவழிச் சொத்தாகக் கருதப் படுகின்றன. இந்த வளங்கள் மாநிலத்தின் பொருளியல் வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைக்கும் அடிப்படை. தமிழ்நாட்டில் உள்ள வளங்கள், தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் தமிழர்களின் நலனுக்காகவும் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பரவலாக ஒப்புதலுள்ள கருத்து. இந்தியாவில் இது பின்பற்றப்படுவதில்லை.
அ) இயற்கை வளங்கள், கனிமங்கள் சுரண்டல்: தமிழ்நாட்டின் முகன்மை இயற்கை வளங்கள், கடுங்கரி (Graphite), சுண்ணாம்புக்கல் (Limestone), கருங்கல், படிகக்கல் (Quartz), வெளிமடம் என்னும் வெள்ளைக்கல் (Magnesite), அளமியக்கனிமம் (Bauxite), பழுப்பு நிலக்கரி, கனிமமணல், இரும்புக்கனிமம், நீர்வளம் (ஆறுகள், ஏரிகள்), நிலவளம் முதலியவை ஆகும். இவை தமிழர்களின் வாழ்வடிப்படைக்கு இன்றியமையாதன. ஆனால், சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைப்பதன் பெயரில் இவை சுரண்டப் படுகின்றன.
குமரிமாவட்டத்தில் மலைகள் உடைத்துக் கடத்தப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு, நிலச்சரிவு ஏற்படுவதுடன் உள்ளூர் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கருங்கல், பிற கனிமங்களின் அகழ்வு, உள்ளூர் மக்களுக்குப் பயனளிக்காமல், தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் ஊதியம் தருவதாக உள்ளது.
ஒன்றிய அரசு, ‘மாவட்டக் கனிமக் கட்டமைப்பு அறக்கட்டளை நிதி’ முழுவதையும், தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்கிறது. இது, மாநில அரசின் உரிமை பறிப்பாக உள்ளது.
ஆ) சுரங்கங்களால் பறிக்கப்படும் உரிமைகள்: சங்கரன்கோவில் குறிஞ்சாகுளத்தில் கடுங்கரி (Graphite) சுரங்கத்திற்காக 600 குறுக்கம் (Acre) பயிரிடு நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இது உழவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. திருவட்டாறு அருகில் செறுகோல் மலைக்குன்றை உடைத்து 56,000 கனமாத்திரி (cubicmetre) மண் எடுக்க ஒரு நிறுவனம் செயல்படுகிறது, இது நிலச்சரிவு மற்றும் நலவாழ்வுச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு கனிமவளத் துறை (Department of Geology and Mining) அறிக்கைகள் இந்தச் சுரண்டலை உறுதிப்படுத்துகின்றன. வடதமிழ்நாட்டில் (திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்) இயற்கை வளங்கள் சீரழிவு ஏற்பட்டுள்ளதாகப் பிரித்திசு ஒலிபரப்பு வாரிய (BBC) செய்திஅறிக்கை கூறுகிறது.
இ) காடுகள் உரிமை பறிப்பு: தமிழ்நாட்டில் காடுகள் 17.59% பரப்பளவில் உள்ளன. தமிழ்நாட்டில் வெப்பமண்டலப் பசுமைமாறாக் காடுகள், இலையுதிர் காடுகள், சதுப்புநிலக் காடுகள் (பிச்சாவரம் மற்றும் திருமரைக்காடு) போன்ற பல்வேறு வகையான காடுகள் உள்ளன. காட்டுப் பாதுகாப்புச் சட்டங்களும் அதற்குத் திருத்தங்களும் (எடுத்துக்காட்டாக, 2023 கான் பாதுகாப்புத் திருத்த சட்டமுன்வரைவு) ஒன்றிய அரசால் கொண்டுவரப்படுகின்றன. இவை, காடுகளைப் பயன்படுத்துவது, பாதுகாப்பது போன்றவற்றில் மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கின்றது.
ஈ) சுற்றுச்சூழல் உரிமை பறிப்பு: நீரகக்கரிமத்திற்கான (hydrocarbon) அகழ்வு, சதுப்புவளிக்கான (methane) அகழ்வு, நுண்ணொதுமி (neutrino) ஆய்வகழ்வு, தங்குசுத்தன் (tungsten) அகழ்வு என்னும் பெயர்களால் சுற்றுச்சூழலையும், மண்வளத்தையும், நிலத்தடிநீரையும் மாசுபடுத்திக் கெடுத்திடும் செயல்களுக்கு ஒன்றியஅரசு தமிழக இடங்களைத் தேர்ந்தெடுத்து மக்களின் கவலையை மிகுத்து, மனஅமைதியைக் கெடுக்கிறது. ஒவ்வொன்றையும் தடுத்து நிறுத்தப் பெரும் போராட்டங்களை நடத்தி உயிர் ஈகமும் செய்ய வேண்டியுள்ளது. தூத்துக்குடிச் செப்புருக்குத் தொழிற்சாலை (Sterilite Factory) வரலாற்றை எண்ணிப் பாருங்கள்!
உ) வேளாண் நிலங்கள், நீர் நிலைகள் உரிமை பறிப்பு: பரந்தூர் வானூர்தி நிலையத்திற்காகத் தனியாரிடம் 3774 குறுக்கம் பயிரிடு நிலங்கள் பறிக்கப்படுகின்றன. முன்பு செப்புருக்குத் தொழிற்சாலைக்கு (Sterilite Factory) ஆயிரம் குறுக்கம் நிலம் பறிக்கப்பட்டது. இங்குள்ள நீர்நிலைகளும் அழிக்கப்படுகின்றன. இவற்றால், உள்ளூர்த் தமிழர்களின் வாழ்வடிப்படை பறிக்கப்படுகின்றது. மேலும், தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் மாசுபாடு இந்த நிலையை மேலும் மோசமாக்குகிறது.
8. மீனவர் உரிமைகள் பறிப்பு: கச்சத்தீவு தமிழர் இசைவின்றியும் நாடாளுமன்ற ஒப்புதலின்றியும் இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டு மீனவர்களின் மரபுவழி மீன் பிடி உரிமைகள் (குறிப்பாகக் கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடலில்) பறிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாகத், தமிழக மீனவர்கள் காலங்காலமாக மரபுவழி மீன்பிடித்த பகுதியிலேயே மீன் பிடித்தும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, இன்றுவரை இலங்கைக் கடற்படையால் 800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; பல்லாயிரவர் தாக்கப்பட்டுள்ளனர்; தளைப்படுத்தப்பட்டோர் ஆயிரக் கணக்கானவராவார். பன்னூற்றுக் கணக்கான படகுகளும் இலங்கையரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்ட கடல்சார் மீன்வள சட்டமுன் வரைவு 2021 (Marine Fisheries Bill 2021) போன்றவை மீனவர்களின் உரிமைகளை மேலும் பறிக்கும் எனப் பல மீனவர் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மீன்வளம் என்பது மாநிலப் பட்டியலில் இருந்தும், அந்த உரிமையை ஒன்றிய அரசு பறிக்கிறது.
9. மக்களின் நல்லிணக்கம், அமைதி பறிப்பு: தன்னல நோக்கத்திற்காக மக்களிடையே மத, சாதி உணர்வுகளைத் தூண்டி அவர்களிடையே நல்லிணக்கமும், அமைதியும் கெடுக்கப்படுகின்றது; பறிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் பலவகையான துன்ப துயரங்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள்.
10. மின்துறையில் உரிமை பறிப்பு: அரசமைப்புச் சட்டத்தில் மின்சாரம் பொதுப்பட்டியலில் உள்ளது. மின்சாரத் திருத்தச் சட்டத்தின் மூலம் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (State Electricity Regulatory Commission) தலைவரையும் உறுப்பினர்களையும் அமர்த்தும் அதிகாரத்தை ஒன்றியஅரசு எடுத்துக்கொள்கிறது. இது மாநிலஅரசின் உரிமை பறிப்பாகிறது.
மின்சார சட்டத்திருத்தம்-2022 மூலம் மாநிலங்களில் மின்சார வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை ஆணையங்களின் அதிகாரங்களை ஒன்றியத்திலுள்ள ஒழுங்குமுறை ஆணையம் முழுவதும் பறித்துக்கொள்கிறது.
மின்சார ஒப்பந்தங்களைச் செயற்படுத்துவதற்காக அமைக்கப்படும் ‘மின் ஒப்பந்த செயற்படுத்த ஆணையம்’ (Electricity Contract Enforcement Authority) ஒன்றியஅரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இதில் மாநிலங்களுக்கு உறுப்பாண்மை இல்லை. இதுவும் மாநில உரிமைகளை மீறும் ஒரு செயலாகும்.
தமிழ்நாட்டின் மின் தேவையையும் வழங்கலையும் மேலாண்மை செய்வதில் தமிழ்நாடு மின் உருவாக்க, பகிர்மான நிறுவனம் (TANGEDCO) முகன்மையாகவுள்ளது. ஆனால், மாநிலத்தின் மின்வலையிணைப்பும் (Grid), முகன்மைக் கடத்தற் கம்பிகளின் மீதான கட்டுப்பாடும் மின்தொகுப்பின் (POWERGRID) கைகளில் உள்ளன. இது மாநிலத்தின் முழுமையான கட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் உள்ள உரிமை பறிப்பாகும்.
11. கூட்டுறவுத்துறை உரிமை பறிப்பு: கூட்டுறவு மாநிலப் பட்டியலில் இருக்கிறது. அதை ஒன்றியஅரசுப் பட்டியலுக்குக் கொண்டுசெல்லும் வகையில், அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவர ஒன்றியஅரசு முனைப்புக் காட்டுகிறது. கூட்டுறவு அமைப்புகள், அந்தந்த ஊரில் உள்ள மக்களால் அங்கேயே அமைக்கப்படுவனவாகும். இது மாநில அரசுப்பட்டியலில் இருந்தால்தான் மக்களுக்கும் பயனளிக்கும், மாநில அரசும் நேரடியாக கண்காணிக்க முடியும்.
12. ஒன்றிய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றியதால் உரிமை பறிப்பு: ஒன்றியஅரசின் வழிகாட்டுதல்படி தமிழ்நாட்டில் பிறப்புத் தகவு (விகிதம்) கட்டுப்படுத்தப்பட்டது. இந் நிலையில், அதற்குத் தண்டனை என்னும் வகையில், மக்கள்தொகை அடிப்படையை வைத்து நிதிப்பகிர்வு செய்யப்படுகின்றது. மேலும், 2026-இல் நடைமுறைப்படுத்தக் கருதியிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுமானால், தமிழ்நாட்டின் உறுப்பாண்மை மிகவும் குறைக்கப்படக் கூடிய கெடுதல் நேரவிருக்கின்றது.
13. ஆளுநர் பதவியால் உரிமை பறிப்பு: உலக அளவில் கூட்டாட்சி அமைப்பை வைத்திருக்கும் முதன்மை நாடுகள் எவற்றிலும் ஒன்றியஅரசு ஆளுநரை அமர்த்தம் செய்யும் முறை இல்லை.
மாநிலஅரசு எந்தச் சட்டம் இயற்றினாலும் ஆளுநர் கையெழுத்திட்டு ஏற்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டரசு இயற்றிய பல சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலவரம்பின்றிக் கிடப்பில் போட்டு வைத்ததையும் இதன் தொடர்பாக உச்சநயன்மன்ற வழக்குகள் உள்ளதையும் பார்த்து வருகின்றோம். அமர்த்தப் பதவியான ஆளுநர் பதவியிலிருப்பவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சட்டமன்றம் இயற்றும் சட்டங்களை நிறுத்திவைத்து மக்களின் உரிமையையே செல்லாததாக்கிவிடுகிறார். இப்படி ஆளுநர் பதவி மக்களின் உரிமையைப் பறிக்கும் நிலையைப் பார்க்கின்றோம்.
14. காவல்துறை உரிமை பறிப்பு: காவல்துறை மாநிலப் பட்டியலில் உள்ளது. அதையும் மீறி ஒன்றியஅரசு ‘ஒன்றிய சேமக் காவல் படை’யை (Reserve police) வைத்திருக்கிறது. மாநிலங்களின் இசைவு பெறாமலேயே, அப் படையை மாநிலங்களுக்குள் அணுப்பலாம்; செயற்படச் செய்யலாம். இதுவும் உரிமை பறிப்பே.
இவ்வாறு பல துறைகளிலும் பறிக்கப்படும் உரிமைகளை எடுத்துச் சொல்லலாம். எனினும், விரிவுறல் எண்ணி இத்துடன் நிறுத்திக்கொள்கின்றோம். இப்படிப்பட்ட உரிமை பறிப்பு ஆளுமையைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தவிர்க்க வேண்டுமானால், செவ்வைக் கூட்டாட்சி நாடுகளில் உள்ளதைப் போல் மாநிலங்கள் பல துறைகளிலும் முழு அதிகாரங்கள் உள்ளனவாக இருக்கவேண்டும். அதிகாரப் பறிப்பிற்கு வழியிருக்கக் கூடாது.
இவற்றையெல்லாம் தமிழ் இளையோர் எண்ணிப் பார்க்கவேண்டும்; தீர்வு காண முயலவேண்டும்.
இல்லாண்மை ஆக்கிக் கொளல். - கு.1026.
- த.ந.
![]()
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக