திங்கள், 10 ஆகஸ்ட், 2009

நா.பார்த்தசாரதியின் "மொழியின் வழியே"


       நா.பார்த்தசாரதியின் மொழியின் வழியே


தமிழ் வாசகர்களால் புதின ஆசிரியராகப் பரவலாக அறியப்பட்டவர்  நா.பார்த்தசாரதி. தமிழ்த் தாளிகை உலகில் 1960, 70ஆம் ஆண்டுகளில் முதன்மையான புதின எழுத்தாளராகத் திகழ்ந்தவர் இவர்.  தமிழ் படித்துத் தமிழாசிரியராக வேலை செய்தவர்! கல்கி இதழின் துணையாசிரியராகப் பணி செய்தவர். தீபம் என்ற இதழைத் தொடங்கி, விடாமுயற்சியுடன் 23 ஆண்டுகள் நடத்தியவர். தினமணிக் கதிர் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.

நா.பா., ஏறத்தாழ பதினைந்து புதினங்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள், குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம், சமுதாய வீதியிலே போன்றவை பலராலும் விரும்பிப் படிக்கப்பட்ட புதினங்கள் எனலாம். புதினங்கள் மட்டுமின்றிக் கட்டுரை நாடகம் பாடல்களும் கூட இவர் எழுதியிருந்தாலும், புதின ஆசிரியராகவே பரவலாக அறியப்பட்டுப் பெயர் பெற்றார். 

மொழியின் வழியே
மொழியின் வழியே என்ற தலைப்பைக் கொண்ட இவருடைய கட்டுரை நூல், 1961இல் முதற் பதிப்பாகவும் 2002இல் இரண்டாம் பதிப்பாகவம் வந்தது. 144 பக்கங்களைக் கொண்ட இந்நூல், நம் தாய்மொழியாகிய தமிழ் தொடர்பான  பல்வேறு கூறுகளைக் கூறும் 21 தலைப்புகளில் எழுதப்பெற்ற கட்டுரைகளைக் கொண்டதாகும். கட்டுரை நூலாகையால் இது பரவலாக அறியப்படவில்லை. இந்நூலில் காணப்படும் சில கருத்துக்கள், புதின ஆசிரியராக இவரைப் படித்தவர்களுக்கு வியப்பளிக்கக் கூடியவையாக இருக்கக் கூடும்!
இந்நூலில் பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. தலைப்பையும் அத் தலைப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை ஒரு சோற்றுப் பதனாக மிகச் சுருக்கமாகவும் கீழே காண்போம்.

மொழியும் பணபாடும்
      மரபும் இலக்கணமும் தூய்மைக்கும், வழக்கும் இலக்கியமும் பண்பாட்டிற்கும் காரணமாக நிற்கின்றன எனகிறார் நா.பா. காற்றையும் நீரையும் பெற்று வளர்ந்து கிளைத்து வளமடைந்த பழுமரம் ஒன்றிற் கனியும் கனியைப்போல, மரபையும் இலக்கணத்தையும் போற்றி ஒழுகும் மொழியில் பண்பாடு கனியும்.
      மொழியின் நிலைத்த வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் மக்கள் வழக்கு இன்றியமையாதது ஆவது போலவே அதன் தூய்மைக்கும் பண்பாட்டிற்கும் மரபு, இலக்கணம், பழவழக்கு, இலக்கியமும் ஆகியவை இன்றியமையாதவை ஆகின்றன.
சான்றோர் மொழி ஆட்சிகளை மூலமாகக் கொண்டே மொழியின் பண்பாடும் உருப்பெறுகின்றது.
மொழியின் முன்னேற்றம்
     பழமையும் பண்பாடும் பொருந்திய எந்த மொழியும் தனது மரபிலிருந்து விலகியபின் முன்னேற இயலாது. மரபுடன் கைகோத்து நடவாத மொழி தனது கட்டுக்குலைந்து சீரழிவது ஒருதலை.  
பண்பட்ட இலக்கிய மொழி(செம்மொழி)களுங்கூட மரபைப் போற்றியே வாழவேண்டும். காலத்திற்கு ஒவ்வாத சில வரையறைகளைக் காலத்திற் கேற்பச் சீர்திருத்திக் கொள்வது தவறன்று. அதுவும் மொழிவல்லுநர் துணையின்றிச் செய்யப்படுமானால் தவறுதான்.  
      ஒரு மொழி முன்னேற வேண்டுமானால், மொழியை ஆர்வத்தோடு பேணுகின்ற பெருமக்கள் மிகுதியாக இருக்கின்ற நாடாக அம்மொழி பயிலும் நாடு இருக்க வேண்டும். அது வளர்ச்சிக்கு முதற் காரணம்.
      மொழியை எழுதுவதிலும் பேசுவதிலும் மிகுதியான கவனம் கொள்ள வேண்டும். முழுமுதலாகிய இறைவனிடம் பக்தி செலுத்துவது போல் மொழியின் மேல் பயபக்தி ஏற்படவேண்டும். கடவுளைப்போல் முதன்மை வாய்ந்தது ஆகும் மொழி. மொழியுணர்ச்சியற்ற மக்கள் வாழ்கின்ற நாடு நாகரிகத்திலோ, அறிவு வளர்ச்சியிலோ பண்படவே முடியாது. மொழிப் பற்ற்றின்றி விழிப்பற்றுக் கிடக்கும் மக்கள் விலங்குகளினும் இழிந்தவர். தாய்மொழியை ஏற்றமுறவும் முன்னேற்றவும் மறந்துவிடுகின்ற சமுதாயம் வாழத் தகுதியற்றது.  
பிழையற எழுதுதல், பிழையறப் பேசுதல், மரபு குலையாது நூலியற்றல், தான்தோன்றிகளாகாது, ஆன்றோர் சென்ற நெறியைப் பாதுகாத்தல், புதிய முறையைப் பழைய முறைக்குக் கேடின்றி ஏற்றுக் கொள்ளுதல் முதலிய செயல்களாலல்லவா ஒரு மொழி முன்னேற முடியும்?
      எந்த ஒரு மொழியும் அரசியலோடு இசையாதவரை தனித்து முன்னேற முடியாது என்கிறார்.

மொழியும் வரலாறும்       
      போர் பூசல்களையும் அரசாட்சிக்கு இருவேறு வேந்தர் போட்டி யிடுதலையும் ஒழுக்க வரையறை கடந்த அரசியற் சூழ்ச்சிகளையுமே பெரும்பாலும் உலக வரலாறுகள் பரக்க விரித்துப் பேசுகின்றன.
தமிழகத்து வரலாற்றில் இவற்றிற்கு ஒரு சிறிதும் இடமில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், இவை மிகக் குறைவான அளவிலும், ஒழுக்கத்தையும் அறவுணர்ச்சியையும் வற்புறுத்தும் உண்மைகள் நிறைந்த அளவிலும், தமிழகத்து வரலாற்றில் விளங்கும்.
ஒழுக்கமும், அறமும், அவையிரண்டுங் கலந்த பண்பாடும் உலகின் எந்த வரலாற்றிலும் இவ்வளவு கலந்ததுங் கூட இல்லை. போரிலும் கூட, வடக்கிருந்து மானம் காக்க உயிர்விடும் அரசர்களையும், பகைவன் கை நீர் பருக நாணி உயிர் துறந்த கணைக்கால் இரும்பொறைகளையுமே நாம் காண்கிறோம்.
கால முற்பாடு பிற்பாட்டிற்குரிய அடையாளமாக, அடிமை முத்திரையான கி.மு கி.பி.யைத் தவிர்த்து தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) என்றும் தொ.மு. (தொல்காப்பியருக்கு முன்) தொ.பி. (தொல்காப்பியருக்குப் பின்) என்று எழுதினால் என்ன?

மொழியும் கற்பிக்கையும் (போதனையும்)
     தமிழுக்கு அந்த(கல்வி மொழி)த் தகுதிஇல்லை. அதை உண்டாக்குவதும் அருமை. என்று கூறுவது அறியாமையால் நேரும் பிழைபட்ட முடிவு; பொருந்தாத துணிவு; இந்த முடிவால் தமிழ் உள்ளம் குமுறாமல் இருக்க முடியாது.
      (இந்த வகையில் பாரதியாரின் தமிழ் உள்ளம் குமுறியதை அவரின் சொல்லவுங் கூடுவதில்லை அவை.... என்ற பாரதியின் பாடலை எடுத்துக் காட்டி எழுதுகிறார்)
      தமிழில் கலைகளை கற்பிக்கலாம்; கலைச் சொற்கள் உள்ளன; இன்றியமையா நிலையில் கலைச் சொற்களை உண்டாக்கிக் கொள்ளலாம்.  தமிழ் மொழியைப் போல எல்லாக் கலைகளுக்கும்  இடங்கொடுக்கும் பரந்த இயல்புடைய மொழி மற்றொன்று காண்பதரிது.

மொழியும் இசையும்
     இசைக் கலையைப் பகுதி பகுதியாகப் பிரித்து நுண்ணிதாக ஆராய்ந்து இவை குணம், இவை குற்றம், இவை இலக்கணம், இவை வழு என அக் கலைக்கு நிலையான வரையறைகள் கண்ட பெருந்திறன் பழந் தமிழர்க்கு இருந்துள்ளது.
      (இசை மரபு என்னும் பழந்தமிழ் இசைநூல் குறித்தும் உள்ளாளப் பாடல் முறை குறித்தும் விளக்குகிறார்)

மொழியும் பாட்டும் (கவியும்)
     பாட்டைச் சுவைக்கிறவர்கள் பண்பட்டு உயரவேண்டும் என்பதைப் பாடுகின்றவன் நோக்கமாகக் கொள்ளவேண்டும். உலகின் உயர்நிலை இழிநிலைக் காட்சிகளை மற்றவர்கள் காணாத ஒரு புதிய நோக்குடன் கண்டு தனக்கே உரிய சிந்தனைக் கலவையோடு அணிசெய்து படிப்போர்க்குக் கவர்ச்சி நிறைந்து தோன்றும்படி கூறும் தகுதி வாய்ந்தவன் எவனோ, அவன் பாட வேண்டும்.
      (தொல்காப்பியம் கூறும் பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல்... என்ற பாட்டிலக்கண மரபை எடுத்துக்காட்டுகிறார்)
      பொது(சாதாரண) நடையில் பொது(சாதாரண)க் கருத்தை உரைபோலச் சொல்லுகின்ற ஒருவகைப் பாட்டு மேல்புலத்தார் வழக்கில் உண்டு. இக் காலத்தில் தமிழ் வழக்கிலும் அது பரவி வருகிறது. நடைச்செய்யுள் என்பர் அதனை. உயரிய பொருட்பாடு அமையாவிட்டால் இவ்வகைச் செய்யுள்களும் பயனற்றவையே எனகிறார்.

மொழியும் செவிப்பயனும் என்ற கட்டுரையில் கேள்விச்செல்வம் குறித்து திருக்குறளை எடுத்துக்காட்டி விளக்குகிறார்.

      
மொழியும் மரபும்
                அறிபுலனுக்கும் நுகர்புலனுக்கும் அவை பிறக்கும் மனத்திற்கும் ஆகிய இம் மூன்றோடும் தொடர்புபடும் இலக்கியம், மரபை விலக்கிய முறையிலே தோற்றுவிக்கப் படுமானால் சமுதாயத்தோடு இயைபு இழப்பது உறுதி. இலக்கியங்களைச் சமூகத்தோடு இணைக்கும் பொறுப்புடையதே மரபு.
(மரபு வழுக்களையும் வழுவமைதிபற்றியும் விளக்குகிறார்.)
பாட்டு, உரை, எழுத்து, பேச்சு ஆகிய எல்லாத் துறைகளிலும் மரபை எதிர்ப்பது, மீறுவது என்பது ஒரு பொழுது போக்கு விளையாட்டாகிவிட்டது இப்போது. மரபின் சிதைவு மொழியையும் சிதைக்கத் தொடங்காது என்பதற்கு என்ன உறுதி?

மொழியும் மனத்தத்துவமும் என்ற தலைப்பில் அப்பனைப் போல் மகன் என்ற கூற்றைச் சரியென்று நிறுவ முயலும் நா.பா.வின் முயற்சி இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலையில் ஏற்றுக் கொள்ளுமாறு இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.

இரண்டு மணிமொழிகள் கட்டுரையில் இரு குறள்களின் சிறப்பை விளக்குகிறார்.

மொழியில் ஒப்புநயம் என்ற கட்டுரையில் திருக்குறளில் ஒரே உவமை, ஒன்றில் நிலையாத தொடர்பின்மையையும் மற்றொன்றில் நிலைத்த தொடர்பையும் பொதுத் தன்மைகளாகப் பொருத்திக் கூறப்பட்டிருக்கும் நயத்திற்காக வள்ளுவரைப் பாராட்டுகிறார்.

தென்னிந்திய மொழிகள், மொழியும் நாடகமும் கட்டுரைகளில் தலைப்புக் கொத்த பல செய்திகளைக் கூறுகிறார்.

மொழியும் சிறுகதைகளும்
எழுத்தாளர்களே! இன்றைய வளர்ச்சியின் வேகத்தில் உங்களுக்கிருக்கும்
பொறுப்பைத் தவற விட்டுவிடாதீர்கள்.
      தமிழ் மரபும், தமிழ்ப் பண்பும், தமிழ் மக்கள் இனமும் என்றும் எதற்காகவும் பொறுப்பின்மைக்குத் தொடர்ந்து ஆதரவளித்தது இல்லை.


மொழியும் புதின வளர்ச்சியும் கட்டுரை, தமிழ்ப்புதின வரலாற்றை வளர்ச்சியைக் கூறுகின்றது.

தாளிகை(பத்திரிகை)களும் மொழிநடையும்
     நாளிதழிலிருந்து மாத இதழ்கள் வரை பெரும்பாலானவற்றின் மொழி நடையில் காணும் பிழைகளைக் களைய வேண்டும்.
சந்திப் பிழையும், மரபுப் பிழையும், பொருட் பிழையும் மலியப் பெரும்பாலான பிறமொழிச் சொற்களைக் கலந்து ஆசிரியருரை எழுதுவதும் தவறாக மொழி பெயர்ப்பதும் அச்சுக்கோப்பில் தவறு செய்வதும் இதழின் மொழிநடையைக் கெடுக்கும்.
கொச்சை மொழி, அயற்சொல் பயன்பாட்டிற்கு வரம்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒழுங்கும், மரபும், இலக்கணமும் இல்லாத மொழிநடையில் கருத்துக்கள் தங்குமா? தங்கத்தான் முடியுமா?
இறுதியாக, மொழியைப் பாதுகாக்க முடியாவிட்டாலும் அதன் தூய்மையைக் கெடுத்துக் கறைப்படுத்தும் பணியை அல்லது பழியை நீங்கள் செய்ய வேண்டாம்.

மொழியும் உரைநடையும் 
     சொற்களின் வகையும் பொருள்நிலையும் தெரிந்து பயன்படுத்த வேண்டும். மொழியை எளிமையாகவும், தூய்மையாகவும், தெளிவாகவும் பயன்படுத்துகிறவர்களைப் போற்ற வேண்டும்.
      பல பேர்கள் சேர்ந்து ஒரு பிழையைச் செய்துவிட்டு அதையே மரபாக்கிவிடும் தன்னலத்தை இன்று எங்கும் காண்கிறோம்.
      தப்புத் தப்பாக யாப்பும் கோப்புமின்றி ஆயிரம் கவிதைகள் எழுத முயல்வதைக்  காட்டிலும் எளிமையும் தூய்மையும் தனித்தன்மையும் இலங்க நான்கு வாக்கியங்கள் நன்றாகவும் அழகாகவும் எழுதிவிடுவது எவ்வளவோ சிறந்தது. பிழையில்லாமல் தெளிவாக எழுதுவதே ஓர் அறம்
      தெளிவுக்குச் சுருக்கம் தேவை. சுருக்கத்தில் அழகு அதிகம். தெளிவும் சுருக்கமும் இருந்தால் முறையும் இருக்கும்.

மொழியும் சுவையும்
     நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எண்வகை மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் வரிசைப் படுத்தியமைக்குக் காரணங்களை விளக்குகிறார். ஏனைச்சுவைகளுக் குள்ளது போல, சமனிலைச் சுவைக்கு மெய்யின் கண் நிகழும் வேறுபாடு இன்மையின் ஆசிரியர் தொல்காப்பியர் அதனைக் கூறாராயினர் என்னும் பேராசிரியர் கருத்தை எடுத்துக் காட்டுகிறார்.

மொழியும் புதிய விளைவுகளும்
     பிறமொழி பயிற்சி காரணமாக தமிழ் மொழி மரபுக்கு ஏலாத சொல்லிய அமைப்புகளை எடுத்துக் காட்டுகிறார். இடம் போட்டு வைத்தல், பங்கெடுத்துக்கொள்ளல், முயற்சிக்கிறேன், ஒருநூறு, மோசமானவராக இருக்கிறீர்கள் போன்ற தவறான ஆட்சிகளை விளக்குகிறார்,
      இருமொழி இணைந்து பிரியாது  ஒரு தொடராய் நிற்கும் பிறமொழிச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவது நல்லதாகாது என்கிறார்.
      தமிழ் புதிய வளர்ச்சியைப் பெறுவதற்குப் பழமையின் ஆசியும் அறிவுரையும் வேண்டும். புதுமையின் உழைப்பும் வேண்டும் என்று கூறுகிறார்.

மொழியும் பொறுப்புணர்ச்சியும்          
இலக்கியத்தில் படைப்போர் படிப்பொர் ஆகிய இருபாலார்க்கும் பொறுப்புணர்ச்சி குன்றும் போது தம் நிலையினின்று தாழ்கின்றனர். பொலிவு குன்றுகின்றனர். பண்பிழக்கின்றனர்.
யார் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்தல் தவறு. உரையாடலாகப் பேசும் பேச்சிலும், சொற் பொழிவிலும் செய்யப்படும் தவறுகள் காற்றோடு போய்விடும். எழுத்தில் செய்யப்படும் பிழைகளோ செய்தவரின் பொறுப்பின்மைக்கு நிலைத்த சான்றாக என்றும் இருந்துவிடக்கூடியவை.
(எழுத்தாளர்களைப் பழைய இலக்கியங்களையும், இலக்கண வம்புகளையும், மரபுகளையும் புறக்கணிக்காதீர்கள் என்று அறிவுறுத்துகிறார். முந்தைத் தலைமுறையின் அறிவைப் போற்றவும்,மதிக்கவும் தெரியாவிட்டால் பிந்தைத் தலைமுறையின் போற்றுதலும் மதிப்பும் உங்களுக்கு எய்தாது என்று கூறுகிறார்.)

மொழியும் அறநூல்களும்
                நல்லவற்றை விரும்பவும் தீயவற்றை வெறுக்கவும் கற்றுக் கொடுத்த பண்பை நமக்கு அளித்தது எது? இந்த நாளிலும் கூட நமக்கு அறத்திலும் ஒழுக்கத்திலும் நம்பிக்கை பய்விடவில்லையே! இதற்குக் காரணம் நமது பழமையான அறநூல்களே எனபதில் ஐயமில்லை.
அறநூல்கள் விதை நெல்லைப் போன்றவை. வாழ்வை ஒழுங்குப் படுத்தும் உண்மைகளை நாம் அவற்றிலிருந்துதான் பயர் செய்து வளர்க்க வேண்டும். சமய நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள், காவியங்கள் என்ற மற்றைய துறைகள் எல்லாம் அறநூல்கள் என்ற விதை நெல்லிலிருந்து பயிர் செய்யப்பட்டவைதாம்.

முன்னுரையில் நா.பா.
     மனம் நடக்கிற வழியில் கால்கள் நடக்க வேண்டும் என்று நினைப்பது சிறந்தது. என்னுடைய மனம் நடக்கின்ற வழி எப்போதுமே தமிழ்வழி. உலகத்துச் சிந்தனைகளை எல்லாம் சிந்தித்தாலும் அவற்றைத் தமிழ்நாட்டு மனத்தோடு தமிழனாக இருந்து  தமிழின் வழியே சிந்திக்க வேண்டும் என்பது என் குறிக்கோள்.
      தமிழ்வழியில் நடக்காதவர்களுக்கு அருகே என்னுடைய கால்கள் நடக்க நேரும்போதும் கூட மனம் தமிழ் வழியிலேயே நடந்துகொண்டிருக்கும். கால்கள் எந்தெந்த வழிகளில் நடக்க நேர்ந்தாலும் மனம் ஒரே வழியில் நடக்கும்படி பழக்கிக் கொள்வதைத்தான் தவம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அந்தத் தவத்தைத் தமிழ்த் தவமாகச் செய்து கொண்டு வருகின்றேன்.
      இந்தத் தமிழ்வழி நடையில் வாசகர்களை எல்லாம் என்னோடு அழைத்துச் செல்ல ஆசைப் படுகிறேன். அந்த ஆசை காரணமாகத்தான் இந்த நூலுக்கு மொழியின் வழியே என்ற பெயரையும் சூட்டினேன்.
      இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே வங்காளிகளுக்கு ஏற்பட்டிருக்கிற தாய்மொழியுணர்ச்சி நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் தமிழர்களுக்கு ஏற்படவில்லையே என்பதை நினைக்கும் போது சிற்சில சந்தர்ப்பங்களில் நான் மனம் புழுங்கியது உண்டு. தமிழ் நன்றாகத் தெரிந்த தமிழர்களே தங்கள் தாய் மொழியில் உரையாடுவதற்கு வெட்கப்படுகிறார்களே!
      இந்த நிலைகள் யாவும் மாறி நாட்டுணர்ச்சி பெருக வேண்டும். அப்படிப் பெருகுவதற்கு எதைச் சிந்தித்தாலும் நம்முடைய மொழியின் வழியே சிந்திக்கப் பழக வேண்டும். மாசுகோவிலோ, அமெரிக்காவிலோ, லண்டனிலோ உங்கள் கால்கள் எந்த நாட்டின் வழியில் நடந்தாலும் மனம் தமிழ் வழியில் நடக்கட்டுமே! இது என் வேண்டுகோள். - இவை நா.பா. முன்னுரையில் எழுதியிருந்ததின் பகுதிகளாகும்.

      நா.பார்த்தசாரதி அவர்கள் தனித்தமிழ் இயக்கஞ் சார்ந்தவரல்லர். தனித்தமிழ்க் கொள்கையாளரும் அல்லர். அவருடைய எழுத்தாக்கங்கள் வடசொற் கலந்தே எழுதப் பட்டுள்ளன. ஆனால், இந்நூலில் காணப்படும் கட்டுரைகளில் பல இடங்களில் மரபு, தூய்மை, வழக்கு, இலக்கணம் பேணப்பட வேண்டும் என்று பலவாறு வலியுறுத்துவதைக் காண்கின்றோம். அறிவுரையாகவும் வேண்டுகோளாகவும் இவற்றையே அழுத்தமாகக் கூறுகிறார்.
அவர் வலியுறுத்தும்  இக் கருத்துக்கள் தமிழுக்கும் தமிழர்க்கும் காப்பளித்து நலன் சேர்க்கும் கருத்துக்கள் என்பதில் ஐயமில்லை.  இந்நூலை அவர் தம்முடைய ஏனைய நூல்களைப் போலன்றி நடையில் செறிவோடு எழுதியிருப்பதைப் பல இடங்களில் காணலாம்.

*****************************************************************
 
    

   
  
         

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

சொல்லும் சொல்லலும்!

          சொல்லும் சொல்லலும்!

      
     உலகப் பொதுமறையான திருக்குறளில், ஆசிரியர்  திருவள்ளுவர் சொல்லைப் பற்றியும் சொல்லுவதைப் பற்றியும் ஒரு குறளில் விளக்குகிறார். நாம் சொல்ல வந்த செய்தியைச் சொல்லும் போது, நாம் பயன்படுத்தும் சொறகள் தேர்ந்தெடுத்த வையாக இருக்க வேண்டுமாம். எப்படித் தேர்ந்தவை தெரியுமா? நாம் தேர்ந்த சொல்லை நீக்கிவிட்டு வேறு சொல்லை அந்த இடத்தில் பயன்படுத்தினால் முன்னைவிட சிறப்பாக அமைய இயலாதபடியாகத் தேர்ந்தெடுத்தவையாம்!
    
இவ்வாறு சொல் ஆட்சி பற்றி விளக்கியுள்ள ஆசான் திருவள்ளுவர், சொல் என்ற சொல்லைத் திருக்குறளில் 125 இடங்களில் பயன்படுத்தி உள்ளார். இவற்றில் சொல் என்ற வடிவிலேயே 50 இடங்களிலும் பின்னொட்டுகள் சேர்ந்து 75 இடங்களிலும் ஆண்டிருக்கின்றார்.   

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், சொல்லும் வகைகளாக
எடுத்துச் சொல்லியுள்ள சொற்களை அறியும் போது, தமிழின் சொல்வளம் நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது. அச்சொற்களை அவற்றின் பொருளுடன் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. அசைத்தல் : அசை பிரித்துச் சொல்லுதல்.
2. அறைதல் : உரக்கச்சொல்லுதல்.
3. இசைத்தல் : கோவைபடச் சொல்லுதல்  
4. இயம்புதல் : இயவொலியுடன் (இசையோடு) சொல்லுதல்.
5. உரைத்தல் : செய்யுட்கு உரை சொல்லுதல்.
6. உளறுதல் : அச்சத்தினால் ஒன்றிற்கின்னொன்றைச்
              சொல்லுதல்.                                     
7. என்னுதல் : ஒரு செய்தியைச் சொல்லுதல்.
8. ஓதுதல் : காதில் மெல்லச் சொல்லுதல்.
9. கரைதல் : அழுது சொல்லுதல்.
10. கழறுதல் : கடிந்து சொல்லுதல்.
11. கிளத்தல் : ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல்.
12. குயிற்றுதல் : கியிற் குரலுல் சொல்லுதல்.
13. குழறுதல் : நாத் தடுமாறிச் சொல்லுதல்.
14. கூறுதல் : கூறுபடுத்துச் சொல்லுதல்.
15. கொஞ்சுதல் : செல்லப் பிள்ளைபோற் சொல்லுதல்.
16. சாற்றுதல் : அரசன் ஆணையைக் குடிகளுக்கு அறிவித்தல்.
17. செப்புதல் : வினாவிற்கு விடை சொல்லுதல்.
18. சொல்லுதல் : இயல்பாக ஒன்றைச் சொல்லுதல்.
19. நவிலுதல் : பலகால் ஒன்றைச் சொல்லிப் பயிலுதல்.
20. நுதலுதல் : ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.
21. நுவலுதல் : நூலைக் கற்பித்தல்.
22. நொடித்தல் : கதை சொல்லுதல்.
23. பகர்தல் : பகிர்ந்து விலை கூறுதல்.
24. பலுக்குதல் : உச்சரித்தல்.
25. பறைதல் : ஒன்றைத் தெரிவித்தல்.
26. பன்னுதல் : நுட்பமாய் விரித்துச் சொல்லுதல்.
27. பிதற்றுதல் : பித்தனைப் போலப் பேசுதல்.
28. புகலுதல் : ஒன்றை விரும்பிச் சொல்லுதல்.
29. புலம்புதல் : தனிமையாய்ப் பேசுதல்.
30. பேசுதல் : உரையாடுதல் அல்லது மொழியைக் கையாளுதல்.
31. மாறுதல் : மாறிச் சொல்லுதல்.
32. மிழற்றுதல் : கிளிக்குரலில் சொல்லுதல்.
33. மொழிதல் : சொல் திருத்தமாகப் பேசுதல்.
34. வலத்தல் : கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்.
35. வலித்தல் : வற்புறுத்திச் சொல்லுதல்.
36. விடுதல் : மெல்ல வெளியிடுதல்.
37. விதத்தல் : சிறப்பாய் எடுத்துச்சொல்லுதல்.
38. விள்ளுதல் : வெளிவிட்டுச் சொல்லுதல்.
39. விளத்துதல் : விரித்துச் சொல்லுதல்.
40. விளம்புதல் : பலர்க்கு அறிவித்தல்.
41. நொடுத்தல் : விலை கூறுதல்.
42. பாராட்டல் : போற்றி உரைத்தல்.
43. பொழிதல் : இடைவிடாது சொல்லுதல்.
44. பனுவுதல் : செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல்.
45. கத்துதல் : குரலெழுப்பிச் சொல்லுதல்.

     தமிழ் இயற்கை மொழி என்றும் முதல் தாய் மொழி என்றும் உலக முதன் மொழி என்றும் பாவாணர் முதலான மொழியியல் அறிஞர்களால் பாராட்டப் படுகின்றது. இப்படிப்பட தகுதிகள் கொண்டதாகத் தமிழ் இருப்பதால்தான் தமிழ் சொல்வளம் மிக்க மொழியாக உள்ளது என்பது பாவாணர் கருத்தாகும்.
    
     சொல்லும்வகைச் சொற்கள் போன்ற வினைச்சொற்களுக்கு மட்டுமின்றி பல்வேறு பெயர்ச் சொற்களுக்கும் மற்ற வகைச் சொற்களுக்குமான பட்டியலை சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்ற நூலிலும் அவருடைய பிற நூல்களிலும் கட்டுரைகளிலும் எடுத்துரைப்பதைக் காணலாம். 

--------------------------------------------------------------    


திருக்குறள் அரிய வாழ்வியல் நூல். மொழி, நாடு, இனம் கடந்த நிலையில், உலகின் மக்கள் அனைவர்க்கும் பொதுவான வாழ்வியல் கூறுகளை அறங்களை ஆட்சிமுறைகளை அக வாழ்க்கை அன்புறவுத் துய்ப்புகளைக் கூறும் நூல். உலகப் பொதுமறை என்று போற்றப்படும் நூல்.
     எல்லாப் பொருளும் இதன்பாலுள, இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை என்பார் மதுரைத் தமிழ்நாகனார். இத்தகைய ஒப்பற்ற உயர்ந்த சிறப்புக்குரிய அறிவார்ந்த நூல் தமிழ்மொழியில்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பேரறிவார்ந்த தமிழ மூதாதையால் எழதப்பட்டுள்ளது என்று தமிழர் பெருமை கொள்ள உரிமையுண்டு. ஆனால், அந்த ஈடிணையற்ற நூல் கூறுகின்றவாறு வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற கடமையைத் தமிழர் மறந்து விடுவதுதான் வருத்தம் தரும் செய்தியாகும்.                              

----------------------------------------------------------------------------------------------------------- 









சனி, 1 ஆகஸ்ட், 2009

களித்தாரைக் கண்ட காட்சி...!

ஞ ஞ         களித்தாரைக் கண்ட காட்சி...!
    

அன்று திங்கட்கிழமை. காலை ஒன்பதரை மணி இருக்கும். வெளிநாட்டு அஞ்சல் தொடர்புக் கட்டணம் பற்றித் தெரிந்து கொள்ள நகரின் தலைமை அஞ்சலகத்திற்குச் சென்றிருந்தேன்.
    
பெரிய அறையொன்றில் நடு இருக்கையில் இருந்தார் அலுவலகப் பொறுப்பதிகாரி. அவரைப் பார்க்கும்போது, அந்தக்காலத்து அரசவையில் வீற்றிருக்கும் அரசரைப் போலத் தெரிந்தார்; மணிமுடி ஒன்றுதான் குறை!
    
மடிப்புக் கலையாத உலர்சலவை உடை; அழுந்த வாரிவிடப்பட்ட தலைமுடி; நடு நெற்றியில் ¾” x ½” அளவெடுத்து இடப்பட்டதைப் போன்ற திருநீறு! பார்ப்பவர் அனைவரும் மதித்து வணங்கும்படியான தூய்மையான ஆளுமைமிக்க தோற்றம்!
    
வருகின்றவர்களைச் சிறு புன்னகையுடன் தலையைச் சிறிதே அசைத்து
மறுவணக்கம் கூறி வரவேற்கிறார். தேவையான அளவிற்கு மட்டும் வெட்டித் தறித்தாற் போல் பேசுகிறார்.
    
நான் சென்றபோது கூட்டம் குறைவாக இருந்தது. நான் கேட்ட செய்திக்குச் சுருக்கமாக விடைகூறி விளக்கினார். நன்றி கூறிவிட்டு வெளியே வந்தேன். பத்துமணிக்குள் என் அலுவலகம் செல்வதற்காக விரைந்தேன்.
    
அன்று மாலை மணி ஆறேகால் அல்லது ஆறரை இருக்கும் என்று எண்ணுகிறேன், அலுவலகத்திலிருந்து நூலகத்திற்கச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். ஊரின் நடமாட்டம் மிகுந்த பெரிய கடைத் தெருவின் வழியே வந்துகொண்டிருந்தேன். தொலைவில் ஓர் ஆள், வலப்புறமும் இடப்புறமுமாகத் தள்ளாடிக் கொண்டே எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்தார்.
    
கொஞ்சம் நெருங்கிச் சென்றதும் அந்த ஆளை எங்கேயோ பார்த்ததாற் போன்ற மங்கலான நினைவு(!) தோன்றியது. இடக்கையில் கடலைச் சுண்டல் பொட்டலம் ஒன்று இருந்தது. வேட்டி, சட்டை, கை, தலை எல்லாம் பட்டை பட்டையாக புழுதி ஒட்டியிருந்தது.
    
எங்கோ விழுந்து கிடந்திருக்க வேண்டும். வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. கால்கள் நேரே நிற்காது தள்ளாடிக் கொண்டே இருந்தன. எங்கேயோ விழுந்துவிடப் போவதைப் போன்ற மிகத் தள்ளாட்டமான தடுமாற்ற நடை! வாய்க்கு வந்தபடியான தொடர்பற்ற குழறிய சொற்கள்!
     ஓர் அம்மா, சவளிக்கடை ஒன்றிலிருந்து இறங்கிச் சாலைக்கு வந்தார். ஐயோ! அந்த அம்மையார் மேல் மோதிவிடுவாரோ? அரண்டுபோய் விலகிச் சென்றுவிட்டார் அந்த அம்மையார்.
    
என்ன கொடுமை! ஓ! இவர்... இவர்... இவர் நான் காலையில் பார்த்த அந்த அலுவலகப் பொறுப்பதிகாரி அல்லவா?
    
ஒரு பால்காரர், தம் மாடுகளுக்குத் தீனி வாங்க வந்தவர், இவரைப் பார்த்தார். இந்தப் பால்காரர்தாம் இவர் வீட்டுக்குப் பால் தருகிறவராம்! பால்காரர் இவரை வலிய அழைத்துச் சென்று தம் மிதிவண்டியின் அகன்ற பின்னிருக்கையில் அமர்த்திக் கொண்டு இவருடைய வீட்டை நோக்கிச் சென்றார்.
    
மிதிவண்டியில் அமர்ந்திருந்த அவர், கிடையாகவும் சாய்வாகவும் ஆடிக்கொண்டே செல்கையில், அவர் அமர்ந்திருந்த அந்த மிதிவண்டியும் குடித்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது!
    
மதுவருந்தும் ஒருவன், தான் மது அருந்தாத நிலையில் தெளிவாக  இருக்கிறான் என்று கருதிக் கொள்ளுங்கள். அப்பொழுது, மது அருந்திய வேறு ஒரு ஆள் மனத்தாலும் பேச்சாலும் செயலாலும் தன் கட்டுப்பாட்டை இழந்து இழிந்த நிலையில், ஆடையிழந்து, உளறிக் கொண்டு, கண்ட இடத்தில் விழுந்து எழமுடியாத நிலையில் கிடப்பதைப் பார்க்கிறான்.
அந்தக் காட்சியைக் கண்ட பிறகாவது, தான் மது வருந்துவதால் தனக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்; மது அருந்தலைக் கைவிட்டு அதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என உணர வேண்டும். இதையே இரண்டடிகளில் வலியுறுத்திக் கூறுகிறது குறள்.

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.                

-------------------------------------------------------------------      
         

வெள்ளி, 31 ஜூலை, 2009

ஆற்றாமைச் சீற்றத்தில் ஐந்து!

1 2 ஆற்றாமைச் சீற்றத்தில் ஐந்து!
   
ஓருயிர்க்கே வஞ்சமென ஓரினத்தைக் கொன்றழித்தார் !
நேரதற்கு நீதுணையாய் நின்றா'யே ! பூரியனே !
சீருறையும் செந்தமிழர் செப்பும் தலைவனெனப்
பேருனக்கேன் சீச்சீ பிழை ! 3 4 


எல்லா நிலையிலும் ஈழத் தமிழரின் 
பொல்லா நிலைக்குப் பொறுப்பு நீ ! நல்லார் 
உமிழ்கிறார்! தூ!தூ! உனக்குப் பதவி 
அமிழா திருக்கும் அமர். 5 6 



கட்டபொம்மை ஆங்கிலர்க்குக் காட்டிக் கொடுத்திட்ட
எட்டப்பன் போலானார் எம்முதல்வர் ! திட்டமுடன்
சிங்களர் ஈழத்தில் செந்தமிழர் கொன்றழிக்கப் 
பங்கேற்றார் தில்லியுடன் பார் ! 



ஆய்தங் கொடுத்தாய் ! அரிய உளவுரைத்தாய் !
போய்நின்று போரும் புரிந்திட்டாய் ! ஏய்த்திட்டாய் !
சீச்சீ ! சிறுமையாய் ! சிங்களர்க்கும் கீழானாய் !
தீச்செயலில் தில்லி திளைத்து. 9 0 



ஏடுமழும் ஈழத்தே எந்தமிழர் துன்பெழுதில் 
வீடுநா டெல்லாம்போய் வெந்துயரில் ! ஈடு 
சொலவுலகில் யார்க்கின்னல் சூழ்ந்ததிதைப் போன்றே 
உலகிலறம் ஓய்ந்ததென ஓது !  

-----------------------------------------------------------------------------------------

வியாழன், 30 ஜூலை, 2009

நூல் எழுதுவோர், ‘பாயிரம்’ அறிவோம்!

      நூல் எழுதுவோர், பாயிரம் அறிவோம்!


பாயிரம் என்பது முகவுரை.  எந்த நூல் எழுதுவதாயினும் அந்த நூலுக்குப் பாயிரம் எழுத வேண்டுமென்பது மரபு. சிறந்த நூல்களுக்கு முகவுரை இன்றியமையாதது. அதனால் நூலை ஆராய்ந்து, அதன் முன்னதாக, அழகிய நுட்ப உரையாக, அணிந்துரையை, எந்த ஒரு நூற்கும் பெரிதும் இயைபுபட நந்தமிழ்ப் பெரியோர் வைத்தனர்.  
ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே என்கிறது நன்னூல். ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும், பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப் படாது என்பதே இதன் பொருளாகும்.

பாயிரத்தின் தேவை
பாயிரம், நூலிற்குப் புறத்தே உரைக்கப் படுவதால், புறவுரையாகும். கணவனுக்கு நல்ல மனைவி போல இன்றியமையாச் சிறப்பினதாகவும் அழகிய பெரிய நகரத்திற்கு வடிவமைந்த வாயில் மாடம் போல அழகியல் சிறப்பினதாகவும் அமைவது பாயிரம் என்பர்.
மேலும், பாயிரம் யானைக்குப் பாகன் போலவும், வானத்திற்கு விளக்கமாகிய நிலவும் கதிரவனும் போலவும் இன்றியமையாச் சிறப்புடையது என்றும் கூறுவர். பாயிரமின்றி நூல் படிப்பார், குன்று முட்டிய குருவியைப் போலவும் மலைப் பகுதிகளில் மாட்டிக் கொண்ட மான் போலவும் இடர்ப் படுவராம்.

பாயிரம்
பாய் என்ற சொல் பரந்து கிடப்பது என்று பொருளுடையது என்றும்  இதனை அடியாகக் கொண்டு பிறந்த பாயிரம் என்ற சொல், பரந்து விரிந்து செல்லும் நூலின் தொடக்கப் பகுதி என்று பொருள்படும் என்றும் அறிஞர்  கூறுவர். 
பாயிரத்திற்கு மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தரும் விளக்கத்தைக் காண்போம்: போர் மறவர் போர்க்களத்தில் முதலில் பகைவரை விளித்துக் கூறும் நெடுமொழி என்னும் மறவியல் முகவுரையைப் பாயிரம் குறித்தது. பின்பு பொருள் விரிவாக்கமாக நூலின் முகவுரையைக் குறித்தது என்கிறார். பயிர்தல் என்றால் ஊர்கின்ற விலங்குகளும் பறவைகளும் தமக்குள் ஒன்றை ஒன்று அழைத்தல்.
பயிர் > பயிரம் > பாயிரம் = அழைப்பு : போருக்கு அழைக்கும் முகவுரை, நூலின் முகவுரை.

பாயிரம், பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம் என இரண்டு வகையினதாகும்.

பொதுப் பாயிரம்
எல்லா நூல்களின் முன்பும் பொதுவாக உரைக்கப் படுவது பொதுப் பாயிரம். நூலுள் சொல்லும் பொருளல்லாத, நூலின் இயல்பு, நூலாசிரியனின் இயல்பு, கூறுகின்ற முறை, படிப்போர் இயல்பு, படிக்கும் முறை ஆகிய ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரமாகும்.
( கற்பிக்கப்படும் நூலாயின், நூல், கற்பிக்கும் ஆசிரியன், கற்பிக்கும் முறை, கற்கும் மாணவன், கற்கும் முறை ஆகிய ஐந்தினையும் பொதுப் பாயிரம் விளக்கும்)

சிறப்புப் பாயிரம்
பொதுப்பாயிரத்தின் ஐந்து கூறுகளும் எல்லா நூல்களுக்கும் பொதுவாய் கூறப்படுவதாகும். அவையெல்லாம் நூலுள் சொல்லும் பொருளல்லாத புறப்பொருளைக் கூறுவன.
அப் பொதுப் பாயிரம் போலன்றி நூலிற் சொல்லப் படுகின்ற பொருள் முதலிய உணர்த்துவது சிறப்புப் பாயிரமாகும். இப் பாயிரம், நூலுக்கு இன்றியமையாததாகும். அணியிழை மகளிர்க்கு, அணிகளில் சிறந்த ஆடை போல நூலுக்குச் சிறப்பானது சிறப்புப் பாயிரம் என்பர்.

சிறப்புப்பாயிரத்தில் கூறுவன
     நூலாசிரியர் பெயர், நூல் வந்த வழி, தமிழகம் முதலாக நூல் வழங்கப்படும் நிலப்பரப்பு, நூலின் பெயர், நூலின் வகை அல்லது கட்டமைப்பு, நூலிற் கூறப்பட்டுள்ள பொருள், நூல் யாருக்காக எழுதப்படுகிறது என்ற குறிப்பு, நூலால் பெறக்கூடிய பயன் ஆகிய எட்டுச் செய்திகளையும் சிறப்புப் பாயிரம் செப்பமாகக் கூறும்.
      இவற்றுடன் நூல் எப்பொழுது, எவ்விடத்தில், எக்காரணம் பற்றி எழுதப்பட்டது என்பனவும் கூறப்படும்.
      மேற்கண்ட பதினொரு குறிப்பையும் ஒருங்கேயேனும் ஒன்றிரண்டு குறைவாகவேனும் கூறி, அந்நூலைச் சிறப்பிப்பதும் மதிப்புரையும் சிறப்புப் பாயிரமே. 

சிறப்புப்பாயிரத்தை எழுதத் தகுந்தோர்
     நூலாசிரியரின் ஆசிரியர், நூலாசிரியரோடு உடன் பயின்றவர், நூலாசிரியரின் மாணவர், நூலின் உரை ஆசிரியர் சிறப்புப் பாயிரம் எழுதுதற்கு உரியோர் ஆவர்.
      இதுகாறும் தோன்றாத சிறந்த நூல்களைப் படைத்து, பல துறைகளிலும் நிறைவான புலமையைப் பெற்றிருந்தாலும் ஒருவர் தம்மைத்தாமே புகழ்ந்து தம் நூலில் தாமே சிறப்புப் பாயிரம் எழுதிக் கொள்ளுதல் பெருமைக்குரிய தகுதி ஆகாது.
      ஆயினும் கடவுள் வணக்கம், அவையடக்கம்,  நூற் பொருள், நூல் வந்த வழி, நூற் பெயர் முதலியவற்றை நூலாசிரியர் கூறுவதே பொருத்தம் ஆகையானும் அவை எவ்வகையினும் தற்புகழ்ச்சிக்கு இடந் தராமையானும் அவற்றை நூலாசிரியர் கூறுவது தக்கது என்று கொள்ளப்படும். அவ்வாறு கூறுவது தற் சிறப்புப் பாயிரம் என்று பெயர் பெறும்.

பாயிரத்தின் பெயர்கள்
     மேற்கூறிய பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் இருவகைக்கும் பொதுவாகவும் சிறப்பாகவும்பல பெயர்கள் உள்ளன. அவை, முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை, பாயிரம் என்னும் எட்டாம். இவற்றின் பொருள் விளக்கம் வருமாறு:

  1. முகவுரை : இது நூலுக்கு முகத்தைப் போன்று இருப்பது. பெரும்பாலும்       நூல், ஆசிரியன், பதிப்பு முதலியவற்றின் வரலாற்றைக் கூறுவது.

  1. பதிகம் : இது நூலாசிரியனின் பெயர், நூல் வந்த வழி முதலிய பத்து அல்லது பதினொரு குறிப்புகளைத் தருவது.

  1. அணிந்துரை : நூலுக்கு அணியாக (அழகாக) அமைவது.

  1. நூன்முகம் : இது நூல் முகத்து உரைக்கப் படுவது.

  1. புறவுரை : நூலின் கருத்து அல்லாமல் நூலோடு தொடர்புடைய செய்திகளை வரலாற்றை எடுத்துரைப்பது.

  1. தந்துரை : இது நூலிற் சொல்லப்படாத பொருளைத் தந்துரைப்பது. பேரறிஞர்களின் முன்னுரை பெரும்பாலும் தந்துரையாக இருக்கும்.

  1. புனைந்துரை : இது நூலின் சிறந்த கூறுகளை எடுத்துரைத்துப் போற்றுவது. ( புனைதல் = சிறப்பித்தல், புகழ்தல்)

  1. பாயிரம் : இது முதன்முதல் பொருகளத்துப் போர் முகவுரையாகப் பகைவரை விளித்துத் தம் வலிமைச் சிறப்பைக் கூறும் நெடுமொழியைக் குறித்தது. பின்பு நூல் முகவுரைக்கும் வழங்கத் தலைப்பட்டது.

இக் கால நூல் வழக்கில், புறவுரை, பாயிரம் என்னும் இரண்டு பெயர்களும் பொதுப் பாயிரத்திற்கும் சிறப்புப் பாயிரத்திற்கும் பொதுவாக உள்ளன. மற்றவை சிறப்புப் பாயிரத்திற்கே சிறப்பாக உள்ளன்.

      உரைமுகம், தோற்றுவாய், முன்னுரை, பதிப்புரை, மதிப்புரை, சாத்துப்பா (சார்த்துப்பா) முதலிய பெயர்கள் இக்காலத்து எழுந்த புது வழக்கு. இவற்றுள் முன்னிரண்டும் தற்சிறப்புப் பாயிரத்தையும் பின் மூன்றும் சிறப்புப் பாயிரத்தையும், இடையொன்றும் அவ்விரண்டையும் சாரும். சாத்துப்பா என்பது செய்யுள். ஏனைய உரைநடை. என்று மொழிநூற் கதிரவன் பாவாணர் விளக்கிக் கூறுகிறார்.  
....................................................................................................................................................
உதவிய நூல்களும் இயற்றியோரும்:
1, தொல்காப்பியம் -  எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை.
2. நன்னூல் எழத்ததிகாரம்  தமிழண்ணல் உரை.
3. தேவநேயம் -10 தொகுப்பாசிரியர் : புலவர் இரா.இளங்குமரன்.
உதவியோர்க்கு உளமார்ந்த நன்றி.



                                     

வள்ளல்கள் எழுவரும் அவர்தம் சிறப்பும்!

வள்ளல்கள் எழுவரும் அவர்தம் சிறப்பும்!

பள்ளிப் படிப்பின்போது, கடையெழு வள்ளல்கள் என்று படித்த நினைவு பலருக்கும் இருக்கும். அந்த ஏழு வள்ளல்கள் யார் யார்? என்று கேட்டால், பெரும்பாலோர் பாரி என்று உடனே தொடங்கி, அங்கேயே நிற்பதைக் காணலாம். சிலர் பாரி, காரி, ஓரி வரை வந்து நின்று போவதைக் காணலாம். தமிழ்மொழி சார்ந்த அலுவலில் இருக்கும் பலரே உடனே விடை சொல்ல முடியாத நிலையில் இருக்கும் போது நாம் இதைப் பெரிய குறையாக எண்ண வேண்டியது இல்லைதான்!
கழக(சங்க) இலக்கியமான பத்துப்பாட்டில் மூன்றாம் பாடல் சிறு பாணாற்றுப் படை ஆகும். இந்தச் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார்.
கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ் வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பது உண்மையாகும்.
இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன.
இனி, அந்த ஏழு வள்ளல்களின் பெயரையும் அவர்களின் சிறப்பையும் காண்போம்:
பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி ஆகியோரே அவர்களாவர்.


பேகன் பொதினி(பழனி) மலைக்குத் தலைவர். மழைவளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம் மயிலுக்குக் கொடுத்தார் - அம்மயிலுக்குப் போர்த்தினார்.
 மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே கொடைமடம் எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.
      புறநானூற்றுப் பாடல் 142இல் புலவர் பரணர், கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழைபோலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான் என்ற கருத்தமைத்துப் பாடியுள்ளார்.


பாரி பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார்.
      பாரியின் வள்ளன்மையைக் கபிலர் பல புறநானூற்றுப் பாடல்களில் போற்றிப் பாடியுள்ளார். அவற்றுள், உரை விளக்கம் தேவைப் படாத ஒரு பாடல் இது:
            பாரி பாரி என்று பல ஏத்தி
            ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
            பாரி ஒருவனும் அல்லன்
            மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே.   - (புறம். 107)


காரி, திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே மலாடு ஆகும். இவர் மலையமான் திருமுடிக் காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார்.
இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர். உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை இதுதான்:  ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய தலையாட்டம் என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையை இரவலர்க்கு அளித்தார்!
காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.


ஆய், பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர். இவர் நாகம் நல்கிய ஒளிமிக்க நீல மணியினையும் கலிங்கத்தையும் ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தவராம்!
      வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.


அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான், அதிகைமான், அஞ்சி எனப் பல பெயர்களில் வழங்கப் படுகிறார். இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர்.
      இவர் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அக் கனி, தன்னை உண்டாரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழவைக்கும் வலியுடையது. அக் கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க்கு ஈந்து அழியா அறப்புகழ் பெற்றார்.
      அதியமான் நெடுமான் அஞ்சியைப் போற்றிப் புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.


நள்ளி மலைவளஞ் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர்.
நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாத
வாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர். 
      நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.


ஓரி சிறிய மலைகள உடைய நல்ல நாட்டிற்குத் தலைவராவார். இவர் விற்போரில் வல்லாராதலின், இவ் வள்ளலை வல்வில் ஓரி என்றும் அழைப்பர்.
      ஓரியிடம் பெருவளத்தைக் கொடையாகப் பெற்றதால், புலவர் வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய தொழில்களைச் செய்யாது சோம்பியிருந்து, அவற்றை மறந்து போயினராம்!
      ஓரியின் சிறப்பைக் கூறும் வன்பரணரின் பாடல்களைப் புறநானூற்றில் காண்கிறோம்.
      வள்ளல்களின் சிறப்பை,  புறநானூற்றுப் பாடல்களில் மட்டுமின்றி நற்றிணை, அகநானூறு போன்ற பிற கழக இலக்கியங்களிலும் கூட காணலாம்.


------------------------------------------------------------------------

   
     

      
        
      

செவ்வாய், 28 ஜூலை, 2009

தெய்வங்கள் தந்த விடை!




          ‘இரட்டைப் புலவர்கள்என்று அழைக்கப் பட்டவர்கள் இரண்டு அறிவார்ந்த பாவலர்களாவர். அவர்களில் ஒருவர் கால் முடமானவர்; இன்னொருவர் கண் பார்வை இல்லாதவர். கண்பார்வை இல்லாதவர் முடமானவரைத் தோளில் சுமந்து செல்வாராம். முடமானவர், பார்வையற்றவரின் தோளில் அமர்ந்தபடியே வழிசொல்லிச் செல்வாராம்!

          இந்த இரு பாவலர்களும் சரியான நகைச்சுவைக் குறும்பர்கள்! இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தே பாடலைப் பாடுவார்கள் இயற்றுவார்கள்! இவர்கள் பாடல் வெணபாவாக இருக்கும். இவர்களின் வெண்பா மிக எளிமையாக அமைந்திருக்கும். பாடல் எளிதில் விளங்கும். அகராதியின் துணை தேடவேண்டிய தேவையே இருக்காது.

          (வெண்பா நான்கடிப்பாடல் என்பது பலரும் அறிந்ததே. முதல் மூன்றடிகள் நான்கு சீர்களும் நான்காம்அடி மூன்று சீர்களும் உடையதாக இருக்கும். நேரிசை வெண்பா என்றால் இரண்டாம் அடியின் மூன்றாம் சீருக்கும் நான்காம் சீருக்கும் இடையில் சிறு கோடு இருக்கும்; அவ்வாறு வரும் அந்த நான்காம் சீரைத் தனிச்சீர் என்பார்கள்.)

          இரட்டைப் புலவர்கள், ஏதாவது ஒரு செய்தியைப் பற்றியோ, ஆளைப் பற்றியோ, காட்சியைப் பற்றியோ, நிகழ்ச்சியைப் பற்றியோ அவர்களுக்கே உரிய குறும்புத் தனத்துடன் பாடுவார்கள். இருவருள் ஒருவர் முதலில், வெண்பாவின் (முதல் ஏழுசீர் அல்லது எட்டுச்சீர் கொண்ட) முதல் இரண்டடிகளைப் பாடுவார். பெரும்பாலும் அந்த இரண்டடிகளும் கேள்வி கேட்பது போலவோ, ஐயமாக வினவுவது போலவோ இருக்கும்.

          தொடர்ந்து இரண்டாமவர், அடுத்த (எட்டு அல்லது ஏழுசீர் கொண்ட) எஞ்சிய இரண்டடிகளைப் பாடுவார். இரண்டாவதாகப் பாடுகின்றவர், முதலில் பாடியவரின் கேள்விக்கு விடையளிக்கும் வகையிலோ அல்லது அவர் எழுப்பிய ஐயத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையிலோ கருத்தமைத்துப் பாடுவார்.

          இவ்வாறு அவர்களால் பாடப்படும் வெண்பா, மிக நகைச்சுவை யோடும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் அமைந்து கேட்போரைச் சுவைத்து மகிழவும் ஆழச் சிந்திக்கவும் வைக்கும்.

          ஒருமுறை, நம் இரட்டைப் புலவர்கள், ஈழத்தில் நிகழ்ந்தது போன்ற ஏதோ பெரும் பேரழிவையோ, அறங்கொன்ற கொடுங் கொடுமையையோ அறிந்திருக்கிறார்கள். மனம் ஆறாத நிலையில், அவர்கள் அப்போதிருந்த உணர்வுநிலையில், தெய்வங்களை நோக்கிக் கேள்வி கேட்பது போலவும்,  அதற்குத் தெய்வங்கள் விடையளிப்பது போலவும் பாடிய ஒரு சுவைமிக்க பாடலை இப்போது பார்ப்போம்.

          முதலில் ஒருவர் பாடிய இரண்டடிகள்: 
கேட்ட வரமளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள்
கூட்டோடே எங்கே குடிபோனீர் ?”
           இந்த இரண்டடிகளின் பொருள் நமக்கு எளிதில் புரிகிறது. கீர்த்தி என்றால் மிகுந்த புகழ். மிகுந்த புகழை உடைய, கேட்ட வரத்தை அளிக்கும் ஆற்றல் மிக்க தெய்வங்களே! இங்கிருந்து நீங்கி, எல்லோருமாக எங்கே போய்க் குடியேறி விட்டீர்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார். 

          இதற்கு விடையளிக்கும் வகையில் இரட்டைப் புலவர்களில் இரண்டாமவர் பாடிய பகுதி இதுதான்: . .
__________________________           _- பாட்டாய்க்கேள்! செல்கால மெல்லாம் செலுத்தினோம் அல்காலம்
கல்லானோம் செம்பானோம் காண். 

    இந்த அடிகளின் பொருளைப்புரிந்து கொள்வதும் எளிதே! பாடுகின்றவனே! உன் கேள்விக்கு விடை கூறுகிறேன் கேட்டுக்கொள்! எங்கள் ஆற்றல் செல்லுபடியாகின்ற காலமெல்லாம் ஆளுமையை, அதிகாரத்தைச் செலுத்தினாம்! இப்போது இருளான கெட்டகாலம்; எங்கள் ஆற்றலெல்லாம் இழந்து, கல்லாலும் செம்பாலும் செய்த சிலைகளாகி விட்டதைப் பார்த்திடுக!” - என்று தெய்வங்கள் முதலில் பாடிய பாவலருக்கு விடையளிப்பதாகக் கருத்தமைத்து, இரண்டாமவர் பாடிவிட்டார்.

    முழுப் பாடலையும் இப்போது பார்ப்போம்:
கேட்ட வரமளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள்
கூட்டோடே எங்கே குடிபோனீர்? - பாட்டாய்க்கேள்!
செல்கால மெல்லாம் செலுத்தினோம் அல்காலம்
கல்லானோம் செம்பானோம் காண். 
   
    இரட்டைப் புலவர்களின் பாடல் எப்படி உள்ளது? ஈழக் கொடுமைகளை அடிப்படையாகக் கொண்டுத் தெயவங்களை நோக்கி வினா எழுப்பி, விடை கூறியவாறு இக்காலத்தில் தோன்றுகிறது அல்லவா?

---------------------------------------------------------