திங்கள், 29 ஆகஸ்ட், 2016

சிதைத்துப் பொருள் கூறப்படும் தமிழ்ச்சொற்கள் – உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமியார் விளக்குகிறார்!



சிதைத்துப் பொருள் கூறப்படும் தமிழ்ச்சொற்கள் உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமியார் விளக்குகிறார்!
--------------------------------------------------------------------


     நாடாளும் வேந்தர்க்கு அடுத்த நிலையில் வணிகரை வைத்துச் சிறப்பிப்பது தமிழ்மரபு. அரசர் வணிகர் வேளாளர் என நிறுத்தி, இம் மூவருள்ளும் துறவு பூண்டோர் அந்தணர் நிலையில் அடங்குவது பற்றி, அந்தணர்களை இறுதியில் வைப்பர்.

     பார்ப்பாருள் துறவு மேற்கொண்டோர் வருணம், ஆசிரம்ம் என்ற வரம்பிறந்து அந்தணருள் அடங்குதலால், ஏனையோர் பார்ப்பனர் என வழங்கப்பட்டனர். அந்தணர் என்போர் அறவோர் என்ற தமிழ் மறையைப் புறக்கணித்து, வேத நூலின் அந்தத்தை அணவுவோர் அந்தணர் எனத் தாந்தாம் வேண்டியவாறு பொருள்கூறிக்கொள்வா ராயினர்.

     இவ்வாறே, எத்துணையோ தமிழ்ச்சொற்கள் உண்மைக்கு மாறான நிலையில் சிதைத்துப் பொருள் கூறப்பட்டுள்ளன. சொற்களுக்கு வரலாறு காணும் ஆராய்ச்சி தலையெடுக்குமாயின் மேலே காட்டப்பட்டது போலும் உண்மைகள் பல வெளிப்படும்...

     இந்திமொழி பேசும் மக்களுக்கிருக்கும் மொழிப்பற்றில் நூற்றில் ஒரு கூறுதானும் தமிழர்க்கு அமையுமாயின் எத்துணையோ நலங்கள் தமிழ்த்துறையில் தோன்றிவிடும்; இன்னும் அது தோன்றவில்லை.

     அரசர் வணிகர் என்ற பிரிவுகள் சாதிப்பிரிவுகள் அல்ல; அவரவர் மேற்கொண்ட தொழிலகளுள் தலைமை பற்றியும் பன்மை பற்றியும் வந்தனவாகும். வணிகர் வாணிகமே பெரிதும் செய்தனர்; ஆயினும், போர்ப்பயிற்சியும் பெற்று அதனையும் வேண்டுமிடத்து ஆற்றிவந்தனர்.

(உரைவேந்தர் தமிழ்த்தொகை-10, சைவ இலக்கிய வரலாறு பக்கம் 427,428., இனியமுது பதிப்பகம், சென்னை-17)
----------------------------------------------------------------------       

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பெரியாரைப் பற்றித் திரு.வி.க. எழுதியவை…!



பெரியாரைப் பற்றித் திரு.வி.க. எழுதியவை

           முன்னாளில் தமிழ்நாட்டில் காங்கிரசு தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப் புகுந்தால் முதல் பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிரசு நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது.
     அவர் காங்கிரசு வெறிகொண்டு நாலா பக்கமும் பறந்து பறந்து உழைத்ததை யான் நன்கு அறிவேன். நாயக்கரும் யானும் சேர்ந்து எங்கெங்கேயோ தொண்டு செய்தோம்; காடுமலை யேறியும் பணிபுரிந்தோம்!

            இராமசாமி நாயக்கர் ஒத்துழையாமையில் உறுதி கொண்டு பலமுறை சிறை புகுந்தனர். அவ்வுறுதிக்கு இடர் விளைத்தது சுயராச்சியக் கட்சி. சுயராச்சியக் கட்சியின் கிளர்ச்சிக்கு இணங்கிக் காங்கிரசு சட்டசபை நுழைவுக்கு ஆதரவு நல்கியது நாயக்கருக்கு எரியூட்டிற்று *தி.வா.கு.(ப. 433)

            வைக்கத்தில் (1924) தீண்டாமைப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கே சென்று சத்தியாக்கிரகம் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது யான் வைக்கம் வீரர் என்ற தலைப்பீந்து நாயக்கரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். வைக்கம் வீரர் என்பது நாயக்கருக்கொரு பட்டமாகவே வழங்கலாயிற்று - *தி.வா.கு.(ப.435-436)

            1938-இல் பெரியார் கட்டாய இந்தியை எதிர்த்ததால் சிறைப் படுத்தப்பட்டபோது திரு.வி.க. நவசக்தி ஆசிரியருரையாக எழுதியிருந்ததின் பகுதி:

            திரு.ஈ.வெ.இராமசாமி கடுங்காவல் தண்டனை ஏற்று, சிறைக்கோட்டம் நண்ணினர். வெள்ளிய தாடி அசைய, மெலிந்த தோல் திரங்க, இரங்கிய கண்கள் ஒளிர, பரந்த முகம் மலர, கனிந்த முதுமை ஒழுக ஒழுகத் தாங்கிய தடியுடன் அவர் சிறைபுகுந்த காட்சி, அவர்தம் பகைவர், நொதுமலர், நண்பர் எல்லார் உள்ளத்தையும் குழையச் செய்திருக்குமென்பதில் ஐயமில்லை!
     முதுமைப் பருவம்! காவல்! கடுங்காவல்!  என்னே! இந்நிலையை உன்ன உன்ன உள்ளம் உருகுகிறது.
                ______________ 

*தி.வா.கு திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்.

நன்றி! நூல்: தமிழ் இதழியல் சுவடுகள் (பக்கம் 118,177,178), மா.சு.சம்மந்தன், தமிழ்க் குடியரசுப் பதிப்பகம், சென்னை-5.
---------------------------------------------------------


வியாழன், 25 ஆகஸ்ட், 2016

சங்கப் பாடல்கள் தொகுப்பு - இரா. இளங்குமரனார் ஐயா விளக்குகிறார்.



சங்கப் பாடல்கள் தொகுப்பு -            இரா. இளங்குமரனார் ஐயா விளக்குகிறார்.
-------------------------------------------------------------------

பாட்டுந் தொகையும் பாடினோர் சங்க காலத்தவர். பாடப்பெற்றோரும் சங்க காலத்தவர். பெரும்பாலனவும் தனிப்பாடல்கள்.....

பாட்டு தொகைகளை நோக்க அவற்றுள் மூவகைப் பாடல்கள் அமைந்திருத்தல் கண்கூடு. அவை, அகவற்பா, கலிப்பா, பரிபாடல் என்பவை.

பாவகைப்படி தொகுத்தால், தொகையை மூன்றாக்கிவிடலாம். அதற்குத்துணை நிற்பவை கலிப்பாவும் பரிபாடலுமே. கலிப்பாவாகத் தேர்ந்து தொகுத்தவை 150 பாடல்கள். பரிபாடலாகத் தொகுத்தவை 70 பாடல்கள். இவற்றைத் தனித்தனி நூலாக்குதல் எளிதாயிற்று!

கலிப்பா ஐம்பெரும் புலர்களால் ஐந்திணை குறித்துப் பாடப்பெற்றவை. ஆகவே திணை வரிசையில் வரன்முறை செய்து கலித்தொகை என்னும் பெயர் சூட்டப்பெற்றது.

பரிபாடல்கள் எழுபதும் திருமால், செவ்வேள், வையை என்னும் முப்பொருள் பற்றியவையாக இருந்தன. இவற்றை அடைவு செய்வதற்கு முன்னின்றது பண்! ஆகவே பாலை, நோதிறம், காந்தாரம் முதலியவாகப் பண்ண்டைவில் அவற்றை ஒழுங்கு செய்து பரிபாடல் எனப் பெயர் சூட்டினர்.

எஞ்சிய அகவற்பாக்களே மிக்கிருந்தன. அவற்றை அகம் புறம் எனத் திணை குறித்து இருபாற் படுத்தலாம்! இவ் வெண்ணத்தால் பார்ப்பினும் அகப்பாடல்கள் எண்ணிக்கை ஒருநூற்குட்படுவதாக இல்லை.

அப்பொழுது நல்லிசைப் புலவர் நெஞ்சத்தே அடியளவு என்னும் ஓர் அளவுகோல் கிடைத்தது. அன்றியும் ஒரு திணை பற்றியோ, ஒருவரைப் பற்றியோ தொகையாகப் பாடிய பாடல்களை தனியே நூறு பாட்டாய் ஐந்திணைக்கும் ஐந்நூறு பாடல்களைக் கொண்ட ஐங்குறு நூற்றை அடியளவைக்கோல் இன்றி ஒதுக்கவும், பத்துப் புலவர்கள் பத்துச்சேர வேந்தர்களைப் பாடிய பதிற்றுப்பத்தை ஒதுக்கவும் அவற்றைத் தனித்தனி நூலாக்கவும் வாய்ப்பாயிற்று.

இன்னும் எஞ்சி இருப்பவற்றுள் புறப்பாடல்கள் நானூறு இருந்தன. அவற்றைப் புறநானூறு என்னும் பெயரால் தொகையாக்கினர். இன்னும் எஞ்சிய பாடல்கள் அடியளவு கருதித் தொகுக்கப் பெற்றன.

நான்கு முதல் எட்டடியீறான பாடல்கள் நானூறும், ஒன்பதடி முதல் பன்னீரடியீறான பாடல்கள் நானூறும், பதின்மூன்றடி முதல் முப்பத்தோரடியீறான பாடல்கள் நானூறும் ஆக 1200 பாடல்கள் இருக்கக்கண்டு அவற்றை முறையே குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, நெடுந்தொகை அல்லது அகநானூறு எனப் பெயர் சூட்டினர்.
 
இவ்வளவுடன் சங்கப்பாடல்களின் தொகுப்பு முடிந்துவிடவில்லை. பத்து நெடும் பாட்டுக்கள் எஞ்சி நின்றன. அவற்றை அகம் புறம் என்னும் பொருள் கருதாமல் பாடல் நெடுமைகருதி ஒரு தொகையாக்கிப் பத்துப்பாட்டெனப் பெயர் சூட்டினர்.

(இளங்குமரனார் தமிழ்வளம் 17, புறத்திரட்டு, பதிப்பாசிரியர் முன்னுரை பக்கம் 10,11., வளவன் பதிப்பகம், சென்னை.17)
 ----------------------------------------------------------------------------------


திங்கள், 22 ஆகஸ்ட், 2016

தமிழ்நாட்டுப் பகுதிகள் - உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!



தமிழ்நாட்டுப் பகுதிகள் -
உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!






     தமிழகத்தின் வடவெல்லை வேங்கடமென்றும் தென்னெல்லை தென்குமரியென்றும் வழங்கும்.
     (வேங்கடமலை சித்தூர் மாவட்டத்தின் வடவெல்லையாய் நின்று, பின் நெல்லூர் மாவட்டத்தின் மேற்கெல்லையாகி, வடபெண்ணைக் கரைவரையிற் செல்லும் மலைத் தொடராகும்)

     வடபெண்ணைக்கும் தென்பெண்ணைக்கும் இடைப்பட்ட பகுதி தொண்டைநாடு என்றும்,

     தென்பெண்ணைக்கும் தென்னார்க்காடு மாவட்டத்திலோடும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட பகுதி நடுநாடு என்றும்,

     வடவெள்ளாற்றுக்கும் புதுக்கோட்டைக்கருகிலோடும் தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பகுதி சோழநாடு என்றும்,

     இதன் தென்பகுதி பாண்டிநாடு என்றும் வழங்கும்.

     இக்காலத்துக் கோயம்புத்தூர் மாவட்டமும், சேலம் மாவட்டமும் சேர்ந்த நிலப்பகுதி கொங்குநாடு ஆகும்.

     மேலைக் கடற்கரைப் பகுதி சேரநாடு.

     சைவ இலக்கியத்தின் தோற்றக் காலத்தில் இந்நாட்டுப் பிரிவுகள் இருந்து வந்தன.

     நடுநாடுமட்டில், திருமுனைப்பாடி நாடென்று சில காலங்களில் வழங்கிற்று. வேறு சில காலங்களில், வடபகுதி தொண்டை நாட்டோடும் தென்பகுதி சோழநாட்டோடும் சேர்ந்து வழங்கியதுண்டு.

(உரைவேந்தர் தமிழ்த்தொகை-10, பக்கம் 7,8. இனியமுது பதிப்பகம், சென்னை-17)
------------------------------------------------------------------
 























தமிழ்நாட்டுப் பகுதிகள் - உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!



தமிழ்நாட்டுப் பகுதிகள் -
உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!






     தமிழகத்தின் வடவெல்லை வேங்கடமென்றும் தென்னெல்லை தென்குமரியென்றும் வழங்கும்.
     (வேங்கடமலை சித்தூர் மாவட்டத்தின் வடவெல்லையாய் நின்று, பின் நெல்லூர் மாவட்டத்தின் மேற்கெல்லையாகி, வடபெண்ணைக் கரைவரையிற் செல்லும் மலைத் தொடராகும்)

     வடபெண்ணைக்கும் தென்பெண்ணைக்கும் இடைப்பட்ட பகுதி தொண்டைநாடு என்றும்,

     தென்பெண்ணைக்கும் தென்னார்க்காடு மாவட்டத்திலோடும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட பகுதி நடுநாடு என்றும்,

     வடவெள்ளாற்றுக்கும் புதுக்கோட்டைக்கருகிலோடும் தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பகுதி சோழநாடு என்றும்,

     இதன் தென்பகுதி பாண்டிநாடு என்றும் வழங்கும்.

     இக்காலத்துக் கோயம்புத்தூர் மாவட்டமும், சேலம் மாவட்டமும் சேர்ந்த நிலப்பகுதி கொங்குநாடு ஆகும்.

     மேலைக் கடற்கரைப் பகுதி சேரநாடு.

     சைவ இலக்கியத்தின் தோற்றக் காலத்தில் இந்நாட்டுப் பிரிவுகள் இருந்து வந்தன.

     நடுநாடுமட்டில், திருமுனைப்பாடி நாடென்று சில காலங்களில் வழங்கிற்று. வேறு சில காலங்களில், வடபகுதி தொண்டை நாட்டோடும் தென்பகுதி சோழநாட்டோடும் சேர்ந்து வழங்கியதுண்டு.

(உரைவேந்தர் தமிழ்த்தொகை-10, பக்கம் 7,8. இனியமுது பதிப்பகம், சென்னை-17)
------------------------------------------------------------------
 























வியாழன், 11 ஆகஸ்ட், 2016

‘கல்வி’யின் தொடக்கம் – பாவாணர் விளக்கம்!



கல்வியின் தொடக்கம் பாவாணர் விளக்கம்!


      மக்கள் நாகரிகமில்லாத மாண்முது பழைமையிற் குறுந் தொகையராய்க் குறிஞ்சி நிலத்து வாழ்ந்தபோது காய்கனி கிழங்கு முதலிய இயற்கை விளைபொருள்களையே உண்டு வந்தனர். உண்பதும் உறங்குவதுமே அவர்க் கிருபெருந்தொழில். மக்கட் டொகை மிகமிக இயற்கை விளைவு போதாதாயிற்று.

     விதைகள் நிலைத்திணை வகையினின்றும் கீழே விழுந்து நிலத்தில் முளைப்பதை முன்னமே உற்று நோக்கி உன்னித்திருந்தனர். அஃதன்றி வள்ளிக்கிழங்கைப் பன்றிகள் உழுதவிடத்து விழுந்த விதைகள் விரைவில் முளைத்து, அடரந்தோங்கி, விழுமிய பலன்றந்ததையுங் கண்டிருந்தனர். ஆதலால் அவரே அத்தகை யிடங்களிற் செயற்கையிற் பயிர்பச்சைகளை விளைக்கத் தொடங்கினர்.

  பன்றியுழுதவிடத்துப் பயிர் விளைப்பதை...
     அருவி யார்க்குங் கழையி ன்னந்தலைக்
     கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
     கொடுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
     கடுங்கட் கேழ லுழுத பூழி
     நன்னாள் வருபத நோக்கிக் குறவ
     ருழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை  -(புறம்.168) என்பதாற் காண்க.

     ஆகவே, முதன்முதல் மக்கள் கற்ற கல்வி உழவுத்தொழில் என்பதே புலனாகின்றது. உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு அதனாற் பெறப்படுதலின், கல்வி என்னும் சொல்லும் உழவுத்தொழிலையே முதன்முதன் குறித்தது.....

     உழவாவது நிலத்தை அகழ்தலும் நிலைபெயர்த்தலும் பூழியாக்கலும் ஏருமெருதுங்கொண்டுழவறியாத பழங்காலத்துக் கல்லுங் கழியுங் கருவியாக நிலத்தை அகழ்தலே உழவாயிற்று.  அக்காலத்தும் குறிஞ்சிநிலத்தும் மழைக்குக் குறையின்மையின் நீர்பாய்ச்சவும் வேண்டாதாயிற்று.

     கல்லல், தோண்டல், உழுதல் என்பன ஒருவினை குறித்தலின் ஒருபொருட் கிளவி. ஆகவே கல்வி என்பது முதன்முதல் உழவு குறித்த கிளவியே யென்பது பெற்றாம்.
 (பண்பாட்டுக் கட்டுரைகள் பாவாணர், தமிழ்மண், பக். 96,97)
---------------------------------------------------------------------


செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

‘காதற் காமம்’ – மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் விளக்குகிறார்!



காதற் காமம் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் விளக்குகிறார்!



தமிழ்த்திணை எனத்தகும் அகத்திணைக்கு வெறும் உள்ளக்காதலும் பொருளன்று., வெறும் மெய்க் காம்மும் பொருளன்று. உள்ளம் இயைந்த உடலுறவும், உடல் இயைந்த உள்ள உறவும், சுருங்கக்கூறின் உயிர்மெய்ப் புணர்ச்சியே அதன் பாடுபொருளாம்.

     ஆண்டாள் காதல் அகத்திணையாகாது, மெய்யுறல் இன்மையின். மாருத வேகன் சுதமதியைக் கூடியதும் அகத்திணையாகாது, உள்ளிசைவு இன்மையின். மெய்யாக நோக்கின் காதல் என்பதனுள் உடற்கலப்பும் அடங்கும்.

உடற்கலவியின்றிக் காதற்றன்மை செவ்வுறாது. பாலுறவுதான் காதல் என்னும் தகுதிக்கு உரியது. காதல் என்ற பெயர் மேலிட்டுப் பிறவாறு சொல்லுவன வெல்லாம்  அரைகுறையான உருவகமாவன என்பர் ஆசுவால் சார்ச்சு.(The psychology of sex. P.105)

காதற் காமம் காமத்துச் சிறந்தது
விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி            -(பரிபாடல்.9.)  என்று இருசொற்களையும் இயைத்தார் குன்றம் பூதனார்.

பொதுவான மொழி வழக்கில் காதல் என்பது உள்ளப பற்றையும், காமம் உடற்பற்றையும் குறிக்கும் என முன்னர்க் கண்டோம். இரு சொல்லையும் ஒருங்கு காட்டும் ஒரு தமிழ்ச்சொல் உண்டா? உண்டு. அதுவே அகம் என்னும் சொல். எனினும் முன்னிலைப் படுத்திக் கூறும் நான்மறையாளர்க்கு விளங்கவேண்டி, குன்றம் பூதனார் காதற்காமம் (காதலங்காமம் - பரி.6, அன்புறு காமம் - நற்.389) என்ற ஒரு புதுத்தொடரை ஆக்கினார். ஆக்கி, விருப்பு ஓரொத்து மெய்யுறு புணர்ச்சி எனப் பொருளும் நிரல்பட விரித்துக் காட்டினார்.

இக் காதற்காமந்தான் அகத்திணை. அகத்திணை தலைமக்கள் உள்ளங்கூடிய உடற்கூட்டாளிகள். உடல்மட்டும் கலந்ததா, உள்ளம் கலந்ததா? என்ற வினாவிற்கு இவர்பால் விடையில்லை. ஆதலின் அகப்பாட்டின்கண் காதல் என்ற சொல் வருமிடத்துக் காமப் பொருளும் உண்டெனக் கொள்க. காமச்சொல் வந்த இடத்துக் காதற் பொருளும் உண்டெனக்கொள்க.

(தமிழ்க்காதல் வ.சுப.மாணிக்கம், இயல், தஞ்சாவூர். பக்.402,403.) 
----------------------------------------------------------------------

வெள்ளி, 8 ஜூலை, 2016

வடசொற் றிணிப்பால் வழக்கற்ற தென் சொற்கள்: பாவாணர் விளக்கம்

வடசொற் றிணிப்பால் வழக்கற்ற தென் சொற்கள்:
பாவாணர் விளக்கம்

வடமொழி தேவமொழி என்னும் ஏமாற்றையும் பண்டைத் தமிழ் வேந்தரின் பேதைமையையும் துணைக்கொண்டு, ஆயிரக் கணக்கான வடசொற்கள் தமிழில் வேண்டாது புகுத்தப்பட்டதன் விளைவாக அவற்றிற்கு நேரான விழுமிய தென்சொற்கள் சிறதும் பெரிதும் முற்றும் வழக்கு வீழ்த்தப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு:

வடசொல் -    -    -    -    :தென்சொல்
அன்னம்                        எகின், ஒதிமம்
ஆன்மா                         ஆதன், உறவி, புலம்பன்
ஆனந்தம், குதூகலம், சந்தோசம்: உவகை, களிப்பு, மகிழ்ச்சி
சகுனம்                         புள்
சத்தியம், நிசம், வாஸ்தவம்     உண்மை, வாய்மை, மெய்ம்மை
சீரணம்                         செரிமானம்
சுத்தம்                          துப்புரவு
திருப்தி                         பொந்திகை
பிதிரார்ச்சிதம்                   முதுசொம்
மேகம்                          முகில், கார், கொண்டல்
லாபம்                          ஊதியம்
நட்டம்                          இழப்பு
மைத்துன்ன்                     அளியன்
வருசம்                         ஆண்டு
ஸ்திரீ, புருஷர்                 ஆடவர், பெண்டிர்
(இங்குக் குறிப்பிட்ட வடசொற்கள் விளங்குதற் பொருட்டுப் பெரும்பாலும் தற்பவ வடிவிற் காட்டபட்டுள்ளன)

நகைச்சுவையை ஹாஸ்ய ரசம் என்பதும், அவையைச் சதஸ் என்பதும், பணிவிடையைச் சிசுருஷை என்பதும், திருமணத்தைப் பரிணயம் என்பதும், குடமூக்கு (குடந்தை), குரங்காடுதுறை, சிற்றம்பலம் (தில்லை), பழமலை (முதுகுன்றம்), மயிலாடுதுறை, மறைக்காடு முதலிய செந்தமிழ் நாட்டூர்த் தனித் தமிழ்ப் பெயர்களை முறையே கும்பகோணம், கபிஸ்தலம், சிதம்பரம், விருத்தாசலம், மாயூரம், வேதாரணியம் என வடசொற்களாய் ஏற்கனவே மாறியிருப்பதும், இத்தகைய இழி செயலை இன்றும் கையாள்வதும், தென்னாட்டு வடமொழியாளரின் வரையிறந்த வடமொழி வெறியை யன்றி வேறெதைக் காட்டும்?

இன்று தமிழில் வழங்கும் வடசொற்கள் தமிழிற்கு வேண்டியவு மல்ல;
உடம்பிற்குட் புகுந்து அதனுக்கு ஊறுசெய்யும் நச்சுப்புழுக்களையும்    
இன்னாப் பொருள்களையும் அதன் நலத்தின் பொருட்டு நீக்குவது போன்றே, வேண்டா வடசொற்களையும் தமிழினின்று விலக்குதல் வேண்டும்.
இதனைத் தடுப்பவர் புறப்பகைவரும் உட்பகைவருமாயே யிருத்தல் வேண்டும்.

வடசொற்கட்கு இங்குக் கூறியது பிற சொற்கட்கும் ஒக்கும்.

(நூல்: தமிழியற் கட்டுரைகள் பக்கம் 16,17. தமிழ்மண், சென்னை)  

------------------------------------------------------------------------------------------------------------
               






வியாழன், 7 ஜூலை, 2016

சொல்விளக்கம்: ஐயன்



சொல்விளக்கம்:
ஐயன்:

ஐ என்பது தலைவனைக் குறிக்கும் பெயர்.
என் ஐ முன் நில்லன்மின் என்பது குறள்.

தலைவன் எனினும் பெரியோன் எனினும் ஒக்கும்.
அரசன் ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன் என ஒருவர்க்கு ஐந்து பெரியோர் உளர். அவர்க்கெல்லாம் ஐ என்பது பொதுப்பெயர்.
தாயைக் குறிக்கும்போது அது ஆய் என்று திரியும்.
ஐ என்பது அன் ஈறு பெரின் ஐயன் என்றாகும்.
ஐயன் என்பதற்கு ஐயை என்பது பெண்பால்.
அண்ணனைக் குறிக்கும்போது ஐ, ஐயன் என்னும் சொற்கள் தன்னை, தமையன் எனத் தன் தம் என்னும்முன்னொட்டுப் பெறும்.

தமிழருட் பலவகுப்பார், அவருள்ளும் சிறப்பாகத் தாழ்த்தப்பட்டவர், தந்தையை ஐயன் அல்லது ஐயா (விளிவடிவம்) என்றே அழைக்கின்றனர். ஆசிரியர் எவ் வகுப்பாராயிருப்பினும், அவரை ஐயர் என்றழைப்பது வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தார் வழக்கு.

பெரியோரை எல்லாம் ஐயா என்று குறிப்பதும் விளிப்பதும் தொன்றுதொட்டுத் தமிழர் வழக்கம். மக்களுட் பெரியார் முனிவர் என்னும் கருத்துப்பற்றி, அவரைச் சிறப்பாக ஐயர் என்பது தமிழ் நூன்மரபு.

ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்பது தொல்காப்பியம்.

பிங்கல நிகண்டில் முனிவரைப் பற்றிய 3ஆம் பகுதி ஐயர் வகை எனப் பெயர் பெற்றுளது.

முனிவரிலும் பெரியவர் தெய்வங்க ளாதலின், தெய்வங்கட்கும் கடவுகட்கும் ஐயன் என்னும் பெயர் விளங்கும்.
ஐயன் = சாத்தன் (ஐயனார்), கடவுள்.
ஐயை = காளி, மலைமகள்.
இங்ஙன மெல்லாம் தொன்றுதொட்டு வழங்கும் ஐயன் என்னும் தென்சொல்லை, ஆர்ய என்னும் வடசொற் சிதைவென்பர் வடவர்.

(பாவாணருக்கு நன்றி! தமிழியற் கட்டுரைகள் பக்கம்-11. தமிழ்மண், சென்னை)

--------------------------------------------------------------     

சனி, 2 ஜூலை, 2016

பழந்தமிழரின் அயல்நாட்டுத் தொடர்பு!



பழந்தமிழரின் அயல்நாட்டுத் தொடர்பு!
          - புலவர் குழந்தை ஐயா தரும் விளக்கம்!
-----------------------------------------------------------
     சில தமிழ்ச்சொற்கள், தமிழ்நாடு மேனாடுகளுடன் நடத்திய கடல்வாணிகத்திற்குச் சான்று பகர்ந்துகொண்டு அம்மேனாட்டு மொழிகளில் இருந்து வருகின்றன.
தோகை துகி சிரியா
அகில் அகல் எபிரேயம்
கவி கபிம் எபிரேயம்
அரிசி அரிஜா கிரேக்கம்
இஞ்சி ஜஞ்சர் கிரேக்கம்
இஞ்சிவேர் ஜிஞ்சிபார் கிரேக்கம்

கி.மு.3000 ஆண்டுகட்கு முன், பாபிலோனிய நாட்டை ஆண்ட ஊர்ஏயா என்னும் மன்னனால், சாலடிய நாட்டின் தலைநகரான ஊர் (Ur) என்னும் நகரில் சேரநாட்டுத் தேக்கு மரத்தினால் திங்கட் கோட்டம் கட்டப்பட்டது. (P.T.S. Iyengar–தமிழ் வரலாறு)

கி.மு2600இல், தமிழகத்திலிருந்து கருங்காலி மரம், மணப் பொருள்கள் முதலியன எகிப்து நாட்டிற்கு ஏற்றுமதியானதாக,
ஆக்கஃப் என்னும் இடத்திலுள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. (P.T.S. Iyengar–தமிழ் வரலாறு)

பாலத்தீனத்துப் பேரரசனான சாலமன் காலத்தே (கி.மு.1000) மூன்று ஆண்டுகட் கொருமுறை, தங்கம், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து கப்பல்கள் அங்குச் சென்றனவாம்.

திமிலையுடைய எருதுகள், பாரசீக வளைகுடாவுக்கும், ஆப்பரிக்காவுக்கும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டனவாம். (டாகடர் இராசமாணிக்கனார்-இலக்கிய வரலாறு-45)

மேனாட்டுகட்கு மிகுதியாக ஏற்றிமதியானது மிளகு ஆகும். அடுத்தது ஏலம் முதலிய மணப்பொருள்கள், முத்து, யானைத் தந்தம் முதலியனவாம்.
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை சிதற
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி      - (அகநானூறு-149).....

இரும்பிலிருந்து எஃகு (உருக்கு) செய்வதற்குத் தமிழ்நாட்டாரைத் தவிர, அக்காலத்தில் வேறு யாருக்கும் தெரியாதென்று கிரேக்க உரோமப் புலவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
எகிப்து நாட்டுக் கல்லறைக் கோபுரங்கட்கு (Pyramids) அடியிலிருந்து சேலத்து எஃகினால் செய்யப்பட்ட சுத்தி உளி முதலிய கருவிகள் கிடைத்திருக்கின்றன.

எஃகு ஆராய்ச்சியில் வல்லுநர்களான J.M.Heath என்பாரும் Sir.J.J.Wilkinson என்பாரும் சேலம் எஃகினால் செய்யப்பட்ட சுத்தி, உளி முதலியவற்றைத்தாம் எகிப்து நாட்டுச் சிற்பிகள் அப் பழங்காலத்தே பயன்படுத்தினார்கள் என்கின்றனர்.
அக்கல்லறைக் கோபுரங்களின் காலம் கி.மு.8000 ஆண்டுகட்கு முற்பட்டதென்பர்.  

(புலவர் குழந்தை ஐயாவுக்கு நன்றி! கொங்குநாடு பக்கம் 86,87,88. சாரதா பதிப்பகம், சென்னை)
-----------------------------------------------------------