ஞாயிறு, 8 ஜூன், 2014

வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரின் தமிழலங்காரம்

வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரின் தமிழலங்காரம்
              (விழுப்புரம் இலக்கியக்கூடலில் நூல் அறிமுக உரை)

1.1. இயல்பு
பிறப்பு  என்பது ஒரு நேர்ச்சி விபத்து - போன்றது ‘Birth is an accident” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எவரும் தாம் விரும்பிய நாட்டில், விருப்பமான பகுதியில், விருப்பமான மக்கள் கூட்டத்தில் பிறக்கின்ற வாயப்பைப் பெற்றிருக்கவில்லை. பிறந்தபின், தாய்நாட்டின் மீதும் தாய்மொழியின் மீதும் பற்றுள்ளவராக இருப்பதென்பது இயல்பானதே!
       காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு என்பது போல அவரவருக்கும் அவரவருடைய இனம், அவரவர்களின் மொழி -உயர்ந்தது; சிறந்தது; பெருமை மிக்கது தான்! இருந்தபோதிலும், தமிழர்கள் வரலாறு தொடர்பாகவும், தமிழின் வரலாறு தொடர்பாகவும் கூறப்பட்டு வருகின்ற ஆய்வறிஞர்களின் கருத்துக்கள் வியப்பும் பெருமிதமும் அளிக்கக்கூடியனவாக இருக்கின்றன.

1.2.. குமரிக்கண்டம்  
இப்போதிருக்கும் இந்திய தேசப்படத்தில் கன்னியாக்குமரி முனைக்குக் கீழே நாம் பார்க்கும் அரபிக்கடல், வங்காள விரிகுடாக்கடல், இந்துமாக்கடல் ஆகிய மூன்றுகடல்களின் கூடலாகக் காணப்படும் கடல் பகுதி ஒருகாலத்தில் பெரும் நிலப்பரப்பாக இருந்தது என்பது ஆய்வாளர் கருத்தாகும்.
அதாவது இலட்சத் தீவுகள், அந்தமான் நக்காவரம் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா சேர்ந்த இப்போதிருக்கும் கன்னியாகுமரியின் தென்பகுதி முழு நிலப்பகுதியாக இருந்தது;
அப்பெரு நிலப்பரப்பைத் தமிழர், குமரிக்கண்டம் என்றனர். குமரியாறு, பஃறுளியாறு, குமரிமலை போன்றவை அப்பகுதியில் இருந்தன.
உயிரியல் ஆய்வாளர்கள் அதை இலெமூரியாக் கண்டம் என்கின்றனர். நிலத்தியல் ஆய்வாளர்களோ அதனைக் கோண்டுவானாக் கண்டம் என்கிறார்கள்.

1.3. மேற்குலக அறிஞர் உறுதிப்படுத்தல்
ஆப்பிரிக்காவையும் உள்ளடக்கிய அந்தக் குமரிக்கண்ட பெருநிலப் பகுதியிலேயே முதன் முதலாக மக்களினம் தோன்றியது என்பது ஆய்வாளர் கருத்தாக இருந்து வருகின்றது.
இதனை உறுதி செய்த மேற்குலக அறிஞர்கள் பலராவர். அவர்களுள், Sir John Evans, Prof. Hacckal, Sir Walter Ralegh, Sir T.W.Holderness, Dr.Macclean., Dr.heezer, Sir John Simmons போன்றோர் குறிப்பிடத் தக்கவராவர்.
சோவியத் அறிஞர் அலெக்சாந்தர் கோந்தரதோவ் எழுதிய “The Riddles of Three Oceans” என்ற நூல், தமிழிலே இந்துமாக்கடல் மர்மங்கள் என்ற பெயரில் பார்த்தசாரதி என்பாரால் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. NCBH  வெளியீடு, அந்நூல் குமரிக்கண்ட உண்மையை உறுதி செய்கின்றது.

1.4. இலக்கியச் சான்றுகள்
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள என வரும் சிலப்பதிகார வரிகளும், நல்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே என்ற புறநானூற்று வரியும் இன்னும் சில இலக்கியச் சான்றுகளும் குமரிக்கண்ட உண்மையை மெய்ப்பிக்கின்றது.
(உறையூரை அடைந்த கோவலன் கண்ணகி கவுந்தியென்னும் மூவரும் அன்று அங்கு தங்கி வைகறையிற் புறப்பட்டுத் தென்றிசை நோக்கிச் செல்கின்றனர். ஒரு இளமரக்காவுட் புக்கனர். அப்போது பாண்டியனின் பல புகழையும் கூறி வாழ்த்திக்கொண்டு அவ்விடத்திருந்த மறையோன்...
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கை இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி!  .... என்றும் பாடுகின்றான்!

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் புறநானூறு 9ஆம் பாடலில்,

எம்கோ வாழிய குடுமி தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின், நெடியோன்
நல்நீர்ப் பஃறுளி மணலினும் பலவே!  ... என்றும் பாடுகின்றார்)

இக் குமரிக்கண்டக் கருத்தை மொழிநூலறிஞர் மாகறல் கார்த்தி கேயனார், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், பன்மொழிப்புலவர் கா.அப்பாத் துரையார், அறிஞர் கா.சுப்பிரமணியனார், அறிஞர் பூரணலிங்கனார் போன்ற தமிழ்நாட்டறிஞரும் ஏற்று உறுதிப் படுத்துகின்றனர்.

1.5. முதன்மொழி
ஓரிரு அறிஞர்கள் இவ் உண்மையை ஏற்கத் தயங்கினும், இக்கால் இலக்கியச் சான்றுகள், சொல்லாய்வுகள் போன்ற அகச்சான்றுகளும், கல்வெட்டு, தொன்மையான ஓவியங்கள், அகழ்வாய்வுக் கண்டுபிடிப்பு போலும் தொல்லியல் சான்றுகள் உள்ளிட்ட அறிவியற் கூறுகளாகிய புறச்சான்றுகளும் இதை உறுதிப் படுத்தி வருகின்றன. பேராசிரியர் மருதநாயகம், நாளுக்கு நாள், உலக ஆய்வறிஞர்களின் முடிவுகள் குமரிக்கண்ட உண்மையை வலியுறுத்தி வருவதை எடுத்துக் காட்டுகின்றார்.
கடற்கோள்களால் அழிந்த அந்தக் குமரிக்கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் முதன்முதலாகத் தோன்றிய மாந்தர் பேசிய முதல்மொழியே தமிழ்மொழி என்பது வரலாற்று அறிஞரும் மொழியியல் வல்லாரும் கூறும் கருத்தாகும்
பி.டி.சீனுவாச ஐயங்காரின் இந்தியக் கற்காலம் “The stone age of India” என்ற ஆங்கில நூலும், தமிழர் வரலாறு “The History of Tamils” என்ற ஆங்கில நூலும் இதை உறுதிப்படுத்துகின்றன.

1.6. தொல்காப்பியம்
இவையிருக்க, இப்போது நமக்குக் கிடைத்துள்ள பண்டைத்தமிழ் நூல்களுள் பழமையானது, காலத்தால் முந்தியது தொல்காப்பியம் என்னும் இலக்கண இலக்கிய நூலாகும். இதன் காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது என்று பாவாணரும், அறிஞர் இலக்குவனாரும் இன்னும் பலரும் தீர்மானமாகக் கூறினர். இக்கால் செம்மொழித் தமிழாய்வு நிறுவன ஆய்வாளரும் அதனை உறுதி செய்துள்ளனர்.
ஆகவே, 2700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியத்தில், அறிஞர் இன்னவாறு கூறுவர், இவ்வாறு கருதுவர் என்று விளக்கும் முறையில், என்ப, மொழிப, கூறுப, சொல்லினர், மொழியினர், என்மனார், என்றிசின், என்றிசினோரே, என்றவாறு பல இடங்களில் கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
ஒரே ஒரு எடுத்துக்காட்டு: தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்தில், தொல்காப்பியம், எழுத்தெனப்படுப, அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப என்று கூறுகிறது. இவ்வாறு, தொல்காப்பியத்தில் 287 இடங்கள் சுட்டப் படுகின்றன.   

1.7. முன்னிருந்த நூல்கள்
இவை ஓர் உண்மையைச் சொல்கின்றன. தொல்காப்பியத்திற்கு முன்னராகவே பல்வேறு இலக்கியங்களும் கலை நூல்களும் தமிழில் இருந்திருக்கின்றன என்ற உண்மையைத் தான் அவை கூறாமல் கூறுகின்றன; உணர்த்துகின்றன.

1.8. மரபு
இன்னொன்று! தொல்பழங் காலந் தொட்டுத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும், நெறிகள் வழுவாது ஒழுகும் முறைமையை, மரபு என்று அறிஞர்கள் கூறுவார்கள்.
நெறிகள் என்றால், கொள்ளுவன கொண்டு, தவிர்ப்பன தவிர்த்தல், காப்பன காத்து கடிவன கடிதல் அறிவார்ந்த பெரியோர் விதித்தன செய்தலும் விலக்கியன தவிர்த்தலும் ஆகும். இப்படிப்பட்ட நெறிகளைத் தொன்று தொட்டுத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதே மரபு என்று சொல்லப்படுகின்றது.  
தொல்காப்பியத்தில் மரபு என்ற சொல்லாட்சி 86 இடங்களில் காணப்படுகின்றது. தொல்காப்பிய உட்பிரிவான இயல்கள் சிலவற்றின் பெயர்களே நூன்மரபு, மொழிமரபு, தொகைமரபு, விளிமரபு, மரபியல் என்றுள்ளன.
தொல்காப்பியத்தில் சுட்டப்படும் பல்வேறு மரபு நிலைகள், கடைப்பிடித்துவரும் பல்வேறு முறைமைகளை மட்டும் சுட்டவில்லை. தொன்று தொட்டுத்தொடர்ந்து கடைப்பிடித்து வருதல் என்பதால் வேறொன்றையும் தொல்காப்பியம் நமக்கு மறைமுகமாகவும் தெளிவாகவும் தெரிவிக்கின்றது! என்ன அது? எண்ணிப் பாருங்கள்!
       தொல்காப்பியத்திற்கும் முன்னரே ஒரு பெரும் நீண்ட அறிவுக்காலம்  இருந்திருப்பதையும் அல்லவா அவை கூறாமல் கூறுகின்றன?
தமிழ்மொழி, பலதுறை நூல்கள் நிறைந்த மொழியாய் நுட்பச் சிறப்போடும் வளச் செழுமையோடும் இருந்திருக்கிறது என்பதைத் தெரிவிக்கின்றன. அந்த நூல்களெல்லாம் என்னவாயின?

1.9. அழிந்தவகை
பாவாணரும் பரிதிமாற் கலைஞரும் விடைகூறுகின்றனர். இடைக்காலத் தமிழரின் பேதைமையால், பாழான மண்ணிற்கும் படையான சிதலுக்கும், படியாதார் நெருப்பிற்கும், பதினெட்டாம் பெருக்கிற்கும், பற்பல பூச்சிக்கும், பகைவரின் சூழ்ச்சிக்கும் இரையான கலைநூல்கள் எத்துணை எத்துணையோ எனப் பாவாணர் பதைபதைப்பார். 
பரிதிமாற் கலைஞரென்னும் சூரிய நாராயண சாத்திரியார், தமிழ்மொழியின் வரலாறு (மொழிநூல்) என்ற பெயரிலான அவருடைய நூலில் கூறுவதைக்கேளுங்கள்: தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர் என்பார்.
அவரே, தமிழர்களின் மறைநூல் மந்திரநூல் போன்ற அரிய நூல்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்துக் கொண்டு, மூல நூல்களை அழித்துவிட்டு வடமொழியனின்றே அவ்வரிய கருத்துக்கள் வந்தன போலக் காட்டினர் பிராம்மணர் என்று எழுதியுள்ளார். இவற்றிற்குள் இதற்குமேல் இப்போது போகவேண்டாம்!

1.10. அறிவியல் சார்ந்த மெய்ப்பிப்பு
மேற் கூறிய செய்திகளால், தமிழ்மொழியின் முன்மையையும் தொன்மையையும் அறியமுடிகிறது
       தொல்காப்பிய காலத்திற்கும் முன்னரே ஓர் உயர்ந்த நிலையில் அறிவார்ந்த செழுமைமிக்க வளஞ்சான்ற மொழியாகத் தமிழ்மொழி இருந்ததைப் பல்வேறு இலக்கியச் சான்றுகளாலும், அறிஞர் ஆய்வுரைகளாலும், தொல்லியல் ஆய்வு முடிவுகளாலும் அறிவியல் அடிப்படையில் அறிகிறோம்.

2.1. தமிழலங்காரம்
சரி. இவற்றிற்கும் தமிழலங்காரத்திற்கும் தொடர்புண்டா? உண்டு!  
தமிழலங்காரமும், தமிழின் உயர்வையும் முன்மையையும் தொன்மையையும் பெருமையையும் சிறப்புகளையும் நுட்பங்களையும் பலவாறாகப் போற்றிக் கூறுகின்றது.
வடமொழியால், வடமொழியாளரால்  தமிழ்மொழிக்கு ஏற்பட்ட, ஏற்படுகின்ற தாக்கத்தையும் கேட்டையும் கூறுகின்றது. வடமொழியைவிடத் தமிழ் எங்ஙனம் மேம்பட்டதாகும் என எடுத்துக் கூறுகின்றது.
ஆனால், அங்ஙனம் மேன்மையைக் கூற வேறுபட்ட கோணங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதே வேறுபாடாகும்.

2.2. தமிழலங்காரம் பிறந்த கதை
தமிழலங்காரம் சிறிய நூல். இதில் காப்புச் செய்யுளும் நூறு கட்டளைக் கலித்துறைப் பாடல்களும் உள்ளன. இந்நூலை இயற்றியவர் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாராவார்.
இவர், தேவார மூவர் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தியார் - போல பல ஊர்களுக்கும் சென்று, ஆங்காங்கு கோயில்கொண்ட சிவனைப் போற்றிப் பதிகம் பாடி வந்தார். அவ்வாறான நிலையில் ஒருமுறை வேலூரில் வந்து தங்கி அவ்வூர் உறையும் இறைவனைப் போற்றிப் பதிகமும், திருப்புகழும் பாடியிருந்தார்.
அக்கால், அவரைத்தேடி வந்த ஒரு பனவன் பனவன் என்றால் பார்ப்பனன், பிராமணன் என்று பொருள் அவரிடம் வடமொழியே உயர்ந்தது; வலிமை பெற்றது எனத் தருக்குரை செய்ய, இருவரும் பல்வேறு நிலைகளில் சொற்போர் புரிந்தும் முடிவுபெறாத நிலையில், சீட்டெழுதிப் போட்டு முருகப் பெருமானிடம் தீர்ப்பறிய முடிவு செய்தனர்.
அம்முடிவின் படியே முருகனின் திருஉருவின் முன் சீட்டெழுதிப் போட்டு ஒரு சிறு பெண்குழந்தையை விட்டு ஒரு சீட்டை எடுக்கச் சொல்லினர். அக்குழந்தை எடுத்த சீட்டில், தமிழே உயர்ச்சி என்று இருந்தது. இந் நிகழ்ச்சியே, தாம் தமிழலங்காரம் பாடக் காரணமாக இருந்தது என்று குருபர தத்துவம் என்ற தன்வரலாற்று நூலில் நூலாசிரியர் குறித்துள்ளார்.

2.3. நூலாசிரியர்
தமிழலங்காரம் இயற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரின் தந்தை, திருநெல்வேலி நெற்கட்டும் செவ்வல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில் நாயகம் ஆவார். தாய் பேச்சிமுத்து அம்மையார். இவர் 1839 -இல் பிறந்தவர். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம். 

2.4. பாப் பொழியும் ஆற்றல்
       எட்டு அகவையிலேயே சுரண்டை என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள பூமிகாத்தாள் எனும் பெண் தெய்வத்தின் பெயரில் இவர் முதன்முதலாக ஒரு வெண்பா பாடினார்.
பதின்மூன்றாம் அகவையிலேயே வண்ணம் என்ற சந்தப்பா பாடுவதில் வல்லமை பெற்றிருந்ததார். இவ்வாறு இளமையிலேயே பாடல் பொழியும் ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராமனார் என்பார், இவருக்கு "ஓயா மாரி" என்ற பட்டப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
(வண்ணப் பா: முத்தைத்திரு பத்தித்திருநகை
              அத்திக்கிரு சக்திச்சரவண..................................   என தும்)                                    
2.5. பெயர்க் காரணம்
சரபம் எனபது ஒரு புனைவான, கற்பனையான எட்டுக்கால்களை உடைய பெரும் பறவை. இது பனிமலையில் வாழ்வதாகவும், சீயம், அரிமா என்னும் விலங்கரசான சிங்கத்தையும் தாக்கக் கூடியதென்றும் கூறுவர்.
இப் புனைவுப் பறவையைத் தமிழில் சிம்புள் என்பர். சிம்புட் பறவையே, சிறகை விரி, எழு! என்பது பாவேந்தரின் புகழ் பெற்ற பாடல் வரி!.  
       வண்ணம் என்றால் சந்தம். வண்ணப்பா இயற்றும் ஆற்றலில், அந்தப் பறவைக்கு இருந்த உடல் ஆற்றலை ஒத்த ஆற்றல் அவருக் கிருந்ததால் வண்ணச்சரபம் என்ற அடைமொழியுடன் அவர் அழைக்கப்பட்டார். வெண்பா எழுதுவதில் திறம் மிக்கவரை வெண்பாப் புலி என்று சொல்வார்கள். அதைப் போன்றே அடிகளார் வண்ணச்சரபம் என்றழைக்கப்பட்டார்.  (12 வண்ணங்கள் பாடியுள்ளார்)
(சரபம்: A large fabnulous bird with 8 legs regarded as the foe of the lion and as inhibiting  the snowy mountains. – வின்சுலோ அகராதி)
      உச்சி முதல் உள்ளங்கால் வரை திருநீறு பூசிக்கொண்டு இடுப்பில் நீர்ச்சீலை என்னும் கோவணமும், கையில் தண்டமும் வைத்துக்கொண் டிருந்ததால் தண்டபாணி அடிகள் என்றும்,  முருகனை மனம் உருகிப் பாடியதால், "முருகதாசர்" என்றும் அழைக்கப்பட்டார். அருணகிரியாரின் அடியொற்றித் திருப்புகழ் பல படைத்ததால்  திருப்புகழ்  அடிகள் என்றும் அழைக்கப்பட்டார்.                  

2.6. இயற்றிய நூல்கள்                                                                                                             திருவரங்கத் திருவாயிரம், சடகோபர் சதகத்தந்தாதி, பெருமாளந்தாதி, அறுசமயக் கடவுள்கட்கு ஆயிரம் ஆயிரமாக ஆறாயிரம் பாடல்கள்புலவர் புராணம்,  திருமாவாத்தூர் தலபுராணம், அருணகிரிநாதர் புராணம், முசுகுந்த நாடகம், மறுநெறித் திருநூல், நான்குநூல், கௌமார முறைமை, தியானாநுபூதி ஆகிய நூல்களையும்,
       சத்திய வாகசம் என்னும் உரைநடை நூலையும்,
       அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு ஆகிய இலக்கண நூல்களையும்,
       தமிழைப் போற்றி வணங்கும் முத்தமிழ்ப் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழலங்காரம் என்னும் நூல்களையும் இயற்றியுள்ளார்.
       ஆங்கிலேயரை எதிர்த்து ஆங்கிலியர் அந்தாதி என்ற நூலையும்  இன்னும் பலநூல்களையும் அடிகள் இயற்றியுள்ளார்.                                                     

2.7. தமிழிசைத் தொண்டர்                                                                                                                                          தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாத்திரி முதலானோர் தெலுங்கிலும், சமற்கிருதத்திலும் கர்நாடக இசையை வளர்த்துப் பாடிவந்த காலத்தில், வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் தமிழில் வண்ணம் (சந்தப்பாட்டு) பாடித் தமிழிசைக்கு உயிரூட்டினார். 
                சந்த வகைக்கு இலக்கணம் வகுத்து வண்ணத்தியல்புஎன்ற இலக்கண நூலை முதன்முதலாக இயற்றிவர் இவரே!. இவர் பாடிய தமிழிசைப் பாடல்கள்  ஒரு நூறாயிரத்திற்கும் ஓர் இலக்கத்திற்கும் மேற்பட்டவையாம்.                                                 

2.8. அடிகளும் ஆமாத்தூரும்                                               
                பல ஊர்களுக்கும் சென்று பதிகமும் திருப்புகழும் பாடிவந்த அடிகள், தம் இறுதிக் காலத்தில் நம் விழுப்புரம் நகருக்கு அருகிலுள்ள திருஆமாத்தூர் வந்துத் தங்கிக் கெளமார மடத்தை நிறுவித் தமிழ்ப்பணி யாற்றி யிருக்கிறார்.
அடிகளின் பெயரர் முருகதாசர் எழுதிய உரையுடன், தமிழலங்காரம் 1964-இல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், 34 ஆண்டுகள் கடந்தபின், நம் விழுப்புரம் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுநர் தலைவர் மருத்துவர் பாவலர் பாலதண்டாயுதம் ஐயா, தமிழலங்காரம் நூலை உரையுடன் 34 ஆண்டுகளுக்குப் பிறகு 1998-இல் மீண்டும் அச்சேற்றி வெளியிட்டார்.
                                                                  3.1. தமிழலங்காரம் தமிழின் உயர்வை எவ்வாறு விளக்குகிறது?           
தமிழலங்காரம், பல்வேறு தெய்வியக் கதைகள், கடவுளரின் வாழ்க்கை நிகழ்வுகள், நம்பிக்கைகள், இலக்கண இலக்கிய சிறப்புகள் துணையுடன் தமிழின் உயர்வை, பெருமைகளை, சிறப்புகளை, நுட்பங்களை விளக்கிக் கூறுகிறது.

3.2. தமிழலங்கார விளக்கங்களில் யார்யார் தொடர்பான செய்திகள் இடம் பெறுகின்றன?
       சிவபெருமான், திருமால், பிரமன், இந்திரன், பிள்ளையார், முருகன், கலைமகள், திருமகள், சூரியர், சந்திரர் போன்ற கடவுளர் தொடர்பான பல செய்திகளும்
விருத்திராசூரன், சூரபன்மன். இராவணன் தொடர்பான செய்திகளும்,
சனகன், வசிட்டர், திருமலை ராயன், கணிவண்ணன், ஆண்டாள், பரவை நாச்சியார், தொடர்பான செய்திகளும்,
திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், கச்சியப்ப சிவாசாரியார், ஒட்டக்கூத்தர், அம்பிகாபதி, இரட்டைப் புலவர், அகத்தியர், நக்கீரர், காளமேகம், முத்துவயிரப் புலவர், கந்தசாமிப் புலவர், வீரபாண்டியப் புலவர், சீநிவாசப் பெலவர், ஆறுமுகப் புலவர், பாணினி, தக்கன் தொடர்பான செய்திகளும்,
பகழிக் கூத்தர், பட்டினத்தடிகள், பத்திரகிரியார், பராசரமுனிவர், திருஞான சம்பந்தர், சுந்தர மூர்த்தியார், திருநாவுக்கரசர், மாணிக்க வாசகர், குகை நமச்சிவாயர், அபிராமிபட்டர், வியாசர், சேரமான் பெருமாள் நாயனார், திருப்பாணாழ்வார், வீரபாகு, திருமங்கை யாழ்வார், இன்னும் சிலர் தொடர்பான செய்திகளும் தமிழின் உயர்வைக் கூறுவதற்கு வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரால் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

3.3. தமிழலங்காரம் சுட்டும் நிகழ்வுகள், நம்பிக்கைகளில் சில
       சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டது,
       இறைவனின் திருமணத்திற்கு அனைவரும் இமயத்தில் குவிந்ததால் இமயம் தாழ, அதைச் சரிசெய்வதற்குச் சிவன் அகத்தியரைப் பொதிகை மலைக்குச் செல்லுமாறு பணித்தது,
       சுந்தரர், வறண்ட குளத்தில் நீர் வரவழைத்து, அதில் முதலை தோன்றச் செய்து, மூன்றாண்டுக்கு முன் அது விழுங்கிய பார்ப்பனச் சிறுவனை உரிய வளர்ச்சியுடன் உமிழச் செய்தது,
       திருஞான சம்பந்தருக்கு உமை ஞானப்பால் ஊட்டியது,  
       திருஞானசம்பந்தர், மயிலாப்பூர் குளக்கரையில் சுடப்பட்ட எலும்பிலிருந்து பெண்வரப் பாடியது,
       திருநாவுக்கரசர் கருங்கல்லைத் தெப்பமாகக் கொண்டு கரையேறச் செய்தது, கொல்லவந்த பட்டத்து யானையைப் பின்வாங்கச் செய்த்து, நீற்றறயைக் குளிரவைத்தது, இறந்த அப்பூதியார் மகனை உயிர்பெற்று எழச் செய்த்து,     
       தருமி பாண்டியனிடம் பொற்கிழி பெறச் செய்தது,
ஒளவையார், வெட்டப் பட்ட பலாமரம் தழைக்கப் பாடியது.
       சுந்தரர்க்காகப் பரவைநாச்சியிடம் சிவன் தூது சென்றது,
       அபிராம பட்டரைக் காப்பாற்றக் காருவா நாளில் அமாவாசையில் முழுநிலா தொன்றச்செய்தது - போன்ற பலப்பல கதைகளும், நிகழ்வுகளும் நம்பிக்கைகளும் தமிழின் உயர்வைக் கூற வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரால் தமிழலங்காரத்தில் பயன்படுத்திக் கொள்ளப் பட்டிருக்கின்றன.

4.1. தமிழலங்காரப் பாடல்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
முதலில் காப்புச் செய்யுள்:
தித்திக்கும் நூறு தமிழலங்காரப் பாடல்களை நன்றாகத் தாம் பாடுவதற்குப் பிள்ளையார் துணையிருக்க வேண்டுமென வேண்டுகிறார் வண்ணச்சரபம் அடிகளார். அக்காப்புச் செய்யுள் இதுதான்:
இமிழ லங்கார மதநீர் அருவிகள் எப்பொழுதுதும்
உமிழ லங்காரத் தலைக்கண நாதனை உன்னுகின்றேன்
சிமி ழலங்கார முலையார் மொழியினும் தித்திப்பதாம்
தமிழ லங்காரக் கவிநூறும் நன்கு தருவதற்கே! 
மங்கையரின் இன்மொழியினும் தித்திப்பது தமிழ்மொழி என்கிறார். இந்தக் கருத்து, மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாத்தமிழுக்கு ஈடில்லை என்று சொல்வேன் என்ற பாவேந்தரின் கூற்றை நினைவூட்டுகிறது அல்லவா?

4.2. ஆரிய வேள்வியில் உயிர்க் கொலை
பிரம்மன், தக்கன் போன்ற வடமொழியாளர், ஆரிய வேத்ததில் ஆ என்னும் பசு, ஆடு, குதிரை முதலியவற்றைக் கொன்று செய்யும் வேள்வியைப் பாராட்டிக் கூறுவர்.
ஆனால், திருவள்ளுவர் ஒளவையார் முதலானவர் கூறிய தமிழ்மறையோ கொலை எவ்விடத்தும் கூடாது என்று வலியுறுத்துவதால் உயர்ந்தமொழி தமிழே என்று வண்ணச்சரபம் ஐயா வலியுறுத்துகிறார். பாடல் இதோ:                                              
நான்முகன் தக்கன் முதலோர் அநேகர் நவின்றவட
நூன்முழு தும்கொலை வேள்வியைப் போற்றும் நுடங்கரிய
வேன்முனைக் கண்ஒளவை வள்ளுவன் ஆதியர் விண்டதென்னூல்
ஊன்முழுப் பாவம் எனவே அடிக்கடி ஓதிடுமே!            - 4
(மனோன்மணீயம் சுந்தரனாரும், மணிமேகலை ஆபுத்திரனும் நினைவுக்கு வருகின்றனர் அன்றோ?)

4.3 தென்றலும் வாடையும்
       தண்மையுடன் தமிழின் இனிமை சேர்ந்துவரும் தென்றல் காற்று உடலுக்கு நலத்தையும் மனத்திற்கு மகிழ்வையும் தரும்.
       கடினமான வடமொழித் தன்மை தாங்கிவரும் வாடைக்காற்று உடலுக்கு அயர்வும் கேடும் தரும்.
       இவற்றை ஆராய்ந்து மருத்துவநூல் வல்லாரே கூறுவர் என்று தமிழின் உயர்வைக் கூறுகிறார்.                                                               பாடல் இது:
தண்டமிழ் வாசம் கலந்து குலாவும் தனித்தென்றலும்
ஒண்டகை ஆரியச் சீர்தோயும் வாடையும் ஊனிலொன்றி
மண்டலத் தோர்க்குத் தரும்பயன் தன்னை மதித்தறிந்து
கண்ட வயித்தியர் வாய்மேன்மை தாழ்மையைக் காட்டிடுமே!      -10                       வாடைக் காற்று தமிழர்க் காகாது என்ற வரி நினைவுக்கு வருகின்றது.

4.4. இறைவன் தன்கையால் எழுதிய திருவாசகம்
       பராசர முனிவரின் மகனான வியாசர் கூறிய வடமொழியின் ஐந்தாம் மறையாகிய பாரதத்தை மேருமலையின் மீது எழுதும்படி பிள்ளையாரைப் பணித்தார் இறைவன்.
       ஆனால், அன்புருவான திருவாதவூரடிகள் பாடிய தென்மொழித் திருவாசகத்தை தம் கையாலேயே எழுதினார்.
       அதை உமாதேவி மகிழும்படிப் பொன்னம்பலத்தில் பாதுகாப்பாகவும் வைத்தார் என்று தென்மொழித் தமிழுக்கு இறைவன் அளித்த உயர்வை அடிகள் கூறுகிறார்.
பாடல் இதோ:
வண்மைப் பராசரன் மகன்சொல்ஐந் தாமறை வாசகத்தை
அண்மைப் புதல்வன் கரத்தால் வரைவித்த அண்ணலருள்
உண்மைத் தமிழ்த்திரு வாசகப் பாடல் ஒருங்கெழுதிப்
பெண்மைக் குவகை தருமரங் கூடுறப் பேணினனே!       - 17  
      
4.5. எகர ஒகரம் இல்லாத மொழி
       சீர்காழி அகன்ற பொய்கைக் கரையில் அழுத சிறுவரான திருஞான சம்பந்தருக்கு உமையவள் ஊட்டிய ஞானப்பாலின் இனிமை, அடியவர் அஞ்ஞான இருள் நீக்கும் தேவாரத் தமிழாக வெளிவந்ததே யல்லாமல்,
எ, ஒ போன்ற எழுத்துக்கள் இல்லாத வடமொழி மூலமாக வெளிவரவில்லை. எனவே, தமிழ் ஞானமொழி எனகிறார் அடிகள்.
அந்தப் பாடல் இதுதான்:
சீகாழி யூர்த்தடம் பொய்கைக் கரையிற் சிறிதழுத
வாகாரும் சேய்க்குமை நல்கிய பாலின் மதுரமன்பர்
சோகாந்த காரம் கெடத்தமி ழோடு துலங்கிற்றன்றி
ஏகாரத் தின்குறில் இல்லாக் கலையொ டிலங்கிற்றன்றே!         - 19
       தேவாரம் எகர ஒகரமில்லா வடமொழியிலா பிறந்தது? தமிழில்தானே பிறந்தது என்கிறார் வண்ணச்சரப அடிகளார்.

4.6. திரிந்த தமிழ்ச்சொல்
       புகல் என்னும் தமிழ்ச் சொல்லைப் போல் என்று இந்தியில் கூறுகின்றனர். இவ்வாறு பல தமிழ்ச் சொற்களை இந்துத்தானியில் திரித்து வழங்குகின்றனர்.
       உலகில் எம்மொழியின் சொற்களும், தமிழ்ச்சொல்லும் வடசொல்லும் கலந்தே அமைகின்றன.
எனவே, தமிழே உலக மொழிகளின் தாய் என்கின்றார்.
பாடல் இது:
புகல்எனும் சொல்லினைப் போல்எனச் சொல்லுதல் போற்பலசொல்
இகல்இந்துத் தானியும் செந்தமி ழிற்கொண் டியம்புகின்றார்
அகல்நிலத் துள்ள கலையாவும் தென்சொல் லதுவுமெதிர்
திகழ்வட சொல்லும் கலந்தே விளங்கும் தெரிந்திடினே!           - 22
        
4.7. ஒண்தமிழ் ஆற்றல்
       திருநாவுக்கரசரைக் கருங்கல்லிற் பிணித்துக் கடலில் வீசினர். அந்தக் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறச் செய்தது தமிழ்ப்பாடல்.
கொல்ல வந்த பட்டத்து யானையை அஞ்சி அடங்கச் செய்தது தமிழ்ப் பா. சுண்ணாம்புக் காளவாயாகிய நீற்றறையைக் குளிரவைத்தது அப்பரின் தமிழ்ப் பாட்டு.  
அப்பருக்கு உணவு பரிமாற இலை கொண்டுவரச் சென்ற போது பாம்பு கடித்து இறந்த அப்பூதியடிகளின் தலைமகனை உயிர்பெற்றெழச் செய்தது அப்பரின் தமிழ்ப் பதிகம்.
ஒண்டமிழின் ஆற்றல் என்னே! என்று பாடுகிறார்.
கடல்நீரில் கல்மிதக்கும் படிச்செய்து களிறுறுக்கும்
அடல்யாவும் குன்ற அடக்கிவெந் நீற்றறை அம்புயப்பூந்
தடமாகக் காட்டி அரவால் இறந்த தனயனையும்
உடலோ டெழச்செய்த தன்றோ ஒருவன்சொல் ஒண்டமிழே!              - 29             

4.8. பேய்க்கரும்பு இனிக்கும் பேறு தரும் தமிழ்
       திருவாரூரில் காமத்தால் இறந்த ஒருவனைப் பிழைக்கச் செய்தது பட்டினத்தார் தமிழ்ப் பா, இறந்த தாயின் உடலை நீரூறும் வாழை மரங்கொண்டு எரியூட்டியது அவர் தமிழ்ப் பாடல், காஞ்சியில் இகழ்ந்து பேசிய ஒருவனது பெருவயிறு பிளக்கச் செய்ததும் அவர் தமிழ்ப்பாவே, திருவொற்றியூரில் மாடு மேய்க்கும் சிறுவர்க்குப் பேய்க்கரும்பை இனிமை யுடையதாக்கியது (பட்டினத்தார் பாடிய) செந்தமிழே என்கின்றார்.                அது இந்தப் பாடல்:
ஆரூரில் மொத்துண்டு செத்தார்க் குயிர்நல்கி, அன்னையினால்
நீரூறும் வாழையில் தீமூட்டிக், கச்சியில் நிந்தைசெய்தோன்
பேரூன் வயிறு பிளந்து, கைப்பாகிய பேய்க்கரும்பும்
சீரீர்தென் ஒற்றியில் தித்திக்கச் செய்தது செந்தமிழே!                   - 53    
       (முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே
       பின்னை யிட்டதீ தென்னி லங்கையில்
       அளன்னை யிட்டதீ அடிவ யிற்றிலே
       யானு மிட்டதீ மூளக மூள்கவே! பட்டினத்தார் பாடல்)

4.9. தமிழை மற்றொருமொழி தந்ததென்பவன் பதர்!
                தமிழை உணர்ந்த பாவலன் போன்ற ஒருவன், தனது மொழியை அமிழ்தினும் உயர்வென்று அறிந்து மகிழாமல், பிறமொழியை விரும்புவது, வேறொரு பெண்ணின் கணவனை வியக்கும் ஒருத்தியின் செயலுக்கு ஒப்பாகும். அவன் புலவனல்லன் என்கிறார். அந்தப்பாடல் இது:
தமிழ்உணர் பாவலன் போல்வான் ஒருவன் தனதுகலை
அமிழ்தினும் ஏற்றமென் றேமாப் புறாமல் அயற்கலையால்
உமிழ்வதென் றொப்பிடில் மற்றோர் மடந்தைக் குரியகொண்கன்
குமிழ்மலர் நாசியி னால்மணந் தாள்நிகர் கோதினனே!            - 97   
       இவ்வாறு எல்லாப் பாடல்களும் சுவையோடு  தமிழின் உயர்வைத் தெரிவிக்கின்றன.

5.1 தண்டபாணியார் தமிழ்ப்பற்று                                 
"இளநகைச் சிறுமியர் சொல் மொழியினும்  தித்தித்திருக்கின்ற  தமிழ்" என்றும்,
"செந்தமிழே உயர்வென்று முன்னாள் சீட்டு எனக்குத்  தந்தனன் கந்தன்"  என்றும்
"தமிழ் மொழிக்கு உயர்மொழி  தரணியில் உளதெனில் வெகுளியற் றிருப்பவன் வெறும்  புலவோனே" என்றும்,
மதுரத் தமிழை இகழ் தீயோர் மணிநா அறுத்துக் கனலில் இட என்றும்
தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனில், அஃதுணர் அலகையில் தாழ்வெனல் அறமே! (பு. இ.) என்றும்

தண்டபாணி அடிளார் பாடிய பாடல் வரிகள் அவரின் ஒப்பற்ற தமிழ்ப்பற்றை உணர்த்துகின்றன.                                                                                                               
                                                                    5.2. தமிழலங்காரச் சிறப்பு
       வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார், தமிழின் உயர்வை விளக்கி மெய்ப்பிக்க, அவர் காலத்தில் (ஏறத்தாழ 160 ஆண்டுகளுக்கு முன்னர்) மக்களிடம் அழுத்தமாகக் கருத்தேற்றம் பெற்றிருந்த தெய்வியக் கதைகளையும், கடவுளர் வாழ்க்கை நிகழ்வுகளையும், பல்வேறு நம்பிக்கைகளையும், மொழிகளின் இலக்கண அமைப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு, காலத்திற்கேற்ற உத்தியைக் கையாண்டு தமிழின் உயர்வைத் தமிழலங்காரம் நூல்வழி நிலைநாட்டி நிறுத்தியிருபதை உணர்ந்திட முடிகின்றது என்று கூறி என் உரையை முடிக்கின்றேன்.   


----------------------------------------------------------------------------------

வெள்ளி, 6 ஜூன், 2014

பாராட்டும் வாழ்த்தும்!

கடலூர் தொலைத்தொடர்புக் கோட்டத்தின் துணைமேலாளர் உயர்திரு, இராதாக்கிருட்டினன் 31-5-2014 அன்று பணிநிறைவுற்றார். அதையொட்டி விழுப்புரத்தில் அதே நாளில் நடைபெற்ற விழாவில் அவரின் பணிகளைப் பாராட்டி வாழ்த்தி அளித்த பா:   

மதிப்பிற்குரிய இராதாக் கிருட்டினனார்
மகிழ்வுற வாழ்க!


நீயே, அன்புதோய் நேயநல் அமைதியை!
இன்னார்க் கென்னாது எல்லார்க்கும் நல்லை!
இன்னா எண்ணாப் பொன்னுளம் உடையை!
நன்றொரு வர்க்கெனில் நண்ணுவை முன்னே!
என்னதோர் நெருக்கடி எந்தப் பணியரை
இறுக்கினும் உன்றன் ஏமக் காப்பு
இருக்கின் றதென இருப்பர் உறுதியில்!
வாடிக்கை யாளர் வருத்தத் துடனே
தேடிவந் துரைத்திடும் தீராக் குறைதமை
நாடித் தீர்த்தவர் நகைமுகம் காண்குவை!
ஈடிலா நிறைவில் இயம்புவர் நன்றி!
எந்த நாளிலும் வந்தமேல் ஆணை
`எந்திர விரைவினில் முந்திசெய் முயற்சியை!
அன்ன திறமையால் அதிகா ரிகளின்
நன்னம் பிக்கை நனிபெற உழைத்தனை!
தோழமை உணர்வு தோயநின் சங்கத்(து)
ஆழவே இயங்கி அரும்பணி ஆற்றினை!
போராட் டங்களில் போய்முன் நின்றனை!
பேராப் பெரும்பொறுப் பேற்று நடத்தினை!
குடும்ப நிலையிலும் குறையில் லாதே
அடுத்தடுத் தமைந்த கடமையும் ஆற்றினை!
ஒருநா ளில்லை இருநா ளில்லை
பலநாள் பழகினும் தலைநாள் அன்பினை!
வெருட்டல் மருட்டல் விரும்பா இராதாக்
கிருட்டின! நின்னை விரும்பார் யாரே!
மிகுவே கத்துடன் ஏகிய காலம்
தகுபணி நிறைவுறத் தந்ததே ஓய்வு!
நல்லுள நண்ப! தொல்லுல கிதனில்
நில்லுந் தமிழ்மொழி நிலைத்திடு நாள்வரை
கடல்நிலம் விசும்பு காற்றுதீ உளவரை
உடல்நலம் வளத்துடன் திடமுடன் மகிழ்வுற
வாழ்கநீ வாழ்கென வாழ்த்தினம்
ஆழ்ந்தநல் அன்புடன் அகம்மிக நெகிழ்ந்தே!
                  




செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

செந்தமிழ் நாட்டுச் சிங்காரவேலர்!

செந்தமிழ் நாட்டுச் சிங்காரவேலர்!


செந்தமிழோ டாங்கிலத்தில் செந்திறப்பேச் செழுத்தும்
     சேர்ந்துசிறந் தொளிர்ந்தவர்பேர் சிங்கார வேலர்!

இந்தியாவின் விடுதலைப்போர்க் கெழுந்தாருள் மூத்தார்!
     இவர்நேர்மை போர்க்குணத்தால் ஈர்ப்புற்றார் காந்தி!

சிந்தனையின் சிற்பியெனச் செந்தமிழர் அழைத்தார்!
     சீறுபுரட் சிப்புலியென்(று) அண்ணாவும் சொன்னார்!

அந்நாளில் ஆசியக்கண் டந்தனிலே முன்னே
     ஆர்த்தெழுந்த பொதுமையியக் கத்தரிவ  ரன்றோ?   

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

தமிழ்ப் பா நூலில் ஓர் ஆங்கிலப் பாடல்!

தமிழ்ப் பா நூலில் ஓர் ஆங்கிலப் பாடல்!

அண்மையில் விழுப்புரத்தில் விழுப்புரம் தமிழ்ச்சங்கம் சார்பில் பாவலர் பாலதண்டாயுதம் கவிதைகள் என்னும் மரபுப் பா நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழுப்புரத்தில் தமிழ்ச்சங்கம் நிறுவி தமிழ்த்தொண்டாற்றி வரும் விழுப்புரம் மருத்துவர் பாவலர் பாலதண்டாயுதம் நல்ல மரபுப்பாவலர் ஆவார். நூலில் அவர் பாடல்களைச் சிறப்பித்து இலக்கியச்செம்மல் இரா.இளங்குமரனார், பாவலர்  ம.இலெ.தங்கப்பா முதலியோர் அணிந்துரை எழுதியுள்ளனர்.

அந்த நூலில் ஓர் ஆங்கிலப்பாடல் இடம்பெற்றுள்ளது. அதை எழுதியவர் நூலாசிரியரின் திருமகளார் பாலசுதா ஆவார். அவரும் ஓர் மருத்துவரே! எளிய ஆங்கிலத்தில் அவர் எழுதியுள்ள பாடல் கீழே காண்க! படித்தோர் கருத்துரைக்க வேண்டுகிறேன்.

A WORD OF THANKS AND APOLOGY

Thank You God , for all  your gifts.
Thank You God , for the fog, the dew and the mists.
Thank You God , for the sparkling fountains.
Thank You God , for the sky soaring mountains.
Thank You God , for the fruits and vegetables.
Thank You God , for the varied edibles.
Thank You God , for the beetle, bug and butterfly
Thank You God , for the clear blue sky
Thank You God , for the koel mynah and sparrow
Thank You God , for the rainbow without an arrow
Thank You God , for the violet, indigo, blue, green, yellow, orange, red
Thank You God , for the fresh green, wide grassbed.
Thank You God , for the clouds in motion
Thank You God , for the wide-stretched ocean.
Thank You God , for the stars and the moon
Thank You God , for our life, your greatest boon.

But God are you pleased with the way we live?
Which You are always ready to forgive.
Do You like the tall, tall sky scrapers.
And the earth with dusty drapers?
Do You like sky soaring smoke
That keeps rising beyond the oaks?
Do you like the wretched deforestation
That is treacherous do the dwellers of a nation?
Do you like the dreadful missile.
That fades away from human faces the smil?
Do you ‘like the hydrogen bomb.
Which soar up to say that lives are gone?
Oh dear! No….don’t say….
I can’t bear to hear you say: “ no
For I can only say   Sorry…Sorry…SORRY…...

                                                - Dr. B.Balasudha

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

இளங்கோ அடிகள்

    
(தி.ஆ. 2044 மடங்கல் (ஆவணி) 2, (18-8-2013) அன்று விழுப்புரம் தமிழ்ச் சங்க விழாப் பாட்டரங்கத்தில் இளங்கோ அடிகள் என்ற தலைப்பில் பாடிய கலிவெண்பா)

    இளங்கோ அடிகள்!

            - தமிழநம்பி -


பாட்டரங்கின் நற்றலைவ! பைந்தமிழ் முன்மரபில்
தீட்டும் விரைவியப் பாவல! என்றென்றும்
நெஞ்சில் நிறைந்தார் நிலைப்புகழை  இவ்வரங்கில்
எஞ்சலின்றிக் கூற எழுந்துள்ள பாவலர்காள்!

ஓரேர் உழவர், உழன்று விழாவெடுக்கும்
தீராத் தமிழ்ப்பசியர் தேர்ந்த மருத்துவர்
பாவலர் நல்லெளிமை பாலதண் டாயுதரே!
ஆவலுடன் வந்தே அமைந்திருந்து கேட்கின்ற
அன்புசால் தாய்க்குலமே! ஆன்ற பெரியோரே!
இன்தமிழ்ப் பற்றார்ந்த எந்தமிழ நல்லிளைஞீர்!
எல்லார்க்கும் நெஞ்சார்ந்த என்வணக்கம் கூறுகிறேன்!

நல்ல தலைப்பொன்றை நான்பாடத் தந்தார்!
நெஞ்சில் நிறைந்த இளங்கோ அடிகள்!ஆம்!
எஞ்சலின்றி எல்லாத் தமிழருளம் ஈர்க்கும்
புரட்சி நெருப்பினில் பூத்த துறவி!
மிரட்சி கொளச்செய்யும் மேன்மைமிகு பேரறிஞர்!

சேரப் பெருமன்னன் சேரலா தன்தனக்கும்
வீரமணக் கிள்ளிமகள் வீரிநற்சோ ணைக்கும்
இளங்கோ பிறந்தார் இரண்டாம் மகனாய்!
இலங்குசெங் குட்டுவன்தான் இவ்விணையர் மூத்தமகன்!

சேர னமர்ந்திருந்தான் சேர்ந்தேதன் மைந்தருடன்
ஆரழகு மண்டபத்தே; ஆங்கோர் நிமித்திகன் 
வந்துதன் வாயவிழ்த்தான் வல்லவன் போலெண்ணி!
இந்தஇரு மைந்தர் இருக்கும் உருவில்
விளங்கும் இலக்கணம் விள்ளுவதைச் சொல்வேன்!             
இளங்கோ அரசாள்வார் எல்லாரும் போற்றிடவே!
என்றுறுதி யாக இறுத்தசொல் பொய்யாக்க
அன்றப் பொழுதே அரசுடையைத் தான்நீக்கி
என்றும் அரியணை ஏறேன்!செங் குட்டுவனே
நன்றர சாண்டிடுவார் என்றுரைத்துத் தேர்ந்த
துறவுடையைத் தானுடுத்தித் தூய்துறவி ஆனார்!
நிமித்திகத்தை வீழ்த்தியதை நேர்வென்றார் அன்றே!
தமியனாய் ஓர்புரட்சி தான்செய்தார் அந்நாள்!

அருந்தமிழ் நூலெழுதும் ஆற்றலர்தம் நூலில்
இருந்துதமைத் தாழ்த்தி எளியேன், கடையேன்,
அறியேன், சிறியேன் அனைய அவையடக்கம்
அறிவிப்பார்! ஆனால் அடிகளோ செம்மாப்புக்             
காட்டும் பெருமிதத்தில் கண்விரிய ஆர்ப்பரிப்பார்!
நாட்டுதும் யாமொரு பாட்டுடைச் செய்யுள்!
தகைமை விளக்கும் வகையில் முழக்கம்!
இதுவோர் புதுமைதாம்! இன்னுமொன் றாகப்
பொதுப்போக் குடைத்துப் புதுவழி காட்டினார்!

பாவலர்கள் எல்லாரும் பைந்தமிழில் ஆக்கியநூல் 
ஏவல்போல் மன்னர் கடவுளையே போற்றும்!   
வணிகக் குடியொன்றில் வந்தவோர் பெண்ணைத்
துணிவாய்த் தலைவியெனத் தூக்கி நிறுத்தியந்தக்
கற்புக் கடம்பூண்ட கண்ணகி என்பவள்
உற்றவை கூறும் ஒருவர லாற்றைச்
சிறிதே புனைவுகள் சேர எழுதிச்
செறிதமிழ்ப் பாவியமாய்ச் செப்பமாய்ச் செய்தளித்தார்!

கண்ணகியாள் வாழ்வைச் சிலப்பதி காரத்தில்
தெண்ணீர்த் தெளிவில் திகழ்அணிகள் சேர
பொருள்செறி செய்தி பொதுளப் படைத்தார்
அருமை பெருமை அனைத்தும் விளக்கி!

அடிகள் தமையும் அவராக்கித் தந்த
முடிவில் சிறப்பமைந்த முத்தமிழ்ச் செய்யுள்
சிலப்பதி காரத்தின் செம்மாப் பினையும்
உலகிற்குப் பாரதி ஓங்க உரைத்தார்!

பாரதி சொல்வார், புலவரிலே கம்பனைப்போல்
ஆரறி வுக்குறள் வள்ளுவ  ரைப்போல்
வளப்பாப் புலவர் இளங்கோ தமைப்போல்
விளங்குல கெங்கும் பிறந்திலை என்றுமீ
துண்மையாம்! வெற்றுப் புகழ்ச்சி யிலையென்பார்!
இன்னுமவர், நெஞ்சத்தை அள்ளும் சிலப்பதி
காரமென் றோர்மணி ஆரம் படைத்ததிப்
பாரகத் தேதமிழ் நாடென்று பாடினார்!

இத்தனைப் போற்றலில் முத்திரை பெற்றநூல்
முத்தமிழ் வேந்தரின் மொத்த உயர்வெலாம்
நன்னடுவு மாறாத நா,மனத் தூய்மையில்
இன்னருஞ் செய்தியாய் எல்லார்க்கும் சொல்லிடும்!
எல்லா மதத்தையும் ஒப்ப மதித்திடும்!
அல்லவை நீக்கி அருள அடிதொழும்
அவ்வக் கடவுள் அடியாரைப் போலவே
செவ்வேள் அருகன் சிவன்மா லுடனினும்
கொற்றவை யன்னமற் றெல்லாரும் போற்றிடும்!      
                 
காவிரி வைகை கவின்பேரி யாற்றுடன்
தாவற மூன்று தலைநகர் பூம்புகார்
வஞ்சி மதுரை யுடனுறை யூரையும்
எஞ்சலில் லாதொப்ப ஏற்றியே போற்றிடும்! 

பட்டினப் பாக்கம் மருவூர்ப்பாக் கம்மென
முட்டிலாச் சீர்சேர் இரட்டை நகரெனும்
பூம்புகார் பற்றிப் புகன்றவை யந்நகர்
பத்தொன்ப தாம்நூற்றாண் டில்ஆங் கிலரின்
இலண்டன் நகரம் இருந்ததின் மேலாய்
இரண்டாம்நூற் றாண்டில் இருந்ததாம் பூம்புகார்!
இக்கால ஆய்வர் இயம்ப வியக்கிறோம்!
அக்கால் தமிழர் அருமுயர்(வு) எண்ணி!

வணிகவளம் கட்டடங்கள் வாடாத் தொழில்கள்
அணிசெய் நகரமைப்பு ஐவகை மன்றம்
அறம்காத்தல்! அல்லும் பகலுமங் காடி!
பிறநாட்டார் உண்டுறையும் பேரிடம்! நுண்கலைகள்
பட்டுடைகள் ஆடைவகை பிட்டுதொட் டுண்டிகள்
தட்டிசெய் நன்னகை தக்க எலிமயிரில்
தந்திடும் ஆடை தகுபருத்தி நெய்தவையும் 
சந்தனம் போலுமணம் தட்டின்றி வீசுநவும்
யாழ்குழலும் இன்னிசைக்கும் எல்லாக் கருவிகளும்      
வாழ்க்கைப் பொருள்பலவும் பாங்காக்க் கூறுகிறார்!

முப்பதுகல் என்பர் முழுதாய்ப் புகார்ப்பரப்பு!
அப்போ தறுபதாயி ரம்குடிகள் அங்கென்பர்!
ஆமாமாம்! மூன்றிலக்கம் அப்போது வாழ்ந்திருந்தார்!
தாமேவந் தங்கயலார் தங்கி இருந்தார்!  

சிலம்பில் அடிகளார் செந்நா கரிகப்
புலப்பா டெனவே புறச்சிறப்பைக் காட்டி
அகச்சிறப்பாய்க் காட்டுவார் அன்பு,பண் பாட்டை!
மிகச்சிறப் பைச்சிலம்பு மேவயிதும் ஏதாம்!

உரைப்பா வரிஇசைப்பா வோடு பலவாம்
குரவையுங் கூத்தொடு கூறுபிற செய்தி
சிலம்பினை முத்தமிழ்ப் பாவியம் ஆக
இலங்க அடிகள் இயற்றிய நுட்பம்
துலக்கமாய் ஆய்வர் விளக்கி உரைப்பர்!
இலக்கிய ஆய்வர் இதுவரை ஆய்ந்த
இலக்கியந் தம்முள் சிலப்பதி காரம்
இலக்கில் மிகப்பலர் இனிதாய்ந்த நூலாகும்!

பண்பொழுக் கம்,பிறர்க்கு நற்பய னாதலறம் 
நன்னயன்மைக் காப்பதற்குப் போராடல் நாளும்
பொறுமையெனும் நற்குணங்கள் பொன்போற் பொலியும்               
அருந்திறல் பெண்ணாய் அமைந்துளார் கண்ணகி!
அத்தகைய பெண்ணாளை ஆழிசூழ் இவ்வுலகம்
எத்திசையும் போற்றிட ஏற்றிடும் தெய்வமாய்!
என்பார் அடிகள் இப்படைப்பால்! ஓரிடத்தில்-

கணவன் பிரிவினால் கண்ணகியாள் வாட
துணைதோழி தேவந்தி சொல்லுவாள் செய்தியிதை
காவிரி யாறு கடலில் கடைசி
கலக்குமிடம் சோமகுண் டத்துடன் சூரிய
குண்டத் தினிலும் குளித்தெழுந்து காமவேள்
தண்கோயில் சென்று தலைவணங்கிக் கும்பிட்டால்
இன்புறலாம் கேள்வனுடன் என்றாட்குக் கண்ணகி
பின்னு விடையாய், பெருமைதரா தச்செயல்     
என்றவட்குப் பீடன்(று) எனவுரைத்த மாண்புரை
இன்னுமோர் சான்றாம் இளங்கோ புரட்சிக்கு!

ஐவகையாய் இந்நிலம் ஆம்பிரிவும் அவ்வவற்றின்
தெய்வம் முதலாம் திணைப்பொருள் எல்லாம்
அடிகள் பனுவலில் ஆங்காங் குரைப்பார்
படித்தார் அறிந்திருப்பர் பாலை நிலத்திற்கு
இவரொரு வர்தான் இலக்கணம் தந்தார்!
தவலற அடிகளார் தந்த வரையறை
முல்லை குறிஞ்சி முறையில் திரிவுற்று
நல்லியல் பற்றிடப் பாலையென் றாகும்

நிகர்நிற்கா மன்னர்கள் நேர்மையின் நீங்கி
இகழ்ந்துரை செய்தனர் என்பதால் அன்னார்
தலைநெரியக் கல்கொணர்ந்து  தந்துகண்ண கிக்குச்
சிலைசமைத்த செய்தி சிறப்பாய்ப் பதிந்துள்ளார்!   

நன்மரபு காத்திடவும் நன்குநிலை நாட்டிடவும்
என்றுமே பண்பாட்டால் இன்மொழியால் ஒன்றிணைந்து
ஒற்றுமைபோற் றித்தமிழர் ஓங்கியிங்கு வாழந்திடவும்
அற்றைக்கிப் பாவியத்தில் மூவேந்தர் முந்நாட்டை
ஒன்றாகப் போற்றி உயர்வெல்லாம் பாடிவைத்தார்!

என்றும் நினைவினில் நின்று நிலைத்திடும்
பொன்றாச் சிறப்புப் புகழ்பெற்ற சொற்றொடர்கள்
நம்சிலம்பில் உண்டுபல நற்சான்றாய் ஈங்குசில :
 “பதியெழுவறியாப் பழங்குடி
 “நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்
விடுதல் அறியா விருப்பினன்
நடந்தாய் வாழி காவேரி
இலம்பாடு நாணுத்தரும் எனக்கு
சிலம்புள கொண்ம்
பிறவா யாக்கைப் பெரியோன்
கவவுக்கை நெகிழாமல்
நாளங்காடி
அல்லங்காடி
பீடன்று
அஞ்செஞ்சீறடி
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்
ஆறைங் காதம் அகநாட்டு உம்பர்
வம்பப் பரத்தை வறுமொழி யாளன்
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
தேரா மன்னா செப்புவ துடையேன்
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
யானோ அரசன் யானே கள்வன்

புரட்சித் துறவியார் போற்றற் குரிய.
இளங்கோ அடிகள் இயற்றிய பாவியம்
ஒப்பில் சிறப்பின் சிலப்பதி காரம்
எப்போதும் நெஞ்சத்தை ஈர்ப்பதால் உண்மையில்
செஞ்சொல் இளங்கோ அடிகள் இருக்கிறார்
நெஞ்சில் நிறைந்தே நிலைத்து!
  
-----------------------------------------