சனி, 2 ஜூலை, 2016

பழந்தமிழரின் அயல்நாட்டுத் தொடர்பு!



பழந்தமிழரின் அயல்நாட்டுத் தொடர்பு!
          - புலவர் குழந்தை ஐயா தரும் விளக்கம்!
-----------------------------------------------------------
     சில தமிழ்ச்சொற்கள், தமிழ்நாடு மேனாடுகளுடன் நடத்திய கடல்வாணிகத்திற்குச் சான்று பகர்ந்துகொண்டு அம்மேனாட்டு மொழிகளில் இருந்து வருகின்றன.
தோகை துகி சிரியா
அகில் அகல் எபிரேயம்
கவி கபிம் எபிரேயம்
அரிசி அரிஜா கிரேக்கம்
இஞ்சி ஜஞ்சர் கிரேக்கம்
இஞ்சிவேர் ஜிஞ்சிபார் கிரேக்கம்

கி.மு.3000 ஆண்டுகட்கு முன், பாபிலோனிய நாட்டை ஆண்ட ஊர்ஏயா என்னும் மன்னனால், சாலடிய நாட்டின் தலைநகரான ஊர் (Ur) என்னும் நகரில் சேரநாட்டுத் தேக்கு மரத்தினால் திங்கட் கோட்டம் கட்டப்பட்டது. (P.T.S. Iyengar–தமிழ் வரலாறு)

கி.மு2600இல், தமிழகத்திலிருந்து கருங்காலி மரம், மணப் பொருள்கள் முதலியன எகிப்து நாட்டிற்கு ஏற்றுமதியானதாக,
ஆக்கஃப் என்னும் இடத்திலுள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. (P.T.S. Iyengar–தமிழ் வரலாறு)

பாலத்தீனத்துப் பேரரசனான சாலமன் காலத்தே (கி.மு.1000) மூன்று ஆண்டுகட் கொருமுறை, தங்கம், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து கப்பல்கள் அங்குச் சென்றனவாம்.

திமிலையுடைய எருதுகள், பாரசீக வளைகுடாவுக்கும், ஆப்பரிக்காவுக்கும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டனவாம். (டாகடர் இராசமாணிக்கனார்-இலக்கிய வரலாறு-45)

மேனாட்டுகட்கு மிகுதியாக ஏற்றிமதியானது மிளகு ஆகும். அடுத்தது ஏலம் முதலிய மணப்பொருள்கள், முத்து, யானைத் தந்தம் முதலியனவாம்.
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை சிதற
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி      - (அகநானூறு-149).....

இரும்பிலிருந்து எஃகு (உருக்கு) செய்வதற்குத் தமிழ்நாட்டாரைத் தவிர, அக்காலத்தில் வேறு யாருக்கும் தெரியாதென்று கிரேக்க உரோமப் புலவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
எகிப்து நாட்டுக் கல்லறைக் கோபுரங்கட்கு (Pyramids) அடியிலிருந்து சேலத்து எஃகினால் செய்யப்பட்ட சுத்தி உளி முதலிய கருவிகள் கிடைத்திருக்கின்றன.

எஃகு ஆராய்ச்சியில் வல்லுநர்களான J.M.Heath என்பாரும் Sir.J.J.Wilkinson என்பாரும் சேலம் எஃகினால் செய்யப்பட்ட சுத்தி, உளி முதலியவற்றைத்தாம் எகிப்து நாட்டுச் சிற்பிகள் அப் பழங்காலத்தே பயன்படுத்தினார்கள் என்கின்றனர்.
அக்கல்லறைக் கோபுரங்களின் காலம் கி.மு.8000 ஆண்டுகட்கு முற்பட்டதென்பர்.  

(புலவர் குழந்தை ஐயாவுக்கு நன்றி! கொங்குநாடு பக்கம் 86,87,88. சாரதா பதிப்பகம், சென்னை)
-----------------------------------------------------------


வெள்ளி, 1 ஜூலை, 2016

பெயர் முன் அடை

பெயர் முன் அடை

      திரு என்பது சிறீ என்று திரியவே, திருமான் என்பதை சிறீமான், சீமான் என்றும் திருமாட்டி என்பதை சிறீமாட்டி, சீமாட்டி என்றும் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர்.

திருமான் என்பது திருமகன் என்பதன் மரூஉ.
ஒப்புநோக்கு: பெருமகன் பெருமான்.

பெருமானுக்குப் பெண்பால் பெருமாட்டியாதல் போல, திருமானுக்குப் பெண்பால் திருமாட்டியகும்.

     சிறீ என்பது திரு என்பதன் திரிபே யாதலால், சிறீ அல்லது சீ என்னும் அடைமொழி பின்வருமாறு தமிழில் எழுதப்படும்.

வடமொழி வடிவம்              தென்மொழி வடிவம்
    
     சிறீ                             திரு
     மகா ராஜ ராஜ சிறீ             மா அரச அரசத்திரு
                                     பேர் அரச அரசத்திரு
     சிறீலசிறீ                       திருவத்திரு
                                     திருப்பெருந்திரு
     சீகாழி                          திருக்காழி
     சீகாளத்தி                       திருக்காளத்தி               

     திருநாவுக்கரசு திருமங்கையாழ்வார் முதலிய பெயர்களில் வரும் திரு என்னும் அடை ஆங்கிலத்தில் அடியார் பெயர்முன் சேர்க்கப்படும், St. (Saint)  என்பதற்குச் சமமாய்த் தூய்மை குறிப்பதா யிருப்பதால், அடியாரல்லாத பிற மக்களைக் குறிக்கும்போது திருவாளர், திருவாட்டியார் என்ற அடைஎளையே முறையே ஆண்பாற்கும் பெண்பாற்கும் வழங்குவது தக்கதாகும்.
திருவாளன்மார், திருவாட்டிமார் என்பன பலர்பால் அடைகள்.

     சீகாழியைச் சீர்காழி என்று வழங்குவது சரியாய்த் சோன்றவில்லை. சிறுதனம் சிறீதனம் என்று தவறாய் வழங்குகிறது.

(பாவாணருக்கு நன்றி! மொழிநூற் கட்டுரைகள் பக்கம் 55. தமிழ்மண், சென்னை.)