புதன், 6 மார்ச், 2013

பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு – அறிமுக உரை


பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு அறிமுக உரை


புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் புதுவைத் தனித்தமிழ்க் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் அறக்கட்டளையின் பத்தாம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் புதுவைத் தாகூர் கலைக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் அ.பசுபதி ஐயா அறக்கட்டளை சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில் முன்னதாகத் தமிழநம்பி ஆற்றிய அறிமுகரை கீழே:

     புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புதுவைத் தனித்தமிழ்க் கழகத்துடன் இணைந்து நடத்துகின்ற தேவநேயப்பாவாணர் அறக்கட்டளை பத்தாம் சொற்பொழிவு நிகழ்ச்சியின் தலைவர் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய அரிமாப்பாண்டியன் ஐயா அவர்களே!
      வரவேற்புரை யாற்றிய பு.மொ.ப.ஆ.நிறுவனத்தின் இயக்குநர் பண்பாட்டு மாந்தவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி அவர்களே!
இவ்வாய்வு நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகளே, பணியாளர்களே!
      அரியதொரு ஆய்வுச் சொற்பொழிவாற்ற இருக்கும் பெருமதிப்பிற்குரிய இனிய அன்புப் பேராசிரியர், கணிப்பொறி, தமிழ்க்கணினிப் பயன்பாட்டில் முதன்மையராக விளங்கும் பசுபதி ஐயா அவர்களே!
      மதிப்பிற்குரிய கெழுதகை அன்பர்களாகிய தனித்தமிழ்க் கழகத் தொண்டுள்ளங்களே!
      பல்வேறு பணிகளையும் கவன ஈர்ப்புகளையும் தவிர்த்துவிட்டுத் தமிழ் கருதி குழுமியுள்ள அறிஞர்களே! அன்புத் தமிழ்நெஞ்சங்களே!
      அனைவர்க்கும் வணக்கம்.

      இன்றைக்கு நாம் செவிமடுக்க இருக்கும் அறக்கட்டளைச் சொற்பொழிவின் தலைப்பு மொழிஞாயிறு பாவாணரும் இணையமும் என்பதே. மொழிஞாயிறு பாவாணர் ஐயாவைப் பற்றியும், சொற்பொழிவாற்ற இருக்கும் பேரா.பசுபதி ஐயாவைப் பற்றியும் அறியாத கற்ற புதுச்சேரித் தமிழர் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறலாம்.
     
      மேலும், இக்காலத்தில் இணையத்தைப் பயன்படுத்துவோர், குறிப்பாக இணையத்தில் தமிழில் கணினியைப் பயன்படுத்தும் தமிழர்கள் பெருகி இருக்கின்றனர். தமிழர்களில் பலருக்குத் தனியே வலைப்பதிவு உண்டு. முகநூலில் நாள்தோறும் எழுதுகின்ற தமிழர், குறிப்பாகப் புதுச்சேரித் தமிழர் பலர் இருக்கின்றனர்.  இத்தகு சூழலில் இத்தலைப்பு பொருத்தமானதும் பயன்விளைப்பதுமான ஒன்றென்பது தெளிவு..
       
      அண்மைக் காலத்தில் பாவாணரின் நூற்களைத் தொகுப்பாக வெளியிட்ட தமிழ்மண் பதிப்பக நிறுவனரும், பதிப்பாளருமான தமிழ்த்திரு கோ. இளவழகனார், அந்நூல்களின் பதிப்புரையில் ஒருவரைப் பற்றிக் கீழ்காணும் வகையில் நன்றியுணர்வோடு போற்றி வணங்கி குறிப்பிட்டெழுதுகிறார்: "இவர் தோன்றி யிராவிடில்,  குடத்துள் இட்ட விளக்காக இருந்த மொழிநூல் மூதறிஞர் பாவாணர் அவர்களைத் தமிழுலகம் ஏற்றிப் போற்றியிருக்காது; எங்களைப் போன்றவர்களும் அவர்தம் பேரறிவைக் கண்டு மகிழ்ந்திருக்க முட்டியாது."
               
      இளவழகனாரால் இவ்வாறு குறுப்பிடப் பட்டவர்  பாவலரேறு பெருஞ்சித்திரனார்  ஆவார். இத்தகைய சிறப்பிற்குரிய பாவலரேறு ஐயா, பாவாணரைப் பற்றி எழுதுகையில்,  “இவர் வாயினின்று சரமாரியாக வந்துவிழும் தனித்தமிழ் ஆராய்ச்சிக் கருத்துக்களை இதுவரை எந்த அறிஞரும் தமிழ்மொழிக்கு வழங்கிவிட வில்லை. தமிழ்த் துறைக்கு அவர் தொண்டு புதியது; தமிழர்க்கு அவர் கருத்துக்கள் மயக்கறுப்பன; மேனாட்டார்க்கு அவர் நூல்கள் வியப்பளிப்பன. அவர் எடுத்துக்கொண்ட முயற்சி அரியது. தொல்காப்பியர் காலத்திற்குப்பின், தமிழ் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் ஒட்டுமொத்த முயற்சிக்குப் 'பாவாணர்' என்றே பெயரிடலாம்" என அழுத்தம் திருத்தமாகக் கூறுவார்.

தமிழ்க்கெனப் பிறந்து தமிழ்க்கென வளர்ந்து
தமிழ்க்கெனப் பயின்று தமிழ்க்கெனப் பயிற்றித்
தமிழ்க்கென ஓய்ந்து தமிழ்க்கென ஆய்ந்து
தமிழ்க்கென வாழும் தமிழே வாழி!  எனப் பாவாணரை அவர் பாடுவார்.

                இப்போது பாவாணரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் இல்லை என்னும் துணிவிலேதான் நாகங்கள் நச்சு உமிழத் தொடங்கி இருக்கின்றன! எழுத்தே இல்லாமல், செயற்கை வகையால் உருவாக்கப்பட்டது ஒருமொழி. மக்கள் வழக்கு மொழியாக என்றுமே இருந்திடாத அது, வேள்விச்சடங்கு மொழியாக இருந்தது. இவனை அழி; அவனை அழி; எமக்கு இடையூறானவனை அழி எனப் பகைப் பழிமொழியாகச் செவியால் கேட்டுக் கேட்டுச் சொல்லும் மொழியாக இருந்தது அது. அம் மொழியைக் கொண்டுதான், தமிழ், எழுத்தும் சொல்லும் பொருளும் இலக்கணமும் இலக்கியமும் அறநெறியும் மெய்யியலும், வழிபாடும் கலைகளும் அமைத்துக்கொண்டது என்று ஆங்கிலத்திலே நூலாக எழுத ஒ,ருவருக்குத் துணிச்சல் வந்திருக்கிறது!
     
      4000 ஆண்டுகட்கு முற்பட்ட சித்திர எழுத்துக்கள் கொண்ட செம்பியன் கண்டியூர் கைக்கோடரியைக் கண்டெடுத்த பிறகும், பொருந்தல் அகழாய்வு எழுத்துக்கள காலம் கி.மு. 750 கி.மு.490 என்று அமெரிக்க ஆய்வகம் ஆணித்தரமாக அறிவித்த பின்னரும், ஆதிச்சநல்லூர் தாழி எழுத்துப பொறிப்பின் காலம் கி.மு. 1700 என்று அறிந்த பின்னரும் பொய்யை நச்சாகக் கக்க நாகசாமிகளுக்குத் தெம்பும் திடாரிக்கமும் வரக்காரணம் பாவாணர் இல்லையென்ற அச்சந் தவிர்ந்த நிலையென்றால், மிகையன்று.   
     
      அது நிற்க..., பாவாணர் நாற்பதிற்கும் அதிகமான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்றவர்; எண்பதிற்கும் அதிகமான மொழிகளோடு தமிழின் தொடர்பைக் கண்டு காட்டியவர். மறைமலையடிகளார் வழி நின்று தம் அறிவுழைப்பால் தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் ஆனவர்.
     
      ஐம்பதாண்டுக் கடுங்கடிய உழைப்பில் பாவாணர் எழுதிய 39 தமிழ் நூல்களும், இரண்டு ஆங்கில நூல்களும், 152 கட்டுரைகளும், அருஞ்சிறப் பார்ந்த நூற்றுக் கணக்கான மடல்களும் தமிழருக்கும் உலக மொழியாராய்ச்சி யாளர்க்கும் அரிய விளக்கந் தந்து வருகின்றன. பாவாணரின் அஃகியகன்ற ஆய்வின் பயனாய் விளக்கம் பெற்ற முடிவுகள் ஐந்து. அவையாவன:
  1. தமிழே உலக முதன்மொழி.
  2. தமிழே திராவிடத்திற்குத் தாய்.
  3. தமிழே ஆரியத்திற்கு மூலம்.
  4. மாந்தன் பிறந்தகம் கடலுள் மூழ்கிய குமரிக்கண்டம்.
  5. தமிழனே குமரிக்கண்டத்தில் தோன்றிய மாந்தன்

      பத்தாண்டுகளுக்கும் முன்னரே, மொழிஞாயிறு பாவாணர் அவர்களைப் பற்றிய செய்திகள் இணையத்தில் நிரம்ப இடம்பெற்றிருந்ததாக, மலேசியாவில் வெளியிடப்பட்ட பாவாணர் நூற்றாண்டு விழா மலரில் குறிப்பிட்டிருந்தார்கள். பாவாணர் என்று ஆங்கிலத்தில் தட்டித் தேடினால் செய்தி கிடைக்கும் இணையதளங்களில் சில என்று குறிப்பிட்டுப் பதின்மூன்று இணையதள முகவரிகளையும் தந்திருந்தார்கள்.
     
      இப்போது, கூகுள் தேடலில், தேவநேயப்பப்பாவாணர் என்று தட்டித் தேடினால், பாவாணர் பற்றிய செய்திகள் இடம்பெறும் இடங்கள் இவையிவை என 54 பக்கங்களில் தளங்களின் குறிப்பு கிடைக்கிறது. ஒருபக்கத்திற்கு ஏறத்தாழ பத்துத் தளத்தின் பெயர்கள் இடம்பெற் றிருக்கும். ஆக, 540 இடங்களில் பாவாணரைப் பற்றி எழுதிய செய்திகளை நம்மால் பார்க்க முடியும் என்ற நிலை இருக்கிறது.

      பாவாணர்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டிருந்த மலேசியாவைச் சேர்ந்த கோவலங்கண்ணனார் குடும்பத்தினரின் www.Devaneyan.net என்ற இணைய தளத்திலும், பாவாணரின் மகன்களில் ஒருவரான திரு.மணிமன்ற வாணனின் புதல்வரும் பாவாணனின் பெயரனுமாகிய இம்மானுவல் என்பாரின்  www.devaneyappavanar.com என்ற இணையதளத்திலும் இப்போதும் பாவாணர் பற்றிய செய்திகளையும் அவர் நூல்களையும் காணலாம்.

      பொள்ளாச்சி நசன் என்பாரின் www.thamizham.net என்னும் தளத்திலும் இன்னும் சில தளங்களிலும், நாம் பாவாணரின் நூல்களைப் படிக்கவும் தரவிறக்கிக் கொள்ளவும் முடியும். இன்னும் பலப்பல வலைப்பதிவுகளும் பாவாணரைப் பற்றிய செய்திகளை எழுதி வருகின்றன. அவர் கருத்துக்களைப் பாராட்டியும் மறுத்தும் செய்திகள் வருகின்றன. இவற்றைப்பற்றியெல்லாம் பேராசிரியர் ஐயா  விளக்க விருக்கின்றார்.

      பேராசிரியர் பசுபதி ஐயாவிடம் பயின்ற மாணவர்கள் சிலரும் இங்கு வந்திருக்கக் கூடும். அவர் இன்றும் ஆசிரியராக இருந்து இணையப் பயன்பாடு குறித்து யார் எந்த ஐயம் எழுப்பினாலும், சற்றும் தயங்காது உடனுக்குடன் விளக்கமாக ஐயத்தைத் தெளிவிப்பவர். இணையத்தில் தமிழைக் கையாளல் பற்றியும் வலைப்பதிவு, முகநூல் முதலான பல பயன்பாடுகள் தொடர்பாகவும்  பயிற்றி உதவுவோரில் அவர் முதன்மையானவர். ஒரு கைப்பேசியை வைத்துக்கொண்டே உலகத் தமிழரொடு இடையறாக் கணனித் தொடர்பில் இருக்கின்றவர். அவருடைய வலைப்பதிவுகள்:
  1. http://kalapathy.blogspot.com/
  2. http://httpdevamaindhan.blogspot.com
     தேவமைந்தன் என்ற புனைப்பெயர் கொண்ட அ. பசுபதி ஐயா ஒரு பாவலர்; எழுத்தாளர்; பேச்சாளர். தமிழ்நாட்டிலுள்ள கோவையில் பிறந்தவர். புதுச்சேரி அரசின் தாகூர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து தம் 52-ஆம் அகவையில் விருப்ப ஓய்வு பெற்றார். 1968ஆம் ஆண்டு முதல் இவர் படைத்த பாடல்கள், ‘உங்கள் தெருவில் ஒரு பாடகன் (1976)  ‘புல்வெளி (1980) ‘போன்சாய் மனிதர்கள் (1993) என்ற மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன. 1969 முதல் இவர் வானொலி உரைகள் நிகழ்த்தி வருபவர். செந்தமிழும் நாப்பழக்கம்- என்ற இவர்தம் வானொலி உரைத்தொடர் பலமுறை ஒலிபரப்பாகி வருகிறது. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்துப் புதுவை நடுவண் பல்கலைக்கழகத்தில் தேவமைந்தன் ஆற்றிய உரை,  பல வலைப்பூக்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பாடல்களும் கட்டுரைகளும் எழுதிவரும் தேவமைந்தனின் பாடற் பக்கங்கள் பல வலையேடுகளில் வெளிவந்துள்ளன. என்ற இந்தச் செய்தியும் இணையத்திலிருது திரட்டியதே.
      பேரா. பசுபதி ஐயா பாவாணரைப் பற்றி நன்கறிந்தவர். ஏறத்தாழ பதினொரு ஆண்டுகளுக்கு முன்னரே அவர், பாவாணரும் திருக்குறளும் என்ற தலைப்பில் பாவாணர் நூற்றாண்டு விழா மலரொன்றில் எழுதிய கட்டுரையைப் படித்திருக்கின்றேன். அதற்கும் முன்னரே கூட அவர் பாவாணரைப் பற்றியும் அவர் நூல்களைப் பற்றியும் எழுதியிருக்கக்கூடும்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து                                     அதனை அவன்கண் விடல்.                                                                                               என்ற குறளை நன்குணர்ந்த தனித்தமிழ்க் கழகமும் பு.மொ.ப.ஆ.நிறுவனமும் தகுதியான ஒருவரைத் தக்க தலைப்பில் பொருத்தமாக அறக்கட்டளைச் சொற்பொழிவாற்ற அழைத்துள்ளனர். இந்த உரையைக் கேட்கும் நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது என்று கூறி இனியும் இடையில் நேரத்தை எடுத்துக் கொள்ளாமல் வாய்ப்பளித்தோர்க்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு. என் உரையை முடித்துக்கொள்கின்றேன்.
-----------------------------------------------------------------

புதன், 27 பிப்ரவரி, 2013

புதுவையில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு


புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும்
தனித்தமிழ்க் கழக
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு அழைப்பிதழ்

                                                                                                                                                                                                                                                                   

சனி, 2 பிப்ரவரி, 2013

புதுவையில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்


தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்

நாள் : 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 முதல் 5.30 ணி வரை
இடம் : மக்கள் தலைவர் வ.சுப்பையா இல்லம்,
66. கடலூர் சாலைமுதலியார் பேட்டைபுதுச்சேரி -605 004.
                                                                தொடக்க விழா                                     
காலை 9.30 மணிக்கு

                             தலைமை:                                   
திரு. வீரமுருகையன்
தலைவர்புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.

நோக்க உரை:
திரு. இரா. சுகுமாரன் ஒருங்கிணைப்பாளர்புதுச்சேரி லைப்பதிவர் சிறகம்.

முன்னிலை:
பேராசிரியர் நாக. இளங்கோ,
காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்.
திரு. ஓவியர் இரா. இராசராசன்
விரிவுரையாளர்பாரதியார் பல்கலைக்கூடம்புதுச்சேரி.
பொறியாளர் இராதேவதாசு
துணைத்தலைவர்புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.

முகாமைத் தொடக்கி வைப்பவர்:
மாண்புமிகு திருசபாபதி அவர்கள்
சட்டப்பேரவைத் தலைவர்புதுச்சேரி அரசு.
தமிழா தமிழ் மென்பொருள் குறுந்தட்டு வெளியீடு:
மாண்புமிகு திருதிதியாகராசன் அவர்கள்
மின்துறை அமைச்சர், புதுச்சேரி அரசு.
பெறுதல்:
திருகோ.சுகுமாரன்
செயலர்மக்கள் உரிமைக் கூட்டமைப்புபுதுச்சேரி.
வாழ்த்துரை:
திருஇரா.விசுவநாதன் அவர்கள்
மாநிலச் செயலர்இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (CPI), புதுச்சேரி.

அமர்வு 1:                                                                                காலை 10.30 முதல் 11.15 வரை 

தமிழில் இயங்குதளம்: விண்டோசு, லினக்சு (Ubuntu), தமிழில் எம்.எசு ஆபீசுஓப்பன் ஆபீசுதமிழில்  இணைய உலாவிகள் (Web Browsers),ஒருங்குகுறி, TAM, TAB, TSCII பற்றிய விளக்கம் மற்றும் குறியீடு மாற்றம்
(font conversion)

திருஇரா.சுகுமாரன்புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்.
பிரசன்னா. வெங்கடேசு, புதுச்சேரி லினக்சு பயன்பாட்டாளர்கள்.

அமர்வு 2:                                        காலை 11.15 முதல் 11.30 வரை
தமிழில் தட்டச்சு மென் பொருட்கள்  நிறுவல் மற்றும் பயன்படுத்துதல்.
திருஅருணபாரதி , மென்பொருள் வல்லுநர்.
 காலை 11.30 முதல் 11.45 வரை
தேநீர் இடைவேளை
அமர்வு 3:                                                             காலை 11.45 முதல் 12.30வரை
வலைப்பதிவு செய்தல்: பிளாக்வேர்டு பிரசுபிற
பரமேசுவரி
அமர்வு 4:                                           பகல் 12.30முதல் 1.15 வரை
திரட்டிகளின் பயன்பாடு: தமிழ்மணம்தமிழ்வெளி,திரட்டி
கைப்பேசியில் தமிழ் பயன்படுத்துவது. ஆன்ட்ராய்டுபிற…
திரு. . வெங்கடேசு , நிறுவனர், திரட்டி.
                      உணவு இடைவேளை                       
பகல் 1.16 முதல் 2.00 வரை
அமர்வு 5:                                                                  பிற்பகல் 2.00 முதல் 2.45வரை
திருகோ.சுகுமாரன்
தமிழில் மின்னஞ்சல்அரட்டை,
சமுக வலைத்தளங்கள்முகநூல்டிவிட்டர்கூகுல் பிளசு

அமர்வு 6:                                  பிற்பகல் 2.46முதல் 3.15 வரை

பேராசிரியர் நாக. இளங்கோ
தமிழில் மின்னூல் உருவாக்குதல்
அமர்வு 7:                                 பிற்பகல் 3.15முதல் 4.00 வரை
கட்டற்ற மென்பொருட்கள் (open source software)
த. சீனிவாசன்,  - கணியம் மின்னிதழ் - ஆசிரியர்.

அமர்வு 8:                                 பிற்பகல் 4.00முதல் 4.15 வரை

தமிழில் கிடைக்கும் பல்வேறு மென் பொருட்கள்தமிழ் தொடர்பான பிற
திரு. தமிழநம்பி விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
தேநீர் இடைவேளை
பிற்பகல் 4.15 முதல் 4.30 வரை
நிறைவு விழா:                                         மாலை 4.30 மணி
தலைமை:
திரு. எல்லைசிவக்குமார்  பொதுச்செயலர்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்
 சான்றிதழ் வழங்கல்:
பேராசிரியர் பசுபதி
நிறைவுரை:
 திருஅ.கு. சலீம்,
துணைத்தலைவர்புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்.
 புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம்
 தொடர்புக்கு:
இரா. சுகுமாரன்  :  94431 05825,   எல்லை. சிவக்குமார்: 9843177943,
பேராசிரியர் நாக. இளங்கோ: 99436 46563, கோ.சுகுமாரன்:9894054640.
மின்னஞ்சல்: rajasugumaran@gmail.comellai.sivakumar@gmail.com
இணையம்: www.pudhuvaitamilbloggers.orgவலைப்பூ:www.puduvaibloggers.blogspot.com/





வெள்ளி, 28 டிசம்பர், 2012

தங்கப்பா ஐயாவுக்கு இரண்டாம் முறையாக இந்திய இலக்கிய அமைப்பின் பரிசு


தங்கப்பா ஐயாவின், “Love stands alone” நூலுக்கு இந்திய அரசு இலக்கியக் கழகத்தின் (சாகித்திய அகாதமி) பரிசு!

          இந்திய அரசின் இலக்கிய அமைப்பு (சாகித்திய அகதமி) 2012ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான பரிசுக்குரிய நூலாக, நம் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய வாழ்வியல் அறிஞர்,பாவலர் ம. இலெனின் தங்கப்பா ஐயா எழுதிய, “Love stands alone” என்னும் நூலைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.

இந்நூல், தேர்ந்தெடுத்த கழக(சங்க) இலக்கியப் பாடல்களின் அரிய ஆங்கில மொழிபெயர்ப்பு நூலாகும். இந்நூலை உலகப்புகழ்பெற்ற பெங்குவின் பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

இப்பரிசு, ஐம்பதாயிரம் உருபாவுக்கான காசோலையும், ஒரு செதுக்கப்பட்ட செப்புப் பட்டயமும் கொண்டதாகும். சென்ற ஆண்டு தங்கப்பா ஐயாவின் சிறுவர் இலக்கிய நூலான சோளக் கொல்லைப் பொம்மைக்கு இந்த இலக்கிய அமைப்பின் பரிசு கிடைத்ததை முன்பே அறிவோம்.
    
நம் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவிப்பதோடு தங்கப்பா ஐயாவின் தகுதிக்குரிய பரிசுகள் இன்னும் அளிக்கப்பட வேண்டும் என்ற விழைவையும் குறிப்பிட விரும்புகிறோம்.  தங்கப்பா ஐயா அவர்கள் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து இன்னும் பல அரிய ஆக்கங்களைத் தரவேண்டுமென்ற நம் அவாவையும் பணிவுடன் அறிவிக்கின்றோம்.

------------------------------------------------------------------------

இரட்டை நினைவேந்தல் நிகழ்ச்சி


   இரட்டை நினைவேந்தல் நிகழ்ச்சி

      தூயதமிழ்த் திங்களிதழ் தென்மொழியைத் தொடங்கி, அதன் ஆசிரியராக இருந்து அவ்விதழை மொழி, இன, நாட்டு உரிமை மீட்பு இயக்கமாக நடத்தியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா ஆவார். அஞ்சா நெஞ்சினரான அவர், தமிழ் தமிழர் தமிழ்நாட்டு நலன்களுக்காகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர்; பிறர் முன்னெடுத்த போராட்டங்களில் பங்கு கொண்டவர். அவை காரணமாகப் பலமுறை சிறைப்படுத்தப்பட்டவர். ஈடெடுப்பற்ற தூயதமிழ்ப் பாவலர்; தமிழறிஞர்; இணையற்ற எழுத்தாளர்; எவரையும் ஈர்க்கும் ஒப்பற்ற சொற்பொழிவாளர்; எதற்கும் எள்ளளவும் அஞ்சாத போராளி!
      அவர் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட அவருடைய துணைவியாரும் இலக்கக் கணக்கான தமிழுள்ளங்களின் இணையற்ற அன்புத் தாயுமான தாமரை அம்மையார் தம் 77ஆம் அகவையில் தி.பி2043 நளி22 * 07-12-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
      தூயதமிழ் நெஞ்சங்கள் அனைவரும் நன்கு அறிந்தவரும், தமிழிலக்கணப் பெரும்புலவரும், சென்னை மேடவாக்கம் தமிழ்க்களத்தில் தமிழ் இலக்கணம் இலக்கியம் தொடர்பாக தொடர்ந்து நடந்த கூட்டங்களில் விளக்கமளித்து வந்தவரும், மறைமலையடிகளார், பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் வழியில் தொடர்ந்து தொண்டாற்றிவந்தவரும், இருபத்தொரு நூல்களின் ஆசிரியரும், இரண்டு தூயதமிழ் இதழ்களின் நிறுவுநரும் ஆசிரியருமாயிருந்து அரும்பணி யாற்றியவரும், சிறந்த பாவலருமாகிய திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் தம் 70ஆம் அகவையில் தி.பி 2043 நளி 8 23-11-2012 வெள்ளிக்கிழமையன்று மறைவுற்றார்.
      தி.பி 2043 சிலை(மார்கழி)7 * 22-12-2012 காரிக்கிழமை அன்று தாமரை அம்மையார், இறைக்குருவனார் ஐயா ஆகிய இருவரின் நினைவேந்தும் இரட்டை நினைவேந்தல் நிகழ்வு சென்னையில் அடையாறு இராசரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. 
     

தாமரை அம்மையார் தென்மொழி அன்பர் ஒவ்வொருவரையும் தனிப்பட்டவகையில் நன்கு அறிந்தவராவார். அவர்கள் அனைவரிடத்தும்
அன்பும் பாசமும் கொண்ட இணையற்ற தாயாவார். அவர்கள் ஒவ்வொருவரையும் காணுந்தொறும் உளமார்ந்த அன்பும் பாசமும் செறிந்த உசாவல்களால் திணறச் செய்யும் அன்னையாகத் திகழ்ந்தவராவார்.
      யான் தாமரையன்னையாரைக் கடந்த நாற்பத்தொன்பது ஆண்டுகளாக அறிவேன்! கடலூரிலிருந்து தென்மொழி இயங்கியபோது ஞாயிற்றுக்கிழமை தோறும் பாவலரேறு ஐயாவுடன் தென்மொழிக் குடும்பத்துடன் - இருந்திருக்கின்றேன். தென்மொழி சென்னையிலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்னர் அடிக்கடி சென்னை செல்ல இயலாவிட்டாலும் வாய்ப்பு நேரும் போதெல்லாம் ஐயாவையும் அம்மாவையும் கண்டு பேசி அவர்கள் அன்பில் திளைத்திருக்கிறேன்.
      புறநானூற்றில் அதியமான் நெடுமானஞ்சியைக் குறித்து ஒளவையார் பாடிய பாடல் ஒன்றின் முதல் மூன்று வரிகள் இவை:
ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று, பலரொடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பின்ன் மாதோ!
இவ்வரிகள் பாவலரேறு ஐயா, தாமரையம்மையாருக்கும் மிகவும் பொருந்துவனவாகும்.
      பாவலரேறு ஐயாவின் மறைவிற்குப்பின், சென்னைப் பாவலரேறு தமிழ்க்களத்தில் தி.பி.2033 சுறவம்6 * 19-1-2002 அன்றி நடைபெற்ற விழாவில், உலகப் பெருந்தமிழர் ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் தமிழ்மொழி, இன, நாட்டு உரிமைநலச் செயற்பாடுகளுக்கு நலம் புரக்குநராகத் தொண்டுள்ளத்தோடு துணைநின்றமையைப் பாராட்டிச் சிறப்பித்து அம்மா அவர்கள் தம் கையால் எனக்குப் பாராட்டுப் பட்டயம் அளிக்க யான் பெற்றதை நினைவு கூர்கையில் கணகள் கலங்குகின்றன. தமிழ்நெஞ்சங் கொண்ட அன்பர்களை எந்த வேறுபாடுமின்றி நடத்தும் ஈடற்ற அன்புள்ளம் பெற்றவராக அம்மா இருந்தார்; இவ்வகையில் அவருக்கு இணை வேறெவருமிலர்.
      சென்ற ஆண்டு சென்னை மேடவாக்கம் தமிழ்க்களத்தில் நடைபெற்ற ஐயாவின் நினைவேந்தல் கூட்டத்தில், ஐயாவுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள என்னை அழைத்திருந்தனர். அங்கு ஐயாவைப் பற்றிய நினைவுகள் சிலவற்றைப் பற்றி அவர் எழுதிய பாடல்களுடன் உணர்வெழுச்சியுடன் குறிப்பிட்டு உரையாற்றினேன்.
அம்மா பழைய நினைவுகளில் ஆழ்ந்ததோடு, நான் பேசியபோது உணர்வுப் பெருக்கில் தட்டுத்தடுமாறிய நிலைகண்டு, என் உடல்நிலை குறித்து மிகவும் கவலைப்பட்டார்கள்.
      அம்மாவின் நல்லனபுப் பணபுகள் பற்றிப் பல செய்திகளைக் கூறலாம். பாவலரேறு சிறை சென்ற போதெல்லாம் குடும்பத்தையும் தென்மொழியையும் கட்டிக்காத்துவர அவர் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஐயாவின் போராட்டங்கள் பலவற்றுள் அம்மாவும் பங்கேற்றிருக்கிறார்கள்; சிறைக்கும் சென்றிருக்கிறார்கள். ஐயாவைப் பற்றி யான் எழுதும் நூல் முழுமையுற்று வெளிவருமாயின், அம்மாவைப் பற்றி மேலும் செய்திகளை நினைவுகூர்வேன். அம்மா மறைவுற்றபோது யான் எழுதிய கையறுநிலைப் பாடல் இது:   

அன்பின் அடையாளம்; அஃகலிலா பாசத்தின்
இன்னுருவம்; ஈடில்லா நற்றாயே!  என்றும்
தமிழ்நெஞ்சர் ஏற்றுகின்ற தாமரை அன்னாய்!
அமிழாப் புகழ்சேர் அருளே!  இமிழுலகின்
துன்பங்கள் போதுமெனத் தூங்கினிரோ? அன்றியின்றே
அன்பழைப்பு ஐயா விடுத்தாரா?  என்செய்வோம்
எங்களுக் கிங்கார் இனி?      

     


1965-ஆம் ஆண்டு. மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நேரம். சென்னையில், நடுவண் தொடர்வண்டி நிலையத்திற் கருகிலிருந்த ஒற்ற்றைவாடை அரங்கில் மறுநாள் நடக்க இருக்கும் தொடர்வண்டி மறியல் தொடர்பாக மாணவர்களின் கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து கலந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு கல்வி நிலையம் சார்ந்த மாணவரும் உணர்வுக் கொதிப்போடு போராட்டத்தை அரசு அஞ்சித் திகைக்க மேலெடுத்துச் செல்வதைப்பற்றி உரையாற்றிச் செல்கின்றனர்.
      கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மாணவர், அடுத்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்துள்ள மாணவர் பேசுவார் என்று அறிவித்தார். மேடைக்கு வந்த அந்த நெடிய அடர்ந்த மீசை தாடியோடிருந்த மாணவர், பேசத்தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த குரலோடு உணர்வுப் பொறி பறக்கப் பேசிக்கொண்டிருந்த போது, அந்த ஒலிவாங்கிப் பழுதாகிக் கரமுர என ஒலி எழுப்பித் தொல்லை கொடுக்க, அதைத் தம் கையால் ஓங்கி அடித்துக் கீழே தள்ளிவிட்டு ஒலிவாங்கி இல்லாமலே ஓங்கி உயர்ந்த குரலெடுத்துப் பேசத் தலைப்பட்டார் அவர்! அவர் தாம் தமிழிலக்கணப் பெரும்புலவர், திருக்குறள்மணி ஐயா இறைக்குருவனார் அவர்கள். 
     அவரைப் பற்றிய பல செய்திகள் நினைவுக்கு வருகின்றன. அவர் மதுரையில் இருந்து இதழ்கள் நடத்தியமை, அவருக்கும் பாவலரேற்றின் மூத்த மகள் பொற்கொடியாருக்கும் திருமணம் நிகழ்த்த - பாவலரேறு ஐயா எனக்களித்த சிறுபணியை நான் ஐயா கூறியவாறே நிறைவேற்றி ஒரு சிறிய பங்காற்றியது, உலகத் தமிழ்க் கழகத்தில் அவர் ஈடுபாட்டோடு ஆற்றிய பணி, உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தில் அவருடை உழைப்பு போன்றவை பற்றியெல்லாம் நிறைய செய்திகள் உண்டு.
      தூய உணர்வாளரான அவர் இந்தி எதிர்ப்பு, மனு எதிர்ப்பு, ஈழ விடுதலை துணைதரவுப் போராட்டங்கள் பலவற்றில் கலந்துகொண்டு சிறை
சென்றிருக்கிறார். தமிழுலகில் அவர் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.
      இவ்விருவரின் சிறப்பைப் போற்றும் நிகழ்வாக நடந்த இரட்டை நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களும், பேராசிரியர்களும், தமிழறிஞர்களும், ஆய்வாளரும் உரையாற்றினர். அரங்கில் தென்மொழி அன்பர்கள் உள்ளிட்ட தமிழுள்ளங்கள் நிறைந்திருந்தனர்.

----------------------------------------------------------------------