செவ்வாய், 13 செப்டம்பர், 2011

தங்கப்பா ஐயாவின், “சோளக்கொல்லைப் பொம்மை”க்கு இந்திய அரசு இலக்கியக் கழகத்தின் (சாகித்திய அகாதமி) பரிசு!




          ‘சாகித்திய அகாதமி என்னும் இலக்கியக் கழகம் இந்திய அரசினல் 1954ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
          இந்தியாவின் 24 மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து பரிசளித்தும், பிறமொழிகளில் மொழிபெயர்த்தும் ஊக்கப்படுத்தி வருகின்றது.
          படைப்பாளிகளுக்கு மதிப்பளித்து அவர்களை உலகிற்கு அறிமுகம் செய்யும் ஊடகமாகவும் உள்ளது          இந்த அமைப்பு, பரிசுக்குரிய நூலைத் தேர்ந்தெடுக்கும் முறை ஓராண்டுக்கால நீட்சியுடையதாகக் கூறுகின்றனர்.
          முதலில், இக்கழகத்தின் தலைவரால் அமர்தப்பட்ட ஓரிரண்டு வல்லுநர் நூல்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்நூல்கள் தகுதிசான்ற அறிஞர் பதின்மருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அப் பதின்பரும் ஆளுக்கு இரண்டிரண்டு நூல்களைத் தேர்வுசெய்து பரிசுக்குப் பரிந்துரைக்கிறார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட நூற்களின் பட்டியல் மூன்று நடுவர்களின் தேர்ந்தெடுப்பிற்கு அனுப்பப்படுகின்றன. அவர்களில் பெரும்பான்மையர் தேர்ந்தெடுக்கும் நூலே இவ் இலக்கியக் கழத்தின் செயற்குழுவால் ஏற்பிசைவு பெற்று அறிவிக்கப்படுகின்றது.
          இப்படிப்பட்ட நடைமுறைகள் உள்ளதெனக் கூறப்பட்டாலும், இப்பரிசுக்குத் தேர்வு செய்யப்
படுவோருள் சிலரின் தகுதிகுறித்து படைப்பாளிகள் தம் நிறைவின்மையை வெளிப்படுத்துவதும் உண்டு.
          இந்த இலக்கிய அமைப்பு சென்ற 2010ஆம் ஆண்டு முதல் சிறுவர் இலக்கிய மதிப்பளிப்பு (பால சாகித்திய புரசுகார்) என்ற பெயரில் இந்தியாவின் இருபத்து நான்கு    மொழிகளிலும் எழுதப்பெறும் சிறந்த குழந்தை இலக்கியத்திற்குப் பரிசளிக்கின்றது. வாழ்நாள் குழந்தை இலக்கியப் பணிக்காவும் சிலருக்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
    இந்த 2011ஆம் ஆண்டு தமிழ்மொழிக்கான குழந்தை இலக்கியப் பரிசுக்குரிய நூலாக, இவ்வமைப்பு, நம் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழ்வல்லார் பாவலர் ம. இலெனின் தங்கப்பா ஐயா எழுதிய
 சோளக்கொல்லைப் பொம்மையைத் தேர்ந்தெடுத்து அறிவித்துப் பெருமை பெற்றுள்ளது.
    இப்பரிசு, ஐம்பதாயிரம் உருபாவுக்கான காசோலையும், ஒரு செதுக்கப்பட்ட செப்புப் பட்டயமும் கொண்டதாகும். எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் இப்பரிசு வழங்கப்படும்.
    இப்பரிசளிப்பு குறித்து தங்கப்பா ஐயா கூறுகையில், 
உண்மையான தகுதி மதிக்கப்பட வேண்டும் என்றும் குழந்தைகளோடு பழகி,  இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததன் வெளிப்பாடாக, "சோளக்கொல்லை பொம்மை  நூலை எழுதியதாகவும் தகுதியான நூலுக்குப் பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
     நம் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவிப்பதோடு தங்கப்பா ஐயாவின் தகுதிக்குரிய பரிசுகள் இன்னும் அளிக்கப்பட வேண்டும் என்ற விழைவையும் குறிப்பிட விரும்புகிறோம். 
     (அடுத்த பதிவு தங்கப்பா ஐயாவைப் பற்றிய செய்தித் தொகுப்பாக இருக்கும்.)
-----------------------------------------------------  

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

எல்லைக் காவலர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார்!


எல்லைக் காவலர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார்!
                             
செந்தமிழ்நாட் டெல்லைபறி போகாமல் காத்தயிவர்
சிறைக்குச் சென்று
நந்தமிழின் சிலம்பாய்ந்தார்; நாவன்மை எழுத்தாற்றல்
நனிவாய்ந் தாரே!
இந்தியநா டுந்தமிழும் எனக்கிரண்டு கண்களென
இயம்பி வந்தார்!
பந்தமுறும் பெருமீசை பார்த்திருப்பீர் ம.பொ.சி.
படத்தில், தாளில்!

கடற்கரைசீர் வாய்ந்தநகர் கவின்சென்னை எளியகுடி
களிக்கத்தோன்றி
கடமையென மூவாண்டுக் கல்வியுடன் நெசவுசெயக்
கடுகிச் சென்றார்!
அடக்கமுறா வறுமையெதிர்த் தச்சகத்தில் கோப்பாளர்
ஆனார் பின்னர்த்
திடஞ்சான்ற மனத்தோடே தேசவிடு தலைக்குழைக்கத்
தேர்ந்து சென்றார்!

தேர்ந்தகட்சிப் பேராயம் சேர்ந்துப்புப் போர்மற்றும்
திமிர்கொள் ஆட்சிச்
சார்பறுக்கும் சட்டமறுப் பியக்கத்தும் பங்கேற்றார்;
சற்றும் சோரா(து)
ஆர்வமுற சிறைப்பட்டார்ஆறுமுறை; எழுநூற்றுக்
கதிக நாட்கள்!
சீர்மையுற சிறையடைப்பில் சிலம்புபடித் தாய்வுசெய்தார்!
சிறப்ப றிந்தார்!

தமிழ்தமிழர் உணர்விலவர் தமிழரசுக் கழகத்தைத்
தனியே தோற்றி
இமிழிந்தி யாமொழியால் இன்னின்ன மாநிலமென்
றியற்றுங் காலைத்
தமிழர்க்குக் குடியரசு தனியமைக்க வேண்டுமென்றார்
தனிய ராக!
துமித்துபெறக் கருதவிலை! தொடர்ந்திந்தி யாவிலொரு
தொகுதி என்றே!

செப்பமுற மாற்றுகபேர்! சிறப்புறவே தமிழ்நாடாய்ச்
செய்வீர் இன்னே!
ஒப்புறவே கல்விமொழி ஒண்டமிழே எனவாக்கி
உயர்வைச் செய்வீர்!
தப்பறவே ஆட்சிமொழி தமிழென்றே ஆக்கிடுவீர்!
தகைமை காப்பீர்!
இப்படியாய்க் குரல்கொடுத்தே இவற்றைவலி யுறுத்திவந்தார்
எழுதி பேசி!  

இவர்பணியில் முன்னிற்கும் எல்லைகளைக் காத்தபணி
இணையி லாதாய்!
இவறலுற ஆந்திரத்தர் எழிற்சென்னை நகர்கேட்டு
ஏழ்ந்த போது
சுவரெனவே நின்றுசிலர் துணையோடே இவர்காத்தார்!
சொல்வ துண்மை!
திவளலறி யாதியங்கித் திருவேங்க டம்மீட்கச்
சிறையுஞ் சென்றார்!

பெரும்பிழையாய்த் திராவிடத்தைப் பேசிடுவோர் சறுக்கிவிட
பெரிய மீசை
திருத்தணியை மீட்டெடுத்தார்! சித்தூர்புத் தூர்பகுதி
சிலவும் மீட்டார்!
திருப்பதியாம் வேங்கடமும் செந்தமிழ்சேர் பகுதிகளும்
சென்ற போதும்
ஒருதனியர் பெருமுயல்வில் ஓரளவு வடவெல்லை
ஓம்பக் கண்டோம்!

பொற்புறுசீர் குமரியொடு தேவிகுளம் பீர்மேடு
பொலிசெங் கோட்டை
தெற்கெல்லை காத்திடும்போர் திடத்தலைவர் நேசமணி
திறத்தில் மூண்டு
பெற்றியிலார் சிறையிலிட இவரறிந்து விரைந்தங்கே
பீடிற் சென்றே
சற்றும்போ ராட்டத்தைச் சரியாதே மேல்நடத்தச்
சார்பு தந்தார்!

நூற்றுக்கும் மேற்பட்ட நூலெழுதித் தந்துள்ளார்
நுட்ப மாக!
ஏற்றமுற வரலாற்றை எடுத்தியம்பி பலவிளக்கம்
எடுப்பாய்ச் சொல்வார்!                                         சாற்றியபல் கூற்றிருக்கத் திராவிடத்தார் சார்ந்ததிவர்
சறுக்கல், உண்மை!
ஆற்றியநற் பணிகளையும் அரியசெயல் செய்ததையும்
அகத்தில் கொள்வோம்!  

(14-8-2011 ஞாயிறு அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற விழுப்புரம் தமிழ்ச்சங்க ஒன்பதாம் ஆண்டுவிழாப் பாட்டரங்கத்தில் பாடிய அறுசீர் மண்டிலப் பாக்கள்)
 
--------------------------------------------------------------------------  

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஒன்று... இரண்டு... மூன்று...!

ஒன்று இரண்டு... மூன்று...!

ஒன்றும் ஒன்றும் இரண்டு!
உலகம் சுழலும் உருண்டு!

இரண்டும் ஒன்றும் மூன்று!
இனிமைக் குத்தேன் சான்று!

மூன்றும் ஒன்றும் நான்கு!
மூத்தோர் அன்பைத் தாங்கு!

நான்கும் ஒன்றும் ஐந்து!
நாயின் நன்றி ஏந்து!

ஐந்தும் ஒன்றும் ஆறு!
ஆழ உழுவார் ஏரு!

ஆறும் ஒன்றும் ஏழு!
அன்பால் அமுதாம் கூழு!

ஏழும் ஒன்றும் எட்டு!
எழிலைக் கூட்டும் பொட்டு!

எட்டும் ஒன்றும் ஒன்பது!
என்றும் கோவம் தீயது!

ஒன்பதும் ஒன்றும் பத்து!
ஒளிரும் அழகு முத்து!


(23-7-2011ஆம் நாள் தினமணி சிறுவர் மணியில் வந்தது)

புதன், 8 ஜூன், 2011

ஆட்சிக்கட்டில் அமர்ந்தார்க்கு!

ஆட்சிக்கட்டில் அமர்ந்தார்க்கு...!

இரண்டகஞ் செய்தே இனக்கொலைக் குத்துணை             போனவரை
முரண்படப் பேசி மொழிநலந் தீய்த்தவம் மொய்ம்பிலரை
உரங்கெட வீழ்த்தின ராட்சி பறித்தார்  
உணர்ந்திடுக!                
நிரந்தினி தாள்க! நெடுந்தன் முனைப்பை        நிறுத்துகவே!

திங்கள், 16 மே, 2011

பாவாணரின் மடல்கள்

   பாவாணரின் மடல்கள்

       அருமையான இலக்கியமாகவும், அரிய ஆய்வுத் திரட்டாகவும், திறமிக்க சொல்லாக்கம் மொழியாக்கங்களின் விளக்கமாகவும், தமிழ்த் தொண்டின் நிலை கூறும் ஆவணமாகவும், அறிவாற்றல் சான்ற வீற்றின் வெளிப்பாடாகவும் பாவாணர் மடல்கள் இருக்கின்றன.
தமிழ்மொழி, தமிழின, தமிழ்நாட்டு நலன்களின் மீட்பில்  நாட்டமுள்ள தமிழிளையோர் தவறாது அறியவேண்டிய பல செய்திகளையும் அவர் மடல்கள் தருகின்றன.
---------------------------------------------------------------------------------
உதவிய நூல்கள்:
1. பாவாணர் கடிதங்கள்                    : புலவர் இரா. இளங்குமரன்
  (கழகம், 1985)
2. பாவாணர் பாடல்களும் மடல்களும்      : இரா. இளங்குமரன்
  (விகனேஷ் வெளியீடு, 2006)
3. தேவநேயப் பாவாணர்                   : இரா. இளங்குமரன்  
  (சாகித்திய அக்காதமி, 2002)
4. பாவாணர் வரலாறு                     : இரா. இளங்குமரன்
  (கழகம், 2000)
5. தென்மொழி (சுவடி: 7, ஓலை: 6-7)  :ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.        
நன்றி!
_______________________________________________________________________________________

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அம்மாஅஅ.....!










அம்மாஅஅ.....!


உலகுமுன் காணா வொருதனிப் பெருமற
இலகுயர் மாந்த ஏந்தலாந் தலைவ
னீன்றுபுறந் தந்த எந்தமி ழன்னாய்!

ஆன்றவிஞ் ஞால அருந்தமி ழுளத்த
ரனைவர்க்கு மன்னை யானநற் றாயே!

நினையா யிழப்பெலா நெடுகத் தொடர்ந்திடுங்
கொழுமழு நெஞ்சகங் குத்திக் கிழிக்கும்
அழுவே மல்லே மரற்றலு மாற்றேம்!

நெஞ்சு நிமிர்த்தி நெடுங்கை யுயர்த்தி
வஞ்சகங் கொடும்பகை யஞ்சி வெருவுற
வணக்கம் முழக்குவம் வாழ்த்துவை யம்ம!

வணக்கம் வீர வணக்கமெந் தாய்க்கே!

சனி, 12 பிப்ரவரி, 2011

தமிழ் ஒருங்குகுறி : கரவுவினைகளும் காப்பு முயற்சிகளும்.

தமிழ் ஒருங்குகுறி: கரவு வினைகளும் காப்பு முயற்சிகளும்!

 உலகளாவிய அளவில் கணிப்பொறியில் எல்லாரும் எல்லா எழுத்து முறைகளையும் எழுதவும் படிக்கவும் இயலும்வகை ஏற்படுத்தப்பட்ட எழுத்துத் தகைமைக் குறியீடே ஒருங்குகுறி (அல்லது ஒருங்குறி) ஆகும். தமிழ்நாட்டரசு கடந்த ஆண்டு நடத்திய தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் ஒருங்குகுறியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது பலருக்கும் தெரிந்திருக்கும்.
     
ஒருங்குகுறி குழுமக்கூட்டிணைப்பு (Unicode consortium) என்னும் அமைப்பே உலகிலுள்ள மொழிகளின் எழுத்துக்களுக்கு ஒருங்குகுறி உருவாக்கிப் பேணுகின்றது. வணிக நோக்குள்ள கணிப்பொறி நிறுவனங்கள் இணைந்து உலக எழுத்துமுறைகளைத் தகைமைப்படுத்த ஏற்படுத்தியதே இவ்வமைப்பாகும். இதில் பல்வேறுநாட்டு அரசுகளும், கணிப்பொறி, மொழி தகுதியுடைய தனியரும் அமைப்பாரும் உறுப்பினராக உள்ளனர். இவ் அமைப்பில் உறுப்பினராக இருந்த தமிழ்நாட்டரசு இடையில் கட்டணம் செலுத்தத் தவறியதால் உறுப்பாண்மையை இழந்துள்ளதாகவும், இப்போது கட்டணம் செலுத்தி உறுப்பினராக முயல்வதாகவும் கேள்விப்படுகிறோம்.
    
கிரந்தத்திற்கு ஒருங்குகுறி உருவாக்க வேண்டுமென ஒருங்குகுறிக் குழுமக்கூட்டமைப்பிற்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுகளில், மூன்று முன்மொழிவுகள் தமிழ்மொழிக்குப் பெருங்கேடு விளைவிப்பனவாகும். தமிழைச் சிதைத்து அழிக்கக்கூடியனவாகும்.
அவற்றுள் முதலாவது, காஞ்சி சங்கரமட சிரீரமணசர்மா, 26 கிரந்தக் குறிகளை ஒருங்குகுறித் தகைமைபாட்டுக்குள் கொண்டுவந்து அதனைத் தமிழ் நீட்சி அல்லது நீட்டித்த தமிழ் என்று வழங்கவேண்டுமென 10.07.2010 நாளிட்டு அனுப்பிய முன்மொழிவாகும்.
இம் முன்மொழிவும் தமிழுக்குக் கெடுதி செய்யும் பிறவும் கனடா நாட்டுப் பேராசிரியர் செல்வகுமார் மற்றும் சிலரின் முயற்சியால் பலருக்குத் தெரிய, 2010 அக்குதோபர் பிற்பகுதியில் உலகோர் அனைவர்க்கும் தெரிந்தது.
ஒருங்குகுறி அறிஞர் திரு. முத்து. நெடுமாறன் அளித்த உடனடி விளக்க மறுப்பினை ஏற்று ஒருங்குறிக் குழுமக்கூட்டிணைப்பு சிரீரமண சர்மாவின் மேற்கூறிய முன்மொழிவைப் புறக்கணித்துவிட்டது.

தமிழுக்குக் கேடு விளைவிக்கும் இரண்டாவது முன்மொழிவு, நா.கணேசன் என்பார் (அமெரிக்காவில் நாசா வில் வேலை செய்வதால் இவரை நாசா கணேசன் என்றுங் கூறுகின்றனர்), 68 கிரந்தக் குறியீடுகளோடு தமிழ் எழுத்துக்கள் எ, ஒ, ழ, ற, ன என்னும் ஐந்துடன் எகர உயிர்மெய்க் குறி, ஒகர உயிர்மெய்க் குறி ஆகிய இரண்டையும் சேர்த்து 7 தமிழ்க் குறிகளை 

கிரந்தத் தொகுப்பில் கலந்து 75 குறிகளைக் கொண்ட கிரந்தத்தமிழ்க் கலவைக் குறியிடுகளை உருவாக்க வேண்டும் என்று கூறியதாகும்.
நா.கணேசனுக்கும் சிரீரமணசர்மாவுக்கும் இடையே ஏற்பட்ட தருக்கத்தால் குழம்பிப்போன ஒருங்குகுறிக் குழுமக்கூட்டிணைப்பு, இம் முன்மொழிவை எடுத்துக்கொள்ளவில்லை.
     
இந்நிலையில், அக் குழுமக்கூட்டிணைப்பு இந்திய நடுவணரசின்  உதவியை நாடியது. தமிழைத் தாரைவார்த்துக் கிரந்தத்தை நிலை நிறுத்தும் நா.கணேசன் முன்மொழிவில் சிறசிறு மாற்றங்கள் செய்து, மணிப்பவள மொழிக்காகவும், சமற்கிருத மொழிக்காகவும் தமிழ் கலந்த கிரந்தக் குறியீட்டை ஏற்படுத்துமாறு ஒருங்குகுறி குழுமக்கூட்டிணைப்பிற்கு இழதிய அரசு தனது முன்மொழிவைத் தந்தது. இம் முன்மொழிவு, மேற்கூறிய 75 குறிகளுடன் வேறு சில குறிகளையும் இணைத்து 89 குறிகள் கொண்டிருந்தது. இதுவே, தமிழுக்குக் கேடு விளைவிக்கும் மூன்றாவது முன்மொழிவானது.

நடுவணரசில் இத்துறைக்குப் பொறுப்பாக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் நடுவண் அமைச்சர் ஆ.இராசா இவ்வளவு நடந்தும், இவை தாய்த்தமிழின் அழிவிற்கு அடிகோலுபவை என்ற அக்கறை கொண்டிருந்ததாகவே தெரியவில்லை.

நவம்பர் 2010 தொடக்கத்தில் ஒருங்ககுகுறி குழுமக்கூட்டிணைப்பு நடுவணரசின் முன்மொழிவு குறித்து முடிவெடுக்க இருந்த நிலையில், தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலுமிருந்த செய்தியறிந்த தமிழர் கிளர்ந்தெழுந்தனர்.       
அறிஞர் இராம.கி., பேரா.இ.மறைமலை, இ.திருவள்ளுவன், விடுதலை கி.வீரமணி ஆகியோர் முயற்சியால் தமிழ்நாட்டரசு 3.11.2010-இல் அறிஞர் கருத்தறியும் கூட்டம் நடத்தியது. இக் கூட்டத்தில் ஒருமனத்தோடு எடுத்த தீர்மானத்தின்படி முதல்வர் இந்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இதன் விளைவாக இந்திய அரசு ஒருங்குகுறிக் குழுமக்கூட்டிணைப்பிற்குக் கிரந்தத்தோடு தமிழ்க் குறியிடுகளைக் கலப்பது தொடர்பாகத் தீர்மானிக்க இருந்த கூட்டத்தைத் தள்ளிவைக்குமாறு மடல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், தமிழ்க்காப்பு இயக்கங்கள் சார்பில் சென்னையில், ஒருங்குகுறியில் கிரந்தத் திணிப்பும் தமிழ்க்காப்பும் என்ற தலைப்பில் நடைபெற்ற அரிய மாநாடு, தமிழ்க்காப்புத் தீர்மானங்களை நிறைவேற்றி தொடர்புடைய அனைவர்க்கும் விடுத்தது.

தமிழ்நாட்டரசு, ஓய்வு பெற்ற நயனகர் திரு. மோகன் தலைமையில் தமிழ் ஒருங்குகுறி அமைப்பு குறித்து அனைத்துக் கருத்துக்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கக் கீழ்க்காணும் 14 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளதாக 18.1.2011-இல் அறிவித்தது.
  1. பேரா.இராசேந்திரன், துணைவேந்தர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்.
  2. முனைவர் வா.செ.குழந்தைசாமி, முன்னாள் துணைவேந்தர்
  3. பேரா. மு.ஆனந்தகிருட்டிணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர்
  4. பேரா. பொன். கோதண்டராமன் (பொற்கோ)
  5.  முனைவர் ஐராவதம் மகாதேவன் இ.ஆ.ப., (ஓய்வு)
  6. பேரா. சோ.ந.கந்தசாமி, செம்மொழித்தமிழாய்வு நடுவண் நிறுவனம்
  7. பேரா.கே.நாச்சிமுத்து, உலகத்தமிழ்ச்செம்மொழி தொல்காப்பியர் பேரவை
  8. பேரா. அ. அ. மணவாளன், செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம்
  9. முனைவர் ப. அர. நக்கீரன், இயக்குநர், தமிழ்இணையக் கல்விக்கழகம், சென்னை
  10.  முனைவர் மு. பொன்னவைக்கோ, முதன்மைக் கல்வி அதிகாரி,
 எசு.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக் கழகம், காட்டாங்குளத்தூர்
  1.  திரு. வைரமுத்து, தமிழ் அறிஞர், பாவலர்
  2.  திரு. அரவிந்தன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சிங்கப்பூர்
  3. திரு. மணி. மணிவண்ணன், முதுநிலை இயக்குநர் (கணினி)
  4. முனைவர் என். தெய்வசுந்தரம், சென்னை.

தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில், 27.12.2010 அன்று காஞ்சிபுரத்தில், தமிழ் ஒருங்குகுறியில் கிரந்த எழுத்துக்களைக் கலக்கமுனையும் சங்கர மடத்தைக் கண்டித்துப் பெருமுழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சையில் 9.1.2011-இல் தாளாண்மை உழவர் இயக்கம், தமிழ்மக்கள் புரட்சிக் கழகம் முதலியோரால் தமிழ் ஒருங்குறியில் கிரந்தத் தாக்குதலைக் கண்டித்து மாநாடு நடைபெற்றது.
புதுவையில் 30.01.2011-இல், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில், தமிழ் ஒருங்குகுறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு திரு.இரா.சுகுமாரன் முயற்சியில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் 4.2.2011-இல் பெருந்திரளானோர் கலந்து கொண்ட பெருமுழக்க ஆர்ப்பாட்டம்  சென்னைப் பொது மருத்துவமனை எதிரில் நடந்தது.
இவை தவிர, மறைமலைநகர், ஈரோடை, சேலம் போன்ற இடங்களிலும் தமிழ் ஒருங்ககுகுறியில்  கிரந்தத்தால்  விளையவிருக்கும் கேட்டை எதிர்த்துப் பொதுக்கூட்டங்களும் முழக்க ஆர்ப்பாட்டங்களும் பரவலாக நடந்துள்ளன.
கிரந்தக்கலப்பை எதிர்க்கும் தமிழ்க்காப்புப் பரப்புரை ஊர்தி, ஓசூரிலிருந்து சென்னை நோக்கி விழிப்புணர்வூட்டிச் சென்றதைச் செய்தித்தாள்கள் விளக்கின.

சென்னையிலும், தஞ்சையிலும், புதுவையிலும் நடந்த மாநாடுகளில் திருவாளர்கள் இராம.கி, பேரா.தெய்வசுந்தரம், இ.திருவள்ளுவன், தென்மொழி பூங்குன்றன் ஆகியோர் செய்திகளைச் சிறப்பாக விளக்கி, வினாக்களுக்கும் விளக்கம் தந்தனர்.
பேரா. தெய்வசுந்தரம், நடுவணரசின் முன்மொழிவு தமிழ்மொழிக்கு எதிரானது மட்டுமன்று, தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிரான வல்லாண்மை  நடவடிக்கை என்றும் இந்துமதவெறியின் வெளிப்பாடு என்றும் மாநாடுகளில் விளக்கி கூறிவருகிறார்.
ஐயா இராம.கி., ஒளிப்பட உதவியுடன், எழுத்தில் தொடங்கி, ஒருங்குகுறி குறித்தும் இற்றைச் சிக்கல் குறித்தும் தெளிவாக மாநாடுகளில் விளக்கி வருகிறார்.

தஞ்சைத் தாளாண்மை உழவர் இயக்கம் அறிஞர் கருத்துக்களைத் தொகுத்து ஒருங்குறித் தமிழ் மெய்யும் மீட்பும் என்ற தலைப்பில் அரிய நூலை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

இணையத்தில், நயனம், வளவு வலைப்பதிவுகளில் திருவாளர்கள் நாக.இளங்கோவனும் இராம.கியும் விளக்கமாக எழுதியுள்ளனர். இன்னும் தமிழ்நிலம், தமிழநம்பி, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் போன்ற வலைப்பதிவுகளிலும் விழிப்புணர்வுக் கட்டுரைகட்டுகள் எழுதப்பட்டுள்ளன. வல்லமை வலைப்பதிவில் பெரியண்ணன் சந்திரசேகரன், செல்வக்குமார், தெய்வசுந்தரம் ஆகியோரின் அரிய விளக்கங்கள் உள்ளன. 

தமிழ்நாட்டில் தென்மொழி, முதன்மொழி போன்ற இதழ்களும் புதுவைத் தெளிதமிழ், நற்றமிழ் இதழ்களும் கிரந்த ஒருங்குகுறிக் குறியீட்டு முயற்சியின் வழியே தமிழைச் சிதைத்தழிக்கும் முயற்சியைக் கண்டித்துள்ளன.
தொடர்ந்து தமிழ்நாடெங்கும் நடுவணரசின் முன்மொழிவுக்கு எதிரான இயக்க நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

தமிழநாட்டரசு அமைத்துள்ள குழு 12.2.2011 அன்று கூட இருப்பதாக அறிகிறோம். இக்குழு உறுப்பினர்களில் நா.கணேசனின் முன்மொழிவை ஏற்போர் பெரும்பான்மையராக உள்ளவாறு அமர்த்தப் பெற்றுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. தமிழ்நாட்டரசு இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து உறுப்பினர்களைத் தேர்ந்துள்ளதா? - என்ற கவலை தமிழர் நெஞ்சை வருத்தி வருகிறது.

நா.கணேசனுக்கு வேண்டியவரும் சமற்கிருதச் சார்புடையவரும் ஆகிய கொங்குப் பகுதித் தொழில்வல்லாரின் உறவினரும் அவருக்குக் கட்டுப்பட்டவர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளதாகக் கேள்விப்படுகிறோம்.

தமிழ்நாட்டரசு தமிழ்க் காப்பில் கவனம் செலுத்தவேண்டும். தமிழ் ஒருங்குகுறித் தொகுப்பில் கிரந்தம் கலக்கக்கூடாது. அவ்வாறே, கிரந்தக் கொத்தில் தமிழ் எழுத்துக் குறியீடுகள் இடம்பெறக் கூடாது. கிரந்த ஒருங்ககுகுறி தனியே இடம்பெற்றால், அதற்கு முதன்மைப் பன்மொழித் தளத்தில் (BMP) இடமளிக்கவே கூடாது. இதற்கு மாறாகக் கருத்துரைப்போர் எவரையும் வரலாறு மன்னிக்காது; அவர்கள் தீராப்பழி சுமக்க வேண்டியவர்களாவர் என்பதை வலியுறுத்துகின்றோம்.

இனக் காப்பில் தமிழ்நாட்டரசு இழைத்த இரண்டகத்தால் தமிழர் நெஞ்சில் ஏற்பட்டுள்ள கொதிப்பை, மொழிக்காப்பால் ஓரளவேனும் தணிக்க முனையட்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
(consortium : an association of several companies – The Compact Oxford Reference Dictionary)
___________________________________________________________________________________________     
 நன்றி உரைப்பு: 
இக்கட்டுரை எழுத உதவியாகச் சில செய்திகளுக்கு விளக்கம் அளித்தது திரு நாக. இளங்கோவனாரின் வலைப்பதிவு. அவருக்கு நம் நன்றி.
அவர் வலைப்பதிவு: http://nayanam.blogspot.com
­­­­­­­­­­­­­­­­­­­­­­­-----------------------------------------------------------------------                                        

சனி, 22 ஜனவரி, 2011

தமிழ் ஒருங்குறியில் கிரந்தக்கலப்பு

தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு
30-01-2011 ஞாயிறு
காலை 9.00 முதல் மாலை 1.00 மணிவரை
வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்)புதுச்சேரி
................................................
பங்கேற்று கிரந்தக் கலப்பு எதிர்ப்பைப் பதிவு செய்ய இருப்பவர்கள்

பேராசிரியர் திரு. ந. தெய்வ சுந்தரம் அவர்கள்
தலைவர், (ஓய்வு) தமிழ்மொழித்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்
திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்
தமிழ் எழுத்து பாதுகாப்பியக்கம்
திரு. இராம.கி அவர்கள் பொறியாளர்
பொதுக்குழு உறுப்பினர்உத்தமம் INFITT), சென்னை
.................
பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள்,
காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மையம் புதுச்சேரி
திரு கோ.சுகுமாரன்
செயலர்மக்கள் உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர்உத்தமம், (INFITT).
திரு. இரா.சுகுமாரன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர்புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
திரு ஓவியர் இரா. இராசராசன் அவர்கள்
விரிவுரையாளர், பாரதியார் பல்கலைக்கூடம்
திரு.ஏ. வெங்கடேசு அவர்கள்,
திரட்டிwww.thiratti.com
திரு க. அருணபாரதி அவர்கள்,
மென்பொருள் வல்லுநர்,
திரு ம. இளங்கோ, அவர்கள்
செய்தித் தொடர்பாளர் பெரியார் திராவிடர்கழகம் புதுச்சேரி
.....................
திருமா,பூங்குன்றன் அவர்கள்,
தென்மொழிசென்னை.
திரு.கோ.திருநாவுக்கரசு அவர்கள்
தாளாண்மை உழவர் இயக்கம்
திருஇரா.அழகிரி அவர்கள்
தமிழர் தேசிய இயக்கம் புதுச்சேரி
திரு. ந.மு தமிழ்மணி அவர்கள்
அமைப்பாளர் செந்தமிழர் இயக்கம்,புதுச்சேரிதிரு. க.தமிழமல்லன் அவர்கள்
தலைவர்தனித் தமிழ் இயக்கம் புதுச்சேரி,
திருதமிழ நம்பி அவர்கள்
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
திரு, சீனு,அரிமாப்பாண்டியன் அவர்கள்,
செயலர்தனித்தமிழ்க் கழகமபுதுச்சேரி,

திருதமிழ்நெஞ்சன்
 புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், புதுச்சேரி,
திருபராங்குசம், புதுச்சேரி,
திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்
தலைவர்நண்பர்கள் தோட்டம்புதுச்சேரி
தொடர்புக்கு:
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
20,4- வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர் 
மூலக்குளம் புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825
மின்னஞ்சல்rajasugumaran@gmail.comஇணையம் : www.pudhuvaitamilbloggers.org
வலைப்பூ : www.puduvaibloggers.blogspot.com,

வெள்ளி, 14 ஜனவரி, 2011

வீரவணக்கம்!

விழுப்புரம் வி.ப.இளங்கோவனார்க்கு
வீரவணக்கம்!


இவரியா ரென்குவீ ராயி னிவரே
தவச்சிறி தாறுந் தனிநல முன்னா
ஓங்குறு தூய்தமி ழுணர்வின ரென்றும்
நீங்கா நல்லிசை நெடுந்தொண் டாற்றிய
பெறற்கரும் பெரியார் பெருந்தொண் டரெனும்
சிறப்புறு தகைசால் செவ்வியர் பரந்த
ஆழ்கட லன்ன அமைதியர் ஆன்றநற்
காழ்சேர் கொள்கைக் கடுந்தொண் டாற்றியார்!
அழுக்குடை மழியா அடர்தா டிமுகம்
விழும இயக்க வி.ப. இளங்கோ!

மிதிவண் டிக்கடை; மேவிடு நினைப்பெலா
மெதிலுமெப் போது மெந்தமிழ் தமிழர்
உயர்வுற லன்றி யொன்றுவே றில்லை!

நயநற் கருத்தை நாடொறும் பலகையில்
சாலையோ ரத்தே சலிப்பிலா தெழுதிப்
பாலை மனத்தும் பசுமை கிளர்த்தவர்!

புதுவைவா னொலியில் புரையுறுந் தமிழ்கண்
டிதுவிது தவறென எடுத்தவர்க் குரைத்தவர்!

ஈழக் கொடும்போ ரிழிவுகண் டதிர்ந்தே
வேழமென் றேழ்ந்தவர்! வெய்தென் றேபல
அறவழிப் போரில் அழிசிறை ஏகியார்!

திறநற் றமிழில் தெளிவுறத் தொடர்ந்து
கொடுத்த படியே தொடுத்தார் பாடல்!

எடுப்புற எழுதி இளம்பா வலர்க்களி
பரிசுமுந் நூறு பாங்கினில் பெற்றவர்!

சரிதவ றுணர்த்தித் தமிழோ சைக்கிவர்
எழுதிய மடல்கள் இவருணர் வுரைக்கும்!

பழுதிலாத் தொண்டால் பைந்தமிழ் காத்தவர்!
இருங்கடல் வையத் தருங்கட னாற்றிய
ஒருமறத் தமிழர் ஓய்வுற் றாரே!

தேரலர் எதிர்த்தே தீந்தமிழ் காத்த
வீரருக் கெங்கள் விறலுறு
வீரவ ணக்கம்! வீரவ ணக்கமே!
---------------------------------------------------------------