சனி, 21 மார்ச், 2009

வேண்டுகோள்!


வேண்டுகோள்!

[congress.jpg] 

'காங்கிரசு'க் கட்சி என்று அழைக்கப் படுகின்ற -
இந்தியத் தேசியப் பேராயக் கட்சி
(Indian national congress party) -

*
கொடிய இனவெறியரான சிங்களரின் ஈழத் தமிழின அழிப்பு வினைக்கு முழுத் துணையாகவும் முதன்மைக் கலந்துரைஞராகவும் உள்ளது.

*
குழந்தைகள், சிறுவர்கள் உள்பட பல்லாயிரக் கணக்கான ஏதுமறியாத் தமிழர் கொல்லப்படவும் காயமுறவும் உடலுறுப்புகளை இழந்து சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாகவும் முதன்மைப் பொறுப்பாளராக உள்ளது.

*
நானூறுக்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களைச் சிங்கள இனவெறிக் கடற் படையினர் கொன்றுள்ளனர்; தமிழக மீனவரின் படகுகளையும் வலைகளையும் நாசப் படுத்தி யுள்ளனர். அவர்களின் மீன்களையும் பிறவற்றையும் கொள்ளையடித் துள்ளனர். இதுவரை ஒருமுறை கூடப் பேராயக் கட்சியின் தலைமையிலான இந்திய அரசு, சிங்கள அரசுக்குச் சிறு கண்டனம் தெரிவிக்க வில்லை.

*
தமிழகமே கொதித் தெழுந்து ஈழத் தமிழரையும் தமிழக மீனவரையும் காப்பாற்றக் கோரிப் பல்வேறு வகையிலும் போராட்டங்கள் நடத்தியும், தமிழர்கள் 11 பேர் இதற்காகத் தங்கள் உடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டு உயிர் ஈகம் செய்தும், தமிழ்நாட்டுச் சட்டமன்றமே ஒருங்கிணைந் தெழுந்து ஈழப்போரைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்திய அரசும் 'காங்கிரசு'க் கட்சியும் கொஞ்சம் கூடப் பொருட் படுத்தவில்லை.

*
எனவே, 'காங்கிரசு'க்கு யாரும் ஒப்போலை (வாக்கு) அளிக்காதீர்கள்!
மாந்தநேயம் அறவே இல்லாதவர்கள் பதவியில் அமர வாய்ப்பு அளிக்காதீர்கள்!

'
காங்கிரசை'த் தோற்றோடச் செய்யங்கள்!

 

செவ்வாய், 17 மார்ச், 2009

காசி.ஆனந்தனார் உரையிலிருந்து சில குறிப்புகள்!


28-02-2009 அன்று புதுவையில் மீனவ விடுதலை வேங்கைகள் நடத்திய போர் நிறுத்தக் கோரிக்கை மாநாட்டில் பாவலர் காசி.ஆனந்தனார் ஆற்றிய உணர்வுரையிலிருந்து தொகுத்த சில குறிப்புகள்: 

* ஓர் அரசியல் ஆய்வாளனாக இருந்து கூறுகிறேன்! உலகில் சில நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்திருந்தாலும் இலங்கையில் ஈழச்சிக்கலை, விடுதலைப் புலிகளைப் புறக்கணித்துத் தீர்க்க முடியாது.           எடுத்துக்காட்டாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இலாரி கிளின்டன், விடுதலைப்புலிகள் 'தீவிரவாதிகள் அல்லர்; அவர்கள் ஒடுக்குமுறை எதிர்ப்பாளர்கள்' என்று முன்னர் கூறியதையும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி, விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போர்நிறுத்த அறிவிப்பை ஏற்று, இலங்கை அரசும் போர்நிறுத்தம் அறிவித்து, தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளதையும் கருத்தில் கொள்க.

* 1963 சூன்6 நாளிட்ட 'தி இந்து' நாளிதழில் காலஞ்சென்ற இராசாசியார் எழுதிய கட்டுரையில், 'சிலோன் தமிழர்கள் குடியேறியவர்கள் அல்லர்; அவர்கள் அத்தீவின் பழங்குடிகள்' (ceylon Tamils are not settlers; they are the aborigines of that island) என்று ஈழத் தமிழர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

*  ஈழத்தில் சிங்களமொழித் திணிப்பால் தமிழ் அழிப்பு நடைபெற்று வருகிறது. 'சிங்களம் மட்டுமே' என்ற சட்டத்தைச் சிங்கள ஆட்சியாளர் நிறைவேற்றி தமிழ் அழிப்பு செய்து வருகின்றனர்.
          இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற போது தமிழ்மக்கள் 10 சதுர கற்கள் பரப்பளவிலும் சிங்களர் 15 கற்கள் பரப்பளவிலும் இருந்து வந்தனர். ஆங்கிலேயர் 04-02-1948இல் இலங்கையை விட்டு நீங்கியபோது, தமிழர்கள் 8 சதுர கற்கள் பரப்பிலும் சிங்களர் 17 சதுர கற்கள் பரப்பிலுமாக இருந்தனர்.
          தமிழர் பகுதிகளிஈல் சிங்களக் குடியேற்றத்தினால் தமிழர் வாழிடம் சுருங்கி வருகிறது.

* ஆங்கிலேயர் சிங்களரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த போது 1948இல், தமிழர்களின் மக்கள்தொகை 35 இலக்கம்; சிங்களர் 65 இலக்கம். இப்போது, சிங்களர் தொகை ஒன்றரை கோடி. தமிழர்களோ அதே 35 இலக்கம்.           தமிழ்த் தாய்மார்கள் யாரும் கருவுறாமல் இருந்து விட்டார்கள் என்று கருதல் வேண்டா! சிங்கள இனவெறியர்களால் தமிழர்கள் நாடோறும் அழிக்கப்பட்டு வந்ததை இக் கணக்கே கூறும்.
          எனவே, மொழி அழிப்பு, வாழிடப் பறிப்பு, இன அழிப்பு என்ற கூறுகளால் தமிழ்த் தேசிய இனஅழிப்பு இலங்கையில் நடைபெறுகின்றதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.       இதற்குத தீர்வு, தமிழீழ விடுதலையே என்பதையும் உலகம் புரிந்து கொள்ள வேண்டும். உணர்வாளர்கள் இவற்றையே முழங்க வேண்டும்.   

*  இந்திய விடுதலைப்போரில் இறந்தோர் தொகை ஏறத்தாழ 10,000 பேர். ஈழ விடுதலைப் போரில் இதுவரை இறந்துள்ள ஏதுமறியாத் தமிழர்கள் ஒன்றரை இலக்கம் பேர். போராளிகள் 30,000 பேர்.
          இவற்றோடு, தமிழர்களின் இரண்டரை இலக்கம் வீடுகள் அழித்துத் தரைமட்ட மாக்கப் பட்டுள்ளன.
          கடந்த ஈராண்டுகளில் ஊடகத் துறையினர் 70 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

* ஈழத் தமிழர்கள் அறப் போராட்ட வழியில், 28 ஆண்டுகள் சம உரிமைக்காகப் போராடினர். அப் போராட்டங்களால் கொஞ்சமும் பயன் கிடைக்கவில்லை என்பதோடு மேன்மேலும் தமிழர்கள் தாக்குதலுக் குள்ளாயினர். பின்னரே, கடந்த 32 ஆண்டுகளாகக் கருவியேந்திய அறவழிப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

* 1983ஆம் ஆண்டு ஆகத்து 15இல், அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் திருவாட்டி இந்திரா காந்தியார் தில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய போது, 'இலங்கையில் இனஅழிப்பு நடைபெறுகிறது; நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்' (genocide is going on at Srilanka; we will not stay as spectators) என்று முழக்கம் செய்தார்.

வியாழன், 12 மார்ச், 2009

எச்சரிக்கை வேண்டுகோள்!




     இலங்கையின் முல்லைத்தீவில் முழுப் பேரழிவில் இரண்டரை இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களைக் கொன்றழிக்க சூழ்ச்சி நடைபெறுகின்றது. சிங்களக் கொலைவெறிப் படையின் கொடுங்கொடிய தாக்குதலுக்கு அஞ்சித் தம் சொந்த வீடு வாசல் நிலபுலங்களைத் துறந்திழந்து சென்ற வடக்கிலங்கைத் தமிழர்கள் இரண்டரை இலக்கத்திற்கும் மேற்பட்டோர், பலமுறை இடம் பெயர்ந்து இப்போது முல்லைத்தீவில் அடைக்கலமாகி உள்ளனர்.
    
     ஆனால், இலங்கையின் சிங்கள அரசும் இந்திய அரசும் முல்லைத்தீவில் அடைக்கலம் புகுந்துள்ள ஏதுமறியாத் தமிழர்களின் எண்ணிக்கையை எழுபதாயிரம் என்றும், எண்பதாயிரம் என்றும், அறுபத்தையாயிரம் மட்டுமே என்றும் இக்கால் மாற்றி மாற்றிக் கூறி வருகின்றனர், இந்த எண்ணிக்கை மோசடியின் பின்னே உலகே அதிர்ச்சி அடையக்கூடிய ஒரு கொடும் பேரழிவிற்கு அடிகோலும் சூழ்ச்சி இருப்பதாக மாந்த உரிமை ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

     இலங்கை அரசு ஏதுமறியாத் தமிழர்களை வந்துவிடும்படி வற்புறுத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் பெண்கள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப்படுகின்ற நிலைமையும் ஆண்களில் இளைஞகள் தனியே பிரிக்கப்பட்டுக் கொண்டுசென்ற பின், அவர்களின் பிணங்கள் கடலில் மிதக்கும் நிலைமையுமே நிலவுவதாலும் முல்லைத்தீவில் இப்போது குவிந்துள்ள தமிழர்கள் பாதுகாப்பு வளையங்களுக்குள் வர அஞ்சுகிறார்கள்.

     இந்நிலையில், பாதுகாப்பு வளையத்திற்குள் வராதவர்களை,  அவ்வாறு வராததையே காரணமாக்கி அவர்களைப் 'போரிடுவோர்' (combatant) எனக்கூறிவிட்டு குண்டுமழை பொழிந்து அந்த இலக்கக்கணக்கான தமிழ்மக்களைக் கொன்று குவித்துப் பெரும் பேரழிவு நடத்த சூழ்ச்சி நடைபெறுகிறது.

     நெஞ்சப் பதைப்புடன் எச்சரிக்கின்றோம்! தமிழக அரசே! தமிழர்களே! நடுவண் அரசில் மாந்த நேயமும் நயன்மையுணர்வும் அற்றுப்போகாதவர்களே! இந்தக் கடைசி நேரத்திலாவது உடனடியாகச் செயல்படுங்கள்! முழுப்பேரழிவு நடக்காமல் தடுத்து நிறுத்துங்கள்! சிங்கள இனவெறியாளரிடமிருந்து அத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!

(மக்கள் தொலைக்காட்சியின் 'சங்கப் பலகை'ச் (8-3-2009)செய்தியைக் கேட்டு மனங்கசிந்து வேண்டிய வேண்டுகோள்!)

வியாழன், 26 பிப்ரவரி, 2009

இன்னநிலை புரிந்தெழுவோம்!



      (நான்குகாய் +மா + தேமா)


மூண்டெழுந்த கொந்தளிப்பை முகம்மாற்றித் தணித்துவிடும்
     முடிவைக் கொண்டு
தூண்டலினால் காவலரும் துடிப்புவழக் குரைஞருடன்
     துலக்க மின்றி
வேண்டாராய்ப் பகையுணர்வில் வெறுப்புற்று மோதிடவும்
     விளைவாய்ப் பல்லோர்
ஆண்டடிதாக் குதல்களுக்கே ஆளானார் அவற்றோடே
     அவர்கள் ஊர்தி

காவலரின் கைத்தடிகள் கடுந்தாக்கில் நொறுங்கிவிழ
     கலங்கா நின்ற
நாவலராம் வழக்குரைஞர் நனிமிகவே தாக்கமுற
     நடுங்கா நெஞ்சின்
கோவமிகக் காவலர்குண் டாந்தடிகள் கட்டடத்தைக்
     குறியாய்த் தாக்க
வேவலுற எரிந்ததுகாண் விளைவிலொரு காவலகம்
     வெறுப்பி னாலே!

இன்னவகை மோதலினால் எவருக்கே இன்பயனென்(று)
     எண்ணிப் பாரீர்!
முன்னணியில் நின்றிருந்து முனைந்தீழப் போர்நிறுத்த
     முழக்கம் செய்தோர்
வன்குரலை ஒடுக்கிடவே வலிந்தங்குக் காவலரை
     வரச்செய் தாரே!
இன்னநிலை புரிந்தெழுவோம்! ஈழஉற வைக்காக்க
     எழுவோம் மீண்டும்!

----------------------------------------------------

வெள்ளி, 30 ஜனவரி, 2009

முத்துக்குமார் நினைவாக...!

அவரும் இவரும் நீயும்!
அவர்:
ஒருவருடை இறப்பினுக்கே ஓரினத்தைப் பழிவாங்கும்
     உளங்கொண் டாரோ?
உருளுலகில் இந்நாட்டை உயர்வல்ல அரசாக்க
     உளங்கொண் டாரோ?
உருவாகும் ஈழத்தால் ஒற்றுமைக்கிங்(கு) ஊறென்றே
     உளங்கொண் டாரோ?
ஒருமுடிவாய்ப் பலவகையும் உதவுகிறார் சிங்களர்க்கே
     உணமை ஏதோ?
இவர்:
ஈழத்தில் இனமழிய இவ்வாட்சி எதற்காக
     இனியெம் சொந்தம்
ஆழத்தாழ் துயர்மூழ்கி அழிகின்ற நிலைமாற்ற
     ஆளும் தில்லி
தாழவிடா தாட்சியினைத் தாங்குகின்றோம் ஈழப்போர்
     தடுப்போம்! என்றே
சூழல்கண் டுரைத்தார்பின் சோர்ந்தாரே! பதவிக்காய்ச்
     சுருங்கி னாரே!
நீ:
இங்குதமிழ் நாடாளும் இயலாத்தன் னலத்தாரின்
     ஏய்ப்புக் கூறி
பொங்கீழத் தமிழினத்தைப் பொல்லாரோ டிணைசேர்ந்து
     போரில் மாய்க்கும்
எங்குமிலாக் கொடுமைசெயும் இந்தியத்தின் இரண்டகத்தை
     எடுத்துக் கூறி
மங்கலிலாப் புகழோடே மாய்ந்தமுத்துக் குமாரேயெம்
     மறமே வாழ்க!

வியாழன், 29 ஜனவரி, 2009

ஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்! (Enlightenment through meditation and Telepathy)





(ஆங்கில மூலம் : ஆபிரகாம் தொ. கோவூர் ***  தமிழாக்கம் :  தமிழநம்பி) 

            பேராசிரியர் எல். சி. எவாசி "பாணத்துறை சொற்போரும் புத்த குமுகாயமும்" என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையின் தவறான வழிகாட்டும் கூற்றுக்கள் சிலவற்றை மறுக்காமல் விடக்கூடாது என உறுதியாகக் கருதினேன்.

            ஓக ஊழ்கம் (யோக தியானம்),  ஆதனிக ஊழ்கம் அல்லது அறிவு கடந்த ஊழ்கம் என்னும் பெருங் கேடான ஆர்வப் பித்து பற்றி அவர் புகழ்ந்துரைத்து விளக்கியிருந்தார். அறிவு பெறவும், தெளிவுறவும், அறிவாற்றல் பெருகவும், தன்னுணர்வு பெறவும், முழுமையான மனவளம் பெறவும், இயல்பு கடந்த மன ஆற்றல் பெறவும், உடல் ஒளி வீசிச் சுடரவும் இன்னும் பலவற்றிற்கும் அறிவெல்லை
கடந்த ஊழ்கமே வழி என அக்கட்டுரையில் கூறியிருந்தார்.

            ஒரு பல்கலைக்கழகத் தனித் திறலாரின் தூவலிலிருந்து வருவதால், இச்செய்தி, பொதுமக்களுக்குத் தவறான வழிகாட்டக் காரணமா யிருக்கின்றது.

            இயல்புணர்ச்சியாகிய சில நடத்தைப் பாங்குகளைத் தவிர, மற்ற எல்லா அறிவுகளையும், மாந்தன் அவனுடைய பிறப்பிற்குப் பின்னால், ஐம்பொறிகளின் புலனுணர்வினால்தான் அடைய வேண்டும்; ஊழ்கத்தினால் அடைய முடியாது.

            பிறப்பிலிருந்தே ஐம்புலனுணர்வு சிறிதுமில்லாத ஒருவர், எதனைப்பற்றியும் எந்த ஒரு அறிவுமில்லாத புதல் (வரம்) போலவே வாழ்வார்.

            பேரா. எவாசி சொல்வதைப் போல் ஊழ்கத்தின் மூலம் அறிவைப்பெற முடியுமானால், நாட்டிலுள்ள கல்வி நிலையங்களை யெல்லாம் மூடிவிட்டு அந்த இடங்களில் ஊழ்க நிலையங்களை நிறுவி விடலாமே! கல்விக்காகப் பெருந் தொகைகளை ஏன் செலவிட வேண்டும்?

            நேரடியாகப் புலன்களால் உணரும் 'பொருள் புலக்காட்சி' (objective perception ) போல இல்லாமல் ஒருவரின் அகவுணர்வுப் புலக்காட்சி (subjective perception )கள் உண்மை அல்லாதவையாகவும் தவறானவையாகவும் இருக்கும்.

            எடுத்துக்காட்டாக, ஒரு மன நோயாளியின் இல்பொருள் காட்சிகள் (hallucination) அவருடைய அக உணர்வுக் காட்சிகளின் நுகர்ச்சிகளே அன்றி அவற்றின் பின்னே எந்த உண்மையும் இல்லை.
வேதியல், பூதியல், உயிரியல் மற்றும் உளத்தியல் காரணங்களால் ஒருவரிடம் இல்பொருள் காட்சி நிலைகளைத் தூண்ட முடியும்.

            மயக்க மருந்துகள், வெறியூட்டும் குடிவகைகள், தாளம் தவறாத (சீரான) பறை முழக்கம், கைதட்டல், மந்திரம் ஓதல், பாடுதல், நாட்டியம் ஆடுதல், உடலில் இயக்குநீர்(harmone ) உயிரச்சாரம் மற்றும் நொதிமங்கள் சமனின்மை; அச்சம், அதிர்ச்சி, வேறுபட்ட அறிதுயில், தன்னறிதுயில்(auto hypnosis) முதலியவற்றால் மனவலிமை குறைவானவர்களிடம் இல்பொருள் காட்சி நிலையைத் தூண்ட முடியும்.

            'ஏரி இல்ல'த்தில் அச்சுத்துறையில் வேலை செய்யும் ஒரு தமிழரை - அறிவு திறம்பிய நிலையில் அறிதுயில் மருத்துவத்திற்காக அவருடைய சிங்கள மனைவி என்னிடம் அழைத்து வந்தார். அவருடைய அறிவு திறம்பிய நிலைக்கு ஓக ஊழ்கம்தான் காரணம் என்பது அலசி ஆராய்ந்த போது தெரிந்தது.

            அவர் 'ஓக ஊழ்கம்' பற்றிய தமிழ்ப் புத்தகத்தைப் படித்திருக்கிறார். "ஒருவர் தாமரையமர்கையில் (பத்மாசனத்தில்) அமர்ந்து, ஓம் ரீம் செயமனா சக்தீ... என்ற மந்திரத்தை 108 முறை ஓதினால் ஞானக்கண் திறக்கப்பட்டு புலன் மீறிய காட்சித் திறனையும், முன்னுணருங் காட்சித் திறனையும் அடையலாம்" என்று அப்புத்தகத்தில் படித்திருக்கின்றார்.

     அவ்வாறு நடந்து பார்க்க அவர் முடிவு செய்தார். ஒருநாள் இரவு படுக்கையில் குறுக்குகாலிட்டு அமர்ந்து "ஓம் ரீம் செயமனா சக்தீ... ஓம் ரீம் செயமனா சக்தீ..." என்று சொல்லத் தொடங்கினார்.
அம்மந்திரத்தை முழுமையாக 108 முறை சொல்லி முடிக்குமுன் (ஐம்பது அல்லது அறுபது முறை சொல்லியதும்), "முருகா... முருகா..." எனக் கூவிக் கொண்டே வீடெங்கிலும் ஓடத் தொடங்கினார் என்று விளக்கினார் அவர் மனைவி.

     அன்றிரவிலிருந்து பித்தர் (பைத்தியக்காரர்) போல நடக்கத் தொடங்கிய அவருக்குப் பல மந்திரக் காரர்களிடம் மருத்துவம் பார்த்தனர். மனநோய் மருத்துவ நூல்களில் இத்தகைய நிகழ்ச்சிகள் நிறைய காணப் படுகின்றன.

     கோயில் வழிபாடுகளில் பத்தர்களின் இயல்பு கடந்த நடத்தைகள், பேய் ஆட்டங்கள், மறுமலர்ச்சிக் கூட்டங்கள், பொதுவிருப்ப இசை நிகழ்ச்சிகள், திரளான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் முதலியவை - கருவி முழக்கம், மந்திர வழிபாடுகள், திரும்பத் திரும்ப ஓதுதல்கள், ஆட்ட பாட்டங்கள், ஒலி முழக்கங்கள் முதலியவற்றின் தூண்டுதலால் உண்டாகும் சிறிது நேர அறிவுதிறம்பிய நிலைகளே ஆகும்.

     ஊழ்கம் எனப்படும் மதப்பித்து படிப்படியாகத் தானே தூண்டிக்கொள்ளும் தன்னறிதுயில் முறையாகும்.
ஊழ்கத்தி லுள்ளோரின் இல்பொருள் காட்சிப் புலனுணர்வுகள் பெரும்பாலும் அவர்களின் மதஞ்சார்ந்த உண்மையல்லா நம்பிக்கைகளின் பாற்பட்டவையே!

     ஊழ்கத்திலுள்ள ஒரு கிறித்தவர், வானுலகில் பொன் அரியணையில் அமர்ந்திருக்கும் செகோவா(யூதக்கடவுள்)-வையும், அவருக்கு வலப்புறத்தில் அமர்ந்திருக்கும் ஏசுவையும், இறக்கை உள்ள எண்ணற்ற தூதர்கள் மகிழ்ச்சிப் பா இசைத்துக் கொண்டே சூழ்ந்திருப்பதையும் காண்பதாக மயங்குகிறார். (இல்பொருள் காட்சியாகககாண்கிறார்).

     இந்து, புத்த மதத்தவர் அவரவருடைய முன்பிறவி, அடுத்த பிறவிகளை இல்பொருள் காட்சியாகக் காண்கிறார்.
பலவேறு மயக்க மருந்துகளும் வெறியூட்டும் பொருள்களும் இத்தகைய இல்பொருள் காட்சிகளைத் தூண்டும்.
சிலர், கற்பனைத் திறமிக்க ஊழ்கத்தில் ஆழ்ந்து இயற்கை மீறிய உளத்தியல் ஆற்றல்கள் மாயமந்திரங்கள் பெற்றிருப்பதாக முட்டாள் தனமாகக் கருதிக் கொண்டு அலைக்கழிக்கப் பட்டு நரம்பு நோய்க்குப் பலியாகிறார்கள்.

     எழுதப் படிக்கத் தெரியாத அறியாமையாளரான ஆள்கள் மன மாறாட்டங்களால் தொல்லைப் பட்டால், அவர்களைப் பித்துப் பிடித்தவர்கள் என்று சொல்கின்றனர். அவர்களின் பேச்சுக்கு ஒருவரும் மதிப்புத் தருவதில்லை.

     அதே போழ்து, மன மாறாட்டத்திற்கு ஆளானவர் ஒரு திறமையான அறிவாற்றலுடையவராய் இருந்து விட்டால், அவர் மீமிசை உணர்வு நிலை பெற்றவர், முடிவான
மெய்ம்மை நிலையைக் கண்டவர், தெளிவு பெற்று விட்டவர், கடவுளுடன் ஒன்றியவர், தன்னுணர்வு பெற்றவர் என்றவா றெல்லாம் கூறி, கேட்போரையும் படிப்போரையும் நம்ப வைக்க முடிகிறது. அவருக்கு எண்ணற்ற பத்தர்களும் மாணவர்களும் கூட வந்து சேருகின்றனர்.

     அளப்பரிய திறமை அறிவு பெற்றவர்கள், அறிவு திறம்பிய நிலையில் பெரும்பாலும் மத நிறுவனர்களாகவும் பரப்புநர் களாகவும் ஆகின்றனர்.

     மயக்க மருந்துகளைப் போன்றே ஊழ்கத்தையும் சட்டத்திற்குப் புறம்பானதாக அறிவித்துத் தடைசெய்ய வேண்டும். ஏனென்றால், மயக்க மருந்துகளும் ஊழ்கமும் மாந்த மனத்தை ஒரே வகையாகவே தாக்குகின்றன.

     பேரா.எவாசி ஊழ்கத்திலுள்ளவரின் உடலிலிருந்து ஒளிச்சுடர்
வெளிப்படுகின்றதெனவும் அதை மற்றவர்கள் காணாவிட்டாலும் ஊழ்கத்திலுள்ளவரே மனத்தால் உணர முடிகின்றதெனவும் கூறுகின்றார். மேலும் சொல்லும்போது, "எதையும் நம்பாத சில படித்த பகுத்தறிவாளர்கள், இவர்களின்(ஊழ்கிகளின்) உடலிலிருது ஒளிச்சுடர் வெளிப் படுவதைப் பார்க்காததால், 'இவர்கள் பகுத்தறிவாளர்கள் அல்ல' என்று கூறிச் செல்வார்கள்" என்கிறார்.
எவ்வளவு மடத்தனமான கூற்று இது!

     அகச் சிவப்புக் கதிர்களையும், புற செந்நீலக் கதிர்களையும், அணுவையும், மூலக்கூறுகளையும், உயிரகத்தையும், நீரகத்தையும் தம் கண்களால் பார்க்க முடியாதென்றாலும், அவை இருப்பதை பகுத்தறிவாளர்கள் மறுப்பதில்லை. ஏனென்றால் அப்பொருள்கள் இருப்பதை அறிவியலால் மெய்ப்பிக்க முடியும் என்பதை
அவர்கள் அறிவர்.

     'தூய்மைப் பாதையில் ஐந்தாம் நிலையை அடைந்த' ஒருவரிடமிருந்து ஒளிச்சுடர் வெளிப்பட்டுப் பரவுகின்றதெனக் கூறுவது எவ்வளவு நகைப்பிற் கிடமானது? மயக்க
மில்லாதவர்கள் அவ்வாறு எதையும் காணாத போது, ஊழ்கிகள் கொடுமையான மூளைக் கோளாறு உடையவர்கள் எனபதற்குச் சான்றாக இவ்வாறு கூறுகின்றனர்.

     இது, மனநல மருத்துவ மனையிலுள்ள ஒரு நோயாளி, உயர்ந்த கல்வித்தகுதி உடையவர் என்பதற்காக அவர் சொல்வதை உண்மை என ஏற்பதும், அத்தகைய கல்வித்தகுதி பெறாதவர் என்பதற்காக அவரைக் கவனித்துக் கொள்ளும் செவிலிப் பணியாளர் சொல்வதைப் புறக்கணிப்பதும் எத்தகைய இகழ்ச்சிக் குரியதோ அதைப் போன்றதே ஆகும்.

     ஊழ்கத்திலுள்ளோரின் உடலிலிருந்து ஒளி வெளிப்படுகின தென்பதற்குக் கூடுதல் சான்றாக, பேரா.எவாசி,  இரண்டு அமெரிக்கப் பெண்கள் எழுதிய "இரும்புத் திரைக்குப் பின்னால் இயல்பிகந்த ஆற்றல் கண்டுபிடிப்புகள்" என்ற நூலில் எழுதப் பட்டுள்ள வற்றையும் படங்களையும் தம் வாசகர்களுக்குத் தருகிறார்.

     அதே புத்தகத்தில், இலைகள் மொட்டுகளின் படங்களைச் சுற்றிலும் அதே மாதிரியான ஒளிவட்டம் காணப் படுவதை அப்பேராசிரியர் காணத் தவறியது வியப்பிற் குரியதாகும்.
புதல்களும் (தாவரங்க்ளும்) கூட 'தூய்மைப் பாதையின் ஐந்தாம் நிலையை அடைய' ஊழ்கம் செய்கின்றனவா? அதனால்தான் இலைகளிலும் மொட்டுகளிலும் ஒளிச்சுடர் வெளிப்படுகின்றதா?

     அறிவியலர், உயிருள்ள விலங்குகள் புதல்களின் நார்மத்தினுடைய அகச்சிவப்பு நிழற்படங்களைச் சுற்றிலும் உள்ள ஒளி வட்டத்தில் எந்த புரியாப் புதிரையும் காணவில்லை. அத்தகைய ஒளி வட்டங்கள் வெதண வேறுபாடுகளால் ஏற்படுகின்றனவே
அன்றி ஒளி வெளிப்பாட்டினால் அன்று.

     தொலைவிலுணர்தலை (telepathy) உறுதிப்படுத்தும் பேரா.எவாசி, "தொலைவிலுணர்தலின் மூலமாகச் சொற்கள் ஒரு மனத்திலிருந்து  நானூறு கற்கள் இடைவெளியிலுள்ள இன்னொரு மனத்திற்குச் செலுத்தப் படுகின்றன" என்று கூறுகின்றார்.
விண்வெளியில் பறந்து செல்லும் போதும், நீர்மூழ்கிக் கப்பலில் செல்லும் போதும் முகன்மையான செய்திகளைத் தெரிவிக்க தொலைவி லுணர்தல் கலையைப் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்றும் அவர் கூறுகிறார்.

     தொலைவி லுணர்தல் கலையை ஊழ்கத்தின் வழி வளர்த் தெடுக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். தொலைவி லுணர்தலை எவரும் ஆய்வு செய்து மெய்ப்பித்துக் கொள்ளலாம் என்றால்,
புத்தகங்களிலும் செய்தித் தாள்களிலும் வரும் ஐயத்திற்குரிய செய்தித் துணுக்குகளை ஏன் நம்பவேண்டும்? சார்ந்திருக்க வேண்டும்?

     தொலைவி லுணர்தல், இயல்பு கடந்த நுண்ணோக் காற்றல் ஆகியவற்றிற்கு உரிமை கோருபவர்களைத் தேர்வாய்வு செய்த்தில், இதுவரையிலும் எனக்கு எதிர்மறையான முடிவுகளே கிடைத்திருக்கின்றன. விண்வெளியிலோ நீர்மூழ்கிக் கப்பலிலோ அல்ல, பக்கத்து அறையில் உள்ள ஒருவரின் உள்ளத்தை அறிந்து கொள்ளக் கூடிய ஒருவரை உலகத்தின் எந்த மூலையிலேனும், இரும்புத் திரைக்குப் பின்னால் இருப்பவரா யிருந்தாலும் சரி, பேரா.எவாசி காட்ட முடியுமா?
    
     முதன்முதலில்,  இயல்பு கடந்த உளத்தியல் (para psychology) புகழ் பேரா. செ.பி.இரைன் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற, வட கரோலினாவி லுள்ள தியூக் பல்கலைக் கழகத்தி லிருந்து 1200 கற்களுக்கு அப்பால், கடலில் 100 அடி ஆழத்தில் இருந்த 'நாட்டிலசு' என்னும் நீர்மூழ்கிக் கப்ப்லுக்குத்
தொலைவி லுணர்தலின் மூலம் செய்திகளை அனுப்பிய, வெற்றி மிக்க ஆய்வுக்கதை 1959இல் வெளியிடப் பட்டது.

     அந்நிகழ்ச்சி 1963வரை உலகெங்கிலும் பல செய்தித் தாள்களில் தொடர்ந்து வெளியிடப் பட்டது. 'இந்தக் கிழமை' (this week) என்ற அமெரிக்க இதழ், இது குறித்துத் தனிமுறையில் சிறிது அலசி ஆராயும் வரையில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது.
அவ்விதழின் ஆசிரியரிடம், 'நாட்டிலசு' கப்பலின் தலைவர் ஆர். ஆன்டர்சன் கீழ் உள்ளவாறு கூறினார்:
     "நாட்டிலசு, பாரிய பலவகைச் செயற் பாடுகளில்  ஈடுபட்ட தென்றாலும், தொலைவிலுணர்தலில் அது ஈடுபடவில்லை என்பதுறுதி. தொலைவி லுணர்தல் ஆய்வு பற்றித்
திருவாளர்கள் போவல்சு, பெர்கியர் அளித்துள்ள அறிக்கை முற்றிலும் பொய்யாகும். அந்தக் குறிப்பிட்ட காலத்தில் நாட்டிலசு 'போர்ட்சுமவுத்து' துறைமுகத்தில் கரையேறி முதல் செப்பனீடாய்வின் (overhaul) கீழ் இருந்தது."

     அமெரிக்க வான்படையின் படைமுதல்வர் வில்லியம் போவர்சு,  இந் நீர்மூழ்கி தொலைவி லுணர்தலில் பங்கு பெற்றதாகக் கூறப்பட்டதைப் பற்றிக் கீழுள்ளவாறு அறிவித்தார்:
     "நான் பங்கு கொண்டதாகக் கூறப்பட்ட அந்த ஆய்வு ஒருபோதும் நடைபெற வில்லை. வெசுடிங்கவுசு ஆய்வகத்தில் நடைபெற்றதாகக் கூறப் பட்டுள்ள தொலைவி லுணர்தல்
ஆய்வின் முடிவுகளைச் சரிபார்க்கும் நுண்ணாய்வுப் பணி ஏதும் எனக்குத் தரப்பட வில்லை. உண்மையில், 1959 சூலை 25இல் அலபாமாவில் உள்ள வான் பல்கலைக் கழகத்தில் எனக்குப் பணி அளிக்கப் பட்டிருந்தது. அப்பணி எவ்வகையிலும் மிகை உணர்வு நுண்ணாய்வுகளுடன் தொடர்பு உடையதன்று."

     சுருங்கச் சொன்னால் 'இந்தக் கிழமை'  இதழ் போற்றத்தக்க வகையில், இந்த நீர்மூழ்கி தொலைவி லுணர்தல் கதை ஒரு பெரிய ஏமாற்று என்பதைத் தெளிவாக்கி விட்டது.

     பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் கற்பனைக் கதை எழுதுவாரைப் போல எழுதாமல், உண்மையான வற்றையே எழுத முயற்சி செய்ய வேண்டும்.