கல்விக்கொள்கை: ஒரு மொழியா? இருமொழியா? மும்மொழியா? எது சரி?
இந்தியாவில், ஆங்கிலேயர் ஆண்ட காலம் முதலே, 1938-க்கு முன்பிருந்தே இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களிடம்
வலிந்து இந்தியை எப்படியும் திணித்தே தீர்வது என்ற முயற்சி, இந்திக்காரர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழின் அழிவுக்கு வழிவகுக்கும் இந்தித் திணிப்பைத் தமிழர், உயிரீகம் உட்பட பலவகை ஈகம் செய்து எதிர்த்தும் இந்தித்திணிப்பு முயற்சி நின்றபாடில்லை. இந் நிலையையே பாவலரேறு பெருஞ்சித்திரனார்,
ஆயிரந் தடவை இந்தியை அழித்தோம்!
ஆயிரந் தடவை மீண்டும் எழுதினர்!
ஆயிரந் தடவை இந்தியை எதிர்த்தோம்!
ஆயிரந் தடவையும் மீண்டும் புகுத்தினர்!
எந்தவோர் தடவையும் எதிர்த்த எதிர்ப்பால்
இந்தி நுழைவு நின்றதும் இல்லை;
இந்திய மடயர்கள் அதிர்ந்ததும் இல்லை! - என்று பாடுவார்.
இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் என்பது இந்திய ஒன்றியத்தில் தமிழ்மொழியின், தமிழரின் அதிகார அடிப்படையிலான நிலை தொடர்பானது. இந்தித்திணிப்பு, தமிழரை இந்தியாவின் இரண்டாம்நிலைக்
குடியினராக்கும் முயற்சியாகவே கருதுகின்றோம்.
காலந்தோறும் வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு வடிவங்களில் இந்தித் திணிப்பு
முயற்சி தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தை (தமிழரின் வரிப்பணம் உட்பட) வாரி
இறைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த முயற்சியில் இந்திய ஒன்றிய
ஆட்சியாளர்கள் கொஞ்சம் முன்னேற்றமும்
அடைந்திருக்கின்றார்கள். அது அவர்களுக்கு நிறைவளிக்கவில்லை. இப்போது, மிகத் தந்திரமாகப் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டம் என்ற உருவில்
கொண்டுவந்துள்ளனர்.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மொழிப்பாடம் பற்றிய வரலாற்றை அறிந்தால்தான்
மேற்கூறிய செய்திகளின் உண்மை தெளிவாகப் புரியும். சி.இராசகோபாலாச்சாரி தலைமையில் இந்திய தேசியப் பேராயக் கட்சியின் (INC) முதல் அரசாட்சி நடந்துவந்தது. அந்த ஆட்சி சென்னை மாகாணப் பள்ளிகளில் 1937ஆம் ஆண்டு, கட்டாய இந்தி
கற்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. அதை எதிர்த்து முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி, மூன்றாண்டுக்காலம் நடைபெற்றது. இப் போராட்டத்தில், உமாமகேசுவரனார், சோமசுந்தரபாரதியார், பெரியார் ஈ.வெ.இரா., மறைமலையடிகள், கி.ஆ.பெ.விசுவநாதம், பாவேந்தர், சவுந்தரபாண்டியனார், திரு.வி.க., அண்ணாத்துரை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் முதலிய தலைவர்களும் பெண்கள், இளைஞர் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இப்போராட்டம் உண்ணாநோன்புகள் , மாநாடுகள், பேரணிகள், மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை
உள்ளடக்கியதாக இருந்தது. அரசின் கடும் அடக்குமுறையின் விளைவாகத் தளைப்பட்டுச் சிறையிலிருந்த
இரண்டு போராளிகளான தாலமுத்துவும் நடராசனும் உயர்நீத்தனர். பெண்கள் சிறுவர்கள் உட்பட 1,198 பேர் தளைப்படுத்தப் பட்டனர். 1939இல் இராசகோ பாலாச்சாரி அரசு பதவியிலிருந்து இறங்கியது. பின்னர்த் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்கிய மதராசு மாகாண ஆளுநராக இருந்த சான் எருசுகின், இந்தி கட்டாயம் என்ற உத்தரவை 21-02-1940-இல் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
அடுத்து, இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1948-ல் ஓ.பி.இராமசாமியார் மதராசு மாகாண முதல்வராக இருந்தபோது பள்ளிகளில் இந்தியை விரும்புபவர் விருப்பப் பாடமாகப் படிக்கலாம் எனக் கொண்டுவந்தபோது எழுந்தது. அப்போதும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து அறிவிப்பைத் திரும்பப் பெற்றுவிட்டார்.
மூன்றாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆங்கிலத்தை முற்றாகத் தவிர்த்துவிட்டு, இந்தியை மட்டும் அலுவல்மொழியாக்க முனைந்தபோது எழுச்சியுற்றது. இந்தி மட்டும் அலுவல்மொழியாக
வேண்டும் என்பதில் இந்தியத் தேசியத் தலைவர்கள் காந்தி, நேரு, பட்டேல், அம்பேத்கர், சி.இராசகோபாலாச்சாரி முதலிய அனைவர்க்கும்
ஒருமித்த கருத்து இருந்தது.
இந்தியா குடியரசு ஆனதன் பதினைந்தாவது
ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்திய
ஒன்றியத்தின் ஒரே அலுவல் மொழியாக இந்தி திணிக்கப்பட்டதைப் பல இந்தி பேசாத
மாநிலங்கள் எதிர்த்தன. 1965 சனவரி 26ஆம்நாள் நெருங்கநெருங்க, சென்னை மாநிலத்தில் பெருமளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதால் போராட்டம் வேகம் பெற்றது. மாநிலம் முழுவதும் போராட்டம் பரவியது. காவல் துறையின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பேரணிகள், மறியல்கள், வன்முறை, தீவைப்பு, தடியடி, துமுக்கிச் சூடுகளும் தடையின்றித் தொடர்ந்தன. உணர்ச்சி வயப்பட்ட சிலர் தங்களைத் தீயிற்கு இரையாக்கி உயிர்ஈகம் செய்தனர்.
பேராயக்கட்சியின் முதல்வர் பக்தவச்சலம் தலைமையிலான மாநில அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க நாட்டின் பாதுகாப்புப் படையினர் தமிழகத்தில் இறக்கப்பட்டனர். காசுமீருக்கு அடுத்தபடியாக நாட்டின் பாதுகாப்புக்கான படை உள்நாட்டில் இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கே தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டது. போராடும் மாணவர்களை வரைமுறை இல்லாமல் கடுமையாகத் தாக்கி அடக்கமுயன்றனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் பலவேறு ஊர்களில் துமுக்கிச்சூட்டால் கொல்லப்பட்டனர். இரண்டு காவலரும் பலி ஆயினர். நிலைமை கட்டுமீறி மோசமானதை உணர்ந்த அப்போதைய இந்திய ஒன்றியத் தலைமை அமைச்சர் இலால்பகதூர் சாத்திரி இறங்கி வந்து, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும் என்ற உறுதியளித்தார். இதன் பிறகு அடக்குமுறைகளும் மாணவர் போராட்டமும் தணிந்தன.
இந்திஎதிர்ப்புப் போராட்டம் மாநிலத்தில் அரசியல் மாற்றத்திற்கு வழிவகுத்தது. 1967 சட்டமன்றத் தேர்தலில், திமுக வெற்றிபெற்றது. அதன் பின்னர்ப் பேராயக்கட்சி தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. இந்தியையும் ஆங்கிலத்தையும் அலுவல் மொழிகளாகக் காலவரையின்றிப் பயன்படுத்துவதை
உறுதி செய்வதற்காக, இந்திரா காந்தி தலைமையிலான இந்தியஅரசால் அலுவல் மொழிகள் சட்டம் 1967இல் திருத்தப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில், முதல்வர் அண்ணா, மும்மொழிக் கொள்கை நீக்கப்படும்; தமிழும் ஆங்கிலமும் மட்டுமே
கற்பிக்கப்படும்; ஐந்து ஆண்டுகளுக்குள் எல்லாக் கல்லூரிகளிலும் தமிழ் மூலமே பயிற்றுவிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்; அரசின் எல்லாத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும்
விரைவுபடுத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அண்ணாவின்
காலத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஆங்கிலவழி கற்பிக்கும் தனியார் பள்ளிகள் புற்றீசலெனப் பெருகிப் பள்ளிகளில் தமிழ்வழிக்
கல்வியைப் புறக்கணித்து மக்களின் பணத்தையும் சுரண்டி வருகின்றன. மறைமுகமாக இந்தித்
திணிப்புக்கும் துணைநின்று வருகின்றன.
இப்போது, புதிய கல்விக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை, பி.எம்.சிரி. (PM SRI) பள்ளிகள், நவோதயா பள்ளிகள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (சமக்கரா சிக்குசா அபியான்), நடுவக் கல்வியகங்கள் (கேந்திர வித்தியாலயா) என்னும் பல பெயர்களில் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க மும்முர முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவற்றில், நவோதயா பள்ளிகள், நடுவக் கல்வியகங்கள் (கேந்திர வித்தியாலயா) என்னும் பள்ளிகளில் இந்தி திணிக்கப்பட்டு விட்டது. அங்கு தமிழ்ப்பாடம் அறவே இல்லை. முன்னரே குறிப்பிட்டவாறு தனியார் பள்ளிகளிலும் இந்தித் திணிப்புக்கு வழிசெய்யப்பட்டுள்ளது.
இந்திய ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியைப் பெற, தேசியக் கல்விக்
கொள்கையை ஏற்க வேண்டும் (மும்மொழித் திட்டத்தை ஏற்கவேண்டும்) என்றும், தமிழ்நாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் பேசிய இந்தியக் கல்வி அமைச்சர் தருமேந்திர பிரதான் என்பாரின் செருக்குப்பேச்சு தமிழர்களைக் கொதிப்படைய வைத்தது. தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய உருவா 2,152 கோடி நிதியை இந்திய அரசு இன்னும் வழங்கவில்லை.
நாட்டிலுள்ள குடிகள் தம் தாய்மொழியைக் கட்டாயம் படித்தாக வேண்டும். அது
இன்றியமையாதது; மக்கள் அனைவர்க்குமானது. இரண்டாவதாக ஒரு மொழியைப் படிக்க வேண்டிய நிலை அனைவர்க்குமானது
இல்லை. தேவைப்படுவோர்க்கும்
விருப்பப்படுவோர்க்குமானது. மக்கள் எல்லோர்க்கும் இரண்டாம் மொழி தேவையில்லை.
உருசியா, சீனா, பிரான்சு, சப்பான், கொரியா முதலிய நாடுகளில் மக்கள் அனைத்து அறிவியலையும் நுண்கலைகளையும் கூடத் தம் தாய்மொழி வழியே
படித்து முன்னேறி உலகின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகின்றனர். நோபல்பரிசு
பெற்ற பல அறிஞர்களுக்கு அவர்கள் தாய்மொழியைத் தவிரப் பிறமொழி தெரியாது என்பது உண்மையாகும்.
மேற்கூறிய நாடுகளில் உலகின் எந்த மூலையில் எந்த மொழியில் புதிய அறிவியல் செய்தியோ பிறதுறைச் செய்தியோ வந்தாலும் உடனுக்குடன் அவர்கள் தாய்மொழியில் அச்செய்தி பெயர்த்தளிக்கப்படுகின்றது. நூல்களும் அவ்வாறே பெயர்க்கப் படுகின்றன. புதிய சொற்களை, குறியீடுகளை உடனே பெயர்ப்பதில் சிக்கல் இருந்தால் மூலநூல் சொற்களையும் குறியீடுகளையும் அப்படியே பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், முறையாக அவற்றிற்கான தம்மொழியின் பெயர்ப்புச் சொற்களையும் குறியீடுகளையும் கண்டுபிடித்து பிறகு மொழிபெயர்த்த நூலில், செய்தியில் திருத்தம் செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் இந்தவகை ஏற்பாடு அறவே இல்லாததே தமிழ்வழிக் கல்விக்குப்
பெருந்தடையாக உள்ளது. இங்கு மாநில அரசிலும் இந்திய ஒன்றிய அரசிலும்
பதவிக்கு வருவோர் இதில் கருத்துச் செலுத்துவதே இல்லை. ஆனால், தமிழில் அறிவியல் நூல்கள் இல்லை
என்று மொழியின் குற்றமாகக் கூறும் போக்கைக் காண்கிறோம்.
தமிழ் அந்த நிலையை அடைய ஏற்பாடு செய்யும் வரை உலகளாவிய ஒரு மொழியை, அண்மைக்கால அறிவியல் முன்னேற்றம்வரை அறிந்துகொள்ள உதவும் ஒரு மொழியை, உலக இலக்கியங்களில் பெரும்பாலனவற்றை அறிய உதவும் ஓரு மொழியை, உலக மக்களில் பெரும்பாலாரோடு
தொடர்பு கொள்ள உதவும் ஒரு மொழியை இரண்டாம் மொழியாகப் படிக்கலாம் என்று மக்கள் நலம்நாடும் நல்லறிஞர்கள் முடிவுசெய்ததின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகின்றது.
இன்னொரு மொழியைப் படிப்பது தேவை என்ற நிலையினரான மொழிபெயர்ப்பாளர், மொழி ஆய்வாளர் முதலியவர்கள்
அவரவர்க்குத் தேவையான மொழியைத் தேர்ந்து படிப்பதில் தவறில்லை. அப்படித்தான் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும் அப்பாத்துரையாரும் சோமசுந்தர பாரதியாரும் மறைமலையடிகளும் பூரணலிங்கமும் பிறரும் பல மொழிகளைக் கற்றனர்.
இனி, மூன்றாம் மொழி படிக்கவேண்டும் என்பதும் அவரவர் விருப்பத்தையும் தேவையையும் பொருத்ததாகும். விருப்பம் உடையோர், மூன்றாம் மொழி மட்டுமன்றி இன்னும் எத்தனை மொழிகளும் கற்கலாம். அதனை யாரும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டு இந்திப் பரப்புரை அவையில் விரும்புவோர் தடையின்றி இந்தி படிப்பதைப் பார்க்கின்றோம்.
ஆனால், ஒட்டுமொத்தமாக
எல்லாரும் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்கவேண்டுமென்று வலியுறுத்துவது, கட்டாயப்படுத்துவது, மாந்த உரிமைகளை மதிக்காத போக்காகும். இவ்வுலகில் அறிந்துகொள்ள வேண்டிய பல்வேறு அறிவுநிலைகள் இருக்கும்போது குறுகிய வாணாள் கொண்ட மாந்தரைத் தேவையற்ற நிலையில் மூன்றாவதாக, நான்காவதாக மற்ற மொழிகளைக் கற்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்துதல் அவர்களுக்குக்
கூடுதல்சுமை ஏற்றும் செயலாகும்.
இந்தியாவில் எல்லாரும் இந்தியை, சமற்கிருதத்தைக் கட்டாயமாகப் படித்தாக வேண்டும்
என்ற உள்நோக்கத்தோடு தந்திரமான கல்விக் கொள்கை வழியாகத் திணிக்கப்படுவது
மாந்தஉரிமை மீறும் செயலாகும். தமிழகத்துச் சிற்றூரிலுள்ள சிறுநில உழவர் இரண்டாம்
மொழி ஆங்கிலம் படிப்பதே அதிகமாகும்.
இனி, இந்த இந்தியநாட்டில் ‘ஒற்றுமை, ஒரேநிலை’ என வலியுறுத்தி ஏமாற்றுவோர் அப்படி உண்மையிலேயே ஒற்றுமையை, ஒரே நிலையைக் கடைப்பிடிக்கின்றனரா? தமிழரை மூன்று மொழி படிக்க வேண்டுமென்று வலியுறுத்துவோரும் அவர்க்குத் துணைபோவாரும், உத்தரப்பிரதேசம், பீகார் முதலிய மாநிலங்களில் கடைப்பிடிக்கும் நிலை தெரியாதவர் என்று சொல்ல முடியாது. அங்கெல்லாம் இரண்டாம் மொழியே படிக்கும் நிலை இல்லை. இரண்டாம் மொழி சொல்லிக் கொடுக்கவே மிகப்பல இடங்களில் ஆசிரியர்களே இல்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கின்றது. இது நாமே வலிந்து கூறும் செய்தியன்று. முன்னாள் இந்திய ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் தெளிவுபடுத்திய நிலையாகும். ‘ஒரே நிலை’ வற்புறுத்தும் பேர்வழிகளின் ஏமாற்றுச் செயலாகவன்றோ இஃது இருக்கின்றது!
எனவே, தமிழர்களில்
பலருக்கும் ஒருமொழிக் கொள்கையே போதும். அந்த ஒருமொழிக் கொள்கை நடைமுறைக்கு
வரும்வரை, அதற்கான ஏற்பாடுகளை ஆட்சியாளர் முறையாக முயன்று செய்யும்வரை நாம் இருமொழிக் கொள்கையை
நிறைவில்லா மனத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆனால், மும்மொழிக் கொள்கை என்ற மோசடிக் கொள்கை தமிழர்க்கு அறவே தேவையற்றதும் ஏற்கவேண்டாத சுமையுமாகும்
என்பதுடன் நம்மை அடிமை நிலைக்குத் தள்ளும் முயற்சியாக உள்ளதென்றும் நற்றமிழ்
வலியுறுத்துகின்றது.