திங்கள், 23 ஜனவரி, 2017

பாவலரேறு ஐயாவுக்கு ஒரு தொலைவரி!



பாவலரேறு ஐயாவுக்கு ஒரு தொலைவரி!
---------------------------------------
 

ஐயா!

உங்கள் உழைப்பு!

உங்கள் ஈகம்!

உங்கள் வாழ்க்கை!

உங்கள் எழுத்து!

உங்கள் மேடைமுழக்கம்!

உங்கள் பாட்டுப் பெருமுழக்கம்!...



எதுவும் வீணாகவில்லை ஐயா!

பயனளிக்கத் தொடங்கிவிட்டது!



வடவாரிய வல்லாண்மை விலங்குத்தனமான அதிகார வலிவிலிருந்தும்...

அஞ்சிப் பார்க்கவேண்டிய நிலையை இன்று நந்தமிழ் இளைஞர்கள் உருவாக்கிக் காட்டியுள்ளனர் ஐயா!



ஏறுதழுவல் மீட்பிற்கான

போராட்டக் களமெங்கும்

தனித்தமிழ்நாடுமுழக்கம் கேட்டு

வல்லதிகாரத் தில்லி

வாயடைத்து நிற்கின்றது ஐயா!



இன்றில்லாவிட்டாலும் நாளை

நீங்கள் நினைத்தது நடக்கும்!

தமிழ்நாட்டைத் தமிழிளைஞர் மீட்பர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது ஐயா!

உங்கள் புன்னகை பூத்த முகம் தெரிகிறது ஐயா!



அறவே நம்பிக்கையிழந்திருந்த

தன்னலமற்ற தமிழ்க் குமுகாயத்தின் நலம் நாடும் உண்மை உள்ளங்களுக்கு

நம்பிக்கை ஒளிக்கீற்றளித்த இருபால் இளைஞர்களே!

நன்றி!


உங்கள் உரம் பெருகட்டும்!

உறுதி நிலைக்கட்டும்!

தாயகத்தைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!

-----------------------------------------------------------

சனி, 14 ஜனவரி, 2017

கூவுகவே பொங்கலோ பொங்கல்!



கூவுகவே பொங்கலோ பொங்கல்!
----------------------------------------------------------


பொங்கு தமிழ்மகனே பொங்கலோ பொங்கலென
இங்குன் மொழியழிய எங்கெங்கும் தாழ்ந்திழிய!

கல்வியிலை தாய்மொழியில் காணும் இடமெங்கும்
பொல்லா மொழியில் புகட்டுகின்ற பள்ளிகளே!

ஆட்சி மொழியெல்லாம் ஆங்கிலமும் இந்தியுந்தாம்!
காட்சியூட கங்கள் கலப்பு மொழியினில்தான்!

குற்றங் கடிந்தே குறைதீர்க்கும் என்றுசெலும்
இற்றை நயன்மன்றம் எங்கும் தமிழில்லை!

நாளிதழ் தொட்டே நடந்திடும் பல்வேறு
தாளிகைகள் தம்மில் தமிழ்க்கொலைகள் பேராளம்!

கோயில் வழிபாட்டில் கூறுகின்ற போற்றலிலே
தாயின் மொழியாம் தமிழில்லை; இல்லையடா!

உன்றன் உரிமையெலாம் ஒவ்வொன்றாய்ப் போனதுவே!
பன்னூறு காலம் பயன்கண்ட ஆற்றுரிமை

இன்றுபறி போகிறதே! யார்முறையைக் கூறுகிறார்?
என்றுச்ச மன்றத்தை யாரே மதித்தாரே!

எல்லா வகையாலும் ஏதம் மிகநிறைந்த
பொல்லா அணுவுலைகள் போற்றத் தமிழ்நாடாம்!

செந்தமிழ் மண்சார்ந்த சீரார்ந்த பண்பாட்டை
நந்தம் கலைகளைநாம் போற்றத் தடையிங்கே!

எந்த வகையாலும் எப்போதும் நம்மவர்க்கே
வந்திடும் தொல்லைபல! வாழ்க்கை நிலையிதிலே

மான விறகெரித்து மண்டடிமை கேடரிசி
கூனலுறப் பானையிலே கொட்டியதைப் பொங்கியே

தன்மானம் வீறு தகைமை தமைமறந்தே
புன்மையுறக் கூவுகவே பொங்கலோ பொங்கலென
இன்னுமிகத் தாழ இழிந்து.
--------------------------------------------------