வெள்ளி, 12 செப்டம்பர், 2008

அறிவிப்பு

விழுப்புரம் தமிழ்ச்சங்கம் ஏழாம் ஆண்டுவிழா
நாள் :  திருவள்ளுவர் ஆண்டு 2039  கன்னி(புரட்டாசி) 5
             21-09-2008 ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை.
இடம் : குரு திருமண மண்டபம்,
கன்னியாக்குளம் சாலை, விழுப்புரம்.
  
காலை 10-00 மணி தொடக்க விழா.
தலைமை :  மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம்
 தலைவர், தமிழ்ச்சங்கம்.
முன்னிலை :  திரு. பூ.ஆ. நரேஷ்
              முதன்மைக்கல்வி அலுவலர், விழுப்புரம் மாவட்டம்.
வரவேற்புரை :  திரு. வ.பன்னீர்ச்செல்வன்
         துணைத்தலைவர், தமிழ்ச்சங்கம்
வாழ்த்துரை :  திரு. ஏ.சாமிக்கண்ணு
கல்வியாளர், விழுப்புரம்.
தொடக்கவுரை : முனைவர் ஆர்.பழனிசாமி இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்.
வாணாட்பணி பட்டம் பெறுபவர் : 
எழுத்தாளர் பரிக்கல் ந.சந்திரன்
சிறப்புரை : திரு. இ.மா.மாசானமுத்து இ.கா.ப.
காவல்துறைத் துணைத் தலைவர், விழுப்புரம் சிறகம்.
நன்றியுரை : திரு. சி.வீரராகவன்
` பொருளாளர், தமிழ்ச்சங்கம்
மாலை 03-00 மணி இயலரங்கம்
பாட்டரங்கம்
தலைவர் : பாவலர் வையவன்
வரவேற்புரை : திரு வீ. சோழன்
இணைச்செயலர், தமிழ்ச்சங்கம்.
வாழ்த்துரை :  திரு. மு.அனந்தகுமார்
          உதவி திட்ட அலுவலர்,  காஞ்சிபுரம்.
தலைப்பு : என்னதான் சொன்னார்கள்?  
     எதைத்தான் கேட்டோம்?
திருவள்ளுவர் : திரு. இராம. சிவஞானம்.
திருமூலர் : திரு.தி.க.நாகராஜன்
  
வள்ளலார் : திரு. தமிழநம்பி
காந்தியடிகள் : திரு. இரா.ச.சொக்கநாதன்
  
பெரியார் : திருவாட்டி அர, அநுசுயாதேவி
இசையரங்கம்
அரசு இசைப்பள்ளி மாணவர்கள், விழுப்புரம்.
உரையரங்கம்
வாழ்த்துரை : திரு. சாமி.செந்தில்
         ஏ.சா.அறக்கட்டளை, விழுப்புரம்
சிறப்புரை : திரு. கோ.விஜயகுமார்
           காவல் ஆய்வாளர், விழுப்புரம்.
பொருள் : சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம்
பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம்
  பொருள் : சித்திரச்சிலம்பு
நன்றியுரை :  பாவலர் சீ.விக்கிரமன்
         செயலர், தமிழ்ச்சங்கம்.
அருந்தமிழ்ச் சுவைபருக அனைவரும் வருக!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

தமிழ்மாமணி புலவர் இறைவிழியனார் நினைவேந்தல்


 நினைவேந்தல் நாள் :22-05-2008

(நேரிசை வெண்பா)

நிறைதமிழ் காப்பே நினைவேந்திச் சற்றும்
மிறையறியாத் தொண்டால் மிளிர்ந்தாய்! - இறைவிழிய!
உன்னை மறந்திடலும் ஒல்லுமோ?  என்றென்றும்
நின்னையே நாடுமென் நெஞ்சு.

------------------------------------------------------------------------------------------


வியாழன், 4 செப்டம்பர், 2008

அண்ணா- நூற்றாண்டு நினைவு!


இருபத்து நான்கு வரிகளில் -                                                                
அண்ணாவின் இனிய நினைவேந்தல்!       


அண்ணா!  அட,ஓ!  எண்ணம்  இனிக்கும்                             திண்ணியர்  திருப்பெயர்!  ஈரா  யிரமாண்
டிழிதளைப் பட்டஎம் இனத்தினைக் காக்க
எழுச்சியோ டிளைஞரை  ஈர்த்தவர்  பெயரிது!

ஆரையும்  விடவும்  ஆரிய  அரவை                                        -5            
நேருறத்  தாக்கி  நிலைகெடக்  கிடத்திய 
ஒருதனிப் பெரும்பணிப்  பெரியார்  தேர்ந்தசெந்                 தெருள்தெளி  மாணவர்  தீந்தமிழ்ப்  பெயரிது!

மூடுற்ற  தமிழினப்  பீடு  விளக்கிய                                  
ஈடிலா  அறிஞரின்  சூடெழும்  பெயரிது!                                 -10

தாய்நிலந் தன்னைத் தமிழ்நா  டென்றே                         வாய்மகிழ்ந்  தழைக்க  வைத்தவர்  பெயரிது!
ஆட்சியில்  கல்வியில்  காட்சியில் இசையில்
நீட்சி  தமிழின வீழ்ச்சியென் றுணர்த்தி                       
நலக்கலை  சிதைத்தோர்  கலக்குற  துலக்கமாய்ச்             -15  
சொலல்வல்  திறத்தரின்  சுருக்கப்  பெயரிது!

செத்ததை விலக்கிய  செந்தமிழ்த்  திருமணம்
ஒத்தொப் பிடவோர் சட்டஞ் சமைத்தவர்!

பிறப்பிற்  பிரிவினை  இறக்கங்  கூறிய
சிறப்பறு 'ஆரிய மாயை'  செறுத்தவர்!                                  -20

தமிழர் உணர்வுத் தழல்'தீப் பரவுக'!
இழிவொழித் தெம்மினம் ஏற்றம் பெறுகென                    
ஆர்த்தவர்;  உழைத்தவர்;  அதன்வழி
சீர்த்திசால் தமிழினம் காத்தவர் பெயரிதே!                         -24


***************************************************************





செவ்வாய், 2 செப்டம்பர், 2008

உயிர்

(ஆங்கிலமூலம்: ஆபிரகாம்.தொ.கோவூர் **** தமிழாக்கம்: தமிழநம்பி)                          
          பல்வேறு மதங்களின் துய்த(புனித) நூல்களை இயற்றிய எழுத்தாளர்கள், புடவி(universe)யின் உண்மையான இயல்பு பற்றிய அறிவைப் பெற்றிருக்க வில்லை. அவர்களனைவருமே இவ்வுலகம் தட்டையான தென்றும் புடவியின் நடுவாக உள்ளதென்றும் நினைத்தார்கள்.

          இவ்வுலகம் உருண்டையானதென்று கூறிய முதல் ஆளான, கியார்டானோ புரூனோ, உரோமன் கத்தோலிக்கத் திருச்சவையால் எரிக்கப்பட்டு இறந்தார்.

          உலகம் இடம்பெயரா நிலையினதென்றும் கதிரவக்கோளே இவ்வுலகைச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்றும் கூறும் கிறித்தவ மத நூலான பைபிள்கருத்துக்களை எதிர்த்த குற்றத்திற்காகக் கலீலியோ கத்தோலிக்கத் திருச்சவையால் சிறைக்கனுப்பப் பட்டார்.   

          புடவியைப் பற்றிய இன்றைய நம் அறிவனைத்தும் வானியலரின் அறிவியல் ஆராய்ச்சிகளால் பெற்றவையே யன்றி, மத நூல்களிலிருந்து பெற்றவை அல்ல.

          இவ்வுலகம் மற்றைய கதிரவக் கோள்களைப் போலவே நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், விண்வெளித் துகள்களின் தொகுப்புத் திரண்மையால் உருவானதென்று வானியலர் கருதுகின்றனர். பின்னர், இவ்வுலகின் வெதண(temperature) வளிப்புரிய(atmospheric) நிலைகள் பொருத்தமானவையாக அமைந்தபோது வேதியல் வினைப்பாடுகளின் விளைவால் உயிர்த் தோற்றம் ஏற்பட்டது.

          எரிமலை மற்றும் கதிரவ ஆற்றல்களின் தாக்கத்துடன், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலையில் சதுப்புவளி(methane), குருவளி (ammonia), நீர் ஆகியவற்றிலிருந்து உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் (livable organic matter) மூலக்கூறுகள் உருவாயின.

          (நோபல் பரிசு பெற்ற முனைவர் அர்கோபிந்து கொரானாவும் முனைவர் சிரில் பொன்னம்பெருமாவும், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலைகளை, அவர்களின் ஆய்வறைகளில் செயற்கையாக ஏற்படுத்தி உயிர்வாழக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகளை உண்டாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்)

          இம்மூலக்கூறுகள் காலப்போக்கில் மறுபகர்ப்புறவும், மெள்ள சேர்மவுயிரகவாக்கம் (slow oxidation) என்கின்ற மூச்சுயிர்ப்பு (respiration) மூலம் ஆற்றலை உண்டாக்கவுமான பண்புகளை வளர்த்துக் கொண்டன. மூச்சுயிர்க்கின்ற உயிர்மப்பொருள் உண்டாக்கிய இவ்வகை ஆற்றலையே நாம் உயிர் என்கின்றோம்.

          மூச்சுயிர்த்துக் கொண்டு, உயிர்ப்பாற்றலை (vital energy) உருவாக்குகின்ற பொழுது உயிர்மப்பொருள் உயிரியாக (உயிர்வாழ்கின்ற ஒன்றாக) ஆகி விடுகின்றது.

          மிகத் தொன்மைக் காலத்தில், நிலத்தில் உருவாகிய உயிர்மப் பொருளின் (organic matter) மூலக்கூறுகள் காலப்போக்கில் ஒற்றைக்கல உயிரிகளை (unicellular organisms) உருவாக்கின. இவையே, பல இலக்கக் கணக்கான ஆண்டுப் படிநிலை வளர்ச்சியின் விளைவாக, இன்றைய மரவடை மாவடை(flora and fauna)களைத் தந்துள்ளன.

          புகழ்பெற்ற வான்பூதியலர் (astrophysicist) ஆர்லொ சேப்ளி, உயிர்கள் இருக்கக்கூடிய பல இலக்கக்கணக்கான கோள்கள் விண்வெளியில் இருக்கக்கூடும் என்று கூறுகின்றார். இக்கோள்களுள் சிலவற்றில், மாந்தனை விடப் படிநிலைவளர்ச்சியிலும் அறிவுத்திறத்திலும் மிகுந்த வளர்ச்சி பெற்ற உயிரிகள் இருக்கலாமெனவும் சொல்லுகின்றார்.

          சில வான்பூதியலர், இவ்வுலகை அடைந்த எரிகற்கள் மற்றும் வால்விண்மீன்களின் வழியாக உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகள் இங்கு வந்தனவென்று கருதுகின்றனர்.

          நிலவில் உள்ள நிலைமைகள் உயிர்நிலைப்புக்கு ஏற்பேய்வு இல்லாமை காரணமாக, நிலவிற்குச் சென்ற விண்செலவர்(astronauts), உயிரின் விளைவாக்கத்திற்குத் தேவையான கீழ்க்காணும் மூன்று பொருள்களையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அம்மூன்று பொருள்கள்: 1. உயிர்க்கக் கூடிய பொருள் [புரத்துப்பயினம்(proteinic protoplasm)] 2. உணவு, நீர் வடிவில் உணவூட்டம் 3. உயிர்வளி(oxygen).

          இம்மூன்றனுள் முதலாவதை அவர்கள் தங்கள் உடல்களிலும், மற்ற இரண்டையும் கொள்கலன்களிலும் எடுத்துச் சென்றனர். இவ்வுயிராக்கப் பொருள்களில் எதிலேனும் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தால் அவர்கள் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பியிருக்க மாட்டார்கள்.

          உயிரிகளின் கலன்(cell)களில் காணப்படும் இனிகம்(glucose), கொழுப்புகள், புரத்தம் போலும் ஊட்டமளிக்கும் பொருள்களின் மெள்ள சேர்ம வுயிரகமாக்கம் (மூச்சுயிர்ப்பு) உண்டாக்கும் ஆற்றலின் வடிவமே உயிர்! அது, உயிரிகளின் கண்ணறை எனப்படும் கலன்களில் (cells) நடக்கும் வேதிய எதிர்வினைகளின் விளைவாகும்.

          இந்த, உயிர் உண்டாக்கும் மூச்சுயிர்ப்பு, மெழுகுத்திரி போல் எரிபொருளை எரிப்பது போன்றதிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டது இல்லை. வேதிய எதிர்வினைகளின் வேகத்தில் மட்டுமே இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.

          ஓர் உயிரியின் உடலில் நிகழும் சேர்ம வுயிரகமாக்கம், எரிபொருள் எரிந்துகொண் டிருக்கின்ற வேகத்தில் நடைபெறுமானால், அதனால் ஏற்படும் உயர்வெதணம்(high temperature) உயிர்க்கக்கூடிய பொருளை அழித்துவிடும்.

          மெழுகுப்பொருள் வேதியச்சிதைவு உறாதவரையில் அதைப் பலதடவைகள் எரியவிடவும் அவிக்கவும் செய்யலாம். அதைப்போன்றே, ஓர் உயிரின் உடலிலுள்ள புரத்துப்பயினீர்(protoplasm) சிதைவுறாமலிருந்தால் இறந்த உடலைச் செயற்கை வழிகளால் பலமுறை உயிர்பெறச் செய்ய முடியும்.

          1963இல் அமெரிக்கத் திரைப்பட நடிகர் பீட்டர் செல்லர்சு ஏழுமுறைகள் இறந்தார். ஒவ்வொரு முறையும் மின்துகளிய நெஞ்சவியக்கியைப் (electronic pacemaker) பயன்படுத்தி உயிர்த்தெழுப்பப் பட்டார். ஏழாவது மறுவுயிர்ப்பின் பிறகு, அவர் மேலும் பல படங்களில் நடித்தது மட்டுமின்றி மேலும் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்.

          அவிக்கப்பட்ட ஒரு மெழுகுத்திரியை மீண்டும் எரியவிடும் நிகழ்ச்சியில், அவிக்கப்பட்ட போது மெழுகுத்திரியின் சுடர் விலகிப் போனதாகவும் மீண்டும் அதை எரிய விட்டபோது, அச்சுடர் திரும்பி வந்ததாகவும் நாம் சொல்லுவதில்லை.

          அதைப்போலவே, பீட்டர் செல்லர்சு இறந்த ஒவ்வொரு முறையும் அவருடைய உடலைவிட்டு உயிர் பிரிந்தது என்பதும் பின்னர் உயிர்ப்பிப்பின் போது, அவ்வுடலுக்குத் திரும்பி வந்தது என்பதும் பொருளற்ற உரைகளே!

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

பெரும்பாலும்...!?


            பேருந்தில் செல்வதையே விரும்பாதவன் நான். தவிர்க்க இயலாத நிலையில் ஒருநாள், விழுப்புரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் பேருந்தில் செல்ல வேண்டிய இக்கட்டு ஏற்பட்டது. அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டிய நேரத்தில் தொடர்வண்டி இல்லை. நிகழ்ச்சி நடக்கும் நேரத்திற்கு முன்னராகவும் செல்ல முடியாத நிலை. வேறு வழியின்றிப் பேருந்தில் ஏறினேன்.           பேருந்தின் முன்பகுதியிலுள்ள மூன்றுபேர் அமரும் இருக்கையில் ஓர் இடம் கிடைத்தது. ஓட்டுநருக்கு இடப்பக்கத்திலுள்ள நடத்துநருக்கான இருக்கையில் ஒருவர் வந்து உட்கார்ந்தார். பேருந்து ஓட்டுநர் உடனே அவரிடம், ‘நடத்துநர் உட்கார வரும்போது எழுந்துவிட வேண்டும்என்று எச்சரிக்கை செய்தார். அதைக் கேட்டுத் தலையாட்டிய அவர், ஓட்டுநரிடம் மிக இயல்பாகப் பல செய்திகளைப் பேசத் தொடங்கினார்.
            தொடக்கத்தில் அரைமனத்துடன் பேசத் தொடங்கிய ஓட்டுநர், பிறகுத் தயக்கத்தை விட்டு மிகப் பழகியவரிடம் பேசுவது போல் பேசத் தொடங்கினார். புதுவையிலிருந்து விழுப்புரம் போகும்
            பேருந்து அது. நிலையத்தை விட்டு வெளியே வந்த போது பேருந்தில் ஏறிய வெள்ளை வேட்டிக்காரர் ஒருவர், நடத்துநர் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநருடன் மிக ஈடுபாட்டோடு பேசிக் கொண்டிருந்தவரை நோக்கி, “ என்ன வேலு, இன்று வழக்கத்தைவிட முன்னராக வருகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும்; அதற்காகத்தான் முன்னராகக் கிளம்பி வந்துவிட்டேன்என்றார் அந்த வேலு.
            ஓட்டுநருடன் அந்த வேலுவின் பேச்சு தொடர்ந்தது. திடுமென வண்டியைத் தடையிட்டு நிறுத்தினார் ஓட்டுநர்! பேருந்து அதிர்ந்து நின்றது. சாலையில் இரண்டு இளைஞர்கள் ஓட்டுநரை முறைத்துப் பார்த்தவாறே அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு சென்றனர்.             பேருந்திற்குள், வண்டி திடுமென நின்றபோது எதிர் இருக்கையின் பின்புறத்தில் இடித்துக் கொண்ட இரு குழந்தைகள் கத்தி அழத்தொடங்கினர். நடத்துநர் இருக்கையில் அமர்ந்திருந்த வேலு உடனே, “கொஞ்சங்கூட ஒதுங்க மாட்டேனென்கிறார்கள்; ஆடு மாடே தேவலை!..எனத் தொடங்கி சாலையில் நடப்பவர்கள் திமிரையும் எதையும் பொருட்படுத்தாப் போக்கையும் பலவாறு விளக்கிக் கொண்டு வந்தார். அந்த ஓட்டுநர் இசைவாக ஆமாம்போட்டுக் கொண்டும் தலையாட்டிக்கொண்டும் வந்தார்.            
            வண்டி விழுப்புரத்தை நெருங்கியது. நான் இறங்க வேண்டிய மாதாக்கோயில் நிறுத்தமும் வந்தது. நான் இறங்கினேன். அந்த வேலுவும் அங்கேயே இறங்கினார். எனக்கு முன்னால் விரைந்து நடந்த வேலு, சாலையைக் கடக்கப் பாய்ந்து சென்றார். விரைந்து வந்த, நெய்வேலியிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்து, அவரருகில் வளைந்து திரும்பி பேரொலியை எழுப்பிச் சட்டென நின்றது.      அப்பேருந்தின் ஓட்டுநர் வேலுவை ஓர் அருவருப்பான உயிரியைப் பார்ப்பதுபோலப் பார்த்து விட்டுப் பேருந்தைக் கிளப்பிச் சென்றார். பின்னால் வந்த என்னிடம் வேலு பொருமினார். பெரிய வண்டியில் உட்கார்ந்து ஓட்டினால் இவர்களுக்குக் கண்மண் தெருவதில்லை; வானூர்தி ஓட்டுவது போன்ற நினைப்பு; சாலையில் போவோரைப் பற்றிக் கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பது கிடையாது...எனத் தொடங்கியவர் நான் என் நண்பர் வீட்டுப் படியேறும் வரையும் பேருந்து ஓட்டுவாரின் அடாவடித் தனங்கள்பற்றிய விளக்கத்தை முடிக்கவில்லை!
            வீட்டுக்குத் திரும்பி வந்த நான் நடந்தவற்றை யெல்லாம் என் மனைவியிடம் விளக்கி, அந்த வேலுவைப்பற்றி என்ன நினைக்கின்றாய்? என்று கேட்டேன். மிக அமைதியாக அவள் சொன்னாள்: பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறார்கள்! இதில் வியப்பதற்கு ஏதுமில்லை!அதைக் கேட்டதும் என்ன சொல்வதென்று புரியாமல் வாயடைத்து நின்றேன்!          

            *********************************************************

ஓர் அறிவிப்பு

தமிழ்ச் சான்றோர் மூவர் - நூற்றாண்டு விழா!
நாள் : தி.பி. கடகம்(ஆடி) (-09-08-2008)
காரி(சனி)க்கிழமை மாலை4-30 மணி
இடம் : சோலைமகால் திருமணமண்டபம்
திருச்சி நெடுஞ்சாலை, விழுப்புரம்
தலைமை : எழில்.இளங்கோ
வரவேற்புரை : ஆ.இரவிகார்த்திகேயன்
முன்னிலை : நகர்மன்றத்தலைவர் இரா.கனகராசு
தொடக்கவுரை :மாண்புமிகு அமைச்சர் க. பொன்முடி
1. கப்பலோட்டியதமிழர் வ.உ.சிதம்பரனார்
சிறையில் செக்கிழுத்த நூற்றாண்டு
சிறப்புரை :
சென்னைமாவட்ட நூலக ஆணையத் துணைத்தலைவர்
ஆ.கோபண்ணா
படத்திறப்பு : பொறியாளர் கி.இராதாக்கிருட்டிணன்
2. பொதுவுடைமைப்போராளி பாவலர் தோழர்
ப.சீவானந்தம் நூற்றாண்டு
சிறப்புரை : நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்
திருப்பூர் கே.சுப்புராயன்
படத்திறப்பு : பேராசிரியர் து.திருநாவுக்கரசு
3. இராவணகாவியம் படைத்த புலவர் குழந்தை நூற்றாண்டு
சிறப்புரை : தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன்
படத்திறப்பு: மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம்
நன்றியுரை : ஆய்தெழுத்து பா.சோதிநரசிம்மன்
நிகழ்ச்சி அமைப்பு: தமிழியக்கம் - விழுப்புரம்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

மற்றெவரே?


[கலித்துறை (மா கூவிளம் விளம் விளம் மா)] 

சோழ மன்னரின் கொடியினைப் பெயரெனச் சொல்லும் 
வேழ மாமத விலங்கினை ஒத்தநல் வீரர் 
வாழ வேண்டிய நாளினில் வலிந்துயிர் ஈவோர் 
ஈழ மாமறத் திண்ணிய ரலாதுமற் றெவரே?

புதன், 23 ஜூலை, 2008

போனால் விளையும் நலமே...!


(கட்டளைக் கலித்துறை) 

தானும் முயலா நிலையில் முயலுவார் தம்முனைப்புக்
கூனும் படிக்கே உரைத்தே எழுதிக் குழப்பிவரும் 
தேனாம் தமிழின் பெயர்சொலித் தின்று திரிபவர்கள் 
போனால் நலமெலாம் பூக்கும் தமிழுக்குப் பொய்யிலையே!

மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் ஆபிரகாம் தொ. கோவூர்


(ஆங்கிலமூலம்: வி.எ.மேனன்  ***   தமிழாக்கம் தமிழநம்பி)

            உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மன மருத்துவருமான முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர், ஆவி, ஆதன்(ஆன்மா) தொடர்பாகக் கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக ஆராய்ந்தவர்.
           
      அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்ட தலைசிறந்த ஓர் அறிவியலறிஞர் ஆவார்.
            உலகில் ஆதன் தொடர்பான ஆராய்ச்சியிலீடுபட்டாருள், அத்துறைப் பணிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதல் அறிவியலரும், - ஒரே அறிவியலரும் கோவூர் அவர்களே!
            ஆதன், ஆதனல்லாவகை விந்தை நிகழ்வுகள் பற்றிய இடுவுரை (thesis)க்காக அமெரிக்க மின்னசோட்டா மெய்யறிவுக் கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.
            ஆதன், ஆதனல்லாதவை, ஆவி ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்றால் ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும் இன்றேல் மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனபதே அவரின் உறுதியான கருத்தாகும்.
            "இயற்கையை மீறிய ஆற்றல்களை எவரும் எக்காலத்திலும் பெற்றிருக்கவில்லை; அப்படடிப் பட்டவர்கள் மதநூலின் பக்கங்களிலும், உணர்ச்சிகளை வணிகமாக்கும் செயதித்தாள்களின் பக்கங்களிலுமே இருந்து வருகிறார்கள்" எனகிறார் கோவூர்.
            'எர்னெசுட்டு எக்கெல் சூழலியல் நடுவம்' இந்தியப் பெருங்கடலிலும், அதன் கரையோர நாடுகளிலும், படிமலர்ச்சி(evolution) ஏணியின் விடுபட்ட இடைவெளிகளைக் கண்டறியும் நோக்கில், 'எக்கெல் ஆய்வுச் செலவு' மேற்கொண்டது.
            அதற்கென அமைத்த அறிவியலர் குழுவில் கலந்து கொள்ளும்படி அமெரிக்காவின் அந்நிறுவனம் அழைத்த ஒரே ஆசிய அறிவியலர் முனைவர் கோவூர் ஆவார்.
            ஆனால், அவருடைய துணைவியார் நீண்டகாலம் நோய்வாய்ப் பட்டிருந்ததாலும், அந்நோயால் இறந்து போனமையினாலும் அந்த வாய்ப்பை கோவூர் இழக்க நேர்ந்தது.
            முனைவர் கோவூர் உலகின் பல இடங்களுக்கும் சென்றவர். பல நாடுகளில் பொதுக்கூட்டங்களிலும், உலகமாநாடுகளிலும் சொற்பொழிவு நிகழ்த்தியவர். அவருடைய நூல்களிலுள்ள நிகழ்வாய்வு(case study) உணமைக் கதைகளைப் பல்வேறு நாடுகளில் பல தாளிகை(பத்திரிகை)களும், செய்தித் தாள்களும் தொடர்ச்சியாக வெளியிட்டன.
            அக்கதைகளுள் ஒன்று, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அவருடைய நூலின் மற்றொரு உண்மைக்கதை, 'நம்பிக்கை' என்ற பெயரில் தமிழ் நாடகமாகப் பலமுறை அரங்கு நிறைந்த அவையோர் முன் நடித்துக் காட்டப் பட்டது.
            மூடநம்பிக்கையை விட்டுத் தொலைத்து காரணமறிந்து நடக்கும்படி தம் வாழ்நாள் முழுவதும் அறிவுறுத்தியவர் முனைவர் கோவூராவார். இவர், கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 1898ஆம் ஆண்டு ஏப்பிரல் 10ஆம் நாள், மார் தொம்மா சிரியன் திருச்சவையின் கருமியக்குருத் தலைவரான காலஞ்சென்ற பேரருள்திரு கோவூர் ஈய்ப்பெ தொம்மா காத்தனாரின் மகனாகப் பிறந்தார்.
            'புனர்சென்மம்' என்ற (மலையாள) திரைப்படத்தில் ஓர் மன மருத்துவராகத் தோன்றும் போது, கீழ்க்காணுமாறு தம் பிறப்பைப்பற்றி கோவூர் கூறுகின்றார்:
            "முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால், ஒரு சிரியன் கிறித்தவக் குடும்பத்தில், நானே தேர்வு செய்து கொள்ள இயலாததும் என் கட்டுப்பாட்டில் இல்லாததுமான நிலவரைவியல், உயிரியியல் நேர்ச்சியால் (accident), அழகிய கேரள மண்ணில், ஒரு கிறித்தவத் திருத்தந்தையின் மகனாகப் பிறந்தேன். வளர்ந்து ஆளான பின்னர், இன்னொரு அழகிய நாடான சிரீலங்காவை என்னுடைய நாடாகவும், பகுத்தறிவாண்மையை என் மெய்ம்மவியலாகவும்(philosophy) நானே தீர்மானம் செய்து ஏற்றுக் கொண்டேன்."
            திருவள்ளாவில், தம் மூதாதையர் இல்லத்தில், தந்தையார் தொடங்கிய சிரியன் கிறித்தவக் கல்வி நிலையத்தில், கோவூர் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், அவருடைய தம்பி பெகனன் கோவூருடன், (அமெரிக்க ஏல் பல்கலைக் கழகத்திலும், அனைத்து நாடுகள் அவையிலும் பணியாற்றியவர்) உயர்கல்வி பெறக் கல்கத்தா சென்றார்.
            கல்கத்தாவில் பங்கபாசி கல்லூரியில் புதலியல்(Botany), விலங்கியலைச் சிறப்புப் பாடமாகப் படித்துத் தேறினார்.
            கோட்டயம் கல்லூரியில் இரண்டாண்டுகள் உதவி விரிவுரையாளராகப் பணி புரிந்தார். பின்னர், 1928இல் யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரி முதல்வர் அருள்திரு பி.தி.கேசு அவர்களின் அழைப்பை ஏற்று, சிரீலங்காவுக்குக் குடிபெயர்ந்தார்.
            உதகையில் மலை-மரவடை (mountain flora) மாதிரிகளைத் திரட்டும் களப்பணியில் இருந்த போதுதான், தலைசிறந்த புதலியலரான அருள்திரு கேசு முனைவர் கோவூரைச் சந்தித்தார்.
            யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரியில் பணியேற்ற முதலாண்டில் இளைஞர் கோவூரை, இறுதியாண்டு மாணவர்களுக்குப் புதலியலுடன் கிறித்தவத் திருமறைப் பாடமும் கற்பிக்கச் சொன்னார்கள்.
            கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்திலிருந்து தேர்வு முடிவுகள் வந்தன. அவருடைய மாணவர்கள் அனைவரும் மேஞ்சிறப்போடும் மதிப்போடும் திருமறைப் பாடத்தில் தேறியிருந்தாரகள். ஆனால் அடுத்த ஆண்டு, திருமறைப்பாடம் கற்பிக்கும் பொறுப்பு கோவூரிடமிருந்து பறிக்கப் பட்டது. கல்லூரித் துணைமுதல்வர் அருள்திரு ஓ.எல். கிப்பனுக்கு அப்பொறுப்பு தரப்பட்டது.
            அதைப்பற்றி வினவிய போது, அருள்திரு கேசு அவர்கள், "ஆபிரகாம், திருமறைப் பாடத்தில் நீங்கள் சிறப்பான தேரச்சி முடிவுகளை உருவாக்கித் தந்தீர்கள் என்பதை நான் அறிவேன்! ஆனால், அம்மாணவர்கள் அனைவருமே அவர்களுடைய மத்தத்தைத் துறந்து விட்டனர்!" என்று புன்னகையுடன் கூறினார்.
            1943இல் அருளதிரு கேசு பணிநிறைவுற்று (ஓய்வு பெற்று) இலங்கையினின்றும் நீங்கியதும், கோவூர், யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரியினின்றும் நீங்கி கல்லியிலுள்ள இரிச்மான்டு கல்லூரியிலும் பின்னர் மவுண்டு வினியாவிலுள்ள தூய தாமசு கல்லூரியிலும் பணியாற்றினார்.
            1959இல் கொழும்பு தர்சுட்டன் கல்லூரியில் அறிவியல் துறைத் தலைவராக இருந்தபோது பணிநிறைவுற்றார்.
            கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் ஆதன்களின் விந்தை நிகழ்வுகள் தொடர்பான தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினார்.
            "எல்லாக் குழந்தைகளையும் போலவே, நானும், இளமைக் காலத்தில், பெற்றோருடைய சமய மூட நம்பிக்கைகளாலும், நடவடிக்கைகளாலும் மூளை மழுக்கத்திற்கு ஆளாகியிருந்தேன். பின்னர், அம்மடத்தனமான கருத்துக்களை விலக்கித் தள்ள எனக்குப் பெரும் பாடாயிருந்தது" என்று கோவூர் கூறுகிறார்.
            அதே தவற்றை மீண்டும் செய்வதைத் தவிர்த்துத் தம் ஒரே மகனான ஆரிசு கோவூரை மத மூடநம்பிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில்லை எனத் தீர்மானித்தார்.
            பேராசிரியர் ஆரிசு கோவூர், இப்பொழுது(1976) பிரெஞ்சு, கியூபா அரசுகளின் கீழ், அறிவியல் ஆராய்ச்சிகளை நெறிப்படுத்திக் கொண்டிருக் கின்றார். அவருடைய மூன்று மகன்களையும் எவ்வகை மத நம்பிக்கைகளின் அடையாளமு மில்லாமல் வளர்த்து வருகின்றார். இதற்கு அவருடைய அறிவார்ந்த துணைவியார் பேராசிரியை சாக்குலின் கோவூரின் முழு ஒத்துழைப்பையும் பெற்றிருக்கிறார்.
            முனைவர் கோவூரின் துணைவியார் 'அக்கா கோவூர்' 1974இல் இறந்த போது அவருடைய இறப்பு அறிவிப்பு சிரீலங்காவில் அந்நாட்டு நாடாளு மன்றத்திலும்- பேருணர்வெழுச்சியை ஏற்படுத்தியது.
அந்த இறப்பறிக்கை, "திருவாட்டி அக்கா கோவூர், பேதமை சான்ற மக்கள் கவலும்படியாக எந்த ஆவியையோ, ஆதனையோ விட்டுச்செல்லாமல் இறந்து விட்டார். அன்னாரின் விருப்பப்படி, அவருடைய உடல், கொழும்பு திருநள்ளா பாமன்கடா சந்திலிருந்து, இன்று (வெள்ளிக்கிழமை) காலை எட்டு மணிக்குக் கொழும்பு சிரீலங்கா பல்கலைக் கழக மருத்துவப் புலத்திற்கு அகற்றப்படும். இறுதிச்சடங்கோ, எரியூட்டலோ, மலர்களோ இல்லை!" என்று எழுதப் பட்டிருந்தது.
            அவருடைய இறப்பறிவிப்பு எல்லா உள்நாட்டுச் செய்தித் தாள்களிலும் பதிப்பிக்கப் பட்டது. எனினும், சிரீலங்கா ஒலிபரப்பு வாரியம், இறப்பறிவிப்புப் பட்டியலில் இவ்வறிவிப்பைச் சேர்க்க மறுத்து விட்டது,




            நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட போது, உரோமன் கத்தோலிக்கரான ஒலிபரப்புத்துறை அமைச்சர், உரோமன் கத்தோலிக்கத் திருத்தந்தை ஒருவரும், புத்தமதத் துறவி ஒருவரும் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் மறுக்கப் பட்டது என்று கூறினார்.
            'ஆதனிலி'க் கொள்கையை நம்பும் ஒரு புத்தத் துறவி, தூய நெஞ்சில் ஆதன் இடம்பெற் றுள்ளதாக நம்பும் ஒரு கத்தோலிக்கத் திருத்தந்தையின் நம்பிக்கையில் பங்கு கொண்டதுதான் விந்தை!
            திருவாட்டி கோவூர், அவருடைய கணவரின் ஆராய்ச்சிகளிலும், செயற்பாடுகளிலும் அவருக்கு வலிவுமிக்கத் தூணாகத் துணையிருந்தார். சிரீலங்கா பகுத்தறிவாளர் கழகத்தின் பொருளாளராகத் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்தார். கட்டற்ற சிந்தனையாளர்களின்(Free thinkers) உலக மாநாடுகளில் தம் கணவருடன் கலந்து கொண்டார்.
            இயல்பிகந்த (வியக்கத்தக்க) ஆற்றல் உடையவராகக் கூறிக் கொள்பவர்கள் ஏமாற்றுக் காரர்களாகவோ மன நோயர்களாகவோ இருப்பர் எனபதை, அறியாமையில் உழலும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கோவூர் விரும்பினார்.
            அதற்காகவே, இயற்கையிகந்த வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலக்க உருவா பரிசளிக்க அவர் அணியமாய்(தயாராக) இருக்கிறார் என்ற அறிவிப்பை வெல்விளி(challenge)யாகக் கூறினார்.
            தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார்.
            (முனைவர் கோவூரின் "BEGONE GODMEN!" என்ற ஆங்கில நூலின் முன்னுரையில், திரு.வி.எ.மேனன், கோவூர் குறித்து எழுதியுள்ளவற்றிலிருந்து ஒரு பகுதி.)
------------------------------------------------------------------------------------------------------------