சனி, 14 ஜூன், 2025

ஆள்வோரே, தமிழுக்கு உண்மையான ஆக்கம் செய்வீர்!

 

ஆள்வோரே, தமிழுக்கு

உண்மையான ஆக்கம் செய்வீர்!

தமிழ்நாட்டு முலமைச்சர் மு.க.இசுதாலின் அவர்கள் திருமண நிகழ்ச்சிகளில் பேசும்போதும், குழந்தைகளுக்குப் பெயர்வைக்கும் நிகழ்வுகளின்போதும் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர்வைக்க வலியுறுத்தி வருகின்றார். இது வரவேற்றுப் பாராட்டக்கூடிய செயலாகும். அவர் தந்தையார் கலைஞர் கருணாநிதி நகராட்சி, மாநகராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்களில் தமிழ்வாழ்க என ஒளிரும் எழுத்துகளில் எழுதிவைக்க ஏற்பாடு செய்ததும் பாராட்டவேண்டிய செயலாகும். இன்னும் தமிழறிந்தார்க்குப் பலர் பெயரில் பரிசில்கள் வழங்கப்படுவதும் சரியே. 

இவையே தமிழுக்கு ஆக்கம் செய்யும் செயல்களாக மனநிறைவு கொள்வது சரியாக எண்ணிப்பார்த்தால், ஒருவகை அறியாமை அல்லது ஏமாற்றம் என்பதே உண்மையாகும். இச் சிறுசிறு செயல்கள் தமிழுக்கு ஆக்கம் செய்துவிட்டதாக எளிய மக்களை மனம் மகிழச் செய்யும் செயல்களே! நெடிதாக்கம் கருதுவார் நிலையானபயன் விளையும் ஆக்கங்களையே எண்ணிச் செய்யவேண்டும்.  

பாவலரேறு பெருஞ்சித்திரனார் இந்நிலைகளைக் குறித்து 

ஒரு பாடலில் குறிப்பிடும்போது

                தமிழ் வாழ்கவென்பதிலும் தமிழ்வா ழாது! 

                தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது! 

எனத் தொடங்கிப் பல செய்திகளைக் கூறி, அப் பாடலை,

விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்
விதைத்திடுதல் வேண்டும் தமிழ் வாழும் அன்றே! என்று முடித்திருப்பார்.  

                தமிழை வாழவைக்கும் முயற்சிகளில் அடிப்படையானது, தமிழரின் உண்மையான உயர்வுக்கு அடிகோலுவது தமிழ்வழிக் கல்வி என்பதே உறுதியான உண்மையாகும். இவ்வுலகில், பல்வேறு துறை வல்லுநர்க்கும் வழங்கப்படும் மிக உயர்ந்த பரிசாகநோபல் பரிசுகருப்படுகின்றது. அப் பரிசினை இதுவரை பெற்ற பல்வேறு துறைசார்ந்த அறிஞர் வல்லுநர் பலருக்கு அவர்கள் தாய்மொழி தவிர ஆங்கிலமோ பிறமொழிகளோ தெரியாது என்பதே உண்மையாகும். அவர்கள் தம் தாய்மொழிவழிக் கல்வி பயின்று


முன்னுக்கு வந்து ஒளிவீசுகின்றனர். உலகில் மக்கள்நலன் கருதும் நல்லறிஞர், நல்ல தலைவர் அனைவரும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்துகின்றனர். 

தமிழ்மக்கள் நலனில் மெய்யான கவலையும் முனைப்பும் கொண்ட தலைவரான அறிஞர் அண்ணா, தமிழ்நாட்டிற்குத்தமிழ்நாடுஎனப் பெயரை மீட்டெடுத்து வழங்கிய நிகழ்வில், தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் உரையாற்றும்போது, தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதி அளித்தார். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார். தமிழ்ப் பகைவரும் ஆங்கிலவழிப் பள்ளிக் கல்விக்கொள்ளையரும் எதிர்த்தபோதும் அவற்றைத் தக்கவகையில் எதிர்கொண்டு தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவர அவருக்கு வாழ்நாள்குறைவு வழியடைத்துவிட்டது.  அவருக்குப்பின், அந்த முயற்சி தளர்ச்சி பெற்று கைநழுவவிடப்படதென்றே கூறலாம்.  

உலகெங்கணும் நோக்கின், பல்வேறு நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வியே பின்பற்றப்படுகின்றது. ஐரோப்பாவிலுள்ள இருபது தனித்தனி நாடுகளில் அவரவர் தாய்மொழியே பயிற்றுமொழியாக உள்ளது. வளர்ந்த நாடுகளாகக் கருதப்படும் பிரான்சு, சீனா, செருமனி, இரசியா, சுவீடன், சப்பான், இசுரேல், கொரியா முதலிய நாடுகளில் தாய்மொழிவழிக் கல்வியே நடைமுறையில் உள்ளது.

தமிழ்நாட்டில் பயிற்றுமொழி குறித்த பிழையான அணுகுமுறையால், இப்போதைய மாணவர்கள் ஆங்கிலத்திலும் தாய்மொழி தமிழிலும் அரைகுறை அறிவைப் பெற்று திறமையின்றித் திண்டாடுவதைப் பல்வேறு பள்ளிகளின் புள்ளி விளக்கங்கள் கூறுகின்றன.   

                மேலே குறிப்பிட்ட நாடுகள் பலவற்றிலும், உலகின் எந்த மூலையில் எந்த மொழியில்  புதிய அறிவியல் செய்தியோ பிறதுறைச் செய்தியோ வந்தாலும்,  உடனுக்குடன் அவர்கள் தாய்மொழியில் அச்செய்தி பெயர்த்து அளிக்கப்படுகின்றது. நூல்களும் அவ்வாறே பெயர்க்கப்படுகின்றன. புதிய சொற்களை,  குறியீடுகளை உடனே பெயர்ப்பதில் சிக்கல் இருந்தால்  மூலநூல் சொற்களையும்  குறியீடுகளையும் அப்படியே பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால்முறையாக அவற்றிற்குத்  தம்மொழியின் பெயர்ப்புச் சொற்களையும் குறியீடுகளையும் கண்டுபிடித்துப். பிறகு மொழிபெயர்த்த செய்தியில், நூலில் திருத்தம் செய்கின்றனர். 

   தமிழ்நாட்டில் இந்தவகை ஏற்பாடு அறவே இல்லாததே தமிழ்வழிக்  கல்விக்குப் பெருந்தடையாக உள்ளது. 

முதலில் இன்றைய ஆட்சியாளர்களுக்குத் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவரவேண்டும் என்று அறிஞர் அண்ணாவுக்கு இருந்த உண்மையான உள்ளார்ந்த உணர்வு வேண்டும். 

தாய்மொழி தமிழ் ஆட்சிமொழியாக இருக்கும்பொழுது, ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருப்பது பயிருக்கு மேலாகத் தண்ணீர் தெளித்துவிட்டு வேரிலே வெந்நீர் பாய்ச்சும் செயலாகும். 

தமிழ்வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்ற அச்சம் மக்களிடம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டரசு, முதலில் எல்லாத் துறைகளிலும் எல்லா நிலைகளிலும் தமிழின் பயன்பாட்டை நூற்றுக்கு நூறு விழுக்காடு நடைமுறைப்படுத்த வேண்டியது இன்றியமையாப் பணியும் கடமையுமாகும்.தமிழ் ஆட்சிமொழிஎன்ற சட்டமிருந்தும் முழுமையாக நடைமுறைப்படுத்தாத இன்றைய இழிநிலை போக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டரசின் வேலைவாய்ப்புகளில் இக்கால் இருபது விழுக்காடு தமிழ்வழிக்கல்வி பயின்றோருக்குத் தரப்படுகின்றது. ஆங்கிலம் இன்றியமையாது தேவைப்படும் ஒருசில பணிகளுக்கான வேலை வாய்ப்புகள் தவிர ஏனைய தொண்(டு)ப(த்)து விழுக்காட்டிற்கும் அதிகமான (>90%) வேலைவாய்ப்புகள் தமிழ்வழிக்கல்வி படித்தோர்க்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால், அரசு இதற்கு உறுதியான சட்டம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும்.

மேலும், மண்ணின் மைந்தர்க்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதை - தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு மக்களுக்கே முன்னுரிமை என்பதை - உறுதி செய்ய வேண்டும். தக்கவாறு சட்ட நுணுக்கங்கள் அறிந்து, இதற்குத் தேவையான புதிய சட்டங்கள் இயற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள், உடனடியாக எடுக்கப்படவேண்டும்.  இத்தகைய நடவடிக்கைகளால் தமிழரின் வேலைவாய்ப்புரிமையைக் காப்பாற்றி உறுதி செய்யவேண்டும்.

கல்வியின் பெயரால், மக்களைச் சுரண்டும் தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகள் அனைத்தையும் அரசு கையகப்படுத்த வேண்டும். கல்விநிலையங்களை அரசே நடத்தவேண்டும். ஆளுங்கட்சியினர் உள்ளிட்ட அரசியற்காரர்களே இப்பள்ளிகளை நடத்துவதால்தான் இதே நிலை, யார் ஆட்சிக்கு வந்தாலும் மாறாமல் இடையூறின்றித் தொடர்கிறது. தமிழுக்கு உண்மையில் ஆக்கம் சேர்க்க நினைக்கும் முதலமைச்சர் துணிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழ்நாட்டில், கல்வியின் பெயரால் கொள்ளையடிக்கும் தமிழரும் பிறமாநிலத்துக்காரரும் நயன்மன்றம் சென்றாலும் அவ் வழக்குகளைத் தக்கவகையில் கையாண்டு அவர்தம் முயற்சிகளை முறியடிக்கவேண்டும். 

ஆங்கிலவழிக்கல்வி வழங்கும் பள்ளிகளின் கட்டமைப்புக்குச் சற்றும் குறைவில்லா வகையில், மேம்பட்ட கட்டமைப்புகள் கொண்ட வகையிலும் தமிழ்வழிப் பள்ளிகள் இருக்கவேண்டும். 

தமிழ்வழிக்கல்வி நிலையங்களில் போதுமான ஆசிரியர்கள் குறைவின்றி அமர்த்தப்பட வேண்டும். தமிழ்வழிக்கல்வி ஏழைகளுக்கானது, ஒப்பீட்டில் தாழ்வானது, அறிவுக் குறைபாடாக்குவது என்பனபோலும் முற்றிலும் பொய்யான கருத்துப்பரப்பல்களை அரசு கொள்கைவிளக்கத் துறைகளின்வழி தக்கவாறு விளக்கமளித்து அறவே போக்கவேண்டும்.  

  அனைத்துத் துறைகளிலும் தமிழை வளர்ச்சியடையச் செய்தபின் தமிழ்வழிக் கல்வியைக் கொண்டுவரலாம் என்னும் சிலரின் கூற்று, நீச்சல் பழகியபிறகு நீரில் கால்வைத்து இறங்கலாம் என்னும் கூற்றுக்கு ஒப்பானதென்க. விரும்புவோர், ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் படிக்க வழிவகை செய்துதரலாம். ஆங்கில மொழியறிவு அல்லது பிறமொழியில் தேர்ச்சி தேவைப்படும் வேலைகளுக்குச் செல்ல விரும்புவோர் ஆங்கில மொழியையோ பிறமொழியையோ படித்துக் கொள்வதில் தவறில்லை. 

தமிழ்நாட்டரசு தமிழ்வழிக்கல்விக்காகத் தொடக்கத்தில் பெருந்தொகை செலவழிக்க வேண்டியிருந்தாலும், தயக்கம் காட்டாது அதற்கு ஒதுக்கீடு செய்ய முனையவேண்டும்.

 ஆள்வோருக்கு உண்மையாக தமிழுக்கு ஆக்கம் செய்யவேண்டுமென்ற மனம் வேண்டும்.மனமிருந்தால் வழியுண்டு’.         

                ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

                நீள்வினையால் நீளும் குடி.                               - கு..1022               

                பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் 

                அருமை உடைய செயல்.                                   - கு.975.

                

--------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை: