வியாழன், 29 ஜனவரி, 2009

ஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்! (Enlightenment through meditation and Telepathy)





(ஆங்கில மூலம் : ஆபிரகாம் தொ. கோவூர் ***  தமிழாக்கம் :  தமிழநம்பி) 

            பேராசிரியர் எல். சி. எவாசி "பாணத்துறை சொற்போரும் புத்த குமுகாயமும்" என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையின் தவறான வழிகாட்டும் கூற்றுக்கள் சிலவற்றை மறுக்காமல் விடக்கூடாது என உறுதியாகக் கருதினேன்.

            ஓக ஊழ்கம் (யோக தியானம்),  ஆதனிக ஊழ்கம் அல்லது அறிவு கடந்த ஊழ்கம் என்னும் பெருங் கேடான ஆர்வப் பித்து பற்றி அவர் புகழ்ந்துரைத்து விளக்கியிருந்தார். அறிவு பெறவும், தெளிவுறவும், அறிவாற்றல் பெருகவும், தன்னுணர்வு பெறவும், முழுமையான மனவளம் பெறவும், இயல்பு கடந்த மன ஆற்றல் பெறவும், உடல் ஒளி வீசிச் சுடரவும் இன்னும் பலவற்றிற்கும் அறிவெல்லை
கடந்த ஊழ்கமே வழி என அக்கட்டுரையில் கூறியிருந்தார்.

            ஒரு பல்கலைக்கழகத் தனித் திறலாரின் தூவலிலிருந்து வருவதால், இச்செய்தி, பொதுமக்களுக்குத் தவறான வழிகாட்டக் காரணமா யிருக்கின்றது.

            இயல்புணர்ச்சியாகிய சில நடத்தைப் பாங்குகளைத் தவிர, மற்ற எல்லா அறிவுகளையும், மாந்தன் அவனுடைய பிறப்பிற்குப் பின்னால், ஐம்பொறிகளின் புலனுணர்வினால்தான் அடைய வேண்டும்; ஊழ்கத்தினால் அடைய முடியாது.

            பிறப்பிலிருந்தே ஐம்புலனுணர்வு சிறிதுமில்லாத ஒருவர், எதனைப்பற்றியும் எந்த ஒரு அறிவுமில்லாத புதல் (வரம்) போலவே வாழ்வார்.

            பேரா. எவாசி சொல்வதைப் போல் ஊழ்கத்தின் மூலம் அறிவைப்பெற முடியுமானால், நாட்டிலுள்ள கல்வி நிலையங்களை யெல்லாம் மூடிவிட்டு அந்த இடங்களில் ஊழ்க நிலையங்களை நிறுவி விடலாமே! கல்விக்காகப் பெருந் தொகைகளை ஏன் செலவிட வேண்டும்?

            நேரடியாகப் புலன்களால் உணரும் 'பொருள் புலக்காட்சி' (objective perception ) போல இல்லாமல் ஒருவரின் அகவுணர்வுப் புலக்காட்சி (subjective perception )கள் உண்மை அல்லாதவையாகவும் தவறானவையாகவும் இருக்கும்.

            எடுத்துக்காட்டாக, ஒரு மன நோயாளியின் இல்பொருள் காட்சிகள் (hallucination) அவருடைய அக உணர்வுக் காட்சிகளின் நுகர்ச்சிகளே அன்றி அவற்றின் பின்னே எந்த உண்மையும் இல்லை.
வேதியல், பூதியல், உயிரியல் மற்றும் உளத்தியல் காரணங்களால் ஒருவரிடம் இல்பொருள் காட்சி நிலைகளைத் தூண்ட முடியும்.

            மயக்க மருந்துகள், வெறியூட்டும் குடிவகைகள், தாளம் தவறாத (சீரான) பறை முழக்கம், கைதட்டல், மந்திரம் ஓதல், பாடுதல், நாட்டியம் ஆடுதல், உடலில் இயக்குநீர்(harmone ) உயிரச்சாரம் மற்றும் நொதிமங்கள் சமனின்மை; அச்சம், அதிர்ச்சி, வேறுபட்ட அறிதுயில், தன்னறிதுயில்(auto hypnosis) முதலியவற்றால் மனவலிமை குறைவானவர்களிடம் இல்பொருள் காட்சி நிலையைத் தூண்ட முடியும்.

            'ஏரி இல்ல'த்தில் அச்சுத்துறையில் வேலை செய்யும் ஒரு தமிழரை - அறிவு திறம்பிய நிலையில் அறிதுயில் மருத்துவத்திற்காக அவருடைய சிங்கள மனைவி என்னிடம் அழைத்து வந்தார். அவருடைய அறிவு திறம்பிய நிலைக்கு ஓக ஊழ்கம்தான் காரணம் என்பது அலசி ஆராய்ந்த போது தெரிந்தது.

            அவர் 'ஓக ஊழ்கம்' பற்றிய தமிழ்ப் புத்தகத்தைப் படித்திருக்கிறார். "ஒருவர் தாமரையமர்கையில் (பத்மாசனத்தில்) அமர்ந்து, ஓம் ரீம் செயமனா சக்தீ... என்ற மந்திரத்தை 108 முறை ஓதினால் ஞானக்கண் திறக்கப்பட்டு புலன் மீறிய காட்சித் திறனையும், முன்னுணருங் காட்சித் திறனையும் அடையலாம்" என்று அப்புத்தகத்தில் படித்திருக்கின்றார்.

     அவ்வாறு நடந்து பார்க்க அவர் முடிவு செய்தார். ஒருநாள் இரவு படுக்கையில் குறுக்குகாலிட்டு அமர்ந்து "ஓம் ரீம் செயமனா சக்தீ... ஓம் ரீம் செயமனா சக்தீ..." என்று சொல்லத் தொடங்கினார்.
அம்மந்திரத்தை முழுமையாக 108 முறை சொல்லி முடிக்குமுன் (ஐம்பது அல்லது அறுபது முறை சொல்லியதும்), "முருகா... முருகா..." எனக் கூவிக் கொண்டே வீடெங்கிலும் ஓடத் தொடங்கினார் என்று விளக்கினார் அவர் மனைவி.

     அன்றிரவிலிருந்து பித்தர் (பைத்தியக்காரர்) போல நடக்கத் தொடங்கிய அவருக்குப் பல மந்திரக் காரர்களிடம் மருத்துவம் பார்த்தனர். மனநோய் மருத்துவ நூல்களில் இத்தகைய நிகழ்ச்சிகள் நிறைய காணப் படுகின்றன.

     கோயில் வழிபாடுகளில் பத்தர்களின் இயல்பு கடந்த நடத்தைகள், பேய் ஆட்டங்கள், மறுமலர்ச்சிக் கூட்டங்கள், பொதுவிருப்ப இசை நிகழ்ச்சிகள், திரளான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் முதலியவை - கருவி முழக்கம், மந்திர வழிபாடுகள், திரும்பத் திரும்ப ஓதுதல்கள், ஆட்ட பாட்டங்கள், ஒலி முழக்கங்கள் முதலியவற்றின் தூண்டுதலால் உண்டாகும் சிறிது நேர அறிவுதிறம்பிய நிலைகளே ஆகும்.

     ஊழ்கம் எனப்படும் மதப்பித்து படிப்படியாகத் தானே தூண்டிக்கொள்ளும் தன்னறிதுயில் முறையாகும்.
ஊழ்கத்தி லுள்ளோரின் இல்பொருள் காட்சிப் புலனுணர்வுகள் பெரும்பாலும் அவர்களின் மதஞ்சார்ந்த உண்மையல்லா நம்பிக்கைகளின் பாற்பட்டவையே!

     ஊழ்கத்திலுள்ள ஒரு கிறித்தவர், வானுலகில் பொன் அரியணையில் அமர்ந்திருக்கும் செகோவா(யூதக்கடவுள்)-வையும், அவருக்கு வலப்புறத்தில் அமர்ந்திருக்கும் ஏசுவையும், இறக்கை உள்ள எண்ணற்ற தூதர்கள் மகிழ்ச்சிப் பா இசைத்துக் கொண்டே சூழ்ந்திருப்பதையும் காண்பதாக மயங்குகிறார். (இல்பொருள் காட்சியாகககாண்கிறார்).

     இந்து, புத்த மதத்தவர் அவரவருடைய முன்பிறவி, அடுத்த பிறவிகளை இல்பொருள் காட்சியாகக் காண்கிறார்.
பலவேறு மயக்க மருந்துகளும் வெறியூட்டும் பொருள்களும் இத்தகைய இல்பொருள் காட்சிகளைத் தூண்டும்.
சிலர், கற்பனைத் திறமிக்க ஊழ்கத்தில் ஆழ்ந்து இயற்கை மீறிய உளத்தியல் ஆற்றல்கள் மாயமந்திரங்கள் பெற்றிருப்பதாக முட்டாள் தனமாகக் கருதிக் கொண்டு அலைக்கழிக்கப் பட்டு நரம்பு நோய்க்குப் பலியாகிறார்கள்.

     எழுதப் படிக்கத் தெரியாத அறியாமையாளரான ஆள்கள் மன மாறாட்டங்களால் தொல்லைப் பட்டால், அவர்களைப் பித்துப் பிடித்தவர்கள் என்று சொல்கின்றனர். அவர்களின் பேச்சுக்கு ஒருவரும் மதிப்புத் தருவதில்லை.

     அதே போழ்து, மன மாறாட்டத்திற்கு ஆளானவர் ஒரு திறமையான அறிவாற்றலுடையவராய் இருந்து விட்டால், அவர் மீமிசை உணர்வு நிலை பெற்றவர், முடிவான
மெய்ம்மை நிலையைக் கண்டவர், தெளிவு பெற்று விட்டவர், கடவுளுடன் ஒன்றியவர், தன்னுணர்வு பெற்றவர் என்றவா றெல்லாம் கூறி, கேட்போரையும் படிப்போரையும் நம்ப வைக்க முடிகிறது. அவருக்கு எண்ணற்ற பத்தர்களும் மாணவர்களும் கூட வந்து சேருகின்றனர்.

     அளப்பரிய திறமை அறிவு பெற்றவர்கள், அறிவு திறம்பிய நிலையில் பெரும்பாலும் மத நிறுவனர்களாகவும் பரப்புநர் களாகவும் ஆகின்றனர்.

     மயக்க மருந்துகளைப் போன்றே ஊழ்கத்தையும் சட்டத்திற்குப் புறம்பானதாக அறிவித்துத் தடைசெய்ய வேண்டும். ஏனென்றால், மயக்க மருந்துகளும் ஊழ்கமும் மாந்த மனத்தை ஒரே வகையாகவே தாக்குகின்றன.

     பேரா.எவாசி ஊழ்கத்திலுள்ளவரின் உடலிலிருந்து ஒளிச்சுடர்
வெளிப்படுகின்றதெனவும் அதை மற்றவர்கள் காணாவிட்டாலும் ஊழ்கத்திலுள்ளவரே மனத்தால் உணர முடிகின்றதெனவும் கூறுகின்றார். மேலும் சொல்லும்போது, "எதையும் நம்பாத சில படித்த பகுத்தறிவாளர்கள், இவர்களின்(ஊழ்கிகளின்) உடலிலிருது ஒளிச்சுடர் வெளிப் படுவதைப் பார்க்காததால், 'இவர்கள் பகுத்தறிவாளர்கள் அல்ல' என்று கூறிச் செல்வார்கள்" என்கிறார்.
எவ்வளவு மடத்தனமான கூற்று இது!

     அகச் சிவப்புக் கதிர்களையும், புற செந்நீலக் கதிர்களையும், அணுவையும், மூலக்கூறுகளையும், உயிரகத்தையும், நீரகத்தையும் தம் கண்களால் பார்க்க முடியாதென்றாலும், அவை இருப்பதை பகுத்தறிவாளர்கள் மறுப்பதில்லை. ஏனென்றால் அப்பொருள்கள் இருப்பதை அறிவியலால் மெய்ப்பிக்க முடியும் என்பதை
அவர்கள் அறிவர்.

     'தூய்மைப் பாதையில் ஐந்தாம் நிலையை அடைந்த' ஒருவரிடமிருந்து ஒளிச்சுடர் வெளிப்பட்டுப் பரவுகின்றதெனக் கூறுவது எவ்வளவு நகைப்பிற் கிடமானது? மயக்க
மில்லாதவர்கள் அவ்வாறு எதையும் காணாத போது, ஊழ்கிகள் கொடுமையான மூளைக் கோளாறு உடையவர்கள் எனபதற்குச் சான்றாக இவ்வாறு கூறுகின்றனர்.

     இது, மனநல மருத்துவ மனையிலுள்ள ஒரு நோயாளி, உயர்ந்த கல்வித்தகுதி உடையவர் என்பதற்காக அவர் சொல்வதை உண்மை என ஏற்பதும், அத்தகைய கல்வித்தகுதி பெறாதவர் என்பதற்காக அவரைக் கவனித்துக் கொள்ளும் செவிலிப் பணியாளர் சொல்வதைப் புறக்கணிப்பதும் எத்தகைய இகழ்ச்சிக் குரியதோ அதைப் போன்றதே ஆகும்.

     ஊழ்கத்திலுள்ளோரின் உடலிலிருந்து ஒளி வெளிப்படுகின தென்பதற்குக் கூடுதல் சான்றாக, பேரா.எவாசி,  இரண்டு அமெரிக்கப் பெண்கள் எழுதிய "இரும்புத் திரைக்குப் பின்னால் இயல்பிகந்த ஆற்றல் கண்டுபிடிப்புகள்" என்ற நூலில் எழுதப் பட்டுள்ள வற்றையும் படங்களையும் தம் வாசகர்களுக்குத் தருகிறார்.

     அதே புத்தகத்தில், இலைகள் மொட்டுகளின் படங்களைச் சுற்றிலும் அதே மாதிரியான ஒளிவட்டம் காணப் படுவதை அப்பேராசிரியர் காணத் தவறியது வியப்பிற் குரியதாகும்.
புதல்களும் (தாவரங்க்ளும்) கூட 'தூய்மைப் பாதையின் ஐந்தாம் நிலையை அடைய' ஊழ்கம் செய்கின்றனவா? அதனால்தான் இலைகளிலும் மொட்டுகளிலும் ஒளிச்சுடர் வெளிப்படுகின்றதா?

     அறிவியலர், உயிருள்ள விலங்குகள் புதல்களின் நார்மத்தினுடைய அகச்சிவப்பு நிழற்படங்களைச் சுற்றிலும் உள்ள ஒளி வட்டத்தில் எந்த புரியாப் புதிரையும் காணவில்லை. அத்தகைய ஒளி வட்டங்கள் வெதண வேறுபாடுகளால் ஏற்படுகின்றனவே
அன்றி ஒளி வெளிப்பாட்டினால் அன்று.

     தொலைவிலுணர்தலை (telepathy) உறுதிப்படுத்தும் பேரா.எவாசி, "தொலைவிலுணர்தலின் மூலமாகச் சொற்கள் ஒரு மனத்திலிருந்து  நானூறு கற்கள் இடைவெளியிலுள்ள இன்னொரு மனத்திற்குச் செலுத்தப் படுகின்றன" என்று கூறுகின்றார்.
விண்வெளியில் பறந்து செல்லும் போதும், நீர்மூழ்கிக் கப்பலில் செல்லும் போதும் முகன்மையான செய்திகளைத் தெரிவிக்க தொலைவி லுணர்தல் கலையைப் பயன்படுத்திக் கொள்ள இயலும் என்றும் அவர் கூறுகிறார்.

     தொலைவி லுணர்தல் கலையை ஊழ்கத்தின் வழி வளர்த் தெடுக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். தொலைவி லுணர்தலை எவரும் ஆய்வு செய்து மெய்ப்பித்துக் கொள்ளலாம் என்றால்,
புத்தகங்களிலும் செய்தித் தாள்களிலும் வரும் ஐயத்திற்குரிய செய்தித் துணுக்குகளை ஏன் நம்பவேண்டும்? சார்ந்திருக்க வேண்டும்?

     தொலைவி லுணர்தல், இயல்பு கடந்த நுண்ணோக் காற்றல் ஆகியவற்றிற்கு உரிமை கோருபவர்களைத் தேர்வாய்வு செய்த்தில், இதுவரையிலும் எனக்கு எதிர்மறையான முடிவுகளே கிடைத்திருக்கின்றன. விண்வெளியிலோ நீர்மூழ்கிக் கப்பலிலோ அல்ல, பக்கத்து அறையில் உள்ள ஒருவரின் உள்ளத்தை அறிந்து கொள்ளக் கூடிய ஒருவரை உலகத்தின் எந்த மூலையிலேனும், இரும்புத் திரைக்குப் பின்னால் இருப்பவரா யிருந்தாலும் சரி, பேரா.எவாசி காட்ட முடியுமா?
    
     முதன்முதலில்,  இயல்பு கடந்த உளத்தியல் (para psychology) புகழ் பேரா. செ.பி.இரைன் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்ற, வட கரோலினாவி லுள்ள தியூக் பல்கலைக் கழகத்தி லிருந்து 1200 கற்களுக்கு அப்பால், கடலில் 100 அடி ஆழத்தில் இருந்த 'நாட்டிலசு' என்னும் நீர்மூழ்கிக் கப்ப்லுக்குத்
தொலைவி லுணர்தலின் மூலம் செய்திகளை அனுப்பிய, வெற்றி மிக்க ஆய்வுக்கதை 1959இல் வெளியிடப் பட்டது.

     அந்நிகழ்ச்சி 1963வரை உலகெங்கிலும் பல செய்தித் தாள்களில் தொடர்ந்து வெளியிடப் பட்டது. 'இந்தக் கிழமை' (this week) என்ற அமெரிக்க இதழ், இது குறித்துத் தனிமுறையில் சிறிது அலசி ஆராயும் வரையில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது.
அவ்விதழின் ஆசிரியரிடம், 'நாட்டிலசு' கப்பலின் தலைவர் ஆர். ஆன்டர்சன் கீழ் உள்ளவாறு கூறினார்:
     "நாட்டிலசு, பாரிய பலவகைச் செயற் பாடுகளில்  ஈடுபட்ட தென்றாலும், தொலைவிலுணர்தலில் அது ஈடுபடவில்லை என்பதுறுதி. தொலைவி லுணர்தல் ஆய்வு பற்றித்
திருவாளர்கள் போவல்சு, பெர்கியர் அளித்துள்ள அறிக்கை முற்றிலும் பொய்யாகும். அந்தக் குறிப்பிட்ட காலத்தில் நாட்டிலசு 'போர்ட்சுமவுத்து' துறைமுகத்தில் கரையேறி முதல் செப்பனீடாய்வின் (overhaul) கீழ் இருந்தது."

     அமெரிக்க வான்படையின் படைமுதல்வர் வில்லியம் போவர்சு,  இந் நீர்மூழ்கி தொலைவி லுணர்தலில் பங்கு பெற்றதாகக் கூறப்பட்டதைப் பற்றிக் கீழுள்ளவாறு அறிவித்தார்:
     "நான் பங்கு கொண்டதாகக் கூறப்பட்ட அந்த ஆய்வு ஒருபோதும் நடைபெற வில்லை. வெசுடிங்கவுசு ஆய்வகத்தில் நடைபெற்றதாகக் கூறப் பட்டுள்ள தொலைவி லுணர்தல்
ஆய்வின் முடிவுகளைச் சரிபார்க்கும் நுண்ணாய்வுப் பணி ஏதும் எனக்குத் தரப்பட வில்லை. உண்மையில், 1959 சூலை 25இல் அலபாமாவில் உள்ள வான் பல்கலைக் கழகத்தில் எனக்குப் பணி அளிக்கப் பட்டிருந்தது. அப்பணி எவ்வகையிலும் மிகை உணர்வு நுண்ணாய்வுகளுடன் தொடர்பு உடையதன்று."

     சுருங்கச் சொன்னால் 'இந்தக் கிழமை'  இதழ் போற்றத்தக்க வகையில், இந்த நீர்மூழ்கி தொலைவி லுணர்தல் கதை ஒரு பெரிய ஏமாற்று என்பதைத் தெளிவாக்கி விட்டது.

     பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் கற்பனைக் கதை எழுதுவாரைப் போல எழுதாமல், உண்மையான வற்றையே எழுத முயற்சி செய்ய வேண்டும்.


புதன், 21 ஜனவரி, 2009

மானங் கெட்டவர்கள்! ஏமாற்றுக்காரர்கள்!



(அ)  நடுவண் அரசில் அமைச்சர் இருக்கையை உடும்புப் பிடியாய்ப் பற்றிக் கொண்டு, ஈழத்தமிழரைக் காக்க நடுவணரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றுக் குரலெழுப்பிக் கூப்பாடு போட்டு நீலிக் கண்ணீர் வடித்து நடித்துக் கொண்டு இருப்பவர்கள்! 

(ஆ)  திருவாட்டி இந்திரா காந்தியைக் கொன்றவரின் இனத்தைச் சார்ந்தவரே இந்தியாவின் தலைமை அமைச்சராக இருக்கிறார். அண்ணல் காந்தியைக் கொன்றவர் சார்ந்த இயக்கத்தின் வழி வந்தோர் இந்தியநாட்டை ஆட்சி செய்தனர் மீண்டும் ஆள அங்காந்து இருக்கின்றனர். இவற்றை எல்லாம் மிக வசதியாகக் கண்டு கொள்ளாமல், -
 இராசிவ்காந்தி இறப்பைப் பற்றியே பேசி, ஈழத்தமிழினமே அழித் தொழிக்கப்படத் துணை போகும் நயன்மையும் மாந்த நேயமும் அறவே அற்றவர்கள்! 

(இ)  ஈழத்தமிழர் அம்மண்ணின் மைந்தர் என்பதையும், ஈழ மண்ணை வழிவழி ஆண்ட தொல்பழங்குடியினர் என்பதையும் ஏற்க மறுத்து -
அமண்ணில் நடைபெற்றுவரும் ஒடுக்குமுறையை எதிர்க்கும் போராட்ட வரலாற்றையும் அங்கு நிலவும் கள நிலைமைகளையும் அம்மக்களின் கவலைகளையும் அவர்கள் விரும்பும் தீர்வுகளையும் பற்றிக் கொஞ்சமும் கண்டுகொள்ளாதவர்கள்.
     இலங்கையின் இறையாண்மைக்காகச் சிங்களரையும் விட அதிகமாக அக்கறை கொண்டு, அல்லற்பட்டு ஆற்றாது அனைத்தையும் இழந்தும் போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழரிடம் ஆராய்ந்து பாராமல் வலிந்து இலங்கை இறையாண்மையைத் திணிக்கும் -
பார்ப்பனியப் பொதுவடைமையர் மற்றும் அவர்பின்னே கண்மறைப்புக் கட்டப் பட்டவர்களாக நடுவுநிலைச் சிந்திப்பே அற்றுச் சென்று கொ்ண்டிருப்போர்!

(ஈ)  ஈழத்தமிழர் போரில் அழிவதே சரி என்று கூறும் பார்ப்பனியத் தலைமை மற்றும் அத் தலைமையின் காலடியில் தன்மான உணர்வே அற்று வீழ்ந்து கிடக்கும் தமிழ இழிவுப் பிறவிகள்!

(உ)  சிங்களன் வீசி எறியும் பணத்திற்கும் பட்டங்களுக்குமாக அங்காந்து திரிந்து தமிழர் நலன்களுக்கு எதிராக எழுதுவதையும் பேசுவதையுமே தொழிலாகக் கொண்டுள்ள செய்தித்தாள்கள், தொலைக்காட்சி இணைய ஊடகங்கள்!

தமிழர்கள் விழிப்புக் கொள்க!

திங்கள், 12 ஜனவரி, 2009

கொடுமையிதே! அறக்கொலையே!

(எண்சீர் மண்டிலம்: காய் - காய் - மா - தேமா)


இகழ்சேர்க்கும் எனஅஞ்சீர்! அறமுங் கொல்வீர்!
     இந்தியத்தை ஆளுகின்ற அரசே! இங்கே
புகலருங்கே டினத்திற்கே புரிந்தும் கண்ணைப்
     பொத்திக்கொண் டறியார்போல் நடித்துக் கொண்டு
அகலலிலா தந்திரத்தில் ஆளு கின்ற
     அருட்செல்வர் தலைமையுள அரசே! நீங்கள்
மிகக்கரவாய் தமிழினத்தின் அழிவிற் கென்றே
     மேன்மேலும் இரண்டகங்கள் செய்கின் றீரே!

தினைத்துணையும் அறவுணர்வே அற்றுப் போனீர்!
     தெரிந்திருந்தும் சிங்களர்க்கே உதவி செய்வீர்!
அனைத்துவகை ஆய்தங்கள் அள்ளித் தந்தீர்!
     அரியஉள வுந்தொகையும் அவர்க்கே ஈவீர்!
முனைத்தெழுந்து பாக்கித்தான் சீனத் தோடு
     மும்முரமாய்ப் படைநடத்தத் துணையும் செய்வீர்!
எனைத்தென்ற அளவின்றி உதவு கின்றீர்!
     இனக்கொலையில் எந்தமிழர் அழிந்து போக!

தூசாகக் கருதுகின்றீர் தமிழர் தம்மை!
     துளிக்கூட எம்முணர்வை மதிக்க வில்லை!
காசாவைத் தாக்குவதைக் கண்டிக் கின்றீர்!
     கனிவுடனே ஆப்கான்மற் றெவர்க்கும் உங்கள்
ஊசலிலாத் துணைதரவு உண்டே! ஆனால்
     உரிமைமறுத் தினமழிக்கும் சிங்க ளர்க்கும்
கூசாமல் உதவுகின்றீர்! கொள்கை அற்றீர்!
     கொடுமையிதே! அறக்கொலையே! கொதித்துச் சொன்னேன்!

புதன், 26 நவம்பர், 2008

அண்ணாவின் பெருமை!

       
பெருமையெனல் உயர்ச்சிசிறப் பெனஒருவர் குணநலன்கள்
பெரிதாய்ப் போற்றும்
ஒருதகைமை! செயற்கரிய உண்மையிலே செய்ததினால்
உற்ற பேறே!
எருவெனவே உயிருடம்பை இத்தமிழ மண்ணுக்கே
ஈந்த பெம்மான்
திருமைமிகு அண்ணாவின் பெருமையினைச் சிறிதிங்கே
தெரிந்து கொள்வோம்!



அறிஞருளும் அறிஞரவர் அரசியல்சீர் கற்றறிந்தார்
அவரின் பேச்சைப்
பொறிமடுத்தார் வயப்படுவர்; புரிந்தபிறர் வேட்டிருப்பர்;
புரியார் தம்மை
நெறிப்படுத்தும் குமுகாய நிலைதிருத்தும் பெரும்பணியர்
நெஞ்சக் கூட்டில்
வெறியன்பால் தமிழ்மக்கள் விருப்பத்தோ டடைத்துவைத்த
வெல்லுஞ் சொல்லார்!



உலகினிலே முதன்முதலாய் உயர்ந்திருந்த ஓரினத்தை
ஒப்பே இல்லா
இலகுதமிழ் முதன்மொழியை ஏய்ப்பினிலே வீழ்த்திய
ரியத்தின் மாயை
துலக்கமுற விளக்கியவர் தோல்வியிலா எழுத்தாற்றல்
துணையி னாலே
இலங்குகதை கட்டுரைகள் ஏற்றமிகு மேடைதிரை
எல்லாம் வென்றார்!



பொருநரென மேடையிலும் புத்தெழுத்து நடையினிலும்
பொலிவு சேர
அருந்தமிழ்க்கு அணிசேர்த்தார்! அயற்சொற்கள் தவிர்த்தெழுத
ஆவல் கொண்டார்!
இருந்தமிழ்க்கு மறுமலர்ச்சி இவராலே வந்ததெனில்,
இதுவே உண்மை!
பெருஞ்சிறப்பில் செந்தமிழ்க்கே பீடுறவே எடுத்தாரோர்
பெருமா நாடே!



எழுத்தாளர் கல்கிமகிழ்ந் திவர்அறிஞர், தென்னாட்டின்
பெர்னாட் சாஎன்(று)
அழுத்தமுறப் புகழ்ந்துரைத்தார்! ஆங்கிலத்தில் அண்ணாவின்
ஆற்றல் பேச்சு
இழுத்ததந்த வாச்பேயி நேருவுட னெல்லாரின்
இனிய சிந்தை!
வழுத்திதமிழ் மக்களெல்லாம் வாய்மகிழ அண்ணனென
வழங்கி னாரே!



இருபத்து மூன்றுதிங்கள் இவர்முதல்வ ராயிருந்தார்
இதற்குள் ளேயே
இருமொழியே போதுமென இந்திமறுத் தோர்சட்டம்
இயற்றித் தந்தார்!
பெருமகிழ்வில் தமிழ்நாடாய்ப் பெயர்மாற்றம் செய்திட்டார்!
பின்தன் மானத்
திருமணங்கள் செல்லுமெனுந் திருத்தத்தால் தமிழ்மானம்
திரும்ப மீட்டார்!



இனக்கொலைகள் அன்றைக்கும் ஈழத்தில் ஐம்பத்தோ(டு)
இரண்டாண் டின்முன்
கனக்குமனத் தோடண்ணா கனிவற்ற தில்லியினைக்
கடிந்து ரைத்தார்!
மனக்குமுற லோ(டு)ஐநா மன்றிற்கும் எழுதிநிலை
மாற்றக் கேட்டார்!
இனக்காவல் மறவனவர் இருந்திருந்தால் இன்றிருக்கும்
ஈழ நாடே!



அண்ணாவின் உரோம்செலவில் ஆற்றலுடை ஒருமறவர்
அடைப்பின் நீக்க
பண்ணவராம் போப்பவரும் அண்ணாவின் வேண்டுகைக்குப்
பரிந்தி சைந்தே
திண்ணமிகு இரானடேயை விடுவிக்கச் சிறைக்கதவும்
திறந்த தன்று!
எண்ணமெலாம் நன்னேயம் இயக்கமெலாம் நன்னெறியன்(று)
இலங்கி னாரே!



பெரிதுபெரி தண்ணாவின் பெரும்பெருமை முடிந்திடுமோ
பேசு தற்கே!
அரியதமிழ் மீட்பிற்கு அண்ணாவே முன்னணியர்
அறியார் யாரே!
விரிந்ததவர் சிந்தனைகள் தளையறுத்துத் தமிழருயர்
விடிவைத் தேடி!
அரிதவரின் பெருமைசொலல் அவரவரும் தம்முணர்வால்
அறிந்து கொள்வீர்!

 -------------------------------------------------------------
        

   
   

முனைவர் கோவூர் பகுத்தறிவூட்டிய இலங்கையில் மூடநம்பிக்கை ஆட்சியாளர்கள்!

 
            உலகப்புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மாந்தநேய மன மருத்துவருமாகிய முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர் இந்தியாவிலுள்ள கேரளமாநிலத்தில் 1898இல் பிறந்தவர். கேரளாவில் பள்ளிப்படிப்பை முடித்தபின், கல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்தார். அதன்பின் கோட்டயம் கல்லூரியில் இரண்டாண்டுகள் உதவி விரிவுரையாளராகப் பணிபுரிந்தபின், 1928இல் அருள்திரு பி.டி. கேசு அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்குச்சென்றார். 
           
     1928இல் யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். 1943இல் இக் கல்லூரியினின்றும் விலகி கல்லியிலுள்ள இரிச்மான்டு கல்லூரியிலும் பின்னர் மவுண்டு வினியாவிலுள்ள தூய தாமசு கல்லூரியிலும் பணியாற்றினார். அதன்புறகு, கொழும்பு தர்சுட்டன் கல்லூரியில் அறிவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி 1959இல் பணி நிறைவு செய்தார். 
    
     கல்லூரிப் பணி முடித்த பின்னர்,  ஆவிகள் ஆதன்களின் தொடர்பான விந்தை நிகழ்வுகள் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்டு எழுதியும் பேசியும் வெளிப்படுத்தித் தெளிவுறுத்தி வந்தார். எஞ்சிய வாழ்நாள் மழுவதும், பகுத்தறிவூட்டும் பணிகளிலும் மாந்தநேய மன மருத்துவப்பணிகளிலும் ஈடுபட்டார்.
    
     இயல்பிகந்த(வியக்கத்தக்க) ஆற்றல் உடையவராகக் கூறிக் கொள்பவர்கள் ஏமாற்றுக் காரர்களாகவோ மன நோயர்களாகவோ இருப்பர் எனபதை, அறியாமையில் உழலும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கோவூர் விரும்பினார்.
     
     அதற்காகவே, இயற்கையிகந்த வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலக்க உருவா பரிசளிக்க அவர் அணியமாய் இருக்கிறார் என்ற அறிவிப்பை வெல்விளி(challenge) யாகக் கூறினார்.  தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். 
     
     ஏறத்தாழ 50ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து மூடநம்பிக்கையை ஒழிக்கப் பாடுபட்டார்.  இறுதியில்,  1978 செப்டம்பர் 18ஆம் நாள் தம் 80ஆவது அகவையில், கொழும்பில் காலமானார்.
     
     முனைவர் கோவூர், மக்களுக்குத் தெளிவூட்டி, மூடநம்பிக்கைகளை எதிர்த்து நின்று, இலங்கை மண்ணில் இருந்து அயராது போரிட்டார். அந்த "இலங்கையை இன்று ஆளுகின்றவரும் இதற்குமுன்பு ஆட்சி செய்தவரும் போட்டி போட்டுக் கொண்டு இன்று பகுத்தறிவு சார்ந்த ஈனாயான புத்த மதத்தைப் புறக்கணித்து விட்டு, கணியர்களிடம் கருத்தறிந்து நடப்பதை இயல்பான வழக்க மாக்கிக் கொண்டிருக் கிறார்கள்.
       
     மலையாளத் தந்திரிகளான கணியர்களிடம் நம்பிக்கை தரும் சொற்களைக் கேட்டுப் பகற்கனா காண்பதையும், கழுவாய் தேட கோயில்களுக்கும் கடவுளராகக் கூறப்படுவாரின் இருப்பிடங்களுக்கும் துய்தச்செலவு மேற்கொள்வதையும் இவர்கள் இப்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் எம்.கே.நாராயணனையும் சந்திப்பதைப் போலவே இதையும் இவர்கள் செய்து வருகிறார்கள். தமிழர்களுக்கு எதிரானப் போரில் வெற்றி அடைவதற்கான எந்த ஒரு வழியையும் விட்டுவைக்கவில்லை"-என்று கருத்துரை (Opinion) இதழின் எழுத்தாளர் அம்பலம் எழுதுகிறார். 
     
     இந்த வகையில்,  இப்போது,  இலங்கை அரசுத் தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது.  இரனில் விக்கிரமசிங்கே கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலின் நெடுநாளைய ஆர்வம் மிகுந்த பத்தராம்!அரசுத் தலைவர் தேர்தலில் இரனிலை எதிர்த்து வெற்றி பெற்ற பின், மகிந்தா இராசபக்சே 2006 சனவரியில் குருவாயூர் வந்து நெய்யளித்துத் 'துலாபாரம்' சடங்கு நடத்துவதை ஒரு நேர்த்திக்கடனாகவே செய்தார்.

      அண்மையில் இந்தியாவந்த இரனில்,  தில்லியில் அரசியற் காரர்களையும் அதிகாரிகளையும் பார்த்துப் பேசிய பிறகு, காரி(சனி)யி்னால் (!) ஏற்படும் இடர்களிலிருந்து விடுபடத் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில் தொலைவிலுள்ள இடமான திருக்கோலிக்காட்டில் உள்ள கோயிலுக்கு துய்தச்செலவு மேற்கொண்டார்.
� � g a ` �3 :p> 
                          
கவனிக்கப்படாதிருந்த அந்தக் கோயிலும், அதிலுள்ள காரி(சனிபகவான்) திருமுன்னும் புதியதாக தொன்ம(புராண) காரணங்கள் கண்டுகாட்டிப் பலரும் அறியுமாறு செய்யப்பட்டிருந்தன. யாரோ கணியம் பார்ப்பவரின் (சோசியர்) அறிவுறுத்தலின் பேரில் இரனில் இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். இரனிலின் வருகை தமிழ்நாட்டுக் காவல், உளவுத்துறையினரால் மிகக் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தபோதிலும், ஊர் மக்களுக்கு எப்படியோ செய்தி தெரிந்து, அவர்கள் ஏழு இடங்களில் அவரை வழிமறித்துக் கொந்தளிப்பான கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
  
            
            கொரடாச்சேரி என்னுமிடத்தில் வண்டி மாடுகளைச் சாலையின் குறுக்கே நிறுத்திக் கிளர்ச்சி செய்தார்கள். இரனில் கோயிலை அடைந்த போது, அவர் ஐந்நூறுபேர் கொண்ட கும்பலை நேர்கொள்ள வேண்டியிருந்தது; அவர்களில் பெண்கள் பேரெண்ணிக்கையினராய் இருந்தனர். கும்பலைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் போதவில்லை.
           
     கோயிலிலிருந்து திரும்புகையில், தமிழர்கள் உரிமைபெற உதவுவதாகக் கூறிக்கொண்டே பதற்றத்துடன் தப்பிச்செல்ல வேண்டியதாயிற்று.

            அரசியல்காரர்களை எல்லாநேரங்களிலும் ஏமாளிகள் ஆக்குவது கணியர்கள் மட்டுமே, அல்லர். மக்கள் ஏமாளிகளாக இருப்பதால்,  உளவுத் துறையினரும் கொளகையற்ற அரசியல் காரரரும் கணியர்களைப் பயன்படுத்தித் தம்முடைய அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, கணியத்தின் வழி உளத்தியல் தாக்கம் உண்டாக்கு கின்றனர். 

            தேர்தல் நேரங்களில் எழுதப்படும் கணியப் பலன்கள் அரசியல் நோக்கம் உடையவையே.

                                                            ------------------
நன்றியுரைப்பு:
Tamilnet.com  இணைய தளத்திற்கு!
      
  
****************************************************************
 **