வியாழன், 10 ஆகஸ்ட், 2017

தமிழர்கள் மட்டுமே மொழித்தூய்மையை வலியுறுத்துகிறார்களா?



தமிழர்கள் மட்டுமே மொழித்தூய்மையை வலியுறுத்துகிறார்களா?
---------------------------------------------------------------------------------------------------------

                                 

     ஆங்கிலத்தில் பிரெஞ்சு இலத்தீன்மொழிச் சொற்கள் கலந்து பொருட்குழப்பத்தை ஏற்படுத்துவதால் அம்மொழிகள் கலப்பற்ற தூய ஆங்கிலம் எழுத வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார் ஆங்கில வரலாற்று ஆசிரியர் பிரீமன் என்பவர்.தனிஆங்கிலக் கழகம்’ (society for pure English) என்ற அமைப்பு 1918 முதல் இயங்கி வருகின்றது.

     பிரெஞ்சு மொழியில் பிறமொழிச்சொற்களை நீக்குவதற்கென்றே பிரான்சு நாட்டின் தலைவராயிருந்த திகால் பல சட்டங்களை இயற்றினார்.
செருமானியரும் மொழிச் சீர்திருத்தத்தில் பல அயற்சொற்களை விலக்கினர்.

     புரட்சியாளர் இலெனின், ‘உருசிய மொழியைக் கெடுப்பதை நிறுத்துங்கள்; பிறசொற் கலப்பை எதிர்த்துப் போரிடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டவராவார்.

     துருக்கியின் வல்லாட்சியராக, வல்லதிகாரியாக இருந்தவர் கமால் அத்தாதுர்க் ஆவார். அந்தக் கமால் அத்தாதுர்க், துருக்கி மொழியில் கலந்திருந்த இருபதாயிரம் அரபி, பாரசிகச் சொற்களை நீக்கிவிட்டு 1,58,000 தூய துருக்கிச்சொற்களை உருவாக்கினார்.

     சீன மொழி தூய சீனமாக்கப்பட்ட பிறகு, மாண்டரின் எனப்பட்டது. தூய சீன மொழியையே பேசவேண்டுமென்று பொதுவுடைமை அரசு கட்டளையிட்டது.

     இங்கே, இந்தியாவில் கருநாடகத்தில், தூய கன்னட இயக்கம் திருள் கன்னடம் என்றும் அச்ச கன்னடம் என்றும் வழங்கப்பட்டது.

     அச்ச தெலுகு இயக்கம் தூய தெலுங்கில் இலக்கியங்களைப் படைத்தது.
 
     பச்ச மலையாளம் என்ற பெயரில் தனிமலையாளம் வழங்கப்பட்டது.

     இந்தச் செய்திகளையெல்லாம் முனைவர் சாரதா நம்பி ஆரூரன் தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்என்ற நூலில் (2008இல் வெளிவந்தது) மிக விரிவாகவும், தெளிவாகவும் அடிப்படைச் சான்றுகளோடும் தந்துள்ளார்.

     பிரெஞ்சு மொழியிலும் சீன மொழியிலும் அயற்சொற் கலப்பு தண்டனைக்குரிய குற்றமாக உள்ளதை அறிகிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------
                                                   
                                                                      

புதன், 2 ஆகஸ்ட், 2017

தன்னலந் தவிர்! - புறநானூற்றுப் பாடல்!

தன்னலந் தவிர்! - புறநானூற்றுப் பாடல்!
 --------------------------------------------------------------

புறநானூற்றுப் பாடலொன்றைப் பிழைகளோடு முகநூலில் எழுதியிருந்ததைக் கண்டு, அப்பாடலைப் பிழையின்றி எழுதிப் பாடலின் பொருளையும் பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன். அதனைக் கீழே காண்க:

=================================================== தமிழிலக்கியப் பாடல்களைத் தப்பும் தவறுமாக எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்!
-----------------------------------------------

தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கும்,
உண்பது நாழி உடுப்பவை இரண்டே!
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே!
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே!    - புறநானூறு 189.


தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிறவேந்தர்க்குப் பொதுவாதலின்றித் தமக்கே உரிமையானதாக ஆண்டு, வெண்கொற்றக் குடையால் நிழல்செய்த அரசர்க்கும் இடை யாமத்தும் பகலும் தூங்காது, விரைந்த வேகங்கொண்ட விலங்குகளை வேட்டையாடித் திரியும்  கல்வி இல்லாத ஒருவனுக்கும் உண்ணப்படும் பொருள் நாழி அளவினதே! உடுக்கப்படுபவை இரண்டு உடைகளே! இவை போன்றே பிற உடல் உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கும். ஆகவே, செல்வத்தால் பெறும் பயனாவது கொடுத்தல் ஆகும். செல்வத்தை நாமே நுகர்வேம் என்று கருதின் தவறுவன பலவாம்.   
--------------------------------------------------------------------------
 

ஞாயிறு, 2 ஜூலை, 2017

முதுமுனைவர் இரா.இளங்குமரனார் ஐயாவின் குரல் - கஉ.



முதுமுனைவர்
இரா.இளங்குமரனார் ஐயாவின் குரல் - கஉ.
============================================================

தமிழா,

இந்தி எதிர்ப்பு எதற்காக? தமிழைக் காக்கவா, ஆங்கிலத்தைக் காக்கவா?
உன் மாநிலத்தின் இருமொழிக் கொள்கை,
மும்மொழிக் கொள்கை இந்தியத்தினும் மோசடிக் கொள்கை அல்லவா?
இது திராவிடக் கொள்கையா, தீரா விடக் கொள்கையா?

தமிழைக் காப்பதற்காகத் தம்மை எரியூட்டிக் கொண்டவர் எத்தனை எத்தனை பேர்!
அவர்கள் புதைகுழியாம் அரியணைமேல் வீற்றிருந்து ஆட்சி செய்த திராவிடங்கள் தமிழைக் காத்தனவா?

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது முழுக்க முழுக்க ஏமாற்றுத்தானே?
இருந்த அரசுப்பள்ளித் தமிழையும் இல்லாமல் செய்துவிட்டதை  எண்ண மாட்டாயா?

முறைமன்றத்தில் உன் மொழியில் வாதிடப்படுகிறதா?
உன் சிக்கலைப் பற்றி வாதிடுவது உனக்குப் புரிகிறதா?
உன் நோயை மருத்துவனுக்கு மொழிபெயர்த்துச் சொல்லி மருந்து தருவதற்கும்,
உன் மனைவியிடம் பேசுவதற்கு மொழிபெயர்ப்பாளி வைப்பதற்கும்,
இதற்கும் என்ன வேறுபாடு?

தமிழ் பயிற்றுமொழிக்குத் தடை , எவர் செய்தது?
ஆங்கிலக் கொள்ளையர்;
தடையாக்க வழிசெய்தவர் ஆள்பவர்.
தமிழில் பயிலச் சட்டமியற்றாமல் ஆணையிட்டார்!
சட்டம் செல்லும்; ஆணை தள்ளப்படும்.
உரிமம் கொடுக்கும் போதே, தமிழில் பயிற்றினால்தான் உரிமம் என்றால்,
இந்நிலை ஏற்படுமா?

*           *           *           *           *           *           *           *           *           *           *           *          
(தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,11,12., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை 625006)
---------------------------------------------------------------------------

வியாழன், 29 ஜூன், 2017

முதுமுனைவர் இரா.இளங்குமரனார் ஐயாவின் குரல் - கக.



முதுமுனைவர்
இரா.இளங்குமரனார் ஐயாவின் குரல் - கக.
============================================================


தமிழா,

நாட்டு விடுதலைக்கு முன்னது மொழி விடுதலை.
அதனைப் பெற  நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர் எண்ணவில்லை!
மாநில மொழிகள் அனைத்தும் மைய மொழியாக வேண்டும் என்று குரலெழுப்பவில்லை.

பாவாணர் எழுதினார்!
மாநிலப்பிரிவின் போதே செய்தாக வேண்டும் என்றார்!

அரசு - முடியரசு கூடச்சான்றோர் சொல்லை மதித்து நடந்தது!
குடியரசு ஆன பின்னரோ சான்றோர் உரையைக்கேட்கும் அரசாக எதுவும் வரவில்லை!

ஏய்ப்பரும் மேய்ப்பரும் ஆகியவர்க்குச் சால்பாவது, சான்றோர் உரையாவது ஏறுமா?

தமிழா, பூச்சால் நடைபெறாது!
புனைந்து பாடுதலால் வராது!

போராட்டம் இன்றிப் பொருவில் தமிழுக்குத்
தேரோட்டம் இல்லை தெளி
என்னும் மாணிக்கவுரை என்றும் மாணிக்க உரையே!

தாய்மொழிக்கு எல்லா வழிகளும் முதன்மை தராத நாடு, தாய்நாடு என ஆகுமா?
தாய் பெற்ற பிள்ளை ஆளும் நாடாகுமா?
ஆக்கத் தந்நலச் சூழ்ச்சியர் விடுவரா?

ஒன்றிய நாடுகள் உலகில் இல்லையா?
அவரவர் மொழியுரிமை காத்துப் பொதுமை  பேணும் நாடு இல்லையா?

மலையகம் சிங்கையில் உள்ள மொழியொன்றியம் இந்தியம் கொள்ளாதது ஏன்?

உனக்கு ஆக்கமாம் அரசா இந்திய அரசு? அழிவாம் அரசு!
உணர்ந்தால்.,

இந்தியக் கொத்தடிமையை ஒழிக்காமல் கிடப்பாகக் கிடப்பாயா?

ஏக  இந்தியம் என வாய் வருமா?      

*           *           *           *           *           *           *           *           *           *           *           *
(தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,22,23 ., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை 625006)
---------------------------------------------------------------------------

செவ்வாய், 27 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல் - ௰



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல் -
-------------------------------------------------
 
தமிழா,

கூத்து எவரோ பரதர் வகுத்தாராம்!
பரதர் வகுத்தது எப்போது? தமிழ் தோன்றியது எப்போது?

அவன் அப்பனுக்கு அப்பன் ஆயிர அப்பனுக்கு முந்தியது அல்லவா பரதம்!

ஆடுநர்க்கழியும் உலகம் (புறநானூறு)

கூத்தாட் டவைக்குழாம் (திருக்குறள்)

இவற்றுக்கு முன்னதா - பரதன் கூத்து?

வேல் திரித்தாடும் வெற்றிக்கூத்து தொல்காப்பியர் சொல்வது அல்லவா?

முழுமுதல் இறையே தாண்டவன் என்றும் நடவரசன் என்றும் கூத்தரசன் என்றும் சொல்லி வணங்கும் நீ, கோமாளியாக இருந்தால் அல்லாமல் கூத்துக்கலை அயல் வழியது என்பாயா?

கோயில்களில் கூத்தராக எத்தனை எத்தனைபேர்கள் திருத்தளிப் பெண்டு என்று இருந்தனர்.
அவர்கள் கோயில் வளாகத்திலே குடியிருந்து கோயில்பணி செய்தவர் என்பதை அறிவாயா?

ஆடல் கலையில் நூற்றெட்டுக் கரணங்கள், எத்தனை கோயில்களில் கற்சிலையாக்க் கோயில் சுற்றில் வெட்டப்பட்டிருக்கவும்  அதனைக் காணவும் மாட்டாமல் கணகெட்டுப் பரதக்கூத்து என்கிறாயே!

வடநாட்டுக் கோயில்களில் நூற்றெட்டுக் கரணங்கள் காட்டும் சிற்பம் எங்காவது உண்டா?  


(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,12,13 ., 2017., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006)

திங்கள், 26 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ௯.



முதுமுனைவர்                                                                                            இரா. இளங்குமரனார்  ஐயாவின் குரல்!௯.
-----------------------------------------------------------------------------------------------------------

தமிழா,
இதோ  பார்,

தியாகராசர் பாடினார், தெலுங்கிசை; தெலுங்கு அவர் தாய்மொழி.

வடமொழியில் பாடியவர், சியாமா சாத்திரி   அவர் தாய்மொழி அது.

நீ உன் தாய்மொழியில் பாடுவாயா?
உனக்குத் தாயே இல்லை,
தாய் மொழியே இல்லை,
தாய்மொழியில் இசையே இல்லை
எல்லாமும் இல்லை என எவர் சொன்னாலும் நீ என்ன செய்ய வேண்டும்?

என்னிசையைக் கேள் என்றல்லவா சொல்லிக் கிளர்ந்திருக்க வேண்டும்?

இசை என்ற சொல் புதுவதா?
முத்தமிழே இயல், இசை, கூத்து அல்லவா!

முத்தமிழ் என்ற பாடப் பிரிவிலேயே இல்லை என்னும் முழு மறைப்பாளனை மூடமாக ஒப்புக்கொள்கிறாநா?

மேடையிலேயே தமிழிசை, தமிழ்க்கூத்து இல்லாமல் ஆக்கினாயே;
இது, கோடி கோடி எனச்செல்வம் உடையானைத் தெருக்கோடிப்  பிச்சைக்காரன் என்பது போலில்லையா?

(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,12,13 ., 2017., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை    625006)
----------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 22 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – அ.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! அ.
-----------------------------------------------------------------------------------


 தமிழா,
உன் தாய்மொழியிலுள்ள இசைப்பாக்கள் எவைஎவை எனத் தெரியுமா?

பெருந்தேவபாணி, தேவபாணி, தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, பாவைப்பா, பள்ளி எழுச்சி, வரிப்பா வகை, வண்ணவகை, சிந்துப்பா-
இவ்வளவு மட்டுமா?

உன் இசையெல்லாம் ஒருங்குசேர்த்தாலும் ஒரு பகுதிதானும் ஒட்டாத நால்வகைப்பா:
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மட்டுமா?

தாலாட்டு, கும்மி, ஒயில், ஒப்பாரி என எத்தனை எத்தனை வகை!

இதனை இசை இல்லையென்று இதனைமறைக்க, ஒழிக்க எவரோ இட்டுக்கட்டிச் சொன்னால் நீ ஒப்புவது,,,,
உன்னினத்தையே பெற்ற இசைத்தாயை மலடி என்று பழிப்பது போலல்லவா?

(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,12., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை 625006)
------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 19 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – எ.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! எ.
--------------------------------------------------------------------------------
 
தமிழா,

சப்பானியப் பொறிஞன் தமிழகம் வருகிறானே!
மொழிபெயர்ப்பாளிகளோடு வருகிறானே!
மொழிச்சிக்கல் அவனுக்கு இல்லையே!

போகின்றவனுக்கும் சிக்கல் இல்லையே!

உன்னைக் கொத்தடிமையாய்க் கொண்டு ஆட்சி செய்யும் நடுவணரசில் உன் மொழிக்கு ஒத்த உரிமை உண்டா?

இந்திக்காரனுக்கு மட்டும் இந்தியா பட்டாபோட்டுத் தரப்பட்டு விட்டதா?

எந்த நாட்டில் மொழியுரிமை இல்லையோ, அந்த நாட்டில் வாழ்வது...
அடிமை வாழ்வேதான்!


(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,22., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)

-------------------------------------------------------------------------------------------------------

சனி, 17 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ௬.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! ௬.
------------------------------------------------------------------------------------

தமிழா,

ஆள்பவன் ஒப்புகை இல்லாமல், அயலவன் அணுவுலை உன்நாட்டில் ஏற்படுமா?

அண்டை மாநிலத்தான் ஏற்காத அணுவுலையை,
அன்றே மண்ணின் மைந்தர் எதிர்த்தும்,
இந்நாள்வரை எதிர்த்துக்கொண்டிருந்தும்,
மேலும் மேலும் விரிவாக்கத்திற்கு முனைவது என்ன?

அயல் மாநிலத்தான் துணவு அணுவும் இல்லாக்
கோழைத் தன்னல அயலவரே இங்கு ஆள்வது தானே?


(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,8., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)
 ------------------------------------------------------------------------------------------------

வியாழன், 15 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ரு.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! ரு.
------------------------------------------------------------------------------------

தமிழா,

ஒருநாடு பன்மொழி பல இன நாடு என்றால் என்னசெய்ய வேண்டும்?

பல இனங்களுக்கும் பல மொழிகளுக்கும் ஒப்புரிமை ஆளுமை வேண்டும் அல்லவா?

வல்லாண்மையால் இந்தி மட்டும் ஆட்சிமொழி என்று ஆனால் அது...,
ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில்  சுண்ணாம்பும் தடவுவது இல்லையா?

உன் மாநில ஆட்சி,
உன்மாநில முறைமன்றம்,
உன் மாநிலமொழிக் கல்வி உனக்கு இல்லை என்றால்,

இது விடுதலை நாடா?
கெடுதலை நாடா?

(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,7., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)