புதன், 14 நவம்பர், 2012

பெருஞ்சித்திரனார் பேசினால்…!


(14-11-2012 அறிவன்கிழமை மாலை விழுபுரம் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலக விழாப் பாட்டரங்கில் கலந்து கொண்டு பாடியது)


பெருஞ்சித்திரனார் பேசினால்!

அன்பார் பெரியீர்! அறிஞர்காள்! பாட்டரங்கில்
பண்பார் பலபுலவர் பாடவந்த பாவலரே!
இன்னன்புத் தாய்க்குலமே! எந்தமிழ நல்லிளைஞீர்!
முன்வந்தே போட்டி முனைநிற்கும் மாணவர்காள்!
வல்ல செயலாற்றும் வாசகர் வட்டத்தீர்!
எல்லார்க்கும் என்றன் இனியவணக் கம்உரித்தே!

இன்றைய நூலக இன்விழாப் பாட்டரங்கில்
தன்னேரில் தூயதமிழ் வல்லரிமா வான 
பெருஞ்சித்தி ரப்பெரியார் பேசினால்... என்னும்
அருந்தலைப் பொன்றை அளித்துப்பா டென்றனரே!
யார்பெருஞ் சித்திரனார்? இங்கறியார்க் காகசில
பேர்விளக்கும் செய்திகளைப் பேசல் பொருத்தமுறும்!

நீண்டநெடுங் காலம் நெருக்கிப் பிறமொழிகள்
மூண்டுகலந் தேதமிழை முன்னழிக்குந் தீங்கிலிந்த 
நூற்றாண்டில் தூயதமிழ் நுட்பச் செழுமையுறும்
ஏற்றமிகு நூல்கள் எழுதியநற் பாவல்லார்!
மக்களிடம் தூயதமிழ் மன்னவே ஊன்றிய(து)
ஒக்க தமிழ்ப்பணியில் மிக்காரில் தொண்டர்!
செந்தமிழ் காக்கும் திண்வலிவுக் கேடயமாய்
வந்தபகை வீழ்த்தும்போர் வல்வாளாய் வாழ்ந்தவரே!
ஈடில் தமிழறிஞர்! எண்பிக்கும் ஆய்வாளர்!
கேடில் தமிழ்பொதுளும் கின்னரச்சொற் பெய்முகிலார்!
மூன்றிதழ்கள் செப்பமுற முன்முனைப்பில் நடத்தியவர்!
ஆன்ற திறஞ்சான்ற அச்சுத் தொழில்வல்லார்!

அச்சமிலா நெஞ்சர்; அடிமை விலங்கொடிக்க
உச்ச மறத்தில் ஒருமூன்று மாநாடு
வேட்பில் நடத்திய வெல்லும் வினைவல்லார்!
ஆட்டிப் படைக்கும் அடக்குமுறைக் கஞ்சாதே
முப்பத்தோ டைந்துமுறை மூடுசிறை ஏகியவர்!
எப்போதும் நாட்டுமொழி நன்மைக்கே தாமுழைத்தார்!
மெய்சொல்லும் செய்பணியும் மிக்கவொன்றி வாழ்ந்தவரே!
தொய்வில்லாத் தொண்டுதுரை மாணிக்கம் இன்னியற்பேர்!
தமிழ்த்தேசி யத்தின் தலைமைப்போ ராளி!
அமிழாச் சிறப்புபெருஞ் சித்திரனார் ஐயாவே!

அந்தநாள் முக்கழக அந்தமிழ்ப் பாநடையில்
செந்தமிழ்ச் செஞ்சுவைசேர் தீந்தமிழ்ப்பா தந்தார்!

இளைஞர் எழுச்சிக் கெழுதியவை பேராளம்!
வளஅரிமா நன்முழக்காய் மாணார் நடுங்க!

கெஞ்சுவ தில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவ தில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவ தில்லை எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவ தில்லை உலகில் எவரும் எதிர்நின்றே! 

ஆடினை ஆயிரம் பாடினை ஆயிரம்!
ஆர்ப்புற யாத்தனை விடுதலைப் பாயிரம்!
அசைத்ததா பகைவரை உன்றனின் வாயுரம்!
தமிழா! அட தமிழா நீ
அழன்றெழு! அரிமா நடையிடு! வினைமுடி!
அதுதான் செந்தமிழ்த் தாயுரம்!
எத்தனை ஆண்டுகள் புரிந்தனை போரே!
இற்றதா ஆரியப் பார்ப்பனர் வேரே!
இன்னுமுன் கட்டாரிக் குண்டடா கூரே!
தமிழா அட தமிழா நீ
இணைந்தெழு, இடியென முழங்கிடு! நூறிடு!
இலையெனில் தொலைந்ததுன் பேரே!

ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை உள்ளத்தே
அற்றைத் தமிழ்த்தாயிங் காட்சி புரியும்வரை
எற்றைக்கும் எந்நிலத்தும் எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் மண்டியிட்டால்
பெற்றவர்மேல் ஐயம் பிறப்பின்மேல் ஐயமெனச்
சற்றும் தயக்கமின்றிச் சாற்று.

தூங்கிக் கிடப்பதோ நெஞ்சம் துடிதுடித்தே
வேங்கைப் புலியே, வீறேலோ ரெம்பாவாய்!

இளைஞரை ஊக்க எத்தனைப் பாக்கள்!
இளைத்தவர் மேலெழ ஈடில்லாத் தூண்டல்!

உள்ளம் விழுந்ததா? தூக்கி நிறுத்தடா!
உடலம் சோர்ந்ததா? மேலும் வருத்தடா!
கள்ள மாந்தராம் கயவர் நடுவிலே
கடுமை உழைப்படா; மகிழ்ச்சி முடிவிலே!
ஒற்றை உழவிலும் கற்றை விளைவடா!

உலகெலாம் உரிமை முழக்கம் எழுந்தது
உணரந்திடு; விழி, எழு தமிழா!!
வெட்சிப் பூவணி, வேகப் படுநீ
வெற்றி முரசினை அதிர முழக்கு

நேற்றைய அடிக்குமேல் நெட்டடி இன்று வை
நேற்று நீ காற்றெனில் நீள்விசும்பு இன்று நீ

தமிழ்கொல்லும் தீயிதழ்கள் தாக்குறப் பாடி
இமிழ்கடல் வையத்(து) இனம்மொழி காப்பார்!

கல்லறை பிணத்தைத் தோண்டிக் கவின்பெறப் புகழ்வர்; ஆனால்
சில்லறை மொழிகள் கூறிச் செந்தமிழ் அழிப்பர்; இன்னார்
சொல்லறை பட்டுந் தேரார்! செவியறக் கொடிறு வீழ
மல்லறை வாங்கித் தேறும் மணிநாளும் விரைந்த தன்றே!

பொதுமை உணர்வுப் பொதுளலிற் பொங்கும்
இதுவரை கேளா எழிலுறும் பாக்களில்!

ஒருநலம் பெறுகையில் உலக நலம் நினை
வருநலம் யாவும் வகுத்துண்டு வாழ்வாய்!

பொதுமை உலகம் புதுக்கிடும்
புதுமை நினைவொடு புறப்படு இளைஞனே!

பொதுமை உலகம் வரல்வேண்டும் ஒரு
புதுமை விளைவு பெறல் வேண்டும்

உன்றன் குடும்பம், உன்றன் வாழ்க்கை,
உன்றன் நலன்கள், உன்றன் வளங்கள்
என்று மட்டும் நீ ஒதுங்கி
இருந்துவிடாதே! நீ
இறந்த பின்னும் உலகம் இருக்கும்
மறந்து விடாதே!
உனக்கு மட்டும் நீ உழைத்தால்
உலகம் உன்னை நினைக்குமா?
தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த
தனியன் வாழ்வை மதிக்குமா?

பொய்மை நிலைமாற்றப் புரட்சிக் குரல்கொடுக்கும்
மெய்யாய் உணர்ந்தே மிகக்கவன்ற மெய்யறிவர்!

சட்டங்கள் தீட்டினோம்; திட்டங்கள் காட்டினோம்;
சரிசமம் எனும்நிலை வாய்ந்ததா? பழஞ்
சாத்திரச் சேறும் காய்ந்ததா? பணக்
கொட்டங்கள் எத்தனை? கொள்ளைகள் எத்தனை?
கூச்சலிட்டோம் பயன் இல்லையே! ஒரு
கொடிய புரட்சிதான் எல்லையே!

சாதி ஒழிப்பிற்குச் சாட்டைச் சுழற்றிடுவார்!
ஏதிங்கே சாதியெதிர்த் தாரிவர்போல் வாழ்வினிலே!

சாதிப்புழுக்கள் நெளிந்திடுமோர் மொத்தைச்
சாணித்திரளையாய் வாழ்க்கையிலே நாம்
ஓதி யுணர்ந்திட்ட மக்களைப் போல்உல
கோருக்குரைக்கத் துடிக்கிறோம்!

பள்ளென்போம் பறையென்போம் நாட்டா ரென்போம்!
பழிதன்னை எண்ணாமல் வண்ணா ரென்போம்!
பிள்ளையென்போம் முதலியென்போம் நாய்க்கர் என்போம்!
பிழைநாணா தருந்ததியர் படையா ளென்போம்!
எள்ளல்செய் திழிக்கின்றோம்; தாழ்விக் கின்றோம்!
எண்ணுங்கள் நமைத்தமிழர் என்கின் றோமா?
குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும்
கூசுங்கள் நாணுங்கள் தமிழ்நாட் டோரே!

மாந்தநே யப்பண்பு மண்ணில் நிலைத்திடவே
பாந்தம் உரைப்பார் பரிவன்புப் பாங்கில்!

நல்லவனோ, இல்லை பொல்லாதவனோ,
நாணம் விட்டே, உனை இரக்கின்றான் மானந்
துறக்கின்றான் தம்பி
இல்லையென் னாதே! தொல்லையென்னாதே!
இருப்பதில் ஒருதுளி எடுத்துக்கொடு இது
சரி; இது தவறெனும் ஆய்வை விடு!

உரைநடையில் சொற்பொழிவில் ஓங்கறிவுத் தீயாய்
திரையில்லா தேஒளிரும் தெள்ளியநற் கொள்கை!
பெருஞ்சித்தி ரப்பெரியார் பேசினால் என்ன
அருமுரைகள் ஆற்றிடுவார் அத்தனையும் இம்மேடை
வெளிப்படுத்த ஒல்லாதே! வேட்கையுளார் அன்னார்
ஒளிவீசும் நூல்படித்தே  ஓர்ந்துகொள வேண்டுகிறேன்!
நூற்றுக் கணக்கான நூல்கள் கனிச்சாறாய்ப்
போற்றும் இலக்கியங்கள் புத்தெழுத்தில் தந்துள்ளார்!
சிங்களரின் வெங்கொடுமை தீர்த்தீழ நாடமைக்கப்
பங்காய் முயற்சி பலநூறு மேற்கொண்டார்!
நந்தமிழ நன்னலனே நாடி எழுதினரே
அந்தஎழுத் தெல்லாமே ஆட்சியரால் இப்பொழுது
பாட்டும் உரையுமெனப் பல்லாயி ரம்பக்கம்
நாட்டுடைமை ஆக்கி நலம்புரியப் பட்டுளதே!

இன்றிருந்தால் என்னஇவர் பேசிடுவார் எனபதற்கே
பொன்றாப் புகழ்ப்பாடல் ஒன்றிதனைக் கேட்பீரே!

பெற்றுவிட வேண்டும் தமிழகம்
பெற்றுவிட வேண்டும் தன்னாட்சி
பெற்றுவிட வேண்டும்!
முற்றும் நினைந்தே உரைக்கும் உரையிது!
முழுமையாய் என்றைக்கும் மாற்றம் இலாதது!   (பெற்று)

நாளுக்கு நாள்ஏழை நலிவையே கண்டான்
நாடாளும் பதவிகள் பணக்காரன் கொண்டான்
தோளுக்குச் சுமைமேலும் மிகுகின்ற போதில்
தொந்திக்கு விருந்திசை கேட்கின்றோம் காதில்!   (பெற்று)

உழைப்பவர் வாழ்க்கையில் துயர்காணல் நன்றோ?
உயர்வான திட்டங்கள் செயலாதல் என்றோ?
பிழைப்பெல்லாம் செல்வர்க்கே பேச்சென்ன பேச்சோ?
பிறநாட்டில் கையேந்தும் வாழ்வென்ன வாழ்வோ?   (பெற்று)

இராப்பகல் உழைப்பவன் சாகின்றான் நாட்டில்
ஏய்ப்பவன் துய்க்கின்றான் உயர்மாடி வீட்டில்!
வராப்பயன் வந்ததாய் முழங்குகின் றீர்கள்!
வாய்ச்சொல்லால் முழக்கத்தால் என்னகண் டீர்கள்?

வெற்று நினைப்பினில் வாழ்ந்திட லாமோ?
விலகுதல் பகையெனப் பொருள்கொள்ள லாமோ? (பெற்று)

வாய்ப்பளித் தோர்க்கென் வணக்கமும் நன்றியும்
ஏய்வுற ஏற்க இயைந்து.
-----------------------------------------------------------

செவ்வாய், 23 அக்டோபர், 2012

கழக(சங்க)த்தமிழ் – ஒரு பார்வை!


கழக(சங்க)த்தமிழ் ஒரு பார்வை!


(21-10-2012இல் விழுப்புரம் தமிழ்ச்சங்கப் பத்தாம் ஆண்டுவிழாப் பாட்டரங்கில் பாடிய பாடல்)

விழுஎன்றால் சிறப்பாகும் விழுமியஊ ராமிந்த விழுப்பு ரத்தில்
தழுவலுறும் தமிழ்ப்பற்றால் தமிழ்ச்சங்கம் தனைத்தோற்றித் தனிய ராக
ஒழுகலுற ஓரேரு உழவரென உழைப்பெடுத்து ஓயா தின்றும்
பழுதறவே விழாவெடுக்கும் பாலதண்டா யுதமென்னும் பசுமை நெஞ்சே!

அன்பார்ந்த தாய்க்குலமே! அறிஞர்களே! பெரியோரே! ஆக்கம் தேட
முன்னிறகும் இளைஞர்களே! முன்சங்கத் தமிழ்ச்சிறப்பை மொத்த மாக
இன்னேயிங் கியம்பவந்த பாவலரே! எல்லோர்க்கும் இனிது ரைத்தேன்
என்வணக்கம்! அறிஞரேற்றும் இனியசங்கத் தமிழென்றால் என்ன காண்போம்!

ஏசுவுக்கும் முற்காலத் திருந்ததமிழ் இலக்கியத்துள் இன்று மிஞ்சும்
மாசில்எட் டுத்தொகையும் மதிப்புறுபத் துப்பாட்டும் மட்டும் தானே!
வீசுபுகழ் நூல்எட்டுச் சேர்ந்ததெட்டுத் தொகையெனவே விளங்கும் பேரால்!
பாசுதமிழ் நெடும்பாடல் பத்துச்சேர்த் தாரதன்பேர் பத்துப்பாட்டே!

மேற்சொன்ன பதினெட்டே மேற்கணக்காம் மேலுமதே மேன்மை மிக்க
மேற்குவட்டு விளக்கொளியாய் மின்னுசங்கத் தமிழாகும்! மிகவி ளங்க
ஆற்றலுற கூறுதமிழ் நாகரிக ஆவணமே! ஆழம் நுட்பம்
சாற்றுமுறை இனிமையுடன் பொருளமைதி வடிவுஉத்தி தலைமை என்பார்!

மாந்தயினத் தெல்லாரின் மனமீர்க்கும் அழகுணர்ச்சி மகிழ்ச்சிப் பூங்கா!
காந்தமெனக் கவர்கின்ற கலைநுட்பக் கருவூலம் கற்பார் தாமும்
சாந்துணையும் எண்ணஎண்ணச் சலிக்காமல் களிப்பூட்டும் சாற ஊற்று!
ஏந்துமிகும் அயல்நாட்டார் எண்ணுகிலார் இதனாய்வை எளிதில் நீங்க!

ஒப்பற்ற இலக்கணமும் உயர்வான இலக்கியமும் உலகோர் போற்றும்
துப்புறவு தோய்தூய பொருளிலக்க ணச்சிறப்பைச் சொல்லற் காமோ?
ஒப்புறவில் பொதுமையிலே உயர்சங்கத் தமிழ்ப்புகழே ஓங்கி நிற்கும்!
செப்பமென இயற்பெயரைத் தவிர்த்துபொதுப் பெயருரைக்கும் சீர்மை என்னே!

இத்தமிழ இனந்தன்னின் இருப்பிதுவே அடையாளம் என்றும் சொல்லும்!
முத்தமிழின் பெட்டகமாய் மொழிச்சிறப்பை காதலினை மொழியா நிற்கும்!
இத்தரையில் வாழ்வியலை நேராக மக்களுக்கே எடுத்துக்கூறும்!
அத்துடனா? போர்வீரம் கொடைமானம் ஆட்சிதிறன் அறைதல் காண்பீர்!

இன்சங்கத் தமிழ்ப்பாக்கள் இரண்டா யிரத்துமுன்னூற் றெண்பத் தொன்றாம்!
நன்கவற்றைப் பாடியவர் நானூற்று எழுபத்து மூவ ராவர்!
அன்னவருள் முப்பதுபேர் அரும்பெண்டிர்! முப்பத்தோர் அரசராவர்!
இன்னவகை குமுகத்துப் பலபடியார் புலவர்களாய் இருந்தா ரென்க!

பழம்போலும் சங்கப்பா படியென்பார் வ.சுப.மா. படிப்பார் தம்மின்
கிழம்போகும் கீழ்மையும்போம் என்பாரே! சிறப்புகளின் கெழுமல் சுட்டிக் 
கழிநுட்ப ஆய்வாளர் கமில்சுலபில் சியார்ச்சுகார்ட்டுங் காட்டு வாரே!
முழுமையுற ஆராய்ந்தே தக்ககசி நோம்சோம்கி மொழிகின் றாரே!

(வேறு யாப்பு)

செப்பிய எல்லாச் சிறப்பையும் காட்டத்
துப்புறைப் பாடல் தொகைமிக உண்டு!
காலத் தருமை கருதியொன் றிரண்டு
ஏலத் தந்தே ஏற்றம் காட்டுவம்!

அன்புதோய் காதலை அகத்திணை நூல்கள்
இன்புறை எழிலில் இனிமையில் இயம்ப
மறமும் கொடையும் மற்றுமெய் யறிவின்
திறமும் பாடும் புறத்திணை நூலே!

உலகத் திற்கே ஒப்பிலாக் காதல்
இலக்கணம் இலங்கிட இயம்பிய பாடல்
யாயும் ஞாயும் யாரா கியரோ...

காதல் எப்படிப் பட்டதாம்? காண்க:
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே

காதற் பிரிவில் கலங்குரை எப்படி?
முட்டு வேன்கொல்? தாக்கு வேன்கொல்?
ஓரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்?...

இன்றும் அருகிருந்து இயம்புதல் போன்றே
என்றும் விளங்கும் எழிற்பா டல்கள்:
அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே...!

நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்தநம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே!

இயற்கையை விளக்கும் இனிய பாக்கள்
வியப்பில் ஆழ்த்தும் நாடகக் காட்சிகள்!
ஆடமைக் குயின்ற... என்று தொடங்கும்
பாடல் காட்டும் ஆடரங்கு அழகு!

அற்றை உடைச்சிறப்ப பறிந்திடச் சான்று:
கொட்டை கரைய பட்டுடை

பாம்புரி யன்ன கலிங்கம்

ஆவி யன்ன அவிர்நூற் கலிங்கம்

அரவுரியன்ன அறுவை

வணிகத் தொன்மை கணித்திடச் சான்று:
...கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி...

வணிகம் நடந்த வகைக்கிது சான்று:
...நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நல்நெஞ்சினோர்
வடுஅஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்பநாடிக்
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகெடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும் தொல்கொண்டி...

மறவுரம் விளக்கும் மாட்சியைக் காண்க:
களம்புகல் ஓம்புமின் தெவ்வீர்! போர்எதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்டேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே

குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளில் தப்பார்...

மங்கையர் மறவுர மாண்புக்குச் சான்று:
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி யென்மகன்
யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே!

நற்பண் புக்கோர் நற்றிணைப் பாடல்:
விளையாடு ஆயமொடு வெண்மனல் அழுத்தி
மறந்தனம் துறந்த கான் முளை அகைய...

அறிவியல் அறிவு அறிந்திடச் சான்று:
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
நாள்மீன் விராய கோள்மீன் போல...

செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலையிய காயமும்...

கொடைப் பண்புரைக்கக் குவியும் சான்றுகள்:
உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே...!

இன்று செலினும் தருமே சிறுவரை
நின்று செலினும் தருமே பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலுஞ் செலினும் பொய்யலனாகி...

ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன்...
                             ...காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போல
கையகத் ததுவே பொய்யா காதே!

பொதுப் பண்பிற்கும் பொதுச் சார்பிற்கும்
இதுசான் றென்ன எத்தனை வரிகள்!
யாதும் ஊரே யாவரும் கேளிர்

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்

இன்னாது அம்மஇவ் வுலகம்:
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே

நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்

மெய்யியல் விளக்கம் மிளிரும் வரிகள்:
ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப...

தீதும் நன்றும் பிறர்தர வாரா

சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே

பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

எடுத்தெடுத் துரைப்பின் எல்லா வரிகளும்
அடுத்தடுத் தோர்சிறப் அறிவிக் கும்மே! 
அவற்றை எல்லாம் அணிபெறப் பாட
இவண் வருகின்றனர் ஏற்ற பாவலர்
இத்துடன் என்பா முடித்தேன் அவைக்கு
மெத்த நன்றி நன்றியென் றுரைத்தே!
-------------------------------------------------


வியாழன், 11 அக்டோபர், 2012

நாகசாமியாரின் நயன்கெட்ட நூல்!


நாகசாமியாரின் நயன்கெட்ட நூல்!
                                                                                                    
மிழ்நாட்டரசின் தொல்லியல்துறையில் இயக்குநராகப் பணியாற்றிய முனைவர் இரா.நாகசாமி எழுதியுள்ள “Mirror of Tamil and Sanskrit” என்கின்ற ஆங்கில நூல் இவ்வாண்டின் (2012) தொடக்கத்தில் தமிழ்க் கலைக் கழகப் பதிப்பாக வெளிவந்துள்ளது. அந்நூலைப் பற்றிய அறிமுகம் தி இந்து நாளிதழிலும் வந்தது. அந்நூலின் உள்ளடக்கக் கருத்துக்கள் பற்றி நூலாசிரியர் முன்னுரைப் பகுதியில் நாகசாமி எழுதிள்ள பகுதிகளின் தமிழாக்கத்தைக் கீழே காண்க:
     
தமிழ், வேத சமற்கிருத மரபுகளை ஏற்று குறிப்பாக உருவாக்க நிலையில் பிராமணர்கள் உதவியுடன் செம்மொழி நிலையை அடைந்துள்ளது என்று பழந்தமிழ் இலக்கியங்களையும், தொன்மையான தமிழ் இலக்கணத்தையும் விரிவாகப் பார்த்து, முதன்முறையாக இந்நூல் நிலைநாட்டுகிறது. தமிழ், அதன் வரலாறு தெரிந்த காலந்தொட்டே சமற்கிருத்தினின்று கடன் பெற்றுக் கொண்டதனால் விரைவாக முன்னேற்றமடைந்தது என்று இந்நூல் தெளிவாக விளக்குகிறது.
பண்டைத் தமிழர்கள் வழிபட்ட கடவுள்கள் சிவன், விட்டுணு, கிருட்டிணன், பலராமன், இராமன், குமரன்(முருகன்), இந்திரன் துர்க்கை, காளியும் மற்றையோரும் வேதக்கடவுள்களாக உள்ளமை தெளிவானதாகும்.
அக் குமுகாயம் சாதி அடிப்படையில் பிராமணர், சத்திரியர், வய்சியர், சூத்திரர் மற்றும் கலப்புச்சாதியினர் என்று பிளவுபட்டிருந்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு பரப்பிலும் வேத மத்ததின் பயன்நிறைவைப் பெரும்பாலான தமிழர்கள் நம்பினர். வேதச் செழுமையில் கூறியுள்ள பழக்கவழக்கங்களால் அவர்கள் வழிநடத்தப்பட்டனர். குடும்ப வாழ்க்கையில் வேத வேள்விகளை நடத்தினர். வேதப் பிராமணர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட முறைகளை அவர்கள் பின்பற்றினர்.
சேர சோழ பாண்டியர் வேளிர்தலைவர் போலும் எல்லா மன்னர்களும் மேற்குடி என்று அழைக்கப்பட்ட ஒரு பிரிவு வேளாளர் உட்பட பெரும்பான்மைப் பொதுமக்களும் வேதம் கற்று அவற்றிற் கூறியவாறு வழிபாடு நடத்தினர்.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் தமிழரின் நான்கு வகை வாழ்க்கைப் பிரிவு பரத நாட்டிய நூலில் காக்சியாப் பிரிவு எனக் குறிக்கப்பட்டுள்ளது.
வேத முனிவர்களான யாக்கினவால்கியர், வசிட்டர், நாரதர், மனு, பிரகத்பதி, பராசரர் மற்றும் பிறர் தொகுத்த தரும நூல் நெறிமுறைகளின் அடிப்படையில் நயனாள் முறை இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட படிநிகராளிகளைக் கொண்ட ஊர் அவையான வேத சபைகளின்படி குடிமை ஆட்சி அமைக்கப்பட்டது.
தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் யாப்பியல் சமற்கிருத மூலத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ் பேச்சொலியியல், உவமம் போன்ற அணிகள் முதலியவை எடுத்துக்காட்டாகும். மேலும், படிக்கக்கூடிய பழமையான எழுத்து பிராமி பிராமணர்களால் அசோகர் காலத்தில் சரசுவதி பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்டது; அவர்கள் பெயரால் பிராமி என்று அழைக்கப்பட்டது.........
இறந்தவர்களை அடக்கஞ் செய்தல், இறுதிச் சடங்குகள், நினைவுக்கல் நடுதல், முதலியன சமற்கிருத ஆகம இலக்கியங்களில் வரையறுத்தவாறு இருந்தன.   பழந்தமிழ்நாட்டுக் கோயில் வழிபாடு ஆகமச் சடங்குப் பொருளுரைகளைப் பின்பற்றியது. இசை நாட்டியம் இலக்கியங்களின் அழகியல் பரதநாட்டிய நூலை அடிப்படையாகக் கொண்டது; சுவைத்துணர்தலும் அவ்வாறே இருந்தது.
தொல்காப்பிய இலக்கணம் வேதமரபையும் பரத நாட்டிய மரபையும் வேராகக்கொண்டுள்ளது. செய்யுளின் அகம் புறம் பிரிவு நாட்டிய மரபு அகச்சுட்டு புறச்சுட்டு என்னும் இருவகை நாட்டியங்கள் ஆகும்.
இந்தியாவின் மற்றெல்லாப் பகுதிகளும் அவற்றிற்குரிய வட்டார மொழிகளைக் கொண்டிருந்ததைப் போன்றே தமிழும்கூட அதற்குரிய வட்டார மொழியைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. உள்வரும் கருத்துக்களை விரைந்து தன்னியலாக்கக்கூடிய முறபோக்கான வட்டார மொழியாக இருந்து, தமிழ் அழகிய செம்மொழியாக மலர்ந்ததே வேறுபாடாகும்.
காலகவியல் அறிவியலில் தமிழர்கள் வேதமரபைத் தமதாக ஏற்றுக் கொண்டதைக் காட்ட மறுக்கவியலாச் சான்றுகள் உள்ளன.....
இவ்வாறு, மொழிப்புலம், இலக்கணம், யாப்பு, இலக்கியம், கலை, கட்டடக்கலை, இசை, நாட்டியம், அரசாட்சி, நயனாட்சி, குமுக நடைமுறைகள், வானியல், மெய்மவியல், சமயத்திலும் பழந்தமிழர்கள் வேதமரபைப் பின்பற்றினர்; பெருமளவில் வடநாட்டு முறைகளினால் தாக்குரவுற்றனர்.
தொல்காப்பியத்தையும், கழக இலக்கியங்களையும் புறக்கணித்து விலக்கக் கூடியவராலேயே இக்கொள்கையை மறுக்க முடியும். தமிழ் வரலாற்றின் எக்காலத்திலும், தமிழ்க்கல்வியை அடக்கி ஒடுக்கும் எந்த ஒரு முயற்சியும் இடம்பெறவில்லை. இந்நூல், உண்மையில் தமிழ் சமற்கிருத ஊடாட்டத்தை முறையான வரலாற்றில், காலவரிசை முறையில் வைக்கும் புதுவழிகண்டு விளக்கிக் காட்டும் இயலுருக் காட்சியாகும்.........
     
      நாகசாமியாரின் இந்நூலில் கூறப்பட்டுள்ள உண்மைக்கு மாறான கருத்துக்கள் முன்னரே தக்க சான்றுகளுடன் வீழ்த்தப்பட்டவையே. மீண்டும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு பிற நாட்டினரைக் குழப்பும்  முயற்சியை நாம் மீண்டும் வீழ்த்தியாக வேண்டியிருக்கின்றது. பேராசிரியர் சியார்ச்சு கார்ட்டும் இந்நூற் கருத்துக்களை மறுத்திருக்கிறார்.
     
      27-7-2012இல் சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டமொன்றில் முன்னாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பொற்கோ, ம.இராசேந்திரன், இளங்கோவும் முனைவர்கள் மறைமலை இலக்குவனார், இரா.மதிவாணன், பூங்குன்றன், அரசேந்திரன் போன்றோரும் தொல்பொருள் ஆய்வுத்துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன், கோவைஞானி, பெ.மணியரசன் முதலான பலரும் கலந்து கொண்டு நாகசாமியாரின் நூலை மறுத்தும் கண்டித்தும் பேசியிருக்கின்றனர்.        
     
      21-8-2012இல் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழறிஞர் தமிழண்ணல் தக்க விளக்கங்கள் கூறி நாகசாமியார் நூலுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றார். அவர் உரையின் சில பகுதிகளைக் கீழே காண்க:
     
      உலகிற்கே உழவைக் கற்பித்த தமிழருக்கு உழவு தெரியாது, வங்காளத்தாரே உழவு கற்றுக்கொடுத்தார்கள் என்கிறார் நாகசாமி. தொல்காப்பியம் இலக்கணநூல் இல்லை; நடனநூல் என்கிறார். சிலப்பதிகாரத்தைப் பொய்யாகப் புனைந்த நூல் என எட்டாம் இயலில் கூறிவிட்டு அவரே பத்தொன்பதாம் இயலில் வரலாற்றுச் சான்றுக்குக் குறிப்பிட்டுள்ளார். அவர் கருத்தில் அவரே முரண்பட்டுவிட்டு நூலை சான்றுகளுடன் மறுக்க யாரேனும் உண்டா? என்று தமிழர்களைப் பார்த்து அறைகூவுகிறார்.
      நாகசாமி சமற்கிருதமும் பரதமுனிவரின் நடனநூல் மட்டுமே படித்துள்ளார். வேறு இலக்கியங்களைப் படிக்கவில்லை. தொல்காப்பியத்தையும் சரியாகப் படிக்காமல் நுனிப்புல் மேய்ந்துள்ளார். தொல்காப்பியத்தில் 100 கொள்கைகள் உண்டு. அகம் புறம் என்பதே வடசொல் என்கிறார். இப்படி முழு முட்டாள்தனமாக எழுதிவிட்டு முதன் முறையாக நானே எழுதியுள்ளேன் என்று மார் தட்டுகிறார்.
      4ஆம் நூற்றாண்டு காலத்தில் சமற்கிருதத்தில் அணிநலன்கள் இல்லை. 7ஆம் நூற்றாண்டில்தான் சமற்கிருதத்தில் அணிநலன்கள் வந்தன. உவமை என்ற தமிழ்ச்சொல்லைத் திருடி சமற்கிருதத்தில் உவமா என்றனர். தீ என்னும் தமிழ்ச்சொல்லைத் திருடி தீவகம் என்றனர். இயைபுதான் யமகம் என்று சொல்லாமல் யமகம் இயைபு ஆனது என்கிறார்.  
     
      29-9-2012இல் எழுத்தாளர் துரை.இரவிக்குமாரின் மணற்கேணி அமைப்பு புதுச்சேரியில் நடத்திய தமிழும் சமற்கிருதமும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கில் கலந்து கொண்டவர்களில் நடன.காசிநாதன், அ.மணவாளன், சு.இராசவேலு, மாதையன் போன்றோர் நாகசாமியாரின் நூலுக்கு மறுப்பும் கண்டனமும் தெரிவித்தனர். நடன.காசிநாதனாரின் உரையின் சில பகுதிகளைக் கீழே காண்க:
     
பொருந்தல் அகழாய்வு தொன்மைத் தமிழ் எழுத்துக்கள் நிறைமுடுக்க நிரலளவி (ஏ.எம்.எசு) காலக்கணிப்பு கி.மு.490, ஆதிச்சநல்லூர் முதுமக்கள்தாழி தொல்தமிழ் எழுத்துக்கள் கி.மு.5ஆம் நூற்றாண்டுக்கும் முந்தியது. அனுராதபுரம் பானையோட்டுப் பொறிப்பு கி.மு.600-370, மாங்குளம் பாறைக் கல்வெட்டின் காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டு, பட்டிப்புரோலு கற்சிமிழ்க் கல்வெட்டுக் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டு, புலிமான் கோம்பை தொல்தமிழ்க் கல்வெட்டுக் காலம் கிமு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பு. அழகன்குளம் பானையோட்டுப் பொறிப்பு இரா.நாகசாமி கருத்து கி.மு.360 ஆகும்.
      முனைவர் கே.வி.இரமேசு கருத்துப்படி, தமிலி (தமிழ்) எழுத்து அசோகன் காலத்துக்கு முன்பாகவே தமிழகத்தில் அழியக்கூடிய பனையோலையிலும் மற்றுமிருந்த பொருட்கள் மீதும் எழுதப்பெற்று வந்தது. இவ்வெழுத்து முதலில் தமிழ்-பொலிந்தி எழுத்தாக இலங்கையில் பயன்படுத்தப்பட்டுப் பின்பு தமிழ் அங்கிருந்து பட்டிப்புரோலு வழியாக மகாசுதான்(வங்காளம்), சோகவுரா, பிப்பிரவா (கிழக்கு உ.பி.), பட்டிலி (இராசசுத்தான்) ஆகிய இடங்களில் பரவி இறுதியாகக் கி.மு. 3ஆம் நூற்றாண்டளவில் மேலும் சில புதிய வளர்ச்சி ஏற்பட்டு அசோகனால் பயன்படுத்தப்பட்டது. நாகசாமி தாம் ஒரு தொல்லியலறிஞர் என்று புலப்படுத்திக் கொள்வதைவிட சமற்கிருதத்தின் முனைப்பான பற்றாளர் என்று காட்டிக் கொள்வதிலேயே பெரும் ஆர்வம் கொண்டுள்ளார்.
     
இங்கொன்றும் அங்கொன்றுமாக இரண்டு மூன்று கூட்டங்களில் மறுப்பு அறிவித்தல் போதுமானதன்று. பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், அறிஞர் அண்ணா, தந்தைபெரியார் இல்லாத இக்காலத்தில் நாகசாமியாரின் உண்மைக்கு மாறான நயன் கெட்ட கருத்துக்களை வரிக்குவரி மறுத்து ஆங்கில நூல் இன்னும் வராதது தமிழர் நாணத்தகு நிலையாகும்.
தன்மானச்சூடும், தமிழிலக்கிய அறிவும், தொல்லியல் ஆய்வறிவும், உண்மையை வெளிப்படுத்தும் நேர்மை உள்ளமும் கொண்ட தமிழாய்வறிஞர் இனியும் காலந்தாழ்த்தாது இவ்வினையில் ஈடுபடுமாறு 'நற்றமிழ்' பணிவுடன் கேட்டுக்கொள்கின்றது. மற்றவர்கள், ஆரியப் புரட்டை விளக்கிப் பரப்புரை செய்து விழிப்பேற்படுத்த முயல்வோம்.

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.    
(குறிப்பு :'நற்றமிழ்'  இதழில் எழுதியது - த.ந.)                       
------------------------------------------------------------------------

புதன், 26 செப்டம்பர், 2012

நன்றி!


எம் மகனார் திருமணத்திற்கு
நேரில் வந்திருந்தும்,
மடல்கள் வழியாகவும்,
அஞ்சல் வழியாகவும்,  
இதழ்கள் வழியாகவும்
மணமக்களை வாழ்த்திய
மதிப்புசான்ற அன்புள்ளங்களுக்கு
எம் நெஞ்சம் நெகிழ
நன்றியைப்
பணிவன்புடன் உரித்தாக்குகின்றோம்!
நன்றி! நன்றி! நன்றி! 

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

எம் மகன் கதிரவனின் திருமண அழைப்பு


எம் மகன் கதிரவன் அவர்களின் திருமண அழைப்பை மேலே காண்கிறீர்கள்.  இயலுவோர் வந்திருந்தும் இயலா நிலையினர் அங்கங்கிருந்தும்  மணமக்களை வாழ்த்திடுமாறு அன்போடும் பணிவோடும் வேண்டுகிறோம்.    - தங்களன்புள்ள,  தமிழநம்பி, மலர்க்கொடி.                                                                                                                      

செவ்வாய், 1 மே, 2012

கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!


கிரந்தக் கலப்பு: கணிப்பொறிக் காலத்தில் தமிழை அழித்தொழிக்கும் முயற்சி!

  (பழைய கட்டுரை இடம் மாறி வந்துள்ளது, பொறுத்தாற்றுக)               
               
                  

1970-ஆம் ஆண்டில் கணிப்பொறி பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. 1980-ஆம் ஆண்டுக்காலப் பகுதியிலிருந்தே கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால், நம் தமிழறிஞர்கள், தமிழ்ப் பேராசிரியர்களில் மிகச் சிலரே கணிப்பொறியைப் பயன்படுத்துகின்றனர். தமிழாசிரியப் பெருமக்களோ, (மிகச் சிறுபான்மையர் தவிர, மற்றெல்லாரும்) பாடத்திட்டத்தில் வந்துள்ள பாடங்களைத்தவிர வேறெதையும் பார்க்கவும் விருப்ப மில்லாதவர்களே! இந்நிலையில், தமிழ்ப்பகைவர் மிக விழிப்பாகச் செயற்பட்டு, கணிப்பொறிப் பயன்பாட்டைக் கொண்டே தமிழை அழித்தொழிக்கும் முயற்சியில் திறக்கரவுடன் முனைந்துள்ளனர். பெரும்பான்மைத் தமிழர்கள் என்ன நடக்கிறதென்றே அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.

அச்சு நால்கள் எதிர்காலத்தில் எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று கூற இயலாது. எல்லா ஆவணங்களும் கணிப்பொறி வழியே எழுதப்படுகின்ற காலம் வந்துவிட்டது. எல்லா நூல்களுமே கணிப்பொறி வழி எழுதிக் காக்கப்படுகின்றன. இந்நிலையில் கணிப்பொறியையே புறக்கணிக்க நினைப்பது பேதைமை. காலங்காலமாகத் தமிழ்அழிப்பு வினையில் ஈடுபட்டு வருகின்றவர்கள், இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கிரந்தக் கலப்பின்வழி, தமிழ்ச் சிதைப்புக்கும் அழிப்புக்கும் மிகச் சூழ்ச்சியாக முனைந்துள்ளனர்.

இக் கரவுவினை பற்றித் தமிழர்களிடத்தே எந்த விழிப்பும் இல்லாத நிலை இரங்கத் தக்கதாகும்! தமிழர்களிடம் இதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இன்றைய இன்றியமையாக் கடமையாகும். இப்பொழுது எழுந்துள்ள இச் சிக்கலை நுட்பமாக அறிந்துகொள்ளாவிட்டாலும் தாய்த்தமிழைக் காக்கும் நோக்கில் எச்சரிக்கை உணர்வுடன் செய்திகளைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டிய நிலையில் தமிழர்கள் இருக்கின்றனர். 

இதைப்பற்றிப் புரிந்துகொள்ள கிரந்தம் பற்றியும், கணிப்பொறியில் இப்போதைய தமிழ்ப் பயன்பாட்டு நிலை பற்றியும், ஒருங்குகுறி, ஒருங்குகுறி கூட்டிணையம், போன்றவை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

கிரந்தம்: கிரந்தம் ஒரு எழுத்துமுறை; மொழியன்று. மொழியும் எழுத்துமுறையும் வேறுவேறானவை. தமிழர் உருவாக்கிய இக் கிரந்த எழுத்துக்கள் சங்கதமொழி எழுதவும், சமற்கிருதமொழி எழுத்தமைத்துக் கொள்ளவும் பயன்பட்டன. அவற்றோடு, இக் கிரந்த எழுத்துக்கள், சமற்கிருதச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதி மணிப்பவள நடையினால் தமிழுக்குக் கேடுண்டாக்கவும் காரணமாயின. மேலும், தமிழும் வடமொழியும் கலந்த பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழ்க் கணிப்பொறி: கணிப்பொறியைத் தமிழ்ப் பயன்பாட்டுக்குக் கொணர்ந்த தொடக்கக் காலத்தில், அவரவரும் ஒரு குறியீட்டு முறையையும், எழுத்துரு (வார்ப்புரு)வையும் பயன்படுத்தினர். இப்படிச் செய்ததால், ஒருவர் எழுதியதை இன்னொருவர் பயன்படுத்த இயலாத நிலை  இருந்துவந்தது. அந்தக் குறிப்பிட்ட எழுத்துருவே, இன்னொருவரின் கணிப்பொறியிலும் இருக்க வேண்டும் என்ற நிலையே கணிப்பொறிப் பயன்பாட்டில் இருந்துவந்தது. இணையம் வளர்ச்சிபெற்ற நிலையில் தமிழ்ப் பயன்பாட்டிற்கு இது பெரும் சிக்கலாகவும் தடையாகவும் இருந்துவந்தது. 
ஒருங்குகுறி (Unicode): மேற்கூறிய சிக்கலும் தடையும் இன்றி அனைத்துக் கணிப்பொறியிலும் தமிழைப் பயன்படுத்தற்கேற்ற  ஒரு வசதி தேவைப்பட்டது. இந்நிலையில், உலகின் பல்வேறு மொழிகளின் எழுத்துக்களுக்கும் எண்களைக் கொடுத்து அவ் வெழுத்துக்களை ஒருங்குசேர்த்து ஒரே ஆவணத்தில் பயன்படுத்த இயலும் வகையில் அமைந்த ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) முறை இச்சிக்கலுக்குத் தீர்வாக அமைந்தது.
இக்கால், பல்வேறு கணிப்பொறி நிறுவனங்களும் எண்மமுறைக் கருவி நிறுவனங்களும் ஒருங்குகுறியை ஏற்றுக்கொண்டு தம் உருவாக்கங்களில் இக்குறியீட்டு முறையைச் சேர்த்துக்கொண்டுள்ளன. புதியதாகத் தோன்றும் பல உருவாக்க நெறிகளும் ஒருங்குகுறியை அடிப்படையாகக் கொள்கின்றன.
ஒருங்குகுறிக் கூட்டிணையம் (Unicode consortium): உலகிலுள்ள எல்லா மொழிகளின் எழுத்துக்களையும் எவ்வகைத் தடையுமின்றி எல்லாரும் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்யும் அமைப்பாக ஒழுங்குகுறி கூட்டிணையம் உள்ளது. இவ்வமைப்பில் பல நாடுகளும் தனியாள்களும்கூட உறுப்பினராக உள்ளனர். தமிழ்க் கணிப்பொறிக்கான ஒருங்குகுறி குறித்து உரியவண்ணம் அக்கறை கொள்ள வேண்டிய தமிழ்நாட்டரசு தன் உறுப்பாண்மையை உறுதி செய்து கொள்ளாத நிலை வியப்பும் ஏமாற்றமும் அளிக்கக் கூடியதாகும்.
இன்றைய சிக்கல் : இந்திய அரசின் கணிப்பொறிநுட்பத்துறை ஒருங்குகுறி கூட்டிணையத்தில் ஒப்போலை பெற்ற உறுப்பினராக உள்ளது. இத்துறை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற 22மொழிகளையும் இக் கூட்டிணையத்தின் அடைவுப்பட்டியலில் இடம்பெறச் செய்தது; அத்துடன் வழக்கிழந்த வேதசமற்கிருத எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களும் அப்பட்டியலில் இடம்பெறவேண்டுமெனக் கருதியது.
இதன் தொடர்பாக, 6.9.2010-இல் 14 பேர் கொண்ட ஒரு குழுவைக் கூட்டியது. இக்குழுவில் தமிழறிஞர்ளோ, கணிப்பொறி வல்லுநரோ, ஒருங்குகுறித் தெளிவறிவினரோ, தொல்லியல் அறிஞர்களோ இல்லை. அந்தப் 14 பேரில், தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் ஆர்.கிருட்டினமூர்த்தி சாத்திரி; இன்னொருவர் காஞ்சி சங்கரமட ரமணசர்மா ஆவர். அக்குழு எடுத்த முடிவினைப் பரிந்துரைத்து இந்திய அரசுத்துறை ஒருங்குகுறி கூட்டிணையத்திற்கு அனுப்பியது.
இறுதியாக, இந்திய அரசு, 68 குறியீடுகள் கொண்ட கிரந்தத்தோடு எ, ஒ, ழ, ற, ன ஆகிய தமிழ்எழுத்துக்கள் உள்ளிட்ட தமிழின் 7 குறியீடுகளையும் இணைத்து இடம்பெறும் குறியேற்றத்தை ஒருங்குகுறி கூட்டிணையத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.
தமிழ் எழுத்துக் குறியீடுகளோடு கிரந்த எழுத்துக் குறியீடுகள் கலந்தாலும் கிரந்த எழுத்துக் குறியீடுகளோடு  தமிழ்எழுத்துக் குறியீடுகள் கலந்தாலும், விளைவு தமிழ்மொழிக்குப் பெருங்கேடாகவே இருக்கும். தமிழ் நூல்களும் இதழ்களும் சிறிதளவு தமிழ் கலந்த கிரந்த எழுத்துக்களாலேயே எழுதப்படும். அரிசியில் கல் கலந்ததைப் போலன்றிக் கல்லில் அரிசி கலந்த கதையாகும்.
சமற்கிருத மொழி ஒலிவடிவங்களுக்கு உருவாக்கப்பட்ட வரிவடிவங்களான கிரந்த எழுத்துக்களைக் கொண்டே, அக் கிரந்த எழுத்துக்களை உருவாக்கிய தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ் வரிவடிவங்கள் புறக்கணிப்புறுமாறும் பயன்பாடின்றிச் செயலிழந்து வழக்கற்றுப் போகுமாறும் செய்யப்படும்.
இவற்றையெல்லாம் எண்ணிக் கவன்ற தமிழறிஞர்கள் - குறிப்பாக இலக்குவனார் மறைமலை, இலக்குவனார் திருவள்ளுவன் போன்றோர் - எடுத்த முயற்சியின் பயனாகத் தமிழ்நாட்டரசு, அறிஞர் கருத்தறிய 3.11.2010 அன்று தமிழ்ப் பல்கலைக்கழத்தின் மூலம் 17 பேர் கலந்துகொண்ட கூட்டத்தை நடத்தியது. அவர்கள் ஒரு மனத்தோடு எடுத்த தீர்மானத்தின்படி, தமிழக முதல்வர் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியதன் விளைவாக, ஒருங்குகுறி கூட்டிணையம், 6.11.2010-ஆம் நாள் கூட்டத்தில் கிரந்த எழுத்தோடு தமிழ்க் குறியீடுகளைக் கலப்பது தொடர்பாகத் தீர்மானிக்க இருந்ததை 26.2.2011-ஆம் நாள் கூட்டத்திற்குத் தள்ளி வைத்துள்ளது.

தினமணியின் குறை : இந்தச் சிக்கலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல்,ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ என்னும் ஐந்து கிரந்த எழுத்துக்களைச் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே தமிழ்நாட்டரசு இந்திய அரசின் கணிப்பொறிநுட்பத்துறைக்கு மடல் எழுதியுள்ளதாகக் குறைபட்டுக் கொண்டு எழுதிய தினமணி நாளிதழ், அதன் 9.11.2010-ஆம் நாள் ஆசிரியருரையில் தன் வெளிறை வெளிப்படுத்திக் கொண்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முதலிய பலரும் உணர்த்திய பின்னரும்கூட தினமணி தன் தவற்றுக்கு வருந்தவில்லை.
கலப்புக்கு முனையக் காரணம் : தமிழின் தூய்மையைக் கெடுத்து, வளங்குன்றச் செய்து, சிதைத்து, காலப்போக்கில் தமிழை அழித்துவிடவேண்டு மென்ற எண்ணமே, கிரந்த எழுத்துக் குறியீடுகளோடு தமிழ் எழுத்துக் குறியீடுகளைக் கலக்கப் பரிந்துரைத்ததற்குக் காரணமாக இருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறதன்றோ?          
கிரந்தத்தை இந்திய மொழிகள் அனைத்துக்குமான எழுத்தாக ஆக்கி ஒரே வரிவடிவத்தைக் கொண்டு பல இந்திய மொழிகளிலும் மின்னஞ்சல், இணைய இதழ்கள் இடம்பெறச் செய்யலாமென்ற எண்ணமும் காரணமாகக்கூறப்படுகிறது. உலக மொழிகள் அனைத்திற்குமான ஒரே எழுத்துவடிவம் (International phonetic alphabet - IPA) உருவாகிப் பயன்பாட்டில் உள்ள நிலையில், இக் காரணம், பெரிய பூனையும் குட்டிப் பூனையும் போகவர கதவில் பெரிய துளையும் சிறிய துளையுமாக இரண்டு துளைகள் போட்ட கதையை நினைவு படுத்துவதாக உள்ளது.
கலப்பால் விளையும் கேடும் காப்புணர்வின் தேவையும் ஏற்கெனவே, தமிழரின் விழிப்பின்மையால், சமற்கிருத ஒலிப்புண்டாக்கவெனக் காரணம் கூறி, கிரந்த எழுத்துக்கள் ஸ, ஷ, ஜ, ஹ - வுடன் கூட்டெழுத்துக்கள் க்ஷ, ஸ்ரீ - யும் தமிழிற் கலக்கப்பட்டதால்  நேர்ந்திருக்கும் சிதைவினின்றும் தமிழை மீட்கவே, மறைமலையடிகள் தனித்தமிழ் இயக்கம் தோற்றித் தமிழ் மீட்சிக்குப் பாடுபட்டார். மொழிஞாயிறு பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பேராசிரியர் இலக்குவனார், அறிஞர் வ.சுப.மா., பாவேந்தர், அறிஞர் அண்ணா போன்றோரின் இடைவிடாத முயற்சியால் தமிழ் மென்மேலும் சிதைவதுதடுத்தாற்றப் பெற்று ஒரளவு மீட்சி கண்டுள்ளது.
இப்போது, 68 குறியீடுகள் கொண்ட கிரந்தக் கொத்தில் 7 தமிழ்க் குறியீடுகள் கலந்தால், தமிழ் கிரந்தமொழியாக்கப்படும் உலகின் மூத்த மொழியின் வரிவடிவம் கிரந்தமாகிப் போகும். இதனால், பிற்காலத்தில் சமற்கிருதத்திலிருந்து அல்லது சங்கத மொழியிலிருதுதான் தமிழ் பிறந்தது என்றும் சிலர் நிறுவத் துணிந்தாலும் வியப்பதற்கில்லை.

இக் கிரந்த எழுத்துக்கள் தமிழிற் கலப்பதைத் தடுக்கவே, ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே என்ற நூற்பாவின் வழி காப்புச் செய்ய முனைந்தது. நன்னூல் பவணந்தியாரும் தற்பவம் தற்சமம் கூறி இரண்டின் வழியும் கிரந்த எழுத்து வராதிருக்கத் தடையிட்டார். தொல்காப்பியத்திலும், கழக இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகையிலும், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், சீறாப்புராணம், வீரமாமுனிவரின் எழுத்தோவியங்கள், நாலாயிரப் பனுவல்கள் முதலானவற்றிலும் கிரந்த எழுத்துக்கள் இடம்பெறவே யில்லை. 

தேவையின்றி வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே போவதால் தமிழ், பன்மொழிக் கலவையாக மாற நேர்கிறது. தமிழர் அடையாளமற்ற வரலாறற்ற குடியாக மாறும் பெருங்கேட்டிற்கு வழிசெய்கிறது.

எம்மொழியிலும் எல்லாமொழிப் பெயர்களும், எல்லா ஒலிப்பும் இல்லை. சீன எழுத்தின் ஒலிப்பு வேறு எந்த மொழியிலுள்ளது? ஒரு மொழி தன் இயல்பிற் கேற்காத ஒலியை ஏற்பின், நாளடைவில் சிதைவுற்று மாற்றமடைந்து வேறொரு மொழியாகிவிடும். இதற்கு, மலையாள மொழியே எடுத்துக் காட்டாகும். தமிழ் என்பதை டாமில், டமில், டாமிள், தமில், தமிள், தாமில், தமிஷ், தமிஸ் என்றெல்லாம் தானே ஆங்கிலத்தில் எழுதுகின்றனர்; பலுக்குகின்றனர்! ஆங்கிலம் ஏன் ழ, ற, ண முதலிய தமிழ் எழுத்துக்களை ஏற்கக்கூடாது என்று கேட்பதா?

தமிழரின் இன்றைய கடமை : தமிழில் கிரந்தம் கலந்தாலும் கிரந்தத்தில் தமிழ் கலந்தாலும் சிதைவும் அழிவும் தமிழுக்கு நேர்வது உறுதி என்பதால் உலகெங்கணும் உள்ள தமிழர், ஒருங்ககுகுறியில் தமிழுக்கு உரிய இடத்தில் கிரந்த எழுத்துக்கு இடமளிப்பதற்கும், கிரந்தத்தோடு தமிழ் எழுத்துக்களைச் சேர்ப்பதற்கும் தம் எதிர்ப்பை மிக உறுதியாக வெளிப்படுத்தி அம முயற்சியைத் தடுக்கவேண்டும்.

கல்வெட்டு, செப்பேடு, ஈடு உரைகள் ஆராய்ச்சிக்குக் கிரந்த எழுத்தின் தேவை குறித்தெல்லாம் தொடர்புடைய பல்துறை அறிஞர் குழு அமைத்து அமைதியாக முடிவெடுக்கலாம்.

தமிழ்நாட்டரசு, இனக்காப்பில் இழைத்த இரண்டகம் தமிழர் நெஞ்சில் மாறாப் பெருவடுவாக நிலைத்திருக்கின்றது. இப்போது, மொழிக் காப்பிலும் கோட்டைவிட்டுப் பழிதேடிக் கொள்ளக் கூடாதென்று நல்லுணர்வோடு வலியுறுத்துகின்றோம்.

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.   (கு.466)
--------------------------------------------------------------

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

அடிகளாசிரியர்க்கு இரங்கல்


அடிகளாசிரியர்க்கு இரங்கல்
                           
(விழுப்புரம் மாவட்டத்தில், சின்னசேலத்தை அடுத்த கூகையூர் என்னும் குகையூரில் குடத்திலிட்ட விளக்காய் வாழ்ந்த ஏற்றமிகு தமிழறிஞர், தொல்காப்பிய திருமந்திர ஆய்வாளர் அடிகளாசிரியர் கடந்த 8-1-2012இல் இயற்கை எய்திதினார். அப்பெரியாரின் நினைவேந்தும் பா இது)

உலகில்சீர் தொண்டாற்றி ஒளிசேர்த்தார் பலருள்ளும்
ஒப்பாய்க் கூறப்
பலகற்றும் ஆய்ந்தாழம் பற்பலநூல் விளக்கமுறப்
படைத்த ளித்தும்
இலகுறவே கூரையகம் ஏற்றதென கோரைப்பாய்
இருந்தே வாழ்ந்த
அலகில்லா எளிமைசேர் அடிகளாசி ரியருமைப்போல்
யாரே உண்டு?

மாறலிலாத் தமிழ்ப்பற்றில் மறைமலையார் நற்றொடர்பில்
மக்க ளுக்கே
தூறலற அழகழகாய்த் தூயதமிழ்ப் பெயரிட்டீர்!
தோய்ந்த ஆய்வுச்
சேறலுற செம்மொழியாம் செந்தமிழ்த்தொல் காப்பியத்தின்
சிறப்பு ரைக்கும்
சாறமுறு நூல்பலவும் சமைத்தளித்தீர்! ஐயமற
தமிழ்கற் பித்தீர்!

நூற்றியிரண் டாண்டகவை நுடங்காத வாழ்வினிலே
நுவன்றீர் தேர்ந்தே
தேற்றமுற ஆய்ந்தறிந்த தெளிவார்ந்த கருத்துக்கள்;
தேடி வந்த
ஏற்றமுறு சிறப்புகளோ எண்ணிலவாம்! இவைவிடுத்தே
எங்கே போனீர்?
ஆற்றல்சால் உம்நினைவை அகத்தேற்றோம்! வணங்குகிறோம்!
அடிகள் ஐயா!

(இலகுற எளிமையுற; தூறல் பழிச்சொல்லல், சேறல் எழுச்சி)

---------------------------------------------------------------