செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

மூவகைத் தகுதி வழக்கு



மூவகைத் தகுதி வழக்கு
---------------------------

1. இடக்கரடக்கல் (Euphemism)

ஒன்றிற்கு இரண்டிற்குப் போதல்,
பவ்வீ.

2. மங்கலம் (Euphemism)

கொடித்தட்டுதல் = பாம்பு கடித்தல்
பெரும்பிறிது = சாவு.

3. குழூக்குறி (Conventional terms)

செந்தலை = அரைக்கால்
கருந்தலை = கால்
தங்கான் = அரை
அரும்பு = அரிசி

---------------------------------------------------------------------------------------------------
(தமிழ் வரலாறு 1, பக்கம் 101,102, - பாவாணர், தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை- 600017)
----------------------------------------------------------------------------------------------------

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

தமிழர்கள் மட்டுமே மொழித்தூய்மையை வலியுறுத்துகிறார்களா?



தமிழர்கள் மட்டுமே மொழித்தூய்மையை வலியுறுத்துகிறார்களா?
---------------------------------------------------------------------------------------------------------

                                 

     ஆங்கிலத்தில் பிரெஞ்சு இலத்தீன்மொழிச் சொற்கள் கலந்து பொருட்குழப்பத்தை ஏற்படுத்துவதால் அம்மொழிகள் கலப்பற்ற தூய ஆங்கிலம் எழுத வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார் ஆங்கில வரலாற்று ஆசிரியர் பிரீமன் என்பவர்.தனிஆங்கிலக் கழகம்’ (society for pure English) என்ற அமைப்பு 1918 முதல் இயங்கி வருகின்றது.

     பிரெஞ்சு மொழியில் பிறமொழிச்சொற்களை நீக்குவதற்கென்றே பிரான்சு நாட்டின் தலைவராயிருந்த திகால் பல சட்டங்களை இயற்றினார்.
செருமானியரும் மொழிச் சீர்திருத்தத்தில் பல அயற்சொற்களை விலக்கினர்.

     புரட்சியாளர் இலெனின், ‘உருசிய மொழியைக் கெடுப்பதை நிறுத்துங்கள்; பிறசொற் கலப்பை எதிர்த்துப் போரிடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டவராவார்.

     துருக்கியின் வல்லாட்சியராக, வல்லதிகாரியாக இருந்தவர் கமால் அத்தாதுர்க் ஆவார். அந்தக் கமால் அத்தாதுர்க், துருக்கி மொழியில் கலந்திருந்த இருபதாயிரம் அரபி, பாரசிகச் சொற்களை நீக்கிவிட்டு 1,58,000 தூய துருக்கிச்சொற்களை உருவாக்கினார்.

     சீன மொழி தூய சீனமாக்கப்பட்ட பிறகு, மாண்டரின் எனப்பட்டது. தூய சீன மொழியையே பேசவேண்டுமென்று பொதுவுடைமை அரசு கட்டளையிட்டது.

     இங்கே, இந்தியாவில் கருநாடகத்தில், தூய கன்னட இயக்கம் திருள் கன்னடம் என்றும் அச்ச கன்னடம் என்றும் வழங்கப்பட்டது.

     அச்ச தெலுகு இயக்கம் தூய தெலுங்கில் இலக்கியங்களைப் படைத்தது.
 
     பச்ச மலையாளம் என்ற பெயரில் தனிமலையாளம் வழங்கப்பட்டது.

     இந்தச் செய்திகளையெல்லாம் முனைவர் சாரதா நம்பி ஆரூரன் தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்என்ற நூலில் (2008இல் வெளிவந்தது) மிக விரிவாகவும், தெளிவாகவும் அடிப்படைச் சான்றுகளோடும் தந்துள்ளார்.

     பிரெஞ்சு மொழியிலும் சீன மொழியிலும் அயற்சொற் கலப்பு தண்டனைக்குரிய குற்றமாக உள்ளதை அறிகிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------
                                                   
                                                                      

புதன், 2 ஆகஸ்ட், 2017

தன்னலந் தவிர்! - புறநானூற்றுப் பாடல்!

தன்னலந் தவிர்! - புறநானூற்றுப் பாடல்!
 --------------------------------------------------------------

புறநானூற்றுப் பாடலொன்றைப் பிழைகளோடு முகநூலில் எழுதியிருந்ததைக் கண்டு, அப்பாடலைப் பிழையின்றி எழுதிப் பாடலின் பொருளையும் பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன். அதனைக் கீழே காண்க:

=================================================== தமிழிலக்கியப் பாடல்களைத் தப்பும் தவறுமாக எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்!
-----------------------------------------------

தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கும்,
உண்பது நாழி உடுப்பவை இரண்டே!
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே!
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே!    - புறநானூறு 189.


தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிறவேந்தர்க்குப் பொதுவாதலின்றித் தமக்கே உரிமையானதாக ஆண்டு, வெண்கொற்றக் குடையால் நிழல்செய்த அரசர்க்கும் இடை யாமத்தும் பகலும் தூங்காது, விரைந்த வேகங்கொண்ட விலங்குகளை வேட்டையாடித் திரியும்  கல்வி இல்லாத ஒருவனுக்கும் உண்ணப்படும் பொருள் நாழி அளவினதே! உடுக்கப்படுபவை இரண்டு உடைகளே! இவை போன்றே பிற உடல் உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கும். ஆகவே, செல்வத்தால் பெறும் பயனாவது கொடுத்தல் ஆகும். செல்வத்தை நாமே நுகர்வேம் என்று கருதின் தவறுவன பலவாம்.   
--------------------------------------------------------------------------