திங்கள், 22 ஆகஸ்ட், 2016

தமிழ்நாட்டுப் பகுதிகள் - உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!



தமிழ்நாட்டுப் பகுதிகள் -
உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!






     தமிழகத்தின் வடவெல்லை வேங்கடமென்றும் தென்னெல்லை தென்குமரியென்றும் வழங்கும்.
     (வேங்கடமலை சித்தூர் மாவட்டத்தின் வடவெல்லையாய் நின்று, பின் நெல்லூர் மாவட்டத்தின் மேற்கெல்லையாகி, வடபெண்ணைக் கரைவரையிற் செல்லும் மலைத் தொடராகும்)

     வடபெண்ணைக்கும் தென்பெண்ணைக்கும் இடைப்பட்ட பகுதி தொண்டைநாடு என்றும்,

     தென்பெண்ணைக்கும் தென்னார்க்காடு மாவட்டத்திலோடும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட பகுதி நடுநாடு என்றும்,

     வடவெள்ளாற்றுக்கும் புதுக்கோட்டைக்கருகிலோடும் தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பகுதி சோழநாடு என்றும்,

     இதன் தென்பகுதி பாண்டிநாடு என்றும் வழங்கும்.

     இக்காலத்துக் கோயம்புத்தூர் மாவட்டமும், சேலம் மாவட்டமும் சேர்ந்த நிலப்பகுதி கொங்குநாடு ஆகும்.

     மேலைக் கடற்கரைப் பகுதி சேரநாடு.

     சைவ இலக்கியத்தின் தோற்றக் காலத்தில் இந்நாட்டுப் பிரிவுகள் இருந்து வந்தன.

     நடுநாடுமட்டில், திருமுனைப்பாடி நாடென்று சில காலங்களில் வழங்கிற்று. வேறு சில காலங்களில், வடபகுதி தொண்டை நாட்டோடும் தென்பகுதி சோழநாட்டோடும் சேர்ந்து வழங்கியதுண்டு.

(உரைவேந்தர் தமிழ்த்தொகை-10, பக்கம் 7,8. இனியமுது பதிப்பகம், சென்னை-17)
------------------------------------------------------------------
 























தமிழ்நாட்டுப் பகுதிகள் - உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!



தமிழ்நாட்டுப் பகுதிகள் -
உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!






     தமிழகத்தின் வடவெல்லை வேங்கடமென்றும் தென்னெல்லை தென்குமரியென்றும் வழங்கும்.
     (வேங்கடமலை சித்தூர் மாவட்டத்தின் வடவெல்லையாய் நின்று, பின் நெல்லூர் மாவட்டத்தின் மேற்கெல்லையாகி, வடபெண்ணைக் கரைவரையிற் செல்லும் மலைத் தொடராகும்)

     வடபெண்ணைக்கும் தென்பெண்ணைக்கும் இடைப்பட்ட பகுதி தொண்டைநாடு என்றும்,

     தென்பெண்ணைக்கும் தென்னார்க்காடு மாவட்டத்திலோடும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட பகுதி நடுநாடு என்றும்,

     வடவெள்ளாற்றுக்கும் புதுக்கோட்டைக்கருகிலோடும் தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பகுதி சோழநாடு என்றும்,

     இதன் தென்பகுதி பாண்டிநாடு என்றும் வழங்கும்.

     இக்காலத்துக் கோயம்புத்தூர் மாவட்டமும், சேலம் மாவட்டமும் சேர்ந்த நிலப்பகுதி கொங்குநாடு ஆகும்.

     மேலைக் கடற்கரைப் பகுதி சேரநாடு.

     சைவ இலக்கியத்தின் தோற்றக் காலத்தில் இந்நாட்டுப் பிரிவுகள் இருந்து வந்தன.

     நடுநாடுமட்டில், திருமுனைப்பாடி நாடென்று சில காலங்களில் வழங்கிற்று. வேறு சில காலங்களில், வடபகுதி தொண்டை நாட்டோடும் தென்பகுதி சோழநாட்டோடும் சேர்ந்து வழங்கியதுண்டு.

(உரைவேந்தர் தமிழ்த்தொகை-10, பக்கம் 7,8. இனியமுது பதிப்பகம், சென்னை-17)
------------------------------------------------------------------
 























வியாழன், 11 ஆகஸ்ட், 2016

‘கல்வி’யின் தொடக்கம் – பாவாணர் விளக்கம்!



கல்வியின் தொடக்கம் பாவாணர் விளக்கம்!


      மக்கள் நாகரிகமில்லாத மாண்முது பழைமையிற் குறுந் தொகையராய்க் குறிஞ்சி நிலத்து வாழ்ந்தபோது காய்கனி கிழங்கு முதலிய இயற்கை விளைபொருள்களையே உண்டு வந்தனர். உண்பதும் உறங்குவதுமே அவர்க் கிருபெருந்தொழில். மக்கட் டொகை மிகமிக இயற்கை விளைவு போதாதாயிற்று.

     விதைகள் நிலைத்திணை வகையினின்றும் கீழே விழுந்து நிலத்தில் முளைப்பதை முன்னமே உற்று நோக்கி உன்னித்திருந்தனர். அஃதன்றி வள்ளிக்கிழங்கைப் பன்றிகள் உழுதவிடத்து விழுந்த விதைகள் விரைவில் முளைத்து, அடரந்தோங்கி, விழுமிய பலன்றந்ததையுங் கண்டிருந்தனர். ஆதலால் அவரே அத்தகை யிடங்களிற் செயற்கையிற் பயிர்பச்சைகளை விளைக்கத் தொடங்கினர்.

  பன்றியுழுதவிடத்துப் பயிர் விளைப்பதை...
     அருவி யார்க்குங் கழையி ன்னந்தலைக்
     கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
     கொடுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
     கடுங்கட் கேழ லுழுத பூழி
     நன்னாள் வருபத நோக்கிக் குறவ
     ருழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை  -(புறம்.168) என்பதாற் காண்க.

     ஆகவே, முதன்முதல் மக்கள் கற்ற கல்வி உழவுத்தொழில் என்பதே புலனாகின்றது. உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு அதனாற் பெறப்படுதலின், கல்வி என்னும் சொல்லும் உழவுத்தொழிலையே முதன்முதன் குறித்தது.....

     உழவாவது நிலத்தை அகழ்தலும் நிலைபெயர்த்தலும் பூழியாக்கலும் ஏருமெருதுங்கொண்டுழவறியாத பழங்காலத்துக் கல்லுங் கழியுங் கருவியாக நிலத்தை அகழ்தலே உழவாயிற்று.  அக்காலத்தும் குறிஞ்சிநிலத்தும் மழைக்குக் குறையின்மையின் நீர்பாய்ச்சவும் வேண்டாதாயிற்று.

     கல்லல், தோண்டல், உழுதல் என்பன ஒருவினை குறித்தலின் ஒருபொருட் கிளவி. ஆகவே கல்வி என்பது முதன்முதல் உழவு குறித்த கிளவியே யென்பது பெற்றாம்.
 (பண்பாட்டுக் கட்டுரைகள் பாவாணர், தமிழ்மண், பக். 96,97)
---------------------------------------------------------------------


செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

‘காதற் காமம்’ – மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் விளக்குகிறார்!



காதற் காமம் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் விளக்குகிறார்!



தமிழ்த்திணை எனத்தகும் அகத்திணைக்கு வெறும் உள்ளக்காதலும் பொருளன்று., வெறும் மெய்க் காம்மும் பொருளன்று. உள்ளம் இயைந்த உடலுறவும், உடல் இயைந்த உள்ள உறவும், சுருங்கக்கூறின் உயிர்மெய்ப் புணர்ச்சியே அதன் பாடுபொருளாம்.

     ஆண்டாள் காதல் அகத்திணையாகாது, மெய்யுறல் இன்மையின். மாருத வேகன் சுதமதியைக் கூடியதும் அகத்திணையாகாது, உள்ளிசைவு இன்மையின். மெய்யாக நோக்கின் காதல் என்பதனுள் உடற்கலப்பும் அடங்கும்.

உடற்கலவியின்றிக் காதற்றன்மை செவ்வுறாது. பாலுறவுதான் காதல் என்னும் தகுதிக்கு உரியது. காதல் என்ற பெயர் மேலிட்டுப் பிறவாறு சொல்லுவன வெல்லாம்  அரைகுறையான உருவகமாவன என்பர் ஆசுவால் சார்ச்சு.(The psychology of sex. P.105)

காதற் காமம் காமத்துச் சிறந்தது
விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி            -(பரிபாடல்.9.)  என்று இருசொற்களையும் இயைத்தார் குன்றம் பூதனார்.

பொதுவான மொழி வழக்கில் காதல் என்பது உள்ளப பற்றையும், காமம் உடற்பற்றையும் குறிக்கும் என முன்னர்க் கண்டோம். இரு சொல்லையும் ஒருங்கு காட்டும் ஒரு தமிழ்ச்சொல் உண்டா? உண்டு. அதுவே அகம் என்னும் சொல். எனினும் முன்னிலைப் படுத்திக் கூறும் நான்மறையாளர்க்கு விளங்கவேண்டி, குன்றம் பூதனார் காதற்காமம் (காதலங்காமம் - பரி.6, அன்புறு காமம் - நற்.389) என்ற ஒரு புதுத்தொடரை ஆக்கினார். ஆக்கி, விருப்பு ஓரொத்து மெய்யுறு புணர்ச்சி எனப் பொருளும் நிரல்பட விரித்துக் காட்டினார்.

இக் காதற்காமந்தான் அகத்திணை. அகத்திணை தலைமக்கள் உள்ளங்கூடிய உடற்கூட்டாளிகள். உடல்மட்டும் கலந்ததா, உள்ளம் கலந்ததா? என்ற வினாவிற்கு இவர்பால் விடையில்லை. ஆதலின் அகப்பாட்டின்கண் காதல் என்ற சொல் வருமிடத்துக் காமப் பொருளும் உண்டெனக் கொள்க. காமச்சொல் வந்த இடத்துக் காதற் பொருளும் உண்டெனக்கொள்க.

(தமிழ்க்காதல் வ.சுப.மாணிக்கம், இயல், தஞ்சாவூர். பக்.402,403.) 
----------------------------------------------------------------------

வெள்ளி, 8 ஜூலை, 2016

வடசொற் றிணிப்பால் வழக்கற்ற தென் சொற்கள்: பாவாணர் விளக்கம்

வடசொற் றிணிப்பால் வழக்கற்ற தென் சொற்கள்:
பாவாணர் விளக்கம்

வடமொழி தேவமொழி என்னும் ஏமாற்றையும் பண்டைத் தமிழ் வேந்தரின் பேதைமையையும் துணைக்கொண்டு, ஆயிரக் கணக்கான வடசொற்கள் தமிழில் வேண்டாது புகுத்தப்பட்டதன் விளைவாக அவற்றிற்கு நேரான விழுமிய தென்சொற்கள் சிறதும் பெரிதும் முற்றும் வழக்கு வீழ்த்தப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு:

வடசொல் -    -    -    -    :தென்சொல்
அன்னம்                        எகின், ஒதிமம்
ஆன்மா                         ஆதன், உறவி, புலம்பன்
ஆனந்தம், குதூகலம், சந்தோசம்: உவகை, களிப்பு, மகிழ்ச்சி
சகுனம்                         புள்
சத்தியம், நிசம், வாஸ்தவம்     உண்மை, வாய்மை, மெய்ம்மை
சீரணம்                         செரிமானம்
சுத்தம்                          துப்புரவு
திருப்தி                         பொந்திகை
பிதிரார்ச்சிதம்                   முதுசொம்
மேகம்                          முகில், கார், கொண்டல்
லாபம்                          ஊதியம்
நட்டம்                          இழப்பு
மைத்துன்ன்                     அளியன்
வருசம்                         ஆண்டு
ஸ்திரீ, புருஷர்                 ஆடவர், பெண்டிர்
(இங்குக் குறிப்பிட்ட வடசொற்கள் விளங்குதற் பொருட்டுப் பெரும்பாலும் தற்பவ வடிவிற் காட்டபட்டுள்ளன)

நகைச்சுவையை ஹாஸ்ய ரசம் என்பதும், அவையைச் சதஸ் என்பதும், பணிவிடையைச் சிசுருஷை என்பதும், திருமணத்தைப் பரிணயம் என்பதும், குடமூக்கு (குடந்தை), குரங்காடுதுறை, சிற்றம்பலம் (தில்லை), பழமலை (முதுகுன்றம்), மயிலாடுதுறை, மறைக்காடு முதலிய செந்தமிழ் நாட்டூர்த் தனித் தமிழ்ப் பெயர்களை முறையே கும்பகோணம், கபிஸ்தலம், சிதம்பரம், விருத்தாசலம், மாயூரம், வேதாரணியம் என வடசொற்களாய் ஏற்கனவே மாறியிருப்பதும், இத்தகைய இழி செயலை இன்றும் கையாள்வதும், தென்னாட்டு வடமொழியாளரின் வரையிறந்த வடமொழி வெறியை யன்றி வேறெதைக் காட்டும்?

இன்று தமிழில் வழங்கும் வடசொற்கள் தமிழிற்கு வேண்டியவு மல்ல;
உடம்பிற்குட் புகுந்து அதனுக்கு ஊறுசெய்யும் நச்சுப்புழுக்களையும்    
இன்னாப் பொருள்களையும் அதன் நலத்தின் பொருட்டு நீக்குவது போன்றே, வேண்டா வடசொற்களையும் தமிழினின்று விலக்குதல் வேண்டும்.
இதனைத் தடுப்பவர் புறப்பகைவரும் உட்பகைவருமாயே யிருத்தல் வேண்டும்.

வடசொற்கட்கு இங்குக் கூறியது பிற சொற்கட்கும் ஒக்கும்.

(நூல்: தமிழியற் கட்டுரைகள் பக்கம் 16,17. தமிழ்மண், சென்னை)  

------------------------------------------------------------------------------------------------------------
               






வியாழன், 7 ஜூலை, 2016

சொல்விளக்கம்: ஐயன்



சொல்விளக்கம்:
ஐயன்:

ஐ என்பது தலைவனைக் குறிக்கும் பெயர்.
என் ஐ முன் நில்லன்மின் என்பது குறள்.

தலைவன் எனினும் பெரியோன் எனினும் ஒக்கும்.
அரசன் ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன் என ஒருவர்க்கு ஐந்து பெரியோர் உளர். அவர்க்கெல்லாம் ஐ என்பது பொதுப்பெயர்.
தாயைக் குறிக்கும்போது அது ஆய் என்று திரியும்.
ஐ என்பது அன் ஈறு பெரின் ஐயன் என்றாகும்.
ஐயன் என்பதற்கு ஐயை என்பது பெண்பால்.
அண்ணனைக் குறிக்கும்போது ஐ, ஐயன் என்னும் சொற்கள் தன்னை, தமையன் எனத் தன் தம் என்னும்முன்னொட்டுப் பெறும்.

தமிழருட் பலவகுப்பார், அவருள்ளும் சிறப்பாகத் தாழ்த்தப்பட்டவர், தந்தையை ஐயன் அல்லது ஐயா (விளிவடிவம்) என்றே அழைக்கின்றனர். ஆசிரியர் எவ் வகுப்பாராயிருப்பினும், அவரை ஐயர் என்றழைப்பது வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தார் வழக்கு.

பெரியோரை எல்லாம் ஐயா என்று குறிப்பதும் விளிப்பதும் தொன்றுதொட்டுத் தமிழர் வழக்கம். மக்களுட் பெரியார் முனிவர் என்னும் கருத்துப்பற்றி, அவரைச் சிறப்பாக ஐயர் என்பது தமிழ் நூன்மரபு.

ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்பது தொல்காப்பியம்.

பிங்கல நிகண்டில் முனிவரைப் பற்றிய 3ஆம் பகுதி ஐயர் வகை எனப் பெயர் பெற்றுளது.

முனிவரிலும் பெரியவர் தெய்வங்க ளாதலின், தெய்வங்கட்கும் கடவுகட்கும் ஐயன் என்னும் பெயர் விளங்கும்.
ஐயன் = சாத்தன் (ஐயனார்), கடவுள்.
ஐயை = காளி, மலைமகள்.
இங்ஙன மெல்லாம் தொன்றுதொட்டு வழங்கும் ஐயன் என்னும் தென்சொல்லை, ஆர்ய என்னும் வடசொற் சிதைவென்பர் வடவர்.

(பாவாணருக்கு நன்றி! தமிழியற் கட்டுரைகள் பக்கம்-11. தமிழ்மண், சென்னை)

--------------------------------------------------------------     

சனி, 2 ஜூலை, 2016

பழந்தமிழரின் அயல்நாட்டுத் தொடர்பு!



பழந்தமிழரின் அயல்நாட்டுத் தொடர்பு!
          - புலவர் குழந்தை ஐயா தரும் விளக்கம்!
-----------------------------------------------------------
     சில தமிழ்ச்சொற்கள், தமிழ்நாடு மேனாடுகளுடன் நடத்திய கடல்வாணிகத்திற்குச் சான்று பகர்ந்துகொண்டு அம்மேனாட்டு மொழிகளில் இருந்து வருகின்றன.
தோகை துகி சிரியா
அகில் அகல் எபிரேயம்
கவி கபிம் எபிரேயம்
அரிசி அரிஜா கிரேக்கம்
இஞ்சி ஜஞ்சர் கிரேக்கம்
இஞ்சிவேர் ஜிஞ்சிபார் கிரேக்கம்

கி.மு.3000 ஆண்டுகட்கு முன், பாபிலோனிய நாட்டை ஆண்ட ஊர்ஏயா என்னும் மன்னனால், சாலடிய நாட்டின் தலைநகரான ஊர் (Ur) என்னும் நகரில் சேரநாட்டுத் தேக்கு மரத்தினால் திங்கட் கோட்டம் கட்டப்பட்டது. (P.T.S. Iyengar–தமிழ் வரலாறு)

கி.மு2600இல், தமிழகத்திலிருந்து கருங்காலி மரம், மணப் பொருள்கள் முதலியன எகிப்து நாட்டிற்கு ஏற்றுமதியானதாக,
ஆக்கஃப் என்னும் இடத்திலுள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. (P.T.S. Iyengar–தமிழ் வரலாறு)

பாலத்தீனத்துப் பேரரசனான சாலமன் காலத்தே (கி.மு.1000) மூன்று ஆண்டுகட் கொருமுறை, தங்கம், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து கப்பல்கள் அங்குச் சென்றனவாம்.

திமிலையுடைய எருதுகள், பாரசீக வளைகுடாவுக்கும், ஆப்பரிக்காவுக்கும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டனவாம். (டாகடர் இராசமாணிக்கனார்-இலக்கிய வரலாறு-45)

மேனாட்டுகட்கு மிகுதியாக ஏற்றிமதியானது மிளகு ஆகும். அடுத்தது ஏலம் முதலிய மணப்பொருள்கள், முத்து, யானைத் தந்தம் முதலியனவாம்.
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை சிதற
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி      - (அகநானூறு-149).....

இரும்பிலிருந்து எஃகு (உருக்கு) செய்வதற்குத் தமிழ்நாட்டாரைத் தவிர, அக்காலத்தில் வேறு யாருக்கும் தெரியாதென்று கிரேக்க உரோமப் புலவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
எகிப்து நாட்டுக் கல்லறைக் கோபுரங்கட்கு (Pyramids) அடியிலிருந்து சேலத்து எஃகினால் செய்யப்பட்ட சுத்தி உளி முதலிய கருவிகள் கிடைத்திருக்கின்றன.

எஃகு ஆராய்ச்சியில் வல்லுநர்களான J.M.Heath என்பாரும் Sir.J.J.Wilkinson என்பாரும் சேலம் எஃகினால் செய்யப்பட்ட சுத்தி, உளி முதலியவற்றைத்தாம் எகிப்து நாட்டுச் சிற்பிகள் அப் பழங்காலத்தே பயன்படுத்தினார்கள் என்கின்றனர்.
அக்கல்லறைக் கோபுரங்களின் காலம் கி.மு.8000 ஆண்டுகட்கு முற்பட்டதென்பர்.  

(புலவர் குழந்தை ஐயாவுக்கு நன்றி! கொங்குநாடு பக்கம் 86,87,88. சாரதா பதிப்பகம், சென்னை)
-----------------------------------------------------------


வெள்ளி, 1 ஜூலை, 2016

பெயர் முன் அடை

பெயர் முன் அடை

      திரு என்பது சிறீ என்று திரியவே, திருமான் என்பதை சிறீமான், சீமான் என்றும் திருமாட்டி என்பதை சிறீமாட்டி, சீமாட்டி என்றும் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர்.

திருமான் என்பது திருமகன் என்பதன் மரூஉ.
ஒப்புநோக்கு: பெருமகன் பெருமான்.

பெருமானுக்குப் பெண்பால் பெருமாட்டியாதல் போல, திருமானுக்குப் பெண்பால் திருமாட்டியகும்.

     சிறீ என்பது திரு என்பதன் திரிபே யாதலால், சிறீ அல்லது சீ என்னும் அடைமொழி பின்வருமாறு தமிழில் எழுதப்படும்.

வடமொழி வடிவம்              தென்மொழி வடிவம்
    
     சிறீ                             திரு
     மகா ராஜ ராஜ சிறீ             மா அரச அரசத்திரு
                                     பேர் அரச அரசத்திரு
     சிறீலசிறீ                       திருவத்திரு
                                     திருப்பெருந்திரு
     சீகாழி                          திருக்காழி
     சீகாளத்தி                       திருக்காளத்தி               

     திருநாவுக்கரசு திருமங்கையாழ்வார் முதலிய பெயர்களில் வரும் திரு என்னும் அடை ஆங்கிலத்தில் அடியார் பெயர்முன் சேர்க்கப்படும், St. (Saint)  என்பதற்குச் சமமாய்த் தூய்மை குறிப்பதா யிருப்பதால், அடியாரல்லாத பிற மக்களைக் குறிக்கும்போது திருவாளர், திருவாட்டியார் என்ற அடைஎளையே முறையே ஆண்பாற்கும் பெண்பாற்கும் வழங்குவது தக்கதாகும்.
திருவாளன்மார், திருவாட்டிமார் என்பன பலர்பால் அடைகள்.

     சீகாழியைச் சீர்காழி என்று வழங்குவது சரியாய்த் சோன்றவில்லை. சிறுதனம் சிறீதனம் என்று தவறாய் வழங்குகிறது.

(பாவாணருக்கு நன்றி! மொழிநூற் கட்டுரைகள் பக்கம் 55. தமிழ்மண், சென்னை.)

வியாழன், 30 ஜூன், 2016

சங்க இலக்கியக் கல்வி பற்றித் தொல்காப்பித் தகைஞர் முனைவர் வ.சுப.மாணிக்கம் ஐயாவின் வலியுறுத்தம்!








சங்க இலக்கியக் கல்வி பற்றித் தொல்காப்பித் தகைஞர் முனைவர் வ.சுப.மாணிக்கம் ஐயாவின் வலியுறுத்தம்!
----------------------------------------------------------------------------------

எவ்வகைத் தமிழ்நூல்கள் எவ்வளவு படித்திருந்தாலும் தொல்காப்பியம்முதலான சங்க இலக்கியக் கல்வி இல்லாதாரைத் திறமான தமிழ்ப்புலமை பெற்றவராகச் சொல்ல முடியாது.
ஆற்றுநீர் கடலிற்போய்க் கலக்கின்றது என்றாலும் ஆற்றிற் குளித்தோரைக் கடலிற் குளித்துத் திளைத்தவராகச் சொல்வதுண்டோ?
சொல்லாலும் பொருளாலும் பண்பாலும் செறிவாலும் நடையாலும் ஓங்கிய சங்கவிலக்கியம் கற்றாரின் புலமையே வேரோடிய தமிழ்ப் புலமையாகும்....

புரியாத நடையுடையது சங்கவிலக்கியம் என்ற ஒருசாராரின் அவலக் கருத்து, நீர்சுடும் என்பது போன்ற மயக்க மருளாகும்.

இலக்கண வழக்கு முரண்பட்ட அயல்மொழிகளைப் புரியும் என்று பொருள் கொட்டிப் படிக்கும் தமிழர்கள், தம் தாயிலக்கியம் புரியாது என்று புலம்புவது பேதைமையுள் எல்லாம் கலப்பற்ற பேதைமையாகும்.
சங்கத்தமிழை நீர்தெளிந்த கோதாவரிக்குக் கம்பர் ஒப்பிடுவதைச் சிறிதேனும் எண்ணுங்கள், புரியும்.

(‘நாவலர் நாட்டார் தமிழுரைகள்’-18, ‘நாட்டாரின் சங்கப்புலமை’ – தொல்காப்பியத் தகைஞர் முனைவர் வ.சுப.மாணிக்கம், பக்கம் xxii,xxiv, தமிழ் மண், சென்னை)
---------
 
சங்கக்காலம் யார்க்கும் சிந்தனையை வளர்த்த காலம். சங்கக் கல்வி கற்பவர்க்கெல்லாம் சிந்தனையை ஊட்டிய கல்வி. ௩௭௮ (378) அகப்புலவோருள் ஒரே பாடல் பாடியமைந்த புலவோர் தொகை ௨௪௯ (249) எனின்,படித்தோர் பெருக்கமும், பாடவல்லுநர் பெருக்கமும், சிந்தனைப் பரப்பும், செறிந்த தெளிந்த கல்வியும் சங்கக் காலத்து இருந்தமை பெறப்படும்.
 - மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார், ‘தமிழ்க்காதல்
-----------

பழம்போலும் சங்கப் பனுவலைக் கற்றால் கிழம்போகும் கீழ்மையும் போம்
- மா.குறள்-461. ஆசிரியர்: வ.சுப.மாணிக்கனார்
--------------

வெள்ளி, 17 ஜூன், 2016

சங்க காலத்தில் சாதிப்பெயருண்டா?



சங்க காலத்தில் சாதிப்பெயருண்டா?
நாவலர் ந.மு.வேங்கடசாமியார் விளக்குகிறார்:


இப்பொழுது வழங்குவது போல ஐயர், ஐயங்கார், நாயுடு, செட்டி, பிள்ளை, முதலியார் என்னும் பட்டப் பெயர்களாவது, கள்ளர் வகுப்பினர் முதலானோர்பால் காணப்படும் அளவற்ற பட்டப் பெயருகளாவது சங்கநாளில் வழங்கவில்லை. அவையெல்லாம் இடைக் காலத்துத் தோன்றியவையே.

ஐயர் எனபது முனிவர் அல்லது பெரியாருக்கே சிறப்பாய் வழங்கியது.கண்ணப்பர், நந்தனார் முதலிய வேறுகுலத்துப் பெரியார்களையும் சிறப்புப்பற்றி ஐயர் என ஆன்றோர் வழங்கியிருக்கின்றனர். சிறப்புப் பெயர் வருங்காலும்,

சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்

என்ற விதிப்படி, அமரமுனிவன் அகத்தியன், தெய்வப்புலவன் திருவள்ளுவன், சேரமான் சேரலாதன் என்றாற்போல இயற்பெயர்க்கு முன் வருதலே மரபு. பிற்காலத்திற்றான் பெயர்கள் இம்முறைமாறி வரலாயின. சிறப்புப்பெயரும் முன்பு யாவர்க்கும் வழங்குவன அல்ல. எனவே பண்டை மக்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டப் பெரிதும் விரும்பவில்லையென்பது போதரும்

(நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்- 18, தமிழ்மண், சென்னை, பக்கம் 43, 44.)

--------------------------------------------------------------