புதன், 28 அக்டோபர், 2015

புதுவை நல்லன்பர் ‘திருநாவு’ என்னும் திருநாவுக்கரசு ஐயா

புதுவை நல்லன்பர் திருநாவு என்னும் திருநாவுக்கரசு ஐயா நினைவுநாள் அக்தோபர் 27ஆம் நாள் ஆகும். அவர் மறைவின் போது  நடைபெற்ற இரங்கல் நிகழ்வில் படித்த பா இது:
          -----------------
     
கேட்டா ரதிரக் கிளையர் செயலறக்
கோட்டியாய் மற்றவர் குழுமிக் குமுற
தனித்தமிழ்க் கழகத் தனிச்சிறப் பாளர்
நனிநற் பண்பின் இனிய ரொப்பிலா
திருநா விறந்த செய்தி வந்ததே!
உருகினர் ஏங்கினர் உற்றார் தவித்தனர்!
ஆற்றல் சான்றவர் அருளுள் ளத்தர்
ஆற்றிடு அருவினை அறிவியா துதவுநர்!
இன்னோர்க் கென்னாது எல்லார்க்கு முதவிய
செந்நோக் கினரச் சிறப்புறு செம்மல்!
இன்னின் னார்க்கே இன்னலென் றறிந்தே
இன்முகத் தோடவர் எழுவா ருதவ!
எந்நே ரத்திலும் எவர்க்கும் உதவ
முந்தி முனையும் முனைப்பினர் உண்மை!
நட்பினர் குடும்ப நல்லது கெட்டதில்
நுட்பமாய் அறிந்தே ஒட்பத் துதவுநர்! 
எதிர்பா ராத இடுக்கண் எழுகையில்
மதிநுட் போடிவர் மாற்றிய கதைபல!
எவருரைப் பாரோ, இவரறிந் திடுவார்
கவலறுத் திடவே கடியவந் திடுவார்!
செந்தமிழ் நிகழ்வில் முந்தி நின்றிவர்
வந்து கனிந்து வருகவென் றழைக்கும்
ஒப்பருங் காட்சி உளத்தில் நிலைக்கும்!
செப்பருஞ் சிறப்பின் சீருக் குரியவர்!
ஆசாகு அய்யா தேசிகன் உயிரை
கூசாது நேர்ச்சி கொள்ளை கொண்டதே!
இழப்பு, இழப்பு, இழப்புபே ரிழப்பே!
உழப்புற லகற்றியவ் வுயர்ந்தோர்
சிறப்புறு செயல்கள் சிந்தையில் கொள்வமே!


----------------------------------------------

திங்கள், 26 அக்டோபர், 2015

தமிழர் நிலை!


    தமிழர் நிலை!
மூத்த தமிழே முதற்றாய் மொழியாம்
           
முடிவைச் சொல்கின்றார்!
ஏத்தும் ஆய்வர் இந்நா கரிகம்
           
எவர்க்கும் முதலென்றார்!
காத்தல் பேணல் கருதாத் தமிழர்
           
கடைகெட் டழிகின்றார்!
ஊத்தை உணர்வால் உறுதன் னலத்தால்
           
உலகில் இழிகின்றார்!

செவ்வாய், 20 அக்டோபர், 2015

காடு!

காடு!

தாய்மொழியில் பேசினால் தண்டனை பள்ளியிலே!
தாய்தந்தை பேரும் தமிழில்லை! போய்வணங்கச்
சொற்றமிழ்க் கில்லையிடம்! சொல்லுகநா டில்லையிது
கற்றைக்கு முட்டைக்குங் காடு.

அழகார் தமிழில் அயன்மொழிச் சொற்கள்
புழங்கக் கலந்தெழுதல் புன்மை! வழக்கமென
நற்றமிழ்க்(கு) ஊறுறுத்த நாடி எழுதுலகு
கற்றைக்கு முட்டைக்குங் காடு.

(கல் தைக்கும் முள் தைக்கும் காடு > கற்றைக்கு முட்டைக்குங் காடு)

புதுவை தெளிதமிழ் இதழில் வெளிவந்தவை.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

ம.பொ.சி.

எல்லைக் காவலர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார்!

செந்தமிழ்நாட் டெல்லைபறி போகாமல் காத்தயிவர்
சிறைக்குச் சென்று
நந்தமிழின் சிலம்பாய்ந்தார்; நாவன்மை எழுத்தாற்றல்
நனிவாய்ந் தாரே!
இந்தியநா டுந்தமிழும் எனக்கிரண்டு கண்களென
இயம்பி வந்தார்!
பந்தமுறும் பெருமீசை பார்த்திருப்பீர் ம.பொ.சி.
படத்தில், தாளில்!

கடற்கரைசீர் வாய்ந்தநகர் கவின்சென்னை எளியகுடி
களிக்கத்தோன்றி
கடமையென மூவாண்டுக் கல்வியுடன் நெசவுசெயக்
கடுகிச் சென்றார்!
அடக்கமுறா வறுமையெதிர்த் தச்சகத்தில் கோப்பாளர்
ஆனார் பின்னர்த்
திடஞ்சான்ற மனத்தோடே தேசவிடு தலைக்குழைக்கத்
தேர்ந்து சென்றார்!

தேர்ந்தகட்சிப் பேராயம் சேர்ந்துப்புப் போர்மற்றும்
திமிர்கொள் ஆட்சிச்
சார்பறுக்கும் சட்டமறுப் பியக்கத்தும் பங்கேற்றார்;
சற்றும் சோரா(து)
ஆர்வமுற சிறைப்பட்டார்ஆறுமுறை; எழுநூற்றுக்
கதிக நாட்கள்!
சீர்மையுற சிறையடைப்பில் சிலம்புபடித் தாய்வுசெய்தார்!
சிறப்ப றிந்தார்!

தமிழ்தமிழர் உணர்விலவர் தமிழரசுக் கழகத்தைத்
தனியே தோற்றி
இமிழிந்தி யாமொழியால் இன்னின்ன மாநிலமென்
றியற்றுங் காலைத்
தமிழர்க்குக் குடியரசு தனியமைக்க வேண்டுமென்றார்
தனிய ராக!
துமித்துபெறக் கருதவிலை! தொடர்ந்திந்தி யாவிலொரு
தொகுதி என்றே!

செப்பமுற மாற்றுகபேர்! சிறப்புறவே தமிழ்நாடாய்ச்
செய்வீர் இன்னே!
ஒப்புறவே கல்விமொழி ஒண்டமிழே எனவாக்கி
உயர்வைச் செய்வீர்!
தப்பறவே ஆட்சிமொழி தமிழென்றே ஆக்கிடுவீர்!
தகைமை காப்பீர்!
இப்படியாய்க் குரல்கொடுத்தே இவற்றைவலி யுறுத்திவந்தார்
எழுதி பேசி!  

இவர்பணியில் முன்னிற்கும் எல்லைகளைக் காத்தபணி
இணையி லாதாய்!
இவறலுற ஆந்திரத்தர் எழிற்சென்னை நகர்கேட்டு
ஏழ்ந்த போது
சுவரெனவே நின்றுசிலர் துணையோடே இவர்காத்தார்!
சொல்வ துண்மை!
திவளலற இவரியங்கித் திருவேங்க டம்மீட்கச்
சிறையுஞ் சென்றார்!

பெரும்பிழையாய்த் திராவிடத்தைப் பேசிடுவோர் சறுக்கிவிட
பெரிய மீசை
திருத்தணியை மீட்டெடுத்தார்! சித்தூர்புத் தூர்பகுதி
சிலவும் மீட்டார்!
திருப்பதியாம் வேங்கடமும் செந்தமிழ்சேர் பகுதிகளும்
சென்ற போதும்
ஒருதனியர் பெருமுயல்வில் ஓரளவு வடவெல்லை
ஓம்பக் கண்டோம்!

பொற்புறுசீர் குமரியொடு தேவிகுளம் பீர்மேடு
பொலிசெங் கோட்டை
தெற்கெல்லை காத்திடும்போர் திடத்தலைவர் நேசமணி
திறத்தில் மூண்டு
பெற்றியிலார் சிறையிலிட இவரறிந்து விரைந்தங்கே
பீடிற் சென்றே
சற்றும்போ ராட்டத்தைச் சரியாதே மேல்நடத்தச்
சார்பு தந்தார்!

நூற்றுக்கும் மேற்பட்ட நூலெழுதித் தந்துள்ளார்
நுட்ப மாக!
ஏற்றமுற வரலாற்றை எடுத்தியம்பி பலவிளக்கம்
எடுப்பாய்ச் சொல்வார்!
சாற்றியபல் கூற்றிருக்கத் திராவிடத்தார் சார்ந்ததிவர்  
சறுக்கல் ஆகும்!
ஆற்றியநற் பணிகளையும் அரியசெயல் செய்த்தையும்
அகத்தில் கொள்வோம்!


(14-8-2011 ஞாயிறு அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற விழுப்புரம் தமிழ்ச்சங்க ஒன்பதாம் ஆண்டுவிழாப் பாட்டரங்கத்தில் பாடிய அறுசீர் மண்டிலப் பாக்கள்)

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

‘தாழி’யின் அழகிய அரியதொரு நாள்காட்டி.


 தாழியின் அழகிய அரியதொரு நாள்காட்டி.

     'அன்னை அருள்' வெளியீடான தாழி ஆய்வு நடுவத் திட்டத்தின் நாள்காட்டி கிடைக்கப் பெற்றேன். அதைப்பற்றி எழுத விரும்பியிருந்தும் பல காரணங்களால் காலந்தாழ்ந்தது. அந் நாட்காட்டியைப் பற்றிக் காலந்தாழ்ந்தாலும் எழுதவேண்டும் என்ற அழுத்தமான எண்ணம் இருந்தது.
     நாள்காட்டி 17 அகலமும் 24.5 அகலமுமாகப் பெரிய அளவில் எடுப்பாகத் தோன்றுகிறது. நாள்காட்டியின் முதல் தாளின் முதற் பக்கத்தில் ஆரியர் நாவலந்தீவு வருகையையும் பரவலையும் காட்டும் நாட்டுப்படம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், மொழியறிஞர் கிலபர்ட்டு சிலேட்டரின் தமிழ், தமிழர் தொடர்பான கருத்துக்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.
     கீழே, சிந்துசமவெளி பற்றியும் கடவுள் நம்பிக்கை பற்றியுமான செய்திகள் தரப்பட்டுள்ளன. மேலும், தமிழக ஊர்ப்பெயர்கள் சமற்கிருதம் ஆக்கப்பட்டதைக் குறிப்பிடுவதோடு, தமிழர் தம் அடையாளங்களைக் காக்க வேண்டுமென்ற வலியுறுத்தம் இடம்பெறுகின்றது. தெய்வம் குறித்த சித்தர் சிவ்வாக்கியர், பாரதியார், பாவேந்தர், திருமூலர் பாடல் வரிகள் தரப்பட்டுள்ளன.
     முதல் தாளின் இரண்டாம் பக்கத்தில், தென்னக வடவகக் கோயில்களின் அமைப்புகள் வரைபடத்துடனும் கலைச் சொற்களுடனும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. தஞ்சைப் பெருவுடையார் கோயில் அமைப்பும் கலைச்சொற்களுடன் காட்டப்பட்டுள்ளது. நாட்காட்டியின் பெயரே கோயில்களின் தாய்நிலம் என்று குறிக்கப்பட்டுள்ளது. செய்திகள் தூய தமிழில் எழுதப்பட்டுள்ளன.
     அடுத்து, நாள்காட்டியின் 12 மாதங்களிலும் 12 அழகிய தமிழகக் கோயில்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. அவை, தஞ்சைப் பெருவுடையார் கோயில், மதுரைக் கூடலழகர் கோயில், காஞ்சி ஓராடையுடையார் கோயில், திருச்சி அரங்கநம்பி கோயில், தில்லை நடவரசர் கோயில், திருவைகுண்டம் திருமாற்பெருமாள் கோயில், மாமல்லை கடற்கரைக் கோயில், உத்திரமேரூர் திருவழகுடை வரந்தருபெருமாள் கோயில், நெல்லை காந்திமதி-நெல்லையப்பர் கோயில், திருவில்லிப்புத்தூர் ஆண்டாள்-அழகர் கோயில், மதுரை அங்கயற்கண்ணி-அழகுடையார் கோயில், காஞ்சி வரந்தருங் கோப்பெருமாள் கோயில் ஆகியனவாகும்.
     ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் சுருக்கக் குறிப்பும், சிறப்பும் தரப்பட்டுள்ளன. கோயிற் படங்கள் மிக அழகாக அருமையாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நாள்காட்டியில், தமிழ் பிரெஞ்சு ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மாத கிழமைப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
     அன்னை அருள் மறுதோன்றி அச்சகமும் தாழி ஆய்வு நடுவமும் மிகவும் சிறந்த நாள்காட்டியைத் தந்துள்ளனர். அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.