எங்கள்
அரிமாப்பாண்டியன்!
- தமிழநம்பி -
நயனில் காலனே! நனிபே தையே!
செயற்கை அறிவிலி! மயக்காழ்ந் தனையோ?
விதைசமைத் துண்ணும் கதையாய் நல்லோர்
துதைந்தவர் நல்லுயிர் பதைபதைப் பில்பறி
மடஞ்சேர் செயலோய்! திடமுடைத் திமிரில்
அடம்பிடித் தலைவோய்! மடவ! இதுகேள்:
படிய வாரிய கருமுடி தாங்கி!
முடியழ கோடே முகமொளிர் வடிவில்
பளிச்சென வெள்ளை ஒளிரும் தூயுடை!
எளிஞராய் எவரையும் ஈர்க்கும் புன்னகை!
பெருநீள் மீசை பேச்சில் தெளிவு
அருந்தமிழ் காக்கும் திருத்தக் கொள்கை!
கல்வி பண்பு நல்லொழுங் கதனுடன்
ஒல்லும் வகைதமிழ்ப் பற்றைப் புகட்டிய
நல்லா சானே! நற்றனித் தமிழிதழ்
செல்லா நல்லிசைத் ‘தென்மொழி’ தொடர்பால்
தனித்தமிழ்க் கழகம் தானே தோற்றி
நுனித்தநன் முயல்வில் இனித்த குழாத்துடன்
நான்குமா நாடுகள் நோன்புற நடத்தி
ஊன்றிட தனித்தமிழ் உழைத்தவர் உண்மையாய்!
புதுவை அதிரபுத் தெழுச்சி பெற்றிட
மதுகையில் பேரணி விதுப்பில் நடத்தியார்!
பைந்தமிழ்க் கெதிரன் பகைமைக் கீரன்
நைந்துநொந் தோடிட நனிஓட் டியவர்!
கற்றார் எழுதிய நற்றமிழ் நூல்சில
பொற்புறப் பதித்துப் பொலிவோடு தந்தவர்!
தமிழக மடத்துத் தலைவர் பலரையும்
அமிழ்விலா முயல்வினில் அழைத்துத் ‘தமிழ்வழி
பாட்டுமா நா’ட்டினைக் கூட்டித் தமிழை
மீட்டிட உழைத்த நாட்ட வினையினர்!
பெயர்ப் பலகைகள் பிறங்கு தமிழினில்
வயங்கலில் எழுதிட இயங்கிய முயற்சியார்!
ஒல்லாங் கெல்லாம் எல்லார்க் குமென்றும்
ஒல்லுற உதவிய நல்லுள வள்ளல்!
அரசு நிறுவன அறக்கட் டளையால்
பரப்பிடத் தனித்தமிழ் பயிலரங் குகள்பல
அறிஞர் பலரை அழைத்து நடத்தினார்!
செறிவுற மாணவர் அறிந்தனர் செய்திகள்!
தமிழ்மொழி தமிழினம் தமிழ்நாட் டின்நலம்
இமைப்பொழு தும்மறந் திருந்திடா வாழ்வார்!
அன்புடன் பழகுநர்; இன்னினிப் பண்பார்;
என்றுமெப் போதும் எந்த நிலையிலும்
நின்ற கொள்கையில் நெகிழ்வுறா நிலையினர்!
என்றென் றைக்கும் இறைவிழி யர்பால்
மாற்றமில் அன்பினர்; மதிப்பொடு போற்றுநர்!
கூற்றே அவர்பெயர் சாற்றுவன் அறிகநீ
அவரே எங்கள் அரிமாப் பாண்டியன்!
அவலம் அவருயிர் இவவுறக் கொண்டனை!
உய்விலை பழியே உனக்கே
எய்தினர் அவரே நொய்தலில் புகழே!
-------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக