வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

அந் நன்னாள் விரைந்திடுக!

 (திருவெண்ணெய் நல்லூர்ப் புலவர் க.கதிர்வேலு   தம் தமிழ்ச்சோலைஎன்னும் இதழுக்குப் பாடல் கேட்டபோது எழுதித்தந்த பாடல் இது)

அந் நன்னாள் விரைந்திடுக!

       

உலகமுதன்  மொழியென்றே ஓர்ந்தாய்ந்தோர் தமிழினுயர்

வுரைக்கக் கண்டோம்!

உலகமுதல் நாகரிகம் ஒள்ளாய்வால் தமிழரதென்

றுறுதி செய்வர்!

உலகுயிர்பால் அன்பருளும் உயர்மானம் கொடைவீரம்

ஓம்பும் பண்பும்

உலகினிலே இயல்பாகக் கொண்டிருந்த இனமிதென

உரைக்கும் நூல்கள்!

 

பெருமையெலாம் மிகஅடுக்கிப் பேச்சாலே கவர்ந்தவர்கள்

பெற்ற ஆட்சி

திருடுதற்கும் கொள்ளைக்கும் திகழ்வாய்ப்பாய்க் கொண்டிங்கே

தீமை எல்லாம்

பெருகிடவே செய்தனரே! பிறங்கடைகள் தாய்மொழியைப்

பேணாப் போக்கில்

கருகிடவே விட்டனரே கறையற்ற சிறப்பெல்லாம்

கரைய விட்டே!

 

இன்றுள்ள தமிழர்நிலை எண்ணிடுவீர்! இயல்பாக

இவர்கள் பேச்சில்

ஒன்றலுறப் பிறமொழிகள்! ஒழிந்ததுதாய் மொழிவழியே

ஓதும் வாய்ப்பும்!

சென்றுதொழுங் கோவில்கள், செப்பிவழக் காடுமன்றம்

சேர எல்லாத்  

துன்றாட்சித் துறைகளிலும் தொகுப்பாகத் தமிழிலையே,

தொலைந்த தந்தோ!


 

பண்பாடும் நல்லொழுங்கும் பார்போற்றும் நல்லறங்கள்

பலவும் சொன்ன  

மண்ணிற்கே உரியவுயர் மாண்பெல்லாம் படிப்படியாய்

மறையச் செய்தே

கண்கெடுக்கும் இருதிரையின் காட்சியெலாம் தமிழர்தம்

கருத்தில் மாசு

மண்டிடவே புகுத்துநிலை மட்டின்றி நடக்கிறதே

மயக்கத் தாழ்த்தி!

 

ஆற்றுரிமை நெகிழ்ந்ததுவே! அணுத்தீமை கொடுவுலைகள்

அமைத்த தோடே

ஊற்றுநீர் நிலவளத்தை உறிஞ்சிடலும் நடக்கிறதே

ஊக்கத் தோடே!

மாற்றமிலா ஒட்டார மனத்திலிந்தி சமற்கிருதம்

வளர்த்தற் கென்றே

தேற்றமுறச் செயற்பாடு! தீந்தமிழை அழிப்பதற்கும்

திட்டம் உண்டே!

 

 எந்தநிலை யானாலும் எல்லாரும் சமமென்றே

இங்கே வாழ

செந்நெறியில் அமைவிலையால் சீறியெழுந் துரிமைபெறச்

சிறந்த ஈகச்

செந்தமிழ இளையோரின் செழும்படையொன் றமைத்திடுக

செப்ப மாக!

அந்நன்னாள் விரைந்திடுக! அந்தமிழர் அரசமைக!

ஆக்கம் சேர்க!

கருத்துகள் இல்லை: