வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பாவேந்தே, நின் நினைவில்...!



பாவேந்தே, நின் நினைவில்...!


ஏக்கழுத்தும், பீடுநடையும்
அரிமா நோக்கும், அஞ்சா நெஞ்சமும்
நினக்கே உரியவை!

இருளற்றம் பார்க்கும் விளக்கே போல்
தமிழ்ப் பகையை இல்லாமல் ஓட்டியது
நின் பார்வை யன்றோ?

உவரி ஒலியிட்ட எலிப்பகை கெட்டவகை
தமிழ்ப் பகை கெட்டழிந்தது
நின் மூச்சால், உயிர்ப்பால் அன்றோ?

ஈராயிர மாண்டு வீழ்ச்சியிற் கிடந்தவரை
விடுதலைப்பா முரசறைந்து
எழுச்சிக்குத் தொடக்கமிட்ட
இரண்டாவது வள்ளுவனே!

நல்லுயிர் உடம்பு செந்தமிழ்
மூன்றும் நீ, நீ, நீயேயன்றோ?

இன்றிந் நாட்டில் இழிஞர் ஆட்சியால்
மண்ணையும் மாசில்லா மொழியையும்
மற்றெல்லாத் தமிழ நலன்களையும்
தோற்று நிற்கிறோம்!

தமிழால் உயர்ந்தோர் தமிழை வீழ்த்தினர்!
அமிழ்ந்த உணர்வால் அயலர் அரியணையில்!
அவலம்! அனைத்திலும் தமிழர்க்கு அவலம்!

இற்றைக்கும் பாவலர்கள் இங்குண்டு! என்சொல்ல!
தூய்தமிழ் போற்றுவர் தெளிதமிழ் இதழில்!
பரிசுக்குப் பல்லிளித்துப் பார்ப்பன இதழ்களில்
அயற்சொல் கலந்தெழுதி அருந்தமிழ் கொல்லுவர்!

ஐயா, புரட்சிப் பாவேந்தே!
வாராது வந்த தமிழ் எழுச்சி நெருப்பே!
எந்த நற்செய்தியும் இலையுனக்குச் சொல்ல!

இழிவில் உறையும் இந்நிலை மாற்றிட
என்றெழு வோமோ? இலையழி வோமோ!
நீயிலா நிலையில் நெஞ்சங் கலங்கி
ஓய்ந்துநின் நினைவில் தோய்ந் தெழுதினனே!

--------------------------------------------

திங்கள், 25 ஏப்ரல், 2016

பிழை தவிர்க்கச் சில செய்திகள்!



பிழை தவிர்க்கச் சில செய்திகள்:

 1.      சொல்லின் இறுதியில் மெய்யெழுத்தாய் வரக்கூடியது இடையின ரகரமே; வல்லின றகரம் அன்று.
எடுத்துக்காட்டு: அவர், ஊர், குதிர், பதர்

           
            2.  சொல்லின் இடையில் இரண்டு புள்ளி(மெய்) எழுத்து           சேர்ந்து வருமிடங்களில், முதல் புள்ளியெழுத்தாக                              இருக்கக்கூடியது இடையின ரகர மெய்யாகவே இருக்கும்.        வல்லின றகர மெய்யாக இருக்காது.
            எ-டு: நேர்த்தி, பார்த்து, அயர்ச்சி

ற் மெய்யெழுத்தை அடுத்து இன்னொரு புள்ளி எழுத்து வராது.

     பிழை     ---  திருத்தம்
     முயற்ச்சி       முயற்சி
     நேற்த்தி        நேர்த்தி
     பயிற்ச்சி        பயிற்சி


3.      இரட்டிக்கும் இடங்களில் வல்லின றகரமே வரும். இடையின ரகரம் இரட்டிக்காது.
எ-டு: வெற்றி, கற்றோர், அற்ற, ஆற்றை


4.      ல், ன் என்ற புள்ளி எழுத்துக்கள் சேர்ந்து(புணர்ந்து) வருங்கால், திரிபில் வருவது வல்லின றகரமே.
எ-டு: கல்+பலகை    = கற்பலகை
      கல்+தாழை    = கற்றாழை
      வருதல்+கு    = வருதற்கு

     தன்+பெருமை   = தற்பகருமை
     பொன்+தோடு   = பொற்றோடு
     அதன்+கு       = அதற்கு


சில இன எழுத்துக்களின் பெயர்கள்

     ண - டண்ணகரம், முச்சுழிணகரம்.
     ந - தந்நகரம், மொழிமுதல் நகரம்.
     ன - றன்னகரம், இருசுழி னகரம்.

     ர - இடையின ரகரம், சின்ன ரகரம்
     ற - வல்லின றகரம், பெரிய றகரம்.

            ழ - சிறப்பு ழகரம், பெரிய ழகரம்,மகர ழகரம்.
            ள - பொது ளகரம், சின்ன ளகரம்.

(பாவாணருக்கு நன்றி!)
-------------------------------------

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

யாருங் காண்கிலேன் எழிற்பா வேந்தே!



யாருங் காண்கிலேன் எழிற்பா வேந்தே!

நீயே,
செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை!
ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை!
வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில்
செம்மை சேருயர் செ்ழுந்தமிழ் காத்தனை!

உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம்
இறவா மொழியால் எழுந்திடப் பாடினை!
ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி
முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில்
தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை!

கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை!
புதுவை பொரித்த புரட்சிக் குயிலே!
எதுவும் யாரும் இணையுனக் கில்லை!
முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர்
வினைசா வெனின்அச் சாநாள் திருநாள்

புலவர்க்குக் கைவேல் பூந்தமிழ்என்றனை!
நலங்கெடுப் பார்எலாம் நடுங்கிட இயங்கினை!
சிறுத்தையே, புலியே, சீயமே, சிம்புளே!
திருப்பு முகத்தை! திறந்திடு விழியை!
மொழிப்பற் றுற்றே விழிப்புற் றெழுக!

அழிப்புறுந் தமிழை பழிப்பறக் காப்பாய்!
எனத்தமி ழிளைஞரை ஏவினை! இக்கால்
இழிதுன் பில்தமிழ்! இடிக்குரல் ஆர்த்தே
பழியறக் காத்திட, பகைவே ரறுத்திட
யாருங் காண்கிலேன், எழிற்பா வேந்தே!

தீருமோ இத்துயர் தெரியேன்
நீயிலா நிலையில் நெஞ்சங் கலங்கியே!
---------------------------------------------
(விழுப்புரம் பாவேந்தர் பேரவையின் பொறுப்பாண்மையர் உயர்திரு. உலகதுரை, பாவேந்தர் சிலை திறப்பின்பொழுது வெளியிடவிருக்கும் மலருக்காகப் பாடல் எழுதித் தருமாறு ஏறத்தாழ ஈராண்டிற்கு முன்னர் கேட்டபோது எழுதித்தந்த பாடல்)

திங்கள், 14 மார்ச், 2016

வடமொழியாளர் தமிழுக்கும் தமிழர்க்கும் இழைத்த கெடும்புகள்!                                                                                                 - உரைவேந்தர் ஒளவை.துரைசாமியார் விளக்குகிறார்!


     வடமொழியாளர், தமிழர் ஊர்ப்பெயர், மக்கட்பெயரை வடமொழியில் மொழிபெயர்த்து அவர்களுடையதாகத் தோன்றுமாறு செய்து கொள்ளும் தீச்செயலையே  பல நூற்றாண்டுகளாகச்செய்து வந்தமையின், பிற்காலத்தே வாழ்வில் அமைதி தோன்றியதும் மக்கள் தங்கள் நூல்களை எழுதத் தொடங்கியபோது வடமொழியிலிருந்து பெறவேண்டிய நிலைமை தோன்றியது. அப்போது தமிழ்நாட்டுத் தமிழர் ஊர்க்குரிய வரலாற்றை வேறு எவரோ எந்த நாட்டிலோ கூறியதாக வரலாறுகள் வேறுபடலாயின.
    
            இசையும், கூத்தும், சமயக்கருத்தும் பிறவும் பழம்பெயர் மறந்து போக, வடமொழிப் பெயரால் வெளிவரலாயின. பின் வந்தோர், உண்மை உணரமாட்டாமல் எல்லாம் வடமொழியிலே உள்ளன; தமிழ்மொழியே வடமொழியிலிருந்து தோன்றியதுதான் என்று கூறலுற்றனர்.
    
            வேள்வி செயதோர்க்கும் செய்வித்தோர்க்கும் பண்டை நாளில் வேந்தரும் செல்வரும் காமக்காணி என்று சிறப்புப் பெயர் நல்குவது வழக்கம். இடைக்கால கல்வெட்டுக்கள் மிகப்பல இதனைக் கூறுகின்றன. இவ்வாறு சிறப்புப்பெயர் பெற்ற சான்றோர் ஒருவர் சங்க இலக்கியத்தில் வருகிறார். அவர் பெயரை ஏட்டில் எழுதினோர் காமக்கணி என்று எழுதிவிட்டனர்.
            அதைக் கண்ட இக்கால அறிஞர், அது காமாட்சி என்பதன் மொழிபெயர்ப்பு என்று எழுதி யொழிந்தார். காஞ்சிபுரத்திலுள்ள காமக்கோட்டத்துக் காமாட்சிக்கு அப்பெயர் மிகவும் பிற்காலத்தே உண்டானது என்பது வரலாறு கூறும் உண்மை.
    
            இவ்வண்ணமே, கோயில்களில் இறைவன்முன் சொல்லப்படும் அருச்சனைகள் பல திருமுறைகளிலும் பிரபந்தங்களிலும் காணப்படும் சிறப்புப் பெயர்களின் மொழி பெயர்ப்பாகவே உள்ளன.
    
            இதனால் விளைந்த பயன் என்னை யெனில், சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்த நூற்றாண்டின் தொடக்கப பகுதியிலும் இருந்து பள்ளி மாணவர் பாட நூல்களுக்கு உரை எழுதினோரும் பிறரும் பின்விளைவு கருதாமல், தமிழில் வழங்கும் மணி, நீர், முத்து, சேரி, மீன், பழம் முதலிய யாவும் வடமொழித் திரிபுகள் என்றே எழுதினார்கள்.
    
            உலகில் அறவாழ்விற் சிறந்த சான்றோர்களைத் தமிழர் கடவுளர் என்பர். அப்பெயரைத் தெய்வமாகவும் ரிசிகளாகவும் மொழிபெயர்த்து அவர்கள் வரலாற்றுள் பலவற்றைத் தெயவச் செயல்களாக உரைக்கத்தொடங்கினர்.
    
            சாதி சமுதாய வேற்றுமைகள் நிலைபெறுதற் கேற்ப்ப் புராணங்கள்  பல வடமொழி வாயிலாகத் தோன்றின. தமிழ் மொழியிற் காணப்படும் பொருளுரைகளும் யாவும் வட நூல்களிலிருந்தே தோன்றின என்னும் கருத்து நாட்டவர் தெரியவும் மேனாட்டவரும் பிறரும் தமிழர்க்கெனத் தனித்த அறிவோ, பண்பாடோ, சமய ஒழுக்கமோ இல்லையென உணரவும் உரைத்தனர்; நூல்வடிவில் எழுதியும் வந்தனர்.
    
            ஆங்கில அறிவும் அதன் வாயிலாக வடநூல் கருத்துக்களும் வரலாற்றுண்மைகளும் தமிழ் மக்கன்குத் தெரியவந்தன. அதனால் தமிழர்கட்கு வடமொழிபால் வெறுப்பு உண்டாயிற்று.இவ்வெறுப்பு வளர்தற்கேற்ப, மேனாட்டவரும் தமிழரல்லாத பிறரும் இரு மொழியும் பயின்று பெற்ற அறிவால், வடமொழியில் உள்ள வரலாறு பலவும் புளுகுக் குப்பைகள் (‘A farrago of  legendary nonsense’ – W.Logan’s Malabar) என்று திட்டவட்டமாகக் கூறுவாராயினர்.
     இதற்கிடையே நல்லகாலமாக மொழிநூல் நெறி (PHILOLOGY) பொய்யான கருத்துக்களை மறுத்துவிட்டது உண்மை ஒளிவிட்டுத் திகழ்வதாயிற்று.                                               


- ‘தமிழ்ப்பொழில்’ 32ஆம் துணர், மார்ச்சு 1957.
நன்றி! உரைவேந்தர் தமிழ்த்தொகை 23, பக்கம் 172, 173. 
-------------------------------------------------------
ஐரோப்பியரும் வடமொழியாளரும்!
-         உரைவேந்தர் ஒளவை.துரைசாமி விளக்குகிறார்!

     மேலைநாட்டு ஐரோப்பியரிடம் காணப்படாத ஒரு தீய பழக்கம் வடமொழியாளரிடம் இருந்தது. ஐரோப்பியர் தாம் கேட்கும் செய்தியும் கற்கும் பொருளும் யாவரிடம் கிடைத் திருக்கின்றனவோ அவரையும் அவர்களின் நூலையும் விடாமற் குறிப்பது அவர்கள் வழக்கம்.
    
            அவர்களுடைய நூல்களைக் காண்போமாயின், இது இன்னார் கூறியது; இதைக்கூறியவர் இன்ன நூலிற் கூறியுள்ளார் என்பதைத் தவறாமற் குறிப்பர். பின்பு எந்தப் பொருளேனும் புதிதாகக் காணப்படின், அப்பொருள் காணப்படும் இடத்தே அதற்கு எப்பெயர் வழங்குகிறதோ அதனைத் தங்கள் மொழியொலிக் கேற்பத் திரித்துக்கொள்வர; ஊர்ப்பெயர், மக்கட்பெயர் ஆகியவற்றையும் அவ்வாறே திரித்துக்கொள்வது அவர்கள் இயல்பு.
     வடமொழியாளரோ எனில், அப்பெயரை வடமொழியில் மொழிபெயர்த்து அவர்களுடையதாகத் தோன்றுமாறு செய்து கொள்வர்.
     விரிஞ்சிபுரத்திலுள்ள இறைவனுக்குப் பழம் பெயர் வழித்துணை நாயனார் என்பது. விருத்தாசலத்துக்குப் பழமையான பெயர் முதுகுன்றம் என்பது. வழி என்பதை மார்க்கமென்றும் துணை என்பதைச் சகாயம் என்றும் மொழிபெயர்த்து மார்க்க சகாயர் என்றும், முதுமை விருத்தம், குன்றம் அசலம் ஆகவே முதுகுன்றம் விருத்தாசலமென்றும், வெண்காடன் என்பதைச் சுவேதாரணியன் என்றும் கூறினர்.
     இவ்வாறே, விரிஞ்சிபுரத்திற்கு அருகில் ஓடும் பாலாற்றை க்ஷீரநதி என்றும், அழகர் மலையிலுள்ள சிலம்பாற்றை நூபுர கங்கை என்றும், அறம் வளர்த்தாள், பெரியநாயகி என்ற பெயர்களைத் தர்மசம்வர்த்தினி, பிரகந்நாயகி என்றும் மொழி பெயர்த்துக் கொண்டனர். இவ்வாறே சைவத் திருமுறைகளிலும் நாலாயிரப் பிரபந்தங்களிலும் காணப்படும் பல பெயர்கள் வடமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன.
     வழித்துணை நாயனாரை ஐவே கைடு (Highway guide) என்றோ முதுகுன்றை குட் ஓல்டு இல்லக் (Good old hillock) என்றோ ஆங்கிலேயரோ வேறு ஐரோப்பியரோ மாற்றியதோ, மாற்றுவதோ கிடையாது.

-         தமிழ்ப்பொழில் 32ஆம் துணர், மார்ச்சு 1957.
நன்றி! உரைவேந்தர் தமிழ்த்தொகை 23, பக்கம் 172, 173. 

-------------------------------------------------------  

வியாழன், 10 மார்ச், 2016

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் இன்று!

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் இன்று!
(10-3-1933)


இருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க, உயர்ந்த, அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்!                                                                     

தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி, ஊன்றிய அரிய தமிழ் மீட்பர்!                                                                                    

மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம்!           

செத்தமொழி தாங்கிகளின் சித்தம் கலங்கடித்த போர்வாள்!                                                      

ஒப்பற்ற தமிழறிஞர்! உயர்ந்த ஆய்வாளர்! அரிய மெய்யறிவுச் சிந்தனையாளர்!                                                                  

சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு வேறுபாடு இல்லாத மெய்வாழ்வர்!                                                                             

ஈடற்ற செழுந்தமிழ்ச் சொற்பொழிவாளர்!                                                                             

தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய மூன்று இதழ்களைச் சிறப்புற நடத்திய ஈடெடுப்பற்ற இதழாளர்!                                                                                                         

சிறந்த இலக்கியப் புலமையாளர்!  அரிய மொழிபெயர்ப்பாளர்!

நல்ல ஓவியர்!    திறஞ்சான்ற அச்சுத்தொழில் வல்லார்!                                                      

தமிழ்இன இழிவு நீக்கத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்குமாக அயராது பொருது நின்ற போராளி!                                                                                                                    

மூன்றுமுறை தமிழகவிடுதலை மாநாடுகளை நடத்திய துணிவாற்றல் சான்ற வினையாண்மையர்!                                                                                                 

தமிழ்மொழி,  தமிழ்மக்கள் தமிழ்நாட்டு நலன்களுக்காக முப்பத்தைந்து முறைகளுக்கும் மேல் சிறைசென்ற அஞ்சாநெஞ்சர்!                                                                                          

சலுகை பெறவும் சாதிகூடாதென வாழ்ந்த சாதிமறுப்பாளர்!

சாதிமறுத்து மணம்புரிந்து கொண்டவர்!  தம் மக்களுக்கும் அவ்வாறே மணம் செய்வித்தவர்!

- இவ்வாறு பல்வேறு சிற்ப்புக்களுக்கு உரியவரே துரை.மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.

அவர் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அணுக்கத் தொண்டனாக இருந்த காலத்தை எண்ணிப் பெருமிதம் கொள்கின்றேன்!

இன்றைக்கும் தேவைப்படும் பாவலரேறு ஐயாவின் பா முழக்கம்:

ஆண்டுநூ றானாலும் அன்னைத் தமிழ்நாடு
வேண்டும் விடுதலை; எண்ணம் விலக்கோம் யாம்;
பூண்டோம் உறுதி! புறப்பட்டோம்! என்றேநீ
மூண்ட இடியாய் முழங்காய் தமிழ்மகனே!

தமிழ்மண் விடுதலை பெறும்வரை அம்முழக்கம் ஓயாது!


--------------------------------------------------------------  

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

தமிழர்

தமிழர்!                               

உலகமுதன் மொழியென்றே ஓர்ந்தாய்ந்தோர் தமிழினுயர் 
வுரைக்க்க் கண்டோம்!
உலகமுதல் நாகரிகம் ஒள்ளாய்வால் தமிழரதென் 
றுறுதி செய்யும்!
உலகுயிர்பால் அன்பருளும் உயர்மானம் கொடைவீரம் 
ஓம்பும் பண்பும்
உலகினிலே இயல்பாகக் கொண்டிருந்த இனமிதென 
உரைக்கும் நூல்கள்!

பெருமையெலாம் மிகஅடுக்கிப் பேச்சாலே கவர்ந்தவர்கள் 
பெற்ற ஆட்சி 
திருடுதற்கும் கொள்ளைக்கும் திகழ்வாய்ப்பாய்க் கொண்டிங்கே 
தீமை எல்லாம்
பெருகிடவே செய்தனரே! பிறங்கடைகள் தாய்மொழியைப் 
பேணாப் போக்கில்
கருகிடவே விட்டனரே கறையற்ற சிறப்பெல்லாம் 
கரைய விட்டே!

இன்றுள்ள தமிழர்நிலை எண்ணிடுவீர்! இயல்பாக 
இவர்கள் பேச்சில்
ஒன்றலுறப் பிறமொழிகள்! ஒழிந்ததுதாய் மொழிவழியே 
ஓதும் வாயப்பும்!
சென்றுதொழுங் கோவில்கள், செப்பிவழக் காடுமன்றம் 
சேர எல்லாத் 
துன்றாட்சித் துறைகளிலும் தொகுப்பாகத் தமிழிலையே, 
தொலைந்த தந்தோ!

பண்பாடும் நல்லொழுங்கும் பார்போற்றும் நல்லறங்கள் 
பலவும் சொன்ன 
மண்ணிற்கே உரியவுயர் மாண்பெல்லாம் படிப்படியாய் 
மறையச் செய்தே 
கண்கெடுக்கும் இருதிரையின் காட்சியெலாம் தமிழர்தம் 
கருத்தில் மாசு
மண்டிடவே புகுத்துநிலை மட்டின்றி நடக்கிறதே 
மயக்கத் தாழ்த்தி!

ஆற்றுரிமை நெகிழ்ந்ததுவே! அணுத்தீமை கொடுவுலைகள் 
அமைத்த தோடே
ஊற்றுநீர் நிலவளத்தை உறிஞ்சிடலும் நடக்கிறதே 
ஊக்கத் தோடே!
மாற்றமிலா ஒட்டார மனத்திலிந்தி சமற்கிருதம் 
வளர்த்தற் கென்றே 
தேற்றமுறச் செயற்பாடு! தீந்தமிழை அழிப்பதற்கும் 
திட்டம் உண்டே!

எந்தநிலை யானாலும் எல்லாரும் சமமென்றே 
இங்கே வாழ
செந்நெறியில் அமைவிலையால் சீறியெழுந் துரிமைபெறச் 
சிறந்த ஈகச்
செந்தமிழ இளையோரின் செழும்படையொன் றமைத்திடுக 
செப்ப மாக!
அந்தநாள் விரைந்திடுக! அந்தமிழர் அரசமைக! 
ஆக்கம் சேர்க!
                                                                                                              (திருவெண்ணெய் நல்லூர்ப் புலவர் க.கதிர்வேலு தம் தமிழ்ச்சோலை’ என்னும் இதழுக்குப் பாடல் கேட்டபோது, அவர் தந்த தலைப்பில் எழுதித்தந்த பாடல் இது)                                                                                                                              
----------------------------------------------------------------------------------------------------