திங்கள், 28 டிசம்பர், 2009

மலையமான் திருமுடிக்காரி


            இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற மலாடுஎன்னும் பெயர் கொண்டிருந்த பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ஓய்மாநாடுஆகும். 

மலையமான் நாடு : 
            மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது எனலாம். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம்*.
            மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படும் இவ் ஊர், கழக இலக்கியங்களிலும், தேவாரத் திருப்பதிகங்களிலும் திருக்கோவலூர், கோவல் நகர், கோவல் என்று குறிக்கப் பட்டுள்ளதைக் காண்கிறோம். மலையமான் நாட்டில் பல ஊர்கள் சிறப்புடையனவாக இருந்தன. கோவலூர்த் தென்பெண்ணை யாற்றின் தென்மேற்கில் இருந்ததாகக் கருதப்படும் பாதுகாப்பான முள்ளூர்க்குத் தலைவர் மலையமான் திருமுடிக்காரியாவார். 

மலையமான் திருமுடிக்காரி : 
            மலாட்டை ஆண்ட சிறந்த மன்னர்களுள் மலையமான் திருமுடிக்காரி முகன்மையான அரசர் ஆவார். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் காரி என்றும் அழைக்கப் படுபவர் ஆவார். காரி, சிறந்த வீரராகவும் உயர்ந்த வள்ளலாகவும் விளங்கியவர். இவ் அரசரைப் பற்றிய செய்திகளைக் கூறும் பல பாடல்களைக் கழக (சங்க) இலக்கியங்களில் காண்கிறோம். 

சான்றுகள் :
            மலையமான் நாட்டை அடுத்துள்ள வேணாட்டு(வேளிர் நாடு)ப் பகுதியில் ஆனிரை கோடலிலும் மீட்டலிலும் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் மிகுதியாக கிடைத்துள்ளன. அவற்றில் சில நடுகற்கள், கோவல் (கோவலூர்) மறவர்கள் போரில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன*
            கோவல் பண்டைக்காலத்தில் பெருவழியில் அமைந்திருந்திருக்கிறது; வணிகத்திலும் சிறந்து விளங்கி இருந்திருக்கிறது. இப்பகுதியில் அகழ்வில் இப்போது கிடைக்கும் பலவகையான காசுகளில் கழகக்கால சேரர் காசுகளும், பாண்டியர் காசுகளும், சோழர் காலத்தைச் சேர்ந்த முத்திரை குத்தப்பட்ட காசுகளும், குசானர், சாதவாகனர்காலக் காசுகளும் கிடைக்கின்றன.    கோவலூருக்கு அருகிலுள்ள கரையப்பட்டு என்ற இடத்தில் இருநூறு (200) உரோமானியத் தங்கக் காசுகள் கிடைத்துள்ளதிலிருந்து கோவல், உரோமானியர்களோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தமை தெரிகிறது. இங்குக் கிடைத்துள்ள மலையமான் காசுகளைப் பற்றிய ஆய்வு நூல்களும் வெளிவந்துள்ளன*. 

பாடியோர் : 
            மலையமான் திருமுடிக்காரியின் சிறப்புகளைப் போற்றிப் பல புலவர்கள் பாடியுள்ளனர். அவர்களுள், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், கபிலர், குடவாயிற் கீரத்தனார், பரணர், கல்லாடனார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், மாறோக்கத்து நப்பசலையார், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முதன்மையர் ஆவர். 

காரியும் கொல்லியும் : 
            மலையமான் நாடான மலாட்டில் கொடுங்கால் என்ற நகரம் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது. திருமுடிக்காரி, கொல்லிமலையை ஆண்ட மன்னன் ஓரியைப் போரில் கொன்று, கொல்லிக் கூற்றத்தைச் சேரனுக்குத் தந்ததை அறிய முடிகின்றது.
            வளம் மிக்க மலாட்டுப் பகுதியினைக் கைப்பற்றவும், ஓரியைத் திருமுடிக்காரி போரில் கொன்றதற்குப் பழி தீர்க்கவும் அதிகமான் நெடுமான் அஞ்சி கோவலூரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டார். மலையமான் திருமுடிக்காரி கொடைத் திறன் மிக்கவர்; கடையெழு வள்ளல்களுள் ஒருவர். இவருக்குப் பின், இவர் மகன் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆட்சிக்கு வந்தார். இவர் காலத்தில் மலாடு சோழர்களின் ஆட்சிக்கு உடபட்டிருந்தது. புறநானூற்றுப் பாடல், சோழ மன்னன் முள்ளூர் மலையில் படையுடன் தங்கியிருந்ததைக் கூறுவதைக் கொண்டு, வரலாற்றுப் புதின எழுத்தாளர் கல்கிஅவருடைய பொன்னியின் செல்வன்புதினத்தில் சில கதை நிகழ்வுகளை எழுதியுள்ளார். 

காரியும் கபிலரும் கல்வெட்டும் : 
            கபிலருக்கு மலையமான் திருமுடிக்காரியுடன் நற்றொடர்பு இருந்தது. பறம்புமலை மன்னனான வள்ளல் பாரி மூவேந்தருடனான போரில் இறந்த பிறகு, பாரி மளரிர்க்கு மணமுடிக்கும் பொறுப்பைப் புலவர் கபிலர் ஏற்கிறார். ஆனால், மூவேந்தர்க்கும் அஞ்சி, பாரிமகளிரைச் சிற்றரசர் யாரும் மணம் புரிந்து கொள்ள முன்வரவில்லை.
            திருக்கோவலூர்த் தெய்வீகன் பாரிமகளிரை மணந்ததாக மரபுவழிக் கதைகள் கூறப்படுவதால், கபிலர் காலத்தவரான மலையமான் திருமுடிக்காரி இதற்கு துணையிருந்திருப்பதாக எண்ணலாம். பாரி மகளிரை ஒளவையாரோடு தொடர்பு படுத்திச் சொல்வதற்கும், திருமுடிக்காரியே பாரிமகளிரை மணந்ததாகச் சொல்வதற்கும் அடிப்படைச் சான்றெதுவும் இல்லை என்க.          திருக்கோவலூரில் உள்ள கீழையூர் வீரட்டானேசுவரர் கோயிலில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முதலாம் இராசராசனின் கல்வெட்டு உள்ளது. அதில், கபிலர் அங்கு வந்து மலையமானிடம் பாரியின் பெண்களை அடைக்கலப் படுத்திவிட்டு, அங்கு (கீழையூர் பெண்ணையாற்றுத் துறைக் கருகில் ஆற்றிலுள்ள) கல்லொன்றில் தீ வளர்த்து உயிர் நீத்தார் என்ற செய்தி கீழ்க்காணுமாறு குறிக்கப்பட்டுள்ளது : 
            தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் 
            மூரிவண் தடக்கை பாரிதன டைக்கலப்
            பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை 
            அலைபுனல் அழுவத்து அந்தரிட்சம்செல 
            மினல்புகும் விசும்பின் வீடு பேறெண்ணி 
            கனல்புகும் கபிலக் கல்லது*. 
            இன்றும் அங்குப் பெண்ணையாற்றில் ஒரு சிறு குன்றும், குன்றின்மேல் ஏறிச் செல்ல படிக்கட்டுகளும் குன்றின் மேலே, கோயில் போன்ற அமைப்பும் அக் கோயிலைச் சுற்றிவர வழியும் உள்ளதைக் காணலாம். இதனை ஊர் மக்கள் கபிலர் குன்றுஎன்றும் கபிலக் கல்என்றும் கூறுகின்றனர். இக் குன்றை இடைச்சி ஒருவரின் கதையோடு தொடர்பு படுத்தி, ‘இடைச்சிக் குன்றுஎன்றும் அழைக்கின்றனர். 

கழக இலக்கியங்கள் காட்டும் திருமுடிக்காரி : கழக இலக்கியங்களில் திருமுடிக்காரி பற்றிக் கூறப்பட்டுள்ள சில முகன்மையான செய்திகளை ஒவ்வொன்றாய்க் காணலாம். 

அ. சிறுபாணாற்றுப் படை.
ஆசிரியர்: இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். 
  1. அடி 91 – 95
 ....................   …….........  ………......... கறங்குமணி
வால்உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகைந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கை காரி............ 

இதன் பொருள் : மணியையும் தலையாட்டத்தினையும் ( தலையாட்டம் என்பது குதிரைக்கான ஓர் அணி) உடைய குதிரையோடு அருள் நிறைந்த சொற்களையும் உலகத்தவர் கேட்டு வியக்குமாறு இரவலர்க்குக் கொடுத்த பிறர் அஞ்சும்படியான நீண்ட வேலையும், சுழலும் தொடியணிந்த கையினையும் உடைய காரி என்னும் வள்ளல்......

  1. அடி 107 – 110 
.....................  ................... ...................... நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த 

இ-ள் : செறிந்த கொம்புகளில் நறுமணம் மிக்க பூக்கள் நிறைந்த சுரபுன்னை யும், குறிய மலைகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தாடுவோர்க்குக் கொடுத்த, காரி என்னும் பெயர் பெற்ற குதிரையை உடைய காரி... 

ஆ. குறுந்தொகை
1. பாடல் – 198                    ஆசிரியர்: கபிலர்           அடி : 5-7                ............ .................. ................. அடுபோர்
எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத்து
ஆரம் நாறும் ............ 

இ-ள் : பகைவரைக் கொல்லும் வேல் திகழும்படி நின்ற பெரிய கையையுடைய மலையனது காட்டின் கண்ணதாகிய சந்தனம் மணக்கும்.....

  1. பாடல் – 312         ஆசிரியர்: கபிலர்              அடி : 2-3 
முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற ........ 

இ-ள் : மாறுபாட்டைக் கொண்ட வலியை உடையவனும் சிவந்த வேலினை ஏந்தியோனுமாகிய மலையமான் திருமுடிக்காரியினது முள்ளூர் மலைக் காட்டிலுள்ள நறுமணம் மணக்க..... 

இ. நற்றிணை 
1. பாடல் – 100                 ஆசிரியர் : பரணர்          அடி : 7-11
 .............. ........... ................. முனையூர்ப்
பல்லா நெடுதிரை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப்
புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின்
மண்ணார் கண்ணின் அதிரும் 

இ-ள் : ஊர் முனையிலுள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரால் வென்று செலுத்திக்கொண்டு வருகின்ற, இரவலர்க்குத் தேர் கொடுக்கும் கை வண்மை உடைய மலையமான் திருவோலக்கத்தின் முன்பு வேற்று நாட்டிலிருந்து வந்த பெரிய இசையை உடைய கூத்தர் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின் மார்ச்சனை வைத்த பக்கம் அதிரும்

2.  பாடல் – 170    ஆசிரியர் : பெயர் தெரியவில்லை   அடி : 6-8
ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஓடி யாங்கு... 

இ-ள் : ஆரியர் நெருங்கிச் செய்த போரின் கண்ணே, பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்துப் பலருடன் சென்று, உறையினின்று உருவிய ஒள்ளிய வாட்படையை உடைய மலையனது ஒப்பற்ற வேற்படையை அஞ்சி அவ் ஆரியப்படை ஓடியதைப்போல...

  1. பாடல் – 320      ஆசிரியர் :கபிலர்                         அடி : 4-6 
................ .............. ............. பழவிறல்
ஓரிக் கொன்ற ஒருபெருந் தெருவில்
காரி புக்க நேரார் புலம்போல்

இ-ள் : பழைமை சிறப்புடைய கொல்லிமலைத் தலைவனாகிய வல்வில் ஓரியைக் கொன்ற மலையமான் திருமுடிக்காரி என்பான், உடனே அவ் ஓரியினது ஒப்பற்ற பெரிய தெருவிலே புகுந்ததைக் கண்ட காரியின் பகைவராகிய ஓரியைச் சார்ந்த யாவரும் ஒருசேர நின்று பேரிரைச்சல் இட்டாற் போல 

ஈ. அகநானூறு 
1. பாடல் – 35       பாடியவர் : குடவாயிற் கீரத்தனார் அடி : 14-16 
துஞ்சா முழவின் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறை
பெண்ணையம் பேரியாற்று நுண்மணல் கடுக்கும்  

இ-ள்: முழவின் ஒலி இடைவிடாது ஒலிக்கும் திருக்கோவலூர்க்குத் தலைவனாகிய நீண்ட தோளினை உடைய காரியின் கொடுங்கால் என்னும் ஊரின்கண்ணதாகிய அழகிய பெரிய பெண்ணையாற்றின் முன்துறையில் உள்ள நுண்ணிய கருமணலை ஒத்த

2. பாடல் – 209 பாடியவர் : கல்லாடனார் அடி : 11-17 
............... ................ ............. செவ்வேல்
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயன்கெழு கொல்லி
நிலைபெறு கடவுள் ஆக்கிய
பல்புகழ் பாவை ............ ............... 

இ-ள் : சிவந்த வேலினையும் சுழலும்படி இடப்பட்ட வீர வளையினையும் உடைய முள்ளூர்க்குத் தலைவனாகிய காரி என்பான், கெடாத நல்ல புகழை இவ்வலகத்தே நிலைநிறுத்திய வலிய வில்லையுடைய ஓரியைக் கொன்று, சேரமன்னர்க்கு மீட்டுக் கொடுத்து உரிமையாக்கிய, வேர்ப்பலவின் பழங்கள் மிகுந்த கொல்லிமலையில் தெய்வத் தச்சனால் செய்யப்பட்ட அழிவின்றி நிலைபெற்றிருக்கும் பலரும் புகழும் பாவை.... 

உ. புறநானூறு 
புறநானூற்றில் பாடல் 121முதல் 124 வரை நான்கு பாடல்களில் புலவர் கபிலரும்125ஆம் பாடலில் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனாரும்126ஆம் பாடலில் மாறோக்கத்து நப்பசலையாரும் முழுப்பாடல்களில் காரியின் சிறப்புகளைப் போற்றிப் புகழ்கின்றனர். 158ஆம் பாடலில் இரு வரிகளில் புலவர்பெருஞ்சித்திரனார் காரியைப் போற்றுகிறார் 

பாடல் 121இல்,  ‘வேந்தே, ஈதல் எளிது; ஆயினும் ஈத்தது கொள்ளும் பரிசிலரது வரிசையறிதலே அரிது. ஆதலால் புலவர்பால் வரிசை நோக்காது பொதுவாக நோக்குதலை ஒழிகஎன்று வலியுறுத்துகிறார்         கபிலர். பாடல் 122இல், ‘திருமுடிக்காரி, நின்நாடு கடலாலும் கொள்ளப் படாது; பகை வேந்தராலும் கைக்கொள்ள நினைக்கப்படாது; ஆயினும் அது அந்தணர்க்குக் கொடைப் பொருளாயிற்று. மூவேந்தருள் ஒருவர் தமக்குத் துணையாதலை வேண்டி விடுக்கும் பொருள் இரவலர்க் குரித்தாயிற்று; நின் ஈகைக் ககப்படாது நிற்பது நின் மனைவியின் தோளல்லது பிறிதில்லை; அவ்வாறிருக்க நின்பாற் காணப்படும் பெருமிதத்திற்குக் காரணம் அறியேன்என்று கூறுகிறார். 
      பாடல் 123இல், ‘அன்றன்றிறக்கிய கள்ளுண்டு களிக்குங்கால், இரவலர் புகழுரை கேட்டுஅவர்க்குத் தேர்கள் பலவற்றை வழங்குவது எத்தகைய வள்ளல்கட்கும் எளிதில் இயல்வதாம்;எனவே, அவரது கொடை, கள் மகிழ்ச்சியில் நிகழ்வதால் செயற்கையாம். மலையமான் திருமுடிக்காரி களியாப் போழ்தில் வழங்கும் தேர்களை நோக்கின், அவை அவனது முள்ளூர் மலையிற் பெய்யும் மழைத் துளியினும் பலவாகும். எனவே, இஃது இயற்கைக் கொடையெனத் தெளிமின்என்கிறார். 
      பாடல் 124இல், மலையன் திருமுடிக்காரியைக்காணச்செல்லும் இரவலர் நாளும் புள்ளும் நோக்கவேண்டுவதிலர்; அவன்பால் அடையினும், செவ்வி நோக்குதலும், கூறத்தகுவன இவையென முன்னரே தம்முள் ஆராய்ந்து கோடலும் வேண்டா; அவனைப்பாடிச்சென்றார் வறிது பெயர்வதில்லைஎன்று கூறுகிறார். பாடல்
      125இல் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், ‘வேந்தே, நீ துணை செய்த போரின்கண் வென்றியெய்திய சோழனும் யான் வெற்றிபெற உதவியவன் இவனேயென நின்னைப் பாராட்டிக் கூறுவன்; தோல்வியெய்திய சேரமானும், வல்வேல் மலையன் துணைபுரியா திருப்பனேல், இப்போரை வெல்லுதல் நமக்கு எளிதாயிருக்கும் என்று வியந்து கூறுவன். இரு திறத்தாரும் பாராட்டும் ஒருவனாய் விளங்குகின்றனை. நின் செல்வ மிகுதியைக் காணப் போந்த யாமும் ஊனும் கள்ளும் மாறிமாறி உண்பேமாயினேம்; முயன்று ஈட்டிய பொருள் கொண்டு நீ உண்ணும் உணவு அமிழ்தாய் நீண்ட வாழ்நாளை நினக்கு நல்குவதாகஎனப் போற்றுகிறார்.
       பாடல் 126இல்,மாறோக்கத்து நப்பசலையார், ‘பெண்ணையாறு பாயும் நாடுடைய வேந்தே, முள்ளூர்க்குத்தலைவ, நுன் குடிப்பெருமையும் நின் புகழும் யாம் கூற வல்லேமல்லேம். ஆயினும் இயன்ற அளவிற் கூறுவேம்; அன்றியும்; சேரர் கலஞ்சென்ற குடகடலில் பிறருடைய கலம் செல்லமாட்டாத்து போலக்கபிலர் பாடியபின் எம் போல்வார் பாடல் செல்லாது; எனினும், எம்மை இன்மையானது துரப்ப நின் வள்ளன்மை மின்னின்று ஈர்ப்ப வந்து சில பாடுவேமாயினம்எனப் புகழ்கிறார். 

      பாடல் 158இல், புலவர் பெருஞ்சித்திரனார், 
காரி ஊர்ந்து பேரமர்க் கிடந்த
மாரி யீகை மறப்போர் மலையனும் 
- என்று திருமுடிக்காரியைப் புகழ்கின்றார். 

இ-ள் : காரியென்னும் பெயரையுடைய குதிரையைச் செலுத்திப் பெரிய போரைவென்ற மாரிபோலும் வள்ளன்மையுடைய மறப்போர் மலையன். 

முடிவாக... 
      இக்கால், விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி, மலையமான் நாடு ஓய்மாநாடு என்ற இரு நாடுகளாகக் கழகக் காலத்தில் இருந்தது என்றும், மலையமான் திருமுடிக்காரி மலாட்டை ஆண்ட சிறந்த மன்னனாகவும் உயர்ந்த வீரனாகவும் மாபெரு வள்ளலாகவும் விளங்கினான் எனவும், கபிலர் தொடக்கம் பல பெரும் புலவர்கள் அவனுடைய உயர்வைப் பலவாறாகப் போற்றிப் பாடிப் புகழ்ந்துள்ளனர் என்றும் அறிகிறோம். ___________________________________________________________________ நன்றியுரைப்பு: 
1. விழுப்புரம் இராமசாமிப்படையாட்சியார் மாவட்ட வரலாறு ஆசிரியர் : கு. தாமோதரன், துணை இயக்குநர், தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு : தமிழ்நாட்டரசின் தொல் பொருள் ஆய்வுத்துறை.
* இக் குறியிட்ட செய்திகள் இந் நூலிலிருந்தே பெறப்பட்டவை.
2. கழக இலக்கியங்கள் உரைகள் உதவியவர்க்கு நெஞ்சார்ந்த நன்றி. 

செவ்வாய், 15 டிசம்பர், 2009

அறிவியலும் முன்னேற்றமும்!

* ஒளிவிளக்கு மின்விசிறி ஓயாத கைப்பேசி
            ஒழிச்சல் இன்றி
களிக்கஅழச் செய்யுதொலைக் காட்சியொடு சமைக்கபல
            கருவி கண்டோம்!
குளிப்பதற்கு வெந்நீரும் குடிப்பதற்குக் குளிர்நீரும்
            கொடுப்ப தற்கும்
எளிதாகப் பலகருவி எல்லாஊர்க் கடைகளிலும்
            இன்று உண்டே!

உடனடியாய்க் கணக்கிடற்கு ஓர்கருவி! எதுகுறித்தும்
            உங்கள் ஐயம்
உடனேயே தீர்த்திடற்கு உண்டுகணிப் பொறிமேலும்
            உழவு செய்ய
நடவுநட கதிரறுக்க நன்றாய்நெல் பிரித்தெடுக்க
            நாட்டில் இன்று
மடமடெனப் பலபொறிகள் மலிந்தனவே! மிகவிளைய         
            மண்ணுக் கேற்ற

பல்வேறு உரங்களொடு பயிர்கெடுக்கும் பலவகையாம்        
            பூச்சி கொல்ல
வல்லபல வேதிகளும் வகைவகையாம் நச்சுகளும்
            வந்த திங்கே!
செல்லபல இடங்கட்கும் சிறப்பான விரைவூர்தி
            செய்துள் ளாரே!
நல்லபல வசதிகளும் நாம்பெற்றோம் அறிவியலால்
            நன்மை யுற்றோம்!

விண்வெளியில் திங்களிலே வேறுபல கோள்களிலே
            வியக்கும் வண்ணம்
நுண்ணியபல் லாய்வுகளும் நொய்ப்பமுற செய்கின்றார்
            நோக்கில் ஒன்றி!
எண்ணிலவாய் முன்னேற்றம் எழுந்துளது மருத்துவத்தில்
            எல்லா நோய்க்கும்
ஒண்ணலுறும் மருந்துகளும் உருவாக்கி உள்ளநிலை
            உணர்ந்தே உள்ளோம்!

இவ்வளவும் அறிவியலில் இனும்பலவும் முன்னேற்றம்
            இருந்த போதும்
செவ்வையிலாச் செயற்கையினால் சீர்குலைவால் நீர்காற்றுச்
     செம்மை கெட்டும்
ஒவ்வாத பல்வேறு உரங்களினால் மண்வளமும்
     ஒழிந்து போக
நொவ்வுற்றோம்! அறிவியலை நொய்ம்மையிலா முன்னேற்ற
     நோக்கில் ஆள்வோம்!

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­---------------------------------------------------------------- நொய்ப்பம் = திறமை, ஒண்ணலுறும் = பொருந்துகிற, தகுதியான 
நொவ்வுற்றோம் = நோயுற்றோம், நொய்ம்மை = கேடு 
-----------------------------------------------------------------------------­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­--------------------

திங்கள், 7 டிசம்பர், 2009

தூயருமிழ் வாழ்வுனதே!

*     தூயருமிழ் வாழ்வுனதே!


ஊருலகம் உன்நடிப்பை உணர்ந்த பின்னும்
     உளறுகிறாய் நாள்தோறும் உண்மை கொன்றே!
ஒரிலக்கம் தமிழர்களின் உயிர்ப றித்தான்
     உனக்கவனே தம்பியென உரைத்தாய் என்னே!
பேருக்குக் குழுவெனவே பிணைத்துப் பத்துப்
     பேரனுப்பி ஏமாற்ற முனைந்த தெல்லாம்
யாருக்கும் தெரியாதென் றெண்ணும் உன்னின்
     இழிவறியா உலத்தார் இல்லை இன்றே!


ஈகிகளைக் குறைகூறி இழிவு செய்தாய்!
     இரண்டகத்தால் இனமழிக்கத் துணையும் போனாய்!
சாகின்ற தமிழரைக்காத் திடுக வென்றே
     தமிழுலகே கதறியதே! தன்ன லத்தால்
வாகெனவே வந்ததிந்த வாய்ப்பென் றெண்ணி
     வஞ்சகமாய் உன்பதவி நிலைத்தி டற்கும்
பாகமென உன்குடும்பம் பதவி ஏற
     பழிக்கஞ்சா ரோடேஒப் பந்தம் போட்டாய்! 


இனங்கொல்லத் துணைநின்றாய்! இங்குள் ளோரை
     ஏய்த்துநடித் தேமாற்றி இருக்கை யுற்றாய்!
மனச்சான்றைக் கொன்றாயே! மக்க ளெல்லாம்
     மாவெழுச்சிக் கிளர்ச்சியொடு திரண்டெ ழுந்து
சினமுற்றே ஈழப்போர் நிறுத்து கென்றே
     சீறியகால் தன்னலத்தால் சிறிது கூட
மனங்கொள்ளா துளத்தியலால் மக்கள் நெஞ்சை
     மயக்குதற்குப் பலபொய்கள் மலியச் சொன்னாய்!



இலங்கையிலே கொடுங்கோலன் இராச பச்சே
     இளிக்கின்ற படத்தோடே எதற்கு மஞ்சா
இலங்கலறு பொய்ம்முகத்தின் இத்தா லிப்பேய்
     இருக்கின்ற படத்திலும்நீ இடம்பெற் றாயாம்!
புலங்கெட்ட உருவனென பொலிவி ழந்த
     பொய்யனுன்றன் படமுமதில் பொருத்தம் தானே!
துலங்கலறப் பழியுற்றாய்! தொலைத்தாய் மானம்!
     தூயருமிழ் வினையோனே! தூ!ஏன் வாழ்வோ?

----------------------------------------------------   

வியாழன், 26 நவம்பர், 2009

உன்றன் களங்கம் தீராதே!

* உன்றன் களங்கம் தீராதே! 

நாளுக் கொன்று கதைக்கின்றாய்;
    நடிப்பில் ஏய்க்க முனைகின்றாய்!
ஆளும் வாய்ப்புன் குடும்பத்தார்
    ஆக்க வளத்திற் கெனக்கொண்டாய்!
மூளும் சினம்நீ புலிகள்மேல்
    மொத்தப் பழியும் சுமத்துகையில்!
நீளும் ஆட்சி இரணிலுக்கு
    நிலைக்கா ததினால் ஊறென்றாய்!


இணையில் மறவன் ஈழத்தின்
    எழுச்சி பிரபா கரன்வீழ்ச்சி
உணக்க உன்றன் விழிநீரும்
    உகுக்கும் என்றாய் உண்மையிலாய்!
வணங்கா மண்ணின் மைந்தரொடு
    வக்கில் லோராய் இங்குள்ள
பிணக்கத் தமிழர் இனிமேலுன்
    பேச்சை நம்பார் இரண்டகனே!


வாசெ குவுடன் பொற்கோவும்
    வக்குஇல் சுபவீ வீரமணி
பேசி ஏய்க்கும் இனும்பலரும்
    பின்னே உள்ளார் என்றெண்ணிக்
கூசா நடிப்பில் கொள்கையரை
    குழப்ப முனைவாய் வீணுன்றன்
மோசச் செயல்கள் வெல்லாதே!
    முழுத்தன் னலனே! மொய்ம்பற்றோய்!


நன்றாய்  முனைந்து  நடிக்கின்றாய்;
    நாளும் கதைகள் சொல்கின்றாய்!
உன்றன் குடும்ப நலனுக்காய்
    ஒழித்தாய் ஈழத் தமிழர்களை!
இன்றுன் கதைகள் நம்பற்கே
    எவரிங் குள்ளார் மெய்த்தமிழர்!
ஒன்றிங் குறுதி உணர்ந்திடுவாய்;
    உன்றன் களங்கம் தீராதே! 
   
------------------------------------------------------------------------

ஞாயிறு, 22 நவம்பர், 2009

புதுச்சேரி நற்றமிழ்ப் புரவலர் திருநாவுக்கரசு (தேசிகன்) ஐயா மறைவுக்கு இரங்கல்

 திருநாவுக்கரசு ஐயா மறைவிற்கு இரங்கல்       
                       
கேட்டா ரதிரக் கிளையர் செயலறக்
கோட்டியாய் மற்றவர் குழுமிக் குமுற
தனித்தமிழ்க் கழகத் தனிச்சிறப் பாளர்
நனிநற் பண்பின் இனிய ரொப்பிலா
திருநா விறந்த செய்தி வந்ததே!
உருகினர் ஏங்கினர் உற்றார் தவித்தனர்!

ஆற்றல் சான்றவர் அருளுள் ளத்தர்
ஆற்றிடு அருவினை அறிவியா துதவுநர்!
இன்னோர்க் கென்னாது எல்லார்க்கு முதவிய
செந்நோக் கினரச் சிறப்புறு செம்மல்!
இன்னின் னார்க்கே இன்னலென் றறிந்தே
இன்முகத் தோடவர் எழுவா ருதவ!

எந்நே ரத்திலும் எவரக்கும் உதவ
முந்தி முனையும் முனைப்பினர் உண்மை!
நட்பினர் குடும்ப நல்லது கெட்டதில்
நுட்பமாய் அறிந்தே ஒட்பத் துதவுநர்
எதிர்பா ராத இடுக்கண் எழுகையில்
மதிநுட் போடிவர் மாற்றிய கதைபல!

எவருரைப் பாரோ, இவரறிந் திடுவார்
கவலறுத் திடவே கடியவந் திடுவார்!
செந்தமிழ் நிகழ்வில் முந்தி நின்றிவர்
வந்து கனிந்து வருகவென் றழைக்கும்
ஒப்பருங் காட்சி உளத்தில் நிலைக்கும்!
செப்பருஞ் சிறப்பின் சீருக் குரியவர்!

ஆசாகு அய்யா தேசிகன் உயிரை
கூசாது நேர்ச்சி கொள்ளை கொண்டதே!
இழப்பு, இழப்பு, இழப்புபே ரிழப்பே!
உழப்புற லகற்றியவ் வுயர்ந்தோர்
சிறப்புறு செயல்கள் சிந்தையில் கொள்வமே!
-------------------------------------------------------------------------

திங்கள், 2 நவம்பர், 2009

நூலெனப்படுவது...!

    தமக்குத் தோன்றும் கருத்துக்களை விளக்கமாக வெளிப்படுத்தும் நோக்கில் சிலர் நூல் எழுதுகின்றனர். இன்னும் சிலர், சான்றடிப்படைச் செய்திகளோடும் படங்களோடும் பிறவற்றோடும் சொல்ல விரும்பி, அவற்றைப் பரந்த பாரிய வடிவில் தருவதற்கு நூல் எழுதுகின்றனர். பொழுது போக்குப் படிப்பிற்கு எழுத விரும்புவோரும், இலக்கியம் படைப்போரும், ஆய்வு செய்வாரும், மறுக்க விரும்புவாரும் நூல் எழுதுவதைப் பார்த்து வருகின்றோம். இன்னும், அறிவியல் கலை தொடர்பினவான பல புத்தகங்களையும் பலர் எழுதுகின்றனர்.
     எந்த வகை நூலாயினும் அது படிப்போர் விரும்பும் வகையிலும் வாசகரைக் கவரும் வகையிலும் இருக்க வேண்டுவதும் மக்களுக்குப் பயன் விளைக்குமாறு இருக்க வேண்டுவதும் முதன்மையாகும்.

நூலின் வகைகள்:
    
     நினைவுக் குறிப்புகளையும் ஒவ்வொரு நாளின் நிகழ்ச்சி நிரல்களையும் எழுதுவது குறிப்பேட்டுப் புத்தகம்.
     ஒரு துறையினருக்காக, அத்துறை நிகழ்ச்சிகள், அண்மைக்கால வளர்ச்சி நிலைகள், இடையூறுகள், எடுக்கப்படும் நடவடிக்கைகள், செயற்பாடுகள் பற்றிய செய்திகள் அடங்கிய விளக்கப் புத்தகம் செய்தி மடல்.
     உள்நாடு மற்றும் உலகளாவிய பல்வேறுவகை செய்திகளையும் குறிப்புகளையும் அடிப்படையான புள்ளி விளத்தங்களுடன் தொகுத்து ஆண்டுதோறும் வெளியிடும் நூல் ஆண்டு நூல்.
     சிற்றூர்கள், நகரங்கள், மாவட்டங்கள் முதலியவற்றைப் பட்டியலிட்டு அவ்வவ்விடங்களின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் முதலிய பல்வேறு செய்திகளைத் தொகுத்து அரசு வெளியிடும் நூல் அரசிதழ்.
     மாணவர்களுக்கான பாடநூல், வாய்பாடு, பயிற்சி நூல் போலும் பலதிறத்தன பள்ளி நூல்கள்.
     சிறந்த ஆசிரியர்களால் இலக்கிய நூல்கள் எழுதப் படுகின்றன. இவை, உரைநடை, பா வடிவிலான படைப்பிலக்கியம் மற்றும் கட்டுரை, திறனாய்வு போன்ற இலக்கிய நூல்கள்.
     சமயம் சார்ந்தவை வழிபாட்டு நூல், திருமறை நூல், திருப்பாடல் தொகுதி நூல்கள் போன்றவை.
     நாட்டு வரலாறு, உலக வரலாறு, சமய வரலாறு, மொழி வரலாறு, இன வரலாறு, இலக்கிய வரலாறு போன்றவை வரலாற்று நூல்கள். வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு போன்றவை மாந்த வரலாற்று நூல்கள்.
     சிறுகதை, குறும் புதினம், புதினம், காதற் புதினம், அறிவியற் புதினம் போன்றவை ஒரே வகைமை நூல்கள் ஆகும்.
     செயற்பாட்டு வழிகாட்டும் நூல்கள், குடும்ப அறிவு நூல்கள், ஊர்ச் செலவு வழிகாட்டு நூல்கள், சுற்றுச் செலவு கட்டுரை நூல்கள் போன்று நூல்கள் பல்வேறு வகையினவாம்.

நூலுக்குத் தொல்காப்பியம் தரும் விளக்கம் :

நூல் என்று கூறப்பெறுவது -
1. தொடக்கமும் முடிவும் பொருள் முரண் இன்றி இருக்கவேண்டும்.
2. தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்ட வேண்டும்.
3. விரிய உரைக்கும் வகையிலாகப் பொருத்தம் உடையவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும்.
4. நுண்ணிதாகப் பொருளை விளக்க வேண்டும்.

நூலுக்கு நன்னூல் கூறும் பெயர்க்காரணங்கள் இரண்டு :

  1. கைதேர்ந்த பெண் பஞ்சினால் நூல் நூற்றல் போல், புலவன் சொற்களால் நூலை இயற்றுகின்றான். பெண்ணின் கை போல புலவனின் வாயும் (எண்ணமும்) நூற்கும் கதிர் போல அறிவும் உதவுகின்றன.
  2. மரத்தின் வளைவை அறுத்து நேராக்க நூலைப் பயன் படுத்துவர்.  அதுபோல அறிவைப் பெருக்கித் தீமையை அழிக்க உதவும் நூல்களும் மக்களின் மனக்கோட்டத்தைத் தீர்த்துச் செவ்விதாக்கும்.

தொல்காப்பியம் கூறும் நூலின் வகைகள் :

மரபிலிருந்து திரியாது சிறப்பொடு கூடிய நூல்கள் முதல் நூல், வழிநூல் என்று இரண்டுவகையின.
   செய்வினைப் பயனை அடையாத, தூய்மையான அறிவினை உடைய முன்னோரால் செய்யப்பட்டது முதல்நூல்.
   முதல்நூல் வழியில் வருவது வழிநூல். வழிநூல் நான்கு வகைப்படும். தொகுத்து நூலாக்கல், விரித்து நூலாக்கல், தொகுத்தும் விரித்தும் நூலாக்கல், மொழிபெயர்த்தல் என நான்குவகை நூல்களும் வழக்கு வழிப்பட இயற்றல் வேண்டும். வழிநூல்கள் இலக்கணத்தில் மரபுகளில் மாறுபட்டால் சிதைந்த நூலாகும். தூய அறிவுடையோர் செய்த நூலில் சிதைவு இருக்காது.

தொல்காப்பியம் கூறும் நூலின் குற்றங்கள் :

  1. முன்பு கூறியதையே பின்பு கூறல்
  2. முன்பு கூறியதற்கு முரணாகப் பின்பு கூறல்
  3. முழுவதுங் கூறாமல் குறைவாகக் கூறல்
4. தேவைக்கு அதிகமாக மிகுதிப்படுத்திக் கூறல்
5. பொருள் தராதவற்றைக் கூறல்
6. படிப்போர் பொருள் மயக்கமடையும்படி கூறல்
7. கேட்போர்க்கு இனிமை யில்லாத நிலையில் கூறல்
8. பெரியோர் பழித்த சொல்லைப் பயன் படுத்தி தாழ்ந்த நிலையில் கூறல்
9. நூலின் கருத்தைக் கூறாது தன் கருத்தை மனத்துட் கொண்டு கூறல்
10. கேட்போர், படிப்போர் மனம் கொள்ளாத நிலையில் கூறல் - இவையும் இவை போன்றன பிறவும் நூலின் குற்றங்களாம்.

உத்தி :

உத்தியை எழுதும் திறன் என்றும் கூறலாம். நூலின் உத்தி என்பது, நூல் கூறும் வழக்கை உலக வழக்குடன் பொருத்திக் காட்டி, ஏற்ற இடமறிந்து, இந்த இடத்தில் இவ்வாறு கூற வேண்டுமென, தக்க முறையில் நிறைவுற எழுதி முடிக்கும் திறமையேயாகும்.

தொல்காப்பியம் கூறும் நூலின் உத்தி வகைகள் :

1. சொன்னதைத் தெளிவாக அறிதல்
2. அதிகாரங்களை முறையாக அமைத்தல்
3. இறுதியில் தொகுத்துக் கூறல்
4. கூறுபடுத்தி உண்மையை நிலைநாட்டல்
5. சொன்ன பொருளோடு ஒன்ற சொல்லாத பொருளை இடர்ப்பாடின்றி முடித்தல்
6. வராதனவற்றைக் கூறுவதால் ஏனைய வரும் என முடித்தல்
7. வந்ததைக் கொண்டு வராதனவற்றை உணர்த்தல்
8. முன்பு கூறியதைப் பினபு சிறிது பிறழக் கூறுதல்
9. பொருந்தும் வண்ணம் கூறல்
10. ஒரு பக்கத்தே சொல்லுதல்
11. தன் கொள்கையைக் கூறுதல்
12. நூலில் வைத்துள்ள முறை பிறழாதிருத்தல்
13. பிறர் உடம்பட்டதைத்  தானும் ஏற்றுக் கொள்ளுதல்
14. முற்கூறியவற்றைக் காத்தல்
15. பின்னர் வரும் நெறியைப் போற்றுதல்
16. தெளிவு படுத்திக் கூறுவோம் என்றல்
17. கூறியுள்ளோம் என்றல்
18. தான் புதிதாகக் குறியிடுதல்
19. ஒரு சார்பு இன்மை
20. முன்னோர் முடிபைக் காட்டல்
21. அமைத்துக் கொள்க என்று கூறல்
22. பல பொருள்கள் இருந்தாலும் நல்ல பொருளைக் கொள்ளுதல் 23. தொகுத்த மொழியான் வகுத்துக் கூறல்
24. எதிர்ப்போர் கருத்தை மறுத்துத் தன்கருத்தை  உரைத்தல்
25. பிறர் கொள்கைகளையும் சான்றாகக் கூறல்
26. பெரியோர் கருத்தை ஏற்றுக் கொண்டு தான் அதையே கூறல்
27. கருத்து விளக்கத்திற்கு வேறு பொருள்களையும் இடையே கூறுதல்
28. முரணான பொருள்களையும் உணர்த்தல்
29. சொல்லின் குறையை நிறைவு செய்து கூறுதல்
30. தேவைக்குத் தகத் தன் கருத்தைந் தந்து இணைத்து உரைத்தல் 31. நினைவு படுத்திக் கூறுதல்
32. கருத்தை உய்த்து உணரும்படி கூறல்.
இவற்றுடன் பிற உத்திகளையும் சேர்த்துக் கொண்டு சுருக்கமாக ஆனால் விளக்கமாத் தெளிவு படுத்த வேண்டும்.       

நன்னூல் கூறும் நூலின் இயல்புகள் :

1. பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் [இக்கால், முகவுரை அணிந்துரை எனலாம்] ஆகிய இருவகைப் பாயிரம் உடையதாக இருக்க
வேண்டும்.
2. முதல் வழி சார்பு என்னும் மூன்று நூல்வகையுள் ஒன்றாக இருக்க வேண்டும்.
3. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்கள் அடையப் பயன்பட வேண்டும்.
4. ஏழு வகை எழுதும் கோட்பாடுகள் (மதம்) பெற்றிருக்க வேண்டும்.
5. பத்துவகைக் குற்றங்கள் இல்லாததாக இருக்க வேண்டும்.
6. பத்துவகை அழகு பொருந்தப் படைக்கப்பட்டிருக்க வேண்டும்.
7. 32 உத்திகளும் கொண்டு திறம்பட எழுதியிருக்க
வேண்டும்.
8. சூத்திரம் என்னும் மூலபாடமும் ஓத்து, படலம் (இயல், அதிகாரம்) என்னும் உறுப்புகளும் பெற்றிருக்க வேண்டும். [இலக்கண நூலகளுக்கு இந்த உறுப்புகள் கூறப்பட்டுள்ளன. ஏனைய நூல்களுக்கு ஏற்றவாறு உறுப்புகள் அமைந்திருக்க வேண்டும்]

நன்னூல் கூறும் நூலின் வகைகள் :
     
   முதல்நூல், வழிநூல், சார்பு நூல் என்று நூல்களை மூன்று வகையாகக் கூறுகிறது நன்னூல்.
   முதல்நூல், செய்வினைப் பயனை அடையாத, தூய்மையான அறிவினை உடைய முன்னோர் படைப்பதாகும்.
   முன்னோர் நூலின் முடிபுடன்  முழுவதும் ஒத்து, முதனூல் இருக்கவும் வழிநூல் வேறே செய்வதற்குக் காரணமாகிற வேறுபாடுகளைக் கூறி, மரபு சிதையாமல் படைப்பது வழிநூலாகும்.
   முதல்நூல் வழிநூல் இரண்டிற்கும் ஓரளவு ஒத்து, வேறுபட மாற்றிப் படைப்பது சார்புநூலாகும்.
   வழிநூல்கள் முன்னோர் நூலில் வரும் சொற்களையும் கருத்துக்களையும் பொன்னேபோல் போற்றிக் கொள்ள வேண்டும். வேறு நூல் செய்தாலும் முதனூலில் இருந்து சிலவற்றை மேற்கோளாக அப்படியே எடுத்தாள வேண்டும்.

நூலாசிரியர் பின்பற்ற வேண்டியனவாக நன்னூல் கூறும் ஏழு கோட்பாடுகள் :

  1. உடன்படல்
2. மறுத்தல்
3. பிறர் கோட்பாட்டை ஏற்குமளவு ஏற்று, மற்றவற்றை நீக்குதல்
4. தானொரு பொருளை எடுத்து நாட்டி அதனை வருமிடந்தோறும் இறுதிவரை நிலைநாட்டுதல்.
5. இருவர் கருத்து வேறுபடுமிடத்து, ஒருபக்கம் துணிதல்
6.பிறர் நூல்களிலுள்ள குற்றங்களை எடுத்துக்காட்டுதல்.
7. பிறர் கோட்பாட்டை ஏற்காது தன் கொள்கைப்படியே எழுதுதல்.

நன்னூல் கூறும் நூலின் குற்றங்கள் பத்து :

  1. குன்றக் கூறல்
2. மிகைபடக் கூறல்
3. கூறியதுகூறல்
4. மாறுகொளக் கூறல்
5. வழுச்சொற் கூறல்
6. மயங்க வைத்தல்
7. வெற்றெனத் தொடுத்தல்
8. மற்றொன்று விரித்தல்
9.சென்று தேய்ந்து இரிதல்
10. நின்று பயன் இன்மை.

நன்னூல் கூறும் நூலில் அமைய வேண்டிய பத்து வகை அழகு :

1. சுருங்கச் சொல்லல்
2. விளங்க வைத்தல்
3. படிப்போர்க்கு இனிமை
4. நல்ல சொற்களையே பயன்படுத்தல்
5. ஓசை இனிமை உடைமை
6. ஆழமுடைத்தாதல்
7. வைப்பு முறை
8. உலகம் மலைக்காதபடி (எளிமையாக) எழுதுதல்.
9. விழுமிய வற்றையே விளைவாகத் தரும்படி எழுதுதல்
10. விளங்கும் வண்ணம் எடுத்துக் காட்டுகள் உடையதாதல்.

நன்னூல் கூறும் 32 வகை உத்திகள் :

1. (இதனைச் சொல்லுவேன் என்று முதலில்) சொல்லித் தொடங்குதல்
2. இயல்களை யாதாயினும் ஓர் ஏற்ற முறைப்படி வைத்தல்
3. பலவற்றையும் திரட்டிச் சொல்லுதல்
4. தொகுத்ததை வெவ்வேறாக விரித்துக் கூறல்
5.தன் கருத்தை முடித்துக் காட்டல்
6. முடியுமிடம் முன்பே கூறுதல்
7. தானாக ஒன்றை எடுத்து மொழிதல்
8. பிறர் கருத்தை மேற்கோள் காட்டல்
9. சொல்லின் பொருள் விளங்கும்படி விரித்தல்
10. ஒன்றுக் கொன்று தொடர்புடைய சொற்களை  ஆளுதல்
11. இரட்டுற (இரு பொருள்பட) மொழிதல்
12. முன்பு காரணம் விளங்காததாகச் சொல்லப் பட்டதற்குக் காரணம் விளங்கக் காட்டி முடிவு செய்தல்
13. ஒப்புமை காட்டி முடித்தல்
14. ஒன்றற்குச் சொல்லப் பட்டதை அதனைப் பெறுதற்குரிய மற்றொன்றிற்கு மாட்டிச் சொல்லி நடத்தலாகிய மாட்டெறிந்து ஒழுகல்
15. வழக்கொழிந்ததை விலக்கல்
16. புதியனவற்றை ஏற்றல்
17. முன்னே ஓரிடத்தில் ஒன்றைச் சொல்லிப்பின் அதனை வேண்டுமிடந் தோறும் எடுத்தாளுதல்  
18. பின்பு அதை நிறுவுதல்
19. முன்னதினின்றும் வேறுபட முடித்தல்
20. வேறுபடாது முன்னதின் படி முடித்தல்
21. பின்னே சொல்லப் போவதை, முன்னே ஒரு காரணத்திற்காகச் சொல்ல வேண்டின், சுருக்கிச் சொல்லி, இதனைப் பின்னே சொல்வோம் என்றல்
22. பின்னே சொல்லப் படுவதை முன்னே ஒரு காரணத்திற்காகச் சொல்லப் பட்டதை, பின்னே சொல்ல வேண்டிய இடத்து, முன்னரே சொன்னோம் என்றல்
23. ஐயம் வந்துழி ஒருபக்கம் துணிதல்
24. எடுத்துக் காட்டி நிறுவுதல்
25. தான் தொடங்கிய சொல்லின்படி முடிவெய்த வைத்தல்
26. ஐயப்படுகின்ற இடத்து, இன்னது அன்று இது; இது வேறு என்று துணிந்து சொல்லுதல்
27. செல்லாது விடப் பட்டதையும் பொருந்த முடிவு பெறுமாறு சொல்லுதல்
28. பிறநூற் கருத்தைத் தானும் உடம்படுதல்
29.தான் புதுமையாகக் குறித்து வழங்குவதைப் பல இடங்களில் எடுத்துச் சொல்லுதல்
30. சொல் முடியுமிடத்தே பொருளும் முடியச் செய்தல்
31. இனமானவற்றை ஒருசேரக் கூறுதல்
32. மறைமுகமானவற்றை ஆராய்ந்தறியும்படி வைத்தல்.

இக்காலத்தில் எழுதப்படும் நூலின் பல்வேறு பகுதிகள் :

   நூல் எழுதுவார் தாம் தேவையென்று கருதுகின்றவாறும் தாம் விரும்புகின்றவாறும் நூலின் பகுதிகளை அமைக்கின்றனர். அமைப்பு முறையையும் தம் விருப்பத்திற்கேற்ப முன்பின்னாகவும் வைக்கின்றனர். எனினும் பொதுவான அமைப்பையும் பகுதிகளையும் காண்போம்.
  1. நூலில் முதலில் காண்பது நூலின் அட்டை
2. தலைப்புத் தாள் பக்கம் இதை அரைத் தலைப்புப் பக்கம் என்றும் கூறுவர்
3. தலைப்புப் பக்கம்
4. பதிப்புரிமை பக்கம் அல்லது நூற்குறிப்புப் பக்கம்
5. படையல் அல்லது உரிமையுரை
6. அணிந்துரை
7. முன்னுரை
8. அறிமுகம்
9. நன்றியுரை
10. பொருளடக்கம் 
11. படங்களின் பட்டியல்
12. நூல்
13. பின்னிணைப்பு
14. துணைநூற் பட்டியல்
15. பிழைதிருத்தம்
16. பின்அட்டை

நூலின் கட்டடமும் உறையும் :

   நூல் எளிதில் கிழிந்து விடாமல் இருக்கவும், வேறு வகையில் பழுதுபடா திருக்கவும், நூலிற்கு அழகு சேர்க்கவும் கட்டடம் (Binding)அமைக்கப் படுகிறது. தடித்த அட்டையைக் கொண்டும் மெல்லிய அட்டையைக் கொண்டும் கட்டடம் செய்யப் படுகின்றது.
   பருமனான பெரிய புத்தகங்கள் பெரும்பாலும் தடித்த அட்டையைக் கொண்டு கட்டடம் செய்யப் படுகின்றன. இவ்வாறு கட்டடம் செய்யப்பட்ட மேலட்டையின் மேல் சுற்றி அதனைக் காத்தவாறு அமையும் கொஞ்சம் தடிப்பான வண்ணத்தாள் மேலட்டை உறை ஆகும்.
   முன்னும் பின்னுமுள்ள மேலட்டைகளை மூடி உட்புறம் மடித்தவாறு விடப்படும் தாள் இரண்டிலும் நூலின் சிறப்பைக் கூறும் செய்திகள் இக்கால் அச்சிடப்படுகின்றன. 
   நூலாசிரியர் பெயர், அகவை, கல்வி, தொழில், பெற்ற பரிசுகள், வாழ்க்கைக் குறிப்பு போன்றவற்றை மேலுறையின் முன் மடிப்பிலும், நூல் கூறும் முகன்மைக் கருத்து, இயல் சிறப்புகள், முதன்மை முடிவுகள், நடைச்சிறப்பு போன்றவற்றைப் பின் மடிப்பிலும் அச்சிடுவதும் உண்டு.
   முன்பக்க மேலுறையில், புத்தகப்பெயரும் ஆசிரியர் பெயரும் பொருத்தமான ஓவியம் அல்லது ஒளிப்படம் இடம் பெறுகின்றன.
உறையின் முதுகு அல்லது நடுப்பகுதியில் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ நூற்பெயரும் நூலாசிரியர் பெயரும் அச்சிடப் படுகின்றன.
   நூலை அறிமுகப்படுத்தி நூலின் பின் அட்டையில் சிறு குறிப்பு எழுதுவது நூல் வாங்க விரும்புவார்க்கு உதவியான செய்தியைத் தருவதாக அமையும்.   

மூத்த எழுத்தாளர் கூறும் வழிகாட்டும் நல்லுரைகள் :

     மொழியின் நிலைத்த வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் மக்கள் வழக்கு இன்றியமையாதது ஆவது போலவே அதன் தூய்மைக்கும் பண்பாட்டிற்கும் மரபு, இலக்கணம், பழவழக்கு, இலக்கியமும் ஆகியவை இன்றியமையாதவை ஆகின்றன. சான்றோர் மொழி ஆட்சிகளை மூலமாகக் கொண்டே பண்பாடும் உருப்பெறுகின்றது.
     கொச்சை மொழி, அயற்சொல் பயன்பாட்டிற்கு வரம்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
     பல பேர்கள் சேர்ந்து ஒரு பிழையைச் செய்துவிட்டு அதையே மரபாக்கிவிடும் தன்னலத்தை இன்று எங்கும் காண்கிறோம்.
     பண்பட்ட இலக்கியமொழி -செம்மொழி- களுங்கூட மரபைப் போற்றியே வாழவேண்டும். காலத்திற்கு ஒவ்வாத சில வரையறைகளைக் காலத்திற் கேற்பச் சீர்திருத்திக் கொள்வது தவறன்று. அதுவும் மொழிவல்லுநர் துணையின்றிச் செய்யப்படுமானால் தவறுதான்.
     தப்புத் தப்பாக யாப்பும் கோப்புமின்றி ஆயிரம் கவிதைகள் எழுத முயல்வதைக்  காட்டிலும் எளிமையும் தூய்மையும் தனித்தன்மையும் இலங்க நான்கு வாக்கியங்கள் நன்றாகவும் அழகாகவும் எழுதிவிடுவது எவ்வளவோ சிறந்தது. பிழையில்லாமல் தெளிவாக எழுதுவதே ஓர் அறம் -  இவ்வாறு எழுத்தாளர்க்கும் நூலாசிரியர்க்கும் வழிகாட்டி நெறிப்படுத்துவார் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளராகிய நா.பார்த்தசாரதி.

முடிவாக...
    
     மக்களுக்காக மக்களால் எழுதப்படுவனவே நூல்கள். அவற்றை, மக்கள் வாங்கிப் படிக்க அவர்களை ஈர்க்கும் வகையிலும், படித்தோரை நன்னெறிப் படுத்தி ஊக்கும் வகயிலும் அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு தருவதைத் தொடர்புடைய அனைவரும் இன்றியமையாக் கடமையாகக் கருத வேண்டும். ஈடுபாட்டோடு இதனைச் செய்வதே உயர்ந்த மக்கள் தொண்டாகும்.  

நன்றியுரைப்பு :
1.        தொல்காப்பியம் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகள்.
2.        நன்னூல் விசாகப்பெருமாளையர், சடகோபராமானுசாச்சாரியார் உரைகள்
3.        நன்னூல் எழுத்ததிகாரம் தமிழண்ணல் உரை
4.        மொழியின் வழியே - நா.பார்த்தசாரதி
5.        புத்தகக்கலை முனைவர் அ.விநாயகமூர்த்தி
அனைவர்க்கும் நன்றி.
----------------------------------------------------------------