சனி, 14 ஜூன், 2025

ஆள்வோரே, தமிழுக்கு உண்மையான ஆக்கம் செய்வீர்!

 

ஆள்வோரே, தமிழுக்கு

உண்மையான ஆக்கம் செய்வீர்!

தமிழ்நாட்டு முலமைச்சர் மு.க.இசுதாலின் அவர்கள் திருமண நிகழ்ச்சிகளில் பேசும்போதும், குழந்தைகளுக்குப் பெயர்வைக்கும் நிகழ்வுகளின்போதும் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர்வைக்க வலியுறுத்தி வருகின்றார். இது வரவேற்றுப் பாராட்டக்கூடிய செயலாகும். அவர் தந்தையார் கலைஞர் கருணாநிதி நகராட்சி, மாநகராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களில் தமிழ்வாழ்க என ஒளிரும் எழுத்துகளில் எழுதிவைக்க ஏற்பாடு செய்ததும் பாராட்டவேண்டிய செயலாகும். இன்னும் தமிழறிந்தார்க்குப் பலர் பெயரில் பரிசில்கள் வழங்கப்படுவதும் சரியே. 

இவையே தமிழுக்கு ஆக்கம் செய்யும் செயல்களாக மனநிறைவு கொள்வது சரியாக எண்ணிப்பார்த்தால், ஒருவகை அறியாமை அல்லது ஏமாற்றம் என்பதே உண்மையாகும். இச் சிறுசிறு செயல்கள் தமிழுக்கு ஆக்கம் செய்துவிட்டதாக எளிய மக்களை மனம் மகிழச் செய்யும் செயல்களே! நெடிதாக்கம் கருதுவார் நிலையானபயன் விளையும் ஆக்கங்களையே எண்ணிச் செய்யவேண்டும்.  

பாவலரேறு பெருஞ்சித்திரனார் இந்நிலைகளைக் குறித்து 

ஒரு பாடலில் குறிப்பிடும்போது

                தமிழ் வாழ்கவென்பதிலும் தமிழ்வா ழாது! 

                தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது! 

எனத் தொடங்கிப் பல செய்திகளைக் கூறி, அப் பாடலை,

விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்
விதைத்திடுதல் வேண்டும் தமிழ் வாழும் அன்றே! என்று முடித்திருப்பார்.  

                தமிழை வாழவைக்கும் முயற்சிகளில் அடிப்படையானது, தமிழரின் உண்மையான உயர்வுக்கு அடிகோலுவது தமிழ்வழிக் கல்வி என்பதே உறுதியான உண்மையாகும். இவ்வுலகில், பல்வேறு துறை வல்லுநர்க்கும் வழங்கப்படும் மிக உயர்ந்த பரிசாகநோபல் பரிசுகருப்படுகின்றது. அப் பரிசினை இதுவரை பெற்ற பல்வேறு துறைசார்ந்த அறிஞர் வல்லுநர் பலருக்கு அவர்கள் தாய்மொழி தவிர ஆங்கிலமோ பிறமொழிகளோ தெரியாது என்பதே உண்மையாகும். அவர்கள் தம் தாய்மொழிவழிக் கல்வி பயின்று


முன்னுக்கு வந்து ஒளிவீசுகின்றனர். உலகில் மக்கள்நலன் கருதும் நல்லறிஞர், நல்ல தலைவர் அனைவரும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகின்றனர். 

தமிழ்மக்கள் நலனில் மெய்யான கவலையும் முனைப்பும் கொண்ட தலைவரான அறிஞர் அண்ணா, தமிழ்நாட்டிற்குத்தமிழ்நாடுஎனப் பெயரை மீட்டெடுத்து வழங்கிய நிகழ்வில், தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் உரையாற்றும்போது, தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதி அளித்தார். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார். தமிழ்ப் பகைவரும் ஆங்கிலவழிப் பள்ளிக் கல்விக்கொள்ளையரும் எதிர்த்தபோதும் அவற்றைத் தக்கவகையில் எதிர்கொண்டு தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவர அவருக்கு வாழ்நாள்குறைவு வழியடைத்துவிட்டது.  அவருக்குப்பின், அந்த முயற்சி தளர்ச்சி பெற்று கைநழுவவிடப்படதென்றே கூறலாம்.  

உலகெங்கணும் நோக்கின், பல்வேறு நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வியே பின்பற்றப்படுகின்றது. ஐரோப்பாவிலுள்ள இருபது தனித்தனி நாடுகளில் அவரவர் தாய்மொழியே பயிற்றுமொழியாக உள்ளது. வளர்ந்த நாடுகளாகக் கருதப்படும் பிரான்சு, சீனா, செருமனி, இரசியா, சுவீடன், சப்பான், இசுரேல், கொரியா முதலிய நாடுகளில் தாய்மொழிவழிக் கல்வியே நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாட்டில் பயிற்றுமொழி குறித்த பிழையான அணுகுமுறையால், இப்போதைய மாணவர்கள் ஆங்கிலத்திலும் தாய்மொழி தமிழிலும் அரைகுறை அறிவைப் பெற்று திறமையின்றித் திண்டாடுவதைப் பல்வேறு பள்ளிகளின் புள்ளி விளக்கங்கள் கூறுகின்றன.   

                மேலே குறிப்பிட்ட நாடுகள் பலவற்றிலும், உலகின் எந்த மூலையில் எந்த மொழியில்  புதிய அறிவியல் செய்தியோ பிறதுறைச் செய்தியோ வந்தாலும்,  உடனுக்குடன் அவர்கள் தாய்மொழியில் அச்செய்தி பெயர்த்து அளிக்கப்படுகின்றது. நூல்களும் அவ்வாறே பெயர்க்கப்படுகின்றன. புதிய சொற்களை,  குறியீடுகளை உடனே பெயர்ப்பதில் சிக்கல் இருந்தால்  மூலநூல் சொற்களையும்  குறியீடுகளையும் அப்படியே பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால்முறையாக அவற்றிற்குத்  தம்மொழியின் பெயர்ப்புச் சொற்களையும் குறியீடுகளையும் கண்டுபிடித்துப். பிறகு மொழிபெயர்த்த செய்தியில், நூலில் திருத்தம் செய்கின்றனர். 

   


தமிழ்நாட்டில் இந்தவகை ஏற்பாடு அறவே இல்லாததே தமிழ்வழிக்  கல்விக்குப் பெருந்தடையாக உள்ளது. 

முதலில் இன்றைய ஆட்சியாளர்களுக்குத் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவரவேண்டும் என்று அறிஞர் அண்ணாவுக்கு இருந்த உண்மையான உள்ளார்ந்த உணர்வு வேண்டும். 

தாய்மொழி தமிழ் ஆட்சிமொழியாக இருக்கும்பொழுது, ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருப்பது பயிருக்கு மேலாகத் தண்ணீர் தெளித்துவிட்டு வேரிலே வெந்நீர் பாய்ச்சும் செயலாகும். 

தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்ற அச்சம் மக்களிடம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டரசு, முதலில் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழின் பயன்பாட்டை நூற்றுக்கு நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்த வேண்டியது இன்றியமையாப் பணியும் கடமையுமாகும்.தமிழ் ஆட்சிமொழிஎன்ற சட்டமிருந்தும் முழுமையாக நடைமுறைப்படுத்தாத இன்றைய இழிநிலை போக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டரசின் வேலைவாய்ப்புகளில் இக்கால் இருபது விழுக்காடு தமிழ்வழிக்கல்வி பயின்றோருக்குத் தரப்படுகின்றது. ஆங்கிலம் இன்றியமையாது தேவைப்படும் ஒருசில பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் தவிர ஏனைய தொண்(டு)ப(த்)து விழுக்காட்டிற்கும் அதிகமான (>90%) வேலைவாய்ப்புகள் தமிழ்வழிக்கல்வி படித்தோர்க்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால், அரசு இதற்கு உறுதியான சட்டம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.

மேலும், மண்ணின் மைந்தர்க்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதை - தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு மக்களுக்கே முன்னுரிமை என்பதை - உறுதி செய்ய வேண்டும். தக்கவாறு சட்ட நுணுக்கங்கள் அறிந்து, இதற்குத் தேவையான புதிய சட்டங்கள் இயற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள், உடனடியாக எடுக்கப்படவேண்டும்.  இத்தகைய நடவடிக்கைகளால் தமிழரின் வேலைவாய்ப்புரிமையைக் காப்பாற்றி உறுதி செய்யவேண்டும்.

கல்வியின் பெயரால், மக்களைச் சுரண்டும் தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகள் அனைத்தையும் அரசு கையகப்படுத்த வேண்டும். கல்விநிலையங்களை அரசே நடத்தவேண்டும். ஆளுங்கட்சியினர் உள்ளிட்ட அரசியற்காரர்களே இப்பள்ளிகளை நடத்துவதால்தான் இதே நிலை, யார் ஆட்சிக்கு வந்தாலும் மாறாமல் இடையூறின்றித் தொடர்கிறது. தமிழுக்கு உண்மையில்


ஆக்கம் சேர்க்க நினைக்கும் முதலமைச்சர் துணிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டில், கல்வியின் பெயரால் கொள்ளையடிக்கும் தமிழரும் பிறமாநிலத்துக்காரரும் நயன்மன்றம் சென்றாலும் அவ் வழக்குகளைத் தக்கவகையில் கையாண்டு அவர்தம் முயற்சிகளை முறியடிக்கவேண்டும். 

ஆங்கிலவழிக்கல்வி வழங்கும் பள்ளிகளின் கட்டமைப்புக்குச் சற்றும் குறைவில்லா வகையில், மேம்பட்ட கட்டமைப்புகள் கொண்ட வகையிலும் தமிழ்வழிப் பள்ளிகள் இருக்கவேண்டும். 

தமிழ்வழிக்கல்வி நிலையங்களில் போதுமான ஆசிரியர்கள் குறைவின்றி அமர்த்தப்பட வேண்டும். தமிழ்வழிக்கல்வி ஏழைகளுக்கானது, ஒப்பீட்டில் தாழ்வானது, அறிவுக் குறைபாடாக்குவது என்பனபோலும் முற்றிலும் பொய்யான கருத்துப்பரப்பல்களை அரசு கொள்கைவிளக்கத் துறைகளின்வழி தக்கவாறு விளக்கமளித்து அறவே போக்கவேண்டும்.  

  அனைத்துத் துறைகளிலும் தமிழை வளர்ச்சியடையச் செய்தபின் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவரலாம் என்னும் சிலரின் கூற்று, நீச்சல் பழகியபிறகு நீரில் கால்வைத்து இறங்கலாம் என்னும் கூற்றுக்கு ஒப்பானதென்க. விரும்புவோர், ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் படிக்க வழிவகை செய்துதரலாம். ஆங்கில மொழியறிவு அல்லது பிறமொழியில் தேர்ச்சி தேவைப்படும் வேலைகளுக்குச் செல்ல விரும்புவோர் ஆங்கில மொழியையோ பிறமொழியையோ படித்துக் கொள்வதில் தவறில்லை. 

தமிழ்நாட்டரசு தமிழ்வழிக்கல்விக்காகத் தொடக்கத்தில் பெருந்தொகை செலவழிக்க வேண்டியிருந்தாலும், தயக்கம் காட்டாது அதற்கு ஒதுக்கீடு செய்ய முனையவேண்டும்.

                ஆள்வோருக்கு உண்மையாக தமிழுக்கு ஆக்கம் செய்யவேண்டுமென்ற மனம் வேண்டும்.மனமிருந்தால் வழியுண்டு’.         

              ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

             நீள்வினையால் நீளும் குடி.                                    - கு..1022               

                பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் 

                  அருமை உடைய செயல்.                                               - கு.975.

                

--------------------------------------------------------------------------------------------------------------


திங்கள், 28 ஏப்ரல், 2025

அகத்தியர் புரட்டு: தமிழ், தமிழர்க்கு எதிரான சூழ்ச்சி! - 2

 

அகத்தியர் புரட்டு:

தமிழ், தமிழர்க்கு எதிரான சூழ்ச்சி! - 2


இந்திய ஒன்றியஅரசின் கல்வி அமைச்சராக இருக்கும் தருமேந்திர பிரதான் என்பவர், அகத்தியமுனி, தமிழ் இலக்கியத்தை முதன்முறையாக எழுதியவர் என்றும் காசிக்கும் தமிழகத்துக்கும் இடையிலான சிறந்த இணைப்பாக இருந்தார் என்றும், செம்மொழி தமிழின் இலக்கியத்தில் அகத்தியரின் பங்கு அதிகமானது என்றும் தமிழ்மொழியில் அகத்தியர் பல நூல்களை எழுதியுள்ளார் என்றும் உரிய தரவுகள் சான்றுகளின்றிக் கூறியிருக்கின்றார்.

இரங்கத்தக்க நிலை! அவருக்குச் சொல்லித் தந்தவர் ஒன்றால் தமிழ் இலக்கியம் அறியாதவராக இருக்க வேண்டும் இன்றேல் வேண்டுமென்றே பொய் உரைத்திருக்கவேண்டும்! அகத்தியமுனி, தமிழ் இலக்கியத்தை முதன்முறையாக எழுதியவராம்! முதன் முறையாக இல்லாவிட்டாலும் இறுதியாகவேனும் ஏதாவது ஒரு கழக(சங்க)ப்பாடல் அவர் பெயரில் உண்டா? பத்துப்பாட்டில் ஏதேனும் ஒரு பாட்டேனும் எழுதியிருக்கின்றாரா? அன்றி எட்டுத்தொகைப் பாடல் தொகுப்புகளில் ஏதேனும் ஒரு பாடலாவது எழுதியுள்ளாரா? பதினெண் கீழ்க்கணக்கில், ஐம்பெரும்பாவியங்களில், பிற நூல்களில் கூட அவர் எழுதியதாக எதுவும் இல்லை.

அகத்தியர் பேரில் நிறைய கற்பனையான கட்டுக்கதைகள் பலகாலமாக நிலவிவருகின்றன. உரையாசிரியர்கள் அக்கதைகளின் உண்மையை ஆராயாமல் அவர் பெயரைக் கையாண்டுள்ளனர். அவ்வளவே! கழக(சங்க) இலக்கியங்களில் பாடல் ஆசிரியராக எங்கும் அகத்தியர் பெயர் இல்லவே இல்லை.

கழக இலக்கியங்களிலேயே பிற்காலத்ததென்று கூறப்படும் பரிபாடலில் ஓரிடத்தில் பொதியில் முனிவன்என்ற பெயர் காணப்படுகின்றது. (இலக்கியம் படைத்தவராக இல்லை). பரிபாடலில் வையை என்ற தலைப்புடைய பாடல் பதினொன்றில் 10-13ஆம் அடிகளில் கீழ்க்காணுமாறு உள்ளது.

மதிய மறைய வருநாளில் வாய்ந்த

பொதியில் முனிவன் புரைவரைக் கீறி

மிதுன மடைய…”

- இதன் பொருள், “இராகு மதி மறையும்படி வரும் நாளிலே, பொதியில் முனிவன் (அகத்தியன்) என்னும் மீன் உயர்ந்த தன் இடத்தைக்கடந்து மிதுன ராசியைச் சேர” – என்பதாகும். எனவே, ஒரு விண்மீனைக் குறிக்கும் பெயராக, பொதியில் முனிவன் என்ற பெயர் இடம் பெறுகிறது, அவ்வளவே!

புறநானூறு 201ஆம் பாடலில் வரும் வடபால் முனிவன்என்ற பெயர் அகத்தியரைக் குறிப்பதெனக் கூறிக்கொள்கிறார்கள். வடபால் முனிவன் தடவினுள் தோன்றிஎன்றது, சம்பு முனிவன் வளர்த்த வேள்வித் தழலில் வந்த வேளிர் மரபில் வந்தவன் (இருங்கோவேள்) என்பதைக் குறிப்பது. (தடவு வேள்வி) இதுவும் கற்பனையான பழங்கதையாகலின், ஆராய்ச்சிக்குரியதன்று என ஆய்வாளர் (ஞா.தே.பா.முதலியோர்) குறிக்கின்றனர்.

அகத்தியர் எழுதியதாக அகத்தியம் என்னும் ஓர் இலக்கண நூலைக் குறிப்பிடுகின்றனர். அந்நூல் தொல்காப்பியத்திற்கும் முந்தியது என்ற கதையும் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்ற கதையும் கூட உண்டு. இவற்றிற்கெல்லாம் எந்த அடிப்படைச் சான்றும் இல்லை. சில உரையாசிரியர்கள் அடிப்படைச் சான்று இலாது கூறப்பட்ட கதைகளை வைத்தே அகத்தியரைக் குறிப்பிட்டு எழுதியிருக்கின்றார்கள் என்று ஐயுற வேண்டியிருக்கின்றது. அந்தக் கதைகள் அறிவுக்கொப்பாத, அறிவியலுக்கொப்பாத கதைகளே.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நூற்றுக் கணக்கான சிறிய பெரிய படைப்புகள் முழுமையாகக் கிடைக்கின்றன. எழுநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை (மயிலைநாதர் காலம் வரை) தொடர்ந்து பலரது பார்வையில் பட்டதாகக் கூறப்படும் அந்த அகத்தியம் என்ற இலக்கண நூல் முழுமையாகவோ அன்றிச் சிதைந்தோ இதுவரை ஒரு சுவடி கூடக் கிடைக்காமல் போனது ஏன் என்றும் ஆய்வர் வினவுகின்றனர்.

சில நூல்களுக்கு உரையாசிரியர்கள் எழுதிய உரைகளில் மேற்கோளாகச் சில நூற்பாக்களைக் காட்டியுள்ளனர். அவ்வளவுதான். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்த அவ்வரைகுறை அகத்திய நூற்பாக்கள் எனக் கூறப்படுபவை சிறந்தவையாகக் கொள்ளக்கூடியன அல்ல என்பதுடன் அவை மிகமிகப் பிற்கால நடையை ஒத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அகத்தியர் இயற்றியதாக வேறு எந்த நூலும் தமிழில் கிடைத்ததாகத் தெரியவில்லை. அவர் பல நூல்கள் இயற்றியுள்ளார் என்று கூறுகிறவர்கள் அவற்றில் ஓரிரு நூல்களையும் கூடக் கூறுவதில்லை.

இவையுந் தவிர, தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரம் எழுதிய பனம்பாரனார், தொல்காப்பியர், முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்தார் என்றதோடு, ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று குறிப்பிட்டுக் காட்டுகையில் அகத்தியம் என்ற ஒரு பெயரைக் குறிப்பிடவே இல்லை. அறம்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு என எழுதிய பனம்பாரனார் அகத்தியர் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. இந் நிலையில் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்ற ஒரு கதையைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

முக்கழகத்தில் (முச்சங்கத்தில்) முதலிரண்டு கழகங்களிலும் அகத்தியர் இருந்தாரெனக் கதை கூறப்படுகின்றது. அவர் முதற் கழகத்தில் 4440 ஆண்டுகள் இருந்தார் என்றும் இரண்டாம் கழகத்தில் 3700 ஆண்டுகள் இருந்தார் என்றும், ஆக இரு கழகங்களிலும் 8140 ஆண்டுகள் அகத்தியர் ஒருவரே இருந்தார் எனவும் கூறுவது பொருந்துமாஎன்று ஆராய்ச்சியாளர் கா. நமச்சிவாயர் வினவுகின்றார்.

அகத்தியர் என்னும் சொல் தொல்காப்பியத்திலோ, கழக இலக்கியத்திலோ, சிலப்பதிகாரத்திலோ, நன்னூலிலோகூட இல்லை என்று குறிப்பிட்டோம். ஆனால், சிலம்பின் உரையாசிரியர்கள் அகத்தியரைப் பற்றிக் குறிப்பிடுவதைக் காண்கின்றோம். மணிமேகலையில் நாட்டில் நிலவிய கதையொன்றின் தொடர்பாக நேரிடையாக அகத்தியன் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது.

செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்

கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர

முனிவன் அகத்தியன் தனாது

கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை - என்னும் அடிகள் உள்ளன.

(இதன் பொருள்: சிவந்த கதிர்களையுடைய ஞாயிற்றின் வழித் தோன்றினோராகிய சோழர் மரபினை விளக்குமாறு உதித்த காந்தன் எனப் பெயரிய மன்னவன் நாட்டில் நீர்ப் பெருக்கினை விரும்பி வேண்டிக் கொள்ள, தேவ முனிவனாகிய அகத்தியன் தனது கமண்டல நீரைக் கவிழ்த்தலாற் போந்த காவிரியாகிய பாவை என்பதாகும்). எனவே, இக்கதை மணிமேகலைகாலத்திலேயே வழக்கில் இருந்திருக்கின்றது.

கம்பர் தம் இராமாயணத்தில், அகத்தியர் பற்றிய கற்பனைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இராமர் முதலியவர்களோடு தொடர்புபடுத்திச் சில இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். இவை தவிர பாரதத்திலும் பிற்காலப் பெரிய புராணம், கந்தபுராணம், மச்சபுராணம் முதலிய பழங்கதைகளிலும் (புராணங்களிலும்),  தேவாரப் பாடல்களிலும் அகத்தியர் பற்றிய கதைகள் காணப்படுகின்றன.

அகத்தியர்என்ற பெயரில், பலர் இருந்துள்ளனர் என்றும் ஆரிய அகத்தியர் வேறு,  தமிழ் அகத்தியர் வேறு என்றும் ஆய்வாளர்கள் வேறுபட்டுக் கருத்துரைக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில், கம்பர் காலக்கணக்கையும் கருத்தில் கொள்ளாமல் அகத்தியர் ஒருவரே எனக் கொண்டதாலும் அவர் குறித்த எல்லாக் கற்பனைக் கதைகளையும் உண்மை என ஏற்றதாலுமே தம் இராமாயணத்தில் அவரைப் பற்றிய கதைகளைச் சேர்த்துள்ளார். அவ்வாறே பாரத்திலும் அக்கதைகள் இடம்பெற்றுள்ளன.

கம்பஇராமாயணத்தின் மூல நூலாசிரியரான வான்மீகி அவருடைய இராமாயணத்தில் அகத்தியர் பொதிய மலையில் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டு இருக்கின்றார். இக் குறிப்பிலிருந்து அகத்தியர் தமிழ் முனிவர் என்பதும், இராமாயண காலத்திலேயே தென்னாட்டில் பொதியமலைச் சாரலில் வாழ்ந்து தமிழ் வளர்த்து வந்தார் என்பதும் பெறப்படுகின்றன என்றும் அவர் தமிழ் அகத்தியரேயாவர் என்றும் தமிழ்நாட்டவரேயாவர் என்றும் சில ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர்.

கந்தபுராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கச்சியப்பர் அந்த அகத்தியரைத் தமிழ்  அகத்தியர் என்றே குறிக்கின்றார். அவரை மலயத்து வள்ளல்என்றும், ‘தமிழ் மாமுனி ’  என்றும் கந்தபுராணம் காட்டுகின்றது. எனவே, ஒரு கதையின்படி அகத்தியர் சிவபெருமான் மணம் காணச் சென்றிருந்தாலும், அவர் தமிழ்நாட்டிலிருந்து சென்றார் எனக் கொள்ளல் வேண்டும் என்று அறிஞர் அ.மு.பரமசிவானந்தம் கூறுகின்றார்.

முன்பே குறிப்பிட்டவாறு, கா.சுப்பிரமணியப்பிள்ளை அகத்தியர் இருவர் என்று கூறுகிறார். மறைமலையடிகள், மிகப்பழங்காலத்தே இருந்த அகத்தியர் தமிழ்நாடு புகுந்தவரல்லர் என்றும் அவர் தமிழ் அறிந்தவரும் அல்லர் என்றும் கூறுகிறார். அகத்தியர் பலர் என்று ஆய்வாளர் கா.நமச்சிவாயர், துடிசைகிழார் அ.சிதம்பரனார், இரா.இராகவையங்கார் முதலானோர் கூறுகின்றனர். அகத்தியர் இருவராய் இருக்கலாமோஎன வி.எ.சுமித்துஎன்னும் ஆய்வாளரும் ஐயுறுகிறார். (The oxford History of India, by V.A. Smith .p.42 1958 Edition).

அறிஞர் ஆ. சிவலிங்கனார் அகத்தியர்கள்என்னும் அவருடைய ஆய்வுநூலில், ”அகத்தியர் ஒருவர் அல்லர். நால்வருக்கு மேற்பட்டு இருந்திருத்தல் வேண்டும், அவருள் தமிழ் அகத்தியர் இருவர். ஆரிய அகத்தியர் இருவர். இந் நால்வருமே சிறந்தவர்கள். பிற அகத்தியர்களும் இருந்திருக்கின்றனர்என்று கூறுகிறார்.

ஆய்வாளர் முனைவர் ப.தங்கராசு, “அகத்தியர் என்னும் பெயருடையோர் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் பலர் வாழ்ந்துள்ளனர்; இவர்களுள் தமிழகத்தில் அகத்தியர் பெயரால் எழுவர் இருந்துள்ளனர். வடநாட்டில் வேத காலத்திலும், பாரத, இராமாயண காலத்திலும் அகத்தியர்கள் இருந்துள்ளனர். இவர்கள் ஆரிய அகத்தியர்கள் என்றும்,வட நாட்டில் மட்டுமின்றி, கம்போதியா, சாவகம் போன்ற கீழை நாடுகளிலும் அகத்தியர்கள் வாழ்ந்துள்ளனர்என்றும் கூறுகின்றார்.

பி.தி.சீனிவாசையங்கார், “சமசுகிருத நூல்களில் இசுவாகு காலம் முதல் கிருட்டினன் காலம் வரையில் கூறப்படும் அகத்தியர்கள், வசிட்டர்கள், விசுவாமித்திரர்கள் ஒரு தனி அகத்தியர், விசுவாமித்திரர் வசிட்டர்களைக் குறிப்பனவல்ல. அவை குடும்பப் பெயராகப் பலருக்கு வழங்கிய பெயர்களாகும். அப் பெயர்கள் குடும்பப் பெயரேயன்றித் தனிப்பட்டவர்களுக்குரிய பெயர்களல்லஎன்கிறார்.

(One of the most illuminating suggestions of his (Partigers) is that the Agastyas, Vasisthas, and Viswamitras mentioned in the Sanskrit works were not each one man who baffles the reader by appearing and reappearing in every age from that of Iksvaku to that of Sri Krishna: History of the Tamil-P. liv-P. T. S. Iyengar.)

துடிசைகிழார் அ.சிதம்பரனார், “அகத்தியர் என்னும் பெயர் அடைகொடுக்கப்பட்டு வழங்காததால், நூலாசிரியர்களும் உரையாசிரியர்களும் பலநாட்டு அகத்தியர்களுடைய வரலாறுகளை ஒரே அகத்தியர் வரலாறு என்று கருதி, நூல்களிலும் உரைகளிலும் எழுதிவிட்டார்கள். படிப்பவர்களும் பிரித்து அறிந்து படிப்பதில்லை. இப்படிப் பல அகத்தியர்களுடைய வரலாறுகள் ஒன்றுபட்டுக் கிடப்பதால், சில புலவர்கள் அகத்தியர் என்னும் பெயர் உடையவர் பலர் இருந்திருக்க வேண்டும் என்று முடிவுகட்டுகிறார்கள். இது சரியான முடிவே ஆகும்என்று எழுதியுள்ளார்.

இன்னுஞ் சிலர், அகத்தியர்கள் முனிவர், சித்தர், சோதிடர், மருத்துவர், மெய்யியல் ஞானி, மொழிஅறிஞர் என்று அறுவரென்று எவ்வகைத் தரவுகளும் சான்றுகளும் இன்றிக் கூறி வருகின்றனர். ஆனால், செம்மொழித் தமிழ் நிறுவனத்தின் பண உதவியில் ஆங்காங்கே நடைபெறும் அகத்தியக் கருத்தரங்கங்களில் உரை நிகழ்த்துவோர், செய்தி ஊடகங்களில் கட்டுரைகள் வடிக்கும் தினமணிவகையார் ஆகிய மேதைகளும் கோதைகளும் ஒன்றிய அமைச்சர் ஒப்பித்ததைப் போல, அகத்தியர் ஒருவரே எனக் கருத்திற் கொண்டு அவரைப் பன்முகத் திறனாளியாகக் கட்டமைத்துக் கூறி வருகின்றனர்.

சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழையும் பாணினிக்குச் சங்கதத்தையும் (வடமொழி) கற்றுக்கொடுத்தான் என்ற கதை உள்ளது. அகத்தியர் முருகப்பெருமானிடம் தமிழ் கற்றவர் என்ற பெருமையை உடையவர் என்று இன்னுமொரு கதையும் இருக்கிறது. ஆனால், ஒன்றிய அமைச்சர் தருமேந்திரப் பிரதான், அகத்தியரிடம்தான் முருகன் தமிழ் இலக்கணம் கற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது என்று புதுக்கதை விடுகின்றார்.

நாவலர் சோமசுந்தர பாரதியார், “சிலர் அகத்தியரன்றோ தமிழ் மொழியை உண்டாக்கினார் என்று நினைக்கலாம். சிலர் வடமொழியும் தமிழ்மொழியும் சிவபெருமானானல்லவோ தோன்றின என்று எண்ணலாம். கடவுள் மொழிகளை உண்டாக்கினார் என்று கூறுவதை விட மொழிகள் கடவுளர்களை உண்டாக்கின என்று கூறுவது சாலப் பொருந்தும். புராணேதிகாசங்கள் பாடினோர் மக்கள் மனத்தகத்துப் பத்திப்பயிர் விளைப்பான், எல்லாம் கடவுளால் தான் உண்டாயிற்று என்று கூறுவர். அவர்கள் அங்ஙனம் கூறார்களெனின் அவர்கள்  பாடும் புராணக் குவியல்கள் பயனிலவாய் ஒழியும் என்று எழுதியுள்ளார். (தமிழும் தமிழரும் பக். 100)

செல்வகேசவராய முதலியார் க.மு. அவர்கள், “அகத்தியர் தமிழைத் தாமே படைத்தாரென்பது எவ்வாற்றானும் பொருந்தாது. ஒரு பாஷையை ஒருவர் உண்டாக்கினாரென்பது பாஷா தத்துவ சாத்திர முடிவுக்கு முற்றும் முரண்பாடாகும். கடவுட்டன்மை ஒருவற்கேற்றி அவன் தானாகவே ஒரு பாஷையைச் சிருஷ்டித்து இலக்கியங்களையும் உண்டாக்கிப் பலரும் பயிலச் செய்தான் என்பது பிரகுர்தி விரோதமான அசம்பாவிதமே யாகும். இலக்கியம் கண்டதற் கிலக்கணம் இயம்பல்”, பன்னாட்டிலுள்ள பாவலர்க்கும் நாவலர்க்கும் உடன்பாடாயிருப்ப அகத்தியர் தாமே இலக்கியம் கற்பித்து இலக்கணமும் இயற்றினாரென்பது பொருந்துமா?” என்கின்றார்.

வி.கோ.சூரியநாராயண சாத்திரியார் அவர்கள் தமிழ் மொழியின் வரலாறு என்னும் நூலிற் கூறுவது: -- தமிழ்ப்பாஷையின் தோற்ற விஷயமாக யாம் மேற்கூறிப் போந்தன அனைத்தும் எவ்வாறு கருதப் படினும் படுக. கருத்துக்கள் தன் முயற்சியானெழும் ஒலிகளின் சம்பந்தமாகவே வெளிப்படுகின்ற இயல்பினின்றுமே பாஷைகளுண்டாத லியலும் என்பது யாவரும் மறுக்கமுடியாததோர் பாஷைநூ லுண்மை. இவ் வுண்மையை யொட்டியே தமிழ்ப்பாஷையின் தோற்றமும் ஏற்பட்டிருத்தல் மிகவும் கவனிக்கற்பாலதே. ஈதிவ்வாறாகத் தமிழ் நூலாசிரியர் பலரும், இக் காலத்தினும் ஆங்கிலநூற் பயிற்சியில்லாத நண்பருட்சிலரும் தமிழ்மொழியும் வடமொழியும் தேவபாஷைக ளென்றும் இவ்விரண்டும் முறையே அகத்தியனார்க்கும் பாணினியார்க்கும் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டன என்றும் கூறாநிற்பர்.

உ. வே. சாமிநாதய்யர் கூற்று: இவர் (அகத்தியர்) வருவதற்கு முன்னரே இந் நாட்டிலிருந்த தமிழையும் அதனிலக்கணத்தையும் இவர் தந்தாரென்று கூறியிருப்பது உபசாரவழக்கு என்பதாகும். (சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்)

சில மெய்யியல் நூல்களையும், மருத்துவ நூல்களையும், கணிய (சோதிட) நூல்களையும் அகத்தியர் எழுதியதாகக் கூறி வருகின்றனர். (அகத்தியர் கருப்பசூத்திரம், அகத்தியர் மருத்துவம், அகத்தியர் செந்தூரம், சமரச நிலை ஞானம், அகத்தியர் ஐந்து சாத்திரங்கள், வாகடம், பூசாவிதி, இரசவாத சூத்திரம் எட்டு முதலிய பல) இவர் எழுதிய நூல்களாகக் கூறப்படுவனவற்றின் பெயர்களைப் பார்த்தாலேயே இவை மிகவும் பிற்கால நூல்கள் எனத் தெரிகின்றன என்றும் இவர் எழுதியதாகக் கூறப்படும் நூல்களின் பாடல்களில் பயின்றுவந்துள்ள சொற்கள் இவரைப் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல்வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்ட பிற்கால நூல்களின் ஆசிரியராக ஓர் ஈர்ப்புக்காக அகத்தியர் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலக்கட்டத்தைச் சார்ந்தவர்கள், வெவ்வேறு இனத்தைச் சார்ந்தவர்கள், வெவ்வேறு நம்பிக்கை கொண்டவர்கள் என்ற கருத்தும் ஆய்வறிஞர்களால் முன்வைக்கப்படுகின்றன.

ஒன்றிய அமைச்சர், தமிழ் அரசர்களான சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் குலகுருவாகவும் அகத்தியர் இருந்துள்ளார் என்று கூறியிருக்கின்றார். உண்மை என்னவென்றால் வேள்விக்குடிச் செப்பேட்டிலும் சின்னமனூர் செப்பேட்டிலும் பாண்டிய மன்னர்களின் சடங்காளராக(புரோகிதராக)வும் குலகுருவாகவும் அகத்தியரைக் கொண்டிருந்தனர் என்றும் பாண்டியர்கள் நிலங்களைப் பார்ப்பனர்களுக்குத் தானமளித்ததாகவும் குறிப்புள்ளது என்கின்றனர். இவை பிற்காலச் செய்திகளே. வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் திரு.கணியன்பாலன் முதலானோர் செப்பேட்டுச் செய்திகள் நம்பத்தன்மையற்றவை என்று கூறுவதும் எண்ணத் தக்கதாகும்.

முனைவர் ப.தங்கராசு, “அகத்தியர் என்னும் பெயருடையோர் தென்னிந்தியாவினின்று கீழை நாடுகளுக்குச் சென்று கம்போதியாவில் இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் பரப்பியதோடு அரச பரம்பரையையும் தோற்றுவித்துள்ளனர். சாவகத்தில் முதன் முதலில் சிவன் கோயிலைக் கட்டியவர் பாண்டியநாட்டினின்று சென்ற, அகத்தியர் என்றறிய முடிகிறதுசாவகத்திலும், பாலியிலும் அகத்தியர் பெயர் சத்தியம் செய்வதற்கு உரிய பெயராகப் பயன் படுத்தப்பெற்றுள்ளது.என்கிறார்.

இச் செய்திகளைக் கொண்டே அமைச்சர் தருமேந்திர பிரதான், அகத்தியர் வழிபாடுகள் கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, சாவா, கம்போடியா, மற்றும் வியத்நாமில் நடத்தப்படு கின்றன என்கின்றார்.

இனி, எழுத்தாளர் மாலன் வகையாரின் அகத்தியர் தொடர்பான கருத்துகள் உள்ளீடற்றவையா யிருப்பதைத் தக்க சான்றுகளுடன் காட்டுவோம். அகத்தியர் பற்றி இதுவரை வந்துள்ள ஆய்வுநூல்கள் என்னென்ன என்றும் அவை கூறும் ஆய்வுமுடிவுகள் பற்றியும் சுருக்கமாகக் காண்போம்.

(அகத்தியர் புரட்டுதொடரும்)



கல்விக்கொள்கை: ஒரு மொழியா? இருமொழியா? மும்மொழியா? எது சரி?

 

கல்விக்கொள்கை: ஒரு மொழியா? இருமொழியா? மும்மொழியா? எது சரி?


ந்தியாவில், ஆங்கிலேயர் ஆண்ட காலம் முதலே, 1938-க்கு முன்பிருந்தே இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களிடம் வலிந்து இந்தியை எப்படியும் திணித்தே தீர்வது என்ற முயற்சி, இந்திக்காரர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழின் அழிவுக்கு வழிவகுக்கும் இந்தித் திணிப்பைத் தமிழர், உயிரீகம் உட்பட பலவகை ஈகம் செய்து எதிர்த்தும் இந்தித்திணிப்பு முயற்சி நின்றபாடில்லை. இந் நிலையையே பாவலரேறு பெருஞ்சித்திரனார்,

ஆயிரந் தடவை இந்தியை அழித்தோம்!

ஆயிரந் தடவை மீண்டும் எழுதினர்!

ஆயிரந் தடவை இந்தியை எதிர்த்தோம்!

ஆயிரந் தடவையும் மீண்டும் புகுத்தினர்!

எந்தவோர் தடவையும் எதிர்த்த எதிர்ப்பால்

இந்தி நுழைவு நின்றதும் இல்லை;

இந்திய மடயர்கள் அதிர்ந்ததும் இல்லை! - என்று பாடுவார்.

இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் என்பது இந்திய ஒன்றியத்தில் தமிழ்மொழியின், தமிழரின் அதிகார அடிப்படையிலான நிலை தொடர்பானது. இந்தித்திணிப்பு, தமிழரை இந்தியாவின் இரண்டாம்நிலைக் குடியினராக்கும் முயற்சியாகவே கருதுகின்றோம்.

காலந்தோறும் வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு வடிவங்களில் இந்தித் திணிப்பு முயற்சி தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தை (தமிழரின் வரிப்பணம் உட்பட) வாரி இறைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த முயற்சியில் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் கொஞ்சம் முன்னேற்றமும்


 அடைந்திருக்கின்றார்கள். அது அவர்களுக்கு நிறைவளிக்கவில்லை. இப்போது, மிகத் தந்திரமாகப் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டம் என்ற உருவில் கொண்டுவந்துள்ளனர்.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மொழிப்பாடம் பற்றிய வரலாற்றை அறிந்தால்தான் மேற்கூறிய செய்திகளின் உண்மை தெளிவாகப் புரியும். சி.இராசகோபாலாச்சாரி தலைமையில் இந்திய தேசியப் பேராயக் கட்சியின்  (INC) முதல் அரசாட்சி நடந்துவந்தது. அந்த ஆட்சி சென்னை மாகாணப் பள்ளிகளில் 1937ஆம் ஆண்டு, கட்டாய இந்தி கற்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. அதை எதிர்த்து  முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி, மூன்றாண்டுக்காலம் நடைபெற்றது. இப் போராட்டத்தில், உமாமகேசுவரனார், சோமசுந்தரபாரதியார், பெரியார் ஈ.வெ.இரா., மறைமலையடிகள், கி.ஆ.பெ.விசுவநாதம், பாவேந்தர், சவுந்தரபாண்டியனார், திரு.வி.க., அண்ணாத்துரை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் முதலிய தலைவர்களும் பெண்கள், இளைஞர் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இப்போராட்டம் உண்ணாநோன்புகள் , மாநாடுகள், பேரணிகள், மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. அரசின் கடும் அடக்குமுறையின் விளைவாகத் தளைப்பட்டுச் சிறையிலிருந்த இரண்டு போராளிகளான தாலமுத்துவும் நடராசனும் உயர்நீத்தனர். பெண்கள் சிறுவர்கள் உட்பட 1,198 பேர் தளைப்படுத்தப் பட்டனர். 1939இல் இராசகோ பாலாச்சாரி அரசு பதவியிலிருந்து இறங்கியது. பின்னர்த் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்கிய மதராசு மாகாண ஆளுநராக இருந்த சான் எருசுகின், இந்தி கட்டாயம் என்ற உத்தரவை 21-02-1940-இல் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

அடுத்து, இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1948-ல் ஓ.பி.இராமசாமியார் மதராசு மாகாண முதல்வராக இருந்தபோது பள்ளிகளில் இந்தியை விரும்புபவர் விருப்பப் பாடமாகப் படிக்கலாம் எனக் கொண்டுவந்தபோது எழுந்தது. அப்போதும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து அறிவிப்பைத் திரும்பப் பெற்றுவிட்டார். 

மூன்றாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆங்கிலத்தை முற்றாகத் தவிர்த்துவிட்டு, இந்தியை மட்டும் அலுவல்மொழியாக்க முனைந்தபோது எழுச்சியுற்றது. இந்தி மட்டும் அலுவல்மொழியாக வேண்டும் என்பதில் இந்தியத் தேசியத் தலைவர்கள் காந்தி, நேரு, பட்டேல், அம்பேத்கர், சி.இராசகோபாலாச்சாரி முதலிய அனைவர்க்கும் ஒருமித்த கருத்து இருந்தது.

இந்தியா குடியரசு ஆனதன் பதினைந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்திய ஒன்றியத்தின் ஒரே அலுவல் மொழியாக இந்தி திணிக்கப்பட்டதைப் பல இந்தி பேசாத மாநிலங்கள் எதிர்த்தன. 1965 சனவரி 26ஆம்நாள் நெருங்கநெருங்க, சென்னை மாநிலத்தில் பெருமளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதால் போராட்டம் வேகம் பெற்றது. மாநிலம் முழுவதும் போராட்டம் பரவியது. காவல் துறையின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பேரணிகள், மறியல்கள், வன்முறை, தீவைப்பு, தடியடி, துமுக்கிச் சூடுகளும் தடையின்றித் தொடர்ந்தன. உணர்ச்சி வயப்பட்ட சிலர் தங்களைத் தீயிற்கு இரையாக்கி உயிர்ஈகம் செய்தனர்.

பேராயக்கட்சியின் முதல்வர் பக்தவச்சலம் தலைமையிலான மாநில அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க நாட்டின் பாதுகாப்புப் படையினர் தமிழகத்தில் இறக்கப்பட்டனர். காசுமீருக்கு அடுத்தபடியாக நாட்டின் பாதுகாப்புக்கான படை உள்நாட்டில் இந்தப் போராட்டத்தை ஒடுக்குவற்கே தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டது. போராடும் மாணவர்களை வரைமுறை இல்லாமல் கடுமையாகத் தாக்கி அடக்கமுயன்றனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் பலவேறு ஊர்களில் துமுக்கிச்சூட்டால் கொல்லப்பட்டனர். இரண்டு காவலரும் பலி ஆயினர். நிலைமை கட்டுமீறி மோசமானதை உணர்ந்த அப்போதைய இந்திய ஒன்றியத் தலைமை அமைச்சர் இலால்பகதூர் சாத்திரி இறங்கி வந்து,  இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும் என்ற உறுதியளித்தார். இதன் பிறகு அடக்குமுறைகளும் மாணவர் போராட்டமும் தணிந்த.

இந்திஎதிர்ப்புப் போராட்டம் மாநிலத்தில் அரசியல் மாற்றத்திற்கு வழிவகுத்தது.  1967 சட்டமன்றத் தேர்தலில்,  திமுக வெற்றிபெற்றது. அதன் பின்னர்ப் பேராயக்கட்சி தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. இந்தியையும் ஆங்கிலத்தையும் அலுவல் மொழிகளாகக் காலவரையின்றிப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, இந்திரா காந்தி  தலைமையிலான இந்தியஅரசால் அலுவல் மொழிகள் சட்டம் 1967இல் திருத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில், முதல்வர் அண்ணா, மும்மொழிக் கொள்கை நீக்கப்படும்; தமிழும் ஆங்கிலமும் மட்டுமே கற்பிக்கப்படும்; ஐந்து ஆண்டுகளுக்குள் எல்லாக் கல்லூரிகளிலும் தமிழ் மூலமே பயிற்றுவிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்; அரசின் எல்லாத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் விரைவுபடுத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அண்ணாவின் காலத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஆங்கிலவழி கற்பிக்கும் தனியார் பள்ளிகள் புற்றீசலெனப் பெருகிப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணித்து மக்களின் பணத்தையும் சுரண்டி வருகின்றன. மறைமுமாக இந்தித் திணிப்புக்கும் துணைநின்று வருகின்றன. 

இப்போது, புதிய கல்விக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை, பி.எம்.சிரி. (PM SRI) பள்ளிகள், நவோதயா பள்ளிகள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (சமக்கரா சிக்குசா அபியான்), நடுவக் கல்வியகங்கள் (கேந்திர வித்தியாலயா) என்னும் பல பெயர்களில் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க மும்முர முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவற்றில், நவோதயா பள்ளிகள், நடுவக் கல்வியகங்கள் (கேந்திர வித்தியாலயா) என்னும் பள்ளிகளில் இந்தி திணிக்கப்பட்டு விட்டது. அங்கு தமிழ்ப்பாடம் அறவே இல்லை. முன்னரே குறிப்பிட்டவாறு தனியார் பள்ளிகளிலும் இந்தித் திணிப்புக்கு வழிசெய்யப்பட்டுள்ளது.

இந்திய ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியைப் பெற, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் (மும்மொழித் திட்டத்தை ஏற்கவேண்டும்) என்றும், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் பேசிய இந்தியக் கல்வி அமைச்சர் தருமேந்திர பிரதான் என்பாரின் செருக்குப்பேச்சு தமிழர்களைக் கொதிப்படைய வைத்தது. தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய உருவா 2,152 கோடி நிதியை இந்திய அரசு இன்னும் வழங்கவில்லை.

நாட்டிலுள்ள குடிகள் தம் தாய்மொழியைக் கட்டாயம் படித்தாக வேண்டும். அது இன்றியமையாதது; மக்கள் அனைவர்க்குமானது. இரண்டாவதாக ஒரு மொழியைப் படிக்க வேண்டிய நிலை அனைவர்க்குமானது இல்லை. தேவைப்படுவோர்க்கும் விருப்பப்படுவோர்க்குமானது. மக்கள் எல்லோர்க்கும் இரண்டாம் மொழி தேவையில்லை.

உருசியா, சீனா, பிரான்சு, சப்பான், கொரியா முதலிய நாடுகளில் மக்கள் அனைத்து அறிவியலையும் நுண்கலைகளையும் கூடத் தம் தாய்மொழி வழியே படித்து முன்னேறி உலகின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகின்றனர். நோபல்பரிசு பெற்ற பல அறிஞர்களுக்கு அவர்கள் தாய்மொழியைத் தவிரப் பிறமொழி தெரியாது என்பது உண்மையாகும்.

மேற்கூறிய நாடுகளில் உலகின் எந்த மூலையில் எந்த மொழியில் புதிய அறிவியல் செய்தியோ பிறதுறைச் செய்தியோ வந்தாலும் உடனுக்குடன் அவர்கள் தாய்மொழியில் அச்செய்தி பெயர்த்தளிக்கப்படுகின்றது. நூல்களும் அவ்வாறே பெயர்க்கப் படுகின்றன. புதிய சொற்களை, குறியீடுகளை உடனே பெயர்ப்பதில் சிக்கல் இருந்தால் மூலநூல் சொற்களையும் குறியீடுகளையும் அப்படியே பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், முறையாக அவற்றிற்கான தம்மொழியின் பெயர்ப்புச் சொற்களையும் குறியீடுகளையும் கண்டுபிடித்து பிறகு மொழிபெயர்த்த நூலில், செய்தியில் திருத்தம் செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் இந்தவகை ஏற்பாடு அறவே இல்லாததே தமிழ்வழிக் கல்விக்குப் பெருந்தடையாக உள்ளது. இங்கு மாநில அரசிலும் இந்திய ஒன்றிய அரசிலும் பதவிக்கு வருவோர் இதில் கருத்துச் செலுத்துவதே இல்லை. ஆனால், தமிழில் அறிவியல் நூல்கள் இல்லை என்று மொழியின் குற்றமாகக் கூறும் போக்கைக் காண்கிறோம்.

தமிழ் அந்த நிலையை அடைய ஏற்பாடு செய்யும் வரை உலகளாவிய ஒரு மொழியை, அண்மைக்கால அறிவியல் முன்னேற்றம்வரை அறிந்துகொள்ள உதவும் ஒரு மொழியை, உலக இலக்கியங்களில் பெரும்பாலனவற்றை அறிய உதவும் ஓரு மொழியை, உலக மக்களில் பெரும்பாலாரோடு தொடர்பு கொள்ள உதவும் ஒரு மொழியை இரண்டாம் மொழியாகப் படிக்கலாம் என்று மக்கள் நலம்நாடும் நல்லறிஞர்கள் முடிவுசெய்ததின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகின்றது.

இன்னொரு மொழியைப் படிப்பது தேவை என்ற நிலையினரான மொழிபெயர்ப்பாளர், மொழி ஆய்வாளர் முதலியவர்கள் அவரவர்க்குத் தேவையான மொழியைத் தேர்ந்து படிப்பதில் தவறில்லை. அப்படித்தான் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும் அப்பாத்துரையாரும் சோமசுந்தர பாரதியாரும் மறைமலையடிகளும் பூரணலிங்கமும் பிறரும் பல மொழிகளைக் கற்றனர்.

இனி, மூன்றாம் மொழி படிக்கவேண்டும் என்பதும் அவரவர் விருப்பத்தையும் தேவையையும் பொருத்ததாகும். விருப்பம் உடையோர், மூன்றாம் மொழி மட்டுமன்றி இன்னும் எத்தனை மொழிகளும் கற்கலாம். அதனை யாரும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டு இந்திப் பரப்புரை அவையில் விரும்புவோர் தடையின்றி இந்தி படிப்பதைப் பார்க்கின்றோம்.

ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லாரும் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்கவேண்டுமென்று வலியுறுத்துவது, கட்டாயப்படுத்துவது, மாந்த உரிமைகளை மதிக்காத போக்காகும். இவ்வுலகில் அறிந்துகொள்ள வேண்டிய பல்வேறு அறிவுநிலைகள் இருக்கும்போது குறுகிய வாணாள் கொண்ட மாந்தரைத் தேவையற்ற நிலையில் மூன்றாவதாக, நான்காவதாக மற்ற மொழிகளைக் கற்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்துதல் அவர்களுக்குக் கூடுதல்சுமை ஏற்றும் செயலாகும்.

இந்தியாவில் எல்லாரும் இந்தியை, சமற்கிருதத்தைக் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தந்திரமான கல்விக் கொள்கை வழியாகத் திணிக்கப்படுவது மாந்தஉரிமை மீறும் செயலாகும். தமிழகத்துச் சிற்றூரிலுள்ள சிறுநில உழவர் இரண்டாம் மொழி ஆங்கிலம் படிப்பதே அதிகமாகும்.  

இனி, இந்த இந்தியநாட்டில் ஒற்றுமை, ஒரேநிலைஎன வலியுறுத்தி ஏமாற்றுவோர் அப்படி உண்மையிலேயே ஒற்றுமையை, ஒரே நிலையைக் கடைப்பிடிக்கின்றனரா? தமிழரை மூன்று மொழி படிக்க வேண்டுமென்று வலியுறுத்துவோரும் அவர்க்குத் துணைபோவாரும், உத்தரப்பிரதேசம், பீகார் முதலிய மாநிலங்களில் கடைப்பிடிக்கும் நிலை தெரியாதவர் என்று சொல்ல முடியாது. அங்கெல்லாம் இரண்டாம் மொழியே படிக்கும் நிலை இல்லை. இரண்டாம் மொழி சொல்லிக் கொடுக்கவே மிகப்பல இடங்களில் ஆசிரியர்களே இல்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கின்றது. இது நாமே வலிந்து கூறும் செய்தியன்று. முன்னாள் இந்திய ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் தெளிவுபடுத்திய நிலையாகும். ஒரே நிலைவற்புறுத்தும் பேர்வழிகளின் ஏமாற்றுச் செயலாகவன்றோ இஃது இருக்கின்றது!

எனவே, தமிழர்களில் பலருக்கும் ஒருமொழிக் கொள்கையே போதும். அந்த ஒருமொழிக் கொள்கை நடைமுறைக்கு வரும்வரை, அதற்கான ஏற்பாடுகளை ஆட்சியாளர் முறையாக முயன்று செய்யும்வரை நாம் இருமொழிக் கொள்கையை நிறைவில்லா மனத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆனால், மும்மொழிக் கொள்கை என்ற மோசடிக் கொள்கை தமிழர்க்கு அறவே தேவையற்றதும் ஏற்கவேண்டாத சுமையுமாகும் என்பதுடன் நம்மை அடிமை நிலைக்குத் தள்ளும் முயற்சியாக உள்ளதென்றும் நற்றமிழ் வலியுறுத்துகின்றது.


 14-4-2025 நாளிட்ட புதுவை 'நற்றமிழ்' இதழில் வந்தது.

-----------------------------------------------------------------------------------