புதன், 11 ஜூன், 2008

குளியலறையில் பேய்!

(ஆங்கிலமூலம் : ஆபிரகாம் தொ. கோவூர் - தமிழாக்கம் : தமிழநம்பி            நானியா நல்ல அழகி. பன்னிரண்டு அகவையினள். நல்ல உடலும் அறிவுக் கூரமையும் கொண்டவள். கலகலப்பாகப் பழகும் மனஇயல்பும், மற்றக் குழந்தைகளுடன் விளையாட்டு, நடனம், பாடல்களில் தயக்கமின்றிக் கலந்துகொள்ளும் திறமையும் பெற்றவள். அதனால் அவளைப் பள்ளிக் கூடத்திலும் விளையாடுமிடத்திலும் பலரும் அறிந்திருந்தனர்.
            அவள் படிப்பிலும் கெட்டிக்காரி. ஆண்டு இறுதித் தேர்வில், 35 மாணவிகள் உள்ள வகுப்பில் ஐந்தாவது மாணவியாக அவள் தேர்வு பெற்றாள். கணக்குப் பாடத்திலும் பேச்சுப் போட்டியிலும் வகுப்பில் அவளே முதல் மாணவி.
            கொழும்பு 'செய்தித் தூதர் தெரு'விலுள்ளது நானியாவின் வீடு. 1964 சூலை31ஆம் நாள்வரை இன்பம் தவழும் இல்லமாகவே இருந்தது அவ்வீடு. மறுநாளிலிருந்து நானியாவிடம் காணப்பட்ட திடீர் மாறுதல், குடும்பத்தினர் அனைவரையும் மிகவும் கண்கலங்கச் செய்து விட்டது.
            நானியா, முற்றிலும் மாறுபட்ட ஒருத்தியைப் போல ஆகிவிட்டாள். மகிழ்ச்சியும் கலகலப்பும் அவளைவிட்டு நீங்கிவிட்டன. அவளுடைய விழிகள் வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரிந்தன; முன்பிதுக்கமாகவும் கசிவுற்ற வண்ணமும் காணப்பட்டன.
            ஒவ்வொரு நாளும் இரவு வந்ததும், கடுமையாக உடலை முறுக்கிக் கொண்டு உரக்கக் கூச்சலிடத் தொடங்கினாள். அவளுடைய தாயும் தந்தையும் அவளைக் கட்டுப் படுத்துவதற்குப் பெரும்பாடு பட்டனர். பலமுறை வீட்டைவிட்டு ஓடிப்போக அவள் முயற்சி செய்தாள். எதைச் சொல்லியும் அவளை அமைதிப் படுத்தவே முடியவில்லை.
            அவளுடைய அலறலுக்குக் காரணத்தைக் கேட்டபோது, யாரோ அவள் மென்னியை நெறித்துக் கொல்வதாகக் கூறினாள். அச்சம் மிகுந்த நிலையில் தொடர்பில்லாது பேசிக் கொண்டிருந்தாள்.
            சில நேரங்களில் தன் நினைவிழந்திருக்கும்போது, சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோன தன் அத்தைமகள் சாரினாவைப் போலப் பேசத் தொடங்கினாள். களைத்துப்போய் சோர்வுற்ற பின்பே தன்னிலைக்குத் திரும்பினாள்.
            நானியாவின் நடத்தை குடும்பத்தாரை மிகவும் நிலை குலையச் செய்த்து. நெருங்கிய உறவினர் சிலர் இரக்கத்தோடும் இன்னும் சிலர் ஒருவகை ஆவலோடும் அடிக்கடி வந்து பார்த்துச் சென்றனர். அவர்களனைவரும் நானியா குணமடைய அவரவருக்குத் தோன்றிய 'சிறந்த வழி'யை தயக்கமின்றிக் கூறிச் சென்றனர். பேரளவுக்கு மந்திரக்காரர் பேயோட்டிகளின் பெயர்க ளெல்லாம் அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன.
            இப்படிப் பட்டக் கொடிய துன்பச் சூழலில் மக்கள் அறிவுநுட்ப முடையவர்களா யிருந்தாலுங் கூட மந்திரக்காரர்களிடத்தும் பேயோட்டிகளிடத்தும் ஏமாந்து போவது புதுமையில்லை அல்லவா?
            முதலமுதலாகப் பேயோட்ட வந்தவர் 'வெள்ளைக் குருவி' என்ற பகடிப் பெயரால் அழைக்கப்பட்டு வந்த ஒரு நாட்டுமருத்துவர் ஆவார். நெடுநேரம் மந்திரம் ஓதியபின் நானியாவின் தலைமயிரில் ஐந்து முடிச்சுகளைப் போட்டுவிட்டு, வலக்கைத் தோள் தசையில் ஒரு காவி வண்ணக் கயிற்றைக் கட்டிவிட்டார். இனி எந்தத் தொல்லையும் இருக்காது என்று கூறிவிட்டுத் தன் கூலியைப் பெற்றுக் கொண்டு 'வெள்ளைக் குருவி' பறந்து சென்றது. ஆனால், அடுத்தநாள் காலையிலேயே அப்பெண் வழக்கம் போலக் கூச்சலிடத் தொடங்கினாள்.
            இரண்டு நாட்களுக்குப் பின்னர்ப் பக்கத்து வீட்டுக்காரரின் பரிந்துரையின்படி மலாயா மந்திரக்காரர் ஒருவர் அழைத்துவரப்பட்டார். இவர், ஒரு துண்டுத்தாளில் சில குரான் வரிகளை அரபியில் எழுதினார். அத்தாளை உருளையாகச் சுருட்டிக் கருப்பு நூலினால் கட்டினார். பிறகு, நீரில் நனைந்து விடாதிருக்க அதை உருக்கிய மெழுகில் மூழ்க்கி எடுத்தார். இருபத்தொரு முடிச்சுகள் போடப்பட்ட கருப்புக் கயிற்றில் அதைக் கட்டினார். அக்கயிற்றை நானியாவின் கழுத்தில் கட்டிவிட்டுத் தன் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தார்! அப்பெண்ணின் அவலக் கூச்சல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது!
            மூன்றாவதாக அழைத்து வரப்பட்டவர் கொழும்பு 'ஒன்றியநகரை'ச் சேரந்த முதிய முசுலிம் மந்திரக்காரர். இவர், புகைபோட்டு எலிகள் பாம்புகளை வளையிலிருந்து வெளியேற்றுவதைப் போன்று கெட்ட ஆவியையும் விரட்டி ஓட்டுகிறவராம்! ஒருகலத்தில் உலர்ந்த கழுதைச் சாணத்தைப் போட்டு அதில் நெருப்பு வைத்தார். அச்சாணத்திலிருந்து அடர்ந்த புகை எழுந்ததும், அரபியில் மந்திரங்களை ஓதிக்கொண்டே நானியாவின் உடலைச் சுற்றிலும் பலமுறை அப்புகையைச் செலுத்தினார். அவரும் தன் கூலியை வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார்! ஆனால் பயன் ஏதும் ஏற்பட்ட பாடில்லை!
            நானியா, சமையலறைக்கு அருகிலுள்ள குளிப்பறைக்குச் செல்லும் போதெல்லாம் அவளுடைய அச்சமும் கூச்சலும் அதிகமாயின. சில குடும்ப நண்பர்கள் அவளை வேறிடத்தில் சிலநாட்கள் வைத்திருப்பது நல்லதெனக் கூறினர். அவ்வாறே, நானியா அவளுடைய அத்தையின் வீட்டிற்கு அனுப்பப் பட்டாள். அங்கு தங்கிய சில நாட்களில், அவள் நிலையில் முன்னேற்றம் இருந்தது. நானியா வீட்டிற்குத் திரும்ப விரும்பினாள்.
            வீட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டதும், மறுபடியும் அதே தொல்லை முன்பைவிடக் கடுமையாக நிகழத் தொடங்கியது. இறந்துபோன அத்தை மகளின் பேய், அதனுடன் வருமாறு தன்னை அழைத்துக் கொண்டிருப்பதாக நானியா கூறினாள்.
            பேயைப் பற்றிக் கூறியதால் பெற்றோர் மிகவும் அச்சமுற்றனர். ஆற்றல் மிகுந்த பெரிய மந்திரக் காரர்களின் துணையைப் பெறுவதென அவர்கள் முடிவு செய்தனர்.
            நான்காவதாக அழைத்து வரப்பட்ட பேயோட்டி, கொழும்பு சிரிபினா சந்திலிருந்த மற்றொரு முதிய முசுலிம் மந்திரக்காரர். முன்பு வந்தவர்களைப போலவே, இவரும் சில மந்திரக் கயிறுகளை அப்பெண்ணின் மணிக்கட்டிலும் கழுத்திலும் கட்டினார். கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றார். ஆனால், பயனேதும் விளையவில்லை!
            அடுத்து வந்த ஆள், கொழும்பு மஞ்சிகர் தெருவிலிருந்த குருனான்சி என்ற சிங்கள மந்திரக்காரன். குடும்ப எதிரிகளால் வைக்கப்பட்ட 'வைப்பு'தான் நானியாவின் துன்பத்திற்குக் காரணமென்றான். எலுமிச்சை வெட்டுஞ் சடங்கு செய்து அந்த 'வைப்பை' எடுத்தால்தான் துன்பங்கள் தொலையும் என்று கூறினான். அவ்வாறே, பெருஞ்செலவு செய்து அச்சடங்கு நடத்தப்பட்டது. நானியாவின் கழுத்தில் ஒரு சுருட்டகடு (தாயத்து) கட்டப் பட்டது.
            எலுமிச்சை வெட்டுஞ் சடங்கும் பயனளிக்காமற் போன பின்னால், மாசுகேலியாவிலிருந்து ஒரு பெயர் பெற்ற மலையாள முசுலிம் மதகுருவை அழைத்து வந்தனர். அந்த ஆள் இரண்டு நாள் மந்திரம் ஓதி இறை வழிபாடு செய்து, கடைசியில் ஒரு சுருட்டகடை நானியாவின் தந்தையிடம் கொடுத்து, அதனை அவள் தூங்கும்போது அவளுக்குத் தெரியாமல் தலையணைக்குள் வைக்க வேண்டுமெனக் கூறிச் சென்றான். இதுவுங்கூட எந்த நன்மையுந் தந்திடவில்லை!
            ஆறு பேயோட்டிகளை அழைத்து வந்தும் பெரும் பொருளைச் செலவழித்தும் ஏமாறிப் போனபிறகு, அப்பெண்ணின் மன நோய்க்குப் பேயோட்டிகளின் உதவியை நாடியதைத் தொடக்கத்திலிருந்தேக் கண்டித்து வந்த கற்ற்றிந்த நண்பர் ஒருவரின் கருத்தைக் கேட்க இசைந்தனர்.
            1964 ஆகத்து 20ஆம் நாள் நானியாவின் தந்தை அகமதும் மாமன் அமீதும் என்னிடம் வந்தனர். ஆங்கிலச்செய்தித்தாள் ஒன்றின் துணை யாசிரியரான திரு. தவ்பீக் தந்திருந்த அறிமுகக் கடிதத்தைக் கொடுத்தனர். அவர்கள் வீட்டில் நடந்தவை எல்லாவற்றையும் தெளிவாகக் கூறினர். முழுவதும் கேட்டபிறகு அப்பெண்ணை ஆகத்து 24ஆம் நாள் பகல் 2-30 மணிக்கு அழைத்து வருமாறு அவர்களிடம் கூறினேன்.
            குறித்த நாளில், நான்கு ஆண்கள் மூன்று பெண்கள் இரண்டு பையன்கள் அடங்கிய கூட்டம் நானியாவுடன் வந்தது. நானியா நினைவு இழந்தவளைப் போலக் காணப் பட்டாள். இரு பெண்கள் அவளைத் தாங்கியவாறு அழைத்து வர வேண்டியிருந்தது.
            அக்கூட்டத்தை வரவேற்பறையிலேயே இருக்கச் சொல்விட்டு, நானியாவை மட்டும் மாடியிலிருந்த என் தீராய்வு அறைக்கு வருமாறு அழைத்தார் என் மனைவி. நானியா மேலே வர விரும்பவில்லை. கொஞ்ச நேரம் அவளிடம் அன்போடும் இனிமையோடும் பேசி ஒப்புக்கொள்ள வைத்து தன்னுடன் அழைத்து வந்தார்.
            நானியாவின் உடலெங்கும் மந்திரக் கயிறுகளும் சுருட்டகடுகளுமாகக் காணப்பட்டன! முதலில் கத்தரிக்கோலை எடுத்து அவற்றையெல்லாம் வெட்டி எறிந்தேன். அவளை ஒரு மென் படுக்கையில் படுக்கச்செய்து ஓய்வு கொள்ளுமாறு கூறினேன்.
            அறிதுயில் (hypnosis) முறையில் உள் மனத்தைத் திறக்கச் செய்ததும், நானியா தடையின்றி பேசத் தொடங்கினாள். அவளிடமிருந்த நான் தெரிந்து கொண்ட செய்தியைக் கீழே தருகிறேன்.
            நானியா அவள் அத்தைமகள் சாரினாவிடம் மிக அதிகமான அன்பு கொண்டிருந்தாள். 1964 மே 14ஆம்நாள் முழுவதும் நானியா வீட்டில் அவளோடு சாரினா இருந்தாள். அவர்கள் இருவரும் பகல் முழுவதையும் விளையாட்டிலும் மகிழ்ச்சியான பேச்சுகளிலுமாகக் கழித்தனர். மாலையில் சாரினா கடுமையாகத் தலைவலிப்பதாகக் கூறினாள்.
            மறுநாள் சாரினாவைக் குடும்ப மருத்துவரிடம் காட்டினர். அவர் மூளை வல்லுநர்களிடம் காட்டவேண்டுமெனக் கூறினார். இலங்கையின் புகழ்பெற்ற நரம்பு மருத்துவர்கள் இருவர் சாரினாவை ஆய்வு செய்து, அவளுடைய மூளையில் கட்டி இருப்பதாகவும் உடனே அறுவை செய்யப்பட வேண்டு மெனவும் கூறினர். அறுவையின் பயன் மருத்துவர்கள் மகிழும்படியாக அமையவில்லை. சாரினா இரண்டு நாள்கள் நினைவிழந்தவாறே இருந்தபின் மே 18ஆம் நாள் இறந்து போனாள்.
            சாரினாவின் சாவு அவளுடைய உறவினர்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்த்து. குறிப்பாக அவளுடைய அணுக்கத்தோழி நானியா கடுமையான அதிர்ச்சி அடைந்தாள்!
            சாரினாவின் உடல் மருத்துவமனையி லிருந்து வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டு, மறுநாள் அடக்கம் செய்யப் பட்டது. குழந்தைகள் அப்பிணத்தைப் பார்க்கா வகையில் தடுக்கப்பட்டனர். நானியா தன் அன்புத் தோழியைக் கடைசியாகப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் பெரியவர்களின் கால் இடைவெளி வழியே நுழைந்து எட்டிப் பார்த்தாள். முகத்தைத் தவிர உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடி வைக்கப் பட்டிருந்தது.
            நாள்கள் செல்லச் செல்ல குடும்பப் பெரியவர்கள் மனத்திலிருந்து சாரினாவின் சாவு மறைந்து போயிற்று. ஆனால் குழந்தைகளின் இளம் நெஞ்சங்களிலிருந்து அவ்வளவு எளிதில் மறையவில்லை. நானியாவும் அவள் தம்பிகளும் சாரினாவுடன் விளையாடி மகிழ்ந்த இன்ப நாள்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
            1964 சூலை 15ஆம் நாள் இரவு எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நானியாவின் சிறிய தம்பி படுக்கையிலிருந்து எழுந்துத் தாயிடம் ஓடிப்போய் அறையின் மூலையில் சாரினாவின் பேயுருவைப் பார்த்ததாகக் கூறினான். திடுக்கிட்ட அம்மா விளக்கைப் போட்டுவிட்டு, அவன் காட்டிய மூலையைப் பார்த்தாள். அங்கே ஒரு பாவாடை கொடியில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் பாவாடையையே பேயாக நினைத்து விட்டதைப் புரிந்து கொண்டாள்.
            மறுநாள் அம்மாவும் அவனும் அந்நிகழ்ச்சியை எல்லாரிடமும் கூறிச் சிரித்துக் கொண்டனர். அனைவருக்கும் நகைக்கத் தக்கதாக இருந்த அந்த நிகழ்ச்சி, நுட்பம் மிகுந்த நானியாவை அன்றிலிருந்து மிகவும் மனச்சோர்வு கொள்ளச் செய்த்து.
            1964 சூலை 31ஆம் நாள் நானியா சமையலறையில் இருந்து இருண்ட இடைவெளி வழியே குளியலறைக்குச் சென்ன்றாள். இருள் மிகுந்த குளியலறையில் உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடப் பட்டிருந்த சாரினாவின் பேய்முகத்தைப் பார்த்தாள்! பெரும் அலறலுடன் வெளியே ஓடி வந்துவிட்டாள். அன்றிரவு தனியே படுக்க அஞ்சித் தாயுடன் உறங்கினாள். தூங்கிக் கொண்டிருக்கும் போதே பெருங் கூச்சலுடன் எழுந்து விட்டாள்.
            சாரினாவின் பேய் நானியாவைத் தன்னுடன் வருமாறு அழைத்த தாகவும் அவள் வரமாட்டேன் என்றதும், அப்பேய் அவளுடைய கழுத்தை நெறிக்க முயற்சி செய்த்தாகவும் கூறினாள். அதற்குப் பிறகு, நானியா, வீட்டின் இருண்ட மூலைகளைப் பார்க்கும் போதெல்லாம் பல தடவைகள் சாரினாவின் முகத்தைப் பார்த்தாள்!
            நீண்ட நேர அறிதுயில் அறிவுரைகளால், இல்லாத சாரினாப் பேயை நானியாவின் உள் மனத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். செயற்கையாக உருவாக்கப் பட்ட பேயைப்பற்றிய அச்சங்கள் அறிதுயில் அறிவுரைகளால் நானியாவின் உள்ளத்திலிருந்தும் நீக்கப்பட்டதும், அவள் தன் இயல்பான நிலைக்கு மீண்டு வந்தாள்.
            அறிதுயில் உறக்கத்திலிருந்து மகிழ்ச்சிப் புன்னகையுடன் விழித் தெழுந்தாள் நானியா. களிப்போடு படிக்கட்டுகளில் இறங்கி ஓடினாள், தம் உறவினர்களைக் காண்பதற்காக!
            கடந்த 24 நாள்களாக நானியாவிடம் காணப்பாத புன்னகையைக் கண்டதும் பெற்றோரும் மற்ற உறவினரும் மகிழ்ச்சியில் பூரித்து மயிர்சிலிர்த்துப் போனார்கள். மிகுந்த மனத்துன்பத் தோடும் கனத்த நெஞ்சோடும் வந்த அக்கூட்டத்தினர் பெரு மகிழ்ச்சியோடு எனக்கும் என் மனைவிக்கும் நன்றி கூறிச் சென்றனர். நானியா போகும்போது தன் வீட்டிற்கு வரவேண்டுமென எங்களுக்கு அழைப்பு விடுத்துச் சென்றாள்.
            ஒரு மாதம் கழிந்தபின் நானியாவின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். பள்ளிக்குச் சென்றிருந்த நானியாவுக்குச் செய்தி தெரிவிக்கப் பட்டதும் பத்தே நிமையத்தில் பறந்தோடி வந்தாள், கலகலப்பும் மகிழ்ச்சியும் மிக்கவளாக!
            அரைமணி நேரம் அக்குடும்பத்துடன் இருந்துவிட்டுக் கிளம்பினோம்! வரும்போது, பெற்றோரின் மூட நம்பிக்கையால் ஓர் அறிவு மிகுந்த பெண் தீராத நரம்புக் கோளாற்றுக்கு ஆளாகி விடாமல் காப்பாற்றிய மகிழ்ச்சி எங்கள் நெஞ்சை நிறைத்திருந்தது.
குறிப்பு : அறிவியல் ஆய்வறிஞரான ஆபிரகாம் தொ. கோவூர் அவர்கள் தம்முடைய நிகழ்வாய்வு(case study)களைக் கொண்டு எழுதிய 'கடவுளர், பேய்கள், ஆவிகள்' (Gods Demons and Spirits) என்ற நூலில் இந்த உண்மைக் கதை உள்ளது.

வியாழன், 5 ஜூன், 2008

பாவாணரின் 'திரவிடத்தாய்'


            தமிழ்மொழி, இந்திய நடுவண் அரசால் 'செம்மொழி 'என 17-09-2004இல் அறிவிக்கப் பட்டது. இந்திய அரசின் இவ்வறிவிப்பிற்கு நெடுங்காலம் முன்னரே, மொழியறிஞர்கள், தமிழை இயற்கைமொழி, முதன்மொழி, உயர்தனிச் செம்மொழி எனப் பலவாறு பாராட்டி உரைத்துள்ளனர். இன்றைக்கு இந்தியா என்றழைக்கப்படும் பண்டை நாவலந்தீவு முழுவதிலும் மக்கள் தமிழ்மொழியே பேசினர். ஆரியர் வருகைக்குப் பின், பல்வேறு சூழ்ச்சி கரவுச் செயல்களால் தமிழ் தாழ்வுறுத்தப்பட்டுக் குலைந் துலைந்து நிலையிழந் திழிந்தது.         தமிழருள்ளும் தன்மானமும் தாய்மொழிக் காப்புணர்வும் மிக்க சிலர் தாய்மொழி மீடசிக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சிகளுக்குத் தம் அறிவழுத்தம் சான்ற ஆக்கமான அறிவு வெளிப்பாடு களால் பெரும் வலிவைச் சேர்த்தவர், பாவாணர் எனப் பரவலாகப் பலராலும் அழைக்கப்படும் தேவநேயப் பாவாணர் ஆவார். அஃகி அகன்ற தம் ஆய்வறிவால், மொழியாய்வில் மாபெரும் விழிப்புணர்வை உண்டாக்கிய பெருமை அவருக்கே உரியதாகும்.
            திரவிடத்தாய்மறுபதிப்பை வெளியிட்ட 'தமிழ்மண் பதிப்பக' நிறுவுநரான தமிழ்த்திரு கோ.இளவழகனார், அண்மைக் காலத்தில் பாவாணரின் நூற்களைத் தொகுப்பாக வெளியிட்டவ ராவார். அந்நூல்களின் பதிப்புரையில் ஒருவரைப் பற்றிக் கீழ்காணும் வகையில் நன்றியுணர்வோடு போற்றி வணங்கி குறிப்பிட்டெழுதுகிறார் : "இவர் தோன்றி யிராவிடில், குடத்துள் இட்ட விளக்காக இருந்த மொழிநூல் மூதறிஞர் பாவாணர் அவர்களைத் தமிழுலகம் ஏற்றிப் போற்றியிருக்காது; எங்களைப் போன்றவர்களும் அவர்தம் பேரறிவைக் கண்டு மகிழ்ந்திருக்க முட்டியாது."
            இளவழகனாரால் இவ்வாறு குறுப்பிடப் பட்டவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார். இவர், பாவாணரின் தலைசிறந்த மாணாக்கரும் தமிழின விடுதலைப் பாவலரும் தென்மொழி', 'தமிழ்ச்சிட்டு', 'தமிழ்நிலம்' ஆகிய மூன்று தூயதமிழ் இதழ்களின் ஆசிரியருமாவார். கல்வியாளரிடையேயும், மாணவரிடையேயும், பொதுமக்களிடையேயும் தூயதமிழ் உணர்விற்கு வித்திட்டு வளர்த் தெடுத்த பெருமைக் குரியவர் இவர்.
            இத்தகைய சிறப்பிற்குரிய பாவலரேறு, பாவாணரைப் பற்றி எழுதுகையில், “இவர் வாயினின்று சரமாரியாக வந்துவிழும் தனித்தமிழ் ஆராய்ச்சிக் கருத்துக்களை இதுவரை எந்த அறிஞரும் தமிழ்மொழிக்கு வழங்கிவிட வில்லை. தமிழ்த் துறைக்கு அவர் தொண்டு புதியது; தமிழர்க்கு அவர் கருத்துக்கள் மயக்கறுப்பன; மேனாட்டார்க்கு அவர் நூல்கள் வியப்பளிப்பன. அவர் எடுத்துக்கொண்ட முயற்சி அரியது. தொல்காப்பியர் காலத்திற்குப் பின், தமிழ் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் ஒட்டுமொத்த முயற்சிக்குப் 'பாவாணர்' என்றே பெயரிடலாம்" என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.


ஆய்வுலகிற்கு அறிமுகம் 
            ஐம்பானாண்டுக் கடுங்கடிய உழைப்பில் பாவாணர் எழுதிய 39 தமிழ் நூல்களும், இரண்டு ஆங்கில நூல்களும், 152 கட்டுரைகளும், அருஞ்சிறப் பார்ந்த மடல்கள் பலவும் தமிழருக்கும் உலக மொழியாராய்ச்சி யாளர்க்கும் அரிய விளக்கந் தந்து வருகின்றன. 1931இல், அவரின் 29ஆம் அகவையில், 'செந்தமிழ்ச்செல்வி' இதழில் 'மொழியாராய்ச்சி' (Comparative Philology) என்னும் தம் முதல் ஆய்வுக்கட்டுரையைப் பாவாணர் எழுதினார். அதன்பின், 1940இல், தம் 38ஆம் அகவையில் 'ஒப்பியன் மொழிநூல்' என்னும் அரிய நூலினை எழுதி வெளியிட்டார். இவ் 'ஒப்பியன் மொழிநூல்' என்னும் நூலே, பாவாணருக்குத் தமிழுலகில் சிறந்ததோர் இடத்தை முதற்கண் வழங்கியதோ டமையாது ஆய்வுலகத்தினர் கவனத்தையும் ஈர்த்தது.

திரவிடத்தாய் 
            'திரவிடத்தாய்' பாவாணரின் சொந்தப்பதிப்பாக 1944இல் வெளிவந்தது . 2000த்தில் தமிழ்மண் பதிப்பக வெளியீடாக வந்தது. இந்நூல், ஒப்பியன் மொழிநூலின் முதன்மடலத்தில் மூன்றாம் பாகத்தின் பிற்பகுதியாக வருவதாகப் பாவாணர் நூலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். தமிழையும் பிற திரவிட மொழிகளையும் ஆராய்வதால் தமிழின் சிறப்பையும் பழந்தமிழரின் பெருமையையும் அறிவதுடன், உலக முழுதுந் தழீஇய குலநூல் (Ethnology), வரலாற்று நூல்(History), மொழிநூல் (Philology) ஆகிய முக்கலை களின் திறவுகோலையும் காணப் பெறலாம் என்று பாவாணர் முகவுரையில் கூறுவதையே இந்நூலின் நோக்கமாகக் கொள்ளலாம். 115 பக்கங்களைக் கொண்ட திரவிடத்தாயில், முன்னுரை, மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு, முடிவு என்னும் ஆறு தலைப்புகளில் அரிய பல ஆய்வுக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. 

முன்னுரைப் பகுயில் உள்ள சில அரிய செய்திகள்
            மொழி, கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்தற்குக் கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதி; ஓசையைப் பொருளுணர்த்தும் அடையாளமாகக் கொண்டது. முதலில் மாந்தன் தோன்றிய இடத்தினின்றும் மொழியில்லா நிலையில் சில முறையும் மொழி தோன்றியபின் சில முறையுமாக மக்கள் பல திசையிலும் பலமுறை பரவிப் போயிருக் கின்றனர். மொழியில்லாது பிரிந்து போனவர் தாம் போன இடங்களில் புதிதாய்த் தத்தமக்கு ஏற்றவாறும் இயன்றவாறும் இயன்மொழிகளை ஆக்கிக் கொண்டனர். மொழி தோன்றியபின் பிரிந்து போனவர் தத்தம் சுற்றுச் சார்பிற்கேற்பப் புதுச் சொற்களை அமைத்தும் தட்பவெப்ப நிலைக்கேற்பப் பழஞ்சொற்களைத் திரித்துங் கொண்டனர். தமிழ் என்னும் பெயர்க்குப் பொருத்தமான பொருள்கள் தனிமையாக ழகரத்தைக் கொண்டது, தனிமை என இரண்டுமாம். தமிழ் இனிமையா யிருத்தலின் இனிமைப்பொருள் கூறுவர். 
தமிழ் தோன்றிய இடம்
            பன்னூராயிரம் ஆண்டுகட்கு முன்னே, குமரிமுனைக்குத் தெற்கே, இந்தியா தென்கண்டம் (ஆத்திரேலியா) ஆப்பிரிக்கா என்ற மூன்று கண்டங்களையும் இணைத்துக் கொண்டு ஒரு பெரு நிலப்பரப்பிருந்த தென்றும், அங்கேதான் மாந்தன் தோன்றினா னென்றும், அது பன்னூராயிரம் ஆண்டுகள் நிலைபெற்ற பின், பல கடல்கோள்களால் தென்பெருங் கடலில் மூழ்கி விட்ட தென்றும் எக்கேல், இசுகாட் எலியட் முதலிய மேலை யாராய்ச்சியாளர் கூறுகின்றனர். அதற்கு 'லெமூரியா', 'கான்டுவானா' என்று பெயர்களையும் இட்டிருக்கின்றனர். தெற்கே அமிழ்ந்து போன குமரிநாடே தமிழர் தொல்லகம். அதுவே தமிழ் தோன்றிய இடம்.
            தமிழ், பனிமலை (இமயமலை) தோன்றாத முற்காலத்தில் நாவலந்தேயம் முழுமையும் வழங்கி வந்தது. தொல்காப்பியர் காலத்தில் வேங்கடத்திற்கும் (தெற்கே அமிழ்ந்து போன) குமரி மலைக்கும் இடையில் வழங்கி வந்தது பண்டைக் காலத்தில் நாட்டுப்பெயர்களும் மொழிப்பெயர்களும் 'அம்' ஈறு பெற்றே வழங்கின. தமிழகம் என்பது குலம், நாடு, மொழி ஆகிய மூன்றையும் குறிக்கும் சொல். தெளிவின் பொருட்டு நாட்டைக் குறிக்கும் போது தமிழகம் என வழங்கினர். சமற்கிருத நூல்களில் (தமிழம்), 'த்ரமிளம்' என்று வழங்கிவந்த சொல், த்ரமிடம், த்ரவிடம் எனத் திரிந்து தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது.
            தமிழ் என்னும் பெயர் எங்ஙனம் திராவிடம் எனத்திரிந்ததோ, அங்ஙனமே தமிழாகிய மொழியும் பிற திரவிட மொழிகளாய்த் திரிந்ததென்க. 

நான்கு வகைச்சொற்கள் 
            செந்தமிழ்ச் சொற்கள் இயற்சொல், திரிசொல், என இரண்டாக வகுக்கப்பட்டன. இயல்பானசொல் இயற்சொல்; அதனின்று திரிக்கப்பட்ட சொல் திரிசொல்.
இயற்சொல்(Primitives) : எடுத்துக்காட்டு : கிள், சேர்
திரிசொல் (Derivatives) : எடுத்துக்காட்டு : கிள்ளை, சேரி
இயற்சொல், திரிசொல் இரண்டும் செந்தமிழ்ச்சொற்கள்.
திசைச்சொல் : கொடுந்தமிழ்ச்சொல் (எ-டு) போயினாடு (தெலுங்கு)                                                    [போயினான் (தமிழ்)]
அயற்சொல் : வடசொல், ஆங்கிலச்சொல், போர்த்துகீசியச் சொல் முதலியன. 

திரவிட மொழிகள் 
            ஒரு காலத்தில் ஒரு மொழியே(தமிழே), நாவலந்தேய முழுவதும் தென்கோடியிலிருந்து வடகோடி நோக்கிச் சிறிதுசிறிதாய்த் திரிந்து வழங்கிய தென்பதையும் (மொழி பெயர் தேயம்), ஆரியக் கலப்பில்லா விட்டால் இன்றும் வடநாட்டில் திரவிடமே வழங்கு மென்பதையும் உய்த்துணரலாம். தமிழ் அல்லது தமிழம் என்னும் பெயர் போன்றே, திரவிடம் என்பதும் செந்தமிழ் கொடுந்தமிழ் இருவகைத் தமிழையும் ஒருங்கே உணர்த்தி வந்தது. தமிழினின்று முதலாவது பிரிந்துபோன கொடுந்தமிழ் மொழிகள் கூர்ச்சரமும் மகாராட்டிரமுமாம். அதன்பின் தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் முறையே பிரிந்து போனபின் தமிழ் என்னும் பெயர் சோழ பாண்டிய நாட்டுப் பகுதியை மட்டும் குறிக்கும் சிறப்புப் பெயராய் வழங்கியது. திராவிடம் என்பது ஒரோவிடத்துத் தமிழையும் ஒரோவிடத்துத் திரவிட மொழிகள் எல்லாவற்றையும் குறிக்கும் பெயராயும் வழங்கி வந்தது. சென்ற (19ஆம்) நூற்றாண்டில்தான், கால்டுவெல் கண்காணியார் திரவிடம் என்னும் சொல்லைத் திரவிடமொழிகளின் பொதுப் பெயராகவும் தொகுதிப் பெயராகவும் வரையறுத்தார். 

மொழி வேறுபடக் காரணங்கள் 
            தமிழிலிருந்து பிற திரவிடமொழிகள் வேறுபடப் பாவாணர் கூறும் காரணங்கள் :
1) மக்கட் பெருக்கம்
2,3,4) எழுத்தொலி சொல் பொருள் திரிபுகள்
5) இயற்கைத் தெரிப்பு (தமிழில் வீட்டைக் குறிக்கும் ஒருபொருட் பலசொற்களில் தெலுங்கு இல்என்னும் சொல்லையும், கன்னடம் மனஎன்னுஞ் சொல்லையும் கொண்டமை)
6) வழக்கற்ற சொல் வழங்கல் (தமிழில் இதுபோது எழுத்து வழக்கில் மட்டுமுள்ள சொற்கள் பிற திரவிட மொழிகளில் பேச்சு வழக்கில் வழங்குவது) 7) குடியேற்றப் பாதுகாப்பு (இப்போது தமிழில் வழங்காவிடினும் குமரிநாட்டில் வழங்கியதாகத் தெரிகின்ற சொற்களும் சொல்வடிவங்களும் பிற திரவிட மொழிகளில் பாதுகாக்கப் பட்டிருத்தல்)
டு : போழ் (மலையாளம்) = போழ்து , கொம்மு (தெலுங்கு) = கொம்பு )
8) புத்தாக்கச் சொல்
9) தாய்த் தமிழொடு தொடர்பின்மை
10) வடசொற் கலப்பு
11) வடமொழி எழுத்தையும் இலக்கணத்தையும் மேற்கொள்ளல்
12) தமிழின் பண்படுத்தம் (முதற் றமிழரின் ஒலிமுறை, சொற்களின் பழைய அல்லது திருத்த வடிவம் , நுண்பொருள் விளக்கம், சொற்றொடரின் வழா நிலையும் காத்துக் கொள்ளும் வரம்பீடு) 

ஆரியக்கலப்பால் வந்த கேடு 
            தமிழுக்கும் சேய்மொழிக்கும் தொடர்பறவு, மொழிப் பிரிவினையும் மக்கட் பிரிவினையும், ஒலித்திரிபும் சொற்றிரிபும், சொல் வழக்கொழிவும் மறைவும், வரலாற்று மறைப்பும் மலைவும், புதுச்சொல்லாக்கத் தடை, தாய்மொழி யுணர்ச்சி யின்மை, கலை வளர்ச்சியின்மை, மொழி மறைவு ஆகிய பத்துவகைக் கேடுகள் ஆரியக் கலப்பால் திரவிடத்திற்கு வந்தன. 

முழுத் திரவிடம் 
            செந்தமிழும் கொடுந் தமிழும் சேர்ந்தே தமிழாதலானும், தமிழல்லாத்-திரவிட மொழிகளெல்லாம் பழைய கொடுந் தமிழ்களே யாதலானும், திரவிட ரெல்லாம் ஒருகுலத்தாரே யாதலானும் ஆரியக் கலப்பின்றி அவர் பேசும் சொற்களும், இயற்றிய நூல்களும் திரவிடமே யாதலானும், எல்லாத் திரவிட மொழிகளும் சேர்ந்தே முழுத் திரவிடமாகும். 

கால்டுவெல்லாரும் தமிழும் 
            'திரவிட ஒப்பியல் இலக்கணம்' எழுதிய கால்டுவெல் தமிழ் திரவிடக் குடும்பத்தில் உயர்ந்ததும் தொன்மையானதும் முதன்முதல் பண்படுத்தப் பெற்றதும் வளமானதுமான மொழி என்ற கருத்தைக்கொண்டிருந்தார். வடமொழித் தொடர்பை அறவே விலக்கி தனித்து வழங்குதல் மட்டுமின்றி, தமிழ் தழைத்தோங்கவும் இயலும் என்று கூறியிருக்கிறார். கால்டுவெல்லார் தமிழின் சிறப்புகளாக அவர் கருதியவற்றை நூலில் பல்வேறு இடங்களில் குறித்திருக்க, அவற்றில் முன்னுரை, பக்கம்1, 4, 9, 49, 50, 83-9, 91, 126, 254, 452 ஆகிய பத்து இடங்களைப் பாவாணர் எடுத்துக் காட்டுகிறார்.
            பாவாணர், கால்டுவெல்லாரின் மொழிநூன் முடிபுகள் பற்றி வேறோர் இடத்தில் கூறுகையில், “கழகநூற் பயிற்சியும் தனித்தமிழ் உணர்ச்சியும் இல்லாத அக்காலத்தில் அயல்நாட்டாரான அவர், ஆரியத்தினின்று திராவிடத்தைப் பிரித்துக் காட்டின அத்துணையே மிகச் சிறந்ததென்று கொண்டு பெருமகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம்என்று கூறுகிறார்.
            அவரே, வேறோரிடத்தில், கால்டுவெல் கண்காணியார் குமரிநாட்டு வரலாற்றையும் தொல்காப்பியத்தையும் மேற்கணக்கு நூல்களையும் அறியாதவராதலின், தமிழரை வடக்கிருந்து வந்தவராகவும் ஆரியரால் நாகரிகமடைந்தவராகவும் கொண்டு த்ரமிளம் என்னும் வடசொல்லினின்று தமிழ் என்னுஞ்சொல் பிறந்ததென்று கூறினார். ஆனால் பண்டிதர் கிரையர்சன் இதை மறுத்துத் தமிழம் என்பதே த்ரவிடம் என்பதன் மூலம் எனத் தமது இந்திய மொழியாராய்ச்சி’ (Linguistic survey of India) என்னும் நூலில் நிலைநாட்டி யுள்ளார் என்று முரண்படும் இடத்தையும அதற்குரிய காரணத்தையும் குறிப்பிடுகிறார்.

மலையாளம் 
            கழக(சங்க)க் காலத்தில் முத்தமிழ் நாடுகளில் ஒன்றாயிருந்த சேரநாட்டின் மேல்பாகமே இப்போது மலையாள நாடாயிருக்கின்றது. சேரன் எனும் பெயர் சேரல் எனப் போலியாகிப் பின்பு அன்ஈறு பெற்றுச் சேரலன் ஆனது. சேரலன் என்னும் பெயர், முறையே கேரலன், கேரளன் என மருவிற்று.             மேற்குத்தொடர்ச்சி மலைக்கு மேற்கே, வடக்கில் மங்களூரிலிருந்து தெற்கில் திருவனந்தபுரம் வரைக்கும் தென்கன்னடம் மலபார் கொச்சி திருவிதங்கோடு என்னும் நான்கு சீமைகளில் தாய்மொழியாகப் பேசப்படுவது மலையாளம்.
            16ஆம் நூற்றாண்டிலிருந்து மலையாளநாட்டுமொழி கொடுந்தமிழா யிருந்த தென்றும் அதன் பின்னரே வடமொழிக் கலப்பால் மலையாளமாகத் திரியத் தொடங்கி 17ஆம் நூற்றாண்டில் மிகத்தெளிவாகப் பிரிந்து போன தென்றும் விளக்குகிறார். இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மலையாளம் தொடர்பான செய்திகளை எடுத்துக்காட்டுகிறார்.
            மலையாளம் திரிந்ததற்குக் காரணங்களாகப் பிற தமிழ்நாடுகளுடன் பெருந் தொடர்பின்மை, பாண்டிய சோழ மரபுடன் மணவுறவு நிறுத்தம், வரம்பற்ற வடசொற் கலப்பு, மூக்கொலி சிறந்தமை, செந்தமிழ் நூல்களைக் கல்லாமை, ஒலிமுறைச் சோம்பல் ஆகியவற்றைக் கூறுகிறார். சொல் வரிசைகளைக் கூறித் தமிழ்ச்சொற்கள் திரிந்திருப்பதை விளக்குகிறார். மலையாளத்தில் வழங்கும் பல பழஞ்சொற்கள் (பழமொழிகள்), தமிழ்ப் பழமொழிகளின் சற்றே திரிந்த வழக்காக உள்ளதைக் காட்டுகிறார். 

கன்னடம் 
            கன்னடம் என்பது கருநடம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. இது முதலாவது கன்னட நாட்டைக் குறித்துப் பினபு அங்கு வழங்கும் மொழியைக் குறித்தது. தெற்கே நீலமலையிலிருந்து வடக்கே பீடார்ப் பகுதி வரை மைசூர் கன்னடம் தென்மராட்டம் ஐதராபாத்தின் தென்மேற்குப் பகுதி ஆகிய சீமைகளில் பெரும்பாலும் தாய்மொழியாகப் பேசப்படுகிறது.
            கன்னடநாட்டு வரலாற்றைக் கூறுகையில், கழக இலக்கியங்களிலிருந்தும் சிலம்பிலிருந்தும் மேற்கோள் காட்டிச் செய்திகளை விளக்குகிறார். தமிழ்மன்னராட்சி ஒழிந்தமையும், தமிழ்நூல்கள் வழங்காமையும், தமிழர் விழிப்பின்மையும், தமிழ் ஒலியும் சொல்லும் திரிந்தமையும், வடசொற் கலப்பும், வடமொழி இலக்கண அமைப்பும் கன்னடமாகத் திரிந்ததற்குக் காரணங்களாகக் கூறுகிறார். பதினெட்டு முறைகளில் கன்னடம் திரிந்ததாகக் கூறி விளக்குகிறார். சொல் வரிசைகளில் 25க்கும் மேறபட்ட தலைப்புகளில் பட்டியலிட்டுத் தமிழ்ச்சொற்கள் திரிந்திருப்பதைக் காட்டுகிறார். பல்வேறு இலக்கணக் கூறுகளின் அமைப்பை விளக்குகிறார். 

தெலுங்கு 
            தெலுங்கு என்பதன் பண்டை வடிவம் திரிலிங்கம் என்பது. பண்டைத் தெலுங்கு நாட்டின் ஒரு பாகம் கலிங்கம் என்னும் பொதுப்பெயர் கொண்ட முப்பகுதியாயிருந்தது. அதனால் திரிகலிங்கம் எனப்பட்டது. திரிலிங்கம் தெலுங்கம் தெலுங்கு என மருவிற்று.
            தென்னிந்தியாவில், கிழக்கே கடற்கரை யொட்டிப் பழவேற் காட்டிலிருந்து சிக்காக்கோல் வரைக்கும், மேற்கே மராட்டிய மைசூர் சீமைகளின் கீழெல்லை வரைக்கும், ‘கொடுக்கப்பட்ட கோட்டங்கள்’, கர்நூல், ஐதராபாத்து சீமையின் பெரும்பகுதி, நாகபுர நாட்டின் ஒருபகுதி, கோண்டுவனம் அகிய இடங்களில் தெலுங்கு பெரும்பாலும் தாய்மொழியாகப் பேசப்படுகிறது.
            தெலுங்கு நாட்டு வரலாற்றைப் பண்டை இலக்கியங்கள், கல்வெட்டுக் குறிப்புச் சான்றுகளோடு விளக்குகிறார். தெலுங்கு திரிய ஏழு காரணங்களைக் கூறுகிறார். சொல் வரிசைப் பட்டியல் இலக்கணக் கூறுகள் வழி தமிழினின்றும் திரிந்திருப்பதை விளக்குகிறார். 

துளு 
            குடகுக்கு மிக நெருங்கி, கன்னடத்தினின்றும் சிறிதும் மலையாளத் தினின்றும் பெரிதும் வேறுபட்டுத் திருந்திய மொழி துளு. கன்னட வெழுத்திலும் மலையாள வெழுத்திலும் துளு எழுதப்பட்டு வருகின்றது. மேல்கரை நாட்டில் கன்னடத்திற்குத் தெற்கில் சந்திரபுரி கல்யாணபுரி ஆறுகளுக் கிடையில், பெரும்பாலும் தாய்மொழி யாகத் துளு பேசப்படுகிறது. துளு திரியக் காரணங்கள் ஆறனையும் துளு திரிந்த 15 வகைகளையும் கூறுகிறார். 20க்கும் மேற்பட்ட தலைப்புகளில் சொல்வரிசை தந்தும் இலக்கணக் கூறுகளின் வழியும் தமிழினின்றும் திரிந்திருப்பதை விளக்குகிறார். 

சொல்வரிசை 
            பாவாணர், நூலின் முகவுரையில், மூவிடப்பெயர்கள், முறைப்பெயர்கள், தட்டுமுட்டுப் பெயர்கள், அக்கம்பக்கப் பொருட் பெயர்கள், பேரிடப் பெயர்கள், வா, போ முதலிய முக்கிய வினைகள், பல்வகைப் பண்புப் பெயர்கள், கை கால் முதலிய சினைப் பெயர்கள் ஆகியவை இயற்கை வடிவிலும் வேர்ப்பொருள் தாங்கியும் எம்மொழியி லுள்ளனவோ, அம்மொழியே அதற்குத்தாய் எனத் துணிதல் வேண்டும் என்கிறார். அவ்வாறே, நூலில் பல்வேறு தலைப்புகளில் சொல் வரிசைகள் தந்து விளக்கியிருக்கிறார்.
பாவாணர் தந்த சொல் வரிசையுள் மூவிடப் பெயர்கள், எண்ணுப் பெயர், எண்ண்டி உயர்திணைப் பெயர்ப் பட்டியல் மட்டும் கீழே காண்க. 

 பாவாணர் தந்த சொல் வரிசையுள் மூவிடப் பெயர்கள், எண்ணுப் பெயர், எண்ண்டி உயர்திணைப் பெயர்ப் பட்டியல் மட்டும் கீழே காண்க. 

பெயர் / கன்னடம் / தெலுங்கு / துளு / மலையாளம் 
ஒருமை-தன்மை / யானு /நானு / நேனு ஞான் 
முன்னிலை நீனு / நீவு / ச / நீ 
படர்க்கை அவனு,இவனு / வாடு / / அவன்,இவன் அவளு,இவளு/ / / அவள்,இவள் அது,இது / அதி / / அது,இது 
தற்சுட்டு தானு / தானு / தானு / தான் 
பன்மை-தன்மை நாவு,நாவுகளு / மேமு,மனமு / எங்களு / நாம்,நம்மள்,ஞங்கள் முன்னிலை நீவு,நீவுகளு / மீரு / ஈரு,நம / நிங்கள் 
படர்க்கை அவரு,இவரு / வாரு / / அவர்,இவர் அவு,இவு / / / அவ,இவ 
தற்சுட்டு தாவு / தாமு,தமரு / தனுகுளு,நிகுளு / தங்ஙள், தாங்ஙள்,தாங்கள் 

எண்ணுப்பெயர் 
ஒந்து / ஒகட்டி / ஒஞ்சி / ஒண்ணு எரடு / இரடு / ரட்டு / ரண்டு மூரு / மூடு / மூஜி / மூன்னு நால்கு / நால்கு / நாலு / நாலு ஐது / அயிது / ஐனு / அஞ்சு ஆரு / ஆறு / ஆஜி / ஆறு ஏளு / ஏடு / ஏளு / ஏழு எண்ட்டு / எனிமிதி / எண்ம / எட்டு ஒம்பத்து / தொம்மிதி / ஒம்பத்து / ஒம்பது ஹத்து / பதி / பத்து / பத்து 

எண்ண்டி உயர்திணைப்பெயர் 
ஒப்பரு / / வொரி / ஒருவர் இப்பரு / / இர்வெரு / இருவர் மூவரு / / மூவெரு / மூவர் நால்வரு/ / நாலவெரு / நால்வர் ஐவரு / / ஐவெரு / `ஐவர் / / ஆஜ்வெரு / அறுவர் / / யேள்வரு / எழுவர் இவை தவிர, வினை, முறை, மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, மரம், செடி, கருவி, ஐம்பூதம், கணியம், ஊர்தி, உணவு, ஆடையணி, தட்டுமுட்டு, இடம், காலம், சினை, பல்பொருள், பண்பு, நோய், தொழிற்பெயர்கள், வினைச்சொல் வடிவங்கள், இடைச்சொற்கள், மற்றும் பிற இலக்கணக் கூறுகளையும் எடுத்துக்காட்டி மறுக்கவியலாச் சாறுகளாகத் தருகிறார். 

முடிவுக் கூற்று 
முடிவு என்னும் தலைப்பின் கீழ், தமிழல்லாத் திரவிட மொழிகள் உயிரும் உடம்பும் போன்ற அடிப்படையில் முகன்மையான பகுதிகளெல்லாம் தமிழேயென்றும், ஆடையும் அணியும் போன்ற மேற்புறவணியில் மட்டும் ஆரியந் தழுவினதென்றும், அவ்வாரியமும் (அவை) தமிழைத் தழுவுங்கால் வேண்டாததே யென்றும், வடமொழியைத் தமிழல்-திரவுடத்தின் தாயெனக் கூறுவது பெரிதோர் ஏமாற்றென்றும் கூறுகிறார். பாவாணர், தொடக்கத்தில் எழுதிய இந்நூலில், சுமார், சரித்திரம், உலோகம் முக்கியம் போன்ற அயற்சொல் லாட்சிகள் காணப் படுகின்றன. 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------