வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

அந் நன்னாள் விரைந்திடுக!

 (திருவெண்ணெய் நல்லூர்ப் புலவர் க.கதிர்வேலு   தம் தமிழ்ச்சோலைஎன்னும் இதழுக்குப் பாடல் கேட்டபோது எழுதித்தந்த பாடல் இது)

அந் நன்னாள் விரைந்திடுக!

       

உலகமுதன்  மொழியென்றே ஓர்ந்தாய்ந்தோர் தமிழினுயர்

வுரைக்கக் கண்டோம்!

உலகமுதல் நாகரிகம் ஒள்ளாய்வால் தமிழரதென்

றுறுதி செய்வர்!

உலகுயிர்பால் அன்பருளும் உயர்மானம் கொடைவீரம்

ஓம்பும் பண்பும்

உலகினிலே இயல்பாகக் கொண்டிருந்த இனமிதென

உரைக்கும் நூல்கள்!

 

பெருமையெலாம் மிகஅடுக்கிப் பேச்சாலே கவர்ந்தவர்கள்

பெற்ற ஆட்சி

திருடுதற்கும் கொள்ளைக்கும் திகழ்வாய்ப்பாய்க் கொண்டிங்கே

தீமை எல்லாம்

பெருகிடவே செய்தனரே! பிறங்கடைகள் தாய்மொழியைப்

பேணாப் போக்கில்

கருகிடவே விட்டனரே கறையற்ற சிறப்பெல்லாம்

கரைய விட்டே!

 

இன்றுள்ள தமிழர்நிலை எண்ணிடுவீர்! இயல்பாக

இவர்கள் பேச்சில்

ஒன்றலுறப் பிறமொழிகள்! ஒழிந்ததுதாய் மொழிவழியே

ஓதும் வாய்ப்பும்!

சென்றுதொழுங் கோவில்கள், செப்பிவழக் காடுமன்றம்

சேர எல்லாத்  

துன்றாட்சித் துறைகளிலும் தொகுப்பாகத் தமிழிலையே,

தொலைந்த தந்தோ!


 

பண்பாடும் நல்லொழுங்கும் பார்போற்றும் நல்லறங்கள்

பலவும் சொன்ன  

மண்ணிற்கே உரியவுயர் மாண்பெல்லாம் படிப்படியாய்

மறையச் செய்தே

கண்கெடுக்கும் இருதிரையின் காட்சியெலாம் தமிழர்தம்

கருத்தில் மாசு

மண்டிடவே புகுத்துநிலை மட்டின்றி நடக்கிறதே

மயக்கத் தாழ்த்தி!

 

ஆற்றுரிமை நெகிழ்ந்ததுவே! அணுத்தீமை கொடுவுலைகள்

அமைத்த தோடே

ஊற்றுநீர் நிலவளத்தை உறிஞ்சிடலும் நடக்கிறதே

ஊக்கத் தோடே!

மாற்றமிலா ஒட்டார மனத்திலிந்தி சமற்கிருதம்

வளர்த்தற் கென்றே

தேற்றமுறச் செயற்பாடு! தீந்தமிழை அழிப்பதற்கும்

திட்டம் உண்டே!

 

 எந்தநிலை யானாலும் எல்லாரும் சமமென்றே

இங்கே வாழ

செந்நெறியில் அமைவிலையால் சீறியெழுந் துரிமைபெறச்

சிறந்த ஈகச்

செந்தமிழ இளையோரின் செழும்படையொன் றமைத்திடுக

செப்ப மாக!

அந்நன்னாள் விரைந்திடுக! அந்தமிழர் அரசமைக!

ஆக்கம் சேர்க!

பெரியாரும் தமிழும்

                                   பெரியாரும் தமிழும்

(பாவலரேறு பெருஞ்சித்திரனார் பெரியார் பற்றிக்  கூறியவற்றில் தேர்ந்தெடுத்த பகுதிகள் அடங்கிய விளக்கவுரை)

இக்கால் பெரியார் ஈ.வெ. இராமசாமியாருடைய தமிழ் மொழி பற்றிய கருத்துகள் பற்றியும், குமுகாயச் சீர்திருத்தக் கருத்துகள் பற்றியும், தமிழக விடுதலை குறித்த கருத்து பற்றியும் பிற கருத்துகள் பற்றியும் பலராலும் பரவலாகப் பேசப்பட்டும் உறழாடப்பட்டும் வருகின்றன.

பெரியாரின் தொண்டு பற்றியும் தமிழைப் பற்றிய அவருடைய கருத்துகளைப் பற்றியும் இளைய தலைமுறையினர் உண்மையான செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரியாரைப் பற்றி 1958 முதல் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தேவையானபோதெல்லாம் எழுதியிருக்கின்றார். பெரியாரைப் பாராட்ட வேண்டிய நேரங்களில் வேறெவரையும் விடப் பாராட்டியும் அவருடைய கருத்துகளில் எதிர்த்துக் கண்டிக்க வேண்டியவற்றை யெல்லாம் வேறெவரினும் துணிவாகக் கண்டித்தும் பரவலாகத் தெளிவாக எழுதியுள்ளார்.

அவர் பெரியார் பற்றிப் பாராட்டியும் போற்றியும் எழுதியுள்ள சிலவற்றைப் பார்ப்போம்:

(1958இல் தமிழ்நாடு நீக்கிய இந்தியப் படத்தை எரித்தற்காகப் பெரியார் சிறைப்பட்டு மீண்டபொழுது பாவலரேறு எழுதிய பாட்டின் ஒரு பகுதி)

நாட்டைக் குழப்பிடும் சாதியும் மதமும்

நசுங்கிட எழுந்ததே அரிமா! அதன்

பாட்டைக் கெடுக்கும் நாய்க்குல மழிக்கப்

பெரும்படை திரண்டதே எங்கும்!

பேச்சும் துணிவும் பெருந்திறல் உரனும்

பணிவும் அதன்கை வாளாம்!..(1958).

அவர் (பெரியார்) ஒருவர் பிறந்திருக்கவில்லையானால், மக்கள் அறியாமைச் சேற்றில் இன்னும் நெளிந்துகொண்டுதாம் இருப்பர் என்பதை எவரும் மறுத்தல் முடியாது. அவர் ஒருவரின் குரல் இத் தமிழகத் தெருக்களில் எதிரொலித்திருக்கவில்லையானால், இன்றுள்ள தமிழர்கள் தலைகளில் குடுமிகளும், நெற்றிகளில்


சமயக்குறிகளும், வாய்களில் பாகவத இராமாயணப் பழங்கதைப் பேச்சுகளும்தாம் நீக்கமற நிறைந்திருக்கும்” (1966).

குமுகாயப் போராட்டத்தில் இவர் நல்ல வெற்றிகண்டுள்ளார். தூங்கிக்கொண்டிருந்த தமிழர்களைத் தட்டியெழுப்பித் தன்மான உணர்வை ஊட்டிய இவர் தொண்டிற்குத் தமிழர்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்”(1967).

(கழகக்காலப் பாடல்களை ஒத்த ஆசிரியப்பா தொகுப்பான நூறாசிரியம்எனும் நூலில் பாவலரேறு, பெரியார் குறித்து எழுதிய 24ஆம்எண் பாவின் ஒரு பகுதி)

“…கொல்வரியின் சொல்பாய்ச்சித்

தொல்குடிமை கட்டழித்த

ஆரியத்தை அடிதுமித்து

குலக்கோ டரிந்து சமயக்கா லறத்துணித்துக்

கலக்குறு கொள்கைக் கடவுண் மறுத்தே

யாரும் யாவும் யாண்டும் துய்ம்மென

புதுமைப் பொழிவித்துப் பொதுமை தழைவிக்கும்

அரிய ராகலி னவரே

பெரியா ரென்னும் பெயரி யோரே!” (1970)

பெரியார் ஒரு கட்சியின் தலைவரல்லர்; ஓர் இனத்தின் தலைவர்; ஒரு காலத்தின் தலைவர்: ஒரு வரலாற்றின் நாயகர். அவர் தோன்றியிருக்கவில்லையானால் ஓர் இனத்தின் அடிமை வரலாறே முற்றுப் பெற்றிருக்காது. ஒரு நாட்டின்மேல் போர்த்துக் கிடந்த இருள் விலகியிருக்காது. தமிழனின் தலையெழுத்தே மாற்றப் பெற்றிருக்காது. தன்மானமற்ற நம் இனம் ஆரியச் சேற்றில் மேலும்மேலும் அழுந்திக் கதிகலங்கிப் போயிருக்கும்

ஒரு முழு இனத்தின் துயரைத் துடைக்க, இழிவைப்போக்க அடையாக அப்பிக் கிடந்த வரலாற்றுக் கீழ்மையைத் தோண்டி எடுத்துத் துப்புரவாக்க, அயராது ஒருவர் தனி ஒருவர் அல்லும் பகலும் பாடுபடுகின்றாரென்றால், அவர் பெரியார் ஒருவர்தாம்!’’ (1971).

(பெரியார் மறைந்தபோது பாவலரேறு உணர்வு மேலோங்கப் பாடிய ஆறு அறுசீர் மண்டிலப் பாக்களுள் ஒன்று)

எப்பொழுதும் எவ்விடத்தும் எந்நேர மும்தொண்டோ(டு)

இணைந்த பேச்சு!

முப்பொழுதும் நடந்தநடை! முழுஇரவும் விழித்தவிழி!

முழங்கு கின்ற


அப்பழுக்கி லாதவுரை! அரிமாவை அடக்குகின்ற

அடங்காச் சீற்றம்!

எப்பொழுதோ அடடா,இவ் வேந்தனையித் தமிழ்நாடும்

ஏந்தும் அம்மா? (1974).

(‘தென்மொழியின் பெரியார் நூற்றாண்டுச் சிறப்பிதழில் வந்த பாடலின் ஒரு பகுதி)

பெரியார் நம்மிடைப் பிறந்திரா விட்டால்

உரியார் நாமெனும் உண்மை,பொய்த் திருக்கும்

ஆரியர்க் கின்னும் அடியராய்க் கிடப்போம்

பூரியர் புராணப் புளுகுக் குப்பையுள்

சாதிச்சகதியுள் சமயச் சேற்றினுள்

புதையுண் டிருப்போம்! புழுக்களாய் மேய்வோம்!...

சாக்ரடீசு, புத்தர், திருவள்ளுவர், ஏசு, நபி, காந்தி போலும் காலத்தின் எல்லையாக அமர்ந்துவிட்டவர் பெரியார். ஆனால் அவர்கள் செய்த அருஞ்செயல்களைவிட ஒருபடி மேலாகவே செய்தார் பெரியார். அவர்கள் அனைவரும் நன்மைகளையே செய்தார்கள்; பரப்பினார்கள்; பேசினார்கள்! ஆனால் பெரியார் தீமைகளையே எதிர்த்துப் போரிட்டார்”…

கிரேக்க அறிஞர் சாக்ரடீசு பேசிய பேச்சுகளைவிட பெரியார் பேச்சுகள் அளவிலும், உணர்விலும் பலமடங்கு மிகுந்திருக்கும்….

சாக்ரடீசு பேசியதைவிட, நடந்ததைவிட பெரியார் அதிகமாகப் பேசினார்; மக்களுக்காக இரவுபகல், பனிகுளிர், வெயில்மழை, மேடுபள்ளம், காடுநாடு, சிற்றூர் பேரூர் என்று பாராமல் நேரிடையாக நடந்து மக்களைப் போய்க் கண்டார்; அவர்களுக்காகக் கவலை கொண்டார்; அவர்களுக்காக மணிக்கணக்காகப் பேசினார்; அவர்களின் நரம்புகளிலும் குருதியோட்டங்களிலும் தன்மான உணர்வையும் தன்னம்பிக்கையையும் ஊட்டி உணர்வேற்றினார்”…

அவருடைய கொள்கைகளில் பிழைகள் இருக்கலாம்; கருத்துகளில் தவறு இருக்கலாம்; ஆனால் முயற்சிகளில் அவர் தூய்மையானவர்; மக்களுக்குழைத்த உழைப்புகளில் மாசில்லாதவர்; பொதுத்தொண்டுக்கே இலக்கணமானவர்; வரலாற்றில் அவரைப்போல் மக்களுக்காக உழைத்தவர்கள் மிகக் குறைவானவர்கள்.

தம் வாழ்வுக்கென எதையும் தம் அறிவால் சிந்தித்துக் கொள்ளாத அவர், தம் மகிழ்ச்சிக்கென எதையும் தம்கண்களால்


பார்த்துக்கொள்ளாத அவர், தம் தேவைக்கென எதையும் தம் காதுகளால் கேட்டுக்கொள்ளாத அவர், தம் உயிர்ப்புக்கென ஒரு நொடியும் மூச்சுக்காற்றை உள்வாங்காத அவர், தம் இன்பத்துக்கென ஓரிடத்திலும் தம் உடலைக்கிடத்தாத அவர், தமக்கென ஒருசொல்லும் பேசியிராத அவர், ஒரு முனிவர்போல் வாழ்ந்தார்; துறவிபோல் அலைந்தார்; ஆனால், ஒரு தொழும்பனைப்போல் இவ்வுலக மக்களுக்குத் தொண்டு செய்தார்”. (1978).

(1982இல் காஞ்சி சின்னசங்கரன் பெரியார் விதைத்தவை நச்சு விதைகள்என்று கூறியபோது எழுதிய நெடும்பாவின் ஒரு பகுதி)

கருகிப்போய்க் கிடந்தயிந் நாட்டிடை வந்தே

உருகி உருகி உயிரைத் தேய்த்தே

ஒளியைப் பரப்பிய ஊழித் தலைவராம்

அளிசேர் எங்கள் அருமைப் பெரியார்

தன்மான ஊற்றினைத் தகைமைத் தலைவனை

மண்மானங் காத்த மாபெரு மீட்பனை

அரியாருள் எல்லாம் அருஞ்செயல் ஆற்றிய

பெரியார் என்னும் பெரும்பே ராசானை

இழிப்புரை சொல்வதா? சொல்லியிங் கிருப்பதா? (1982).

(1983இல் பெரியாரையும் பாவேந்தரையும் பட்டிமன்றத்திற்கும் பாட்டரங்கத்திற்கும் மட்டுந்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா?’ என்னும் தலைப்பில் எழுதிய பாடலின் ஒரு பகுதி)

பெரியார் உணர்வினைப் பாவேந்தர் பீடினை

அறியாத் தமிழராய் ஐயகோ அழிகிறோம்!

தமிழர் இனமே! தாழ்ந்துபோம் இனமே!

இமியும் பொறுத்திடற் கில்லை! இனியேனும்

அமிழா உணர்வினால் ஆர்ந்துடன் எழுகவே! (1983).

பெரியாரின் தொண்டு இந்த உலகத்திற்குக் கிடைக்காமல் போயிருந்தால், இந்த இனம் இன்னும் ஒரு 500, 1000 ஆண்டுக் காலத்திலே படிப்படியாகத் தேய்ந்துபோய்ப் பழைய கிரேக்க இனம்போல் இந்த உலகத்தை விட்டே அழிந்து போயிருக்கும். அதை நான் துணிந்து சொல்வேன். ஏனென்று சொன்னால் மொழி வழியிலே, இன வழியிலே, இலக்கியங்கள் வழியிலே, கலை வழியிலே, ஆட்சி அரசாளுமை வழியிலே ஆகிய எல்லாவற்றிலும் ஆரிய இனம் நாட்டைக் கவ்வியிருந்தது. அந்த உண்மைகள் யாராலும் உணரப்


பெறாமலிருந்தன. தொடக்கக் காலத்திலே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் காலத்திலே ஆரியம் இந்த நாட்டைக் கவ்வுகின்ற நிலையை - அதுபற்றி எச்சரிக்கைக் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து எந்தப் புலவரோ, எந்த அறிஞரோ அல்லது எந்த ஒரு தலைவரோ அல்லது எந்த ஒரு அரசரோ இனத்துக்கான வளர்ச்சிக்காக உண்மையான மீட்சிக்காக அறிவு முன்னேற்றத்திற்காக எந்தக் கருத்தையும் நூல் வடிவாகவோ அல்லது வேறுவகையான தொண்டு வடிவாகவோ சொன்னதுபோல நான் படித்ததில்லை

அறிவு முன்னேற்றத்திற்கு உண்மையாகவே அடிப்படைத் தேவையாக இருக்கின்ற அந்தக் கல்வி வளர்ச்சியிலும், தன்மான வளர்ச்சியிலும், பகுத்தறிவு வளர்ச்சியிலும் இந்த இனத்தினுடைய உண்மையான அறிவு ஊற்றுக் கண்ணைத் திறந்துவிட்டவர் தந்தை பெரியார் தாம்’ (1989).

திருவள்ளுவருக்குப்பின், தந்தை பெரியாரைத் தவிர வேறு எவரையும் நம்மால் முழு அறிஞராக முழுத்தலைவராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை

தந்தைபெரியாரின் பெருந்தொண்டின் நோக்கம் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், தமிழன் ஒவ்வொருவனும் தன்மானத்துடனும், தன்னுரிமையுடனும், தன்னாட்சியுடனும் வாழவேண்டும் என்பதே! இந்த நோக்கத்திற்காகத்தான் அவர் உழைத்தார், பெருஞ்சுமை தாங்கினார்; பெருந்துயர் உற்றார். (1989).

இனிப், பெரியாரின் தமிழ்மொழி தொடர்பான கருத்துகளை எதிர்த்தும் கண்டித்தும் பாவலரேறு எழுதியுள்ள சிலவற்றைப் பார்ப்போம்:

பெரியார் கரிநெய் கொண்டழித்த இந்தியை இப்பொழுது படித்துக் கொள்ளுவதில் தவறில்லை என்று அவரின் வாய் முழக்கமிடும் அளவிற்கு அவர் நெஞ்ச வலிமை குன்றிப்போய் விட்டமைக்காக நாம் வருந்துகின்றோம்” (1966).

தமிழ்மொழியைப் பற்றிய பெரியாரின் கருத்தும் குமுகாயத் தொண்டைப் பற்றிப் பக்தவத்சலம் பேசும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான், பக்தவத்சலம் ஆரிய அடிமை. பெரியார் திராவிட அடிமை. இன்னுஞ் சொன்னால், குமுகாய அமைப்பில் இராசாசியால் எப்படித் தமிழர் இனம் அழிகின்றதாக இவர் கூறுகின்றாரோ, அப்படியே மொழியியல் துறையில் தமிழ்வளர்ச்சிக்கு இவர் ஓர் இராசாசியாகவே இருக்கின்றார்


தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் இவர் அதன் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவே இருந்திருக்கின்றார். ஆரியப் பார்ப்பனர்களின் தில்லுமல்லுகளையும், அவரால் தமிழ்க்கு நேர்ந்த நேரவிருக்கின்ற கேடுகளையும் புடைத்துத் தூற்றி எடுத்துக் காண்பிக்கும் மதுகை படைத்த இவர், ஆரிய மொழியால் தமிழ்மொழிக்குக் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக நேர்ந்த தீங்கை ஒப்புக்கொள்வதில்லை; ஒரோவொருகால் ஒப்புக்கொண்டாலும் அதை விலக்க எவ்வகை முயற்சியும் செய்வதில்லை; ஒரோவொருகால் செய்தாலும் அதைக் கடனுக்காகவே, அவருடன் சேர்ந்திருந்த உண்மைத் தமிழன்பர்தம் கண்துடைப்புக்காகவே செய்திருக்கின்றார்

தமிழில் என்னஇருக்கிறது? என்று இவர்கேட்கும் வெறுப்புக்கொள்கை (Cynicism) தான் இவர்காணும் பகுத்தறிவு என்றால் அப் பகுத்தறிவு நமக்கு வேண்டுவதில்லை. உலகில் உள்ள மாந்த மீமிசைக் (Supernal) கொள்கைக்கு வழிகாட்டாத இவர் குமுகாய அமைப்பு நமக்குத் தேவையில்லை

ஆரிய அடிமைப்புலவர்கள் சிலர் இடைக்காலத்தில் ஆக்கிவைத்த கம்பஇராமாயணம், பெரியபுராணம், வில்லிபாரதம் முதலிய பார்ப்பன அடிமைப் பழங்கதை நூல்களே தமிழ் என்று நினைத்தால் தமிழ்மொழியில் மாந்த வாழ்விற்கான இலக்கியநூல்களே இல்லை என்பதை நாமும் ஒப்புக்கொள்ளலாம். ஆனால், இப்பொழுது உள்ள கழக நூற்களையும், இறந்துபட்ட ஆயிரக்கணக்கான மெய்யிலக்கியங்களையும் கண்டும் கேட்டும், உணர்ந்தும்கூட இவர் தமிழைப் பழிப்பதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேண்டுமானால் தமிழ்மொழியில் என்னென்ன இல்லை என்று இவர் கூறட்டும்; அதன்பின் நாம் என்னென்ன இருக்கின்றது என்று காட்டுவோம்

தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ள - புகுத்தப்பட்டுள்ள இடைக் காலக் கருத்துகளைப் பற்றி ஆராய்ந்து, அக்கருத்துகள் யாவும் பிறரால் இம்மொழி பேசிய மக்களை ஏமாற்றுவதன் பொருட்டு எழுதிவைக்கப் பட்டதாகும் என்று தெரிந்த இவர், அப் பாழ்வினைக்குத் தமிழ்மொழி மேல் குற்றங் கூறுவது எப்படிச் சரியாகும்?

இக் காலத்துச் செய்முறை அறிவுநூலை அக் காலத்திலேயே எப்படி எழுதி வைத்திருக்க முடியும்? என்றாலும் நம் தமிழில் உள்ள நூல்கள் அழிக்கப்பட்ட ஒரு நிலையில் நாம் இத்தகைய கேள்வியை இரக்க உணர்வோடு கேட்கவேண்டுமேயன்றி, இழிவுணர்வோடு கேட்பதும், தமிழையே காட்டுமிராண்டிக் காலத்து மொழி, நாகரிக


காலத்திற்குப் பகுத்தறிவு காலத்திற்குப் பொருந்தாத மொழி என்று இழித்துரைப்பதும் ஈ.வெ.ரா.வின் பேதைமையையே காட்டும்”…

இவர் அரசியலைப் பொறுத்தவரை ஓர் இலெனினாக இருக்கலாம்; குமுகாயவியலைப் பொறுத்தவரையில் ஒரு கமால் பாட்சாவாக இருக்கலாம்; பொருளியலைப் பொறுத்தவரை ஒரு மார்க்சாக இருக்கலாம்; சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை ஒரு பெரியாராகவும் இருக்கலாம். ஆனால் மொழித்துறையைப் பொறுத்தவரையில் இவர் வெறும் இராமசாமிதான்

தமிழர்களுக்கு விடுதலை தேடித்தருகின்றேன் என்று கூறும் ஒரு தலைவர், தமிழைப் பற்றியும் உண்மைத் தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் தகுதிக் குறைவாகப் பேசித் திரிகின்றார் என்றால், அஃது அவர்க்கு மட்டுமன்று தமிழர் எல்லாருக்கும் வந்த இழிவாகும். தமிழ்நாட்டுக்கே வந்த இழிவு. இஃது அவர் எதிர்த்து வரும் ஆரிய இனத்துக்கு வேண்டுமானால் மகிழ்வூட்டுவதாக இருக்கலாம்

பிறரை எப்படிக் கண்களை மூடிக்கொண்டு பின்பற்றக்கூடாது என்று இவர் கூறுகின்றாரோ, அப்படியே இவரையும் உண்மைத்தமிழர், கண்களை மூடிக்கொண்டு பின்பற்றக்கூடாது என்று எச்சரிக்கின்றோம்” (1967).

நம்மைப் பொறுத்தமட்டில் பெரியார் குமுகாயச் சீர்திருத்தத்தில் பிராமண சூத்திரப் பெரும் போராட்டத்தில் - பெரியார்தாம்! அதில் ஐயமில்லை. ஆனால் தமிழ்மொழி பற்றியோ, தமிழர் வரலாறு பற்றியோ பிற அறவியல் செய்திகளைப் பற்றியோ பேசுவதில் அவர் சிறியாரே!...

தமிழகத்தில் இருந்துகொண்டிருப்பதாலும், தமிழில் பேசத் தெரிந்திருப்பதாலுமே தமிழறிஞர் ஆகிவிட முடியாது என்பதைப் பெரியார் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் (1967).

பாவலரேறு பெரியாரைப் பாராட்டிப் போற்றும் பகுதிகளைப் பாடல் வடிவிலும் உரைநடையிலும் பரவலாகப் பேரளவில் பார்க்கலாம். அதைப் போன்றே இன்றியமையா நேரங்களில் அவரை எதிர்த்தும் கண்டித்தும் எழுதியவற்றையும் காணலாம். இன்றைய தமிழ் இளையோர் மேலே எடுத்துக்காட்டப்பட்ட செய்திகளில் கருத்தூன்றித் தெளிவுபெற்று வினையாற்ற வேண்டுமென்று நற்றமிழ் நல்லன்புடன் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றது.   

(புதுவை நற்றமிழ் சனவரி-பெப்ருவரி 2025 இதழில் வந்தது)                     

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

'தினமணி' நாளிதழுக்கு...

 

‘தினமணி’ நாளிதழுக்கு…

அண்மைக் காலமாகத் ‘தினமணி’ நாளிதழில் வரும் கட்டுரைகளைப் படிக்கும்போது, ‘ஐயோ, தினமணியே! உன்நிலை இப்படி ஆகிவிட்டதே! என அந்த நாளிதழின்பால் இரக்கம்கொள்ளச் செய்கின்றன. சிலநாட்களுக்குமுன் வந்த அகத்தியர் பற்றிய நடுப்பக்கக் கட்டுரை உண்மைத் தொடர்பற்ற அறிவுச்சாரம் அறவே அற்ற மூடநம்பிக்கை பொதுளிய பேதையின் பிதற்றல்களாகவே இருக்கக் கண்டோம்! அதனினும் 20-2-2025இல் அவ்விதழில் ‘மும்மொழிக் கொள்கை அவசியம்’ எனுந் தலைப்பில் கட்டுரை வடிவில் தந்துள்ளதைப் பொருளற்ற சொற்குவியலாகக் காண்கின்றோம்.

மதிப்புமிக்க பெரியோரான அறிஞர் பெருமக்கள் சொக்கலிங்கம், சிவராமன், ஐராவதம் மகாதேவன், இராம திரு.சம்பந்தம் முதலானோர் ஆசிரியர்களாக இருந்து அரிய விருந்தளித்த நாளிதழின் இற்றை நிலை இப்படி ஆகிவிட்டதை எண்ணி வருந்துகின்றோம். இக்கால், அவ்விதழில் பேதைப் பிதற்றல்கள் கட்டுரைகளாக வருகின்றன.

‘தினமணி’யில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் அம்மையார் ஒருவர், ஒரு மொழியை, விரும்பிப் படித்தறிந்து கொள்வதற்கும் அதையே கட்டாயமாகத் திணித்துப் படித்தாகவேண்டும் என்று ஆணையிடுவதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்திருக்கவில்லை.

நாட்டிலுள்ள குடிகள் தம் தாய்மொழியைக் கட்டாயம் படித்தாக வேண்டும். அது இன்றியமையாதது; மக்கள் அனைவர்க்குமானது.

இரண்டாவதாக ஒரு மொழியைப் படிக்க வேண்டிய நிலை அனைவருக்குமானதன்று. மக்கள் எல்லோருக்கும் இரண்டாம் மொழி தேவையில்லை என்ற போதும், உலகளாவிய ஒரு மொழியை, அண்மைக்கால அறிவியல் முன்னேற்றம்வரை அறிந்துகொள்ள உதவும் ஒரு மொழியை, உலக இலக்கியங்களில் பெரும்பாலனவற்றை அறிய உதவும் ஓரு மொழியை, உலக மக்களில் பெரும்பாலாரோடு தொடர்பு கொள்ள உதவும் ஒரு மொழியை இரண்டாம் மொழியாகப் படிக்கலாம் என்று மக்கள் நலம்நாடும் நல்லறிஞர்கள் முடிவுசெய்ததின் அடிப்படையிலேயை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகின்றது.

இனி, மூன்றாம் மொழி படிக்கவேண்டும் என்பது அவரவர் விருப்பத்தையும் தேவையையும் பொருத்ததாகும். மூன்றாவதாக ஒரு மொழியைப் படிக்க விரும்புவோர், மூன்றாம் மொழி மட்டுமன்றி இன்னும் எத்தனை மொழிகளும் கற்கலாம். அதனை யாரும் தடைசெய்யவில்லை. தமிழ்நாட்டு இந்திப் பரப்புரை அவையில் விரும்புவோர் தடையின்றி இந்தி படிப்பதைப் பார்க்கின்றோம்.

 இன்னொரு மொழியைப் படிப்பது தேவை என்ற நிலையினரும் அவரவருக்குத் தேவையான மொழியைத் தேர்ந்து படிப்பதில் தவறில்லை. அப்படித்தான் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும் அப்பாத்துரையாரும் சோமசுந்தர பாரதியாரும் மறைமலையடிகளும் பூரணலிங்கமும் தினமணிக் கட்டுரையார் குறிப்பிடும் பிறரும் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றனர். யாரும் அதைத் தடைசெய்யவில்லை. தடைசெய்யப் போவதும் இல்லை.

ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லாரும் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்கவேண்டுமென்று வலியுறுத்துவது, கட்டாயப்படுத்துவது, மாந்த உரிமைகளை மதிக்காத போக்காகும். இவ்வுலகிகில் அறிந்துகொள்ள வேண்டிய பல்வேறு அறிவுநிலைகள் இருக்க, குறுகிய வாணாள் கொண்ட மாந்தருக்குத் தேவையற்ற நிலையில் மூன்றாவதாக, நான்காவதாக பிற மொழிகளைக் கற்க வேண்டுமெனக் கட்டாயப் படுத்துதலை அவர்கள்மேல்   ஏற்றும் கூடுதல் சுமையேன்பதே சரியாகும்.

பிறமொழி இலக்கிங்களை இலக்கணங்களை அறிய விரும்பும். மொழி ஆய்வாளர்கள் அவர்களுக்கு வேண்டும் மொழிகளைப் படித்தறிந்து கொள்ளலாம். எத்தனை மொழியும் அறிந்து ஆய்வு செய்யலாம். ஆனால், எல்லாரும் இந்தியை சமற்கிருதத்தைதப் படிக்கவேண்டும் என்று தந்திரமான கல்விக் கொள்கையால் கட்டாயப் படுத்துவது மாந்த உரிமை மீறும் செயலாகும். தமிழ்நாட்டுச் சிற்றூரிலுள்ள சிறுநில உழவர் இரண்டாம் மொழி ஆங்கிலம் படிப்பதே அதிகம்.  

இனி, இந்த இந்திய நாட்டில் ஒற்றுமை ஒரேநிலை என வலியுறுத்தி ஏமாற்றுவோர் அப்படி உண்மையிலேயே ஒரே நிலையைக் கடைப்பிடிக்கின்றனரா? தமிழரை மூன்று மொழி படிக்க வேண்டுமென்று வலியுறுத்தும் தினமணி வகையினர்க்கு உத்தரப்பிரதேசம், பீகார் முதலிய மாநிலங்களில் கடைப்பிடிக்கும் நிலை தெரியாது என்று சொல்லமுடியாது. அங்கெல்லாம் இரண்டாம் மொழியே படிக்கும் நிலை இல்லை. இரண்டாம் மொழி சொல்லிக் கொடுக்கவே மிகப்பல இடங்களில் ஆசிரியர்களே இல்லை என்றார்கள். இஃது ஒரே நிலை வற்புறுத்துவோரின் ஏமாற்றுச் செயலன்றோ? அவர்களுக்கு ஒருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கின்றது. இது நாமே வலிந்து கூறும் செய்தியன்று. முன்னாள் இந்திய ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் தெளிவுபடுத்திய நிலையாகும்.  

இந்திய அரசின் அமைச்சர், புதிய கல்விக் கொள்கையை ஏற்க வில்லையென்றால் தமிழகத்திற்குத் தரவேண்டிய நிதியைத் தரமுடியாது என்று செருக்குப் போக்கில் பேசியிருக்கின்றார். அக் கல்விக் கொள்கை தமதிரமாகச் சமற்கிருதத் திணிப்பு செய்வது வெளிப்படையாகத் தெரிகிறது. ‘ஒரே இந்தியா ஒரே மொழி’ என்ற கூச்சல் கூற்றும் எங்கள் தாய்த் தமிழை அழிக்கும் போக்காகும் என்ற அச்சம், வடஇந்திய அரசியலாரைச் சரியாகப் புரிந்துகொண்டவர்களுக்கு ஏற்படுவது இயல்பானதாகும். அஞ்சுவது ஆஞ்சாமை பேதைமை என்பார் தமிழ் இறைவனார்.

வடநாட்டு இந்தி மாநிலங்களில் ஒரு மொழிக்கொள்கையே நடைமுறையில் உள்ளது. அவர்கள் வேறு எந்த மொழியும் படிக்காத நிலையில் அவர்களிடம் போய் எந்த மேதையும், பேதையும் கோதையும் பல மொழிகள் கற்பதே நல்லதென்று கொள்கை பரப்புரை செய்வதில்லை. அரசியல் ஏமாற்றுக்காரர்களும் அவர்களுக்குத் துணைபோவாரும் தமிழ்நாட்டில்தான் பல மொழி படிக்கப் பரப்புரை செய்கின்றனர்.

1960இன் மொழிக்கொள்கையை இப்போதும் பின்பற்றக் கூடாதாம்! சரியாக வரலாறு தெரிந்து கொள்ளவில்லை. 1965இல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தி எதிர்ப்புப் போர் அப்போது ஆட்சியில் இருந்தோர் அளித்த உறுதிமொழிக்குப் பின்தான் முடிவுக்கு வந்தது. தாய்மொழி காக்க நூற்றுக் கண்ணக்கானவர் உயிர் ஈகம் செய்ததை உலகம் பார்த்து வியந்தது. இப்போது தந்திரமான முறையில் இந்தியைத் திணிக்கும் முயற்சி மும்மொழித் திட்டம் என்று தமிழகத்தில் திணிக்கப்பட்டால் தமிழகம் எழும், போராடும்! பல்லாயிரம் உயிர்ளை ஈகம் செய்தாவது தாய்த்தமிழைக் காக்கும்! இஃது உறுதி! என்பதை இந்திய அரசியலாருடன் தினமணி வகையினரும் அறிந்து கொள்ள வேண்டும்!   

---------------------------------------------------------------------------------------------------------------        

செவ்வாய், 21 ஜனவரி, 2025

அகழ், கண்டுபிடி, காட்சிப்படுத்து!

 

(11-10-2024 நாளிட்ட தைம்சு ஆப்பு இந்தியாநாளிதழில் வந்த அறிமுக உரையுடனான நேர்காணலின் தமிழாக்கம்-தைம்சு ஆப்பு இந்தியாநாளிதழுக்கு நன்றி!)

அகழ், கண்டுபிடி, காட்சிப்படுத்து!

எருணாகுளத்திலுள்ள பன்முகத்தன்மையுடைய தொல்லியல்சார் அறிவியல்களுக்கான தந்தைவழி தாய்வழி முன்னோர் மரபு நிறுவனம்கழகக்காலச் சேரர் துறைமுகமான பட்டணம் (முசிறி) என்னுமிடத்தில் அகழ்வாய்வு செய்துவருகிறது. அந் நிறுவனம் கேரளத்தின் பேரியாற்றுக் கரையில் சங்ககாலப் பண்பாடுகளைக் காட்சிப் படுத்தும் ஓர் அருங்காட்சியகம் அமைக்கத் திட்டமிட்டு வருகின்றது. அதன் இயக்குநரான வரலாற்றாளரும் தொல்லியலாளருமான பி.செ.செரியன் பட்டணத்தில் பல அகழ்வாய்வுகளுக்குத் தலைமையேற்றவராவார். கழக(சங்க)க் காலத்தில் முசிறி உலகெங்குமுள்ள வாணிகர்களையும் கடலோடிகளையும் ஈர்த்ததாக அவர் கூறுகிறார். ஏ.இரகுராமனுடனான நேர்காணலில், ஒரு கிரேக்க மாந்தத்தலை-விலங்குருச் சிலை, உரோமப் பேரரசர் அகசுத்தசு சீசரை ஒத்துள்ள முத்திரை மோதிரம் உள்ளிட்ட கண்டுபிடிப்புளைப் பற்றியும் அகழ்வாய்வர் நேர்கொள்ளும் இக்கட்டுகளைப் பற்றியும்கூட செரியன், விளக்குகின்றார்.

நீங்கள் ஏன் பட்டணத்தில் கழகக்கால அருங்காட்சியகத்தை நிறுவ விரும்புகின்றீர்கள்?

இக்காலக் கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் கழகக் காலம் பண்பாட்டு அடித்தளம் அமைத்திருக்கும். இந்த ஈராயிரமாண்டு பழமையான நாகரிக நுட்பப்பண்புகளுடனும் கழகக்காலக் கேரளமும், இந்தியத் துணைக்கண்டமும் தொடர்பு கொண்டிருந்த ஏறத்தாழ இப்போதைய இருபத்தைந்து நாடுகளுடனும் மக்கள் இணைந்திருக்கத் தேவையிருக்கின்றது. பட்டணம், அகழ்வாய்வு தளத்தின் உச்சக்கட்டக் காலமாக மதிக்கப்படுகின்ற கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையிலான காலம் கழகக் காலத்தோடு ஒத்திருக்கின்றது.

நாங்கள் அந்த அருங்காட்சியகத்திற்கு முசிறி கற்பனைக்களம் அல்லது கழகக் காலக் கற்பனைக்களம் என்று பெயரிட எண்ணுகிறோம்.

என்னென்ன காண்பிக்கப்படும்?

நாங்கள், தென்சீனக்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவை செங்கடல், நைல், நண்ணிலக்கடல் ஆகியவற்றுடன் இணைந்த விரிவானதொரு கடல்சார் வலையமைப்பைப் பற்றிய சான்றுகளைக் கண்டுபிடித்துள்ளோம். இந்தத்


தொல்பொருள்களின் வகைப்பாட்டு பகுப்பாய்வுகளும், கதிரியக்கரிமக் காலங் காணலும், உரோமப் பேரரசின் காலம் இப் பகுதியோடு மிகவும் தொடர்புகொண்டிருந்த காலமாகக் (கி..மு, முதல் நூற்றாண்டிலிருந்து கி,பி மூன்றாம் நூற்றாண்டு வரை) காட்டுகின்றன. பண்டைய தமிழர்களின் உலகளாவிய தொடர்புகளை விளக்கும் வகையில் பட்டணம் இங்கு எல்லாப் பகுதிகளிலிருந்தும் பொருள்களைக் கொடுத்துள்ளது.

பதினொரு (மாந்த) எலும்புக்கூட்டு எச்சங்களின் பழமையான தாயனை (D.N.A) பகுப்பாய்வுகள் நடத்தப்பட்டன. இவற்றில் மூவர் நண்ணிலக்கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள், நால்வர் மேற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள், நால்வர் தென் ஆசியா அல்லது இந்திய துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததுடன் உலகப் பொதுப் பண்பாட்டையும் உணர்த்துவதாக உள்ளன. குசராத்திலுள்ள பாரிகசா (பரூச்சு) என்ற இடத்தின் முகன்மைத் தன்மை, அது முசிறிக்கு முன்னர் ஒரு பெருந்துறைமுகமாக இருந்ததைக் காட்டுகிறது. இருப்பினும் கி.மு.முதல் நூற்றாண்டு முதல் பருவக் காற்றுகள்வழி நடத்தப்பட்ட கடற்செலவால் கப்பல்கள் செங்கடலிலிருந்து குசராத்து துறைமுகங்களையும் அரபிக்கடல் துறைமுகங்களையும் தவிர்த்து நேரடியாகச் சேரநாட்டை (பழந் தமிழகம்) அடையமுடிந்தது.

பட்டண அகழ்வாய்வு மேற்கொள்வதில் என்னென்ன இக்கட்டுகள் இருந்தன?

பட்டணத்தில் உள்ள நூறு குறுக்கம் (acre) தொல்லியல் மேட்டில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான (<1%) பகுதியே அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. தொல்லியல்சார் அறிவியல்களுக்கான தந்தைவழி தாய்வழி முன்னோர் மரபு நிறுவன’’த்திற்கு மேலும் அகழ்வாய்வு செய்ய 2019 முதல் இசைவு மறுக்கப்பட்டது. 2022இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ASI) அகழ்வாய்வு இசைவை நிறுத்தி ஆணையிட்ட போது, தில்லி உயர் நயன்மன்றம் அந்த ஆணையைச் செல்லாததாக்கி எங்கள் அகழ்வாய்வு உரிமையை மீட்டளித்தது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம் நயன்மன்றத்திற்கு அவர்கள் கூறியவாறு நடப்போம் என்று உறுதியளித்தது. ஆனால், மறுபடியும் அகழ்வாய்வுக்கு இசைவளிக்க மறுத்துவிட்டது. மீண்டும் சட்ட நடவடிக்கை எடுக்கும் முன்பாக, நாங்கள் தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு எழுதினோம். இத்தகைய தடைகள், முன்னணிப் பல்பலைக் கழகங்களுடனும் பல்துறை வல்லுநர்களுடனும் மேற்கொண்டு வந்த பல பத்தாண்டுக் கால பன்னாட்டு ஒத்துழைப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும் நாங்கள் வலியுறுத்தினோம். எப்படி இருந்த போதும், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.இசுதாலின், தமிழ்நாட்டிற்கு வெளியே அவர்கள் முறைப்படி ஆய்வுசெய்ய விரும்பும் நான்கு இடங்களில் இந்தியத் தொல்லியல்


 ஆய்வகத்துடனும், ‘தொல்லியல்சார் அறிவியல்களுக்கான தந்தைவழி தாய்வழி முன்னோர் மரபு நிறுவனத்துடனும் உடனிணைந்து அறிவியல் முறைப்படி ஆய்வு செய்ய விரும்பும் ஓரிடம் முசிறி என்று அறிவித்ததில் நாங்கள் ஊக்கமடைந்து இருக்கிறோம்.

முசிறியிலிருந்து ஏற்றுமதியான முதன்மையான பொருள்கள் என்னென்ன?

பட்டணத்தில், நாங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான அடையாளக் குறிப்புகளை வழங்கும் 39 வகையான பொருட்களைக் கண்டறிந்தோம், ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் மூலிகைச் செடிகள், கறிச்சரக்குப் பொருட்கள், யானை மருப்பு, சந்தனமரம், தேக்குமரம், சுராலை (சாம்பிராணி), யானைகள், குரங்குகள், செல்ல வளர்ப்புயிரிகள், ஆமையின் ஓடு ஆகியவை அடங்கியிருந்தன. மற்ற குறிப்பிடத்தக்க ஏற்றுமதிப் பொருள்களில் பெரும்பாலும் பருத்தி, பட்டு (சீனாவிலிருந்து வந்தது), முத்து (சிறிலங்காவிலிருந்து வந்தது), அரிசி, தேங்காய், சேரநாட்டின் மழைக்காடுகளில் செழிப்பாக விளையும் பழவகைகள் ஆகியவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட மது ஆகியவை அடங்கியிருந்தன.

மாழை(உலோக)த் தொழில் அக்காலத்தின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் குறிக்கிறது. பட்டணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உரோமன் (நண்ணிலக் கடல்) இரு கைப்பிடியுள்ள கலன் சிதறல்கள் இந்தியப்பெருங்கடல் பகுதியில் உள்ள இடங்களில் இதுவரை ஆவணப் படுத்தப்பட்டவைகளில் மிகப்பெரியவை.  சாராயமும் தேறலும் பண்டைய உலகில் உடல்வளத்திற்கான குடிவகைகளாகக் கருதப்பட்டதால், பெருமளவில் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.

இந்தப் பொருள்களின் அளவும் மதிப்பும் முசிறி ஓலைச்சுவடி போலும் ஆவணங்களில் உள்ளன. அதைப் போன்றே அலெக்குசாந்திரியாவுக்கும் இறுதியாக உரோமப் பேரரசிற்கும் இட்டுச்செல்லும் செங்கடல் துறைமுகமான வெரெணிகேவிற்கும் நீல(நைல்)ஆற்றுத் துறைமுகமான கோபதோசிற்கும் இடையிலான பதினான்கு வாணிக நிலையங்களின் வலைப்பின்னலாலும் வலியுறுத்தப்படுகின்றன. இந்தத் தளங்களை அகழ்வாய்வு செய்வதால், கிரேக்க உரோமன் காலத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட பொருள்களைப் பற்றியும் பரோனிக்குக் காலத்தில் பரிமாறப்பட்ட பொருள்களைப் பற்றியும் கூட ஒருவேளை தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும்.

சீசரின் மாந்தத்தலை-விலங்குரு (sphinx), தொமித்தியன் (உரோமின் மிகத் தீங்கான பேரரசன்) தலை பற்றிய செய்தி என்ன?


தந்தைவழி தாய்வழி முன்னோர் மரபு நிறுவன2020 அகழ்வாய்வின்போது ஒரு கிரேக்க மாந்தத்தலை-விலங்குருவும் உரோமப் பேரரசன் தொமித்தியனின் தலையைச் சித்திரிக்கும் பழமையான பொருளும் கண்டெடுக்கப்பட்டன. இந்த மாந்தத்தலை- விலங்குரு பேரரசர் அகசுதசுடன் தொடர்புடையது, அவர் அதன் படமுடைய ஒரு மோதிரத்தை அணிந்திருந்தார். இதே போன்ற ஒரு செதுக்கப்பட்ட மாந்தத்தலை- விலங்குரு பட்டணத்தில் கண்டெடுக்கப் பட்டது, இத்தாலிய ஆய்வாளர் சூலியோ உரோக்கோ, அகசுதசு சீசர் அணிந்த மாந்தத்தலை-விலங்குருவுடன் இது ஒத்திருப்பதை உறுதி செய்துள்ளார். தொமித்தியனின் நினைவுகளும் சிலைகளும் உரோம ஆளவையால் அழிக்கப்பட்டதோடு அவர் தலை துண்டிக்கப்பட்டு கொடுமையான வல்லாட்சியரென முத்திரையிடப்பட்டார். பட்டணத்தில் கண்டெடுக்கப்பட்ட தலை அண்மையில் புகழ்மிக்க செருமன் தொல்லியலரும் கலை வரலாற்றாளருமான மாரியன் பெருக்குமான் அவர்களால் முறையாக உறுதிப்படுத்தப் பட்டது.

கீழடி கண்டுபிடிப்புகள் பட்டணத்தின் முகன்மைத் தன்மையை அதிகப்படுத்தியுள்ளனவா?

கீழடியும் பட்டணமும் ஒரே காலக்கட்டத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க வகையில் ஒன்றுக்கொன்று பொருந்துகிற கழகக்(சங்க) காலத்தின் மேம்பட்ட உலகளாவிய பண்பாட்டை வெளிப்படுத்தும் இடங்களாகும். அவற்றின் உலகப்பார்வையும் உறவுகளும் அன்பு’, ‘உண்மை’, ‘பற்று’, ‘பகுத்தறிவுஎன்ற பண்பாண்மைகளால் ஆழமாக வடிவமைக்கப் பட்டுள்ளனவாகத் தெரிகின்றன. பேரியாறு வையையாற்றுக் கட்டமைப்பின் ஊடாகக் கடந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளின் குறிஞ்சி நிலப்பகுதிகளில் பரந்து விரிந்து மேற்குக் கடற்கரையில் முசிறியையும் கிழக்குக் கடற்கரையில் அழகன்குளத்தையும் ஒரு வாணிக வழி இணைத்திருக்கக்கூடும். இந்தப் பண்டைய வாணிக வழியில் கீழடி ஒரு முகன்மையான நகர மையமாகச் செயல்பட்டது. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் அணுகுமுறை எந்த மாநிலமும் பின்பற்ற வேண்டிய ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கழகக்காலத் தளங்கள் பல உள்ளன, ஆனால் இதுவரை கேரளாவில் பட்டணம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட தளமாக உள்ளது. தமிழ்நாடு தன்னுடைய உரிய மதிப்பைப் பெறும்வகை அதை உறுதிப்படுத்த வேண்டும்.

                                        (புதுவை நற்றமிழ் இதழில் வந்தது)

===============================================