சனி, 10 செப்டம்பர், 2016

கி.ஆ.பெ.வி. ஐயா காட்டும் தமிழரின் கலைச்சிறப்பு! (சில பகுதிகள்)



கி.ஆ.பெ.வி. ஐயா காட்டும் தமிழரின் கலைச்சிறப்பு!
(சில பகுதிகள்)

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஐயா 47ஆண்டுகட்கு முன்னர் தி.பி.2000த்தில் எழுதி வெளியிட்ட தமிழின் சிறப்பு என்னும் நூலில், கலைச்சிறப்பு என்னும் தலைப்பில் தந்துள்ள செய்திகளில் சில:



நிலத்தை ஐந்தாக, காற்றை நான்காக, மொழியை மூன்றாக, இலக்கணத்தை இரண்டாகக் கண்ட தமிழ்மக்கள், ஒழுக்கத்தை ஒன்றாக வைத்து மாந்தனோடு வைத்து இணைத்து எழுதிவிட்டனர். திணை என்றால் ஒழுக்கம்; உயர்திணை என்றால் ஒழுக்கமுள்ளவை எனவும், அஃறிணை என்றால் ஒழுக்கமற்றவை என்றும் பொருள்படும்....

திருச்சிக்கு கிழக்கே பன்னிரண்டு கல் தொலைவில் கல்லணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே தரையில் கட்டப்பட்டுள்ள அணை இது ஒன்றே. அதிலும் இருபுறங்களிலும் ஐந்தடிக்கு மேற்படாத கரையை வைத்துக்கொண்டே தண்ணீரைத் தேக்கி அத்தண்ணீரை ஆறுபகுதிகளுக்குப் பிரித்தனுப்புகிற கலை ஒரு தனிக்கலையேயாம்.

மற்ற அணைகள் எல்லாம் இருபுறங்களிலும் மலைகளையே கரைகளாகக் கொண்டதாகவும் பெரும் பள்ளத்தாக்குகளில் நீரைத் தேக்குவதாகவும் அமைந்திருக்கும்....

சதுப்பு நிலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் சில ஆண்டுகளுக் குள்ளாகவே வெடிப்பிட்டுப் போவதைக் காணும் நமக்குத் தண்ணீரிலேயே அடித்தளம் போட்ட கட்டடம் 2000 ஆண்டுகளாகியும் வெடிப்பு ஏற்படாமல் எப்படி இருக்கிறது?... இதுபற்றிப் பெரிய பெரிய பொறியியல் வல்லுநர்களும் புரியாது தவிக்கின்றனர்.

கி.பி.1003ஆம் ஆண்டில் தொடங்கி 1009க்குள் இராசராச சோழ மன்னனால் கட்டி முடிக்கப்பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் தமிழ்மக்களின் கட்டடக்கலைக்கு ஒரு பெரும் சான்று.

இதன் கோபுரத்தின்உயரம் 216அடி. அதன்உச்சியில் வைத்துள்ள கல் 25½ அடி. சதுரமுள்ள கல் அதன் எடை 80 டன். அதில் நான்குபுறமும் சுற்றி வைத்திருக்கும் நந்திகளின் எண்ணிக்கை எட்டு. அவை ஒவ்வொன்றின் உயரம் 5½ அடி. நீளம் 6½.. இவற்றை உச்சிக்குக் கொண்டுபோக நான்கு கல் தூரத்திலிருந்து சாரம் கட்டத்தொடங்கிய இடத்திற்கு சாரப்பள்ளம் என்ற பெயர் இன்றும் இருந்து வருகிறது....

திருச்சிக்கு வடக்கே நான்கு கல் தொலைவில் சிறீரங்கம் என்ற ஓர் ஊர் உள்ளது.அது நான்குபுறமும் நீர் சூழ்ந்த ஒரு தீவு....
தெற்குக்கோபுரத்திற்கு மொட்டைக்கோபுரம் என்றுபெயர். காரணம் கோபுரம் கட்டப்படாமல் கோபரத்திற்குரிய அடித்தளம் மட்டும் கட்டப்பட்டிருப்பதே. நான்கு புரமும் நான்கு கற்றூண்கள் நிற்கின்றன. (இப்போது, கோபுரம் 72 மீட்டர உயரத்தில் கட்டப் பட்டுள்ளது)         

கோயிலைச்சுற்றி நான்கு வெளிக்கோபுர வாயில்களிலும் 16 கற்றூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணின் அகலம் 3அடி, நீளம் 5அடி, உயரம் 62அடி. மேலே 42அடி தெரிவதால் மூன்றில் ஒருபங்கு 20 அடியாவது மண்ணில் புதைந்திருக்க வேண்டும்.இன்றேல் அது வலுவாக நில்லாது. இவ்வாறு 16 தூண்கள் ஒரே அளவில் எவ்வாறு கிடைத்தன?

இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் உள்ள மண்ற்பரப்பில் 20அடி ஆழம் எப்படி வெட்ட முடிந்தது? மூன்றடியிலேயே தண்ணீர் இருக்கும்போது அதற்கும் கீழ் எப்படித்தோண்ட முடிந்தது?...

தமிழகத்தின் சிற்பக்கலை உலகம் முழுதும் நன்கறிந்த ஒன்று... தமிழ் மக்களின் சிற்பக்கலையைத் தமிழகத் திருக்கோயில்கள் அனைத்திலும் காணலாம். இவற்றுள் பேரூர்க்கோயில், மதுரைக்கோயில் தூண்களின் சிற்பங்கள் மிகமிக உயர்ந்தவை...

சில கோயில் தூண்கள் இசைக்கருவிகளாக அமைந்திருக்கின்றன. ஒரே தூணில் 16 வகையாகப் பிரித்துச் செதுக்கப்பட்டிருக்கிறது. அது அரம் போட்டு அறுத்ததுபோல் காணப்படுகிறது... கண்பார்வை நுழைய முடியாவிடத்தில் கூட கைவேலைகள் நுழைந்திருக்கின்றன. ஒவ்வொரு சிறு பகுதியும் தட்டத்தட்ட ஒவ்வோர் ஒலி கிளம்புகிறது. அனைத்தையும் தட்டி அருமையான இசையை முழக்க முடிகிறது.

கற்றூண்கள் இசைபாடும் கலைக் காட்சியை மதுரை, திருநெல்வேலி, சுசீந்திரம், ஆழ்வார் திருநகரி முதலிய திருக்கோயில்களில் இன்றும் கண்டு மகிழலாம். இவற்றுள் நெல்லைக்கோயில் தூண்கள் மிகச்சிறந்தவை....

(தொகுப்பு நூல்: முத்தமிழ்க் காவலரின் அறிவுக்கு உணவு பக்கம் 235 முதல் 240 வரை. வெளியீடு: பெரியண்ணன் நூலகம், நல்லாமூர், விழுப்புரம் மாவட்டம்)
---------------------------------------------------------------------------------------------------------

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து ஐயாவின் அரிய உரை!



பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து ஐயாவின் அரிய உரை!

தி.பி.2047-8-21 (6-9-2016) செவ்வாயன்று புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும், விடுதலை வீரர் சீனுவாசன் தனலட்சுமி அறக்கடளையாரும் சேர்ந்து ஏற்பாடு செய்த ஒன்பதாம் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறுவனத்தின் தொல்காப்பியர் அரங்கில் நடைபெற்றது.

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து ஐயா தாய்நாடு, தாழ்மொழி: இந்தியாவில் இன்றைய நிலை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 


தாய்மொழி, தாய்நாடு என்பவற்றின் வரையறையைத் தெளிவாகக் கூறி இக்கால் இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு மக்களின் தாய்மொழி இருக்கும் நிலையை விளக்கினார். 2001ஆம் ஆண்டு குடிமதிப்பறிக்கையில் கண்டுள்ளபடி ஏறத்தாழ 25ஆயிரம் கோடி மக்கள்மட்டும் பேசும் இந்திக்கும், ஏறத்தாழ 14ஆயிரம்பேர் பேசுவதாகத் தவறாக்க் கூறப்படும் சமற்கிருதத்திற்கும் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான உருவா வீணே செலவழிப்பதைப் பற்றியும் எடுத்துக்காட்டினார்.

இன்றைய இந்திய ஒன்றியத்தில், பல்வேறு மொழிபேசும் மக்களின் நாடுகள் இன்றுள்ள மொழிவழி மாழநிலங்கள் நடைமுறையில்  எவ்வெந் நிலையில் வேறுபட்ட உரிமைகளோடு உள்ளன என்றெல்லாம் சான்றுகளுடன் விளக்கினார்.

தம் உரையின் இறுதிப் பகுதியில், ஆனைமுத்து ஐயா, பெரியார் ஆங்கிலத்திற்கு முதன்மை கொடுத்து அம்மொழி படிக்க அனைவரையும் வலியுறுத்தியது பற்றிய அரிய விளக்கமளித்தார். அன்றைய நிலையில், தமிழ் அறிவியல் துறைகளில் வளரா திருந்ததையும் மக்கள் மூடநம்பிக்கையோடு விழிப்புணர் வற்றவர்களாக இருந்ததால் அவர்களை விரைந்து முன்னேற்றக் கருதியுமே அவ்வாறு கூறினார். என்றாலும், தமிழைப் பலதுறை அறிவும் நிறைந்ததாக வளர்த்தெடுக்க வேணுமென்று வற்புறுத்தி யிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்றார்.

பெரியாரே, தாம் கூறியவாயினும் அவற்றை அப்படியே ஏற்க வேண்டாமென்றும், அறிவடிப்படையில் ஆராய்ந்து தத்தமக்குச் சரியென்று படுவதை மட்டும் ஏற்றுக் கொள்ளலாமென்றும் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளார் என்றும் விளக்கம் தந்தார்.

காலை பத்தரை மணிக்குத் தொடங்கிய பயனுள்ள நிகழ்ச்சி, பகல் ஒரு மணியளவில் நிறைவுற்றது. அறக்கட்டளையார், வந்திருந்த அனைவருக்கும் சுவையான பகல்உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.

குறிப்பு: படம் அளித்த  திரு.புதுவைத் தமிழ்நெஞ்சன், செல்வி தமிழ்மொழிக்கு நன்றி!
------------------------------------------------------------------------------------------------------  
 

சனி, 3 செப்டம்பர், 2016

சமற்கிருத நூல்கள் அறிவுறுத்துவன யாவை? - பாவாணர் விளக்கம்!



சமற்கிருத நூல்கள் அறிவுறுத்துவன  யாவை?           - பாவாணர் விளக்கம்!



...சமற்கிருத நூல்களோ, பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் நாற்குலங்களையும் இறைவனே படைத்தான் என்றும் அங்ஙனம் படைத்ததாக இறைவனே சொன்னான் என்றும் (பகவற்கீதை-4:13),

புருடன் (புருஷ) என்னும் உயிரின மூல வடிவத்தின் முகத்தினின்று பிராமணனும், தோளினின்று சத்திரியனும், தொடையினின்று வைசியனும், பாதத்தினின்று சூத்திரனும் தோன்றினர் என்றும் (இருக்குவேதம் 10ஆம் மண்டிலம், 90ஆம் மந்திரம் புருஷசூக்தம்),

பிராமணனுக்கு மற்ற மூவரும் தொண்டுசெய்ய வேண்டுமென்றும்,

துறவும் வீடுபேறும் பிராமணனுக்கே உரியனவென்றும்,

முக்குண வேறுபாட்டாலும் பழவினையாலும் நாற்குலமும் அமைவதாற் குலம், பிறவிபற்றியதென்றும்,

நாற்குலமும் முறையே ஒன்றினொன்று தாழ்ந்தவை யென்றும்,

ஒருவன் எவ்வெத் தொழிலை மேற்கோள்ளினும் அவன் குலம் அவன் இறக்கும்வரை மாறாதென்றும்,

நாற்குலத்தாரும் முறையே வேதமோதி வேள்வி வளர்த்தும், போர்செய்து காவல் மேற்கொண்டும், வணிகமும் உழவும் ஆற்றியும், கைத்தொழிலுங் கூலிவேலையுந் தொண்டுஞ் செய்தும் வாழவேண்டுமென்றும்,

பிராமணன் சமையத்திற்கேற்ப எந்த வேலையும் மேற்கொள்ளலா மென்றும், அவன் நிலத்தேவன் (பூசுரன்) என்றும்,

வேதமொழியும் சமற்கிருதமும் ஆகிய கீழையாரியம் தேவமொழியென்றும்,

உண்டி உடை உறையுள், உடைமை, பெயர், பழக்க வழக்கம், சடங்கு, தண்டனை முதலிய எல்லாவகை நிலைமைகளும் குலத்திற்கேற்ப வேறுபட்டிருத்தல் வேண்டுமென்றும்,

இத்தகைய பிறவுமே கூறுகின்றன.

     சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
     உழந்தும் உழவே தலை.`            -(கு.1031)
     உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
     தெழுவாரை யெல்லாம் பொறுத்து.          (கு.1032)
     உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
     தொழுதுண்டு புன்செல் பவர்.          -(கு.1033)
     பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்
     அலகுடை நீழ லவர்.       -(கு.1034)
     இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
     கைசெய்தூண் மாலை யவர்.          -(கு.1035)
     உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
     விட்டேம் என்பார்க்கு நிலை.          (கு.1036)
என்றது தமிழ் அறநூல்.

சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூமியிலுண்டான பலபல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?: என்றது வடமொழி அறநூல்.(-மநுதர்ம சாத்திரம் இராமாநுசாசாரியார் மொழிபெயர்ப்பு. 10:84)     
.....  
--------------------------------------------------------------
 

வியாழன், 1 செப்டம்பர், 2016

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் காட்டும் தமிழின் சொற்சிறப்பு!



முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் காட்டும்
தமிழின் சொற்சிறப்பு!




     பிறமொழிச்சொற்கள் உருவத்தை மட்டுமே காட்டுவன. தமிழ் மொழிச் சொற்கள் உருவத்தையும் பருவத்தையும் காட்டுவன...

பேதை          பெண் 5 ஆண்டுக்கும் கீழ்
பெதும்பை      பெண் 10 ஆண்டுக்கும் கீழ்
மங்கை         பெண் 16 ஆண்டுக்கும் கீழ்
மடந்தை        பெண் 25 ஆண்டுக்கும் கீழ்
அரிவை        பெண் 30 ஆண்டுக்கும் கீழ்
தெரிவை       பெண் 35 ஆண்டுக்கும் கீழ்
பேரிளம் பெண்  பெண் 45 ஆண்டுக்கும் கீழ்

பெண் என்ன? ஆண் என்பதைத்தான் பாருங்கள்:

பாலன்         ஆண் 7 ஆண்டுக்கும் கீழ்
மீளி            ஆண் 10 ஆண்டுக்கும் கீழ்
மறவோன்      ஆண் 14 ஆண்டுக்கும் கீழ்
திறலோன்      ஆண் 15 ஆண்டுக்கும் கீழ்
காளை         ஆண் 16 ஆண்டுக்கும் கீழ்
விடலை        ஆண் 30 ஆண்டுக்கும் கீழ்
முதுமகன்      ஆண் 30 ஆண்டுக்கும் மேல்.

     இவ்வாறு பன்னிரு பாட்டியல் ஆண்களுக்கும் ஏழு பருவப் பெயர்களைத் தருகிறது. ஆண்களின் பருவத்தைப் பின்வருமாறும் கொண்டு கூறலாம்.

பிள்ளை        ஆண் குழந்தைப்பருவம்
சிறுவன்        ஆண் பாலப்பருவம்
பையன்         ஆண் பள்ளிப்பருவம்
காளை         ஆண் காதற்பருவம்.
தலைவன்      ஆண் குடும்பப்பருவம்
முதியோன்     ஆண் தளர்ச்சிப்பருவம்                     
கிழவன்         ஆண் மூப்புப்பருவம் ...

     ஆண் பெண் மட்டுமல்ல; பூ என்பதை எடுத்துக்கொள்ளுங்கள்; பிளவர் என்பர் ஆங்கிலேயர். புஷ்பம் என்பர் வடமொழியாளர். அவ்வளவுதான்; உருவத்தையும் பருவத்தையும் சேர்த்துக்காட்ட அவர்களிடம் சொற்களில்லை. தமிழிற் பாருங்கள்:

அரும்பு         பூ    அரும்பும் நிலை
மொட்டு        பூ    மொக்குவிடும் நிலை
முகை          பூ    முகிழ்க்கும் நிலை
மலர்           பூ    மலரும் நிலை
அலர்           பூ    மலர்ந்த நிலை
வீ              பூ    வாடும் நிலை
செம்மல்        பூ    வதங்கும் நிலை

     எப்படி தமிழில் உள்ள சொற்களின் சிறப்பு!... இலை என்ற உருவத்தையும் பருவத்தையும் காட்டி மகிழ்விக்கும் சொற்கள்:

கொழுந்து       இலை     குழந்தைப்பருவம்
தளிர்           இலை     இளமைப்பருவம்
இலை          இலை     காதற்மருவம்
பழுப்பு          இலை     முதுமைப்பருவம்
சருகு           இலை     இறுதிப்பருவம்....

     இதிலும், ஆல், அரசு, அத்தி, மா, பலா, வாழை முதலியவற்றின் இலைகளுக்கு இலை என்று பெயர்.
அகத்தி, பசலை முதலியவற்றின் இலை இலையாகாமல் கீரை எனப் பெயர் பெறும்.
     மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் பூண்டு என்று பெயர்.
     அறுகு, கோரை முதலியவற்றின் இலைகள் புல்லாகிவிடும்.
நெல், வரகு முதலியவற்றின் இலைகள் தாள் என்றாகும்.
     மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் பெயர் இலை அன்று, தழை.
     சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகள் இலையாகா; அவற்றின் பெயர் மடல்.
     கரும்பு நாணல் முதலியவற்றின் இலைகள் இலையாகா; அவற்றின் பெயர் தோகை.
     தென்னை, பனை, ஈந்து, கமுகு முதலியவற்றின் இலைகள் இலையெனப் பெயர் பெறா; அவற்றின் பெயர் ஓலை.
     என்னே தமிழின் சொல்வளம்!....

(நூல்; தமிழின் சிறப்பு, ஆசிரியர்: கி.ஆ.பெ.விசுவநாதம், தொகுப்புநூல்: முத்தமிழ்க் காவலரின் அறிவுக்கு உணவு, பக்கம் 220,221,222., வெளியிட்டோர்: பெரியண்ணன் நூலகம், நல்லாமூர், விழுப்புரம் வட்டம்)
------------------------------------------------------------------------

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

சிதைத்துப் பொருள் கூறப்படும் தமிழ்ச்சொற்கள் – உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமியார் விளக்குகிறார்!



சிதைத்துப் பொருள் கூறப்படும் தமிழ்ச்சொற்கள் உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமியார் விளக்குகிறார்!
--------------------------------------------------------------------


     நாடாளும் வேந்தர்க்கு அடுத்த நிலையில் வணிகரை வைத்துச் சிறப்பிப்பது தமிழ்மரபு. அரசர் வணிகர் வேளாளர் என நிறுத்தி, இம் மூவருள்ளும் துறவு பூண்டோர் அந்தணர் நிலையில் அடங்குவது பற்றி, அந்தணர்களை இறுதியில் வைப்பர்.

     பார்ப்பாருள் துறவு மேற்கொண்டோர் வருணம், ஆசிரம்ம் என்ற வரம்பிறந்து அந்தணருள் அடங்குதலால், ஏனையோர் பார்ப்பனர் என வழங்கப்பட்டனர். அந்தணர் என்போர் அறவோர் என்ற தமிழ் மறையைப் புறக்கணித்து, வேத நூலின் அந்தத்தை அணவுவோர் அந்தணர் எனத் தாந்தாம் வேண்டியவாறு பொருள்கூறிக்கொள்வா ராயினர்.

     இவ்வாறே, எத்துணையோ தமிழ்ச்சொற்கள் உண்மைக்கு மாறான நிலையில் சிதைத்துப் பொருள் கூறப்பட்டுள்ளன. சொற்களுக்கு வரலாறு காணும் ஆராய்ச்சி தலையெடுக்குமாயின் மேலே காட்டப்பட்டது போலும் உண்மைகள் பல வெளிப்படும்...

     இந்திமொழி பேசும் மக்களுக்கிருக்கும் மொழிப்பற்றில் நூற்றில் ஒரு கூறுதானும் தமிழர்க்கு அமையுமாயின் எத்துணையோ நலங்கள் தமிழ்த்துறையில் தோன்றிவிடும்; இன்னும் அது தோன்றவில்லை.

     அரசர் வணிகர் என்ற பிரிவுகள் சாதிப்பிரிவுகள் அல்ல; அவரவர் மேற்கொண்ட தொழிலகளுள் தலைமை பற்றியும் பன்மை பற்றியும் வந்தனவாகும். வணிகர் வாணிகமே பெரிதும் செய்தனர்; ஆயினும், போர்ப்பயிற்சியும் பெற்று அதனையும் வேண்டுமிடத்து ஆற்றிவந்தனர்.

(உரைவேந்தர் தமிழ்த்தொகை-10, சைவ இலக்கிய வரலாறு பக்கம் 427,428., இனியமுது பதிப்பகம், சென்னை-17)
----------------------------------------------------------------------       

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பெரியாரைப் பற்றித் திரு.வி.க. எழுதியவை…!



பெரியாரைப் பற்றித் திரு.வி.க. எழுதியவை

           முன்னாளில் தமிழ்நாட்டில் காங்கிரசு தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப் புகுந்தால் முதல் பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிரசு நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது.
     அவர் காங்கிரசு வெறிகொண்டு நாலா பக்கமும் பறந்து பறந்து உழைத்ததை யான் நன்கு அறிவேன். நாயக்கரும் யானும் சேர்ந்து எங்கெங்கேயோ தொண்டு செய்தோம்; காடுமலை யேறியும் பணிபுரிந்தோம்!

            இராமசாமி நாயக்கர் ஒத்துழையாமையில் உறுதி கொண்டு பலமுறை சிறை புகுந்தனர். அவ்வுறுதிக்கு இடர் விளைத்தது சுயராச்சியக் கட்சி. சுயராச்சியக் கட்சியின் கிளர்ச்சிக்கு இணங்கிக் காங்கிரசு சட்டசபை நுழைவுக்கு ஆதரவு நல்கியது நாயக்கருக்கு எரியூட்டிற்று *தி.வா.கு.(ப. 433)

            வைக்கத்தில் (1924) தீண்டாமைப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கே சென்று சத்தியாக்கிரகம் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது யான் வைக்கம் வீரர் என்ற தலைப்பீந்து நாயக்கரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். வைக்கம் வீரர் என்பது நாயக்கருக்கொரு பட்டமாகவே வழங்கலாயிற்று - *தி.வா.கு.(ப.435-436)

            1938-இல் பெரியார் கட்டாய இந்தியை எதிர்த்ததால் சிறைப் படுத்தப்பட்டபோது திரு.வி.க. நவசக்தி ஆசிரியருரையாக எழுதியிருந்ததின் பகுதி:

            திரு.ஈ.வெ.இராமசாமி கடுங்காவல் தண்டனை ஏற்று, சிறைக்கோட்டம் நண்ணினர். வெள்ளிய தாடி அசைய, மெலிந்த தோல் திரங்க, இரங்கிய கண்கள் ஒளிர, பரந்த முகம் மலர, கனிந்த முதுமை ஒழுக ஒழுகத் தாங்கிய தடியுடன் அவர் சிறைபுகுந்த காட்சி, அவர்தம் பகைவர், நொதுமலர், நண்பர் எல்லார் உள்ளத்தையும் குழையச் செய்திருக்குமென்பதில் ஐயமில்லை!
     முதுமைப் பருவம்! காவல்! கடுங்காவல்!  என்னே! இந்நிலையை உன்ன உன்ன உள்ளம் உருகுகிறது.
                ______________ 

*தி.வா.கு திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்.

நன்றி! நூல்: தமிழ் இதழியல் சுவடுகள் (பக்கம் 118,177,178), மா.சு.சம்மந்தன், தமிழ்க் குடியரசுப் பதிப்பகம், சென்னை-5.
---------------------------------------------------------


வியாழன், 25 ஆகஸ்ட், 2016

சங்கப் பாடல்கள் தொகுப்பு - இரா. இளங்குமரனார் ஐயா விளக்குகிறார்.



சங்கப் பாடல்கள் தொகுப்பு -            இரா. இளங்குமரனார் ஐயா விளக்குகிறார்.
-------------------------------------------------------------------

பாட்டுந் தொகையும் பாடினோர் சங்க காலத்தவர். பாடப்பெற்றோரும் சங்க காலத்தவர். பெரும்பாலனவும் தனிப்பாடல்கள்.....

பாட்டு தொகைகளை நோக்க அவற்றுள் மூவகைப் பாடல்கள் அமைந்திருத்தல் கண்கூடு. அவை, அகவற்பா, கலிப்பா, பரிபாடல் என்பவை.

பாவகைப்படி தொகுத்தால், தொகையை மூன்றாக்கிவிடலாம். அதற்குத்துணை நிற்பவை கலிப்பாவும் பரிபாடலுமே. கலிப்பாவாகத் தேர்ந்து தொகுத்தவை 150 பாடல்கள். பரிபாடலாகத் தொகுத்தவை 70 பாடல்கள். இவற்றைத் தனித்தனி நூலாக்குதல் எளிதாயிற்று!

கலிப்பா ஐம்பெரும் புலர்களால் ஐந்திணை குறித்துப் பாடப்பெற்றவை. ஆகவே திணை வரிசையில் வரன்முறை செய்து கலித்தொகை என்னும் பெயர் சூட்டப்பெற்றது.

பரிபாடல்கள் எழுபதும் திருமால், செவ்வேள், வையை என்னும் முப்பொருள் பற்றியவையாக இருந்தன. இவற்றை அடைவு செய்வதற்கு முன்னின்றது பண்! ஆகவே பாலை, நோதிறம், காந்தாரம் முதலியவாகப் பண்ண்டைவில் அவற்றை ஒழுங்கு செய்து பரிபாடல் எனப் பெயர் சூட்டினர்.

எஞ்சிய அகவற்பாக்களே மிக்கிருந்தன. அவற்றை அகம் புறம் எனத் திணை குறித்து இருபாற் படுத்தலாம்! இவ் வெண்ணத்தால் பார்ப்பினும் அகப்பாடல்கள் எண்ணிக்கை ஒருநூற்குட்படுவதாக இல்லை.

அப்பொழுது நல்லிசைப் புலவர் நெஞ்சத்தே அடியளவு என்னும் ஓர் அளவுகோல் கிடைத்தது. அன்றியும் ஒரு திணை பற்றியோ, ஒருவரைப் பற்றியோ தொகையாகப் பாடிய பாடல்களை தனியே நூறு பாட்டாய் ஐந்திணைக்கும் ஐந்நூறு பாடல்களைக் கொண்ட ஐங்குறு நூற்றை அடியளவைக்கோல் இன்றி ஒதுக்கவும், பத்துப் புலவர்கள் பத்துச்சேர வேந்தர்களைப் பாடிய பதிற்றுப்பத்தை ஒதுக்கவும் அவற்றைத் தனித்தனி நூலாக்கவும் வாய்ப்பாயிற்று.

இன்னும் எஞ்சி இருப்பவற்றுள் புறப்பாடல்கள் நானூறு இருந்தன. அவற்றைப் புறநானூறு என்னும் பெயரால் தொகையாக்கினர். இன்னும் எஞ்சிய பாடல்கள் அடியளவு கருதித் தொகுக்கப் பெற்றன.

நான்கு முதல் எட்டடியீறான பாடல்கள் நானூறும், ஒன்பதடி முதல் பன்னீரடியீறான பாடல்கள் நானூறும், பதின்மூன்றடி முதல் முப்பத்தோரடியீறான பாடல்கள் நானூறும் ஆக 1200 பாடல்கள் இருக்கக்கண்டு அவற்றை முறையே குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, நெடுந்தொகை அல்லது அகநானூறு எனப் பெயர் சூட்டினர்.
 
இவ்வளவுடன் சங்கப்பாடல்களின் தொகுப்பு முடிந்துவிடவில்லை. பத்து நெடும் பாட்டுக்கள் எஞ்சி நின்றன. அவற்றை அகம் புறம் என்னும் பொருள் கருதாமல் பாடல் நெடுமைகருதி ஒரு தொகையாக்கிப் பத்துப்பாட்டெனப் பெயர் சூட்டினர்.

(இளங்குமரனார் தமிழ்வளம் 17, புறத்திரட்டு, பதிப்பாசிரியர் முன்னுரை பக்கம் 10,11., வளவன் பதிப்பகம், சென்னை.17)
 ----------------------------------------------------------------------------------


திங்கள், 22 ஆகஸ்ட், 2016

தமிழ்நாட்டுப் பகுதிகள் - உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!



தமிழ்நாட்டுப் பகுதிகள் -
உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!






     தமிழகத்தின் வடவெல்லை வேங்கடமென்றும் தென்னெல்லை தென்குமரியென்றும் வழங்கும்.
     (வேங்கடமலை சித்தூர் மாவட்டத்தின் வடவெல்லையாய் நின்று, பின் நெல்லூர் மாவட்டத்தின் மேற்கெல்லையாகி, வடபெண்ணைக் கரைவரையிற் செல்லும் மலைத் தொடராகும்)

     வடபெண்ணைக்கும் தென்பெண்ணைக்கும் இடைப்பட்ட பகுதி தொண்டைநாடு என்றும்,

     தென்பெண்ணைக்கும் தென்னார்க்காடு மாவட்டத்திலோடும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட பகுதி நடுநாடு என்றும்,

     வடவெள்ளாற்றுக்கும் புதுக்கோட்டைக்கருகிலோடும் தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பகுதி சோழநாடு என்றும்,

     இதன் தென்பகுதி பாண்டிநாடு என்றும் வழங்கும்.

     இக்காலத்துக் கோயம்புத்தூர் மாவட்டமும், சேலம் மாவட்டமும் சேர்ந்த நிலப்பகுதி கொங்குநாடு ஆகும்.

     மேலைக் கடற்கரைப் பகுதி சேரநாடு.

     சைவ இலக்கியத்தின் தோற்றக் காலத்தில் இந்நாட்டுப் பிரிவுகள் இருந்து வந்தன.

     நடுநாடுமட்டில், திருமுனைப்பாடி நாடென்று சில காலங்களில் வழங்கிற்று. வேறு சில காலங்களில், வடபகுதி தொண்டை நாட்டோடும் தென்பகுதி சோழநாட்டோடும் சேர்ந்து வழங்கியதுண்டு.

(உரைவேந்தர் தமிழ்த்தொகை-10, பக்கம் 7,8. இனியமுது பதிப்பகம், சென்னை-17)
------------------------------------------------------------------
 























தமிழ்நாட்டுப் பகுதிகள் - உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!



தமிழ்நாட்டுப் பகுதிகள் -
உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!






     தமிழகத்தின் வடவெல்லை வேங்கடமென்றும் தென்னெல்லை தென்குமரியென்றும் வழங்கும்.
     (வேங்கடமலை சித்தூர் மாவட்டத்தின் வடவெல்லையாய் நின்று, பின் நெல்லூர் மாவட்டத்தின் மேற்கெல்லையாகி, வடபெண்ணைக் கரைவரையிற் செல்லும் மலைத் தொடராகும்)

     வடபெண்ணைக்கும் தென்பெண்ணைக்கும் இடைப்பட்ட பகுதி தொண்டைநாடு என்றும்,

     தென்பெண்ணைக்கும் தென்னார்க்காடு மாவட்டத்திலோடும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட பகுதி நடுநாடு என்றும்,

     வடவெள்ளாற்றுக்கும் புதுக்கோட்டைக்கருகிலோடும் தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பகுதி சோழநாடு என்றும்,

     இதன் தென்பகுதி பாண்டிநாடு என்றும் வழங்கும்.

     இக்காலத்துக் கோயம்புத்தூர் மாவட்டமும், சேலம் மாவட்டமும் சேர்ந்த நிலப்பகுதி கொங்குநாடு ஆகும்.

     மேலைக் கடற்கரைப் பகுதி சேரநாடு.

     சைவ இலக்கியத்தின் தோற்றக் காலத்தில் இந்நாட்டுப் பிரிவுகள் இருந்து வந்தன.

     நடுநாடுமட்டில், திருமுனைப்பாடி நாடென்று சில காலங்களில் வழங்கிற்று. வேறு சில காலங்களில், வடபகுதி தொண்டை நாட்டோடும் தென்பகுதி சோழநாட்டோடும் சேர்ந்து வழங்கியதுண்டு.

(உரைவேந்தர் தமிழ்த்தொகை-10, பக்கம் 7,8. இனியமுது பதிப்பகம், சென்னை-17)
------------------------------------------------------------------