திங்கள், 28 ஏப்ரல், 2025

கல்விக்கொள்கை: ஒரு மொழியா? இருமொழியா? மும்மொழியா? எது சரி?

 

கல்விக்கொள்கை: ஒரு மொழியா? இருமொழியா? மும்மொழியா? எது சரி?


ந்தியாவில், ஆங்கிலேயர் ஆண்ட காலம் முதலே, 1938-க்கு முன்பிருந்தே இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களிடம் வலிந்து இந்தியை எப்படியும் திணித்தே தீர்வது என்ற முயற்சி, இந்திக்காரர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழின் அழிவுக்கு வழிவகுக்கும் இந்தித் திணிப்பைத் தமிழர், உயிரீகம் உட்பட பலவகை ஈகம் செய்து எதிர்த்தும் இந்தித்திணிப்பு முயற்சி நின்றபாடில்லை. இந் நிலையையே பாவலரேறு பெருஞ்சித்திரனார்,

ஆயிரந் தடவை இந்தியை அழித்தோம்!

ஆயிரந் தடவை மீண்டும் எழுதினர்!

ஆயிரந் தடவை இந்தியை எதிர்த்தோம்!

ஆயிரந் தடவையும் மீண்டும் புகுத்தினர்!

எந்தவோர் தடவையும் எதிர்த்த எதிர்ப்பால்

இந்தி நுழைவு நின்றதும் இல்லை;

இந்திய மடயர்கள் அதிர்ந்ததும் இல்லை! - என்று பாடுவார்.

இந்தித் திணிப்புக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் என்பது இந்திய ஒன்றியத்தில் தமிழ்மொழியின், தமிழரின் அதிகார அடிப்படையிலான நிலை தொடர்பானது. இந்தித்திணிப்பு, தமிழரை இந்தியாவின் இரண்டாம்நிலைக் குடியினராக்கும் முயற்சியாகவே கருதுகின்றோம்.

காலந்தோறும் வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு வடிவங்களில் இந்தித் திணிப்பு முயற்சி தொடர்ந்து மக்கள் வரிப்பணத்தை (தமிழரின் வரிப்பணம் உட்பட) வாரி இறைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த முயற்சியில் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் கொஞ்சம் முன்னேற்றமும்


 அடைந்திருக்கின்றார்கள். அது அவர்களுக்கு நிறைவளிக்கவில்லை. இப்போது, மிகத் தந்திரமாகப் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழித் திட்டம் என்ற உருவில் கொண்டுவந்துள்ளனர்.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மொழிப்பாடம் பற்றிய வரலாற்றை அறிந்தால்தான் மேற்கூறிய செய்திகளின் உண்மை தெளிவாகப் புரியும். சி.இராசகோபாலாச்சாரி தலைமையில் இந்திய தேசியப் பேராயக் கட்சியின்  (INC) முதல் அரசாட்சி நடந்துவந்தது. அந்த ஆட்சி சென்னை மாகாணப் பள்ளிகளில் 1937ஆம் ஆண்டு, கட்டாய இந்தி கற்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. அதை எதிர்த்து  முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி, மூன்றாண்டுக்காலம் நடைபெற்றது. இப் போராட்டத்தில், உமாமகேசுவரனார், சோமசுந்தரபாரதியார், பெரியார் ஈ.வெ.இரா., மறைமலையடிகள், கி.ஆ.பெ.விசுவநாதம், பாவேந்தர், சவுந்தரபாண்டியனார், திரு.வி.க., அண்ணாத்துரை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் முதலிய தலைவர்களும் பெண்கள், இளைஞர் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இப்போராட்டம் உண்ணாநோன்புகள் , மாநாடுகள், பேரணிகள், மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. அரசின் கடும் அடக்குமுறையின் விளைவாகத் தளைப்பட்டுச் சிறையிலிருந்த இரண்டு போராளிகளான தாலமுத்துவும் நடராசனும் உயர்நீத்தனர். பெண்கள் சிறுவர்கள் உட்பட 1,198 பேர் தளைப்படுத்தப் பட்டனர். 1939இல் இராசகோ பாலாச்சாரி அரசு பதவியிலிருந்து இறங்கியது. பின்னர்த் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்கிய மதராசு மாகாண ஆளுநராக இருந்த சான் எருசுகின், இந்தி கட்டாயம் என்ற உத்தரவை 21-02-1940-இல் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

அடுத்து, இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1948-ல் ஓ.பி.இராமசாமியார் மதராசு மாகாண முதல்வராக இருந்தபோது பள்ளிகளில் இந்தியை விரும்புபவர் விருப்பப் பாடமாகப் படிக்கலாம் எனக் கொண்டுவந்தபோது எழுந்தது. அப்போதும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து அறிவிப்பைத் திரும்பப் பெற்றுவிட்டார். 

மூன்றாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆங்கிலத்தை முற்றாகத் தவிர்த்துவிட்டு, இந்தியை மட்டும் அலுவல்மொழியாக்க முனைந்தபோது எழுச்சியுற்றது. இந்தி மட்டும் அலுவல்மொழியாக வேண்டும் என்பதில் இந்தியத் தேசியத் தலைவர்கள் காந்தி, நேரு, பட்டேல், அம்பேத்கர், சி.இராசகோபாலாச்சாரி முதலிய அனைவர்க்கும் ஒருமித்த கருத்து இருந்தது.

இந்தியா குடியரசு ஆனதன் பதினைந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்திய ஒன்றியத்தின் ஒரே அலுவல் மொழியாக இந்தி திணிக்கப்பட்டதைப் பல இந்தி பேசாத மாநிலங்கள் எதிர்த்தன. 1965 சனவரி 26ஆம்நாள் நெருங்கநெருங்க, சென்னை மாநிலத்தில் பெருமளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதால் போராட்டம் வேகம் பெற்றது. மாநிலம் முழுவதும் போராட்டம் பரவியது. காவல் துறையின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பேரணிகள், மறியல்கள், வன்முறை, தீவைப்பு, தடியடி, துமுக்கிச் சூடுகளும் தடையின்றித் தொடர்ந்தன. உணர்ச்சி வயப்பட்ட சிலர் தங்களைத் தீயிற்கு இரையாக்கி உயிர்ஈகம் செய்தனர்.

பேராயக்கட்சியின் முதல்வர் பக்தவச்சலம் தலைமையிலான மாநில அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க நாட்டின் பாதுகாப்புப் படையினர் தமிழகத்தில் இறக்கப்பட்டனர். காசுமீருக்கு அடுத்தபடியாக நாட்டின் பாதுகாப்புக்கான படை உள்நாட்டில் இந்தப் போராட்டத்தை ஒடுக்குவற்கே தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டது. போராடும் மாணவர்களை வரைமுறை இல்லாமல் கடுமையாகத் தாக்கி அடக்கமுயன்றனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் பலவேறு ஊர்களில் துமுக்கிச்சூட்டால் கொல்லப்பட்டனர். இரண்டு காவலரும் பலி ஆயினர். நிலைமை கட்டுமீறி மோசமானதை உணர்ந்த அப்போதைய இந்திய ஒன்றியத் தலைமை அமைச்சர் இலால்பகதூர் சாத்திரி இறங்கி வந்து,  இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும் என்ற உறுதியளித்தார். இதன் பிறகு அடக்குமுறைகளும் மாணவர் போராட்டமும் தணிந்த.

இந்திஎதிர்ப்புப் போராட்டம் மாநிலத்தில் அரசியல் மாற்றத்திற்கு வழிவகுத்தது.  1967 சட்டமன்றத் தேர்தலில்,  திமுக வெற்றிபெற்றது. அதன் பின்னர்ப் பேராயக்கட்சி தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. இந்தியையும் ஆங்கிலத்தையும் அலுவல் மொழிகளாகக் காலவரையின்றிப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, இந்திரா காந்தி  தலைமையிலான இந்தியஅரசால் அலுவல் மொழிகள் சட்டம் 1967இல் திருத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில், முதல்வர் அண்ணா, மும்மொழிக் கொள்கை நீக்கப்படும்; தமிழும் ஆங்கிலமும் மட்டுமே கற்பிக்கப்படும்; ஐந்து ஆண்டுகளுக்குள் எல்லாக் கல்லூரிகளிலும் தமிழ் மூலமே பயிற்றுவிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும்; அரசின் எல்லாத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் விரைவுபடுத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அண்ணாவின் காலத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் ஆங்கிலவழி கற்பிக்கும் தனியார் பள்ளிகள் புற்றீசலெனப் பெருகிப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணித்து மக்களின் பணத்தையும் சுரண்டி வருகின்றன. மறைமுமாக இந்தித் திணிப்புக்கும் துணைநின்று வருகின்றன. 

இப்போது, புதிய கல்விக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை, பி.எம்.சிரி. (PM SRI) பள்ளிகள், நவோதயா பள்ளிகள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (சமக்கரா சிக்குசா அபியான்), நடுவக் கல்வியகங்கள் (கேந்திர வித்தியாலயா) என்னும் பல பெயர்களில் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க மும்முர முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவற்றில், நவோதயா பள்ளிகள், நடுவக் கல்வியகங்கள் (கேந்திர வித்தியாலயா) என்னும் பள்ளிகளில் இந்தி திணிக்கப்பட்டு விட்டது. அங்கு தமிழ்ப்பாடம் அறவே இல்லை. முன்னரே குறிப்பிட்டவாறு தனியார் பள்ளிகளிலும் இந்தித் திணிப்புக்கு வழிசெய்யப்பட்டுள்ளது.

இந்திய ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியைப் பெற, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் (மும்மொழித் திட்டத்தை ஏற்கவேண்டும்) என்றும், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் பேசிய இந்தியக் கல்வி அமைச்சர் தருமேந்திர பிரதான் என்பாரின் செருக்குப்பேச்சு தமிழர்களைக் கொதிப்படைய வைத்தது. தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய உருவா 2,152 கோடி நிதியை இந்திய அரசு இன்னும் வழங்கவில்லை.

நாட்டிலுள்ள குடிகள் தம் தாய்மொழியைக் கட்டாயம் படித்தாக வேண்டும். அது இன்றியமையாதது; மக்கள் அனைவர்க்குமானது. இரண்டாவதாக ஒரு மொழியைப் படிக்க வேண்டிய நிலை அனைவர்க்குமானது இல்லை. தேவைப்படுவோர்க்கும் விருப்பப்படுவோர்க்குமானது. மக்கள் எல்லோர்க்கும் இரண்டாம் மொழி தேவையில்லை.

உருசியா, சீனா, பிரான்சு, சப்பான், கொரியா முதலிய நாடுகளில் மக்கள் அனைத்து அறிவியலையும் நுண்கலைகளையும் கூடத் தம் தாய்மொழி வழியே படித்து முன்னேறி உலகின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகின்றனர். நோபல்பரிசு பெற்ற பல அறிஞர்களுக்கு அவர்கள் தாய்மொழியைத் தவிரப் பிறமொழி தெரியாது என்பது உண்மையாகும்.

மேற்கூறிய நாடுகளில் உலகின் எந்த மூலையில் எந்த மொழியில் புதிய அறிவியல் செய்தியோ பிறதுறைச் செய்தியோ வந்தாலும் உடனுக்குடன் அவர்கள் தாய்மொழியில் அச்செய்தி பெயர்த்தளிக்கப்படுகின்றது. நூல்களும் அவ்வாறே பெயர்க்கப் படுகின்றன. புதிய சொற்களை, குறியீடுகளை உடனே பெயர்ப்பதில் சிக்கல் இருந்தால் மூலநூல் சொற்களையும் குறியீடுகளையும் அப்படியே பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், முறையாக அவற்றிற்கான தம்மொழியின் பெயர்ப்புச் சொற்களையும் குறியீடுகளையும் கண்டுபிடித்து பிறகு மொழிபெயர்த்த நூலில், செய்தியில் திருத்தம் செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் இந்தவகை ஏற்பாடு அறவே இல்லாததே தமிழ்வழிக் கல்விக்குப் பெருந்தடையாக உள்ளது. இங்கு மாநில அரசிலும் இந்திய ஒன்றிய அரசிலும் பதவிக்கு வருவோர் இதில் கருத்துச் செலுத்துவதே இல்லை. ஆனால், தமிழில் அறிவியல் நூல்கள் இல்லை என்று மொழியின் குற்றமாகக் கூறும் போக்கைக் காண்கிறோம்.

தமிழ் அந்த நிலையை அடைய ஏற்பாடு செய்யும் வரை உலகளாவிய ஒரு மொழியை, அண்மைக்கால அறிவியல் முன்னேற்றம்வரை அறிந்துகொள்ள உதவும் ஒரு மொழியை, உலக இலக்கியங்களில் பெரும்பாலனவற்றை அறிய உதவும் ஓரு மொழியை, உலக மக்களில் பெரும்பாலாரோடு தொடர்பு கொள்ள உதவும் ஒரு மொழியை இரண்டாம் மொழியாகப் படிக்கலாம் என்று மக்கள் நலம்நாடும் நல்லறிஞர்கள் முடிவுசெய்ததின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகின்றது.

இன்னொரு மொழியைப் படிப்பது தேவை என்ற நிலையினரான மொழிபெயர்ப்பாளர், மொழி ஆய்வாளர் முதலியவர்கள் அவரவர்க்குத் தேவையான மொழியைத் தேர்ந்து படிப்பதில் தவறில்லை. அப்படித்தான் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும் அப்பாத்துரையாரும் சோமசுந்தர பாரதியாரும் மறைமலையடிகளும் பூரணலிங்கமும் பிறரும் பல மொழிகளைக் கற்றனர்.

இனி, மூன்றாம் மொழி படிக்கவேண்டும் என்பதும் அவரவர் விருப்பத்தையும் தேவையையும் பொருத்ததாகும். விருப்பம் உடையோர், மூன்றாம் மொழி மட்டுமன்றி இன்னும் எத்தனை மொழிகளும் கற்கலாம். அதனை யாரும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டு இந்திப் பரப்புரை அவையில் விரும்புவோர் தடையின்றி இந்தி படிப்பதைப் பார்க்கின்றோம்.

ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லாரும் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்கவேண்டுமென்று வலியுறுத்துவது, கட்டாயப்படுத்துவது, மாந்த உரிமைகளை மதிக்காத போக்காகும். இவ்வுலகில் அறிந்துகொள்ள வேண்டிய பல்வேறு அறிவுநிலைகள் இருக்கும்போது குறுகிய வாணாள் கொண்ட மாந்தரைத் தேவையற்ற நிலையில் மூன்றாவதாக, நான்காவதாக மற்ற மொழிகளைக் கற்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்துதல் அவர்களுக்குக் கூடுதல்சுமை ஏற்றும் செயலாகும்.

இந்தியாவில் எல்லாரும் இந்தியை, சமற்கிருதத்தைக் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு தந்திரமான கல்விக் கொள்கை வழியாகத் திணிக்கப்படுவது மாந்தஉரிமை மீறும் செயலாகும். தமிழகத்துச் சிற்றூரிலுள்ள சிறுநில உழவர் இரண்டாம் மொழி ஆங்கிலம் படிப்பதே அதிகமாகும்.  

இனி, இந்த இந்தியநாட்டில் ஒற்றுமை, ஒரேநிலைஎன வலியுறுத்தி ஏமாற்றுவோர் அப்படி உண்மையிலேயே ஒற்றுமையை, ஒரே நிலையைக் கடைப்பிடிக்கின்றனரா? தமிழரை மூன்று மொழி படிக்க வேண்டுமென்று வலியுறுத்துவோரும் அவர்க்குத் துணைபோவாரும், உத்தரப்பிரதேசம், பீகார் முதலிய மாநிலங்களில் கடைப்பிடிக்கும் நிலை தெரியாதவர் என்று சொல்ல முடியாது. அங்கெல்லாம் இரண்டாம் மொழியே படிக்கும் நிலை இல்லை. இரண்டாம் மொழி சொல்லிக் கொடுக்கவே மிகப்பல இடங்களில் ஆசிரியர்களே இல்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் இருக்கின்றது. இது நாமே வலிந்து கூறும் செய்தியன்று. முன்னாள் இந்திய ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் தெளிவுபடுத்திய நிலையாகும். ஒரே நிலைவற்புறுத்தும் பேர்வழிகளின் ஏமாற்றுச் செயலாகவன்றோ இஃது இருக்கின்றது!

எனவே, தமிழர்களில் பலருக்கும் ஒருமொழிக் கொள்கையே போதும். அந்த ஒருமொழிக் கொள்கை நடைமுறைக்கு வரும்வரை, அதற்கான ஏற்பாடுகளை ஆட்சியாளர் முறையாக முயன்று செய்யும்வரை நாம் இருமொழிக் கொள்கையை நிறைவில்லா மனத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆனால், மும்மொழிக் கொள்கை என்ற மோசடிக் கொள்கை தமிழர்க்கு அறவே தேவையற்றதும் ஏற்கவேண்டாத சுமையுமாகும் என்பதுடன் நம்மை அடிமை நிலைக்குத் தள்ளும் முயற்சியாக உள்ளதென்றும் நற்றமிழ் வலியுறுத்துகின்றது.


 14-4-2025 நாளிட்ட புதுவை 'நற்றமிழ்' இதழில் வந்தது.

-----------------------------------------------------------------------------------

திங்கள், 7 ஏப்ரல், 2025

அகத்தியர் புரட்டு: தமிழ், தமிழர்க்கு எதிரான சூழ்ச்சி! - 1.

                                             அகத்தியர் புரட்டு: 

               தமிழ், தமிழர்க்கு எதிரான சூழ்ச்சி! - 1.

    காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற பெயரில் முதல், இரண்டாம் நிகழ்ச்​சிகள் கடந்த 2022, 2023-ம் ஆண்டு​களில் வாரணாசி என்னும் காசியில் நடைபெற்றன. அப்போது, அரசுச் செலவிலேயே தமிழ்நாட்டிலிருந்து சிலரைக் காசிக்கு அழைத்துச் சென்று சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வைத்துத் தமிழ்நாட்டிற்குத் திரும்ப ஏற்பாடு செய்திருந்தார்கள். அதன் தொடர்ச்​சியாக மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி காசி தமிழ்ச் சங்கமம் 3.0’ எனும் பெயரில் 2025 பெப்​ருவரி 15 முதல் 24 வரை 10 நாட்கள் நடைபெறும் செய்தியை இந்திய ஒன்றிய அரசின் கல்வித் துறை அமைச்சர் தருமேந்திர பிரதான் தில்​லி​யில் 15–1-2025 அன்று அறிவித்​தார்.

அப்போது,...“இந்நிகழ்ச்​சிக்கு வருபவர்கள் அயோத்தி ராமர் கோயிலையும் பிரயாக்கு​ராசில் நடைபெறும் கும்பக்கூடல் விழாவையும் (கும்பமேளாவையும்) காணலாம் என்றார். காசி தமிழ்ச் சங்கமம் 3.0இன் ​கருப் பொருளாக அகத்தியமுனி’யை வைத்துள்ளதாகக் கூறினார்…

“…அகத்தியமுனி, தமிழ் இலக்கியத்தை முதன்முறையாக எழுதியவர்;.காசிக்கும் தமிழகத்துக்கும் இடையிலான சிறந்த இணைப்பாக இருந்தார் என்றார்.

இமாலயத்தில் பிறந்தவரான அகத்தியரிடம் சிவன், தமிழகத்துக்குச் செல்லும்படி கட்டளையிட்டதாக நம்பிக்கை உள்ளது. இதில், அகத்தியரிடம்தான் முருகன் தமிழ் இலக்கணம் கற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்திய சித்த மருத்துவ (வைத்திய) முறையைத் தோற்றுவித்தவராகவும் அகத்தியர் இருந்ததால் அவரது பிறந்தநாளைத் தேசிய சித்த நாளாக டிசம்பர் 19-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகம், கேரளாவின் களரிக் கலையை தோற்றுவித்தவர் அகத்தியர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

தமிழ் அரசர்களான சோழர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு குலகுருவாகவும் அகத்தியர் இருந்துள்ளார். செம்மொழி தமிழின் இலக்கியத்தில் அகத்தியரின் பங்கு அதிகமானது. தமிழ் மற்றும் சமற்கிருத மொழிகளில் அகத்தியர் பல நூல்களையும் எழுதியுள்ளார். இருக்கு மறையில் (ரிக்வேதத்தில்) சுமார் 300 மந்திரங்களையும் எழுதியுள்ளார். போர் நுட்பமான அதித்ய ரிதத்தை அகத்தியர் ராமருக்குக் கற்பித்ததால் அவர் இலங்கைக்குச் சென்று போரில் வென்றார். அகத்தியரைப் பற்றி ராமாயணம், மகாபாரதம், புத்த இலக்கியங்களிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அகத்தியர் தம் மனைவி ‘உலோபமுத்திராவுடன் பாரதத்தின் ஆயிரக்கணக்கா கோவில்களில் குறிப்பாகத் தமிழகத்தின் காவிரிக் கரையில் வழிபாடுகள் செய்த ஒரே முனிவர். அகத்தியர் வழிபாடுகள் கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, சாவா, கம்போடியா, மற்றும் வியத்நாமில் நடத்தப்படுகின்றன. இந்த அளவுக்குப் புகழ்பெற்ற அகத்திய முனி இந்தமுறை காசி தமிழ்ச் சங்கமம் 3.0’ -இன் மூல அடிப்படையாக இருப்பார்

காசி தமிழ்ச் சங்கமம் 3.0இன் போது காசியில், முனிவர் அகத்தியர் திறனின் பல்வேறு கூறுளான நலவியல், மெய்யியல், அறிவியல், மொழியியல், இலக்கியம், அரசியல், பண்பாடு, கலை பற்றியதும், குறிப்பாகத் தமிழ், தமிழ்நாடு ஆகியவற்றிற்கு அவர் அளித்த பங்களிப்புகள் பற்றியதுமான கண்காட்சி, கருத்தரங்குகள், பட்டறைகள், புத்தக வெளியீடு மற்றும் பிற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும்...

கா.த.ச.3.0க்கு முன் போட்டிகள் மற்றும் பிற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டிலும், மிகுதியான அளவு புலம்பெயர்ந்த தமிழர் உள்ள இந்திய, வெளிநாட்டு முக்கிய நகரங்களில் தகுந்த முறையில் ஏற்பாடு செய்யப்படும்

அகத்தியருடைய அறிவார்ந்த திறம் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது…

இந்த ஆண்டு கா...3.0நிகழ்ச்​சியில் தமிழ்நாட்டிலிருந்து மாணவர், ஆசிரியர், எழுத்தாளர் பிரிவினர், உழவர், கைவினைஞர் பிரிவினர், தொழில்வல்லார், தொழில் முனைவோர் பிரிவினர், பெண்கள் (முத்திரா கடன் பயனாளிகள், தக்கண பாரத இந்தி பரப்புரையர்) பிரிவினர், தொடக்கநிலைத் தொழில் நிறுவனத்தர், புத்தாக்கத்தர், கல்விநுட்பாளர், ஆய்வாளர் பிரிவினர் என்னும் ஐந்து பிரிவினரிலிருந்தும்  ஏறத்தாழ 1000 சார்பாளர்கள் கலந்து கொள்வர்…

காசிக்கும் தமிழ்நாட்டிற்குமான தொடர்பிற்கு எழுச்சியூட்டும் இந்நிகழ்ச்சியில் இவர்களுடன் கூடுதல் குழுவாக பல்வேறு நடுவண் பல்கலைக்கழகங்களில் தமிழின் தோற்றம் பற்றி ஆய்வுசெய்யும் ஏறத்தாழ 200 மாணவர் பங்கு பெறுவர். இந்தச் சுற்றுச்செலவு நடைபெறும் காலம் எட்டு நாள்களாகும். (நான்கு நாள்கள் செலவுக்காலம், நான்கு நாள்கள் பார்வையிட) முதல்குழு தமிழ்நாட்டிலிருந்து பெப்புருவரி 13-ல் புறப்​படும். கடைசிக் குழு தமிழ்நாட்டிற்கு பெப்புருவரி 26-ம் நாள் ​திரும்​பு​கிறார்​கள்”... ​- என்று அமைச்​சர்​ தரு​மேந்​திர பிர​தான்​ தெரி​வித்​தார்​. (போக்குவரத்து, உணவு, தங்கிடம் முதலிய எல்லாச் செலவுகளையும் இந்திய ஒன்றிய அரசு ஏற்றுச் செலவழிக்கின்றது)…– என்றும் ஒன்றிய அமைச்சர் கூறியிருக்கின்றார்.

அமைச்சர் தெரிவித்த அகத்தியர் பற்றிய செய்திகள் வெறும் கற்பனையான மூடநம்பிக்கைக் கதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன் எந்த அடிப்படைச் சான்றும் அறிவியல் நோக்கும் அற்றவை என்பதும் தெளிவான உண்மையாகும். இவற்றில் உண்மை இல்லாத செய்திகளும் உள்ளன.

தக்க அடிப்படைகள் இல்லாத, மதநம்பிக்கைத் தொடர்பான நிகழ்ச்சிகளை மதச்சார்பற்ற அரசு பெரும் பொருட்செலவில் நடத்துவது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் செயலாகவே உள்ளது. இவையிருக்க, இந்தக் ‘காசி தமிழ்ச் சங்கமம் 3.0’ நிகழ்ச்சியின் கருப்பொருளாக அகத்தியரை வைத்து அரசியல் செய்வதில் சூழ்ச்சி இருப்பதாகவே ஐயுறுகின்றோம். அவற்றைப் பற்றிப் பின்னர்ப் பார்ப்போம்.  

மேற்குறித்த ‘காசி தமிழ்ச் சங்கமம் 3.0’ஐ, முன்னிட்டு, சென்னையில் நடுவண் செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனமும் சாத்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் இணைந்து, அகத்திய முனிவர் போல உடை அணிந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு நடைச்செலவு ஊர்வலம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.  ‘சாந்திபனி வித்தியாலயா’, ‘’பிஎசு சீனியர், பிஎசுபிபி, பவன்சு ராசாசி வித்தியாசிரமம்’ ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதில் பங்குபெறச் செய்தனர். இந்திப் பரப்பவையில் தொடங்கி தியாகராய நகரில் உள்ள அகத்தியமுனிவர் கோவிலில் நடைச்செலவு முடிவடைந்தது.

பங்கேற்றோர் அனைவருக்கும் அகத்தியர் குறித்த அமர சித்திரா கதா வெளியிட்ட அகத்தியர் பற்றிய நூல் ஒன்று வழங்கப்பட்டது. மேலும் படையலுணாவும் (பிரசாதம்) வழங்கப்பட்டது. சாத்திரா பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர்சு.வைத்திய சுப்பிரமணியன், சாத்திராவின் சென்னை இயக்குநர் மருத்துவர் சுதா சேசையன், மேற்குறித்த பள்ளிகளின் ஆசிரியர்கள் உள்ளிட்டோரும் இந்த நடைச்செலவில் பங்கேற்றனர் ந்த நடைச்செலவுச் செய்தியை இந்திய அரசும் வெளியிட்டுள்ளது.

நடுவண் செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர் தமிழ்நாட்டு அறிஞர் பலரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது அமர்த்தப்பட்ட திருவாட்டி சுதா சேசையன் என்பவராவார். சாத்திரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் சென்னை இயக்குநராக இருப்பவரும் அவரே.

இன்னும், கா...3.O-ஐ முன்னிட்டுச் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் 9ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் அகத்தியர் குறித்த கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள்களும் மின்னூடகங்களும் கா...3.O-ப் பரவலாக விளம்பரப்படுத்தின. ‘தினமணி’ நாளிதழ் 28-1-2025இல் அகத்தியர் பற்றிக் கற்பனைக் கதைகளையும் மூடநம்பிக்கைகளையும் கொண்ட அறிவியலுக்குப் பொருந்தாத நடுப்பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

புதுச்சேரிப் பல்கலைக்கழக பாரதியார் தமிழியற்புலம் எழுத்தாளர் மாலனை கருத்தரங்கிற்கு அழைத்து, ‘அகத்தியரும் தமிழும்’ எனும் தலைப்பில் பேசவைத்துள்ளனர். அவரும் அகத்தியர் இருக்கு மறையில் 27 ‘சூக்தங்கள்’ எழுதியிருக்கிறார் என்றும் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் அவரே என்றும் பாரதி அதை வலியுறுத்தியுள்ளார் என்றும் போகிற போக்கில் போட்டுத் தள்ளிவிட்டுப் போயிருக்கின்றார்.

பணிநிறைவு செய்த பேராசிரியர்களையும் பதவியில் உள்ளோரையும் அகத்தியர் பற்றிப் பேச வலிந்து வலிந்து அழைக்கின்றனர். பணிநிறைவு செய்த பேராசிரியர்கள் இவர்களுக்கு இசையப் பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ள விரும்பாதோராய் இவர்களைப் பார்க்கவும் விரும்பாது தவிர்க்கின்றனர். ஏக்கத்துடன் எதிர்பார்ப்புக்கு ஆட்பட்ட சிலர் மட்டுமே தலையாட்டிச் செல்கின்றனர்.

முகநூல் முதலிய குமுக ஊடகங்களில் மாலன் வகையினரும் ஓரிரு தமிழ் வெறுப்பாளரும் தொடர்ந்து அகத்தியனால் தான் தமிழ்மொழியே தோன்றியது என்றும் இலக்கியம் தோன்றியது என்றும் தமிழ் வெறுப்பைக் கக்கத் தொடங்கி, உண்மைத் தமிழ் உணர்வாளர்களின் தெருட்சியால் (தெளிவுரையால்) வெருட்சியுற்று (அச்சமுற்று) அடங்குகின்றனர்.

இத்தகையோரின் கூற்றுகள் ஒவ்வொன்றிற்கும் தக்க விடைகளைக் கூறி இவரகளின் உண்மை உருவை வெளிப்படுத்துவதற்கு முன்பாக, இவற்றிற் கெல்லாம் காரணம் என்ன? திடுமென இவர்கள் அகத்தியரைத் தேடிப்பிடித்துத் தூக்கிக் கொண்டு அலைவது ஏன்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்தத் தமிழர்களுக்குத் அவர்களின் தாய்மொழி மீதுள்ள உயிரனைய பற்றை உடைத்தெறிய வேண்டும். அப்போதுதான் சங்கதத்தை (சமற்கிருதத்தை)த் தமிழ்நாட்டில் திணிக்க முடியும்; ஒரே நாடு ஒரே மொழி என்றாக்க முடியும்.

தமிழ்நாட்டில் ஆட்சிக்குவரும் இரண்டு கட்சிகளுமே இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றன; அதனால் இந்தித் திணிப்பின் வழி சங்கதத்தை(சமற்பிருதத்தை)த் திணிக்க முடியாத இக்கட்டுநிலை உள்ளது!

தமிழகத்துக்குத் தெற்கே இருந்த நிலப்பரப்பாகிய குமரிக் கண்டத்தில் தமிழ்மொழி இயற்கையாகத் தோன்றியதென்ற கொள்கை உள்ளதாலும், கடல்கோள்களால் அப்பகுதி அழிய, மெள்ளமெள்ள வடக்கே வந்தவர்களால் அம்மொழி அழியாமல் என்றுமுள தென்றமிழாய் விளங்குகின்ற நிலையாலும் சங்கதத்தை எளிதில் திணிக்கமுடியாத நிலை உள்ளது!

மொழியியல் வழி தமிழ் இயற்கை மொழி என்று ஆய்வறிவர் கூறுவதை மாற்ற, தமிழ்மொழியே வடக்கிலிருந்து வந்த அகத்தியரால் தான் ஏற்பட்டதென்று பொய்யான மூடநம்பிக்கைக் கதைகளின் துணையுடன் வலியுறுத்திக் கூறி, தமிழின் சிறப்பைச் சிதறடிக்க வேண்டும்!

அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டு அகழ்வாய்வுகளில் சிந்து வெளிக்கும் வைகைக் கரைக்கும் தொடர்பை உறுதிப்படுத்தும் புத்தொளித் தரவுகள் கிடைத்து வருகின்றன. ஆதிச்சநல்லூர், கீழடி, சிவகளைத் தொல்லியல் தடயங்கள் தொன்மைச் சிறப்போடு, இந்தத் தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை உறுதிசெய்து வருகின்றன. சிந்துவெளிக் குறியீடுகளையும் தமிழ்நாட்டு அகழ்வாய்வில் கிடைத்த பானைக் குறியீடுகளையும் முறையாக ஒப்பீடு செய்யும் முயற்சிகள் தொடர்கின்றன.

சிந்துவெளி நாகரிக வெளிப்பாட்டின் நூற்றாண்டு விழாவைத் தமிழ்நாடு கொண்டாடுகிறது. அண்மைக்காலத் தொல்லியல் தடயங்களும் தரவுகளும் இந்தியாவின் பழங்குடிகள் தமிழரே எனத் தெள்ளத்தெளிவாக விளக்குகின்றனவாக இருக்கின்றன.

இந்தியத் துணைக் கண்டத்திற்கான தொன்மைச் செவ்வியல் இலக்கியங்களாகக கழக(சங்க) இலக்கியங்களை முன்னிறுத்தக் கூடியவகை அயலக அறிஞர் மறு ஆய்வுப் படிப்பு அமைகிறது.

2000த்தில் ‘பென்னிகுயிக்கு’ என்ற ஆங்கிலேயருக்குத் தமிழ்நாட்டில் சிலை நிறுவியதும் பிரித்தனிலும் அவருக்குச் சிலை நிறுவ இருப்பதுமான செய்திகள் வருகின்றன. சிந்துவெளி நாகரிகத்தை நூறாண்டுகளுக்கு முன் வெளிப்படுத்திய சர் சான் மார்சலுக்குத் தமிழ்நாட்டில் சிலைவைக்கப்படும் என்ற அறிவிப்பு செய்யப்படுகின்றது!

மேற்கூறிய காரணங்கள் தந்த கலக்கத்தால், வரலாற்றில் புரட்டு செய்யமுடியாமற் போகின்ற காரணத்தால், இப்போது அகத்தியரைப் பிடித்துக்கொண்டு தொங்குகின்றனர். வட ஆரிய, பிராமண முனிவர் அகத்தியர்தான் தமிழ் மொழி உருவாகக் காரணமாக இருந்தார் என எல்லோரையும் நம்ப வைக்கவே அகத்தியரைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அலைகின்றார்கள் என்பது தெரிகின்றது. இலக்கியக் கூலிப் படையினரையும் வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பாரையும் கொண்டு இக்கால் இவர்கள் இந்த அகத்தியர் புரட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகத்தியரைப் பற்றி இன்று நாட்டில் பலகதைகள் வழங்குகின்றன. அவற்றுள் மிகப்பெரும்பாலன கற்பனைகளாகவே உள்ளன என்றே ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

            அகத்தியர் கதை வெறும் கற்பனை என்றும், அது வடநாட்டவர் வல்லாண்மையை அந்த வரலாற்றுக்கு முற்பட்ட நாளிலே தென்னாட்டின்மேல் செலுத்தி ஆண்ட வெறுங்கதையே என்றும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவிருந்த  இதழாளரும் ஆய்வாளருமாகிய கே. சிவராசப்பிள்ளை (1879-1941) கருத்தறிவிக்கின்றார்.

திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் தம் தொல்காப்பிய எழுத்ததிகார முன்னுரையில் அகத்தியர் இருவர் இருந்தனர் எனவும் அவர் இருவரும் பல்வேறு வகையில் வேறுபட்டு வாழ்ந்தவராவர் எனவும் குறிக்கின்றார்.

மறைமலையடிகள் தம்முடைய ‘மாணிக்கவாசகர் காலம்’ என்னும் நூலில், “இருக்கு வேதத்தில் பல பதிகங்களை இயற்றிய அகத்தியர் மிகப் பழைய காலத்தே இருந்தவர். இவர் தெற்கேயுள்ள தமிழ்நாடு புகுந்தவர் அல்லர். தமிழ் அறிந்தவரும் அல்லர்” என்று எழுதியிருக்கின்றார்.

வடநாட்டு அகத்தியரின் வேறாகத் தமிழ்நாட்டின் பொதிய மலையில் நல்ல பண்பும் திறமும் உடைய வேறு ஓர் அகத்தியர் இருந்தார் எனவும், அவருக்கும் வடமொழிக்கும் தொடர்பு ஒன்றும் இருந்ததில்லை எனவும், பெயர் ஒற்றுமையால் இடைக்காலத்தில் இருவரையும் ஒருவரெனக் கருதியமையே பல்வேறு கற்பனைக் கதைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடம் கொடுத்ததென்ற கருத்தும் அறிஞர்கள் கருத்துரைக்கின்றனர். 

     அகத்தியர் பலர் இருந்தனரென்பது உண்மை என்று கா.நமசிவாய முதலியார் தம் ‘அகத்தியர் ஆராய்ச்சி’ நூலில்(1931) குறிப்பிட்டுள்ளார்.

     துடிசைகிழார் அ.சிதம்பரனார் ‘அகத்தியர் வரலாறு’ (1964 கழக வெளியீடு) என்ற அவருடைய நூலில் தோற்றுவாயில் கீழே உள்ளவாறு எழுதுகின்றார்:

     “அகத்தியர் என்ற பெயர்கோண்ட புலவர்களும் முனிவர்களும் சித்தர்களும் அறிஞர்களும் பொதுவான மாந்தரும் அரசியல் தூதுவர்களும் பலராவர். அவர்கள் எல்லாம் ஓர் ஊரார் அல்லர்; ஒரு குலத்தவர் அல்லர்; ஒரு காலத்தவர் அல்லர் ஒரே தொழிலை உடையவரும் அல்லர்.

     அகத்தியர் என்னும் பெயர் முதன்முதல் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வந்த ஒரு சிறந்த தமிழ்ப்பெயர் அதனால் அப்பெயரை எல்லோரும் தங்கள் தங்கள் குழந்தைகளுக்கு இட்டு வழங்கி வந்தார்கள்.

     தமிழ் நாட்டாரேயன்றி, ஆரிய நாட்டாரும், சாவக நாட்டாரும் கடார நாட்டாரும் ஈழ நாட்டாரும் ஐரொப்பிய நாட்டாரும் அப்பெயரைத் தங்கள் தங்கள் மக்களுக்கு இட்டு வழங்கி வந்தார்கள்….”   

     மேலே குறிப்பிட்டுள்ள செய்திகளோடு, கி.மு.16000 முதல் கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரை முப்பத்தேழு அகத்தியர் இருந்தனர் என்று காலக் கணக்குடன் துடிசைகிழார் அந்நூலில் எழுதியிருக்கின்றார். மேலும், இருக்குவேத காலத்து அகத்தியர் நால்வர் என்றும் அந்நால்வரும் ஆரியர்களே தமிழர் அல்லரென்றும் அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்றும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தவர்களும் அல்லர் என்றும் சிதம்பரனார் கூறுகின்றார்.

     ”அகத்தியன்” என்பது ஒரு தனிப்பட்ட இயற்பெயர் அன்று; தமிழில் அது ஓர் ஐயனையோ தலைவனையோ பெரியவனையோ குறிக்கும் பொதுப்பெயர் என்றும் அறிஞர் கூறுகின்றனர்.

     இவ்வாறெல்லாம் ஆய்வரும் அறிஞரும் கருதுகையில், அறிவுக் கொப்பாத வகையில் இந்திய ஒன்றிய அமைச்சர் முதல் தினமணி வகையினரான மேதையர் பேதையர் கோதையர் வரை காலக் கணக்கைக் கூடக் கருத்தில் கொள்ளாமல், கற்பனைக் கதைகளை உண்மையானவை என நம்பி, அகத்தியர் ஒருவரே என்று கருதி எழுதி பேசிடும் நிலைக்கு என்னென்று இரங்குவது?

     இனி, அகத்தியர் பற்றிப் பலரும் குழப்பமான பல செய்திகளை எழுதியும் பேசியும் வருகின்ற நிலையில், முதலில், அகத்தியர் பற்றி வடமொழியில் கூறப்பட்டுள்ள செய்திகளைப் பார்ப்போம்:

இரிக்கு ‘வேத’த்தில் முதன்முதலாக அகத்தியர் பெயர் இடம் பெறுகிறது. அகத்தியரின் 27 பாடல்கள் இரிக்கு ‘வேத’த்தில் உள்ளன என்று எழுத்தாளர் மாலன் பேசியிருக்கின்றார். இன்னொருவர், 26 ‘சூக்தங்கள்’ உள்ளன என்று கூறுகிறார். இந்திய அமைச்சர் தருமேந்திர பிரதான், அகத்தியர் இரிக்கு வேதத்தில் ஏறத்தாழ 300 மந்திரங்களை எழுதியுள்ளார் என்று கூறுகிறார். இதிலேயே அவர்களுக்குத் தெளிவில்லை.

திருமந்திரமணி, துடிசைகிழார் அ.சிதம்பரனார் இருக்கு வேதத்தில் மண்டலம் ஒன்றில் அனுவாகம் 23இல் 'சூக்குதங்கள்'166, 167 முதல் 191 வரையிலானவற்றில் 26 'சூக்குதங்கள்' பல தெய்வங்களின் மீது அகத்தியர் பெயரில் பாடப்பட்டவை என்று குறிப்பிட்டு எவ்வெத் தெய்வங்களை எவ்வெச் 'சூக்குதங்க'ளில் பாடியுள்ளரெரெனப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

   மேலும், வடமொழி அகத்தியரின்பிறப்பு அருவருப்பான கற்பனைக் காமக்கதையை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. அக் கதையைக் கீழே காண்க:

    தாரகன் என்னும் அரக்கன் கடும் தவம் புரிந்ததன் மூலம், கடலுக்குள் சென்று ஒளிந்து வாழும் வரமும், ஒரு குடம் அளவு உள்ளவரால் தான் தனக்கு றப்பு நேரவேண்டும் என்ற வரத்தையும் பிரமனிடம் இருந்து பெற்றுக்கொண்டான். இந்த உலகத்தை அரக்கர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காக, முனிவர்களையும், ற்றவர்களையும் தன் அரக்கர் கூட்டத்துடன் சென்று துன்புறுத்தத் தொடங்கினான். இதனால் தேவர்களுக்கான பூசைகளும், வேள்விகளும் தடைப்பட்டன. தேவர்களின் ஆற்றல்களும் குறைந்தன.

தேவர்கள் இந்திரனிடம் சென்று தாரகன் பூவுலகில் செய்யும் கொடுமைகளைப் பற்றிக் கூறினார்கள். முனிவர்களையும், ற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். இவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தேவலோகத்திலிருந்து இந்திரன் கோத்துடன் தாரகனை அழிக்கப் பூவுலகம் வந்தடைந்தான். இதனை அறிந்த தாரகன் கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான். இந்திரனால் தாரகனைப் பின்தொடர்ந்து கடலுக்குள் செல்ல முடியவில்லை. இதற்குத் தீர்வுகாண இந்திரன் முதலில் நெருப்புக் கடவுளை அழைத்து, உன் வெப்பத்தால் இந்தக் கடலை ஆவியாக்கி விடு என்று கூறினான். ஆனால் நெருப்புக் கடவுளோ, “கடல் நீர் இருந்தால் தான் மழை பெய்யும். தண்ணீர் இல்லாமல் எந்த உயிரியும் நிலவுலகில் வாழ முடியாது. இந்தக் கொடுமையை நான் செய்ய மாட்டேன்.” என்று கூறிவிட்டான். இரண்டாவதாக இந்திரன் காற்றுக் கடவுளை அழைத்து வறண்ட காற்றினால் கடலை வற்ற வைக்கும்படி கூறினான். ஆனால் காற்றுக் கடவுளும் நெருப்புக் கடவுள் கூறிய காரணத்தைக் கூறித் தன்னாலும் முடியாது என்று கூறிவிட்டான்.

இதனால் சினமுற்ற இந்திரன் காற்றுக் கடவுளும், நெருப்புக் கடவுளும் பூவுலகில் மாந்தராகப் பிறந்து தொல்லைப்பட வேண்டும் என்று சாவமிட்டான். நெருப்புக் கடவுள் மித்திரன் என்ற பெயரிலும், காற்றுக் கடவுள் ருணன் என்ற பெயரிலும் பூவுலகில் மாந்தராகப் பிறந்தனர்.

இதற்கிடையில் தேவநடியான பேரெழிலி என்னும் ‘ஊர்வசி’ தொடர்பான ஒரு கதை உள்ளது. இந்திரன் ஊர்வசியை நடனமாடப் பணித்தபோது அவள் இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள் எனவும் அதனால் சயந்தனும் ஊர்வசியும் பூவுலகில் பிறக்கும்படி சாவமிடப் பட்டதாகவும் அந்தக் கதை கூறுகிறது.

       தேவருலகத்தில் செய்த தவற்றினால் சாவம் பெற்ற பேரெழிலி என்னும் ‘ஊர்வசி பூவுலகம் வந்து இருந்தாள். அவள் ஒரு குளத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது, மித்திரனும், ருணனும் அவளைக் கண்டனர். இதற்குமுன் அவள் போலும் பேரழகியை அவர்கள் கண்டதில்லை. அப்போது அவர்களிடம் இருந்து விந்து வெளிப்பட்டது. மித்திரன் தன் கையில் இருந்த கும்பத்தில் விந்தை வெளியிட்டான். வருணன் தன் விந்தைத் தண்ணீரில் விட்டான். கும்பத்தில் இருந்து பிறந்தவர்தான் அகத்திய முனிவர். தண்ணீரிலிருந்து பிறந்தவர்தான் வசிட்ட முனிவர்.

அகத்தியர் உலோபாமுத்திரை என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகவும் ஒரு கதை கூறுகிறது.

சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், தெற்கு உயர்ந்து வடக்கு தாழ்ந்ததால். சிவன் அகத்தியரை தெற்கிற்கு அனுப்யிச் சமன்செய்ததாகவும் ஒரு கதை நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றது.

வாதாபி, வில்வன் என்னும் அரக்கர்கள் இருவர் இருந்தனர். இருவரில் வில்வன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கொன்று கறியாய்ச் சமைத்துப் படைத்து, அவர்கள் உண்டபின், வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள்.

முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அவர்கள் துன்பம் தீர்க்க, அகத்தியர் வாதாபி, வில்வலனிடம் விருந்து உண்ணச் சென்றார். வில்வன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியைக் கூப்பிட, அகத்தியர் “வாதாபியே செரித்துப் போ’ (சீர்ணோ பவ) என்று வயிற்றைத் தடவிட வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான். – என்றும் ஒரு கதை.

சிவன் சிவை திருமணத்தில் வடக்குத் தாழ தெற்கு உயர்ந்தது, அதனால் சிவன் அகத்தியரை தெற்குக்கு அனுப்பினான் என்று தமிழிலுள்ள கந்தபுராணத்தில் உள்ள கதை, வடமொழியில் உள்ள கந்தபுராணத்தில் இல்லை. அவரைத் தமிழ் அறிந்த முனிவராகக் கந்தபுராணம் எங்கும் குறிப்பிடவில்லை என்று ஆய்வாளர் கூறுகின்றனர். கந்தபுராணத்தில் காட்டப்படும் அகத்தியர், அப்புராணத்தை ஒட்டிக் காளிதாசர் எழுதிய குமார சம்பவத்தில் இடம்பெறவில்லை.

பெருமான் திருமணத்துக்கு எத்தனையோ கடவுளரும் முனிவரும் வந்தனர் எனக் காட்டும் ஆரியர், அகத்தியர் வந்ததாகக் குறிக்கவில்லை என்பதை வடமொழி வாயிலாகக் கற்ற அறிஞர்கள் நன்கு விளக்கிக் காட்டுகின்றர். எனவே, அந்தப் புராண வரலாறே அகத்தியரைப் பற்றி மாறுபட்ட கருத்துகளைத் தருகின்றது.       

இனி, இந்திய ஒன்றிய அரசின் கல்வி அமைச்சராக இருப்பவர் அகத்தியர் பற்றிக் கூறிய செய்திகளின் தகைமை என்ன என்று பார்ப்போம்.

                                 (அகத்தியர் புரட்டு… தொடரும்)