சனி, 16 டிசம்பர், 2017

செந்தமிழ் இனமே!

செந்தமிழ் இனமே!
-----------------------------------------------

செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே!
முந்து தமிழும் முதனா கரிகமும்
இலக்கியச் சிறப்பும் இலக்கணச் செழுமையும்
துலக்குறு அறிவொடு இலக்குறு வாழ்வும்











நெடுவரைப் பனிமலை நெற்றியில் விற்கயல்
கொடும்புலி பொறித்த கடுமறத் திறத்தொடும்
மிகையுங் கொளாது குறையுங் கொடாது
தகைமிகு வணிகம் தரைகட லோடி
நுண்கலை வானியல் நுட்ப அறிவியல்
எண்ணியல் நாட்டியம் பண்ணிசை யாழொடும்
செழிப்புற விளங்கிய செந்தமிழ் இனமே!

அழிப்புற ஒடுக்குற இழிதாழ் வுற்றே
இரண்டகக் கொடியரால் எய்தினை வீழ்ச்சி!
திரண்டவுன் சீர்மைச் சிறப்பெலா மிழந்தனை!
இன்மொழி நாட்டொடு இன்னினந் தொழும்புறத்
தன்னலத் தமிழரே முன்னின் றனரே!

இளந்தமிழ் உளங்காள்! எண்ணுக இதனை!
துளக்கறு மறிவில் துளங்கலில் விளங்கி
நம்மொழி நம்மினம் நம்நா டுற்ற
நம்பரு  மடிமை விம்முறு விலங்கு
ஒடித்து நொறுக்கிப் பொடித்திடு நோக்கில்
அடிப்படைத் திட்டம் ஆய்ந்து துணிந்து
என்றுங் கண்டிலா எழுச்சியோ டெழுக!

முன்னைப் பிழையும் உன்னித் தவிர்த்துத்
தகவில் இரண்டகம் தக்காங் கொறுத்து
இகலறுத் தினத்தார் இணைவுற எழுந்து
ஈட்டுக மீட்சி! இத்தரை
காட்டுக நந்தழிழ் கணிக்கருந் திறமே!
-------------------------------------------------------------------- 

வெள்ளி, 13 அக்டோபர், 2017

நன்றியறிவிப்பு

                           நன்றியறிவிப்பு
                           -----------------
                என் துணைவியாரின் மறைவையொட்டி நேரிலும், தொலைப்பேசி வழியாகவும் மடல் வழியாகவும் ஆறுதல் கூறித் தேற்றித் துணையிருந்த நண்பர்கள் உறவினர்கள் ஏனை அன்புள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். அந்த அதிர்ச்சியினின்றும் மீண்டு வர உங்களின் அன்பும் ஆறுதலும் பெரிதும் துணையாயிருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றேன்.

ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப
படைத்தோன் மன்ற,அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே!   - புறம்.194.

(பக்கு உடுக்கை நன்கணியார் பாடல்)

அன்பார்ந்த உள்ளங்களுக்கு மீண்டும் நன்றி!
அன்பன்,
தமிழநம்பி.


புதன், 23 ஆகஸ்ட், 2017

அருமையான செய்தியொன்று!



அருமையான செய்தியொன்று!  

நான் பல முறை படித்ததென்றாலும், புதியதாகவே இருப்பது!

...........
..அன்று திருமண நாள்! அழகி அவள் கணவன். நன்னன் மாலையில் அலுவலகத்திலிருந்து வருவதற்க்காகக் காத்திருந்தாள்.

திருமணம் நடந்த சில ஆண்டுகளில் எண்ணிப்பார்க்காத மாற்றம்.!    
    
ஒருவரின்றி யொருவர் இருக்க இயலாத நிலையில் பொருந்தியிருந்த அவ்விணையர் மாறி, சிறுசிறு  செய்திகளுக் கெல்லாம் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரிடமொருவர் பேசாமல் ஒரே வீட்டில் இருவேறு அறிமுக மற்றவர்களைப் போன்று இருந்தார்கள்.

ஒன்றுமில்லாததெற் கெல்லாம் சண்டையிட்டுக் கொள்வதை அவர்களே விரும்பவில்லை! நிலைமை மாறியது.
இன்று, தம் திருமண நாள என்பதை மறவாமல் நன்னன் நினைத்திருக்கிறானா என்றறிய ஆவலுடன் காத்திருந்தாள்!

வாயில் அழைப்பு மணி ஒலித்தது. அவள் விரைந்து சென்று கதவைத் திறந்தாள். அவள் கணவன் நன்னன் மழையில் நனைந்த தோற்றத்துடன் கையில் பூங்கொத்துடன் புன்னகை பொதுள நிற்கக் கண்டாள்.

அவர்களிருவரும் தம்மைத் திருத்திக் கொள்ளத் தொடங்கி  பழையபடியே வாழத் தொடங்கினர். சண்டை சிக்கல் மறந்து இசைநிகழ்ச்சி விருந்திற்குப் போகத் திட்டமிட்டிருந்தனர். ஒரே மழை! 

அலறலாகத் தொலைபேசியின் மணி ஒலித்தது. அழகி தொலைப்பேசியை எடுத்தாள். மறுமுனையிலிருந்து...

நான் காவல்நிலையத்திலிருந்து பேசுகிறேன் அம்மா, நன்னன் வீட்டுத்தொலைபேசி எண்ணிலிருந்துதானே பேசுகிறீர்கள்?

ஆமாம்

வருத்தமான செய்தி அம்மா! நேர்ச்சியொன்றில் ஒருவர் இறந்துவிட்டார்; இந்தத் தொலைபேசி எண் இறந்தவரின் பணப்பையிலிருந்தது! நீங்கள் வந்து இறந்தவரின் உடலை அடையாளம் கண்டு கூறவேண்டும்!

அழகிக்குப் பேரதிர்ச்சி! அவள் நெஞ்சாங்குலை நடுங்கியது!

என் கணவர் இங்கு என்னுடன் இருக்கின்றாரே! என்றாள்.

அந்தத் துயர நிகழ்ச்சி மாலை 4மணிக்கு நடந்ததம்மா! அவர் தொடர்வண்டியில் ஏற முனைகையில் நிகழ்ந்துவிட்டது

அழகி, அதிர்ச்சியில் நினைவிழக்கும் நிலையிலிருந்தாள்!

இது எப்படி நடந்திருக்கும்??!!

இறந்தவரின் ஆதன் (ஆத்மா) நீங்கிச்செல்லுமுன், அதற்கு அன்பானவர்களைக் காண வருமென்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறாள்!!!

கண்கள் நீர் சொரிய, அடுத்த அறைக்கு ஓடிச்சென்று பார்த்தாள்!
நன்னனை அங்குக் காணவில்லை! அது உண்மையோ!! அவன் அவளைப் பிரிந்தே போய்விட்டானா?

அடக் கடவுளே! அவனோடு போட்ட சிறுசிறு சண்டைகளைத் விட்டுத் திருந்தி வாழ்ந்திட இன்னொரு வாய்ப்பிற்காக, அவள் உயிர்விடவும் அணியமாயிருந்தாளே!

அவள் அழுதுகொண்டே கீழே வீழ்ந்தாள், வலியில் துடித்தாள்! அவள் இழந்துவிட்டாள்; இனி எப்போதும் அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை! 

திடுமென குளியலறையில் ஒலி! கதவைத் திறந்துகொண்டு நன்னன் வெளியேவந்து, அன்பே! உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன், என்னுடைய பணப்பை இன்று தொடர்வண்டியில் ஏறும்போது திருடு போய்விட்டது என்றான்!
இதைக் கேட்ட மாத்திரத்தில், அவள் நெஞ்சம் அவனுக்காக அழுத்து! அவன் உயிரோடிருக்கும் உண்மையறிந்து மகிழ்ச்சியில் அவள் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது!

வாழ்க்கை உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பொன்றைத் தராமலே போகலாம்!. எனவே, ஒரு கணத்தையும் வீணடிக்காமல் தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள்!

திருந்திக்கொள்ளத் தொடங்குவோம்!

பெற்றோரிடமும், உடன்பிறந்தாரிடமும், உறவினரிடமும், நண்பர்களிடமும் மற்றெல்லாரிடமும் தவறின்றித் திருத்தமாக நடக்கத் தொடங்குவோம்!

யாரொருவரும் நாளைக்கிருப்பது உறுதியில்லை!

வருத்தமற்ற அருமையான வாழ்க்கையை வாழ்வோம்!

இந்நாள் அருமையான நாளாக இருக்கட்டும்!

இப்போதிருந்து. ஒவ்வொரு கணத்தையும் புன்னகையோடு துய்த்திடுவோம்!

(கெழுதகை அன்பர் (தாமரைக்கோ) தாமரை Thamaraikko Thamarai அவர்களின் முகநூல் பக்கத்தில் ஆங்கிலத்தில் பார்த்துப் படித்த செய்தியை மொழியாக்கம் செய்து தந்துள்ளேன். படம் இணையத்தில் எடுத்தது. Chillzee.in  இணையதளத்திற்கு நன்றி!)
-------------------------------------------------------------