வியாழன், 23 அக்டோபர், 2008

தீராப்பழி ஏற்கத் துணிவதோ?


(10-03-2008-இல் எழுதிய இப்பதிவு, தேவை கருதி மிண்டும் இடப்படுகின்றது.) 

இலங்கையில் இப்போது கொடுமையான போர் நடந்து கொண்டிருக்கின்றது இலங்கை அரசின் முப்படைகளும் குழந்தைகள்முதியோர்பொதுமக்கள்போராளிகள் என்று எந்த வேறுபாடுமின்றி ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. ஒரு நாட்டின் அரசே தன் குடிமக்களைக் கண்டமேனிக்குக் குண்டுகள் வீசிக் கொன்று குவிக்கின்றஉலகில் வேறெங்கும் காண முடியாத கொடுமைஅங்கு நடந்து கொண்டிருக்கின்றது.
நார்வேஅமெரிக்காசப்பான் ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் நடுவர்களாக இருந்து உருவாக்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்புடைய யாருக்கும் தெரிவிக்காமல் இலங்கை அரசு தன்விருப்பமாகவும் தடாலடியாகவும் திடீரென முறித்துக் கொண்டதுஇந்நிலையை உலக நாடுகள் ஏற்கவில்லை என்றாலும் எந்த நாடும் இதுவரை இலங்கை அரசைத் தட்டிக்கேட்க முன்வரவில்லை.
கடல்கொண்ட குமரிக்கண்டத்தின் எஞ்சிய நிலப்பகுதியாக இலங்கையை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் அந்நாட்டின் ஆதிக்குடிகள்ஈழத்தின் மண்ணின் மைந்தர்கள்இலங்கையின் வடக்குகிழக்கு முதலிய பகுதிகளில் கி.பி.1832 வரைத் தம்மைத்தாமே ஆட்சி செய்து கொண்டு வாழ்ந்த மக்களின் பிறங்கடைகள்இவ்வுண்மையைத் தமிழகத் தமிழர்களில் பெரும்பாலரும் தெரிந்திருக்கவில்லை. இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ளவர்களில் இவ்வுணமையைத் தெரிந்தோர் மிகமிகக் குறைவானவரே!
இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லாருமே தமிழகத்திலிருந்து சென்றவர்கள் என்றே பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். கி.மு.150-இல் வரையப்பட்ட இலங்கையின் நாட்டுப்படத்தில் வடக்குகிழக்குவடமேற்குப்பகுதிகளும்தெற்கில் சில பகுதிகளும் தமிழ்மன்னர் ஆட்சிப் பகுதிகள் எனத் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளனகி.மு.543இல் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்று சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று அவர்களின் 'மகாவம்சம்என்ற சிங்கள நூல் குறிப்பிடுகிறதுவேறு சான்றுகளையும் ஆய்வாளர்கள் தருகின்றனர்.
சிறுபாணாற்றுப்படை(117-20),  புறநானூறு (176:6-7), பட்டினப்பாலை (191) போன்ற கழக (சங்கஇலக்கியங்கள்  பதியெழ லறியாப் பழங்குடியான தமிழ்க்குடியே இலங்கையின் சொந்தக்குடி என்பதற்குச் சான்று சொல்கின்றன அகநானூறு (88, 231, 307) குறுந்தொகையில் (189, 343, 360) மும்மூன்று பாடல்களும் நற்றிணையில் (366) ஒருபாடலும் எழுதிய ஈழத்துப் பூதன் தேவனார்தம் பாடல்களில் ஈழத் தமிழகத்தின் அகவாழ்வுச் சான்றுகளைக் காட்டியுள்ளார்.
1619இல் போர்த்துக்கீசியர் இலங்கையின் வடபகுதியையும், 1638இல் ஒல்லாந்தர் (டச்சுக்காரர்இலங்கையின் கிழக்குப் பகுதியையும், 1795இலும், 1815இலும் ஆங்கிலேயர் இலங்கையின் பல பகுதிகளையும் கைப்பற்றி ஆண்டனர்ஆங்கிலேயரே 1833இல் இலங்கை முழுவதையும ஓர் அரசின் கீழ் இணைத்தனர். இலங்கையை ஆங்கிலேயர் ஆண்டபோதுதமிழகப் பகுதிகளும் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தனதஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேயரே இலங்கைக்கும் ஆட்சியராக இருந்தார்.
ஏறத்தாழ ஐந்து ஆறு தலைமுறைகளுக்கு முன்னர்ஆசைகாட்டி ஆங்கிலேயரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மதுரை, முகவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களாவர்அவர்களே இந்தியாவினின்றும் இலங்கைக்குச் சென்ற குடிகள்.
ஆங்கிலேயர் ஆட்சியினின்றும் இலங்கை 04-02-1948இல் விடுதலை அடைந்ததுவிடுதலை பெற்ற கையோடு சிங்கள ஆட்சியாளர் இலங்கையின் தோட்டத் தொழிலாளர் பத்து இலக்கம் பேரின் குடியுரிமைஒப்போலை உரிமையைப் பறித்தனர்.(இலங்கையின் தோட்டத் தொழிலாளர் பட்ட துன்ப துயரங்களை 1980ஆம் ஆண்டில் தொலைக்காட்சி வழி பார்த்த இங்கிலாந்து மக்கள்இனிஇலங்கைத் தேயிலையை வாங்குவதில்லை என முடிவெடுத்து அறிவித்த செய்தி உலகம் முழுவதற்கும் இலங்கைத் தோட்டத் தொழிலாளரின் இரங்கத்தக்க நிலையை எடுத்துரைத்தது)
தமிழீழ மக்களால் "தந்தைஎனப் பெருமதிப்போடும் பேரன்போடும் அழைக்கப்பட்ட சட்ட அறிஞர் தலைவர் செல்வநாயகம் அவர்கள் பல்லாற்றானும் துன்புற் றுழலும் தமிழீழ மக்களின் இன்னலை நீக்கி வாழ்வுரிமையை உறுதிசெய்ய 1949இல் 'தமிழரசுக் கட்சி'யைத் தோற்றுவித்தார்பல அறப் போராட்டங்களைத் தமிழர்கள் அமைதியாக நடத்தினர்சிங்கள இனவெறி ஆட்சியாளர் அவற்றைப் பொருட்படுத்தவே யில்லை. 1956இல் தமிழுக்கு இடமளித்துச் சட்டம் வந்ததுஆனால்அச்சட்டம் கிடப்பில் போடப்பட்டதுஊர்திகளில் சிங்கள எழுத்து 'சிறீயைக் கட்டாயம் எழுத வேண்டுமென்ற ஆணையை எதிர்த்த தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
05-06-1956இல் இயற்றப்பட்ட இலங்கை அரசமைப்புச்சட்டம் தமிழரின் மொழி உரிமைசமய உரிமைகல்வி உரிமைகளைப் பறித்ததுகொந்தளிப்பான சூழலில்நிலைமை மோசமாகிவிடாமல் தடுக்கபண்டாரநாயகா 26-07-1957இல் தந்தை செல்வாவுடன் கலந்து பேசி ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்
ஆனால்அந்த ஒப்பந்தத்தின்படி சிங்கள அரசு நடந்து கொள்ளவில்லைபெரும் போராட்டங்களுக்குப் பிறகு, 1958இல் தமிழில் நுழைவுத் தேர்வுகளை எழுதலாம் என்றும் வடக்கு-கிழக்கு மாநிலங்களில் தமிழைப் பயன்படுத்தலாம் என்றும் ஒரு சட்டம் வந்ததுஆனால்,அதுவும் செயற்பாட்டுக்கு வரவில்லை
1965 தேர்தலில் சிங்களரின் பெரிய கட்சிகள் இரண்டிற்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. 14தொகுதிகளை வென்ற தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியின் துணைதரவைக் கேட்டுப் பெற்று ஆட்சிக் கட்டிலேறிய தட்லி சேனநாயகா  25-03-1965இல் தந்தை செல்வாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்ஆனால் அவரும் அவ்வொப்பந்தத்தை நிறைவேற்ற வில்லை.
தமிழர்களைப் புறக்கணித்து  22-05-1972இல் சிங்களர் கொண்டுவந்த அரசமைப்புச் சட்டமும் தமிழரின் மொழியுரிமை, மதவுரிமைகல்வியரிமைகளை மறுத்துசிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்றதுபுத்தமதம் அரசமதம் என்றதுதமிழின மாணவர் உயர்கல்வி தொழிற்கல்வியில் சேர, சிங்கள மாணவரைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டு மென்றதுகூட்டாட்சி அமைப்பை மறுத்துச் சிங்கள ஒற்றையாட்சியையே உறுதி செய்தது. இச் சட்டத்தை  25-05-1972இல் தமிழரசுக் கட்சியினர் செல்வாவின் தலைமையில் கூடித் தீயிட்டு எரித்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். பயனேதும் ஏற்படவில்லை.
இவ்வாறுஉரிமை பறிப்புகளும்ஒப்பந்த மீறல்களும், ஒடுக்குமுறைத் தாக்குதல்களும் தொலையாத் தொடர்கதையாகிப் போன பின்னர்தான்நிலையான தீர்வுக்குச் சிந்திக்கத் தொடங்கி, இலங்கை ஒற்றையாட்சியிலிருந்து தமிழர் தாயகம் தனியே பிரிந்து போக வேண்டும் எனத் தமிழீழத் தலைவர்கள் முடிவெடுத்தனர். இம்முடிவே  14-05-1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாகப் பின்னர் நிறைவேற்றப்பட்டது.
தந்தை செல்வா, 'தமிழர்களுக்கான விடுதலை பெற்ற நாடு வேண்டும்என்பது தமிழீழ மக்களின் தீர்மானமே என்பதை விளக்கமாக வெளிப்படுத்த விரும்பினார்அதற்காகவேதம்முடைய 'காங்கேசன் துறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினின்றும்  03-10-1972இல் விலகினார் பிறகு அத்தொகுதிக்கு 05-02-1975இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர்களின் தமிழீழப் பிரிவினைத் தீர்மானத்தை முன்வைத்துப் போட்டியிட்டார்மக்கள் அவரைப் பெருவெற்றிபெறச் செய்து தமிழீழ விடுதலையே தமக்கு விடிவு தரும் என்ற தங்களின் முடிவினைத் தெளிவாக அறிவித்தனர் நாடாளுமன்றம் சென்று தமிழீழ விடுதலை பெற்றே தீருவோமெனச் செல்வா முழங்கினார்.
இதற்கிடையே, 1974 சனவரியில் யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. 10-01-1974 பிற்பகலில் மாநாட்டின் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு இருக்கும்போது வந்த நாற்பது காவலர்கள்மாநாட்டில் கலந்து கொண்டோரைக் கலைந்து செல்லும்படி அறிவித்துக்கொண்டே, அங்குக் கூடியிருந்த ஐம்பதினாயிரம் தமிழ் மக்களையும் அல்லோலகல்லோலப் படுத்தினர்ஆண்பெண்களின் உடைகளை உருவி அலறியோட அடித்தனர்!  துமுக்கியாலும் சுட்டனர்! மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பலர் மின்தாக்குதலுக் குள்ளயினர்இக்கொடிய வன்தாக்குதலில் 11பேர் உயிரிழந்தனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று உயிருக்குப் போராடினர்!
உரிமை பறிப்புகளும் ஒப்பந்த மீறல்களும் உருவாக்கிய நம்பிக்கையின்மையாலும்,  1956, 1958, 1961, 1974ஆம் ஆண்டுகளில் இலங்கையில்  தொடர்ந்து நடந்த சிங்களக் கொலை வெறியாட்டத்தாலும்இனஅழிப்புத் தாக்குதல்களாலும் தமிழர்கள் செய்வதறியாது கலங்கி நின்றனர்
இந்நிலையில்யாழ்ப்பாணத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த கொடுங்கொடிய தாக்குதலில் குழந்தைகளும் பெண்களும் முதியோரு மடங்கிய தமிழ்மக்கள் பட்ட சொல்லொணா அல்லல் அவலங்கள் ஈழத்தமிழ் இளைஞரைச் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக எழுச்சி கொள்ளச்செய்தன. 05-05-1976இல் ஈழத்தமிழ் இளைஞர்கள் புதிய இயக்கத்தை உருவாக்கினர்.
காவற்படையும்போர்ப்படையும் கொண்டு சிங்கள அரசு தமிழினத்தை அடக்கி ஒடுக்கி அழிக்கும் போக்கு தொடர்ந்ததால் இலங்கையில் தமிழினம் வாழ்வுரிமையை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில்கொடுமைகளை எதிர்த்து நிற்கவும்தங்களைக் காத்துக் கொள்ளவும் ஆய்தம் தாங்கிய ஒரு படையை உருவாக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்கு ஈழத்தமிழர் தள்ளப்பட்டனர்
அவ்வாறு,படையை உருவாக்கிக் கருவியேந்திப் போராடித் தம் தாயகத்தை நிறுவிய நாடுகள் பல உள்ளனஅந்நாடுகள் அ.நா. அவையின் (U.N.O) அனைத்துலகச் சட்டங்களின்படி ஒத்தேற்கப் பட்டுள்ளன (U.N.O. Declaration 1970, Universal Declaration of Human Rights, Section 15) என்பது அறியத்தக்க செய்தியாகும்.
ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்கும் பெருமுயற்சிக்கே தம்வளங்களையும் வாழ்நாட்களையும் செலவிட்ட ஈகச்செம்மல் தந்தை செல்வா  27-04-1977இல் மறைவுற்றார்.  1977 ஆகத்து மாதத்தில் யாழ்ப்பாணத்திலும் திருக்கோணமலையிலும் சிங்களரால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதுபலர் கொல்லப்பட்டனர்.
1977ஆம் ஆண்டில் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியார் தலைமையில் நடந்ததுதமிழகத் தலைவர்கள் பலரும் அறிக்கை வழி கண்டனம் தெரிவித்தனர்சிங்கள அரசின் ஒடுக்குமுறை ஓயாது தொடர்ந்தது.
11-07-1979இல் செயவர்த்தனா நிறைவேற்றிய அச்சுறுத்த வன்முறைத் தடுப்புச் சட்டம் தமிழர்களைக் கொடுங்கொடிய முறையில் வேட்டையாடியது. 1981ஆம் ஆண்டில் தமிழர்க்கெதிராகத் தீயிட்டழிப்புகொள்ளைகொலைகற்பழிப்பு நடந்ததை நாடாளுமன்றில் அமைச்சரே ஒப்புக் கொண்டார்.
1983இல் சிங்கள அரசு மேற்கொண்ட அரச அச்சுறுத்த வன்முறைகளும்சிங்களக் காடையரின் கொள்ளை கொலைக் கொடுமைகளும், தமிழ்ப்பெண்கள் பலவகைக் கொடுமைகளுக் காளாக்கப்பட்டுச் சீரழிக்கப்பட்டமையும்சிறையிலிருந்த தமிழர்களைக் கொடுந் தாக்குதலால் படுகொலை செய்தமையும் தமிழ்நாட்டு மக்களைப்பேரெழுச்சி கொள்ளச் செய்தனஈழத் தமிழர்க்காகப் பரிந்து எழுந்த தமிழகத் தமிழர்களின் பேரெழுச்சிஇந்தியாவை அதிர்ந்து குலுங்க வைத்ததோடு அனைத்து உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது.
இலங்கையில் இன்றுவரை  70,000 தமிழர்களுக்குமேல் கொல்லப் பட்டிருக்கிறார்கள்ஏறத்தாழ ஏழு இலக்கம் பேர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து அல்லலுக் குள்ளாகி யுள்ளனர். உள்நாட்டில்  ஐந்து இலக்கம் பேர் இடம்பெயர்ந்து இன்னற் படுகின்றனர்.
இனவெறிச் சிங்கள அரசு இந்தியா பாக்கித்தான், இசுரேல், அமெரிக்கா முதலான நாடுகளிடமிருந்து ஆய்தங்களையும், வானூர்திகளையும்போர்ப் பயிற்சிகளையும்உளவு அறியும் உதவிகளையும் தடையின்றிப் பெற்றுத் தமிழர்களை ஒடுக்கி யும் அழித்தும் வருகிறதுசொந்த நாட்டு மக்களையேதமிழர்கள் என்ற காரணத்தால் முப்படைகளையும் கொண்டு  கண்டமேனிக்குக் குண்டு வீசிக் கொன்று குவிக்கின்றது.
குழந்தைகள்பள்ளிச்சிறார்,முதியோர் என்றும், கோயில், பள்ளிவாயில், திருச்சவை என்றும் எந்த வேறுபாடும் கருதாமல் குண்டுமழை பொழிந்து கொல்கின்றது. 22-02-2002இல் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை நார்வே முதலிய நாடுகளுக்கும் தெரிவிக்காமல் தன்விருப்பமாக முறித்துக் கொண்டு, இலங்கை மண்ணில் தமிழர்களே இல்லையெனும்படியான நிலையை உருவாக்கும் நோக்கில்கொடுமையாகக் கொலைவெறித் தாக்குதல் செய்து வருகிறது.
ஈழத்தமிழருக்கும் தமிழ்ஈழ விடுதலைக்கும் துணைநிற்கும் பேரெழுச்சியான நிலைமை  1983முதல் தமிழகத் தமிழரிடம் காணப்பட்டதுஆனால், 1991இல் நடந்த இராசீவ் காந்தி கொலைக்குப் பின்னர்அவ்வெழுச்சி குறைந்து போனதுஅதே போழ்தில், தமிழ் ஈழத்தைப் பற்றியும் ஈழப் போராளிகளைப் பற்றியும் பேசஎழுதவும் தயங்குகின்ற நிலை அடக்குமுறை அச்சுறுத்தலால் உருவாக்கப் பட்டதுஇன்னும்தமிழ்தமிழர் என்றாலே தடை, தளைப்படுத்தம், சிறைப்படுத்தம் என்ற நிலை ஏற்பட்டது. என்றாலும்துணிவும் உணர்வும் மிக்க சிலரால் இந்த இறுக்கமான நிலையில் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வேற்பட்டு வருகிறது.
இந்த மண்ணில்ஈழப் போராளிகளால் எவ்வகை வன்முறை நிகழ்வதையும் தமிழகத்தில் உள்ள எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்அதே போழ்தில்தமிழகத் தமிழரின் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்கள் அவர்கள் கண்முன்னேயே அல்லற் படுவதையும் அழிவதையும் எங்ஙனம் பொறுமையோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள்?
ஆகத்து 2002 முதல்-9 என்னும் பெயரிய யாழ்ப்பாண நெடுஞ்சாலையை மூடியதால்யாழ்ப்பாணத்திலுள்ள இலக்கக் கணக்கான தமிழ்மக்கள் இன்றியமையா உணவுப் பொருள்களான அரிசி முதலானவும்மருந்துதுணி முதலானவும் கிடைக்காமல் பட்டினியாலும் நோயாலும் சாகின்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தம் அரத்த உறவான யாழ்ப்பாண மக்களுக்கென அளித்த உணவுமருந்துப் பொருள்களைச் செங்குறுக்கைக் கழகத்தின் வழியாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்புதற்கும் இந்திய அரசு இசைவு தரவில்லைபலரும் பலவாறு வேண்டுகோள்கள் விடுத்தும் தமிழ்நாட்டரசும் கண்டுகொள்ளவில்லை!
இனஅழிப்பிற் காளாகி அழியும் ஈழத் தமிழர் நிலையில்இந்திய அரசிலும் தமிழ்நாட்டரசிலும் ஆட்சியாளர் மாறியதால் எவ்வகைப் புதிய விளைவும் ஏற்படவில்லைஇராசீவ் காந்தி கொலையுண்ட நிகழ்ச்சியுடன் 40 இலக்கம் ஈழத்தமிழரின் நிகழ்கால எதிர்கால வாழ்வை முடிச்சுப் போடக்கூடாது என்று  'தினமணி' (20-04-2002) ஆசிரியருரையும், 'தமிழ் ஓசை' (13-02-2008ஆசிரியருரையும் மற்றும் பல்வேறு  நடுநிலை அறிஞர்களின் கூற்றும் வலியுறுத்தியதை ஆட்சியாளர் கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை.
நடுவண் அரசிலும் தமிழ்நாட்டு அரசிலும் அமர்ந்துள்ள தமிழர்களாகிய அமைச்சர்களும்நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களும்தமிழ்மண்ணில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களாக வலம் வந்துகொண் டிருப்போரும்தமிழராக உள்ள ஒவ்வொருவரும் நெஞ்சில் கைவைத்து எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமிதுஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் தமிழினத்தின் போராட்டமாகும்.அப்போராட்டம் தக்க தீர்வினை எட்டாமல்எக்காரணங் கொண்டும் வீழ்ச்சி அடையக்கூடாதுஈழத்தமிழர் வீழ்ந்தால் அதுதமிழினத்தின் வீழ்ச்சியாகவே அமையும்!
இந்த இக்கட்டான சூழலைப் புரிந்து கொள்ளாமல் பொருள் சுரண்டும் அரசியலிலும்நாற்காலிக் கனவு நாட்டத்திலும், தன்னலவெறிப் போக்கிலுமே தமிழகத் தலைவர்கள் சென்று கொண்டிருப்பா ராயின்தீராப்பழி வந்து சேரும்! தமிழர் வரலாற்றில் இழிவு சேர்க்கும் பக்கங்களுக்குக் காரணமாகிப் போவோம்! எள்ளி நகைக்க இலக்காகிப் போவோம்!  இவ்வுண்மையை மறந்துவிடக் கூடாது!
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை ஓராயிரம் முறைக்கும் மேல் கடுந் தாக்குதல் நடத்தியிருக்கின்றதுதமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளையும்அவர்கள் பிடித்த மீன்களையும்படகுகளையும் கொள்ளையடித்துக் கொடுங் கூத்தாடி அவர்களைச் சுட்டுக் கொன்று வருகின்றது. 250க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சிங்களவெறித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்பல நூறு மீனவர்கள் படுகாயப் படுத்தப் பட்டுள்ளனர்.
பலமுறை தமிழ்நாட்டு மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே சிங்களக் கடற்படை யினரால் தாக்கப்பட்டு ள்ளனர்இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம் இந்தியக் கடற்படையும் கடலோரக் காவற்படையும் எங்கே போயிருந்தார்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியாதுஒரு முறையும் கூட இவர்கள் தமிழக மீனவர்களை சிங்களர் தாக்குதலினின்றும் தடுத்துக் காத்ததாகச் செய்தி வந்ததில்லைஓரிரு இலக்கம் உருவாக்களை இழந்த உயிர்களுக்கு இழப்பீடாகத் தந்துவிட்டுக் கடமையை முடித்துக் கொள்ளும் அரசாக தமிழ்நாட்டரசு இருந்துவருகிறது.
இந்நிலையில் இந்திய அரசுசிங்கள இனவெறி அரசுக்குக் கதுவீ (RADAR) உள்ளிட்ட உளவுக் கருவிகளும்ஆய்தங்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து கொடுத்து வருகின்றதுபூனாத் தேசியப் பாதுகாப்புக் கழகத்திலும் பிற இடங்களிலும் வழக்கமாகப் பிற நாட்டினர்க்கு விளக்கப்படாதவை பற்றியெல்லாம் இலங்கைப் படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு விளக்கிக் கூறிப் பயிற்சி தரப்படுகின்றதுஇந்தியப் படையின் உளவுப்பிரிவு அதிகாரிகள் குழு கொழும்பு சென்றுஅங்குப் போர்ப்படை உளவுப் பயிற்சிப் பள்ளி அமைப்பதற்கு ஆவன செய்து தருகின்றது (தமிழ் ஓசை-11-02-2008என்ற செய்தியும் வருகின்றது.
இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களின் குருதிவழிச் சொந்தங்களைக் கொன்றழிக்கவும் இன்னும் தமிழ்நாட்டு மீனவர்களையே தாக்கிக் கொல்லவும்இந்தியா இலங்கை அரசுக்குச் செய்யும் பல்வேறு உதவிகளும் சிங்களர்க்குப் பயன்படுகின்றன.  இவ்வகையில்தமிழர்களின் வரிப்பணமே தமிழர்களைத் தாக்கவும் அழிக்கவும் பயன்படுத்தப் படுகிறது எனில், மிகையன்று.
தமிழ்நாட்டரசு இவற்றைத் தக்கவாறு எதிர்த்துத் தடுக்க வேண்டுமல்லவா இந்தியஅரசை முறையாகச் செயற்படச் செய்து ஈழத்தமிழரையும் தமிழக மீனவரையும் காக்க வேண்டாவா? பதவிக்காகவோ வேறு அரசியல் பயன்களுக்காகவோஇந்திய அரசை வற்புறுத்தித் தமிழர்களைக் காத்திடும்படிச் செயற்படச் செய்யாமல்வாய்மூடி இருப்பதை விட இல்லாமற் போவதே மேலல்லவா!
இந்த அரசுகளை வற்புறுத்தி ஈழத் தமிழினத்தைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழினம் உள்ளதுதமிழிளைஞர்கள இம்முயற்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும்இக்கடமையில் தவறினால்ஈழத்தமிழர் நசுக்கி அழிக்கப்பட்டு விடுவார்கள். நெருக்கடியான இக்காலக் கட்டத்தில் விழிப்புற் றெழுந்து இதைக் கட்டாயம் செய்தாக வேண்டும். இல்லையேல்தீராப்பழி ஏற்று இழிவைச் சுமக்க வேண்டியவர்களாகிப் போவோம்!
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்என்று கூறும் புறநானூற்று வரிகள் வெறும் எழுத்துகள் அல்லவே!

-----------------------------------------------------------------------

                                                                                                                                                                                                                                      

ஞாயிறு, 19 அக்டோபர், 2008

வள்ளியா வந்தாள்?




 (ஆங்கிலமூலம்: ஆபிரகாம் தொ.கோவூர் ***  தமிழாக்கம் : தமிழநம்பி)  
            பத்தாண்டுகளுக்கு முன், அனுராதபுரத்திற்கு அருகிலுள்ள ஆலங்குளாமாவைச் சேர்ந்த பதின்பருவப் பெண்ணான சிவி, நோய்களைக் குணப்படுத்துவது, வருவதுரைப்பது ஆகிய 'தெய்விய' ஆற்றல்களைத் திடீரென்று பெற்றாள். 'வள்ளி' என்ற பெண்கடவுள், அவள் மூலமாக வியத்தகு நிகழ்ச்சிகளைச் செய்து வந்தது. 

           
சிவி-யின் புகழ் நாடெங்கிலும் பரவியது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் தோறும் சிவியின் தோட்டத்திலுள்ள சிறு கோவிலில், நெடுந் தொலைவி லிருந்தும் ஆண்களும் பெண்களும் கூட்டமாகச் சேரத் தொடங்கினர். இந்நாட்களில், இரவு முழுமையும் உடுக்கையொலி பாட்டுகளுடன் பூசைகள் நடந்தன. பூசையின் போது, சிவி மருள் வந்து - மெய்ம்மறந்த நிலைக் குள்ளாகி -நோய்களைக் குணப்படுத்துவதும், வருவது உரைப்பதுமான வியத்தகு நிகழ்ச்சிகளைச் செய்தாள். 

           
மருத்துவர்களால் குணமாக்க முடியாதவர்கள் என்று கைவிடப்பட்ட நோயாளிகளை அவர்களின் உறவினர்கள் சிவியிடம் அழைத்து வந்தனர். சிவி என்ன செய்தாள்? அவளுடைய 'தெய்விய'க் கைகளை அந் நோயாளிகளின் தலையில் வெறுமனே வைத்து அவர்கள் நெற்றியில் ஒரு 'துய்ய' நெய்யைத் தடவுவாள். இவை அனைத்தும் எளிய கையுறையான 'பதினான்கு வெற்றிலையில் மடித்து வைக்கப் பட்ட இரண்டு உருவா'வுக்குத்தான்! இச் சிறு காணிக்கையும் தர இயலாதார்க்கு இலவய மருத்துவம் அளிக்கப்பட்டது.

           
நோயைக் குணப்படுத்துகிறவள் என்பதைவிட, குறி சொல்கிறவள் என்றே சிவியை நாடெங்கிலும் தெரிந்திருந்தது. இப் புகழே, தொலைவான இடங்களிலிருந்தும் கூட்டத்தை அவள் வீட்டுக்கு அழைத்து வந்தது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிவியி்ன் கோயிலுக்குச் செல்லும் சந்துக்கு எதிரிலிருந்த தலைச்சாலையில் வரிசையாக மகிழுந்துகள் நிறுத்தப் பட்டிருக்கக் காணலாம். வரையறுக்கப் பட்ட கட்டணம் இரண்டு உருவாவாக இருந்த போதிலும், கொழும்பிலிருந்து வந்த பணக்காரப் புரவலர்கள் மிக அதிகம் செலுத்தினர். பலருக்கு, அத்தொகை கட்டணமாக இல்லாமல், பெண்கடவுள் வள்ளிக்குச் செலுத்தும் காணிக்கையாகவே பட்டது.

           
சிவியிடம் கணி கேட்ட பலர், அவர்களைக் கொள்ளை யடித்தவர்களைப் பற்றிய செய்தியைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் வந்தவர்கள். தாம் துணிந்து இறங்கிய புதிய முயற்சியின் வெற்றி தோல்வி பற்றி அறிய வந்தவர்கள் சிலர். தன் பத்தர்களின் கேள்விகளுக்கு விடையளிப்பதில் சிவி ஒருபோதும் தவறியதில்லை. சிவியின் தந்தை அவர்களின் காணிக்கையைத் தண்டுவதில் ஒருபோதும் தவறுவதில்லை!

           
சிவியிடம் கணி கேட்டவர்கள், அவள் வருவது உரைத்ததைப் பற்றியோ, அல்லது குணப் படுத்தியதைப் பற்றியோ குற்றங் குறை கூறி இரண்டாம் முறை ஒருபோதும் வந்தது இல்லை. மாற்றாக, அவர்கள் இன்னும் திறமையாகக் குறி சொல்லும் மற்றவர்களிடம் சென்றனர். 

           
தேர்தல் நேரங்களில், சிவியின் தோட்டம் எதிர்பார்க்கக் கூடிய அரசியல் வேட்பாளர்களின் கூட்டத்தால் நிரம்பியிருக்கும். வெற்றி வாய்ப்புள்ளவர்கள், இல்லாதவர்கள் ஆகிய இருநிலை வேட்பாளர்களும் வெற்றி பெறுதற்குச் சிவியின் வாழ்த்துக்களைப் பெற்றுச் சென்றனர்! தேர்தல்கள் முடிந்தபின், வெற்றிபெற்ற வேட்பாளர்கள், தம் 'தொண்டர்களு'டன் நன்றிக் காணிக்கைச் செலுத்தற்குச் சிவியிடம் மறுபடி வந்தனர். தோல்வியுற்றவர்களோ, அடுத்த தேர்தலுக்கு முன், இன்னும் நன்றாகக் குறி சொல்லுகிறவர்களை நாடிச் சென்றனர்.

           
சிவியின் தெய்விய ஊடகத்தொடர்பு, சிவியின் பெற்றோருக்குக் குருட்டடி நற்பேறாக அமைந்தது. பத்தாண்டுகளுக்கு முன், அவள் தெய்விய ஊடகமாக ஆன நாளிலிருந்து குடும்பத்தின் பொருளியல் நிலை மிகப்பெரிய அளவில் முன்னேறத் தொடங்கியது. பொருளியல் மூலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதும் கோயிலின் நிலையும் மேம்படத் தொடங்கியது. பல தலைகளையும் பல கைகால்களையு முடைய கடவுளர் படங்கள், மாந்த உடலும் விலங்கின் தலையுமுடைய சில படங்கள் எனப் பல்வேறு வகைப்பட்ட படங்கள் மேலும் மேலும் கோயிலின் சுவர்களை அணிசெய்யத் தொடங்கின.

           
இரவு முழுவதும் ஒளியூட்டுவதற்காக மங்களை (பித்தளை) விளக்குகளின் எண்ணிக்கை அதிகமாக்கப் பட்டது. வள்ளிக்காக ஒரு சிறப்பு இருக்கை கட்டியமைக்கப்பட்டது. பூசையின் போது சிவி அணிவத்ற்காக, பலநிற சிறப்பாடை ஒன்று உருவாக்கப் பட்டது. உடுக்கை அடிப்பவர்களும், பாடகர்களும் அதிகமாக வாடகைக்கு அமர்த்தப் பட்டனர். பூசையின் போது ஒலிப்பதற்காகக் கோன்மணியும் ஊது சங்குகளும் வாங்கப்பட்டன. 

           
சூடம் கொளுத்த ஒரு தனி பலிமேடை கட்டியமைக்கப்பட்டது. கோயிலின் முன்பாகச் சூறைத் தேங்காய் உடைப்பதற்கெனப் பலகைக்கல் ஒன்று நடப்பட்டது. கடவுளர் படங்கள் மல்லிகை மலர் மாலைகள் அணிவிக்கப் பட்டன. நோயரின் தலையில் தடவுதற்காக ஒருவகை 'துய்ய' நெய் உருவாக்கப் பட்டது. பரந்தகன்ற சட்டமிடப்பட்ட வள்ளியின் படம் சிவியின் இருக்கைக்கு எதிரே வைக்கப் பட்டது. அளவுக்கதிகமாக மாலைகள் இடப்பட்ட இப் படத்தின் இருபுறங்களிலும் இரண்டு குத்துவிளக்குகள் எரிந்தன. பத்தர்கள் இப்படத்தின் முன்பாகப் பூச் சொரிந்தனர். 

            '
சா-எலா'வைச் சேர்ந்த இலங்கைப் பகுத்தறிவாளர் அமைப்பின் உறுப்பினரான திரு. ஈ.சி.எசு. பெர்னான்டோ சிவியின் பெற்றோர்களை அறிந்தவர். சிவியை 'மருள்' வந்தவளைப் போலும் நடந்து கொள்ளச் செய்தது வள்ளியோ அல்லது வேறு ஆவியோ இல்லை, ஒருவகை மனநோயே என்று சிவியும் அக் குடும்ப உறுப்பினர்களும் புரிந்துகொண்டு ஏற்கும்படி செய்வதில் அவர் வெற்றி கண்டார். 

           
சிவியின் பெற்றோரும் எண்ணற்ற பத்தர்களும் ஏமாற்றமடைய, 1964 ஏப்பிரல் 10 முதல், சிவி வள்ளியின் வேடமேற்க மறுத்துவிட்டாள். அவளுடைய பெற்றோரும் உடுக்கை அடிப்போரும் பாடுவோரும் ஒன்றிணைந்து திரும்பத் திரும்பக் கூறியும் சிவி பூசையில் கலந்து கொள்ள மறுத்து விட்டாள். தான் பிற பெண்களைப் போல் இருக்க விரும்புவதாகக் கூறி மறுத்தாள். 

நேர்காணல் 

           
1964 செப்டம்பர் 21 அன்று, இலங்கைப் பகுத்தறிவாளர் அமைப்பின் முன்னாள் செயலரான திரு. பெர்னான்டோ, தேர்வுகள் துறையில் பணிபுரியும் அவருடைய நண்பர் திரு. சோமதிலகேவுடன் உளத்தியல் மருத்துவத்திற் காகச் சிவியை என்னிடம் அழைத்து வருதற்கு நாள் உறுதி செய்ய வந்தார். 1964 செப்டம்பர் 26, காலை 9.30 மணிக்கு நேர்காணல் என்று முடிவு செய்யப்பட்டது. 

     திருவாளர்கள் பெர்னானடோவும் சோமதிலகேவும், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான சோமதிலகேயின் தாயாரும், ஆங்கிலப்பள்ளி ஆசிரியையான செல்வி கொடிக்காராவும், சிவியும், அவளுடைய தந்தைவழிப் பாட்டியும் கொண்ட குழு குறிப்பிட்ட நாளில் வந்து சேர்ந்தது. அக்குழுவினருடன் வருவார்களென்று எதிர்பார்க்கப்பட்ட சிவியின் பெற்றோர் அனுராதபுரத்தில் இருந்து குறித்த நேரத்தில் வந்து சேரத் தவறினர். 

     என்னுடைய புலனாய்வைச் சிவியின் பாட்டியிடம் தனிமையில் கேட்டுத் தெரிந்து கொள்வதின் வழித் தொடங்கினேன். செல்வி கொடிக்காரா மொழிபெயர்ப்பாளராக இருந்தார். அந்தப் பாட்டியிடமிருந்து கீழ்க்காணும் செய்திகளை என்னால் திரட்ட முடிந்தது.

     சிவியின் இப்போதைய அகவை இருபது. அவள் பத்தாண்டினளாக இருந்த போது ஒருநாள் பள்ளிக்கூடத்தில் நினைவிழந்தாள். பள்ளிக்கூடப் பொறுப்பாளர்கள் அவள் பெற்றோர்க்குச் சொல்லி யனுப்பினார்கள். அனுராதபுரத்தில் உள்ள அரசு மருத்துவரிடம் சிவி அழைத்துச் செல்லப்பட்டாள். அடிப்படையாக அவளிடம் எந்தப் பிழைபாடும் இல்லை எனவும், செரிமானமின்மையாலோ, வயிற்றின் மிகுநிறைவு காரணமாகவோ மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அம்மருத்துவர் கருதினார். 

     இரண்டு மாதங்களுக்குப் பின்னர், வயலில் இருந்தபோது, சிவி இரண்டாம் முறையாக மயக்கமுற்றாள். மறுபடியும் அவள் அம் மருத்துவரிடம் கொண்டு செல்லப் பட்டாள். இம்முறை, அவர் சிவியை வியன்னாக்காரரான நரப்பு-உளத்தியல் மருத்துவர் கிரில்மேயரிடம் காட்டும்படி அறிவுறுத்தினார். 

     கொழும்பு மருத்துவமனையில், மருத்துவர் கிரில்மேயர், சிவியின் மூளை அலைகளை மின்துகளிய மூளைவரைவி-யில் பதிவு செய்தார். அமைதிப்படுத்தும் மருந்துகள் சிலவற்றைக் குறித்துக் கொடுத்தார். அதன் பிறகு ஏதும் தொல்லை இல்லாதிருந்ததால் சிவி பள்ளிக்குச் செல்வதைத் தொடர்ந்தாள். 

சூழியம்
     சில மாதங்களுக்குப் பின், சிவி மறுபடியும் உணர்விழப்பு - மயக்கம் - அடைந்தாள். இம்முறை பெற்றோரும் நெருங்கிய உறவினர்களும் தீய ஆவிகளே சிவிக்கு ஏற்பட்ட தாக்கத்திற்குக் காரணம் என்று முடிவு செய்தனர். மருத்துவர்களிடம் காட்டிக் "காலத்தை வீண்டிப்பதை"விடத் திறமையான மந்திரக்காரரிடம் காட்டுவதற்கு இதுவே நேரம் என்று அவர்களனைவரும் கருதினர். இப்படியாகச் சிவி ஒரு மந்திரக்காரனிடம் அழைத்துச் செல்லப் பட்டாள். 

     அம் மந்திரக்காரன், சிவியின் கடுந் துனபத்திற்குக் காரணம் ஒரு தீயஆவி என்று உறுதியாகக் கூறிப், பேயோட்டச் சடங்குச் செய்ய வேண்டு மெனக் கூறினான். அச் சடங்கின்போது, அப் பேயோட்டி, சிவியின் தோளில் ஒரு மந்திரித்த கயிற்றைக் கட்டினான். கழுத்தில் ஒரு பட்டுத் துணியைச் சுற்றினான். அந் நாளிலிருந்து, சிவி மயக்க மடைந்ததோடு, தொடர்பற்ற சொற்களை அவ்வப்போது முணுமுணுக்கத் தொடங்கினாள். சிவியின் பெற்றோர் அவளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினர். 

     அவளுடைய நிலை மேலும் மோசமடைந்தததால், சில நல்லெண்ணக் காரர்களின் அறிவுறுத்தலின்படி, புத்தாலம் மாவட்டம் பகலகாமாவில் கடவுளச்சி வள்ளிக்குக் காணிக்கை யாக்கப்பட்ட புகழ்மிக்கக் கோயிலுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். இந்தக் கோயிலின் பூசாரி முழுக் கதையும் கேட்டான். ஆரவாரமான மந்திரிப்பிற்குப் பிறகு, சிவியின் பெற்றோரிடம், அவளைப் பிடித்திருக்கும் பேயை ஓட்ட, அடுத்தடுத்த மூன்று நாட்களில் மூன்று சிறப்புப் பூசைகள் நடத்த வேண்டுமென்றான். 

     அவர்கள் வீட்டிற்குச் செல்லலா மென்றும், ஒரு குறிப்பிட்ட நாளில் முதல் பூசையை நடத்த வர வேண்டுமென்றும் சொல்லப் பட்டனர். அந்தப் பூசாரி, அம்மூன்று பூசைகளையும் நடத்துவதற்காகக் கொண்டு வரவேண்டிய பொருள்களின் பட்டியலை முழுமையாகத் தந்தான். அவனால் குறித்துக் கொடுக்கப்பட்ட பொருள்களில் சிவியின் உயரத்தில் தூய தங்கத்தில் செய்யப்பட்ட தொடரி (chain)யும் ஒன்று. 

பூசைகள் 

     4அடி 10 விரற்கிடை நீளமுள்ள தங்கத் தொடரி உள்பட பல்வேறு பொருள்களைத் திரட்டுவதற்கே அடுத்த சில நாள்கள் சரியாயிருந்தன. ஒப்புக்கொண்ட பொருள்கள் அனைத்தையும் பெறுவதில் ஆன பெருஞ்செலவு அல்லாது, அப் பூசாரிக்கு மூன்று நாள்களும் உருவா 137, 147, 157எனப் பூசைக் கட்டணம் கொடுக்கப்பட வேண்டும். மூன்று நாட்களும் பூசையின் போது, சிவி மெய்ம்மறந்த நிலைக்கு ஆளாக்கப் பட்டு, அப் பூசாரியுடன் கூத்தாடினாள். 

     மூன்றாம் நாள் பெருங்களிப்புக் கூத்து நிலையில், சிவி, தன்னை வள்ளி என்று கூறிக் கூச்ச லிட்டாள். அந்தக் கோயில் முறையாக நல்ல நிலையில் பேணப் படாததால் வள்ளி இனிமேல் அங்கு வரமாட்டாள் என்றும், ஈடாக சிவியி்ன் வீட்டிற்கு வருவாள் என்றும் கூறினாள். பூசாரியின் எதிர்காலத் தொழிலுக்கு இது ஒரு பேரடி யாகியது. மூன்றாம் நாளுக்குப் பிறகு அக்கூட்டத்தினர் ஆலங்குளாமாவிற்குத் திரும்பி வந்தனர். 

     இப்போது சிவி அவளுடைய கழுத்திலும் கைகளிலும் நிறைய மந்திரிக்கப்பட்ட கயிற்றைக் கட்டியிருந்தாள். அந்தப் பூசாரி சிவிக்கு எந்தத் தொல்லையும் வராது என்று உறு்தி அளித்திருந்த போதிலும், அடுத்த நாள் சிவி ஆழ்ந்த நினைவிழந்த நிலைக் குள்ளானாள். அம் மெய்ம்மறந்த நிலையின் போது அவள் பூசை நடத்துவதற்காகத் தோட்டத்தில் ஒரு கோயில் வேண்டுமெனக் கேட்டாள். 

     இதனைக் கடவுளச்சி வள்ளியின் கட்டளையாக எண்ணிக் கொண்டு தந்தையார் பெருந் தொகையைச் செலவிட்டு, அவருடைய தோட்டத்தில் ஒரு கோயில் அமைத்தார். வாடகைக்கு உடுக்கை அடிப்போர் மற்றும் மந்திரக்காரர் உதவியுடன் நாள்தோறும் பூசைகள் புதிய கோயிலில் நடந்தன. 

     ஒவ்வொரு நாளும் உடுக்கை அடித்ததும் சிவி மெய்ம்மறந்த நிலைக்குள்ளானாள். பூசையின் போது கோயிலில் கூடிய அக்கம் பக்கத்தார் கடவுளச்சி வள்ளியே சிவியின் வழியாகப் பேசுவதாக உறுதி செய்து அவளை வழிபடத் தொடங்கினர். 

     இரவு பூசைகள் இரண்டு கிழமைகள் நடந்தன. ஒவ்வொருநாளும் 'மருள்' வந்து ஆடுவது சிவியைக் கடுஞ் சோர்வுக் குள்ளாக்குவதை அறிந்து, இரவு பூசைகள் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே வைத்துக் கொள்ளத் தந்தையார் முடிவு செய்தார். 

     கடவுளச்சி வள்ளி சிவியின் உடலில் தோன்றுவதைப் பற்றிய செய்தி நாட்டி்ல் பரவத் தொடங்கியது. எண்ணற்ற மக்கள் வள்ளியின் அருளைப் பெறவும் அவர்களுடைய சிக்கல்கள் தீர்க்கப் பெறவும் அந்தப் புதிய கோயிலுக்கு வரத் தொடங்கினர். சிவியின் பெற்றோர் அவர்களுடைய மகளைப் பற்றிய கவலையை விட்டனர். 

     கடவுளச்சி வள்ளி சிவியி்ன் உடலில் வருவதை, அவள் சிவிக்கு அருளிச் செய்வதாகப் பெற்றோர் கருதினர். கடவுளரின் அருள் வாழ்த்தே அது என அவர்கள் கருதிக் கொண்டனர். பொருள் நிலையிலும் கூட அவர்கள் வளம் பெற்றனர். குடும்பத்திற்குப் பொருள் வரும்படியையும் எளிதில் நம்புகின்ற ஆயிரக்கணக்கான முட்டாள்களுக்குக் கற்பனை நலனையும் தந்த இந்த வளமான காலப்பகுதி பத்தாண்டுகளுக்குத் தொடர்ந்தது. 

     சிவியின் வேண்டுகோளின்படி, 1964 ஏப்பிரல் 10-இல் பூசைகள் நிறுத்தப் பட்டதால், அந்தக் கோயில் தகர்த் தழிக்கப்பட்டது. உடுக்கை அடிப்போரும் பாடகரும் அனுப்பிவிடப் பட்டனர். சிவி மருள் வரும் நிலையினின்றும் விடுதலையானாள். பூசைகள் நிறுத்தப் பட்டபின், நான்குமாத காலத்தில், சிவி இரண்டு முறை நினைவிழந்த நிலையுற்றாள். ஆனால், ஒருபோதும் வள்ளிபோல் நடந்து கொள்ளவோ பேசவோ இல்லை. 

     இந்தக் கட்டத்தில், சிவியின் பாட்டி கீழே அனுப்பப் பட்டாள். உசாவுதற்காக சிவி மேலே அழைக்கப் பட்டாள். செல்வி கொடிக்காரா மொழிபெயர்ப் பாளராக இருந்தார். சிவியின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் நெருங்கிய உறவு பற்றியும் அவளுடைய உள்மன உணர்வுகளைப் பற்றியும் பேரளவிலான செய்திகளை என்னால் திரட்ட முடிந்தது. 

     சிவியை அறிதுயிலில் (hypnosis) இருத்தி, வள்ளி என்று எவருமே இருக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாத வள்ளியை அவளுடலில் மருளாகப் பெற முடியாது என்றும் அவள் புரிந்து கொள்ளும்படிச் செய்யப்பட்டாள். 

     சிவிக்குச் சிங்கள மொழியில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரியும். அவள் படிப்பைத் தொடர வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தாள். மணம் செய்து கொண்டு வாழ்வதை அவள் மனம் விழைந்தது. இனி எப்போதும் வள்ளி அவளுடலில் மருளாக வரமாட்டாள் என்று அவள் மனம் ஏற்கும்படி உரைத்ததும், அவள் முகம் மலர்ந்து ஒளிர்ந்தது. 

     அவர்கள் இருக்கும் இடமான நிகோம்போவிற்குச் சென்றதும் , முதல் வேலையாக ஆலங்குளாமாவில் உள்ள அவளுடைய தாய்க்கு, எல்லாத் தொல்லைகளி லிருந்தும் அவள் விடுதலை பெற்றதை எழுதப் போவதாக என்னிடம் கூறினாள். 

     என்னுடனும் என் துணைவியாருடனும் சிவியை திரு.சோமதிலகே ஒளிப்படங்கள் எடுத்த பிறகு, அக் குழுவினர் சென்றனர். 

பகுப்பாய்வு 

     முதலில், சிவி இசிப்பு நோயின் மென்மையான தாக்குதலுக் குள்ளானாள். மருத்துவர் கிரில் மேயரின் மருத்துவத்தைத் தொடர்ந் திருந்தால் விரைவிலேயே அவள் இயல்பு நிலை பெற்றிருக்கக்கூடும். அவளுடைய பெற்றோர் செய்த முதல் தவறு மந்திரக்காரனிடம் அறிவுரை கேட்டதே! தொடக்கநிலை மாந்தர் உடல் நோய்களுக்கும் மன நோய்களுக்கும் தீய ஆவிகளே காரணம் என்று நம்பினர். தொடக்க கால மாந்தனுக்கு எல்லா நோய்களுக்கும் மருந்து, சூழியக்கலை(witchcraft)யே! 

     மருத்துவ அறிவியலின் வேகமான வளர்ச்சியால், நாகரிக நாடுகளில் சூழியக்கலை மறைந்து மருத்துவ மனைகளும் தகுதி வாய்ந்த மருத்துவர்களும் இடம் பெற்றனர். அவப்பாடாக - போகூழாக - சூழியக் கலையானது, மாயமருத்துவம், வருவதுரைத்தல் முதலிய வடிவங்களில் இருப்பதால், இன்னுங்கூட பிற்பட்ட நாடுகளிலுள்ள அறியா மக்கள் நாடுவதாக உள்ளது. 

     சிவியின் துன்பம் தீய ஆவி பிடித்துக் கொண்டதின் காரணமாகவே என்று மந்திரக்காரன் கூறிய போது, அவளுடைய வலிவற்ற, கருத்துத் தூண்டுதலுக்கு உட்பட்ட அவளுடைய மனம் அவளைப் பேய்பிடித்தவள் போலப் பேசவும் நடந்து கொள்ளவும் செய்தது. 

     கோயிலிலும் கூட, கருத்துத் தூண்டுதலுக்கு உட்பட்ட தன்மையிலேயே, அவள் வள்ளியாகப் பேசி நடந்து கொண்டாள். பின்னர், வள்ளி பிடித்திருப்பதை மறுத்துத் திரு. பெர்னான்டோ பகுத்தறிவுக்கொப்ப எடுத்துரைத்ததைக் கேட்டதும், அவளுடைய உள்மனம் வள்ளியின் நினைவுகளில் இருந்து விடுதலை பெற்றது. திரு.பெர்னான்டோவின் விளக்கத்தின் விளைவே, அவள் ஏப்பிரல் 10-இலிருந்து பூசையில் பங்குபெற மறுத்தது. 

     என் அறிதுயில் கருத்துரைகள், அவள் மனத்தின் எண்ணத்தில் இருந்த வள்ளியை முழுமையாக அடியோடு அழிக்க உதவியது. இன்று, அவள் இயல்பாக வாழ்கிறாள். அவளுக்குத் திருமணம் நடைபெற விருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.


 ---------------------------------------------------------------------------------------------------------------------------------

நல்லெண்ணம் வளர்ப்போம்!




மாந்தர்க்குத் தகைமைமதிப் புயர்வுசிறப் பளிப்பதெலாம்
          மனத்தின் எண்ணம்;
வேந்தெனினும் நல்லெண்ணம் இலையெனிலோ வெறும்மாவே,
          விரைவில் வீழ்வான்!
சாந்துணையும் உயர்வூட்டும் சாலஉயர் எண்ணங்கள்
          சரிவே காணா
ஏந்துடைய நல்வாழ்வு என்றென்றும் ஏய்ந்திடநல்
          எண்ணம் வேண்டும்!


ஒருவரைநீ வாழ்த்தினையேல் உனைநீயே வாழ்த்தினையென்
          றுணர்ந்து கொள்க!
ஒருவர்க்குத் தீங்குசெய நினைத்தாயேல் தீங்கினைநீ
உனக்கே செய்தாய்!
ஒருவரைநீ சினந்தாயேல் ஊறுன்றன் மனத்திற்கும்
          உடற்கும் உண்டே!
ஒருக்காலும் மாறாத உறுதியிது எண்ணங்கள்
          உயர்த்தும்; வீழ்த்தும்!


தப்பாதே நல்லெண்ணம் வளர்க்கின்ற சூழ்நிலைகள்
          தமையே தேர்க!
எப்போதும் நற்றொடர்பும் ஏற்றமுறும் நல்லுறவும்
          இணைத்துக் கொள்க!
இப்போது மனத்தினிலே எழுச்சிகொளும் நல்லெண்ணம்
          இனிமை சேர்க்கும்!
முப்போதும் செயல்களெலாம் முழுச்செப்ப வெற்றியுடன்
          முடியும், உண்மை!


ஓய்வினிலும் பொழுதோட்டும் ஒருநேரந் தனிலதிலும்
          உன்னும் நெஞ்சில்
ஏய்தலுற நல்லெண்ணம் எழக்கண்டும் கேட்டுரைத்தும்
          இயைந்து நின்றால்
ஆய்வறிவர் முடிவிதுவே அடரெண்ணம் ஏந்துமனம்
          அளிக்கும் வெற்றி!
தோய்கின்ற தொழிலதிலும் தூயவுள நல்லெண்ணம்
         துணையாய்க் கொள்க!


எண்ணத்தை ஆக்குவதார்? உள்வாங்கு்ம் செய்திகளே!
          எனவே என்றும்
ஒண்ணலுறுஞ் செய்திகளே உள்வாங்கும் படிச்சூழல்
          ஓர்ந்து தேர்க!
எண்ணவராம் வள்ளுவரும் உயர்வையுள ஓதியதை
          எண்ணிப் பாரீர்!
திண்ணரெனப் பொறிவாயில் தேர்ந்தவிக்கச் சொன்னதையும்
          தெளிந்து கொள்க!


நல்லெண்ணம் மனங்கொள்க! நல்லுணர்வைப் போற்றிடுக!
          நன்மை நாடி
நல்லாரோ டுறவாடி நல்லொழுக்கம் பேணிடுக!
          நயந்தே நாளும்
வல்லாரும் மெல்லியரும் வலியவுள நல்லெண்ணம்
          வளர்த்து வாழ்க!
எல்லாரும் நல்லவராய் இயங்கிநலந் தோய்ந்திடவே
          இனிது வாழ்க!


-----------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 7 அக்டோபர், 2008

கழுதை ஏர் உழவு!


காளைமாடுகள் ஏர் உழுவதைப் பார்த்திருக்கின்றோம். எருமைகள் ஏர் உழுவதும் சில இடங்களில் உண்டு. இப்போது சில இடங்களில் பால் மறுத்த ஆக்களையும் கூட ஏர் உழப் பயன்படுத்துவதையும் பார்த்து வருகிறோம். ஆனால், கழுதை ஏர் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? 
இப்போது எங்கேனும் கழுதையைக் கொண்டு ஏர் ஓட்டுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஏரில் கழுதையைப் பூட்டி உழும் வழக்கம் இருந்திருக்கின்றது.
தமிழரின் பழந்தமிழ் இலக்கண இலக்கியமாக இருப்பது தொல்காப்பியம். இதில் நேரடியாகக் கழுதை ஏர் பற்றி ஏதும் கூறப்படவில்லை. தொல்காப்பிய நூற்பா எண் 1037-இல், 12ஆம் அடியாக "மன் எயில் அழித்த மண்ணு மங்கலமும்" என்று உள்ளது. இதற்கு, 'நிலைபெற்ற மதிலை அழித்த மகிழ்ச்சி விழாவும்' என்பதே பொருளாகும். (மன் எயில் = நிலைபெற்ற மதில்).
 "மன் எயில் அழித்த மண்ணு மங்கலமும்" என்பதற்குப் பொருள் எழுதிய உரை ஆசிரியர் நச்சினார்க்கினியர், "மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தி மங்கல மல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடு மங்கலமும்" என்று கூறுகின்றார்.
போரிட்ட இரண்டு அரசர்களில், வெற்றி பெற்ற அரசன், பகையரசனின் கோட்டை மதிலை அழித்து, கழுதையை ஏரில் பூட்டி, அவ்விடத்தை உழுது, வெள்ளை வரகும் கொள்ளும் விதைப்பானாம். கழுதை ஏரால் உழுவதும், வெள்ளைவரகு கொள் விதைப்பதும் மங்கலமில்லாச் செயல்களாக நம்பப் பட்டிருந் திருக்கின்றன. அம் மங்கல மல்லாச் செயல்களைச் செய்தபின் , அந்த வெற்றி பெற்ற அரசன், நீராடுவானாம்.
நச்சினார்க்கினியர் கூறிய விளக்கத்திற்குக் கழக (சங்க) இலக்கியமாகிய புறநானூற்றில் சான்றுகள் கிடைக்கின்றன.புறநானூற்றுப் பாடல் 15இல், முதல் மூன்று வரிகள்,
"கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்" - என்பன.
நெட்டிமையார் என்ற புலவர், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழு்தியைப் புகழ்ந்து பாடியுள்ள வரிகளாக இவை உள்ளன.
இவ்வரிகள் உணர்த்தும் பொருள், "உன் பகைவருடைய பெரிய மதில்சூழ்ந்த அகன்ற இடங்க ளை, தேர்கள் விரைந்து சென்றதனால் குழிவாகிப் போன தெருக்களை, வெண்மையான வாயையுடைய புன்மையான விலங்கினமாகிய கழுதைகளைப் பூட்டி உழுது பாழாக்கினாய்!" எனபதாகும்.
அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி. ஒளவையார், அவன் புகழைப் பாடுகின்ற புறநானூற்றின் 392-ஆம் பாடலில் 6,7, 8,9,10,11 ஆம் வரிகள் கீழ்க் காணுமாறு உள்ளன:
"உருகெழு மன்ன ராரெயில் கடந்து
நிணம்படு குருதி பெரும்பாட் டீரத்
தணங்குடை மரபி னிருங்களந் தோறும்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி
வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும்
வைக லுழவ வாழிய பெரிது"...  
இவ்வரிகள் கூறும் பொருள்,  "திறை கொடாத அச்சம் பொருந்திய மன்னருடைய அரிய மதிலைக் கடந்து, வஞ்சியாது சண்டையிட்டு அழித்து, தசையும் குருதியும் தோய்ந்த, குருதிப் பெருக்கால் உண்டாகிய ஈரத்தை உடைய துனபந்தரும் தெய்வங்க ளுறையும் முறைமையினை யுடைய பெரிய போர்க்களந் தோறும் வெண்மைநிற வாயையுடைய கழுதையாகிய புல்லிய விலங்கினைப் பூட்டி உழுது, வெள்ளை வரகும் கொள்ளும் விதைக்கும் இடையறாத போராகிய உழவைச்செய்யும் வேந்தனே! நீ நெடிது வாழ்வாயாக!" என்பதாகும்.
எட்டுத்தொகையுள், புறப்பொருள் வகையில் அமைந்த இன்னொரு நூல் பதிற்றுப்பத்து ஆகும். பதிற்றுப்பத்தில் 25ஆம் பாடலின் நான்காம் வரி,
"நின் படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி" - என்றுள்ளது. 
பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தைப் பாடிய புலவர் பாலைக் கவுதமனார், இமயவரம்பனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் சிறப்புகளைக் கூறுகையில், "நின் காலாட் படையிலுள்ள போர் வீரர்கள் சென்று போர்புரிந்த ஊர் மன்றங்கள் கழுதை ஏர் பூட்டி உழுது பாழாக்கப் பட்டன" என்று கூறியதையே மேற்கண்ட பாடல் வரி உணர்த்துகிறது.
கழக இலக்கியங்கள், வெற்றிபெற்ற அரசன் பகையரசனி்ன் கோட்டைகளை அழித்துக் கழுதையினால் ஏர் உழுத செய்தியை இவ்வாறு தெரிவிக்கின்றன. 
இரட்டைப் பாவியங்களான சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் கூட கழுதை ஏர் உழுத கதை காணக் கிடைக்கின்றது.
சிலம்பில், நீர்ப்படைக் காதையில், 225,226, 227ஆம் அடிகள் கீழ்க் காணுமாறு உள்ளன:
"வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக்
கவடி வித்திய கழுதையே ருழவன் 
குடவர் கோமான் வந்தான்"...  
சேரன் செங்குட்டுவன், வடதிசை சென்று எதிர்த்தாரை எல்லாம் வீழத்தி வெற்றி யீட்டி, தமிழர் வீரத்தை இகழ்ந்தார் செருக்கடக்கி, கண்ணகிக்குச் சிலை அமைக்க இமயத்திலிருந்து கல்லெடுத்துக் கொண்டு திரும்புகிறான். அந்த வீரத்திருமகன் வஞ்சிநகர் வருவதை இளங்கோவடிகள் கூறுகின்ற போது, "வடநாட்டு அரசர்களின் நிலைபெற்ற மதிலை அழித்து, கழுதை ஏருழுது, வெள்ளை வரகு விதைத்த உழவனாகிய குடநாட்டினர் தலைவன் வந்தனன்" எனச் சொல்வதையே மேற்கண்ட வரிகள் உணர்த்துகின்றன.
இந்தக் கழுதை ஏர் உழவு வழக்கம், வடநாட்டிலும் இருந்திருக்கிறது. காரவேலன் என்ற கலிங்க நாட்டு அரசன், (கி.மு.2-ஆம் நூற்றாண்டு) அத்திக்கும்பா குகைக் கோயிலில் பிராகிருத மொழியில் எழுதி வைத்திருக்கிற கட்டளையாவணத்தில் (சாசனத்தில்) இச் செய்தியைக் கூறியுள்ளான். காரவேலன் பிதுண்ட நகரத்தை அழித்துக் கழுதை பூட்டிய ஏரினால் உழுத செய்தியை அக் கட்டளையாவணம் கூறுகிறது.
அரிபத்ரீ என்பவர் எழுதிய ஆவசியக விருத்தி என்னும் நூலிலும் ஏமசந்திரர் எழுதிய வீரசரித்திரத்திலும் இச்செய்தி கூறப்பட்டுள்ளதாம்.
இப்படியாக, கழுதை ஏர் உழும் வழக்கம் நாவலந்தீவு முழுமையும் இருந்திருப்பது தெரிகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------
நன்றியுரைப்பு:

  1. புறநானூறு அவ்வை சு.துரைசாமியார் உரை.
  2. பதிற்றுப்பத்து - அவ்வை சு.துரைசாமியார் உரை.
  3. சிலப்பதிகாரம் நாவலர் ந.மு.வேங்கடசாமியார் உரை.
  4. சங்ககால வரலாற்று ஆய்வுகள் மயிலை சீனி.வேங்கடசாமியார்.
  5. தொல்காப்பியம் ச.வே.சு. உரை.
************************************************************************************