வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "செயலும் செயல்திறனும்"

 

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "செயலும் செயல்திறனும்"

 

இருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க, உயர்ந்த, அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்!

தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி ஊன்றிய அரிய தமிழ் மீட்பர்!

மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம்! செத்தமொழி தாங்கிகளின் சித்தம் கலங்கடித்த போர்வாள்!

ஒப்பற்ற தமிழறிஞர்! உயர்ந்த ஆய்வாளர்! அரிய மெய்யறிவுச் சிந்தனையாளர்!

சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு வேறுபாடு இல்லாத மெய்வாழ்வர்! ஈடற்ற செழுந்தமிழ்ச் சொற்பொழிவாளர்!

தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய மூன்று இதழ்களைச் சிறப்புற நடத்திய ஈடெடுப்பற்ற இதழாளர்!

சிறந்த இலக்கியப் புலமையாளர்! நல்ல ஓவியர்! திறஞ்சான்ற அச்சுத்தொழில் வல்லார்!

தமிழ்இன இழிவு நீக்கத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்குமாக அயராது பொருது நின்ற போராளி!

மூன்றுமுறை தமிழகவிடுதலை மாநாடுகளை நடத்திய துணிவாற்றல் சான்ற வினையாண்மையர்!

தமிழ்மொழி தமிழ்மக்கள் தமிழ்நாட்டு நலன்களுக்காக முப்பத்தைந்து முறைகளுக்கும் மேல் சிறைசென்ற அஞ்சாநெஞ்சர்!

சலுகை பெறவும் சாதிகூடாதென வாழ்ந்த சாதிமறுப்பாளர்! சாதிமறுத்து மணம்புரிந்து கொண்டவர்! தம் மக்களுக்கும் அவ்வாறே மணம்செய்வித்தவர்!

                                                                                                 


இவ்வாறு பல்வேறு சிறப்புகளுக்கு உரியவரே துரை.மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.

தமிழகப் பிரிவினையை வலியுறுத்தி எழுதியும் பேசியும் வந்ததாலும் அதற்கென மாநாடுகள் நடத்தியதாலும் வேறு காரணங்களாலும் இப்பெரியாரின் அளப்பரிய ஆற்றல், அவர் உயிரோடிருந்த காலத்தும்,  மறைந்தபின்னரும்கூட இருட்டடிக்கப் பட்டே வருகின்றது.

செயல்திறன் பற்றிய அடிப்படைத் தெளிவில்லாது அலமரலுற்று உழலும் மக்கள்பால் கழிவிரக்கங் கொண்டு, இவ்வரும்பெரும் ஆற்றல் சான்ற பெரியார் ஆக்கித்தந்த நூலே, "செயலும் செயல்திறனும்" என்ற தலைப்பினதாகும்.

நூலாக்க விளக்கம்

சிறுவர்களுக்கான  'தமிழ்ச்சிட்டு'  இதழில்,  பாவலரேறு பெருஞ்சித்திரனார் "செயலும்-செயல்திறனும்" என்ற                                                                                                    தலைப்பில்  1980  முதல்  1987  வரையிலான ஏழாண்டுக் காலத்தில் ஆசிரியருரைக் கட்டுரைகளாக 56 இதழ்களில் எழுதி வெளியிட்டார். அக்கட்டுரைகளே, பின்னர் நூல் வடிவம் பெற்றன. கழகக்கால (சங்ககால) இலக்கியப் பாடல்களுக்கு இணையாகப் பாட்டியற்றும் ஆற்றல் பெற்ற பாவலரேறு ஐயா அவர்கள், பண்டைய உரையாசிரியர்களின் செறிவான புணர்ப்புமிக்க உரைநடைபோலும் எழுதுவதிலும் தனித்திறம் பெற்றவராயிருந்தார். இருந்தபோதிலும் இந்நூலைச் சிறுவர்களும் பரிந்து கொள்ளுமாறு எளியநடையில் எழுதியிருக்கின்றார். இந்நூலின் முதற்பதிப்பு 1988ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 2005ஆம் ஆண்டிலும் வந்தன.

நூலின் உள்ளடக்கம்

செயல்களை எவ்வெவ் வகையில் எவரெவர் மேற்கொள்ள வேண்டும்? எவ்வெவ்வாறு செய்யவேண்டும்? என்னென்ன முயற்சிகள் முன்னேற்பாடுகள் அவற்றுக்குத் தேவை? செயல்களுக்கு இடையில்வரும் இடையூறுகள் இடர்ப்பாடுகள் பொருள்தடைகள் ஆள்தடைகள் எவ்வெவ்வாறு இருக்கும்? அவற்றை எப்படியெப்படிக் கடந்து மேற்செல்லுதல் வேண்டும்? அவற்றில் என்னென்ன சிக்கல்கள் இருக்கும்? அவற்றை எப்படியெப்படித் தீர்ப்பது? –- என்பவை பற்றியும், நல்ல அரிய பயனுள்ள செயல்களைத் திறம்படச் செய்வது எப்படி? எவ்வெவற்றில் எத்தகைய கவனமும் கண்காணிப்பும் கொள்ளுதல் வேண்டும்? அவற்றுக்கு எவரெவரைத்


துணையாளராகவும் பணியாளராகவும் கொள்ளுதல் வேண்டும்? அவர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? -  என்பவை பற்றியும் எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் இவ்வரிய நூல் நன்கு எடுத்து விளக்குவதாக ஆசிரியரே முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

நோக்கம்

முன்னுரை முதலாக இருபத்தைந்து தலைப்புகளில் விரிவாகவும் விளக்கமாகவும் எளிதில் புரியுமாறும் எழுதப்பட்டுள்ள இந்நூல், 250 பக்க அளவில் அமைந்துள்ளது. 'செயல்களே உயர்வதற்கு அடையாளம்; பெருமைக்கும் சிறுமைக்கும் செயல்களே அடிப்படை; தமக்கும் பிறர்க்கும் இன்பம் தரும் பயனுடைய அழியாத செயல்களே அறச்செயல்கள்' என்று விளக்குகின்ற ஆசிரியர், இளைஞர்களின் மனவுணர்வு தீயவற்றில் வேரூன்றா வண்ணம் கட்டிக்காக்கும் கடமை உணர்வில் இந்நூலில் கருத்துகள் வைக்கப்படுகின்றன எனக் கூறுகிறார்.

நூலின் விளக்கம்

எந்த ஒரு செயலையும் தொடங்குதற்குமுன் நன்றாக, நம் அறிவு முழுமையாக அதில் ஈடுபடும் அளவிற்கு எண்ணிப் பார்க்க வேண்டும்; சிந்தனையும், ஆர்வமும், அறிவும் அதிலேயே ஈடுபடுத்தப் படவேண்டும். நமக்கு இயலும் வினையளவு - ஒல்லும் அளவு -–அறிந்து வினைசெய்தல் வேண்டும். வினையின் முடிவாக விளையும் பயன் நல்லதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

நம் தகுதிக்குத் தாழ்வான செயல்களைத் தவிர்க்கவேண்டும். வினையில் ஈடுபடத் தேவையான பணம், உழைப்பு, காலம் குறித்தும் ஆய்ந்துபார்க்க வேண்டும். நம் திறமையைச் சரியாக மதிப்பிட்டுக் கொள்வதில்தான் நம் வெற்றியே அடங்கியிருக்கின்றது. எதிர்ப்புகளைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை இருந்தாலொழிய செயலில் படிந்து ஈடுபட முடியாது.

வினைக்கு முதல் தேவை பொருள். அடுத்தது கருவி. வினையறிந்த தக்கவர்களைத் துணைவர்களாகக் கொள்ளுதல் வேண்டும். வினைக்குரிய காலத்தையும் இடத்தையும் நன்கு தேர்ந்து திறம்படச் செய்யவேண்டும். உடலுறுதி, உள்ளவுறுதி, அறிவுறுதி ஆகியவை மிகவும் தேவை. இறங்கிய செயலில் பின் வாங்காது தாழ்ச்சியுறாமல் உழைக்க வேண்டும். முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும் என்பன வற்றையெல்லாம் எடுத்துக்காட்டுகளோடும் மேற்கோள்களோடும் நேர்த்தியாகச்,  சுவைபட இனியநடையில் நூலில் விளக்குகின்றார்.


இன்னும், இடையூறுகண்டு மனந்தளராமை, இழப்புகண்டு சோர்வுறாமை, துன்பம் கண்டு துவளாமை, தவறான வழிகளைக் கடைப்பிடியாமை, துணைவருவாய் கருதி வேறு வினைகளில் ஈடுபடாதிருத்தல், துணையாளரையும் பணியாளரையும் அமர்த்துகையில் கவனிக்கவேண்டியவை பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறுகிறார்.

எச்சரிக்கைகள்

ஆசிரியர் செய்திகளைச் சுவைபட விளக்கும் திறத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு :

எச்சரிக்கைகள் ஆறு எனக் குறிக்கின்றார். இதற்குப்பின் இது, இதனால் இது, இதற்காக இது, இதுபோனால் இது, இது வந்தால் இது, இதுவே இது என்ற அந்த ஆறு எச்சரிக்கைகளைப் பற்றிக் கூறி அவர் விளக்குவதைப்பார்ப்போம்.

எச்சரிக்கை 1. இதற்குப்பின் இது: "இந்த வினையைச் செய்து முடித்தபின்னர் இந்த வினையைச் செய்யவேண்டும்; அதற்குப்பின் இதைச்செய்ய வேண்டும் என்று வரிசை முறையாகத் திட்டமிட்டுக் கொண்டு ஒருமுறைக்குப் பலமுறையாக எச்சரிக்கையுடன் எண்ணிப்பார்த்துச் செய்யவேண்டும்" என்று விளக்கம் தருகிறார்.

மின்குமிழியைப் (electric bulb) பொருத்திவிட்டுப் பின்னர்ச் சொடுக்கியைப் ( switch) போடவேண்டும் என்று ஓர் எடுத்துக்காட்டையும், பேருந்து ஓட்டுநர், எந்திரம் ஓடிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டே வண்டியினின்றும் இறங்க வேண்டும் என்று இன்னோர் எடுத்துக்காட்டையும் தருகிறார். மேலும், ஆங்கிலத்தில் கூறப்படும் "one by one", "one thing at a time" என்னும் கருத்துமொழிகளும் இதையே வலியுறுத்தும் என்றும் விளக்குகிறார்.

இவ்வாறே, மற்ற ஐந்து எச்சரிக்கைகளையும் விளக்கிக் கூறுகிறார். அந்த எச்சரிக்கைகளுக்கு அவர் தந்துள்ள எடுத்துக்காட்டுகளுள் ஒவ்வொன்றை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்.

2. இதனால் இது : சமையல் முடித்தபின், அடுப்பை முழுவதுமாக அணைக்காமல், அரைகுறையாக அணைத்துவிட்டு வந்தால், காற்றில் கனன்று ஒரு சிறு நெருப்பும் வீட்டையே எரித்துவிடக்கூடும்.


3. இதற்காக இது : மிதிவண்டி, உந்துவண்டி சக்கரங்கள் அடிக்கும் சேற்றைத் தடுக்க, சக்கரங்களின் மேல் மட்காப்பு (mudguard) போடுதல்.

4. இது போனால் இது : பாய்மரக்கப்பலில் பாய்மரம் கிழிந்துவிட்டால் உடனடி பயன்படுத்தத்திற்குரிய வகையில் துடுப்புகளைப் பயன்படுத்தல்.

5. இது வந்தால் இது : மின்சாரத்தடை வந்தால் விசிறியும் மெழுகுத்திரியும் (candle) மண்ணெய் அடுப்பும் பயன்படுத்தல்.

6. இதுவே இது : திருகாணியைத் திருகி எடுக்க ஏற்ற திருப்புளி இல்லாத பொழுது அகலமான நுனியுடைய கத்தியையோ இரும்புக் கருவியையோ பயன்படுத்தல்.

எடுத்துக்காட்டான நிகழ்ச்சி

பாவலரேறுஐயா ஒரு சமையம், விழுப்புரத்தில் நடைபெறவிருந்த ஒரு கலந்துரையாடலுக்கு வரவேண்டியிருந்தது. விழுப்புரம் நகராட்சி வழிப்போக்கர் விடுதியில் மாடிப்பகுதி அறையைக் குறிப்பிட்ட இரண்டு நாட்களுக்குப் பதிவு செய்யம்படிக் கூறினார். விழுப்புரம் வழிப்போக்கர் விடுதியில் அதற்குமுன் இரண்டு மூன்று முறை தங்கியிருந்தவராகையால், அவ்விடுதியின் அமைப்பு வசதிகளைப்பற்றி அவருக்குத் தெரியும்.

அவர் கூறியவாறே அறையைப் பதிவு செய்தபின், செய்தியைத் தொலைப்பேசி வழியாகக் கூறியபோது, அவர், "தம்பி, விடுதிக் காவலரிடம் முன்பே சொல்லி வைத்துவிடுங்கள்; ஆறு மணிக்கெல்லாம் வந்துவிடுவோம் என்பதைச் சொல்ல மறந்து விடாதீர்கள்! மழைக்காலமாக இருப்பதால் இரண்டு குடை இருக்க வேண்டும்; மின்தடையின்போது பயன்படுத்த மண்ணெய் விளக்குகள் வேண்டும்! மெழுகுத்திரியும் இருக்கட்டும்! ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள தேநீர்க்கடை மூடியிருக்கும்! பேருந்து நிலையம் அல்லது தொடர்வண்டி நிலையத்திற்கருகில் போய்த் தேநீர் வாங்கிவரத் தெறுமக்குடுவை (thermos flask) தேவை! இரவில் சிற்றுண்டி தேவைப்படுவோருக்கும் ஏற்பாடு செய்யவேண்டும்!" என்றெல்லாம் சென்னையிலிருந்து கூறுவார்.

அவர் தம்வாழ்க்கையில் மேற்கொண்டிருந்த பட்டறிவும் நடைமுறைகளும்,    திருக்குறளில் ஆழ்ந்து அவர் மூழ்கியெடுத்த முத்துக்களும், அவருக்கே உரிய ஆழ்ந்தஅறிவுமே நூல் முழுவதிலும் கருத்துகளாக வெளிப்பட்டிருக்கின்றன என்பதற்கு இந்நிகழ்ச்சி                ஓர் எளிய சான்றெனலாம்.


அரிய விளக்கங்கள்

நுண்மாண் நுழைபுலத்துடன் சில சொற்களுக்கு அவர் கூறும் விளக்கங்கள் வேறெங்கும் காணமுடியாதவை. அவற்றுள் சில :

விருப்பம் என்பது உயிருக்கு ஏற்கெனவே தொடர்பான ஒரு பொருளின் மேல் தானாகச்செல்லும் மனநாட்டம்.

செப்பம் என்பது செவ்வையாக,  திருத்தமாக,  அழகாக, தவறில்லாதபடி என்க.

நுட்பம் என்பது மிகவும் பொருத்தமாக, கூர்மையாக, ஆழமாகக் கவனித்து என்க.

ஒட்பம் என்பது தெளிவாக, விளக்கமாக, அறிவுணர்வு புலப்படும்படி என்க.

காலம் என்பது வேளையோ, பருவமோ, நம் அகவையோ,  வினைக்குரிய சூழலோ என்றில்லாமல், எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு வாய்ப்புக்கூறு என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும்.

இடம் என்பது பாதுகாப்பான, வினை செய்வதற்குரிய, பகைவர்கள் எளிதில் நெருங்க இயலாத,    முயற்சிகளுக்கேற்ற வாய்ப்புகள் மிகுந்த இடம் என்று பொருள்படும்.

முதல் என்பது பொருளும், உழைப்பும், அவ்வுழைப்புக்கேற்ற அறிவும், இவ்வனைத்தையும் சிதறவும் தளரவும் செய்யாத ஊக்கமும் ஆகும்.

உறுதி என்பது உடலுணர்வுத் தன்மையையும் ஊக்கம் என்பது உள்ளஉணர்வுத் தன்மையையும் குறிக்கும். அவ்வாறு குறித்தாலும் உடலில் உள்ளமும் உள்ளத்தோடு உடலும் பொருந்தியிருப்பதால் பொதுவாக இரண்டின் தன்மைகளையுமே இவ்விரண்டு சொற்களும் குறிக்கக் கூடியன.

ஒருவன் பிறந்து தன்னை உலகுக்கு அறிவிக்க வேண்டும். அவ்வறிவித்தல் நிலைத்து நிற்றல் வேண்டும். அதற்குத்தான் புகழ் (ஒளி) என்று பெயர்.

அறியாமை ஒன்றைத் தெரிந்து கொள்ளாமை.

பேதைமை ஒன்றைத் தெரிந்து கொள்ள இயலாமை.


மூவுரம் என்பது உடல்உரம்,  உள்ளஉரம்,  அறிவுஉரம் என்பவற்றை - இவற்றின் உறுதிப்பாட்டைக் குறிக்கும். மூவுரம் மும்முரம் என்று திரிந்தது.

அறிவு மூன்று காலத்திற்கும் உரியது. அதன் பயன் நிகழ் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மட்டுமே உரியது.

கடந்தகால அறிவு வரலாறு. நிகழ்கால அறிவு வாழ்க்கை. எதிர்கால அறிவு அறிவியல்.

அறிவைப் பெறுவதற்கான ஐந்து வழிகள் காட்சி,  கேள்வி,  உசாவல்,  கல்வி, பாடு என்பன.

நமக்கு மட்டும் அறிவுண்டு என்று நினைப்பது போன்ற அறியாமை வேறிலது.

ஒருவன் தன்னையிழந்து தாமாக மாறுவதையே அன்புவாழ்க்கை, அருள்வாழ்க்கை, வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை என்று சான்றோர் கூறுவர்.

- இவைபோலும் பல விளக்கங்கள் நூலின் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

சமன்பாட்டு விளக்கங்கள்

இடையூறு கண்டு மனந்தளராமை என்ற தலைப்பில் அஞ்சாமை வேண்டும் என வலியுறுத்துகையில் அஞ்சாமையுடன் வீரமோ அறிவோ சேருங்கால் விளைவு எவ்வாறிருக்கும் என்பதைக் கணக்கியல் சமன்பாட்டு வகைபோல எழுதிக்காட்டுகிறார். அவை இவையே :

அஞ்சாமை + கோழைமை > தனிமை > தன்னலம்

அஞ்சாமை + வீரம் > ஓரளவு பயன்

அஞ்சாமை + அறிவு > செயலாண்மை

'இழப்புகண்டு சோர்வுறாமை' என்ற தலைப்பின் கீழும் இத்தகைய சமன்பாட்டு விளக்கங்களைக் காணலாம்.

உடல்தாக்கம், உள்ளச்சோர்வு, அறிவுத்தளர்ச்சி ஆகியவைபற்றி விளக்கியுள்ள செய்திகள் வேறெந்தத் தமிழ்நூலிலும் காணற்கரியன.


யார் - என்ன உணவு?

'இடையூறுகண்டு மனந்தளராமை'யில் உடல்நலம் பற்றிய செய்தியில் யார்யார் எவ்வெவ்வுணவை உண்கின்றனர் என்ற செய்தி விளக்கப்பட்டுள்ளது.

சிறந்த அறிஞர்கள் -  அறிவுநலந்தரும் உணவையே உண்கின்றனர்.

நன்கு கற்றவர்கள் -– உடல்நலத்துக்கான உணவையே உண்கின்றனர்.

ஓரளவுகற்ற பொதுவானவர்கள் - உடல்வலிவுக்கான உணவையே உண்கின்றனர்.

கல்லாதவர்களும் சிறிதே அறிவுள்ளவர்களும் -– உடல்தேவைக்கான எந்த உணவையும் உண்கின்றனர்.

கீழாக அறிவுள்ளவர்கள் - பசிக்காகவே உண்கின்றனர்.

அதனினும் கீழானவர்கள் - ஆசைக்காகவே உண்கின்றனர்.

விலங்குகளும் பறவைகளும் - உண்பதே உயிரியக்கமாகக் கொண்டன.

துணையாளரும் பணியாளரும்

வினைத்திறம் கொண்டவர்கள் (அறிவுணர்வு முதல் நினைவாற்றல் ஈறாக) நாற்பத்தோர் உணர்வுகளில் மிகக்கூர்மை உடையவர்களாக இருப்பர் என்றும் இவற்றுள், பெரும்பான்மையும் பொருத்தமாக உள்ள ஒருவரே இருவரே வினைத் துணைவர்களாக முடியும் என்றும் கூறுகிறார்.

மேற்கூறிய நாற்பத்தோர் உணர்வுகளை, அகஉணர்வுக் கூறுகள் அல்லது இயற்கை உணர்வுகள், புறஉணர்வுக் கூறுகள் அல்லது செயற்கை உணர்வுகள், உலகியல் உணர்வுக் கூறுகள் அல்லது செயற்பாட்டு உணர்வுகள் எனப் பிரித்துப் பட்டியலிட்டுள்ளார். இவ்வுணர்வுகளுக்குத் தக்க விளக்கமும் தந்துள்ளார்.

ஒருவரைப் பணியாளராக அமர்த்துவதற்கு முன்னர், அவருடைய பதின்மூன்று வகைக் குணநலன்களில் மிகு கவனம் செலுத்துதல் வேண்டுமெனக் கூறுகிறார். இவற்றுள் மிகுதியும் தகுதியுடையவர்களைத் தேறும்பொழுது,  செயலும் மிகு சிறப்புடையதாக இருக்கும் என்கிறார்.


நூலின் இறுதியில், செயல்திறத்திற்கு எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின்   'உரிமைச்சிலை'யைச்  செய்த செயல்திறத்தை விளக்கிக் கூறுகிறார்.

மேற்கோள்கள்

திருக்குறளின் சிறப்பைக் கூறும்போது, அற நூல், வாழ்வியல் நூல், அரசியல் நூல், பொருளியல் நூல், குமுகவியல் நூல், ஒழுக்கநெறி நூல், புரட்சி நூல், இனநல மீட்பு நூல், இன்ப நூல் எனப் பாவலரேறு அதன் பல்வேறு உயர்ச்சிகளை அவருடைய வேறொரு நூலில் விளக்குவார். இந்நூலில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட குறள்களை மேற்கோள் காட்டிச் செய்திகளை விளக்கியிருக்கின்றார். நூல் நெடுகிலும் திருக்குறளைக் கொண்டே மிகப்பெரும்பான்மையான செய்திகளை விளக்கிச் சொல்லியிருக்கின்றார்.

நல்வழி, வாக்குண்டாம், நீதிநெறிவிளக்கம், அகநானூறு, கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், திருமந்திரம் முதலான நூல்களிலிருந்தும் அவர் எழுதிய 'உலகியல் நூறு' நூலிலிருந்தும் மேற்கோள்கள் தந்துள்ளார். இவையும் தவிர, பல்வேறு பழமொழிகளையும் செய்திகளை விளக்கப் பயன்படுத்தியுள்ளார்.

இறுதியாக...

இதுவரையில் இவ்வகையில் தமிழில் வராத அரிய நூலாக இந்நூல் திகழ்கிறது. இது மிகைக் கூற்றோ வெற்றுப் புகழ்ச்சியோ இல்லை என்ற உண்மையை நூலைப்படித்தபின் நன்கு உணரமுடியும். இந்நூலில், அரசியல்சார்புக் கருத்து எதுவும் இல்லை. நாட்டின் சட்டக்கூறுகள் எதற்கும் புறம்பாக உள்ள கருத்து எதுவும் கிடையாது. இந்நிலையில், ஈடெடுப்பற்ற இந்த அறிவுநூலுக்கு இதுவரை எந்தப் பாராட்டோ பரிசோ அளிக்கப்படாதது, நாட்டின் பரிசளிப்பு முறையில் உள்ள குறைபாட்டையே எடுத்துக் காட்டுகின்றதெனத் துணியலாம்.

இந்நூலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டுமென்ற பாவலரேறுஐயாவின் விருப்பம் இன்றுவரை நிறைவேறவில்லை என்பது ஒரு வருத்தந்தரும் செய்தியாகும்.

அந் நன்னாள் விரைந்திடுக!

 (திருவெண்ணெய் நல்லூர்ப் புலவர் க.கதிர்வேலு   தம் தமிழ்ச்சோலைஎன்னும் இதழுக்குப் பாடல் கேட்டபோது எழுதித்தந்த பாடல் இது)

அந் நன்னாள் விரைந்திடுக!

       

உலகமுதன்  மொழியென்றே ஓர்ந்தாய்ந்தோர் தமிழினுயர்

வுரைக்கக் கண்டோம்!

உலகமுதல் நாகரிகம் ஒள்ளாய்வால் தமிழரதென்

றுறுதி செய்வர்!

உலகுயிர்பால் அன்பருளும் உயர்மானம் கொடைவீரம்

ஓம்பும் பண்பும்

உலகினிலே இயல்பாகக் கொண்டிருந்த இனமிதென

உரைக்கும் நூல்கள்!

 

பெருமையெலாம் மிகஅடுக்கிப் பேச்சாலே கவர்ந்தவர்கள்

பெற்ற ஆட்சி

திருடுதற்கும் கொள்ளைக்கும் திகழ்வாய்ப்பாய்க் கொண்டிங்கே

தீமை எல்லாம்

பெருகிடவே செய்தனரே! பிறங்கடைகள் தாய்மொழியைப்

பேணாப் போக்கில்

கருகிடவே விட்டனரே கறையற்ற சிறப்பெல்லாம்

கரைய விட்டே!

 

இன்றுள்ள தமிழர்நிலை எண்ணிடுவீர்! இயல்பாக

இவர்கள் பேச்சில்

ஒன்றலுறப் பிறமொழிகள்! ஒழிந்ததுதாய் மொழிவழியே

ஓதும் வாய்ப்பும்!

சென்றுதொழுங் கோவில்கள், செப்பிவழக் காடுமன்றம்

சேர எல்லாத்  

துன்றாட்சித் துறைகளிலும் தொகுப்பாகத் தமிழிலையே,

தொலைந்த தந்தோ!


 

பண்பாடும் நல்லொழுங்கும் பார்போற்றும் நல்லறங்கள்

பலவும் சொன்ன  

மண்ணிற்கே உரியவுயர் மாண்பெல்லாம் படிப்படியாய்

மறையச் செய்தே

கண்கெடுக்கும் இருதிரையின் காட்சியெலாம் தமிழர்தம்

கருத்தில் மாசு

மண்டிடவே புகுத்துநிலை மட்டின்றி நடக்கிறதே

மயக்கத் தாழ்த்தி!

 

ஆற்றுரிமை நெகிழ்ந்ததுவே! அணுத்தீமை கொடுவுலைகள்

அமைத்த தோடே

ஊற்றுநீர் நிலவளத்தை உறிஞ்சிடலும் நடக்கிறதே

ஊக்கத் தோடே!

மாற்றமிலா ஒட்டார மனத்திலிந்தி சமற்கிருதம்

வளர்த்தற் கென்றே

தேற்றமுறச் செயற்பாடு! தீந்தமிழை அழிப்பதற்கும்

திட்டம் உண்டே!

 

 எந்தநிலை யானாலும் எல்லாரும் சமமென்றே

இங்கே வாழ

செந்நெறியில் அமைவிலையால் சீறியெழுந் துரிமைபெறச்

சிறந்த ஈகச்

செந்தமிழ இளையோரின் செழும்படையொன் றமைத்திடுக

செப்ப மாக!

அந்நன்னாள் விரைந்திடுக! அந்தமிழர் அரசமைக!

ஆக்கம் சேர்க!

பெரியாரும் தமிழும்

                                   பெரியாரும் தமிழும்

(பாவலரேறு பெருஞ்சித்திரனார் பெரியார் பற்றிக்  கூறியவற்றில் தேர்ந்தெடுத்த பகுதிகள் அடங்கிய விளக்கவுரை)

இக்கால் பெரியார் ஈ.வெ. இராமசாமியாருடைய தமிழ் மொழி பற்றிய கருத்துகள் பற்றியும், குமுகாயச் சீர்திருத்தக் கருத்துகள் பற்றியும், தமிழக விடுதலை குறித்த கருத்து பற்றியும் பிற கருத்துகள் பற்றியும் பலராலும் பரவலாகப் பேசப்பட்டும் உறழாடப்பட்டும் வருகின்றன.

பெரியாரின் தொண்டு பற்றியும் தமிழைப் பற்றிய அவருடைய கருத்துகளைப் பற்றியும் இளைய தலைமுறையினர் உண்மையான செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரியாரைப் பற்றி 1958 முதல் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தேவையானபோதெல்லாம் எழுதியிருக்கின்றார். பெரியாரைப் பாராட்ட வேண்டிய நேரங்களில் வேறெவரையும் விடப் பாராட்டியும் அவருடைய கருத்துகளில் எதிர்த்துக் கண்டிக்க வேண்டியவற்றை யெல்லாம் வேறெவரினும் துணிவாகக் கண்டித்தும் பரவலாகத் தெளிவாக எழுதியுள்ளார்.

அவர் பெரியார் பற்றிப் பாராட்டியும் போற்றியும் எழுதியுள்ள சிலவற்றைப் பார்ப்போம்:

(1958இல் தமிழ்நாடு நீக்கிய இந்தியப் படத்தை எரித்தற்காகப் பெரியார் சிறைப்பட்டு மீண்டபொழுது பாவலரேறு எழுதிய பாட்டின் ஒரு பகுதி)

நாட்டைக் குழப்பிடும் சாதியும் மதமும்

நசுங்கிட எழுந்ததே அரிமா! அதன்

பாட்டைக் கெடுக்கும் நாய்க்குல மழிக்கப்

பெரும்படை திரண்டதே எங்கும்!

பேச்சும் துணிவும் பெருந்திறல் உரனும்

பணிவும் அதன்கை வாளாம்!..(1958).

அவர் (பெரியார்) ஒருவர் பிறந்திருக்கவில்லையானால், மக்கள் அறியாமைச் சேற்றில் இன்னும் நெளிந்துகொண்டுதாம் இருப்பர் என்பதை எவரும் மறுத்தல் முடியாது. அவர் ஒருவரின் குரல் இத் தமிழகத் தெருக்களில் எதிரொலித்திருக்கவில்லையானால், இன்றுள்ள தமிழர்கள் தலைகளில் குடுமிகளும், நெற்றிகளில்


சமயக்குறிகளும், வாய்களில் பாகவத இராமாயணப் பழங்கதைப் பேச்சுகளும்தாம் நீக்கமற நிறைந்திருக்கும்” (1966).

குமுகாயப் போராட்டத்தில் இவர் நல்ல வெற்றிகண்டுள்ளார். தூங்கிக்கொண்டிருந்த தமிழர்களைத் தட்டியெழுப்பித் தன்மான உணர்வை ஊட்டிய இவர் தொண்டிற்குத் தமிழர்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்”(1967).

(கழகக்காலப் பாடல்களை ஒத்த ஆசிரியப்பா தொகுப்பான நூறாசிரியம்எனும் நூலில் பாவலரேறு, பெரியார் குறித்து எழுதிய 24ஆம்எண் பாவின் ஒரு பகுதி)

“…கொல்வரியின் சொல்பாய்ச்சித்

தொல்குடிமை கட்டழித்த

ஆரியத்தை அடிதுமித்து

குலக்கோ டரிந்து சமயக்கா லறத்துணித்துக்

கலக்குறு கொள்கைக் கடவுண் மறுத்தே

யாரும் யாவும் யாண்டும் துய்ம்மென

புதுமைப் பொழிவித்துப் பொதுமை தழைவிக்கும்

அரிய ராகலி னவரே

பெரியா ரென்னும் பெயரி யோரே!” (1970)

பெரியார் ஒரு கட்சியின் தலைவரல்லர்; ஓர் இனத்தின் தலைவர்; ஒரு காலத்தின் தலைவர்: ஒரு வரலாற்றின் நாயகர். அவர் தோன்றியிருக்கவில்லையானால் ஓர் இனத்தின் அடிமை வரலாறே முற்றுப் பெற்றிருக்காது. ஒரு நாட்டின்மேல் போர்த்துக் கிடந்த இருள் விலகியிருக்காது. தமிழனின் தலையெழுத்தே மாற்றப் பெற்றிருக்காது. தன்மானமற்ற நம் இனம் ஆரியச் சேற்றில் மேலும்மேலும் அழுந்திக் கதிகலங்கிப் போயிருக்கும்

ஒரு முழு இனத்தின் துயரைத் துடைக்க, இழிவைப்போக்க அடையாக அப்பிக் கிடந்த வரலாற்றுக் கீழ்மையைத் தோண்டி எடுத்துத் துப்புரவாக்க, அயராது ஒருவர் தனி ஒருவர் அல்லும் பகலும் பாடுபடுகின்றாரென்றால், அவர் பெரியார் ஒருவர்தாம்!’’ (1971).

(பெரியார் மறைந்தபோது பாவலரேறு உணர்வு மேலோங்கப் பாடிய ஆறு அறுசீர் மண்டிலப் பாக்களுள் ஒன்று)

எப்பொழுதும் எவ்விடத்தும் எந்நேர மும்தொண்டோ(டு)

இணைந்த பேச்சு!

முப்பொழுதும் நடந்தநடை! முழுஇரவும் விழித்தவிழி!

முழங்கு கின்ற


அப்பழுக்கி லாதவுரை! அரிமாவை அடக்குகின்ற

அடங்காச் சீற்றம்!

எப்பொழுதோ அடடா,இவ் வேந்தனையித் தமிழ்நாடும்

ஏந்தும் அம்மா? (1974).

(‘தென்மொழியின் பெரியார் நூற்றாண்டுச் சிறப்பிதழில் வந்த பாடலின் ஒரு பகுதி)

பெரியார் நம்மிடைப் பிறந்திரா விட்டால்

உரியார் நாமெனும் உண்மை,பொய்த் திருக்கும்

ஆரியர்க் கின்னும் அடியராய்க் கிடப்போம்

பூரியர் புராணப் புளுகுக் குப்பையுள்

சாதிச்சகதியுள் சமயச் சேற்றினுள்

புதையுண் டிருப்போம்! புழுக்களாய் மேய்வோம்!...

சாக்ரடீசு, புத்தர், திருவள்ளுவர், ஏசு, நபி, காந்தி போலும் காலத்தின் எல்லையாக அமர்ந்துவிட்டவர் பெரியார். ஆனால் அவர்கள் செய்த அருஞ்செயல்களைவிட ஒருபடி மேலாகவே செய்தார் பெரியார். அவர்கள் அனைவரும் நன்மைகளையே செய்தார்கள்; பரப்பினார்கள்; பேசினார்கள்! ஆனால் பெரியார் தீமைகளையே எதிர்த்துப் போரிட்டார்”…

கிரேக்க அறிஞர் சாக்ரடீசு பேசிய பேச்சுகளைவிட பெரியார் பேச்சுகள் அளவிலும், உணர்விலும் பலமடங்கு மிகுந்திருக்கும்….

சாக்ரடீசு பேசியதைவிட, நடந்ததைவிட பெரியார் அதிகமாகப் பேசினார்; மக்களுக்காக இரவுபகல், பனிகுளிர், வெயில்மழை, மேடுபள்ளம், காடுநாடு, சிற்றூர் பேரூர் என்று பாராமல் நேரிடையாக நடந்து மக்களைப் போய்க் கண்டார்; அவர்களுக்காகக் கவலை கொண்டார்; அவர்களுக்காக மணிக்கணக்காகப் பேசினார்; அவர்களின் நரம்புகளிலும் குருதியோட்டங்களிலும் தன்மான உணர்வையும் தன்னம்பிக்கையையும் ஊட்டி உணர்வேற்றினார்”…

அவருடைய கொள்கைகளில் பிழைகள் இருக்கலாம்; கருத்துகளில் தவறு இருக்கலாம்; ஆனால் முயற்சிகளில் அவர் தூய்மையானவர்; மக்களுக்குழைத்த உழைப்புகளில் மாசில்லாதவர்; பொதுத்தொண்டுக்கே இலக்கணமானவர்; வரலாற்றில் அவரைப்போல் மக்களுக்காக உழைத்தவர்கள் மிகக் குறைவானவர்கள்.

தம் வாழ்வுக்கென எதையும் தம் அறிவால் சிந்தித்துக் கொள்ளாத அவர், தம் மகிழ்ச்சிக்கென எதையும் தம்கண்களால்


பார்த்துக்கொள்ளாத அவர், தம் தேவைக்கென எதையும் தம் காதுகளால் கேட்டுக்கொள்ளாத அவர், தம் உயிர்ப்புக்கென ஒரு நொடியும் மூச்சுக்காற்றை உள்வாங்காத அவர், தம் இன்பத்துக்கென ஓரிடத்திலும் தம் உடலைக்கிடத்தாத அவர், தமக்கென ஒருசொல்லும் பேசியிராத அவர், ஒரு முனிவர்போல் வாழ்ந்தார்; துறவிபோல் அலைந்தார்; ஆனால், ஒரு தொழும்பனைப்போல் இவ்வுலக மக்களுக்குத் தொண்டு செய்தார்”. (1978).

(1982இல் காஞ்சி சின்னசங்கரன் பெரியார் விதைத்தவை நச்சு விதைகள்என்று கூறியபோது எழுதிய நெடும்பாவின் ஒரு பகுதி)

கருகிப்போய்க் கிடந்தயிந் நாட்டிடை வந்தே

உருகி உருகி உயிரைத் தேய்த்தே

ஒளியைப் பரப்பிய ஊழித் தலைவராம்

அளிசேர் எங்கள் அருமைப் பெரியார்

தன்மான ஊற்றினைத் தகைமைத் தலைவனை

மண்மானங் காத்த மாபெரு மீட்பனை

அரியாருள் எல்லாம் அருஞ்செயல் ஆற்றிய

பெரியார் என்னும் பெரும்பே ராசானை

இழிப்புரை சொல்வதா? சொல்லியிங் கிருப்பதா? (1982).

(1983இல் பெரியாரையும் பாவேந்தரையும் பட்டிமன்றத்திற்கும் பாட்டரங்கத்திற்கும் மட்டுந்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா?’ என்னும் தலைப்பில் எழுதிய பாடலின் ஒரு பகுதி)

பெரியார் உணர்வினைப் பாவேந்தர் பீடினை

அறியாத் தமிழராய் ஐயகோ அழிகிறோம்!

தமிழர் இனமே! தாழ்ந்துபோம் இனமே!

இமியும் பொறுத்திடற் கில்லை! இனியேனும்

அமிழா உணர்வினால் ஆர்ந்துடன் எழுகவே! (1983).

பெரியாரின் தொண்டு இந்த உலகத்திற்குக் கிடைக்காமல் போயிருந்தால், இந்த இனம் இன்னும் ஒரு 500, 1000 ஆண்டுக் காலத்திலே படிப்படியாகத் தேய்ந்துபோய்ப் பழைய கிரேக்க இனம்போல் இந்த உலகத்தை விட்டே அழிந்து போயிருக்கும். அதை நான் துணிந்து சொல்வேன். ஏனென்று சொன்னால் மொழி வழியிலே, இன வழியிலே, இலக்கியங்கள் வழியிலே, கலை வழியிலே, ஆட்சி அரசாளுமை வழியிலே ஆகிய எல்லாவற்றிலும் ஆரிய இனம் நாட்டைக் கவ்வியிருந்தது. அந்த உண்மைகள் யாராலும் உணரப்


பெறாமலிருந்தன. தொடக்கக் காலத்திலே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் காலத்திலே ஆரியம் இந்த நாட்டைக் கவ்வுகின்ற நிலையை - அதுபற்றி எச்சரிக்கைக் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து எந்தப் புலவரோ, எந்த அறிஞரோ அல்லது எந்த ஒரு தலைவரோ அல்லது எந்த ஒரு அரசரோ இனத்துக்கான வளர்ச்சிக்காக உண்மையான மீட்சிக்காக அறிவு முன்னேற்றத்திற்காக எந்தக் கருத்தையும் நூல் வடிவாகவோ அல்லது வேறுவகையான தொண்டு வடிவாகவோ சொன்னதுபோல நான் படித்ததில்லை

அறிவு முன்னேற்றத்திற்கு உண்மையாகவே அடிப்படைத் தேவையாக இருக்கின்ற அந்தக் கல்வி வளர்ச்சியிலும், தன்மான வளர்ச்சியிலும், பகுத்தறிவு வளர்ச்சியிலும் இந்த இனத்தினுடைய உண்மையான அறிவு ஊற்றுக் கண்ணைத் திறந்துவிட்டவர் தந்தை பெரியார் தாம்’ (1989).

திருவள்ளுவருக்குப்பின், தந்தை பெரியாரைத் தவிர வேறு எவரையும் நம்மால் முழு அறிஞராக முழுத்தலைவராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை

தந்தைபெரியாரின் பெருந்தொண்டின் நோக்கம் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், தமிழன் ஒவ்வொருவனும் தன்மானத்துடனும், தன்னுரிமையுடனும், தன்னாட்சியுடனும் வாழவேண்டும் என்பதே! இந்த நோக்கத்திற்காகத்தான் அவர் உழைத்தார், பெருஞ்சுமை தாங்கினார்; பெருந்துயர் உற்றார். (1989).

இனிப், பெரியாரின் தமிழ்மொழி தொடர்பான கருத்துகளை எதிர்த்தும் கண்டித்தும் பாவலரேறு எழுதியுள்ள சிலவற்றைப் பார்ப்போம்:

பெரியார் கரிநெய் கொண்டழித்த இந்தியை இப்பொழுது படித்துக் கொள்ளுவதில் தவறில்லை என்று அவரின் வாய் முழக்கமிடும் அளவிற்கு அவர் நெஞ்ச வலிமை குன்றிப்போய் விட்டமைக்காக நாம் வருந்துகின்றோம்” (1966).

தமிழ்மொழியைப் பற்றிய பெரியாரின் கருத்தும் குமுகாயத் தொண்டைப் பற்றிப் பக்தவத்சலம் பேசும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான், பக்தவத்சலம் ஆரிய அடிமை. பெரியார் திராவிட அடிமை. இன்னுஞ் சொன்னால், குமுகாய அமைப்பில் இராசாசியால் எப்படித் தமிழர் இனம் அழிகின்றதாக இவர் கூறுகின்றாரோ, அப்படியே மொழியியல் துறையில் தமிழ்வளர்ச்சிக்கு இவர் ஓர் இராசாசியாகவே இருக்கின்றார்


தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் இவர் அதன் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவே இருந்திருக்கின்றார். ஆரியப் பார்ப்பனர்களின் தில்லுமல்லுகளையும், அவரால் தமிழ்க்கு நேர்ந்த நேரவிருக்கின்ற கேடுகளையும் புடைத்துத் தூற்றி எடுத்துக் காண்பிக்கும் மதுகை படைத்த இவர், ஆரிய மொழியால் தமிழ்மொழிக்குக் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக நேர்ந்த தீங்கை ஒப்புக்கொள்வதில்லை; ஒரோவொருகால் ஒப்புக்கொண்டாலும் அதை விலக்க எவ்வகை முயற்சியும் செய்வதில்லை; ஒரோவொருகால் செய்தாலும் அதைக் கடனுக்காகவே, அவருடன் சேர்ந்திருந்த உண்மைத் தமிழன்பர்தம் கண்துடைப்புக்காகவே செய்திருக்கின்றார்

தமிழில் என்னஇருக்கிறது? என்று இவர்கேட்கும் வெறுப்புக்கொள்கை (Cynicism) தான் இவர்காணும் பகுத்தறிவு என்றால் அப் பகுத்தறிவு நமக்கு வேண்டுவதில்லை. உலகில் உள்ள மாந்த மீமிசைக் (Supernal) கொள்கைக்கு வழிகாட்டாத இவர் குமுகாய அமைப்பு நமக்குத் தேவையில்லை

ஆரிய அடிமைப்புலவர்கள் சிலர் இடைக்காலத்தில் ஆக்கிவைத்த கம்பஇராமாயணம், பெரியபுராணம், வில்லிபாரதம் முதலிய பார்ப்பன அடிமைப் பழங்கதை நூல்களே தமிழ் என்று நினைத்தால் தமிழ்மொழியில் மாந்த வாழ்விற்கான இலக்கியநூல்களே இல்லை என்பதை நாமும் ஒப்புக்கொள்ளலாம். ஆனால், இப்பொழுது உள்ள கழக நூற்களையும், இறந்துபட்ட ஆயிரக்கணக்கான மெய்யிலக்கியங்களையும் கண்டும் கேட்டும், உணர்ந்தும்கூட இவர் தமிழைப் பழிப்பதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேண்டுமானால் தமிழ்மொழியில் என்னென்ன இல்லை என்று இவர் கூறட்டும்; அதன்பின் நாம் என்னென்ன இருக்கின்றது என்று காட்டுவோம்

தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ள - புகுத்தப்பட்டுள்ள இடைக் காலக் கருத்துகளைப் பற்றி ஆராய்ந்து, அக்கருத்துகள் யாவும் பிறரால் இம்மொழி பேசிய மக்களை ஏமாற்றுவதன் பொருட்டு எழுதிவைக்கப் பட்டதாகும் என்று தெரிந்த இவர், அப் பாழ்வினைக்குத் தமிழ்மொழி மேல் குற்றங் கூறுவது எப்படிச் சரியாகும்?

இக் காலத்துச் செய்முறை அறிவுநூலை அக் காலத்திலேயே எப்படி எழுதி வைத்திருக்க முடியும்? என்றாலும் நம் தமிழில் உள்ள நூல்கள் அழிக்கப்பட்ட ஒரு நிலையில் நாம் இத்தகைய கேள்வியை இரக்க உணர்வோடு கேட்கவேண்டுமேயன்றி, இழிவுணர்வோடு கேட்பதும், தமிழையே காட்டுமிராண்டிக் காலத்து மொழி, நாகரிக


காலத்திற்குப் பகுத்தறிவு காலத்திற்குப் பொருந்தாத மொழி என்று இழித்துரைப்பதும் ஈ.வெ.ரா.வின் பேதைமையையே காட்டும்”…

இவர் அரசியலைப் பொறுத்தவரை ஓர் இலெனினாக இருக்கலாம்; குமுகாயவியலைப் பொறுத்தவரையில் ஒரு கமால் பாட்சாவாக இருக்கலாம்; பொருளியலைப் பொறுத்தவரை ஒரு மார்க்சாக இருக்கலாம்; சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை ஒரு பெரியாராகவும் இருக்கலாம். ஆனால் மொழித்துறையைப் பொறுத்தவரையில் இவர் வெறும் இராமசாமிதான்

தமிழர்களுக்கு விடுதலை தேடித்தருகின்றேன் என்று கூறும் ஒரு தலைவர், தமிழைப் பற்றியும் உண்மைத் தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் தகுதிக் குறைவாகப் பேசித் திரிகின்றார் என்றால், அஃது அவர்க்கு மட்டுமன்று தமிழர் எல்லாருக்கும் வந்த இழிவாகும். தமிழ்நாட்டுக்கே வந்த இழிவு. இஃது அவர் எதிர்த்து வரும் ஆரிய இனத்துக்கு வேண்டுமானால் மகிழ்வூட்டுவதாக இருக்கலாம்

பிறரை எப்படிக் கண்களை மூடிக்கொண்டு பின்பற்றக்கூடாது என்று இவர் கூறுகின்றாரோ, அப்படியே இவரையும் உண்மைத்தமிழர், கண்களை மூடிக்கொண்டு பின்பற்றக்கூடாது என்று எச்சரிக்கின்றோம்” (1967).

நம்மைப் பொறுத்தமட்டில் பெரியார் குமுகாயச் சீர்திருத்தத்தில் பிராமண சூத்திரப் பெரும் போராட்டத்தில் - பெரியார்தாம்! அதில் ஐயமில்லை. ஆனால் தமிழ்மொழி பற்றியோ, தமிழர் வரலாறு பற்றியோ பிற அறவியல் செய்திகளைப் பற்றியோ பேசுவதில் அவர் சிறியாரே!...

தமிழகத்தில் இருந்துகொண்டிருப்பதாலும், தமிழில் பேசத் தெரிந்திருப்பதாலுமே தமிழறிஞர் ஆகிவிட முடியாது என்பதைப் பெரியார் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் (1967).

பாவலரேறு பெரியாரைப் பாராட்டிப் போற்றும் பகுதிகளைப் பாடல் வடிவிலும் உரைநடையிலும் பரவலாகப் பேரளவில் பார்க்கலாம். அதைப் போன்றே இன்றியமையா நேரங்களில் அவரை எதிர்த்தும் கண்டித்தும் எழுதியவற்றையும் காணலாம். இன்றைய தமிழ் இளையோர் மேலே எடுத்துக்காட்டப்பட்ட செய்திகளில் கருத்தூன்றித் தெளிவுபெற்று வினையாற்ற வேண்டுமென்று நற்றமிழ் நல்லன்புடன் அவர்களைக் கேட்டுக்கொள்கின்றது.   

(புதுவை நற்றமிழ் சனவரி-பெப்ருவரி 2025 இதழில் வந்தது)